Sunday, December 31, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 4

 திருக்குறள் - இதுவரை - பாகம் 4 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/4.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 


வரை முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம் 


பிறனில் விழையாமை 


இல்லறம் என்ற அறம் சிறக்க வேண்டும் என்றால், மாற்றான் மனைவியை நினைக்கக் கூடாது. வலிமை உள்ளவன், பணம் உள்ளவன், அழகு உள்ளவன், அதிக்காரம் உள்ளவன் தன்னிடம் உள்ள அந்த சிறப்புத் தன்மையை பயன்படுத்தி மாற்றான் மனைவியை தீண்ட நினைப்பது இயல்பு. அது அறமன்று. அப்படி நிகழ்ந்தால், இல்லறம் சிதையும், குடும்பம் என்ற கட்டமைப்பு குலையும், சமுதயாம் சீரழியும். எனவே, பிறனில் விழையாமை என்பதை ஒரு அறமாகக் கூறுகிறார். ஒழுக்கம் உடையவர்களுக்கே இது முடியும் என்பதால், இதை ஒழுக்கம் உடைமை என்ற அறத்தின் பின் கூறினார். 


பொறையுடைமை 


அதாவது பொறுமையை கடைபிடித்தல். இல்லறத்துக்கு மிக இன்றியமையாத பண்புகளில் இதுவும் ஒன்று. இல்லறத்தில் உள்ள ஒருவனுக்கு பலரால் பலவிதங்களில் இன்னல்கள் வரக் கூடும். தான் செய்த ஒன்றின் விளைவாக, மற்றவர்களின் தவறான புரிதல்களால், விதி வசம் என்று பலவித இன்னல்கள் வர நேரும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் உறவுகள் சிதறிப் போகும். பொறுக்கவே முடியாத ஒரு குற்றம்என்றால்,தன் மனைவியை மாற்றான் கொள்ள நினைப்பது. அந்த சமயத்தில் கூட பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதால் இதை பிறனில் விழையாமையின் பின் கூறினார். மனைவியை கவர்ந்து சென்ற இராவணனுக்குக்   கூட இராமன் அருள் புரிந்தான்.


அழுக்காறாமை 


அதாவது பொறாமை கொள்ளாமல் இருத்தல். ஒவ்வொருத்தனுக்கும் ஒன்று வாய்க்கும், ஒன்று வாய்க்காது. வாய்த்ததைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும். கிடைக்காததை நினைத்து, மற்றவனுக்கு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை கொள்ளக் கூடாது. பொறாமை, அது உள்ளவனை மட்டும் அல்ல, அவன் குடும்பத்தையே அழித்து விடும். இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழவேண்டும். பிறர் ஆக்கம் கண்டு துன்பம் கொள்ளக் கூடாது. 


வெஃகாமை


பிறர் பொருளை அறமற்ற முறையில் கொள்ளக் கருதுவது.பொறாமை வந்து விட்டால், நியாயம் அநியாயம் தெரியாது. எப்படியாவது மற்றவன் பெற்ற செல்வத்தை தானும் பெற வேண்டும் என்ற வெறி வரும். தவறான வழியில் செல்லத் தூண்டும். அப்படி அறமற்ற வழியில் பிறர் பொருளை அடைய நினையாமல் இருப்பது வெஃகாமை.


மேலும் சிந்திப்போம். 


Saturday, December 30, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 3

 திருக்குறள் - இதுவரை - பாகம் 3 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/3.html


1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 


வரை முந்தைய பதிவில் சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


இனியவை கூறல்: விருந்தினரை உபசரிக்க மிக முக்கியமான ஒன்று இனியவை கூறல். இனிமையாக பேசாதவன் வீட்டுக்கு யார் போவார்கள். இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் இனிமையாக பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேச பயிற்சி வேண்டும். உடனே வந்து விடாது. முயற்சி செய்ய வேண்டும். இனிமையாக பேசுவது என்றால் என்ன, அதை எப்படி பழக வேண்டும் என்று இந்த அதிகாரத்தில் சொல்லித் தருகிறார். 


செய்நன்றி அறிதல்:  இனியவை பேசி, விருந்தினர் வந்தால், அவர்களால் ஒருவனுக்கு சில நன்மைகள், உதவிகள் கிடைக்கும். அப்படி உதவி கிடைத்தால், அந்த உதவியை மறக்கக் கூடாது. பாவங்களில் பெரிய பாவமாக செய்த உதவியை மறக்கும் பாவத்தைக் கூறுகிறார் வள்ளுவர். செய்நன்றி மறந்த ஒருவனை யாரும் மதிக்க மாட்டார்கள். அவன் தனித்து விடப்படுவான். இல்லறம் சிறக்காது என்பதால், அதை பெரிய அறமாகக் கூறினார். 


நடுவு நிலைமை: 


விருந்தினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்கள் சில பல உதவிகளை செய்யக் கூடும். அதற்காக அவர் செய்யும் தீமைகளை கண்டும் காணமல் இருக்கக் கூடாது. எப்போதும் நீதியின் பால் நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அம்மா மற்றும் மனைவிக்கு இடையில் வரும் சிக்கல்கள், பிள்ளைகளுக்கு இடையில் வரும் சிக்கல்கள், உறவினர்களுக்கு இடையே வரும் மனத்தாபங்கள் இவற்றை நடுவு நிலையோடு அணுகவேண்டும். வேண்டப்பட்டவர் என்பதற்காக தவறான ஒன்றை சரி என்று சொல்லக் கூடாது. 


அடக்கமுடைமை 


நடுவு நிலைமை என்றால் மற்றவர் செய்யும் குறை நிறைகளை ஆராய்ந்து நேர்மையான ஒன்றைச் சொல்வது. அதே அளவு கோலை நமக்கும் வைக்க வேண்டும். நாம் செய்வது எல்லாம் சரியா? உண்பது, பேசுவது, இன்பம் அனுபவிப்பது, வரம்பு மீறி சிலவற்றை செய்ய நினைப்பது சரியா என்று சிந்தித்து மனம், மொழி, மெய் இவை தீய வழியில் செல்லாமல் அவற்றை அடக்கி வைத்தல். 


