Friday, April 28, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - உன் உயிர்க்கும் கூற்றாய்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - உன் உயிர்க்கும் கூற்றாய் 


நல்லது நடந்தால் அதற்கு சொந்தம் கொண்டாட எல்லாரும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அல்லது நடந்தால் தான் எப்படி அதற்கு காரணம் அல்ல என்று எல்லோரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.

அது உலக இயற்கை.

தன்னிடம் அரசை திருப்பித் தர வந்த பரதனிடம் , தயரதன் எவ்வாறு இருக்கிறான் என்று இராமன் கேட்டான். தயரதன் இறந்த செய்தியை பரதன் கூற கேட்ட இராமன் மயங்கி விழுகிறான்.

பின் மயக்கம் தெளிந்து எழுந்து , துக்கத்தில் புலம்புகிறான்.

"அரசை எனக்கு தந்துவிட்டு நீ ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சொன்னது இது தானா ? உனது உயிருக்கு நானே எமனாகி விட்டேனே " என்று புலம்புகிறான்.

பாடல்


‘மன் உயிர்க்கு நல்கு உரிமை
    மண் பாரம் நான் சுமக்கப்
பொன் உயிர்க்கும் தாரோய்!
    பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்கும் கூற்றாய்
    உலகு ஆள உற்றேனோ?
மின் உயிர்க்கும் தீவாய் வெயில்
    உயிர்க்கும் வெள் வேலோய்! ‘


பொருள்


‘மன் உயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு

நல்கு உரிமை = நல்லது செய்யும் உரிமையை

மண் பாரம் = அரச பொறுப்பை

நான் சுமக்கப் = நான் ஏற்றுக் கொள்ள

பொன் = பொன் போன்ற நிறமுடைய மலர்களை

உயிர்க்கும் = உதிர்க்கும்

தாரோய்! = மாலை அணிந்தவனே (தார் = மாலை )

பொறை = பொறுமை. இங்கே இளைப்பாறுதல்

உயிர்த்த ஆறு இதுவோ? = அடையும் வழி இதுவோ ?

உன் உயிர்க்கும் = உன்னுடைய உயிர்க்கும்

 கூற்றாய் = எமனாய் (உடலையும், உயிரையும் கூறு படுத்துவதால் கூற்றுவன்)

உலகு ஆள உற்றேனோ? = உலகை ஆள பிறந்தேனோ

மின் உயிர்க்கும் =மின்னல் போல் ஒளி வீசும்

தீவாய் = அனல் கக்கும்

வெயில் = வெயில் போல பிரகாசமாக உள்ள

உயிர்க்கும் வெள் வேலோய்! = வெண்மையான வேலை கொண்டவனே

தயரதன் இறந்ததற்கு இராமன் எந்த விதத்திலும் காரணம் அல்ல. கானகம் போ என்று சொன்னவுடன்  மறு பேச்சு சொல்லாமல் கிளம்பி விட்டான். இருந்தும், தயரதன் இறந்ததற்கு தான் காரணம் என்று இராமன் நினைக்கிறான்.

கைகேயி காரணம், பரதன் காரணம், கூனி காரணம் என்று சொல்லவில்லை. அறிவின் உச்சம் உலகில் உள்ள அனைத்து தவறுகளுக்கும் தானும் ஏதோ ஒரு விதத்தில்  காரணம் என்று அறிவது.

மதத்தின் அடிப்படையில்  ஏதோ ஒரு தீவிரவாதி எங்கோ ஒரு கொடிய செயலை  செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். மதப் பற்று உள்ள எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அந்த கொடுமைக்கு காரணம் என்று அறிய வேண்டும். "நான் செய்ய வில்லை" என்பது சரியான காரணம் அல்ல. அந்த கொடுமைக்கு  மதம் தான் காரணம் என்றால் , மத கோட்பாடுகளை பின் பற்றும், அது சரி என்று நினைக்கும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம்.


இரண்டு நாடுகள் எங்கோ சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். தேசப் பற்று கொண்ட எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம். பொறுப்பு. நான் என் நாட்டின் மேல் கொண்ட அபிமானத்துக்கும் ஏதோ  வேறு இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்  என்று கேட்டால், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தேசத்தின் மேல் கொண்ட பற்று , மற்ற தேசத்தின் மேல் வெறுப்பாக, பகையாக மாறுகிறது.

அது முதலாவது செய்தி.

இரண்டாவது,  துக்கம் வந்தால் அதை வெளிக் கொட்ட வேண்டும். மனதுக்குள் வைத்து புளுங்க கூடாது. அழுது, புலம்பி அதை வெளிப்படுத்த வேண்டும்.

இராமன் புலம்பிய செய்தி இராமாயணம் என்ற பெரிய காப்பியத்தில் ஒரு முக்கியம் இல்லாத செய்தி. கம்பர் அதை சொல்லாமல் விட்டு விட்டுப் போயிருக்கலாம். யாருக்குத் தெரிய போகிறது ? இருந்தும் வேலை மெனக்கெட்டு  இராமனின் புலம்பலை எழுதுகிறார் கம்பர்.

ஏன் ?

மகிழ்ச்சியைப் போல துக்கத்தையும் வெளிப் படுத்த வேண்டும். மனம் ஒரு நல்ல நிலையில் இருக்க உணர்ச்சிகளின் வெளிப்பாடு முக்கியம். அமுக்கி வைத்துக் கொண்டிருந்தால் அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

உணர்ச்சிகளை , பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்வு சிறக்கும்.




Tuesday, April 25, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான் 


தன்னிடம் அரசை மீண்டும் தர கானகம் வந்த பரதனிடம் , தந்தை தயரதன் எப்படி இருக்கிறான் என்று இராமன் கேட்டான்.

"உன்னைப் பிரிந்த பிரிவு என்ற நோயாலும், என் தாய் கைகேயி கேட்ட வரம் என்ற எமனாலும் தந்தை இறந்து விண்ணகம் போனான் "  என்று பரதன் இராமனிடம் கூறினான்.

அப்படி சொன்னதுதான் தாமதம், அந்த சொல் முழுவதுமாகக் கூட காதில் நுழையவில்லை, அதற்குள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினால் போல துன்பம் அடைந்து கண்ணும் மனமும் காற்றாடி போல சுழன்று மயங்கி மண்ணில் விழுந்தான்.

பாடல்

‘விண் இடை அடைந்தனன் ‘
    என்ற வெய்ய சொல்,
புண் இடை அயில் எனச்
    செவி புகாமுனம்,
கண்ணொடு மனம் சுழல்
    கறங்கு போல ஆய்,
மண் இடை விழுந்தனன்
    வானின் உம்பரான்.

