Showing posts with label நான் மணி கடிகை. Show all posts
Showing posts with label நான் மணி கடிகை. Show all posts

Monday, April 13, 2015

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது 


நிறைய செல்வம் இருந்தால் நமக்கு என்ன என்ன இன்பம் எல்லாம் கிடைக்கும் ?

புகழ், மதிப்பு, இன்பம், துன்பம் இல்லா வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, பெரிவர்களின் தொடர்பு ...இது போன்றவை கிடைக்கும் அல்லவா ?

அது போல, நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்தால் இவை எல்லாம் கிடைக்கும். நல்ல ஒழுக்கம் வாழ்வில் முன்னேற்றம் தரும், நல்லவர்களின் தொடர்பைத் தரும், வாழ்கை சுகமாக இருக்கும், யாரைப் பற்றியும் பயம் இருக்காது, அது நம்மை முன்னேற்றி செல்வமும் தரும். எனவே, நல்ல ஒழுக்கம் செல்வத்தைப் போன்றது. செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை என்று சிலர் ஒழுக்கம் அற்ற வழியில் அதை தேட முயல்கிறார்கள். அது தவறான வழி. ஒழுக்கமான வாழ்வே செல்வம் நிறைந்த வாழ்வை போன்ற திருப்தியும் நிம்மதியும் தரும்.

துறவறம் இனிமையானது. எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. இதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு கானகம் போக வேண்டிய அவசியம் இல்லை. இல்லறத்தில் இருந்து, எதையும் அளவோடு அனுபவித்து வாழ்வது துறவம் போன்றது. எதிலும் நிதானம். எதிலும் ஒரு அளவு. கிடைக்கும் போது அளவோடு அனுபவிப்பது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருந்துவது இல்லை. இது துறவறம் போன்றது ஆகும்.

ஒருவரிடம் நடப்பாக இருக்கும் போது அவர் தன்னைப் பற்றியும், தனக்கு நிகழும் நல்லது கெட்டது பற்றியும் நம்மிடம் சொல்லி இருப்பார். பின், அந்த நட்பு முறிந்து விலக நேரிட்டால், அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்வது அவரை கொலை செய்வது போன்றது ஆகும்.

நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றி சொல்வது, இழிவான செயலாகும்.

பாடல்

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.

பொருள்


திருவொக்குந் = திரு ஒக்கும். செல்வத்தை போன்றது.

தீதில் ஒழுக்கம் = தீது இல்லாத ஒழுக்கம்

பெரிய அறனொக்கும் = பெரிய அறத்தைப் போன்றது. அது என்ன பெரிய அறம் ? துறவறம் உள்ள அறங்களில் பெரிய அறம்

ஆற்றின் ஒழுகல் = முறையோடு வாழ்தல்.  முறையோடு வாழ்தல் என்பது இல்லறத்தில் இருந்து முறைப் படி வாழ்தல்.

பிறனைக் கொலையொக்குங் = பிறனை + கொலை + ஒக்கும் = பிறனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்

கொண்டு = முதலில் நட்பு கொண்டு

கண் மாறல்= பின் அது மாறி, நடப்புக்கு எதிரான செயல்களை செய்வது

புலையொக்கும் = இழிவானதாகும்

போற்றாதார் முன்னர்ச் செலவு = நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றிச்  சொல்வது


அது எப்படி ஒழுக்கமாக இருப்பது செல்வத்திற்கு ஒப்பாகும் ? இன்னும் சொல்லப் போனால் ஒழுக்கமாக வாழ்பவன் செல்வம் இல்லாமல் துன்பப் படுவதைப் பார்க்கிறோம். ஒழுக்கம் இல்லாதவன் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்த்து  சந்தோஷமாக இருப்பது கண்ணெதிரில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நம்பும் படி இல்லை. கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராது ...என்று நாம் நினைக்கலாம்.

இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.





Saturday, April 11, 2015

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே 


நான் மணிகடிகை  நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துகளை உள்ளடக்கி    இருக்கிறது.

சிறியவர்களை ஏளனம் செய்யக் கூடாது.

எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் கெட்டவர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.

நம்மை விட தாழ்ந்தவர்கள் நம்மைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அவர்கள் மேல் சீறி விழக் கூடாது

எப்போதும் நல்லன அல்லாதவற்றைக் கூறக் கூடாது.


