Showing posts with label Kamba Ramaayanam. Show all posts
Showing posts with label Kamba Ramaayanam. Show all posts

Wednesday, February 28, 2024

கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?

 கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_28.html



இயற்கையாகவே பெண்கள் அழகானவர்கள். அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள். உடை, ஒப்பனை என்று அனைத்து விதத்திலும் தாங்கள் அழகானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அழகுணர்ச்சி அவர்களிடம் இயற்கையிலேயே அமைந்து கிடக்கிறது. 


தங்கள் அழகு மட்டும் அல்ல, அவர்கள் இருக்கும் இடம், வீடு, சமையல் அறை எல்லாமே ஒரு அழகோடு, நேர்த்தியோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 


ஒரு பெண்ணால் சகிக்க முடியாத ஒன்று அவளின் அழகை இழப்பதுதான். ஆரோக்கியம் குறைந்தால் கூட கொஞ்சம் குறைவாகத்தான் கவலைப்படுவார்கள். அழகு குறைவது பெரிய குறை.

 

சாதாரண நாட்களை விட வீட்டில் ஒரு விசேடம் என்றால் கேட்கவே வேண்டாம். புதுத் துணி, அழகு நிலையத்துக்குப்  போய் தங்களை மேலும் அழகு படுத்திக் கொள்வது, நகைகளை மெருகேற்றிக் கொள்வது, என்று அதிகப்படியான சிரமம் எடுத்துக் கொள்வார்கள். 



நம் வீட்டு பெண்மணிகள் நிலை இது என்றால், சூர்பனகை நிலை எப்படி இருக்கும். 


இராவணனின் அவை எப்படி இருக்கும்?


தேவாதி தேவர்கள் எல்லாம் வந்து அவன் முன் கை கட்டி நிற்பார்கள். தேவ லோகப் பெண்கள் பல்லாண்டு பாடுவார்கள். ஏழேழு உலகமும் அவனை துதித்து நிற்கும். அப்பேற்பட்ட சபையில் அவள் சென்றால் அவளுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும். 


ஆனால், இன்று அவள் மூக்கும், காதும், முலையும் அறுபட்டு இருக்கிறாள். இப்படிப்பட்ட நிலையில் அந்த சபைக்கு அவள் போனால் எப்படி இருக்கும்? அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்க மாட்டார்களா? அவளால் அங்கு போக முடியுமா? 


பாடல் 



'இந்திரனும், மலர் அயனும்,

     இமையவரும், பணி கேட்ப,

சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு

     ஏழும் தொழுது ஏத்த,

சந்திரன்போல் தனிக் குடைக்கீழ்

     நீ இருக்கும் சவை நடுவே

வந்து, அடியேன் நாணாது,

     முகம் காட்ட வல்லேனோ?


பொருள் 


'இந்திரனும் = தேவர்களின் தலைவனான இந்திரனும் 


மலர் அயனும் = தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் 


இமையவரும் = கண் இமைக்காத மற்ற தேவர்களும் 


பணி கேட்ப = இராவணன் இட்ட கட்டளையை கேட்டு நடக்க 


சுந்தரி = தேவ லோகப் பெண்கள் 


பல்லாண்டு இசைப்ப= பல்லாண்டு பாடல் பாட 


உலகு ஏழும் = ஏழு உலகும் 


தொழுது ஏத்த = பணிந்து தொழ 


சந்திரன்போல் = நிலவைப் போன்ற வெண்மையான 


தனிக் குடைக்கீழ் = தனிச் சிறப்பு வாய்ந்த குடையின் கீழ் 



நீ = இராவணனாகிய நீ 


இருக்கும் சவை நடுவே = வீற்றிற்கும் சபையின் நடுவே 


வந்து = வந்து 


அடியேன் = சூற்பனகையான நான் 


நாணாது = நாணம் இல்லாமல் 


முகம் காட்ட வல்லேனோ? = முகத்தையாவது காட்ட முடியுமா? (முடியாது) 


அவளால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. உறுப்பு அறுந்த வலி கூட பெரிதாகத் தெரியவில்லை. தன் அழகு போய் விட்டதே. வெளியே தலை காட்ட முடியாமல் போய் விட்டதே என்று வருந்துகிறாள். 


ஒரு பெண்ணின் அவல நிலையை கம்பன் அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான். 


Friday, February 23, 2024

கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?

கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?


இலக்குவனால் உறுப்புகள் சேதிக்கப்பட்ட சூர்பனகை, தன் தமையான கரனை நினைத்து புலம்புகிறாள். 


"இந்த மானிடர்கள் என்னை இந்த மாதிரி தண்டித்து விட்டார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?  இந்தக் காட்டில் மறைந்து, தவம் செய்யும் முனிவர்களின் தவ வலிமையா? அரக்கர்களின் வலிமை குறைந்து போனதோ? எதிரில் நிற்கும் இவர்கள் பிரமனா, திருமாலா, சிவனா ? அவர்களுக்கு இணையான வலிமை படைத்த கரனே, என் நிலைமை காணாயோ?"


பாடல் 


 'மரன் ஏயும் நெடுங் கானில்

     மறைந்து உறையும் தாபதர்கள்

உரனேயோ? அடல் அரக்கர் ஓய்வேயோ?

     உற்று எதிர்ந்தார்,

"அரனேயோ? அரியேயோ? அயனேயோ?"

     எனும் ஆற்றல்

கரனேயோ! யான் பட்ட

     கையறவு காணாயோ?


பொருள் 


 'மரன் ஏயும் = மரங்கள் அடர்ந்த 


 நெடுங் கானில் = இந்தப் பெரிய கானகத்தில் 


 மறைந்து = மறைந்து 


உறையும் = வாழும் 


தாபதர்கள் = தவம் செய்யும் முனிவர்களின் 


உரனேயோ? = தவ வலிமையா? 


அடல் = சண்டை செய்யும் 


 அரக்கர் = அரக்கர்களின் 


 ஓய்வேயோ? = வலிமை குன்றியதோ ?


உற்று எதிர்ந்தார் = எதிர்த்து நிற்பவர்  


"அரனேயோ? = சிவனோ ?


அரியேயோ?  = திருமாலோ?


அயனேயோ?" = பிரமனோ?


எனும் ஆற்றல் = என்று சொல்லும்படி ஆற்றல் கொண்ட 


கரனேயோ! = கரனே 


யான் பட்ட = நான் பட்ட 


 கையறவு காணாயோ? = துன்பத்தைக் காண மாட்டாயா?