பொருள்

‘விண் இடை = வானகம்

அடைந்தனன் = அடைந்தான் (தயரதன்)

என்ற= என்ற

வெய்ய சொல் = கொடிய சொல்

புண் இடை = புண்ணில்

அயில் எனச் = வேல் புகுந்தார் போல

செவி புகாமுனம் = காதில் விழு முன்

கண்ணொடு = கண்ணோடு

மனம் சுழல் = மனமும் , சுழலும்

கறங்கு போல ஆய் = பட்டம் போல ஆகி

மண் இடை விழுந்தனன் = மண்ணில் விழுந்தான்

வானின் உம்பரான் = வானத்திற்கும் அப்பாற்பட்ட இடத்தை சேர்ந்தவன்


ஆண் என்பவன் வலிமையானவன்.. முரடன்.  மென்மையான உணர்வுகள் மிக குறைவாக உள்ளவன். சண்டையும், வேகமும், கோபமும், வலிமையும், இரத்தமும்  அவன் குறியீடுகள்.

அன்பு, காதல், நேசம், கண்ணீர், நெகிழ்வு அவனுக்கு அந்நியமான ஒன்று என்றே முத்திரை குத்தி வளர்க்கப் படுகிறான்.

அழும் ஆண்மகனை யாரும் விரும்புவதில்லை.

துன்பம் கண்டு துவளும் ஆண்மகன் பரிகசிக்கப் படுகிறான்.

எத்தனை துன்பம் வந்தாலும் , பாறை போல உறுதியாக நிற்க வேண்டும் என்பது அவனுக்கு  விதித்த விதி.

அது சரி அல்ல.

உணர்ச்சிகளை சரியான அளவில் கையாளத் தெரிய வேண்டும்.

அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அன்பு செலுத்த வேண்டும்.

பணிந்து போக வேண்டிய இடத்தில் பணிந்து போக வேண்டும்.

தோற்க வேண்டிய இடத்தில் தோற்க வேண்டும்.  இராவணனை பற்றி சொல்ல வந்த கம்பர் , படுக்கை அறையில் கூட பணியாதவன் என்கிறார். படுக்கை அறையா வீரத்தைக் காட்டும் இடம் ? அன்பு காட்ட வேண்டிய இடத்தில் ஆணவத்தை காட்டுவது அரக்க குணம்.

அழுவதும், துன்பத்தில் துவ;ளுவதும் தவறொன்றும் அல்ல.

தந்தை இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட இராமன் மயங்கி விழுந்தான்  என்கிறான்  கம்பன்.

ஒரு வேளை ,  அப்படி சொல்லாமல் , தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட இராமன் , சிறிதும் கலங்காமல் இருந்தான். அன்றலர்ந்த மலர் போல இருந்தது அவன்  முகம் என்று எழுதி இருந்தால், எல்லோரும் அதை இரசித்து இருப்பார்கள். "பார், இராமன் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் கலங்காமல் இருக்கிறான் ..." என்று அவனை பாராட்டி இருப்பார்கள்.

கம்பர் அப்படி சொல்லவில்லை. மயங்கி விழுந்தான் என்று  சொன்னார்.அருகில் இருந்த சீதை மயங்கி விழுந்தாள் என்று சொல்லவில்லை.  இராமன் மயங்கினான்.

பாசத்தின் உச்சம். தந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. அவன் மயங்கி விழுந்ததால் அவன் மேல் உள்ள மதிப்பு ஒன்றும் குறைந்து விடவில்லை.

ஆண்களுக்கு ஒரு பாடம். எப்போதும் ஒரு முரட்டு தன்மையோடேயே இருக்க வேண்டும் என்ற  கட்டாயம் இல்லை.

அழ வேண்டும் என்றால் அழுங்கள்.

துக்கம் தாளவில்லை என்றால் மயங்குவது கூட சரிதான்.

இவை எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை அடக்கி வைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

ஆங்கிலத்தில் emotional intelligence என்று சொல்லுவார்கள்.

உணர்ச்சிகளை சரியாக கையாள பழக வேண்டும்.


Monday, April 24, 2017

குறுந்தொகை - நல்லை அல்லை

குறுந்தொகை - நல்லை அல்லை 



காதல், அது காலங்களை கடந்து மட்டும் அல்ல, காலங்களுக்கு முன்னாலும் நின்றிருக்கிறது.

குறுந்தொகை காலம்.

இரவு நேரம். நிலவு பால் போல் பொழிகிறது. தலைவி , கானகத்தில் காத்து இருக்கிறாள். தலைவன் வர வேண்டும். வருவான், வருவான் என்று காத்து இருக்கிறாள். நிலவு , பகல் போல் எங்கும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

தலைவன் வரும் வழியில் பெரிய வேங்கை மரங்கள் இருக்கும். அந்த மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடக்கும் . அந்த மரத்தின் அடியில் சில பல பாறைகள் இருக்கும். அந்த பாறைகளின் மேலும் ஒரு சில பூக்கள் உதிர்ந்து இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால், பாறையும், அதன் மேல் இருக்கும் பூக்களும் நிலவொளியில் ஏதோ ஒரு புலிக் குட்டி இருப்பது போலத் தெரியும். தலைவன் அதைக் கண்டு தயங்கலாம் . ஒரு வேளை புலியாக இருக்குமோ என்று நிறுத்தி நிதானித்து வரலாம். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்று நினைக்கிறாள்.

அது மட்டும் அல்ல, இந்த நிலவு இப்படி வெளிச்சம் போட்டு காண்பித்தால்  தங்கள் களவு ஒழுக்கம் வெளிப்பட்டு விடுமே என்று அஞ்சுகிறாள். யாருக்கும் தெரியாமல் , தலைவன் பதுங்கி பதுங்கி வர வேண்டும். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்றும் நினைக்கிறாள்.

நிலவே, நீ ஏன் இப்படி பிரகாசமாக ஒளி வீசுகிறாய். நீ ஒன்றும் நல்லவள் இல்லை என்கிறாள்.

பாடல்

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
எல்லி வருநர் களவிற்கு 
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 


பொருள்

கருங்கால் = கரிய கால்களைக் கொண்ட மரத்தின் அடி வேர்)

வேங்கை = புலி

வீயுகு = (மலர்கள் ) வீழ்ந்த

துறுகல் =உறு கல் = பெரிய கல்

இரும்புலிக் = கொடிய புலி

குருளையிற் = குட்டியைப் போல

றோன்றுங் = தோன்றும்

காட்டிடை  = காட்டில்

எல்லி = இரவில்

வருநர் = வரும் அவர்

களவிற்கு = களவு ஒழுக்கத்துக்கு

நல்லை யல்லை = நல்லது அல்லை . நல்லவள் அல்லை

நெடு = நீண்ட

வெண் ணிலவே = வெண் நிலவே


அது நிலவுக்குச் சொன்னாலும், தலைவனுக்கும் சொன்னது தான்.