ஒழுக்கமுடைமை 


புலன்கள் அடங்கினால்தான் ஒழுக்கம் வரும். புலன்கள் போன போக்கில் போனால் ஒழுக்கம் கெடும். எனவே அடக்கமுடைக்கு அடுத்து ஒழுக்கம் பற்றி கூறினார். ஒழுக்கம் என்றால் செய்ய வேண்டிய கடமைளை முறையே செய்வது. தனி மனிதக் கடமைகள், சமுதாயக் கடமைகள் என்று இரண்டையும் சரிவரச் செய்வது. 



மேலும் சிந்திப்போம். 





Friday, December 29, 2023

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ 



உடல் உறுப்புகள் அறுபட்ட சூர்பனகை புலம்புகிறாள். தன் உறவினர்கள் ஒவ்வொருவராக அழைக்கிறாள். 


கோழிக் குஞ்சை பருந்து தூக்க வந்தால், தாய்க் கோழி தன் சிறகால் மூடி குஞ்சுகளை பாதுக்காக்கும். குட்டி போட்ட நாய், தன் குட்டியின் பக்கத்தில் யாராவது அன்பாக வந்தால் கூட எங்கே குட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அப்படி நெருங்கி வருபவர்கள் மேல் பாய்ந்து, குரைத்து, விரட்டி விடும். 


அப்படி சாதாரண விலங்குகளே தன் குட்டியை பாதுக்காக்கும் போது, புலிக் குட்டிக்கு ஏதாவது ஆபத்து வர தாய்ப் புலி விடுமா?  அப்படி, இராவணா, நீ இருக்கும் போது, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று சூர்பனகை புலம்புகிறாள். 


ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்தாலும், தாங்கள் அழியாத மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அஞ்சாத வலிமை கொண்ட இராவணனே, என் வலியைப் பார்க்க வரமாட்டாயா என்று அழுகிறாள். 


பாடல் 


"தாய்ப் புலி அருகில் இருக்கும் போது  "புலிதானே புறத்து ஆக, குட்டி

 கோட்படாது" என்ன, ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை      பொய்யோ? ஊழியினும்

சலி யாத மூவர்க்கும்,      தானவர்க்கும், வானவர்க்கும்,

வலியானே! யான் பட்ட வலி      காண வாராயோ?


பொருள் 


"புலிதானே புறத்து ஆக = தாய்ப் புலி அருகில் இருக்கும் போது 


குட்டி கோட்படாது = புலிக் குட்டியை யாரும் பிடிக்க முடியாது 


என்ன = என்ற 


ஒலி  = ஆர்பரித்து சப்தம் உண்டாக்கும்  


ஆழி = கடல் சூழ்ந்த 


உலகு = உலகம் 


உரைக்கும் உரை = சொல்லும் உண்மை 


பொய்யோ? = பொய்யா? 


ஊழியினும் = ஊழிக் காலத்திலும் 


சலி யாத மூவர்க்கும் = அழியாத மும்மூர்த்திகளுக்கும் 

,

தானவர்க்கும் = அசுரர்களுக்கும் 


வானவர்க்கும் = தேவர்களுக்கும் 


வலியானே!  = மிக்க வலிமை உடையவனே 


யான் பட்ட வலி = நான் கொண்ட வலியை 


காண வாராயோ? = காண வரமாட்டாயா ?


நமக்கு உடல் நிலை அல்லது மன நிலை சரி இல்லை என்றால் யாராவது நம்மை வந்து பார்த்து, பேசி, ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் கவலை கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா?




Thursday, December 28, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 2

 திருக்குறள் - இதுவரை - பாகம் 2 



அறம், பொருள், இன்பம் என்பதில் முதலில் அறம் அதில் இல்லறம் பற்றி முதலில் விளக்குகிறார். 


அறம் என்றால் ஏதோ காவி கட்டி சன்யாசம் போவது இல்லை. மிக மிக மகிழ்ச்சியாக, இனிமையாக வாழும் இல்லறத்தை காட்டுகிறார் வள்ளுவர். அதை பின்பற்றுவதில் நமக்கு ஒரு சங்கடமும் இருக்காது. அப்படி ஒரு எளிய வழியைக் காட்டுகிறார். 


கை பிடித்து, ஒவ்வொரு படியாக நம்மை நடத்திச் செல்கிறார். 


அதில் முதல் அதிகாரம் - இல்வாழ்க்கை. 


கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்க்கை பற்றி முதல் அதிகாரத்தில் பேசுகிறார். இல்வாழ்வின் நோக்கம் என்ன?  ஏதோ ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க சமுதாயம் தந்த ஒரு அனுமதி (license) என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வள்ளுவர் காட்டும் இல்வாழ்க்கை சமுதாயம் நோக்கியது. இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்றால் அதற்கு பதினொரு கடமைகளைச் சொல்கிறார். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கு என்கிறார். நான் பெரியவனா, நீ பெரியவனா, விட்டுக் கொடுத்துப் போவது, சகித்துப் போவது, சம உரிமை, முழு உரிமை, முக்கால் உரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் வேலைகள்தான் இருக்கிறது. வள்ளுவர் காட்டும் இல்லறத்தைக் கடைபிடித்தால் இல்லறத்தில் ஒரு சிக்கலும் இருக்காது. 


அடுத்தது - வாழ்க்கைத் துணைநலம் 


வள்ளுவர் காட்டும் இல்லறக் கடமைகள் அனைத்தும் ஆணின் மேல்தான். ஆனால், ஒரு ஆணால் அந்தக் கடமைகளை தனியே செய்யவே முடியாது. அவனுக்கு ஒரு பெண்ணின் துணை அவசியம் தேவை.   ஏன் பெண்ணுக்கு கடமை  கிடையாதா? ஏன் ஆண் அந்த கடமைகளுக்கு துணை போகக் கூடாதா என்று வாதம் செய்யலாம். அப்படி ஒரு இல்லறக் கோட்பாட்டை யாராவது வகுத்து, அது சரி என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டால் அது நடைமுறைக்கு வரும். வாதம் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். இல்லறக் கடமைகளை சரிவர ஆற்ற ஒரு பெண்ணின் துணை தேவை என்பதால் அவளை வாழ்க்கை துணை நலம் என்கிறார். வாழ்வில் நல்லது செய்ய ஒரு துணையாக வந்தவள். 