Sunday, February 4, 2024

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_4.html

இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, தன் அண்ணன் இராவணனை நினைத்துப் புலம்புகிறாள். 


புலம்பலில் கூட இவ்வளவு கவி நயமா என்று வியக்க வைக்கும் கவிதைகள். 


இன்று வரும் திரைப் படங்களில் கதா நாயகனை முதன் முதலில் காட்டும் போது, அவர் காலைக் காட்டுவார்கள், அவர் நடந்து வரும் போது அவர் போட்டிருக்கும் காலணியில் இருந்து தீப் பொறி பறக்கும். 


நாம் ஆகா என்று வியப்போம். 


இதெல்லாம் கம்பன் அன்றே காட்டிவிட்டான். 


இராவணன் நடந்து வந்தால், அவன் கால் உரசி தரையில் இருந்து தீப் பொறி பறக்குமாம். 


இராவணன் இன்னும் காப்பியத்துகுள் வரவில்லை. அதற்கு முன்பே கம்பன் கட்டியம் கூறுகிறான். 


பொடி என்ற ஒரு வாரத்தையை எடுத்துக் கொள்கிறான். 


"உருவம் பொடியான (சாம்பலான) மன்மதனை ஒத்து இருக்கும் இந்த மானிடர்களை நீ கோபித்து சீற்றம் கொள்ள மாட்டாயா?  நீ யார்? எவ்வளவு பெரிய ஆள்! இந்த மானிடர்கள் உன் செருப்பில் இருந்து பறக்கும் ஒரு மண் தூசிக்கு சமம் ஆவார்களா?  நீ நடந்து வந்தால் உன் காலடியில் நெருப்பு சிதறுமே. மதம் கொண்ட அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அவற்றின் தந்தங்களை முறித்தவன் அல்லவா நீ. அது மட்டுமா? சிவன் உறையும் அந்த கைலாய மலையையே தூக்க முயன்றவன் அல்லவா நீ. அப்பேற்பட்ட நீ, இந்த மானிடர்களை ஒரு கை பார்க்க மாட்டாயா?" 


என்று சூர்பனகை புலம்புகிறாள். 


பாடல்  



'உருப் பொடியா மன்மதனை

     ஒத்துளரே ஆயினும், உன்

செருப்பு அடியின் பொடி ஒவ்வா

     மானிடரைச் சீறுதியோ?

நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த

     மதத் திசை யானை

மருப்பு ஒடிய, பொருப்பு இடிய,

     தோள் நிமிர்த்த வலியோனே!


பொருள் 


'உருப் = உருவம் 

பொடியா = பொடியான (சாம்பலான) 

மன்மதனை = மன்மதனை 

ஒத்துளரே ஆயினும் = போல இருந்தாலும் 

உன் = உனது (இராவணனது) 

செருப்பு அடியின் = செருப்பின் கீழ் உள்ள 


பொடி = தூசிக்கு 

ஒவ்வா = இணையாக மாட்டாத


 மானிடரைச் = மனிதர்களைச் (இராம இலக்குவனர்களை) 


 சீறுதியோ? = அவர்கள் மேல் சீற்றம் கொள்ள மாட்டாயா ?


நெருப்பு அடியில் பொடி சிதற = உன் காலடியில் நெருப்பு பொறி பறக்க 


நிறைந்த மதத் = பெரிய மதம் பிடித்த


திசை யானை = அட்ட திக்கு யானைகளின் 


மருப்பு ஒடிய = தந்தம் ஓடிய 


பொருப்பு இடிய = மலை இடிபட 


தோள் நிமிர்த்த = தோள்களை நிமிர்த்து நின்ற 


வலியோனே! = வலிமையாணவனே 



உருப் பொடி

செருப்பு அடியின் பொடி

நெருப்பு அடியில் பொடி

மருப்பு ஒடிய, 

பொருப்பு இடிய,


கம்பனிடம் சொற்கள் கை கட்டி நின்று சேவகம் செய்கின்றன. 


பெரியவர்களின் தரம் தெரியாமல் இருப்பது அரக்கர்களின் குணம். 


முருகனை பாலன் என்று எண்ணி அழிந்தான் சூரன். 


கண்ணனை இடையன் என்று எண்ணி அழிந்தான் கம்சன். 


இராமனை மானிடன் என்று எண்ணி அழிந்தான் இராவணன். 


தரம் தெரியாததால் வந்த அழிவு. 



Friday, January 26, 2024

கம்ப இராமாயணம் - சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது

கம்ப இராமாயணம் -  சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் துண்டிக்கப்பட்ட சூர்பனகை தன் அண்ணனான இராவணனை நினைத்து அழுகிறாள் ....


"இராவணா, நீ வாயு பகவானையும், அக்னி பகவானையும், கொடுமையான எமனையும், ஆகாயத்தையும், நவ கிரகங்களையும், ஆட்டிப் படைத்தாய். ஆனால், இன்று இந்த இரண்டு மானிடர்களுக்கு பயந்து சிவன் கொடுத்த வாளினையும் மறந்து பயந்து நின்று விட்டாயா?"


பாடல் 


 'காற்றினையும், புனலினையும், கனலினையும்,

     கடுங் காலக்

கூற்றினையும், விண்ணினையும், கோளினையும்,

     பணி கொண்டற்கு

ஆற்றினை நீ; ஈண்டு, இருவர்

     மானுடவர்க்கு ஆற்றாது

மாற்றினையோ, உன் வலத்தை? சிவன்

     தடக்கை வாள் கொண்டாய்!


பொருள் 


காற்றினையும் = காற்றின் கடவுளையும் (வாயு பகவான்)  

புனலினையும் = நீரின் கடவுளையும் (வருண பகவானையும்) 

கனலினையும் = தீயின் கடவுளையும் )அக்னி பகவானையும்) 

கடுங் காலக் கூற்றினையும் = கடுமையான கூற்றுவனையும் 


விண்ணினையும் = விண்ணுலகையும் 


கோளினையும் = ஒன்பது கிரகங்களையும் 


பணி கொண்டற்கு = உனக்கு வேலை செய்யும் படி 


ஆற்றினை நீ = வழி செய்தாய் நீ 


ஈண்டு = இன்று 


இருவர் = இரண்டு 


மானுடவர்க்கு  = மனிதர்களுக்கு 


ஆற்றாது = அடக்க முடியாமல் 


மாற்றினையோ = மாற்றி வைத்து விட்டாயா? 