காடு  பயங்கரமான இடம். உண்மையிலேயே புலி இருந்தாலும் இருக்கும். யாரும் பார்த்து விடலாம். காலா காலத்தில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லாமல்  சொன்னது.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு இந்த பாடலை படிக்கும் போது ஒரு லேசான பதற்றமும், பரிதாப உணர்ச்சியும் வருகிறது.

காட்டில் ஒரு இளம் பெண்ணை வரச் சொல்லி விட்டு , கால தாமதம் செய்யும் தலைவன். நினைத்துப் பார்த்தால் , பதறத்தான் செய்கிறது மனம்.  கள்ளர் பயம், புலி பயம் அந்த பெண்ணுக்கு மட்டும் இருக்காதா ?

அவளுக்கு அவன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இரவில் வந்து அவனுக்காக காத்திருப்பாள் ?

அது மட்டும் அல்ல, காலம் தாழ்த்தி வரும் அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை. நல்லை இல்லை என்று நிலவை சாடுகிறாள்.

எந்தக்  காலத்தில் பெண்ணின் தவிப்பு ஆணுக்கு புரிந்திருக்கிறது ?

சங்க காலம் தொட்டு , இன்று வரை, பெண்ணை புரிந்து கொள்ளாமலே தான் ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




Sunday, April 23, 2017

திருக்குறள் - அறமும் அருளும்

திருக்குறள் - அறமும் அருளும் 


அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது தெளிவில்லாதவன் பெற்ற மெய் பொருள் போன்றது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

பொருள்

தெருளாதான் = தெளிவு இல்லாதவன்

மெய்ப்பொருள் = உண்மையான ஞானத்தை

கண்டற்றால் = கண்டது

தேரின் = ஆராய்ந்தால்

அருளாதான் = அருள் இல்லாதவன்

செய்யும் அறம் = செய்யும் அறத்துக்கு ஒப்பானது

சில பேர் நிறைய தானம் தர்மம் செய்வார்கள். அந்த உதவிகளுக்குப் பின்னால் அருள்  மனம் இருக்காது. ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து தான் அந்த தானம் செய்வார்கள்.

 சரி, செய்து விட்டு போகட்டுமே. அருள் இல்லாவிட்டால் என்ன . உதவி செய்து விட்டுப் போகட்டுமே. எப்படி நினைத்து செய்தாலும் அறம் நல்லது தானே என்று நினைப்போம்.

அது சரி அல்ல.

ஒட்டு வாங்க பணம்  தருகிறார்கள். அந்த பணம் தானம் தான். இலவசம் தான். பணம் பெற்றுக் கொண்டவர்கள் , யார் பணம் தந்தார்களோ அவர்களுக்குத் தான்  ஓட்டு போடுவார்கள் என்று நிச்சயம் இல்லை.  எனவே,அந்த பணம் தானம் தான்.

அது சரியா ?

அப்படி தானமாக பணம் தந்தவன், ஆட்சிக்கு வந்தால் தகாதன  செய்வான்.

சரி, அது போகட்டும். அரசியலை விட்டு  விடுவோம்.

அருள் இல்லாமல் ஒருவன் உதவி செய்தால், மறு உதவி எதிர் பார்க்காவிட்டால் கூட, எப்போதாவது சொல்லி காண்பிப்பான். "உனக்கு அன்று  அப்படி உதவி செய்தேனே " என்று  பலர் முன்னிலையில் சொல்லுவான். நமக்கு தர்ம சங்கடமாக இருக்கும்.

அருள் இல்லாதவன் செய்யும் அறம் ஆபத்தானது.

எவ்வளவு ஆபத்தானது என்றால் ,

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் அறிவு போன்றது.

அது என்ன உதாரணம்.

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் ஞானத்தால் என்ன ஆபத்து ?

ஏதோ ஓரிரு புத்தகங்களை படித்து விட்டு எல்லாம் அறிந்த மேதாவி போல  சிலர்  எல்லா பிரச்சனைகளுக்கும் வழி சொல்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு  நடந்தால் , அது ஆபத்தில் தான் போய் முடியும்.

ஒன்றும் இல்லை, நீங்கள் இருக்கும் whatsapp group இல் , உங்களுக்கு உடலில் ஏதோ ஒரு  வலி என்று சொல்லிப் பாருங்கள். தலை வலி, கால் வலி என்று சொல்லிப் பாருங்கள். உடனே எத்தனை பேர் எத்தனை மருந்து சொல்கிறார்கள் என்று. மருத்துவம் சம்பந்தமாக ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக  படித்திருப்பார்கள், கேள்வி பட்டிருப்பார்கள். அவ்வளவு தான், எல்லாம் படித்த , அனுபவம் வாய்ந்த மருத்துவர் மாதிரி மருந்து சொல்ல ஆரம்பித்து  விடுவார்கள்.

மருத்துவம் என்று இல்லை. எந்த பிரச்சனை என்றாலும் அதுக்கு வழி சொல்ல கிளம்பி விடுவார்கள்.

தெளிவு இல்லாதவன் என்றால் அரை குறை அறிவு. அரை வேக்காட்டு அறிவு உள்ளவன் என்று அர்த்தம். அது ஆபத்தில் கொண்டு போய் முடியும்.

ஆன்மீகமாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், எந்தத் துறையாக வேண்டுமானாலும்  இருக்கட்டும். அரைகுறை அறிவு ஆபத்துதான்.

அது போல அருள் இல்லாதவன் செய்யும் அறம் , அவனுடைய அருளற்ற தன்மையினால் , முன் செய்த அறம் அழிந்து போகும் அல்லது அழிக்கப்படும்.

கொடுக்கும் போது , இது என் பணம், என் செல்வம் என்று நினைத்துக் கொடுக்காதீர்கள். இந்த அளவுக்கு தானம் செய்ய செல்வத்தைத் தந்த இறைவனை வாழ்த்தி தானம் செய்யுங்கள் என்கிறார்  அருணகிரிநாதர்.

முருகன் எனக்கு  கொடுத்தான்,நான் எல்லா உயிர்களுக்கும் அதை  கொடுக்கிறேன் என்று நினைத்து, முருகனை வாழ்த்தி தானம்  செய்யச்  சொக்கிறார்.

  வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.


அருளை முதலில் மனதில் வையுங்கள், அப்புறம் தானம் செய்யுங்கள்.

தெளிவு பிறக்கும் வரை,  உங்கள்  வெளிப் படுத்தாதீர்கள்.