மூன்றாவது - புதல்வர்களைப் பெறுதல் 


இல்லறம் நடத்துவது என்பது ஏதோ உடல் இன்பத்துக்காக மட்டும் அல்ல. குழந்தைகள் அவசியம் என்கிறார். இன்று ஒரே பாலினத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் எவ்வாறு பிள்ளை பெறுவார்கள் ?  அதை எல்லாம் நம் கலாச்சாரம் அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் இந்த அதிகாரம் காட்டுகிறது. அது மட்டும் அல்ல, பிள்ளகைள் வரும் போது கணவன், மனைவி இருவரின் அன்பு எல்லைகள் விரியும். தனக்கு என்று இருந்ததை எல்லாம் பிள்ளைக்கு என்று கொடுக்கத் தோன்றும். தனக்கு துன்பம் என்றாலும் பரவாயில்லை, பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இருவரும் நினைப்பார்கள். அது அன்பின் வெளிப்பாடு. 


நான்காவது - அன்புடைமை 


மனைவி, பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அங்கே அன்புக்கு எங்கே பஞ்சம்?  மனைவிக்கு பிடிக்கும், கணவனுக்கு பிடிக்கும், பிள்ளை விரும்புவான், மகள் இதை ஆசைப் படுவாள் என்று ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழும் இடமாக இல்லறம் மலரும். குடும்பம் என்பது அன்புப்  பள்ளி. ஒவ்வொரு நாளும் அன்புப் பயிற்சி நிகழும் இடம். 


ஐந்தாவது - விருந்தோம்பல் 


குடும்பம் என்று வந்து விட்டால் விருந்தினர் வருவர். திருமணம் ஆகாத் ஒரு இளைஞனின் வீட்டுக்கு யார் விருந்துக்குப் போவார்கள். அவனே வெளியில் எங்காவது சாப்பிடுவான். மனைவி, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு விருந்தினர் வருவர். அப்படி வரும் விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று அடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பலை ஒரு அறமாகக் கொண்டது நம் பண்பாடு. 


(தொடரும்)

 


 

கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல்

 கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_28.html


சூர்பனகை படலத்தில் சில பாடல்களை முன்பு சிந்தித்தோம். சூர்பனகையிடம் இராமனும் சரி, இலக்குவனும் சரி நடந்து கொண்ட முறை பற்றி ஆராய்ந்தோம். அது சரியா, தவறா என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோம்.


ஒரு பெண்ணிடம் அழகாகப் பேசி, அவள் ஆசையை தூண்டிவிட்டு, பின் அவளை ஏசி விரட்டி விட்டதுவரை இராமன் செய்தது. ஆசை கொண்டு வந்த பெண்ணின் மூக்கையும், காதையும், முலையையும் அறுத்து தண்டனை தந்தது இலக்குவன் செயல். 


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, வலி ஒருபுறம், அவமானம் ஒரு புறம் தாங்காமல் அழுகிறாள். 


அந்தப் புலம்பலிலுமா தமிழை இவ்வளவு அழகாகச் சொல்லுவான் இந்தக் கம்பன். சூர்பனைகையின் சோகத்தில் பங்கெடுத்து அவளுக்காக இரக்கப்படுவதா அல்லது கம்பனின் தமிழில் தோய்ந்து அடடா என்ன ஒரு கவிதை என்று வியந்து மகிழ்வதா? என்று தெரியாமல் நாம் திக்கு முக்காடும் இடம். 


அழுவாதா,  மகிழ்வதா என்று தவிக்கும் இடம். 


முதலில் தன் அண்ணன் இராவணனை கூப்பிட்டு அழுகிறாள். 


"இராவணா, நீ எவ்வளவு பெரிய ஆள் !  சிவன் இருக்கும் அந்த கைலாய மலையையே தூக்கும் மலை போன்ற தோள்களை உடையவன் நீ. உன் முன்னால் தேவர்களும் நிமர்ந்து நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நீ இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லைத் தூக்கிக் கொண்டு அலைவது சரியா"


என்று அண்ணனை நினைத்து புலம்புகிறாள். 


பாடல் 


நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்

சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்

தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்

மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ


பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.


மலை எடுத்த மலையே என்று இராவணனின் ஆற்றலைக்  கூறுகிறாள். 


ஒரு பக்கம் இராவணனின் தங்கை என்ற பெருமிதம், ஆணவம். 


இன்னொரு பக்கம் காமம்.


மறுபுறம் அந்த காமம் மறுக்கப்பட்ட அவலம்.


இன்னொரு புறம் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சோகம், வலி. 


ஒரு பெண்ணால் எத்தனை உணர்சிகளை கையாள முடியும். 


காதல் நிராகரிக்கப்பட்டால் பரவாயில்லை. காதலிக்க நினைத்தவனே அவமானபடுத்தி, தண்டித்தால், அந்தத் துன்பத்தை யாரால் தாங்க முடியும்?



Monday, December 18, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 1

 திருக்குறள் - இதுவரை - பாகம் 1 


இதுவரை 24 அதிகாரங்கள் படித்தோம். புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் முற்றுப் பெறுகிறது. இதுவரை படித்ததை ஒருமுறை மீண்டும் சிந்தித்துப் பார்ப்போம். 


வாழ்க்கை என்பதை நான்கு கூறாக பிரித்துக் கொள்ளலாம். 


அறம், பொருள், இன்பம், வீடு என்று. 


வீடு என்றால் மோட்சம், இறைவனடி, தன்னை உணர்தல் என்று கொள்ளலாம். 