உன் வலத்தை?  = உன் பலத்தை 


சிவன் = சிவனின் 


தடக்கை வாள் கொண்டாய்! - பெருமை கொண்ட வாளினைக் கொண்டாய் 


அவ்வளவு வலிமை இருந்தது உன்னிடம். சிவன் மேல் பக்தி கொண்டவன். சிவனிடம் தவம் செய்து வாளினைப் பெற்றவன். அப்பேற்பட்ட நீ இந்த மானிடற்கு பயந்து விட்டாயா?



Tuesday, January 2, 2024

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post.html


தான் பட்ட அவமானத்தால் வருந்தி தன் அண்ணனான இராவணனை அழைத்துப் புலம்புகிறாள் சூர்பனகை. 


இராவணா, நீ எதையெல்லாம் பார்த்து இருக்கிறாய்....


முன்பு ஒரு நாள் ஐராவதம் என்ற யானையின் மேல் ஏறி உன்னோடு போர் புரிய வந்தான் இந்திரன். அவனை போர்க் கோலத்தில் கண்டாய். பின் அவன் உன்னோடு போர் புரிந்து, உயிருக்குப் பயந்து தப்பி ஓடினான். அப்போது அவனுடைய முதுகைக் கண்டாய். அவன புற முதுகு காண ஓடச் செய்தாய். அப்பேற்பட்ட வலிமை உள்ளவன் நீ. உன் தங்கை இந்த நிலையில் இருந்து கவலைப் படுகிறேன். இதைக் காண வரமாட்டாயா என்று ஓலமிடுகிறாள். 


பாடல்  


'ஆர்த்து, ஆணைக்கு-அரசு உந்தி, அமரர்

     கணத்தொடும் அடர்ந்த

போர்த் தானை இந்திரனைப் பொருது,

     அவனைப் போர் தொலைத்து,

வேர்த்தானை, உயிர் கொண்டு

     மீண்டானை, வெரிந் பண்டு

பார்த்தானே! யான் பட்ட

     பழி வந்து பாராயோ?


பொருள் 


'ஆர்த்து = ஆரவராமாக சப்தம் எழுப்பிக் கொண்டு வந்த 


ஆனைக்கு-அரசு = யானைகளுக்கு அரசனான ஐராவதம் 


உந்தி = அதன் மேல் ஏறி 


அமரர் = தேவ(ர்) 


கணத்தொடும் = படைகளோடு 


அடர்ந்த = போருக்கு வந்த 


போர்த் தானை = போர் தலைவனை 


இந்திரனைப் = இந்திரனை 


பொருது = சண்டையிட்டு 


அவனைப் = அந்த இந்திரனை 


போர் தொலைத்து = போரில் தோற்கடித்து 


வேர்த்தானை = உயிருக்கு பயந்து ஓடி உடல் எல்லாம் வேர்த்தானை  


உயிர் கொண்டு = உயிரை விடாமல் 


மீண்டானை = தாபியவனை 


வெரிந் = புற முதுகு 


பண்டு = பழைய நாளில், முன்பொரு நாள் 


பார்த்தானே!  = பார்த்த இராவணனே 


யான் பட்ட = நான் அடைந்த 


பழி வந்து பாராயோ? = பழியை பார்க்க வர மாட்டாயா ?


ஆனை என்ற சொல்லை எவ்வளவு அழகாக கையாள்கிறான் கம்பன். 


ஆனைக்கு அரசு - ஐராவதம் 

போர்த் தானை = போர்த் தலைவனை 

வேர்த்தானை = வேர்க்க விறுவிறுக்க ஓடியவனை 

மீண்டானை = உயிரை கையில் பற்றிக் கொண்டு மீண்டவனை 

பார்த்தானை = பார்த்தவனே 


கம்பனில் இரசிக்க ஆயிரம் இருக்கு. 


சூர்பனகையின் இந்த அவலம், பின்னாளில் எப்படி எல்லாம் வெடிக்கப் போகிறது என்று பார்க்க இருக்கிறோம். 


அசுர குலத்தை அடியோடு வேர் அறுத்தது அவள் பட்ட அவமானம். 


யாருடைய தன்மானத்தையும் சீண்டிப் பார்க்கக் கூடாது. 


கூனியின் தன் மானத்தை சீண்டியதால் கானகம் வர நேர்ந்தது. 


சூர்பனகையின் தன்மானத்தை சீண்டியதால் சீதையை இழந்து எவ்வளவு சோகம்!


இராவணன் சீதையை கவர்ந்தது தவறு. அந்த தவற்றின் வேர் எங்கே இருந்தது?


சிந்திப்போம். 











Friday, December 29, 2023

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ 



உடல் உறுப்புகள் அறுபட்ட சூர்பனகை புலம்புகிறாள். தன் உறவினர்கள் ஒவ்வொருவராக அழைக்கிறாள். 


கோழிக் குஞ்சை பருந்து தூக்க வந்தால், தாய்க் கோழி தன் சிறகால் மூடி குஞ்சுகளை பாதுக்காக்கும். குட்டி போட்ட நாய், தன் குட்டியின் பக்கத்தில் யாராவது அன்பாக வந்தால் கூட எங்கே குட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அப்படி நெருங்கி வருபவர்கள் மேல் பாய்ந்து, குரைத்து, விரட்டி விடும். 


அப்படி சாதாரண விலங்குகளே தன் குட்டியை பாதுக்காக்கும் போது, புலிக் குட்டிக்கு ஏதாவது ஆபத்து வர தாய்ப் புலி விடுமா?  அப்படி, இராவணா, நீ இருக்கும் போது, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று சூர்பனகை புலம்புகிறாள். 


ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்தாலும், தாங்கள் அழியாத மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அஞ்சாத வலிமை கொண்ட இராவணனே, என் வலியைப் பார்க்க வரமாட்டாயா என்று அழுகிறாள். 


பாடல் 


"தாய்ப் புலி அருகில் இருக்கும் போது  "புலிதானே புறத்து ஆக, குட்டி

 கோட்படாது" என்ன, ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை      பொய்யோ? ஊழியினும்

சலி யாத மூவர்க்கும்,      தானவர்க்கும், வானவர்க்கும்,

வலியானே! யான் பட்ட வலி      காண வாராயோ?