Saturday, April 22, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அறமும் கருணையும்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அறமும் கருணையும் 


அரசை மீண்டும் தரவந்த பரதனை காண்கிறான் இராமன். பரதனின் தவ கோலமும், அவன் அழுத சிவந்த கண்களும் இராமனின் மனதை நெகிழ வைக்கிறது. பரதன் இராமனின் காலில் விழுகிறான். விழுந்த பரதனை தூக்கி தழுவிக் கொள்கிறான்.

"பெருமூச்சு விட்டு, கண்களில் இருந்து நீர் அருவியாக பாய்ந்து மார்பில் விழ, பரதனை கட்டிப் பிடித்துக் கொண்டான் இராமன். அறத்தின் இருப்பிடமான பரதனை , கருணையின் இருப்பிடமான இராமன் தழுவிக் கொண்டான் "

பாடல்

அயா உயிர்த்து, அழு கண் நீர்
    அருவி மார்பிடை
உயா உற திரு உளம்
    உருகப் புல்லினான்,
நியாயம் அத்தனைக்கும் ஓர்
    நிலயம் ஆயினான்,
தயா முதல் அறத்தினைத்
    தழீஇயது என்னவே.


பொருள்

அயா = தளர்ந்து

உயிர்த்து=  மீண்டும் உயிர் பெற்று

அழு கண் நீர் = அழுகின்ற கண் நீர்

அருவி = அருவி போல

மார்பிடை = மார்பில் விழ

உயா உற = வருத்தம் உற

திரு உளம் உருகப் = மனம்  உருக

புல்லினான் = அணைத்துக் கொண்டான்

நியாயம் = நியாயம்

அத்தனைக்கும் = அனைத்திற்கும்

ஓர் = ஒரு

நிலயம் ஆயினான் = இருப்பிடம் ஆயினான்

தயா முதல் = கருணையில் முதல்வனான

அறத்தினைத் = அறத்தினை

தழீஇயது = தழுவியது

என்னவே = போல

அரசை ஏற்றுக் கொள்ளவது அறம் அல்ல என்று உறுதியாக நம்பினான். பரதனுக்கு தெரிந்த   அறம் இராமனுக்குத் தெரியாதா ?

அறம் அல்லாத ஒன்றை இராமன் செய்வானா ?

பரதன் சொல்வது  சரி என்று படுகிறது. அப்படி என்றால் இராமன் செய்தது சரி அல்ல  என்று ஆகும்.

யார் வழியைப் பின் பற்றுவது என்ற குழப்பம் படிப்பவர்களுக்கு ஏற்படும்.

கம்பர் அதை சரி செய்கிறார்.

பரதன் அறத்தின் வழி நின்றான்.

ஆனால், இராமன் கருணையின் வழி நின்றான். கருணையே வடிவாக இருந்தான். கருணையின் பிறப்பிடம் இராமன் என்று கம்பன் காட்டுகிறான்.

பரதனும், இராமனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இருந்தது அறமும் கருணையும்  ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டிருந்தது போல இருந்ததாம்.

அறம் உயர்ந்ததுதான். கருணை அதையும் விட உயர்ந்தது.

கருணைக்கு அறம் , அறம் அல்லாதது என்றெல்லாம் தெரியாது. இவற்றை எல்லாம் கடந்தது கருணை.

ஒரு தாய் பிள்ளையை கடிந்து வைக்கிறாள் அல்லது அடிக்கிறாள். திட்டுவதும் அடிப்பதும் அறமா என்றால் இல்லைதான். ஆனால், அவள் செய்வது அளவு கடந்த காதலால். குழந்தையின் மேல் உள்ள கருணையால்.

 தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை 
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே 
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் 
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே

என்பார் குலசேகர ஆழ்வார்.

தாய் அடித்தாலும் அவளின் அருளை நினைத்தே அழும் குழந்தை போல அழுதேன் என்கிறார்.

அறம் என்பது என்ன என்று படித்து அறிந்து கொள்ளலாம். அது பற்றி விவாதிக்கலாம். சரியா தவறா ஆராயலாம்.

கருணை என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது. விளக்க முடியாதது.

இராமனின் செயல்கள் கருணையில் இருந்தது பிறந்தவை என்று புரிந்து கொண்டால் , அவனின் பல செய்லகளை நாம் நீதி, நேர்மை, ஞாயம் என்ற பூத கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருப்போம். 

Wednesday, April 19, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அழுத இராமன்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அழுத இராமன் 


குடும்பம் என்றால் எப்போதும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. வருத்தம் இருக்கும், சோகம் இருக்கும், கவலை இருக்கும்.

அப்படி ஒரு வருத்தமான சூழ்நிலை வரும்போது என்ன செய்ய வேண்டும் ?

என்ன செய்கிறோம் ?

வருத்தம் பிள்ளைகளை தாக்கி விடக் கூடாது என்று அவர்களிடம் இருந்து மறைக்கிறோம். பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கட்டும் , நம்ம கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று நினைக்கிறோம்.

குடும்பத் தலைவன் அழலாமா ? அதுவும் மனைவியின் முன்னால் , பிள்ளைகள் முன்னால் ? அழுவது என்பது ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு அல்லவா ?

வருத்தத்தை விடுவோம். கணவன் செய்து விடுகிறான். அதனால் மனைவிக்கு வருத்தம். கணவன் அதை உணர்கிறான். அவளிடம் மன்னிப்பு கேட்க அவன் மனம் இடம் தர மறுக்கிறது. "என்னை மன்னித்துக் கொள் , நான் தவறு செய்து விட்டேன் ...உன்னை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டேன் ..இனிமேல் இப்படி நடக்காது " என்று அவள் கையை பிடித்துக் கொண்டு கண் கலங்கி சொல்லும் கணவன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

ஆண் என்பவன் அழ கூடாது என்று சொல்லியே வளர்க்கிறோம். உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் ஆண் குழம்புகிறான். தவிக்கிறான். அடக்கப்பட்ட உணர்ச்சிகள் வேறு வழியில் வெளிப்படுகிறது.


இராமனைக் காண வந்த பரதனின் மெலிந்த உருவைக் கண்ட இராமன் வருந்தி அழுகிறான். ஐயோ , என் தம்பி இப்படி மெலிந்து உரு குலைந்து போய் விட்டானே என்று உருகுகிறான்.

காப்பிய நாயகன். மிக வலிமையான இராமன் , அன்பில், காதலில் உருகுகிறான். கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பார் வள்ளுவர்.

அளவு கடந்த அன்பினால் , இராமன் கண்கள் நீரை வார்க்கின்றன.