திருக்குறள் வீடு பற்றி பேசவில்லை. அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமே பேசுகிறது. ஏன் என்றால் வீட் பற்றி சொல்லி விளக்க முடியாது. அறிவால் உணர முடியாத ஒன்று. அறம், பொருள், இன்பம் இவற்றைச் சரியாக செய்தால், வீடு தானே வரும் என்பது பொருள். 


ஒருவன் ஒரு இடத்துக்குப் போக வழி கேட்கிறான். போகும் வழி சொல்கிறோம். இப்படிச் சென்றால் நீங்கள் தேடும் இடத்தை அடைவீர்கள் என்கிறோம். அந்த இடத்தைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், போகும் வழி பற்றி கூறுகிறோம். அதே போல், வள்ளுவர், போகும் வழி கூறுகிறார். இந்த வழியில் போனால், "வீடு" வந்து சேரும். நீ செல், வரும், கட்டாயம் வரும் என்கிறார். 


எனவே, வீடு பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/1.html


(please click the above link to contiure reading)


மீதி உள்ள அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில் அறம் பற்றி முதலில் எடுத்துக் கொள்கிறார். 


அறம் என்றால் என்ன?


அதற்கு பரிமேலழகர் மிக எளிமையான, தெளிவான விளக்கம் செய்கிறார். 


அறம் என்பது "விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும்" என்கிறார். 


அதாவது, உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்டவற்றை செய்வதும், அந்த நூல்கள் எதை செய்யக் கூடாது என்று சொல்கிறதோ அவற்றை செய்யாமல் இருப்பதும். 


இந்த அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. 


இதில் வழக்கு, தண்டனை என்பதை மன்னர்களிடம் விட்டு விட்டார்கள். ஒருவன் ஒழுக்கம் தவறினால் என்ன செய்வது என்ற கேள்வியை மன்னனுக்கு விட்டு விட்டார்கள். மன்னிப்பதும், தண்டிப்பதும், திருத்துவதும் அவன் கடமை. அது எல்லோருக்கும் உரிய செயல் அல்ல என்பதால் அதைத் தவிர்த்து, ஒழுக்கம் என்று சொல்லப் படும் அறம் பற்றி சொல்ல முதலில் ஆரம்பிக்கிறார். 


இந்த அறத்தை இரண்டாக பிரித்துக் கொள்கிறார் வள்ளுவர். 


இல்லறம்

துறவறம் 


இங்கே இல்லறமும், துறவறமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது அல்ல. இல்லறத்தின் முதிர்ச்சி துறவறம். ஒரு சிறப்பான இல்லறம், ஒருவனை, இயல்பாக துறவறத்துக்கு இட்டுச் செல்லும். பரந்துபட்ட இல்லறமே துறவறம். துறவறம் என்று தனித்து ஒன்றும் இல்லை. இல்லறம் விரிந்தால் துறவறம். சுருங்கி, ஒரு வட்டத்துக்குள் நின்றால் அது இல்லறம். 


ஆரம்பம் இல்லறம் என்பதால், அதை முதலில் எடுத்துக் கொண்டு அது பற்றி சொல்லத் தொடங்குகிறார். 


தொடரும் 


Monday, December 11, 2023

இனியவை நாற்பது - அலையாமை இனிது

 இனியவை நாற்பது - அலையாமை இனிது 


நாம் ஒரு இக்கட்டில் இருக்கிறோம். நமக்கு ஒரு உதவி தேவைப் படுகிறது. அதை செய்யும் நிலையில் ஒரு நட்போ உறவோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களாகவே முன் வந்து செய்திருக்கலாம். செய்யவில்லை. நாம் கேட்கிறோம். அப்போதும் செய்யவில்லை. ஒன்றுக்கு பல முறை கேட்டபின் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 


அப்படி, செய்யமாட்டேன் என்று இருப்பவரை, மீண்டும் மீண்டும் சென்று கேட்பதை விட கேட்காமலே இருப்பது இனிமையானது.


அடுத்ததாக,


இந்த உடல் நிலையானது அல்ல. மரணம் என்றோ ஒரு நாள் கட்டாயம் வரும். அது என்று என்று தெரியாது. அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமால் நல்ல காரியங்களை உடனடியாக செய்து விடுவது நல்லது. 


அடுத்தது, 


எவ்வளவு துன்பம் வந்தாலும், அறம் அற்ற செய்யலகளை செய்யாமல் இருப்பது நல்லது. 


பாடல் 


ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வினியது இல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_11.html


(please click the above link to continue reading)


ஆற்றானை = செய்யாதவனை (ஆற்றுதல் = செயல் ஆற்றுதல் ) 


யாற்றென் றலையாமை = செய் என்று அவன் பின்னே அலையாமை (ஆற்று என்று அலையாமை என்று சீர் பிரித்துக் கொள்ள வேண்டும்) 


முன்இனிதே = மிக இனிதானது 


கூற்றம் = காலன், எமன் 


வரவுண்மை = வருகின்ற உண்மை 


சிந்தித்து = அறிந்து கொண்டு 


வாழ்வினிதே = வாழ்வது இனிது 


ஆக்க மழியினும் = சேர்த்து வைத்த அனைத்தும் அழிந்து போகும் என்றாலும் 


அல்லவை = அறம் அல்லாதவற்றை 


கூறாத = சொல்லாத 


தேர்ச்சியின் தேர்வினியது இல் = தெளிந்த தேர்வு செய்வது போன்றது ஒன்று இல்லை 


என்ன ஒழுக்கமாக இருந்து கண்ட பலன் என்ன?  அயோக்கியத்தனம் செய்கிறவன் எல்லாம் மேலே மேலே போய்க் கொண்டு இருக்கிறான். இந்த நீதி, நேர்மை என்று இவற்றைக் கட்டிக் கொண்டு கண்ட பலன் என்ன என்று மனம் தடுமாறாமல், அற வழியில் நிற்கும் நேர்மை நல்லது. இதுதான் சரி என்று தெளிவான சிந்தனையோடு, குழப்பம் இல்லாமல் அற வழியை தேர்ந்து எடுப்பது நல்லது. 


