Showing posts with label அவ்வையார். Show all posts
Showing posts with label அவ்வையார். Show all posts

Sunday, October 23, 2016

அவ்வையார் தனிப் பாடல் - கீச்சுக்கீச் சென்னும் கிளி

அவ்வையார் தனிப் பாடல் - கீச்சுக்கீச் சென்னும் கிளி


பெரிய உயர்ந்த நூல்களை படிக்கும் போது , பெரியவர்கள் பேசுவதை கேட்கும்போது "அடேயப்பா இதில் இவ்வளவு இருக்கிறதா...இத்தனை நாள் இதெல்லாம் தெரியாமல் இருந்து விட்டோமே ...இன்னும் இதைப் போல எவ்வளவு இருக்கிறதோ " என்ற ஒரு பிரமிப்பு வரும். இதெல்லாம் தெரியாமல் ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல இத்தனை நாள் பேசிக் கொண்டிருந்தோமே என்று ஒரு நாணம் வரும்.

இனிமேலாவது ரொம்ப பேசுவதை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வர வேண்டும்.

ஒருவன் ஒரு கிளி வளர்த்தான். அதற்கு பேசக் கற்றுக் கொடுத்தான். அந்தக் கிளியும் அவன் வீட்டுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரும் போதெல்லாம் பேசிக் காட்டி அவர்களை மகிழ்விக்கும். கிளியின் சொந்தக் காரனுக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஒரு நாள் அவன் வெளியில் சென்றிருந்த சமயம், அவன் வீட்டில் இருந்த ஒரு பூனை , இந்த கிளி இருக்கும் கூட்டை நோக்கி தாவி , கிளியை பற்ற நினைத்தது.

பூனையைக் கண்டவுடன் கிளிக்கு இதுவரை படித்தது எல்லாம் மறந்து விட்டது. தன் சந்த குரலில் கீச் கீச் என்று கத்தத் தொடங்கியது.


பாடல்

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

பொருள்

காணாமல் = (கற்றறிந்த பெரியவர்களை) காணாத போது

வேணதெல்லாம் = நமக்கு வேண்டியது எல்லாம்

கத்தலாம் = பேசலாம்

கற்றோர்முன் = கற்றறிந்தவர்கள் முன்

கோணாமல் = வளைந்து நெளிந்து கோணாமல்

வாய்திக்கக் கூடாதே = வாய் திறக்க முடியாது

நாணாமல் = கூச்சம் இல்லாமல்

பேச்சுப்பேச் சென்னும் = எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்

பெரும்பூனை வந்தக்கால் = பெரிய பூனை வந்தபோது

கீச்சுக்கீச் சென்னும் கிளி = கீச் கீச் என்னும் கிளி

கிளி பேசுகிறதே என்றால் அதற்கு அந்த பேச்சுக்கு அர்த்தம் தெரியாது. ஏதோ சத்தம்  உண்டாக்கும். அவ்வளவுதான். அதே போல வாழ்வில் நிறைய பேர் என்ன பேசுகிறோம், எதற்கு பேசுகிறோம், பேசுவதால் என்ன பயன் என்று அறியாமல்  "கத்தி"க் கொண்டு இருப்பார்கள்.

அர்த்தம் அற்ற பேச்சு அடங்க வேண்டுமானால், அர்த்தம் உள்ள பேச்சுகளை கேட்க வேண்டும். படிக்க வேண்டும்.

அறிவு வளர வளர , அமைதி தோன்றும்.

மௌனம், ஞான வரம்பு என்று சொல்லுவார்கள்.

 அருணகிரியாருக்கு முருகன் சொன்ன உபதேசம் ஒன்றே ஒன்று தான்.


"சும்மா இரு"

அவ்வளவுதான்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

என்பது கந்தர் அனுபூதி.

சும்மா இருப்பது பெரிய விஷயம். அம் "மா" பொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார்  அருணகிரியார்.

சும்மா இருக்கும் சுகம் என்பார் வள்ளலார்

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற் 
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல 
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து 
சும்மா இருக்கும் சுகம். 

என்பது திருவருட்பா 

நல்ல விஷயங்களை படியுங்கள். கற்றறிந்தவர்கள் பேசுவதைக் கேளுங்கள். பேச்சு குறையும். ஞானம் பெருகும்.

பெருகட்டும்.