பாடல்

‘உண்டுகொல் உயிர்?’ என ஒடுங்கினான் உருக்
கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண்எனும்
புண்டரீகம் பொழி புனல், அவன் சடா
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.


பொருள்

‘உண்டுகொல் உயிர்?’ = உயிர் இருக்கிறதா ? பரதனின் உடலில் உயிர் இருக்கிறதா ?

என ஒடுங்கினான் = என்று சந்தேகப் படும் அளவுக்கு மெலிந்த

உருக் = (பரதனின்) உருவத்தைக்

கண்டனன்; = (இராமன்) கண்டான்

நின்றனன் = திகைத்து நின்றான்

கண்ணன் = அழகிய கண்களைக் கொண்ட இராமன்

கண்எனும் = கண்கள் என்ற

புண்டரீகம் = தாமரை மலர்கள்

பொழி புனல் = அருவி போல பெருகிய நீர்

அவன் =  பரதனின்

சடா மண்டலம் = முடி நிறைந்த தலையின் மேல்

நிறைந்து போய் = நிறைந்து

வழிந்து சோரவே = வழிந்து விழுந்தது .


இராமன் கால்களில் பரதன் விழுந்தான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். அப்படி விழுந்த பரதனின் தலையில் இராமனின் கண்ணில் இருந்து  வழிந்த நீர் விழுந்து நனைத்தது.

ஆண் அழுவது தவறு இல்லை. ஆண் அன்பை வெளிப்படுத்துவது தவறு இல்லை.

இராமன் அழுதான் என்பதால் அவன் வீரமோ, பெருமையோ குறைந்து விடவில்லை. அது இன்னும் பொலிவு பெறுகிறது.

பரதன் அழுகிறான். இராமன் அழுகிறான்.

ஆண் பிள்ளைகள் அழுவதை பரிகாசம் பண்ணி, அதை அடக்கி அடக்கி அவர்களை  முரட்டு பிள்ளைகளாக வளர்க்கிறோம். அவர்களுக்குள்ளும் அன்பு இருக்கிறது. அந்த அன்பு வெளிப்படும் போது கண்ணீர் வரும். கண்ணீர் விட பழக்கம் இல்லை என்றால் அன்பை வெளிப்படுத்துவதும் பழக்கும் இல்லாமல் முரடாக, கரடு முரடாக வளர்வார்கள்.

அதிகாரம் செய்வதும் , மிரட்டுவதும் மட்டும்தான் ஆண்மை என்று நினைத்துக்கொண்டு வளர்வார்கள். அது சரியா ?

சிந்திப்போம்.




Tuesday, April 18, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அறம்தனை நினைத்திலை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அறம்தனை நினைத்திலை 


கானகத்தில் இராமனை கண்டு அவனிடம் அரசை மீண்டும் தர பரதன் வருகிறான். இராமனும் பரதனும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.

அவர்கள் பேசியதை கம்பன் சொல்கிறான்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவர்கள்நீ என்ன பேசி இருப்பார்கள் என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

"அண்ணா", "தம்பி" என்று ஒருவரை ஒருவர் விளித்து கட்டி பிடித்து இருக்கலாம்.  இலக்குவன் மற்றும் சீதையின் நலம் விசாரித்து இருக்கலாம். "என்ன இப்படி செய்து விட்டீர்கள் அண்ணா. நீங்கள் உடனே அயோத்திக்கு வர வேண்டும் " என்று பரதன் சொல்லி இருக்கலாம்.....என்றெல்லாம் நினைப்போம். நாமாக இருந்தால் அப்படித்தான் பேசி இருப்போம்.

பரதன் அப்படி பேசவில்லை.

இராமன் மேல் குற்றக் கணைகளை தொடுகிறான்.

"நீ அறத்தை நினைக்கவில்லை, அருள் என்பதை விட்டு விட்டாய் , அரச முறை என்ற ஒன்றை கை விட்டாய்" என்று இராமன் மேல் நேரடியாக குற்றம் சுமத்துகிறான்.

அன்பு, அண்ணன் மேல் கொண்ட பாசம் அடுத்து வருகிறது.

இதையெல்லம் சொல்லிவிட்டு, இராமன் திருவடிகளில் விழுகிறான். இறந்த தன் தந்தையே நேரில் வந்தது போல இராமனை நினைத்து , தன்னை மறந்து அவன் கால்களில் விழுகிறான்.

பாடல்

‘அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;
துறந்தனை முறைமையை’ என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர்அடி வந்து வீந்தனன் -
இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே.


பொருள்

‘அறம்தனை நினைந்திலை; = அறத்தை நீ நினைக்கவில்லை

அருளை நீத்தனை = அருளை விட்டு நீங்கி விட்டாய்

துறந்தனை முறைமையை = அரச முறை என்ற ஒன்றை துறந்து விட்டாய்

என்னும் சொல்லினான் = என்று சொல்லியவன்

மறந்தனன் = தன்னை மறந்து

மலர்அடி வந்து வீந்தனன் = இராமனிடம் வந்து அவன் திருவடிகளில் வீழ்ந்தான்

இறந்தனன் = இறந்த தன்

தாதையை = தந்தையை

எதிர்கண்டென்னவே = எதிரில் கண்டது போல .

அறம் ஒன்றே பரதனின் மனதில் எப்போதும் நின்றது. இராமன் மேல் கொண்ட அன்பையும்  காதலையும் தாண்டி முதலில் வந்து நிற்பது அறம் பற்றிய  எண்ணமே.

பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறு எது என்றால் பிள்ளைகள் தவறு செய்யும் போது  கடிந்து சொல்வது கிடையாது. கண்டிப்பது கிடையாது. பாவம், சின்ன பிள்ளை தானே , போக போக சரியாகி விடும் என்று பிள்ளைகள் மேல் கொண்ட அன்பினால் செய்யும் தவறுகளை திருத்துவது இல்லை.

கணவன் மனைவி உறவிலும் அதே சிக்கல் தான். கணவனோ மனைவியோ தவறான  ஒன்றைச் செய்தால் உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் மனம் புண்படுமே என்று தவறை சகிக்கக் கூடாது. எது செய்தாலும் அதற்கு  ஒத்துப் போவது என்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழி அல்ல.  தவறு யார் செய்தாலும்  அது திருத்தப் பட வேண்டியதே.


பரதனுக்கு இராமன் மேல் அளவு கடந்த அன்பு உண்டு. இராமனை தன்னுடைய தந்தையாகவே நினைக்கிறான். இருந்தாலும் அவன் செய்த தவற்றினை தயங்காமல் சுட்டிக் காட்டுகிறான்.

மூன்று தவறுகளை சுட்டிக் காட்டுகிறான்.