பொருள் 


"புலிதானே புறத்து ஆக = தாய்ப் புலி அருகில் இருக்கும் போது 


குட்டி கோட்படாது = புலிக் குட்டியை யாரும் பிடிக்க முடியாது 


என்ன = என்ற 


ஒலி  = ஆர்பரித்து சப்தம் உண்டாக்கும்  


ஆழி = கடல் சூழ்ந்த 


உலகு = உலகம் 


உரைக்கும் உரை = சொல்லும் உண்மை 


பொய்யோ? = பொய்யா? 


ஊழியினும் = ஊழிக் காலத்திலும் 


சலி யாத மூவர்க்கும் = அழியாத மும்மூர்த்திகளுக்கும் 

,

தானவர்க்கும் = அசுரர்களுக்கும் 


வானவர்க்கும் = தேவர்களுக்கும் 


வலியானே!  = மிக்க வலிமை உடையவனே 


யான் பட்ட வலி = நான் கொண்ட வலியை 


காண வாராயோ? = காண வரமாட்டாயா ?


நமக்கு உடல் நிலை அல்லது மன நிலை சரி இல்லை என்றால் யாராவது நம்மை வந்து பார்த்து, பேசி, ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் கவலை கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா?




Thursday, December 28, 2023

கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல்

 கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_28.html


சூர்பனகை படலத்தில் சில பாடல்களை முன்பு சிந்தித்தோம். சூர்பனகையிடம் இராமனும் சரி, இலக்குவனும் சரி நடந்து கொண்ட முறை பற்றி ஆராய்ந்தோம். அது சரியா, தவறா என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோம்.


ஒரு பெண்ணிடம் அழகாகப் பேசி, அவள் ஆசையை தூண்டிவிட்டு, பின் அவளை ஏசி விரட்டி விட்டதுவரை இராமன் செய்தது. ஆசை கொண்டு வந்த பெண்ணின் மூக்கையும், காதையும், முலையையும் அறுத்து தண்டனை தந்தது இலக்குவன் செயல். 


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, வலி ஒருபுறம், அவமானம் ஒரு புறம் தாங்காமல் அழுகிறாள். 


அந்தப் புலம்பலிலுமா தமிழை இவ்வளவு அழகாகச் சொல்லுவான் இந்தக் கம்பன். சூர்பனைகையின் சோகத்தில் பங்கெடுத்து அவளுக்காக இரக்கப்படுவதா அல்லது கம்பனின் தமிழில் தோய்ந்து அடடா என்ன ஒரு கவிதை என்று வியந்து மகிழ்வதா? என்று தெரியாமல் நாம் திக்கு முக்காடும் இடம். 


அழுவாதா,  மகிழ்வதா என்று தவிக்கும் இடம். 


முதலில் தன் அண்ணன் இராவணனை கூப்பிட்டு அழுகிறாள். 


"இராவணா, நீ எவ்வளவு பெரிய ஆள் !  சிவன் இருக்கும் அந்த கைலாய மலையையே தூக்கும் மலை போன்ற தோள்களை உடையவன் நீ. உன் முன்னால் தேவர்களும் நிமர்ந்து நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நீ இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லைத் தூக்கிக் கொண்டு அலைவது சரியா"


என்று அண்ணனை நினைத்து புலம்புகிறாள். 


பாடல் 


நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்

சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்

தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்

மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ


பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.


மலை எடுத்த மலையே என்று இராவணனின் ஆற்றலைக்  கூறுகிறாள். 


ஒரு பக்கம் இராவணனின் தங்கை என்ற பெருமிதம், ஆணவம். 


இன்னொரு பக்கம் காமம்.


மறுபுறம் அந்த காமம் மறுக்கப்பட்ட அவலம்.


இன்னொரு புறம் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சோகம், வலி. 


ஒரு பெண்ணால் எத்தனை உணர்சிகளை கையாள முடியும். 


காதல் நிராகரிக்கப்பட்டால் பரவாயில்லை. காதலிக்க நினைத்தவனே அவமானபடுத்தி, தண்டித்தால், அந்தத் துன்பத்தை யாரால் தாங்க முடியும்?



Friday, November 17, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான்

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான் 


இராவணனின் மந்திர ஆலோசனை சபை கூட்டம் தொடங்கப் போகிறது. சபை கூடுமுன் என்னவெல்லாம் செய்தான் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 


அமைச்சர்கள், நீண்ட காலம் அரச சேவையில் இருப்பவர்கள் என்ற சிலரை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேறச் சொன்னான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். 


மேலும், 


அரசவையில் பல திறமைசாலிகள் இருப்பார்கள், போரில் வல்லவர்கள் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் எல்லோரையும் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க முடியாது. ஆட்கள் அதிகம் ஆக ஆக குழப்பம்தான் மிஞ்சும். மேலும், எது சரி எது தவறு என்று நினைப்பவர்கள் ஒரு புறம். தனக்கு எது நல்லது என்று சிந்திப்பவர்கள் ஒரு புறம். தனக்கு நன்மை தருவதை பற்றி சிந்திப்பவர்கள் தனக்கு நெருங்கிய சுற்றத்தார் மற்றும் உறவினர்கள். எனவே,அவர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேற்றினான். 




பாடல்  


ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு

ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும்

வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்

போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்.



பொருள் 



(pl click the above link to continue reading)

ஆன்று = ஆழமாக 


அமை = அமைந்த 


கேள்வியர் = கேள்வி அறிவு உடையவர் 


எனினும் = என்றாலும் 


ஆண் தொழிற்கு = போர்த் தொழிலுக்கு 


ஏன்றவர் = பொருந்தியவர், சரியானவர் என்ற


நண்பினர் = நண்பர்கள் 


எனினும் = என்றாலும் 


யாரையும் = அவர்கள் அனைவரையும் 


வான் = நீண்ட 


துணைச் = துணையாக உள்ள 


சுற்றத்து  மக்கள் = சுற்றத்தார் 


தம்பியர் = தன் தம்பிகள் 


போன்றவர் அல்லரைப் = அவர்கள் போன்றவர் அல்லாதவரை   


புறத்துப் போக்கினான். =  வெளியில் அனுப்பினான் 


இந்தப் பாடல் நமக்குச் சற்று நெருடலான பாடல். 


சொந்தக்காரர்களை, தம்பிகளை வைத்துக் கொண்டான், ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள், போர்த் தொழிலில் திறமையானவர்களை விலக்கி விட்டான் என்று சொன்னால், அது நமக்குச் சரியாகப் படாது. 


ஆங்கிலத்தில் nepotism என்று சொல்லுவார்கள். தன் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது. 


