Showing posts with label pillai thamizh. Show all posts
Showing posts with label pillai thamizh. Show all posts

Tuesday, September 27, 2016

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ 


பகழிக் கூத்தர் பாடியது. உள்ளத்தை உருக்கும் பாடல்கள். இசையோடு கேட்டால் இன்னும் இனிமையாக இருக்கும்.

பிள்ளைகளை , குழந்தைகளை கொண்டாடியது நம் தமிழ் சமுதாயம். பெரிய ஆள்களையும் பிள்ளைகளாக ஆக்கி , பாராட்டி, சீராட்டி, பாலூட்டி பார்த்து மகிழ்ந்தது நம் தமிழ் இலக்கியம்.

மீனாட்சி அம்மன் பிள்ளைத்  தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், என்று பலப் பல பிள்ளைத் தமிழ் பாடல்கள் உண்டு.

கண்ணனை பிள்ளையாகவும் தன்னை யசோதையாகவும் நினைத்து பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ் பாடி இருக்கிறார். அத்தனையும் தேன் சொட்டும் பாசுரங்கள்.

பகழிக் கூத்தர் திருச்செந்தூர்  முருகன் மேல் பாடிய பிள்ளைத் தமிழில் இருந்து ஒரு பாடல்.

பாடல்

பாம்பால் உததி தனைக்கடைந்து
        படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
    பரிய வரையைக் குடைகவித்துப்
        பசுக்கள் வெருவிப் பதறாமற் 

காம்பால் இசையின் தொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையில் நிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும் 

பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக்கவரி முலைநெரித்துப்
பொழியும் அமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் பேட்டெகினந் 

தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம் புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ. 

 பொருள்

பாம்பால் = வாசுகி என்ற பாம்பால்

உததி = கடல் (பாற்கடல்)

தனைக்கடைந்து = தனை கடைந்து

படருங் = விரியும்

கொடுங்கார் = கொடுமையான கார் கால

 சொரிமழைக்குப் = பொழியும் மழைக்கு

பரிய வரையைக்  = பெரிய மலையை

குடைகவித்துப் = குடையாகப் பிடித்து

பசுக்கள் = பசுக் கூட்டங்கள்

வெருவிப் = பயந்து

பதறாமற் = பதறி ஓடாமல்

காம்பால் = மூங்கில் காம்பால்

இசையின் தொனியழைத்துக் = நல்ல தொனியோடு இசைத்து

கதறுந் தமரக் காளிந்திக் = கதறுகின்ற காளிங்கம் என்ற பாம்பின் மேல் ஆடிய

கரையில் = யமுனைக் கரையில்

நிரைப்பின் னே = பசுக்கள் பின்னே

நடந்த = நடந்த

கண்ணன் = கண்ணனின்

மருகா = மருமகனே

முகையுடைக்கும் = மொட்டு மலரும் (முகை = மொட்டு)  

 பூம் பாசடை = பூக்கள் நிறைந்த , பசுமையான இலைகள் கொண்ட குளத்தில்

பங்கயத்தடத்திற் =   தாமரை பூத்த குளத்தில்

புனிற்றுக்கவரி = இளைய எருமை

முலைநெரித்துப் = தன்னுடைய முலையில் இருந்து

பொழியும் = பொழியும்

அமுதந் தனைக் = பாலினை

கண்டு =கண்டு

புனலைப் பிரித்துப் = நீரைப் பிரித்து

பேட்டெகினந் = பெண் அன்னம்

தீம்பால் = சுவையான பாலை

பருகுந் = பருகும், குடிக்கும்

திருச்செந்தூர்ச் = திருச்செந்தூரில் உள்ள

செல்வா = செல்வா

தாலோ தாலேலோ = தாலோ தாலேலோ

தெய்வக் களிற்றை = தெய்வ யானையை

மணம் புணர்ந்த = மணந்து கொண்ட

சிறுவா = சிறுவனே

தாலோ தாலேலோ.  = தாலோ தாலேலோ


மழையில் இருந்து மாடுகளை காப்பாற்றினான், அவை வழி தப்பித் போகாமல் இருக்க  அவற்றின் பின்னே போனான். பசித்திருக்கும் அன்னப் பறவைகளுக்கு  , எருமையின் மூலம் பாலூட்டச் செய்தான்....விலங்குகளுக்கே அவ்வளவு உதவி செய்து அவற்றை காப்பான் என்றால்  உங்களை என்ன விட்டு விடவா போகிறான். 

நம்புங்கள். 

நம்புகிறீர்களா இல்லையோ, இன்னொரு தரம் பாட்டைப் படித்துப் பாருங்கள். கொஞ்சும் தமிழ்.