அறம் தனை மறந்தனை = அறம் என்பது நீதி, ஒழுக்கம், உயர்ந்தோர் சொல்லியது...அவற்றை எல்லாம் மறந்து விட்டாய். அப்போது கூட இராமன் மேல் மென்மையாக   குற்றம் சொல்கிறான். அறம் பற்றி இராமன் அறியாதவன் அல்ல. தெரியும் , ஆனால் மறந்து விட்டாய் என்கிறான். அறம் தனை  வலுவினை என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை. குற்றம் சொல்ல வேண்டும் என்றால்  அதை கத்தி சொல்ல வேண்டும், கோபத்தோடு சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை மென்மையாகவும் சொல்லலாம் என்று பரதன் சொல்லித் தருகிறான்.

அருளை நீங்கினை = என் மேலும், அயோத்தி மக்கள் மீதும் உள்ள அருளை விட்டு நீங்கி விட்டாய். தொடர்பு உடையவர்கள் மேல் செலுத்துவது அன்பு. தொடர்பு இல்லாதவர்கள் மேல் செலுத்துவது அருள். உன் குடி மக்கள் மேல் உள்ள அருளை விட்டு நீங்கி விட்டாய்.

துறந்தனை முறைமையை = சரி அறம் தான் மறந்து விட்டது. அருள் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் அரச முறை என்று ஒன்று இருக்கிறதே. அதை  எப்படி நீ விட முடியும். மூத்த மகன் அரசு ஆள்வது என்பது ஒரு முறை. அதை எப்படி நீ துறக்க முடியும் என்று கேட்கிறான்.

சரி , இவ்வளவு கடுமையான குற்றங்களை சொல்கிறானே. அவனுக்கு இராமன் மேல் கோபம் இருக்குமோ ? வெறுப்பு இருக்குமோ ? என்று நாம் நினைப்போம்.

இல்லை. அளவு கடந்த காதல்.

தன்னை மறந்து அவன் கால்களில் விழுகிறான். தந்தை போல அவன் மேல் மரியாதை  வைக்கிறான்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. குற்றம் சொல்வதாக இருந்தாலும், மென்மையாகச் சொல்லலாம். அன்போடும், மரியாதையோடும் சொல்லலாம். குற்றம் சொல்வது என்றால் கோபத்தோடும், வெறுப்போடும், கடுமையான சொற்களோடும் தான் பேச வேண்டும் என்று இல்லை.

பேசிப் பழகுவோம்.



Monday, April 17, 2017

இராமாயணம் - வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே

இராமாயணம் - வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே 


தயரதன் சொல் கேட்டு இராமன் கானகம் வந்து விட்டான். இராமனைத் தேடி பரதன் வருகிறான். இராமனிடம் அரசை ஒப்படைக்க வேண்டும், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது பரதனின் எண்ணம்.  படையோடு வரும் பரதனை தூரத்தில் கண்ட இலக்குவன் , பரதன் தங்கள் மேல் படை எடுத்து வருவதாக எண்ணிக் கொண்டு பரதன் மேல் படை தொடுக்க தயாராகிறான். பரதன்  அப்படி பட்டவன் அல்ல என்று இராமன் , இலக்குவனிடம் எடுத்துக் கூறுகிறான்.

கூப்பிய கைகளோடும், அழுத விழிகளோடும்  வரும் பரதனை இலக்குவன் காண்கிறான்.


"மிகுந்த வலிமையுடைய பரதனின் தோற்றத்தைக் கண்ட இலக்குவன், கோபம் தணிந்து, சோர்ந்து, கண்ணில் நீர் வழிய, கையில் உள்ள வில் நழுவி விழ ஒளி இழந்து நின்றான் "


பாடல்

எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் -
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழும்
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர,
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே.


பொருள்

எல் ஒடுங்கிய = ஒளி குறைந்து. எல் என்றால் ஒளி. எல்லே இளங்கிளியே

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

உடல் ஒளி விடுமாம். மிகுந்த ஒளி விடும் உடலைக் கொண்ட அரசன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பிரதீபன் என்று பெயர்.

இராமன் உடலில் இருந்து புறப்பட்ட ஒளி சூரிய ஒளியை விட பிரகாசமாய் இருந்தது என்பார் கம்பர். சூரியன் ஒளி தன்னுடைய மேனியின் ஒளியில் மறைய என்று இராமனின் மேனி ஒளியையை கூறுவார் கம்பர்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.


முகத்து இளவல் நின்றனன் = முகத்தை கொண்ட இலக்குவன் நின்றான்

மல் ஒடுங்கிய = மல் யுத்தம் ஒடுங்கிய

புயத்தவனை = புயங்களை கொண்ட பரதனை

வைது எழும் சொல்லொடும் = சினந்து சொல்லிய சூடான சொல்லோடு

சினத்தொடும் = கோபத்தையும்

உணர்வு = உணர்வும்

சோர்தர = தளர்ச்சி அடைய

வில்லொடும் = வில்லோடும்

கண்ண நீர் = கண்ணில் இருந்து வரும் நீர்

நிலத்து வீழவே = நிலத்தில் விழ


மல் ஒடுங்கிய ...பரதன் மிகப் பெரிய தோள் வலிமை உடையவன். அவன் இருக்கும் வரை  வேறு யாரும் மல் யுத்தம் செய்யக் கூட நினைக்க மாட்டார்களாம். அதனால் மல் யுத்தம் என்பதே இல்லாமல் போய் விட்டதாம். எனவே  'மல் ஒடுங்கிய' என்றார்.

பேராற்றல் கொண்டவன் பரதன். அவன் நினைத்திருந்தால் , அரசை அவனே வைத்துக் கொண்டிருக்க முடியும்.  தயரதன் அளித்தது மட்டும் அல்ல, அவன் ஒரு பெரிய  பலசாலியும் கூட. பரதனை யாரும் எதிர்த்திருக்க முடியாது . இருந்தும் அது சரி அல்ல என்று நினைத்து அவன் அரசை இராமனிடம் தர வந்திருக்கிறான்.

அது மட்டும் அல்ல,  எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவனாய் இருந்தாலும் நீதி, நேர்மை, ஒழுக்கம், அறம் இவற்றிற்கு கட்டுப்பட்டே வாழ வேண்டும். நான் பெரிய  ஆள் என்று நினைத்துக் கொண்டு அறம் அல்லாத செயல்களைச் செய்யவே கூடாது.

என்னை யார் கேட்க முடியும் ? யார்க்கு தைரியம் இருக்குறது என்னை எதிர்த்து நிற்க என்று ஆணவத்துடன் அறம் நழுவி நிற்கக் கூடாது.