இனியவை நாற்பது என்ற நூலில் இருந்து இந்தப் பாடல். இப்படி நாற்பது பாடல்கள் இருக்கின்றன. 



Friday, December 8, 2023

திருக்குறள் - வாழ்க்கை என்றால் என்ன ?

 திருக்குறள் -  வாழ்க்கை என்றால் என்ன ?


வாழ்க்கை என்றால் என்ன? 


எப்படி வாழ வேண்டும்?  


பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று போவது ஒரு வாழ்க்கையா?  ஒருவன் வாழ்ந்தான் என்று சொல்ல வைப்பது எது?  எத்தனையோ பேர் பிறந்து, உண்டு, உறங்கி, பின் வந்தது தெரியாமல் இறந்து போகிறார்கள். அது ஒரு வாழ்க்கையா?


வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்திருப்பானே? ஒன்றுமே செய்யாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்?  அப்படி என்னதான் செய்தான் என்ற கேள்வி வரும் அல்லவா?


செய்யும் வேலையை சிறப்பாக செய்து இருந்தால் அவனுக்கு ஒரு பேர் கிடைத்திருக்கும். அதனால் ஒரு புகழ் உண்டாகி இருக்கும். அவனுக்குப் பின்னும், அவன் பேரை மக்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அப்படி வாழ்வது ஒரு நல்ல வாழ்க்கை. 


அவனா, அப்படி ஒருவன் இருந்தானா? என்று ஒரு அடையாளமே இல்லாமல் புழு பூச்சி போல் தோன்றி மறைவது ஒரு நல்ல வாழ்க்கையா?


வள்ளுவர் சொல்கிறார், 


"மற்றவர்கள் இகழாதபடி வாழ்பவர்களே வாழ்ந்தவர்கள் என்று  கருதப்படுவார்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் , வாழாதவர்களே"


என்று


பாடல் 



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_8.html


(please click the above link to continue reading)



வசையொழிய = பிறர் இகழாதபடி 


வாழ்வாரே  = வாழ்பவரே 


வாழ்வார் = வாழ்கின்றவர் ஆவார் 


இசைஒழிய = புகழ் இல்லாமல் 


வாழ்வாரே = வாழ்பவர்கள் 


வாழா தவர் = வாழாதவர்களாகவே கொள்ளப்படுவர். 


அதாவது புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழோடு வாழ்ந்தால், வாழ்ந்ததாகக் கருதப்படுவர்.


இகழோடு வாழ்ந்தால், அவர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர். 


புகழ் அடையும்படி வாழவேண்டும். இல்லை என்றால் நடைபிணம் தான். 


புகழ் அடைவது என்றால் சாதாரண காரியமா?


என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், இதில் யார் எவ்வளவு சிறப்பாக செய்து புகழ் அடைந்து இருக்கிறார்கள், அவர்களை விட நாம் எப்படி சிறப்பாக செய்வது என்று எண்ணி, திட்டம் போட்டு,  காரியம் செய்ய வேண்டும். 


ஒரு நாட்டில், ஒவ்வொரு குடிமகனும் இப்படி முயற்சி செய்தால், அந்த நாடு எந்த அளவுக்கு முன்னேறும்?


ஒவ்வொரு தனிமனிதனும், தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் புகழ் பெற முயல வேண்டும். 




Thursday, December 7, 2023

அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு 


எந்த ஒன்றையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எதனால் ஆக்கப்பட்டது என்று அறிய வேண்டும். ஒரு பொருள் என்றால் அது பல சிறிய பொருள்களின் தொகுப்பு. அந்த சிறிய பொருள்கள் அதனினும் சிறிய பொருள்களின் தொகுப்பு. இப்படி பகுத்துக் கொண்டே போனால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் அடிப்படையில் சில மிக நுண்ணிய துகள்களின் தொகுப்பு என்று அறிய முடியும். அந்தத் துகள்களின் தொகுப்புதான் உலகம். 


பிரித்தால்தான் ஆராய முடியும். 


தமிழர்கள் எதையும் சரியான படி பிரித்து, அந்தப் பிரிவுகளின் தன்மைகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். 


வாழ்வின் நோக்கம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளை உடையது. 


தமிழ் - இயல், இசை, நாடகம் என்ற பிரிவுகளை உடையது. 


வாழ்க்கை - அகம், புறம் 


அறம் - இல்லறம், துறவறம் 


சுவை - ஆறு சுவை


இசை - ஏழு ஸ்வரங்கள் 


நிலம் - ஐந்து பிரிவு 



இப்படி சரியான படி பிரித்தால், எதையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் 


அறத்தின் பிரிவுகள் என்ன ?


அறத்திற்கு நான்கு கூறுகள் என்கிறது அறநெறிச்சாரம். 


அறத்தை சொல்பவன், அதைக் கேட்பவன், சொல்லப்படும் உரை, அதனால் வரும் பயன். 


இந்த நான்கும் அறத்தின் கூறுகள். 


இந்த நான்கிலும், நல்லது, கெட்டது இருக்கும். நல்லவற்றை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தள்ளிவிட வேண்டும். 


பாடல் 



உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ

  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி

  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்

  வான்மையின் மிக்கார் வழக்கு.


பொருள் 




(please click the above link to continue reading)


உரைப்பவன் = அறத்தை போதிப்பவன் 


கேட்பான் = அதைக் கேட்கும் மாணவன் 


உரைக்கப் படுவது = சொல்லப்பட்ட அறம் 

 

உரைத்தனா லாய பயனும் = அந்த அறத்தினால் உண்டாகும் பயன் 


புரைப்பின்றி = குற்றம் இன்றி 


நான்மையும் = இந்த நான்கிலும் 


போலியை நீக்கி = நல்லன அல்லாதவற்றை நீக்கி 


அவைநாட்டல் = நல்லதை நிலை நிறுத்துதல் 


வான்மையின் மிக்கார் வழக்கு = ஒழுக்கத்தில் சிறந்தோரது இயல்பு 


அறம் என்பது பயன் நோக்கியது என்று புரிந்து கொள்ள வேண்டும். பலன் இல்லாமல் அறம் செய்வதில் அர்த்தம் இல்லை. 