இன்றைய அரசியல், நிர்வாக முறைப்படி அது தவறாகத் தெரியும். 


ஆனால், அன்று இருந்தது ஜனநாயகம் அல்ல. அரசன் தான் எல்லாம். அவனை இறைவனுக்குச் சமமாக மக்கள் கருதினார்கள். 


அவனுக்கு எது நல்லதோ அது எல்லோருக்கும் நல்லது என்று நம்பினார்கள். 


எனவே, இராவணன், தனக்கு நல்லது நினைப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டான். 


ஆனால், தனக்கு எது நல்லது என்று இராவணனுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. யார் சொன்னதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எல்லாம் பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 


 


Monday, November 13, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான்

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான் 


ஒரு நிர்வாகத் தலைமையில் உள்ளவன் எப்படி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


You are as good as your team என்று சொல்லுவார்கள். 


உன் நண்பன் யார் என்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. 


யார் யாரை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறான் கம்பன். 


நமக்கு ஒரு சிக்கல் என்றால் நாம் யாரிடம் சென்று ஆலோசனை கேட்போம்? நம் நண்பர்கள், உறவினர்கள் என்று சென்று கேட்போம். அவர்கள் ஒன்றும் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் சென்று கேட்டு என்ன பலன்?


நம்மை விட அறிவில், அனுபவத்தில், திறமையில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். 


இராவணன் யார் யாரை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினான்?



பாடல்  


பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர், 

தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க!' எனக்

கொண்டு உடன் இருந்தனன்-கொற்ற ஆணையால்

வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_13.html


(pl click the above link to continue reading)

பண்டிதர் = கல்வி அறிந்து நிறைந்தவர்கள் 


பழையவர் = நீண்ட நாள் தொடர்பில் உள்ளவர்கள். நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் 


கிழவர் = தலைவர்கள். (முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் குறிஞ்சி நிலத்தின் தலைவன்)


பண்பினர் = உயர்ந்த பண்பினை உள்ளவர்கள் 


தண்டல் இல் = பிரிதல் இல்லாத. சில மந்திரிகள் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது போல் இல்லாமல், என்றும் உடன் இருப்பவர்கள். 


மந்திரத் தலைவர் = ஆலோசனை கூறும் தலைமை பண்பு மிக்கவர்கள் 


சார்க!' = இருங்கள் 


எனக் கொண்டு = என்று கொண்டு 


உடன் இருந்தனன் = அவர்களோடு இருந்தான் 


கொற்ற ஆணையால் = தன்னுடைய அரச ஆணையால் 


வண்டொடு = வண்டுகளையும் 


காலையும் = கால் என்றால் காற்று. காற்றையும் 


வரவு மாற்றினான் = உள்ளே வருவதை நிறுத்தினான். 


ஒரு ஈ காக்க உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லுவோம் அல்லவா. 


காற்று கூட உள்ளே நுழையக் கூடாது என்று ஆணையிட்டான். 


முந்தைய பாடலில் சிலரை வெளியேற்றினான்.


இந்தப் பாடலில் சிலரை சேர்த்து வைத்துக் கொண்டான். 


எப்படி முன்னேற்பாடுகள் செய்கிறான். 


யுத்த காண்டம் தானே, என்ன சண்டை போட்டு இருப்பார்கள் என்று தள்ளிவிட்டுப் போனால், இதெல்லாம் கிடைக்குமா?






Wednesday, November 8, 2023

கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1

 கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1 


இதுவரை இராமன் தென் கரையில் நின்று கொண்டிருந்ததை படம் படித்த கம்பன், இப்போது காமிராவை தூகிக் கொண்டு இலங்கைப் போகிறான். அங்கே என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கிறான். 


ஒரு தேர்ந்த இயக்குனரைப் போல, ஒரு காட்சியை cut பண்ணி வேறு ஒரு காட்சியை கொண்டு வருகிறான். வாசிப்பவர்களுக்கு ஒரு சலிப்பு இருக்காது. 


காமிரா இலங்கை போனாலும், வாசகன் நினைப்பு இராமன் மேலும் இருக்கும். அங்கே என்ன ஆச்சோ என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கும்.


இலங்கையில், இராவணன் அவையை கூட்டி இருக்கிறான். ஆலோசனை செய்ய.


ஒரு சந்திப்பு (மீட்டிங்) எப்படி நடக்க வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


மிக மிக ஆச்சரியமான நுணுக்கமான விவரிப்பு. ஒரு அவைக் கூட்டம் எப்படி நடத்த வேண்டும், எப்படி நடந்தது என்று இன்றைய மேலாண்மை (management) யில் கூறுவதற்கு ஒரு படி மேலே போய் காட்டுகிறான். 


இதை எல்லாம் படித்து இருந்தால் நம் பிள்ளைகளும் நாமும் எவ்வளவு அறிவில் சிறந்தவர்களாக சிறு வயதிலேயே ஆகி இருப்போம் என்று எண்ணத் தோன்றுகிறது. 


முதலில், சபையில் ஆலோசனைக்கு தேவை இல்லாத ஆட்களை வெளியே அனுப்புகிறான். 


பாடல் 


'முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர

எனைவரும், தவிர்க!' என ஏய ஆணையான்,

புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்-

நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/1.html



(pl click the above link to continue reading)


'முனைவரும் = முனிவர்களும் 


தேவரும் = தேவர்களும் 


மற்றும் = மேலும் 


உற்றுளோர எனைவரும் = அவர்களைப் போன்ற அனைவரையும் 


, தவிர்க!' = வெளியில் செல்லுங்கள் 


என = என்று 


ஏய ஆணையான் = ஆணையிட்டான் 


புனை குழல் = அழகு செய்யப்பட்ட கூந்தலை கொண்ட 


மகளிரோடு = பெண்களோடு 


 இளைஞர்ப் போக்கினான் = அறிவில் முதிராத இளையவர்களையும் நீக்கினான் 


நினைவுறு காரியம் = மனதில் நினைத்த காரியத்தை 


 நிகழ்த்தும் நெஞ்சினான் = நிகழ்த்திக் காட்டும் மனம் கொண்ட இராவணன் 


தேவர்கள் அரக்கர்களுக்கு எதிரிகள். அவர்களை நீக்கினான். 


முனிவர்கள் - விருப்பு வெறுப்பு இல்லாதவர்கள். அவர்களிடம் அரசாங்க யோசனை கேட்டு பலன் இல்லை. எனவே அவர்களையும் நீக்கினான். 