தவறு செய்ய பயப்படவேண்டும். அறத்தின் முன் கை கட்டி நிற்க வேண்டும். நான் அரசன், மந்திரி, தலைவன் என்று மனம் போன வழியில் செல்லக் கூடாது  என்பதை காட்டும் பாத்திரம் பரதன்.

இலக்குவன் சரியாக ஆராயாமல், இராமன் மேல் கொண்ட அதீத காதலால் பரதனை தவறாக நினைத்த இலக்குவன் , முகத்தில் ஒளி இழந்து, கையில் இருந்த  வில் நழுவ, கண்ணில் இருந்து நீர் நழுவ நின்றான்.

இலக்குவன் தான் செய்தது , செய்ய நினைத்தது தவறு என்று உணர்ந்தான். அதற்காக  வருந்தினான். அவன் முகம் ஒளி குன்றியது. உடல் வலி குன்றியது. குற்ற உணர்வில் கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

நினைத்திருந்தால் இலக்குவன் , தன் செயலுக்கு ஞாயம் கற்பித்திருக்க முடியும்.  அவ்வாறு செய்யவில்லை.  தன் தவறை உணர்ந்து வருந்துகிறான்.

சக்ரவர்த்தியின் பிள்ளையாக இருந்தாலும் தவறு செய்யக் கூடாது, அப்படியே தவறி செய்து விட்டாலும் அதற்காக வருந்தி அழுதார்கள்.

உயர்ந்த அறங்களை எடுத்துச் சொல்லும் பகுதி இது.

உணர்வோம். 

Thursday, April 6, 2017

இராமாயணம் - முடிய நோக்கினான்

இராமாயணம் - முடிய நோக்கினான் 


கானகத்தில் இராமனைக் காண பரதன் வந்திருக்கிறான். இராமனிடம் அரசைத் திருப்பி தர வேண்டும் என்பது பரதனின் எண்ணம். அப்படி வந்த பரதனை இராமன் காண்கிறான்.

"பரதன் இராமனை நோக்கி வருகிறான். இரண்டு கைகைளையும் உயர தூக்கி வணங்கியபடி, வாடிய உடல், அழுது அழுது சோர்ந்த கண்கள், துன்பம் என்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்த பரதனை , அனைத்தும் உணர்ந்த இராமன் கண்டான் "

பாடல்


தொழுது உயர் கையினன்,
    துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன்,
    ‘அவலம் ஈது ‘என
எழுதிய படிவம் ஒத்து,
    எய்துவான் தனை,
முழுது உணர் சிந்தையான்
    முடிய நோக்கினான்.

பொருள்

தொழுது = வணங்கிய

உயர் கையினன் = தலைக்கு மேல் உயர்ந்த கைகளோடு

துவண்ட மேனியன் = சோர்ந்த உடலோடு

அழுது அழி கண்ணினன் = அழுததனால் அழகு அழிந்த கண்களோடு

‘அவலம் ஈது ‘என = துன்பம் என்றால் இது என்று

எழுதிய படிவம் ஒத்து = வரைந்த ஒரு ஓவியம் போல

எய்துவான் தனை = வந்தவன் தன்னை

முழுது உணர் சிந்தையான் = அனைத்தும் உணர்ந்த  அறிவைக் கொண்ட இராமன்

முடிய நோக்கினான் = தீர்க்கமாக பார்த்தான்.

துன்பத்தின் மொத்த உருவமாக பரதன் வந்து நின்றான்.

பரதனுக்கு அப்படி என்ன துன்பம் வந்து விட்டது ?

பெரிய அரசு கிடைத்து இருக்கிறது. சக்கரவர்த்தி ஆகிவிட்டான். இது ஒரு துன்பமா ? அதுக்கு போய் யாராவது அழுவார்களா ? வேண்டாம் என்றால் இராமனிடம்  திருப்பி கொடுத்து விட வேண்டியது தானே. அதற்குத்தான் வந்திருக்கிறான்.

பின் எதற்கு இந்த துன்பக் கோலம் ?

அறமல்லாத வழியில் வந்த செல்வத்தால் வந்த துன்பம். நமக்கு சொந்தமில்லாத ஒன்று நம்மிடம் வந்து விட்டால், அதை உரியவர்களிடம் சேர்ப்பிக்கும் வரை  துன்பப் பட வேண்டும்.  வந்து கேட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்று  இருக்கக் கூடாது. இருக்கின்ற வேலை எல்லாம் போட்டு விட்டு , இராமனைத் தேடி காடு வந்தான் பரதன். அரசை அவனிடம் ஒப்படைக்க. ஒழுக்கத்தின் உச்சம் தொட்டு நிற்கிறான் பரதன்.

இரண்டாவது, இப்படி ஒரு அரசை பரதன் ஏற்றுக் கொண்டானே என்று உலகம் பழிக்கும் என்ற வருத்தம். தவறான காரியத்தை செய்தால் உலகம் பழிக்கும். சான்றோர் பழிப்பர் என்று பழிக்கு அஞ்சிய துயரம் அது.

மூன்றாவது, தன்னால் , உடன் பிறந்த இராமனும், இலக்குவனும் அவர்களோடு சேர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் சீதையும் துன்பப் படுகிறார்களே என்று  நினைத்து வந்த துன்பம் பரதனுக்கு. நம்மால் மற்றவர்களுக்கு துன்பம் என்றால் அது எவ்வ்ளவு பெரிய துக்ககரமான செயல்.

நான்காவது, இராமன் மேல் கொண்ட பாசம். அரசு வேறு யாருக்கோ சொந்தம் என்றால் இவ்வளவு துக்கம் இருக்காது. அண்ணன் இராமன் மேல் தீரா காதல்  கொண்டவன் பரதன். அவனுக்கு சேர வேண்டிய அரசை அல்லவா தான் ஏற்கும் படி வந்து விட்டது என்று மனம் நெகிழ்ந்த சோகத்தில் வந்தது அந்த துக்கம்.

பிறர் பொருளுக்கு ஆசைப் படக் கூடாது. அது முறையான வழியில் வந்தால் கூட. நமக்கு அது உரிமையானது இல்லை என்றால் அதைத் தீண்டக் கூடாது.

அண்ணன் தம்பி பாசம் விட்டுக் கொடுத்து ஒருவர் சந்தோஷத்தில் மற்றவர் இன்பம் காண வேண்டும்.

அறத்தையும் அன்பையும் காட்டி நிற்கும் பாத்திரம் பரதன்.

பரதனிடம் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.