அறம் சில சமயம் காலத்தோடு ஒன்றாமல் போகலாம். என்றோ சொன்ன அறத்தை காலகாலத்துக்கும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லை. 


சொல்பவன், கேட்பவன், சொல்லப்படும் அறம், பலன்  - இந்த நான்கிலும் குற்றம் வரலாம் என்கிறது. 


அறத்தில் எப்படி குற்றம் வர முடியும் ?


குறை என்றால், காலத்தோடு ஒவ்வாத அறங்கள். பெண்ணைக் கொல்வது என்பது அறம் அற்ற செயல். இராமன், தாடகை என்ற பெண்ணைக் கொன்றான். அது அறம் வழுவிய செயலா?  தாடகை என்பவள் பெண் உருவில் இருந்தாளே அன்றி பெண்ணின் குணங்கள் இல்லாதவள். அங்கே அறத்தை கொஞ்சம் விரித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. 


குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்றவை ஒரு காலத்தில் அறம் எனக் கருதப்பட்டது. அதை இப்போது கடைபிடித்தால் அது குற்றம். காலத்தோடு மாற வேண்டும். 


இந்த சொல்பவன், கேட்பவன் இவற்றில் என்ன குற்றம் வந்து விடும்?


பின்னால் அவற்றை விளக்குகிறது இந்த நூல். 


மேலும் சிந்திப்போம். 


 


Wednesday, December 6, 2023

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது 


ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டு புகழ் உடையவர்களாக இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும்?


மாறாக

ஏதோ சொன்ன வேலையை செய்வோம், வர்றது வரட்டும் என்று எல்லோரும் ஏனோ தானோ என்று வேளை செய்தால் எப்படி இருக்கும்?


வள்ளுவர் சொல்கிறார், புகழ் இல்லாதவர்கள் வாழும் நாட்டில், நிலத்தில் நல்ல விளைச்சல் இருக்காது என்று. 


பாடல் 

 

வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_6.html


(pl click the above link to continue reading)


வசைஇலா = குற்றம் இல்லாத 


வண் = செழிப்பான, வளமையான 


பயன் = விளைச்சல் 


குன்றும் = குறையும், எப்போது என்றால் 


இசையிலா = புகழ் இல்லாத 


யாக்கை = உடம்பை 


பொறுத்த நிலம் = பொறுத்து தாங்கி கொண்டிருக்கும் நிலம் 


அது எப்படி, புகழ் இல்லாதவர்களை சுமந்த நிலம் குறைந்த விளைச்சல் தரும் ? புகழுக்கும், விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம் வள்ளுவர் சார் ?


"பயன்" என்ற சொல்லுக்கு விளைச்சல், உற்பத்தி, என்று கொள்ளலாம். புகழ் விரும்பி இருப்பவர்கள், புகழ் பெறவும், பெற்ற புகழை தக்க வைத்துக் கொள்ளவும் சிறப்பாக செயல்படுவார்கள்.  அப்படி அவர்கள் செயல்படும் போது, அந்த செயல்களின் விளைவு உற்பத்தியை மேலும் பெருக்கும் என்பது கருத்து. 


"இசை இல்லா யாக்கை" என்றார். புகழ் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால்  அவனை உயிர் உள்ள மனிதனாகக் கூட வள்ளுவர் மதிக்கவில்லை. அது ஒரு உடம்பு என்கிறார். யாக்கை என்றால் உடம்பு. எலும்பு, நரம்பு, இரத்தம் என்றவற்றால் கட்டப்பட்டதால், இதற்கு யாக்கை என்று பெயர். யாக்குதல், கட்டுதல். 


நிலம் ஏன் குறைவாக விளையும் என்றால், புகழ் இல்லாத மனிதர்கள், பெரிய முயற்சி எடுக்க மாட்டார்கள். அதனால் பொருள் விரயம், சுற்றுப் புற சூழ்நிலை மாசு படுதல் போன்ற பல தவறுகள் நிகழலாம். 


ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நெல் விளையும் என்றால், அதையே சிறப்பாகச் செய்தால் அதிக மகசூல் பெறலாம், குறைவான நீரை பயன்படுத்தாலாம், பூச்சிக் கொல்லி, இரசாயன உரம் போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து உயர்தர விளைச்சலை, குறைந்த செலவில் பெற்றுத் தரலாம். அதற்கெல்லாம் முயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். 


அப்படி இல்லாதவர்கள் ஊரில், விளைச்சல், பயன் குறைவாகக் கிட்டும் என்கிறார். 


சிந்திக்க வேண்டிய விடயம். 


எதையும் சிறப்பாக செய்ய வேண்டும், அனைவரும் பாராட்டும்படி செய்ய வேண்டும். 


 




Tuesday, December 5, 2023

அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்

 அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் 


இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம் போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்கிறீர்களே, யார் செய்த புண்ணியமோ. 


அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், யார் சொல்லக் கூடாது, யாருக்குச் சொல்லக் கூடாது, அறத்தின் பயன் என்ன, அதை எப்போது செய்ய வேண்டும் என்று அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப்  பிரித்துத் தருகிறது. 


அறம் என்றால் என்ன, அதை நம்மவர்கள் எப்படி கடைப் பிடித்தார்கள், நமது கலாச்சாரம் என்ன, என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். 


முழு நூலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. 


முதலாவதாக, 


"இந்த உலகில் பாவத்தை எடுத்து உரைக்கும் நூல்கள் பல இருக்கின்றன. காமம், ஆசை இவற்றைத் தூண்டும் நூல்கள் பல இருக்கின்றன. அது போல இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத நூல்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நூலை படிக்க வேண்டும் என்று நினைத்தீர்களே, நீங்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்தான்" 


என்று கூறுகிறது. 


பாடல் 


மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 

பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்.