பெண்கள் - அங்கே பணி செய்யும் பணிப்பெண்கள். பெண்களிடம் இரகசியம் தங்காது என்பது ஒரு பொதுவான சிந்தனை. அதைக் கருத்தில் கொண்டு பெண்களை நீக்கினான். 


இளையவர் - கத்து குட்டிகள் இருப்பார்கள். அவர்களுக்கு யோசனை சொல்லும் அளவுக்கு அறிவு இருக்காது. எனவே அவர்களையும் நீக்கினான். 


தேவை இல்லாதவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டான். 


நினைத்ததை முடிப்பவனான இராவணன். நினைத்ததை சாதித்து முடிப்பவர்கள், இப்படித்தான் இருப்பார்கள் என்று கம்பன் பாடம் நடத்துகிறான். 





அடுத்து என்ன செய்தான்?




Wednesday, November 1, 2023

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி 


வானரப் படைகளோடு தென் கடற்கரையில் இராமன் நிற்கிறான். 


கம்பன் இரசித்து, நிறுத்தி, நிதானமாக கவிதைகளப் படைக்கிறான். 


"சீதை சிறைகியிருக்கிறாள். அவளை மீட்டு அவள் துயரைத் துடைக்க வேண்டும். அப்படி என்றால் இராவணனை கொல்ல வேண்டும். இராவணன் கொல்லப் பட்டால் தேவர்களின் துயரும் தீரும். இப்படி சீதை மற்றும் தேவர்களின் துயர் தீர வில் ஏந்தி வந்து நிற்கும் இராமனை தன் அலை என்ற கைகளால் வா வா என்று அந்தக் கடல் வரவேற்பது போல இருந்ததாம்".


பாடல் 


கொங்கைக் குயிலைத் துயர் நீக்க, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,

வெங் கைச் சிலையன், தூணியினன், விடாத முனிவின் மேல்செல்லும

கங்கைத் திரு நாடு உடையானைக் கண்டு, நெஞ்சம் களி கூர,

அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது-அணி ஆழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post.html


(pl click the above link to continue reading)


கொங்கைக் குயிலைத் = மார்பகங்களை கொண்ட குயில் போன்ற சீதையின் 


துயர் நீக்க = துன்பம் நீங்க 


இமையோர்க்கு = தேவர்கள். தேவர்கள் கண் சிமிட்ட மாட்டார்கள். இமை மூடாது. எனவே, இமையோர் 


உற்ற = உள்ள 


குறை முற்ற = துன்பம் நீங்க 


வெங் கைச் சிலையன் = பயத்தைத் தரும் வில்லை கையில் கொண்டவன்  


தூணியினன் = அம்புகள் நிறைந்த அம்புராத் துணியை கொண்டவன் 


விடாத முனிவின் = நீங்காத கோபம் கொண்டவன் 


மேல்செல்லும = அந்தப் பகைவர்கள் மேல் படை எடுத்துச் செல்லும் 


கங்கைத் திரு நாடு உடையானைக் = கங்கை பாயும் கோசல நாட்டின் தலைவனை 


கண்டு = பார்த்து 


நெஞ்சம் களி கூர = மனம் மகிழ்ந்து 


அம் = அந்த 


கைத் = கை போன்ற 


திரள்கள் = அலையை 


எடுத்து ஓடி = எடுத்துக் கொண்டு ஓடி வந்து 


ஆர்த்தது = பொங்கி வந்ததை 


ஒத்தது = போல 


அணி ஆழி= அழகிய கடல் 


ரொம்ப நாள் கழித்து நமக்கு வேண்டியவர்கள் வந்தால், எப்படி இரண்டு கைகளையும் விரித்து ஓடி சென்று அவர்களை தழுவி வரவேற்போமோ, அது போல இராமனைக் கண்டு மகிழ்ந்து, அலை எனும் கை நீட்டி ஆராவராத்தோடு அந்த கடல் பொங்கி வந்ததது போல இருந்ததாம். 


என்ன ஒரு கற்பனை!


எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு. 


இராமன் அவதாரம் எடுத்தது இராவணனை அழிக்க. அவன் தவறு செய்தான், தேவர்கள் முறையிட்டார்கள். திருமாலும் ஒத்துக் கொண்டுவிட்டார். 


நேரே சென்று அழிக்க வேண்டியதுதானே. 


கதைப்படி, இராமன் தேவர் துயர் தீர்கவில்லை. தன் மனைவியை சிறைப் பிடித்தவனை கொன்று மனைவியை மீட்டான். 


ஒரு வேளை இராவணன் மனம் மாறி, சீதையை விட்டிருந்தால், இராமன் அவளை கூட்டிக் கொண்டு அயோத்தி வந்திருப்பான். இராவணன் அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருப்பான். 


அப்படி நடந்திருக்காது என்று  சொல்ல முடியாது. 


பின்னால் ஒருவர் மாத்தி ஒருவர் சொல்கிறார்கள் - வீடணன், இந்திரசித்து, கும்பகர்ணன் - எல்லோரும் சொல்கிறார்கள். சீதையை விட்டு விடு. இராமன் மன்னித்து விடுவான் என்று. நீ சீதையை சிறை விட்டாலும், இராமன் உன்னை கொல்லாமல் விடமாட்டான் என்று யாரும் சொல்லவில்லை. 


பின் அவதார நோக்கம் என்ன ஆயிற்று?  


அவதார நோக்கம் என்பது சீதையை சிறை மீட்பதாக முடிந்து இருக்கும். 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....




Wednesday, October 25, 2023

கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று

 கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று 


பெண்ணை கட்டிக் கொடுத்தாகி விட்டது. 


பின், அந்தப் பெண்ணுக்கு ஒரு துன்பம் என்றால் அந்தப் பெண்ணின் தாயின் மனம் என்ன பாடுபடும். என் மகள் இப்படி கிடந்து துன்பப் படுகிராளே என்று தவிக்கும் அல்லவா?  என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பாள். 


மருமகனைப் பார்த்து "நீங்க ஏதாவது செய்யக் கூடாதா...அவ இவ்வளவு கஷ்டப் படுகிராளே" என்று மாப்பிளையிடம் புலம்புவாளா மாட்டாளா?


என் வயிற்றில் வந்து பிறந்ததனால்தானே, அவளுக்கு இவ்வளவு கஷ்டம்.வேறு எங்காவது பிறந்திருந்தால் நல்லபடியாக வாழ்ந்திருப்பாள். பாழாய்ப்போன எனக்கு மகளாக வந்து வாய்த்து இப்படி துன்பப்படுகிறாளே என்று தாயின் மனம் தவிக்கும்தானே. 