Tuesday, April 4, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - என் வயின் நேய நெஞ்சினால்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - என் வயின் நேய நெஞ்சினால்


கானகம் போன அண்ணன் இராமனைத் தேடி வருகிறான் பரதன். எப்படியாவது இராமனை சமாதானம் பண்ணி அவனிடம் அரசை ஒப்படைக்க வேண்டும் என்பது பரதனின் எண்ணம். பரதன் தூரத்தில் படையோடு வருவதைக் கண்ட இலக்குவன் ஏதோ பரதன் தங்கள் மேல் படை எடுத்து தான் வருகிறான் என்று தவறாக எண்ணி பரதன் மேல் மிகுந்த கோபத்துடன் போர் தொடுக்க தயாராகிறான்.

இலக்குவனை இராமன் சமாதானப் படுத்துகிறான்.

"இலக்குவா , பரதனை எப்படிப் பட்டவன் என்று நினைக்கிறாய் ? உலகில் எத்தனை வேதங்கள் உள்ளனவோ அவற்றில் சொல்லப் பட்ட மொத்த அறங்களின் தொகுப்பு பரதனின் செயல். நீ அதை நினைக்காமல் பரதன் மேல் கோபம் கொள்ளக் காரணம், பரதன் மேல் உள்ள வெறுப்பால் அல்ல, என் மேல் கொண்ட அளவு கடந்த காதலால்"

என்கிறான்.


பாடல்


எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன,
பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே;
அனைத் திறம் அல்லன அல்ல; அன்னது
நினைத்திலை, என் வயின் நேய நெஞ்சினால்.

பொருள்

‘எனைத்து = எத்தனை

உள = உள்ள

மறை = வேதங்கள், அற நூல்கள்

அவை = அவற்றை

இயம்பற்பாலன = சொல்லமுடியாது

பனைத் = பனை மரம் போல

திரள் = திரண்ட

கரக் = கரத்தை உடைய

கரிப் = யானை

பரதன் செய்கையே = பரதனது செய்கைகளே

அனைத் திறம் = அவனது அந்தத் திறம்

அல்லன அல்ல; = மற்றது அல்ல

அன்னது = அதை

நினைத்திலை, = நீ நினைக்கவில்லை

என் வயின்  = என்மீதுள்ள

நேய நெஞ்சினால் = நேசம் கொண்ட நெஞ்சினால்

மிக அழகான பாடல்.

பரதனைப் பற்றி இலக்குவன் தவறாக நினைத்து கோபம் கொள்கிறான். இலக்குவன் கோபத்தை  தணிக்க வேண்டும். பரதனது நல்ல உள்ளத்தையும் சொல்ல வேண்டும்.

இராமன் மிக அழகாக பேசுகிறான்.

முதலாவது, பரதனின் உயர்ந்த குணம் பற்றி கூறுகிறான். உலகில் உள்ள அனைத்து  வேதங்களும் ஒழுக்கம், அறம் என்று எதை கூறுகின்றனவோ , பரதனின் செய்கை அது தான்.  வேதம் எல்லாம் ஒண்ணும் படிக்க வேண்டாம். பரதன் என்ன செய்கிறானோ, அது தான் வேதம்.

இரண்டாவது, அப்படி என்றால் என்ன அர்த்தம். பரதன் அனைத்து வேதங்களையும் அவற்றின் சாரங்களையும் அறிந்து இருக்கிறான். அது மட்டும் அல்ல, அவை சொன்ன வழியில் நடக்கிறான்.

மூன்றாவது, அப்படிப்பட்ட பரதன் மேல் இலக்குவன் கோபம் கொண்டான்.  நேரடியாக சொல்ல வேண்டும் என்றால், இலக்குவனுக்கு அதை அறியும் அறிவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இராமன் அப்படி சொல்லவில்லை. "நீ பரதன் மேல் கோபம் கொண்டாய். அதற்கு காரணம் , பரதனை அறியாததால் அல்ல, என் மேல் கொண்ட அளவு கண்ட காதாலால்" என்று இலக்குவன் மனம் புண் படாமல் அதே சமயம் அவன் நினைப்பது தவறு என்று உணர்த்துகிறான்.

நான்காவது, மிக முக்கியமானது. நாம் யார் மீதாவது அளவு கடந்து அன்பு வைத்தால், அந்த அன்பு உண்மையை மறைக்கும். மற்றவர்கள் மேல் கோபத்தையும் வெறுப்பையும் கூட வளர்க்கும். காலம் காலமாய் மாமியார் மருமகள் சண்டை ஏன் வருகிறது. தாய்க்கு மகன் மேல் உள்ள அளவு கடந்த காதல். மனைவிக்கு கணவன் மேல் உள்ள அளவு கடந்த காதல். இருவருக்கும் ஒருவர் மேல் உள்ள அன்பால் மற்றவர் மேல் கோபமும் வெறுப்பும் வருகிறது. இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மாமியார் மேலும் தவறு இல்லை. மருமகள் மேலும் தவறு இல்லை. கண்மூடித்தனமான அன்பே இந்த சிக்கலுக்கு காரணம்.

அன்பாகவே இருந்தாலும், அளவு வேண்டும். கோபம் எவ்வளவு தீமை செய்கிறதோ அதே அளவு கண்மூடித்தனாமான அன்பும் தீமை செய்யும்.

ஐந்தாவது, நாட்டின் மேல் கொண்ட அதீத அன்பு, தான் சார்ந்த அரசியல் கோட்பாடுகளின் மேல் கொண்ட தீவிர பற்று, மதத்தின் மேல் கண்மூடித்தனமான பிடிப்பு இவை எல்லாம் மற்றவர்களின் மேல் கோபமும், வெறுப்பும் கொள்ளச் செய்கிறது.  அது சரி அல்ல. அன்பு உண்மையை மறைக்கக் கூடாது.  இராமன் மட்டும் தடுக்காவிட்டால், பெரிய யுத்தம் நிகழ்ந்து பெருத்த சேதம் விளைந்திருக்கும்.

கண்மூடித்தனமான அன்பினால் எவ்வளவு கொலைகள், சண்டைகள், நிகழ்கின்றன.  மதத்தின் மேல் கொண்ட வெறியால் பெற்ற பிள்ளைகளை கூட  கௌரவ கொலை என்ற பெயரில் கொலை செய்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆறாவதாக , இது போன்ற சமயங்களில் இராமன் போன்ற பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நலம்.  இலக்குவன் , இராமன் சொன்னதை கேட்டான்.  கோபம் வந்தாலும், இராமன் சொன்னபடி கேட்டு நடந்தான்.

இலக்கியங்கள், நம் அறிவின் எல்லைகளை விரிவாக்க வேண்டும். நம் செயல்களுக்கு பின்னால் உள்ள காரணங்களை நாம் அறிந்து கொள்ள அது உதவும்.

வல்லவர்கள்ளக மட்டும் அல்ல, நல்லவர்களாகவும் மாறுவோம்.

மாற வாழ்த்துக்கள்