பொருள் 




(please click the above link to continue reading)


மறவுரையும் = அறம் அல்லாத உரைகளையும் (பாவத்தைத் தூண்டும்) 


காமத் துரையும் = காமத்து உரையும் = காமம், ஆசை பற்றி பேசும் நூல்களும் 


மயங்கிய = குழப்பம் தரும் 

 

பிறவுரையும் = பிற நூல்களும் 


மல்கிய = நிறைந்த 


ஞாலத்-= இந்த உலகில் 


தறவுரை = அறவுரையை 


கேட்கும் = கேட்கப் பிரியப் பட்டு வந்துள்ள நீங்கள் 


 திருவுடை யாரே = புண்ணியம் செய்தவர்களே 


பிறவியை = இந்தப் பிறவியில் இருந்து 


நீக்கும் = விடுபடும் 


திருவுடையார் = புண்ணியம் உள்ளவர்கள் 


அறவுரையை கேட்பவர்கள் புண்ணியம் பண்ணியவர்கள். அவர்களே இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபடும் பேறு பெற்றவர்கள். 


அரவுரையைக் கேட்டாலே போதும். அது உள்ளே போகும். மனதில் படியும். சொல்லில், செயலில் கட்டாயம் வெளிப்படும். தவறு செய்வதை மனசாட்சியாக நின்று தடுக்கும். 


வீட பேற்றுக்கு வழி செய்யும். 


aஅந்தக் காலத்திலேயே குப்பைப் புத்தகங்கள் இருந்து இருக்கு. நல்ல புத்தகங்கள், குப்பை புத்தகங்கள் என்று இருக்க வேண்டும் என்றால் மொழியும், மொழி வழி எண்ணங்களை புத்தக வடிவில் பகிர்ந்து கொள்ளும் முறையும் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும் !


புத்தகம் என்று சொல்லவில்லை...உரை என்று சொல்கிறது. ஓலைச் சுவடிகளோ, அல்லது வேறு எந்த விதத்திலோ இவை எல்லாம் இருந்திருக்கின்றன. 


சிறந்த புத்தகங்களை தேடிப் பிடித்து படிப்பது என்பது ஒரு கலை. 


முதலில் புத்தகங்களை கண்டு பிடிக்க வேண்டும். பின் படிக்க வேண்டும். பின், அவை புரிய வேண்டும். பின் அதன் படி நடக்க வேண்டும்....







 

Saturday, December 2, 2023

திருக்குறள் - இது இல்லேனா அது

 திருக்குறள் - இது இல்லேனா அது 


புகழ் அடைவது நல்லதுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எல்லோராலும் புகழ் அடைய முடிவது இல்லை. புகழ் இல்லாமல், ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலை பார்த்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகளப் பெற்றோம், அவர்களை வளர்த்தோம் என்று இருந்து விட்டு போவதில் என்ன பிரச்சனை. 


புகழ் அடைந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமா? புகழ் இல்லாமல் எத்தனையோ பேர் வாழ்ந்து மறையவில்லையா? நானும் அப்படி இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு புகழ் எல்லாம் வேண்டாம் என்று ஒருவர் சொல்லலாம்.


வள்ளுவர் கேட்கிறார்,


சரி. புகழ் இல்லாமல் வாழ்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்? "சாதாரண வாழ்க்கை" என்று கூறலாமா என்றால் கூடாது என்கிறார் பேராசான்.


புகழ் இல்லாத வாழ்க்கை சாதாரண வாழ்க்கை இல்லை, அது ஒரு இழிவான வாழ்க்கை என்கிறார். 


புகழ் இல்லை என்றால் உனக்கு இகழ்தான் கிடைக்கும் என்கிறார். 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே...நீ நீதிபதி ஆகாவிட்டால் திருடன் என்று சொல்லுவது போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். 


பாடல் 


வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_2.html

(please click the above link to continue reading)


வசைஎன்ப = இகழ்ச்சி என்று சொல்லுவார்கள் 


வையத்தார்க்கு = உலகில் வாழும் மக்களுக்கு 


எல்லாம் = அனைவருக்கும் 


இசையென்னும் = புகழ் என்ற 


எச்சம் = மிகுதியைப் 


பெறாஅ விடின் = பெறாவிட்டால் 


இசை என்றால் புகழ் என்று பொருள். 


இசை இல்லாவிட்டால் வசைதான் என்கிறார். 


ஏன் அப்படி? வள்ளுவர் சொல்லிவிட்டால் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. எதில் புகழ் அடைய முடியாது? எதை எடுத்தாலும் அதில் புகழ் பெற முடியும். இந்தத் துறையில் புகழ் பெற முடியாது என்று ஒன்றே கிடையாது. என்ன செய்தாலும் அதில் புகழ் பெறலாம்.


"என்ன அருமையா பிள்ளைகளை வளர்த்து இருக்கிறா"


அது கூட ஒரு புகழ்தான். 


இப்படி ஆயிரம் வழி இருக்க, ஒன்றும் செய்யாமல் இருந்தால் ஊர் என்ன சொல்லும் ?


"யாரு அவனா, ஏதோ இருக்கான்...ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை" 


என்று சொல்லும். அது இகழ்ச்சிதானே?


ஒரு வேலைக்கு மனு போடுகிறோம். எவ்வளவு மதிப்பெண் என்று பார்த்தால் ஏதோ 50% /60% வாங்கி இருக்கிறோம். அந்த நிறுவனத்தில், விண்ணப்பங்களை சரி பார்க்கும் கடை நிலை ஊழியன், அந்த விண்ணப்பத்தை நேரே குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விடுவான். 


"அவனவன் 90%, 95% என்று வாங்கிட்டு வேலைக்கு அலையிரானுக, இவரு 50% வாங்கிட்டு வெக்கம் இல்லாம வேலைக்கு மனு வேறு போட வந்துட்டான்" நு மனதுக்குள்ளாவது திட்டுவானா இல்லையா?


சிறந்த மதிப்பெண் பெற்றால் புகழ். அது வாங்காவிட்டால், இகழ்தான். 50% சதவீதம் புகழ் கிடையாது. புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழ் வேண்டாம் என்று இருந்தால், இகழ் கிடைக்கும். அது பரவாயில்லையா?