பாற்கடலில் தோன்றியவள் திருமகள். திருமகளின் அம்சம் சீதை. கடல், சீதைக்கு தாய். 


அந்த கடல்தாய் புலம்புகிறாள் 


" சந்திரனின் பிறை போன்ற நெற்றியை உடைய சீதை, ஒரு நாளும் தொலையாத துன்பத்தைக் கொண்ட நான் பெற்ற பெண், தவம் இருந்து பெற்ற பெண், இப்படி தனிமையில் (அசோகவனத்தில்) கிடந்து தவிப்பது சரிதானா?" 


என்று புலம்பி, தளர்ந்து,  கண்ணீர் சிந்தி, தன் அலை என்ற கரத்தை நீட்டி இராமனின் காலில் விழுந்து புலம்பினாள். 


பாடல்  


இந்து அன்ன நுதல்பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்

தந்த பாவை தவப் பாவை தனிமை தகவோ எனத் தளர்ந்து

சிந்துகின்ற நறுந்தரளக் கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து

வந்து வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_25.html

(pl click the above link to continue reading)


இந்து அன்ன = பிறைச் சந்திரனைப் போன்ற 

 

நுதல் = நெற்றியைக் கொண்ட 


பேதை இருந்தாள் = சீதை இருந்தாள் 


நீங்கா = ஒரு நாளும் தீராத 


இடர் = துன்பங்களைக் கொண்ட 


கொடியேன் = கொடியவளாகிய நான் (கடல்) 


தந்த பாவை = பெற்ற பெண் (சீதை)  


தவப் பாவை = தவம் இருந்து பெற்ற பெண் (சீதை) 


தனிமை தகவோ = தனிமையில் கிடந்து இப்படி தவிப்பது சரிதானா 


எனத் = என்று 


தளர்ந்து = தளர்ந்து, 


சிந்துகின்ற = சிந்தும், வழியும் 


நறுந்தரளக் = தரளம் என்றால் முத்து. நல்ல முத்துப் போன்ற 


கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி 


திரைத்து = அலையானது 


எழுந்து = மேலே எழுந்து 


வந்து = வந்து 


வள்ளல் = இராமனின் 


மலர்த் தாளின் = மலர் போன்ற பாதங்களில் 


வீழ்வது = வீழ்ந்து 


ஏய்க்கும் = முறையிடும் 


மறிகடலே = அலைபாயும் கடலே 


மகளின் துன்பம் கண்டு இரங்கும் தாயின் சோகத்தை கம்பன் படம் பிடித்து காட்டுகிறான். 



 

Monday, October 23, 2023

கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?

 கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?


உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை மிகக் கொடுமையானது. 


ஆணோ, பெண்ணோ, அவர்களின் உணர்வுகளை தங்களின் துணையிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும். 


சோகம் என்ன என்றால், இராமனும் சீதையும் பிரிந்து இருக்கிறார்கள். இராமன் யாரிடம் சொல்லி தன் உணர்சிகளை பகிர்ந்து கொள்வான்?


இராமனின் சோகத்தை நம் மமீது ஏற்றுகிறான் கம்பன். 


தென் கடற்கரையில், தனியாக நிற்கும் இராமனை முதலில் தென்றல் வருத்தியது, பின் பவளம் வருத்தியது, இங்கு, இப்போது முத்து வருத்துகிறது. 


பவளம், சீதையின் உதடுகளை ஞாபகப் படுத்தி அவனை வருத்தியது. 


முத்து, சீதையின் பல் வரிசையை நினவு படுத்தி வருத்துகிறது. 


கம்பன், அந்த முத்தைப் பார்த்து கேட்கிறான் 


"ஏய் முத்தே, 


சீதை இருக்கும் தூரம் ரொம்பத் தொலைவு இல்லை.  எப்படியாவது இராவணனை வென்று சீதையை மீட்டு வந்து விடலாம் என்று அவன் வீரம் துணை நிற்க. ஒரு பக்கம் நம்பிக்கை, இன்னொரு பக்கம் வீரம் என்று இருந்தாலும், பிரிவும் அவனை வாட்டுகிறது. நாளும் மெலிந்து போகிறான்.

அப்படி இருக்க, எதற்காக சீதையின் பல் வரிசையை ஞாபகப் படுத்தி அவனை நீ வதைக்கிறாய். ஒரு வேளை இராமனை துன்பம் செய்வதால் உனக்கும் அந்த அரக்கர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா" 


என்று. 


பாடல் 




தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்' என்று மனம் செல்ல,

வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-

ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு? -ஏழை

மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_23.html


(pl click the above link to continue reading)


தூரம் இல்லை = ரொம்ப தூரம் இல்லை 


மயில் இருந்த சூழல் = மயில் போன்ற சீதை இருக்கும் இடம் 


என்று மனம் செல்ல = என்று இராமனின் மனம் சொல்ல 


வீர வில்லின் = வீரம் நிறைந்த வில்லின் 


நெடு மானம் வெல்ல = வென்று விடலாம் என்ற ஆண்மை கொப்பளிக்க 


நாளும் மெலிவானுக்கு = நாளும் மெலிகின்ற இராமனுக்கு 


ஈரம் இல்லா  = மனதில் ஈரம் (கருணை ) கொஞ்சம் கூட இல்லாத 


நிருதரோடு = பகைவர்களோடு 


என்ன உறவு உண்டு உனக்கு = உனக்கு என்ன உறவு ? 


ஏழை = சீதையின் 


மூரல் முறுவல் = பல் தெரியும் புன்சிரிப்பைக்


குறி காட்டி = குறித்து ஞாபகப் படுத்தி 


முத்தே = முத்தே 


உயிரை முடிப்பாயோ? = அவன் உயிரை முடிப்பது என்றே முடிவு செய்து விட்டாயோ ?


ஆண்கள் கவலைப் படுவதை பற்றி பல கதைகளில் படித்து இருக்கிறோம். 


ஆனால் அது பொதுவாக அரசு பறிபோனது, போரில் தோல்வி, வியாபாரத்தில் நட்டம், உடல் நிலை, என்று இருக்கும். 


மனைவியை பிரிந்த கணவனின் சோகத்தை அதிகமாக பார்க்க முடியாது. 