பாடல்

எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

சீர் பிரித்த பின்

எள்ளற்க என்றும் எளியார் என் பெறினும் 
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

பொருள்

எள்ளற்க = குறை சொல்லாதே

என்றும் எளியார் = எப்போதும் எளியவரை

என் பெறினும் = என்ன ஆனாலும்

கொள்ளற்க = பெற்றுக் கொள்ளாதே

கொள்ளார்கைம் மேலவா = பெறக் கூடாதவர்களிடம் இருந்து

உள்சுடினும் = உள்ளம் சுடினும்

சீறற்க = கோபம் கொள்ளாதே

சிற்றில் பிறந்தாரை = கீழ் குடியில் பிறந்தவர்களை

கூறற்க = சொல்லதே

கூறல் லவற்றை விரைந்து.= சொல்லக் கூடாதவற்றை

சரி.

இது என்ன பெரிய விஷயமா. மத்தவங்களை கேலி பேசாதே, கெட்டவங்ககிட்ட எதையும் வாங்காதே,  கீழ் குடியில் பிறந்தவர்கள் தவறாக பேசினாலும் சீறி விழாதே, சொல்லக் கூடாததை சொல்லாதே என்பதெல்லாம் ஒரு  அறிவுரையா. இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைக்கலாம்.

கேட்க என்னவோ எளிதாகத்தான் இருக்கிறது.

நடை முறை சிக்கல் எவ்வளவு இருக்கிறது தெரியுமா.

சக்கரவர்த்தியின் மகன். அதுவும் மூத்த மகன். சின்ன பிள்ளையாக இருந்த போது , அரண்மனையில் வேலை பார்த்த ஒரு கூன் விழுந்த கிழவியின் முதுகில் மண் உருண்டை வைத்த அம்பால் அடித்து விளையாடினான்.

அவள் என்ன செய்தாள் ?

பதினாலு வருடம் இராமனையும், அவன் மனைவியியையும், தம்பியையும் காட்டுக்கு  விரட்டினாள். அங்கே சீதை சிறை பிடிக்கப் பட்டு இராவணனிடம் சிறை இருந்தாள். இத்தனையும்  எதனால் ? எளியவள் என்று கூனியை ஏளனம் செய்து அவள் முதுகில் அம்பு அடித்ததால்.

கானகம் போனது இராமனுக்கு வருத்தமா என்றால், ரொம்ப வருந்தினான்.

வருந்தியது மட்டும் அல்ல, சிறியவர்களை இகழாதே. அப்படி இகழ்ந்ததால் நாடிழந்து, காட்டுக்கு வந்து படாத பாடு படுகிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்லி  வருந்தினான் இராமன்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு
    செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
    இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
    கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
    வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

சிறியர் என்று இகழ்ந்து மற்றவர்களை நோகச் செய்யாதே. இதை மறந்து நாம் ஒரு  தீமை செய்ததால் கூனியின் செயலால் வெந்துயர் கடலில் விழுந்தேன் என்று  நொந்து  கூறுகிறான்.

கேட்க என்னவோ எளிய அறம் தான். எல்லாம் தெரிந்த இராமன் அதை கடை பிடிக்கவில்லை. கஷ்டப் பட்டான். கஷ்டம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இதெலாம் எனக்குத் தெரியாதா என்று அப்படி எளிதாக  தள்ளி விடாதீர்கள்.

சரி, அது மட்டும் அல்ல, 

வள்ளுவர் கூறுகிறார்.....

பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்று. 

அளவுக்கு அதிகமாக சேர்த்தால் மயில் இறகு கூட ஒரு வண்டியின் அச்சை முறித்து  விடும்.

இது எங்களுக்குத் தெரியாதா என்று நினைக்கக் கூடாது.

வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எளியவர்கள்தானே என்று ஏளனம் செய்து  சின்ன சின்ன பகைகளை தேடிக் கொண்டால், ஒரு நாள் அவை எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து உன்னை அழித்து விடும் என்கிறார். 

உலகம் யாரை  எப்போது எங்கே கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. 

யாரையும் ஏளனம் செய்யாமல் இருப்பது நலம். 

இராமனுக்கே அந்த கதி என்றால் , நாம் எம்மாத்திரம் ?





Thursday, June 14, 2012

நான் மணி கடிகை - தூக்கம் இல்லாதவர்கள்


நான் மணி கடிகை - தூக்கம் இல்லாதவர்கள்


நான் மணி கடிகை என்பது பதினெண் கீழ் கணக்கு நூல்களுள் ஒன்று.

கடிகை என்றால் உயர்ந்த ரத்தினம் என்று பொருள். நான் மணி கடிகையில் ஒவ்வொரு பாடலும் நாலு உயர்ந்த கருத்துகளை கொண்டுள்ளது.

யார் யாருக்கு தூக்கம் வராது என்று ஒரு பாடல்...

திருட நினைப்பவர்களுக்கு, காதல் வயப் பட்டவர்களுக்கு, சொத்து சேக்கணும் என்று நினைப்பவர்களுக்கு, சேர்த்த சொத்தை காபந்து பண்ண நினைப்பவர்களுக்கு தூக்கம் வராது.