Friday, December 1, 2023

தேவாரம் - பார்த்தா சிரிப்பா வருது

 தேவாரம் - பார்த்தா  சிரிப்பா வருது 


பக்தி என்பது ஏதோ எந்நேரம் பார்த்தாலும் பஜனை, பூஜை, புனஸ்காரம் செய்து கொண்டு, வாழ்கையை முழுவதுமாக நிராகரிப்பது அல்ல. வாழ்க்கையை இரசிப்பதும், அனுபவிப்பதும் பக்தியோடு சேருமா?


ஐயையோ, புலன் இன்பமா? அபச்சாரம், அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதுதானா பக்தி. 


வாழ்வின் ஒவ்வொரு இன்பத்தையும் மறுதலித்துக் கொண்டே போனால், எப்படி இருக்கும்? புலன்கள் ஒரு புறம் இழுக்கும். மறு புறம் போகாதே என்று பக்தி தடுக்கும். இந்தச் சண்டையில் யார் வென்றாலும் தோற்பது நீங்கள்தான். 


பக்தி வென்று, புலன் இன்பங்களை எல்லாம் துறந்தால், அத்தனையும் இழந்து விட்டோமே என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். 


மாறாக, புலன் இன்பங்கள் வென்று, பக்தி தோற்றால், இப்படி சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டு, பேரின்பத்தை இழந்துவிட்டேனே என்று தோன்றும். 


நம் பக்தி இயற்கையை, வாழ்வை, ஆன்மீகப் பாதையில் இருந்து பிரித்து வைப்பது இல்லை. இயற்கையை மீறி, இயற்கைக்கு எதிராக செல்வது அல்ல நம் ஆன்மிகம். இயற்கையோடு ஒன்றிப் போவது. 


அது ஒரு குளம். அந்த குளத்தின் அருகில் முடத்தாழை மரம் இருக்கிறது. அந்த மரத்தின் கிளை அந்தக் குளம் நோக்கி தாழ்ந்து இருக்கிறது. அந்தக் கிளையில் உள்ள மலரின் நிழல் குளத்தில் விழுகிறது. அந்த நிழலை குருகு என்று எண்ணி அந்தக் குளத்தில் இல்ல மீன்கள் பயந்து, தாமரை இலையின் பின்னே ஒளிந்து கொள்கிறது. அதைப் பார்த்த, அருகில் இருந்த கடலில் இருந்த முத்துக்கள் சிரித்ததாம். 


அது சரி, இந்தப் பாடலுக்கும், இதற்கு முன் சொன்ன முகவுரைக்கும் என்ன சம்பந்தம் ?


இந்த அர்த்தம் தொனிக்கும் கவிதையை எழுதியவர் திருஞான சம்பந்தர். சிவ பெருமான் மேல் எழுதிய கவிதை. 


 பாடல் 


விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்  தண்புறவில்,

மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,

தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post.html


(Please click the above link to continue reading)


விடம் = விஷம் 


உண்ட = சாப்பிட்ட 


மிடற்று = கழுத்தை, தொண்டையை உடைய 


அண்ணல் = பெரியவன் 


வெண்காட்டின் = திரு வெண்காடு என்ற தலத்தில் 


 தண்புறவில் = குளிர்ந்த வெளியில் 


மடல் = பூவிதழ் 


விண்ட  = விரித்த 


முடத்தாழை = முடத்தாழை என்ற மரத்தின் 


மலர் = மலரின் 

 


 நிழலைக் = நீரில் விழுந்த நிழலை 


குருகு என்று = குருகு என்ற சிறு பறவை என்று எண்ணி 

,

தடம் = குளத்தில் உள்ள 


மண்டு = வாழும் 


துறைக் கெண்டை = கெண்டை மீன் 


தாமரையின்பூ மறைய = தாமரை பூ கொடியின் இலையின் கீழே சென்று மறைய 


கடல் விண்ட = கடலில் வாழும் 


கதிர் முத்தம் = ஒளிக் கதிர் வீசும் முத்துக்கள் 


நகை காட்டும் = அதைப் பார்த்து சிரிக்கும் 


காட்சியதே = காட்சியதே 


சமயக் குரவர்களில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர், குளத்தில் வாழும் மீன் நீந்திப் போவதைப் பார்த்து , இரசித்து, அது மலரின் நிழலுக்கு பயந்து இலையின் அடியில் சென்று ஒளிந்து கொள்வதாக கற்பனை பண்ணி, அதை கண்டு முத்து சிரிப்பதாக கவிதை வரைகிறார். 


இதில் பக்தி எங்கே வந்தது? 


அது தான் பக்தி, இயற்கையோடு ஒன்றிப் போவது, உலகை உள்ளபடி இரசிப்பது, அதில் தன்னை மறந்து ஒன்றிப் போவது...அதுதான் பக்தி. 


ஒவ்வொரு படைப்பும், ஆகச் சிறந்த ஒன்றுதான். உலகம் ஆனந்த மயமானது. அதை இரசிப்பது, அந்த ஆனந்தத்தோடு ஒன்றுவது பக்தி. 


வாழ்கையை இரசியுங்கள். எப்போது பார்த்தாலும் இல்லாத ஒன்றை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்காமல், உண்மையில் இருப்பதை கண்டு மகிழுங்கள். 


இந்த ஒரு நொடி மாத்திரமே உண்மை. நேற்றும், நாளையும் பொய்த் தோற்றங்கள். 


மரம், குளம், மீன், குருகு, தாமரை இலை...இதுதான் உண்மை. இதில் மனதை வையுங்கள். நாளைய பற்றிய கனவையும், நேற்றைய பற்றிய கவலைகளையும் விட்டு ஒழியுங்கள்.


அது என்ன விடம் உண்ட கண்டர்?


விஷத்தை எதற்கு உண்டார்? அது விஷம் என்று சிவனுக்குத் தெரியும்தானே. பின் அதை ஏன் உண்ண வேண்டும்? பின் அதை தொண்டைக் குழியிலேயே நிறுத்த வேண்டும்? 


மேலும் சிந்திப்போம்....