காதலனைப் பிரிந்த காதலியின் சோகம், கணவனை பிரிந்த மனைவியின் சோகம் எளிதாக காணக் கிடைக்கும். 


உடல் மெலிந்து, வளையல் கழண்டு, இடுப்பில் ஆடை நிற்காமல் நெகிழ என்று பிரிவு ஒரு பெண்ணை வாட்டுவதை விவரித்து காட்டும் இலக்கியம் பல. 


மனைவியப் பிரிந்த கணவன் உடல் மெலிந்தான் என்று எங்காவது இருக்கிறதா? 


இராமன் நாளும் மெலிந்தான் என்று கம்பன் மீண்டும்  மீண்டும் சொல்கிறான். 


அதுவும், யுத்த காண்டத்தின் முன்னுரையில்....




Friday, October 20, 2023

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?


வானர படைகளோடு தென் இந்தியாவின் கடற்கரையில் இராமன் வில்லோடு தனித்து நிற்கிறான். 


தனியனாய் - மனைவியைப் பிரிந்து.


யாரிடம் சொல்ல முடியும்?  சில சோகங்களை வெளியே சொல்ல முடியாது. உள்ளுக்குள் வைத்துக் கொண்டு மறுக வேண்டியதுதான் .


"கடற்கரையில் பவளக் கொடி படர்ந்து இருக்கிறது. அதில் பவளம் இருக்கிறது. பவளம் சிவப்பாக இருக்கும். அந்தப் பவளம் இராமனை பார்க்கிறது. மலை போல உயர்ந்த தோள்கள். மெலிந்த உருவம். பவளத்தை, இராமன் பார்க்கிறான். சீதையின் உதடு போல சிவந்து இருக்கிறது.  அதைப் பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் நினைவு மேலும் எழுகிறது. சோகம் அவனை கொல்கிறது. ஆனால், அந்த பவளத்துக்கு, நாம் இராமனை இப்படி வதைக்கிரோமே என்ற கவலை ஒன்றும் இல்லை..."


பாடல் 


சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப,

நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன், படி ஏழும்

தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் என்ன, தனித் தோன்றி,

கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_20.html


(please click the above link to continue reading)


சிலை மேற்கொண்ட = கையில் வில்லை ஏந்தி நிற்கும் 


திரு = சிறந்த 


நெடுந் தோட்கு = நெடிது உயர்ந்து தோள்களுக்கு 


உவமை = உவமையாக 


மலையும்  = மலையை 


சிறிது ஏய்ப்ப = சிறிது உவமையாக சொல்லும்படி 


நிலை மேற்கொண்டு = நிலைத்து நின்ற, அசையாமல் நின்ற 


மெலிகின்ற = உடல் மெலிந்து 


நெடியோன் = உயர்ந்து நிற்கும் இராமன் 


தன்முன் = முன் 


படி ஏழும் = உலகம் ஏழும் 


தலை மேல் கொண்ட = தலையின் மேல் வைத்துக் கொண்டாடும் 


கற்பினாள் = கற்பினை உடைய 


மணி வாய் என்ன = சீதையின் ஒளி வீசும் அதரங்களைப் போல 


தனித் தோன்றி = தனித்துத் தோன்றி 


கொலை மேற்கொண்டு = கொலைத் தொழிலை கொண்டு 


ஆர் உயிர் குடிக்கும் = உயிரை குடிக்கும் 


கூற்றம் கொல்லோ = கூற்றம் (எமன்) போன்றதோ 


கொடிப் பவளம் = இந்த கொடி பவளம் 


அரசை இழந்து,  மனைவியை இழந்து, தனித்து நிற்கும் இராமன். 


அப்பா, அம்மாவின் கட்டளை, அதை செய்து முடிக்க வேண்டிய கடமை ஒரு புறம். 


மனைவியை இழந்த சோகம் மறு புறம். 


அரசனாக, ஒரு வீரனாக, எதிரியை வீழ்த்தி மனைவியை மீட்க வேண்டிய கடமை மறுபுறம். 


இதை எல்லாம் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாத சோகம் மறுபுறம். 


இராமனை அந்தப் புள்ளியில் காலம் நிறுத்தி இருக்கிறது. 


அவன் என்ன செய்யப் போகிறான்? 




 


Monday, October 16, 2023

கம்ப இராமாயணம் - பூசாது போகாது

கம்ப இராமாயணம் - பூசாது போகாது  


வானர படைகளோடு தென் கடற்கரையில் இராமன் நிற்கிறான். தனியனாக கடலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். 


அவன் மேல் கம்பனுக்கு அவ்வளவு பரிதாபம் பிறக்கிறது. 


ஒவ்வொரு நாளும் சீதையின் பிரிவால் அவன் உடல் வாடுகிறது. நேற்று இருந்தது போல இன்று இல்லை. அந்த அவலத்தைக் கண்டு கடல் கதறுகிறது. ஐயோ, என் இராமனுக்கா இந்த கதி என்று. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், தென்றல் காற்று பூக்களில் உள்ள மகரந்தகளை கொண்டு வந்து இராமன் மேல் பூசுகிறது. 


காதல், பிரிவு, சோகம், காமம், தன்னிரக்கம் என்று அனைத்தையும் குழைத்து தமிழில் ஊட்டுகிறான் கம்பன். 


பாடல் 


நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலை தளர்வான்-

தன்னைக் கண்டும், இரங்காது தனியே கதறும் தடங் கடல்வாய்,

பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்

புன்னைக் குறும் பூ நறுஞ் சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_16.html


(please click the above link to continue reading)


நென்னல் = நேற்று 


கண்ட = பார்த்த 


திருமேனி = இராமனின் உருவம் 


இன்று = இன்று 


பிறிது ஆய்= வேறு மாதிரி 


நிலை தளர்வான்= தன் இயல்பு நிலையில் இருந்து தளர்ந்து 


தன்னைக் = தளர்வான் தன்னை. தளரும் இராமனை 


கண்டும் = பார்த்த போதும் 


இரங்காது = இரக்கம் கொள்ளாமல் 


 தனியே கதறும்  = தனியே கதறும் 


தடங் கடல்வாய் = பெரிய கடலின் கரையில் 


பின்னல் திரைமேல் = பின்னல் போல் எழும் அலைகள் மேல் 


தவழ்கின்ற = தவழ்ந்து வருகின்ற 


பிள்ளைத் தென்றல் = இளம் தென்றல் 


கள் உயிர்க்கும் = தேனை சொரியும் 


புன்னைக் = புன்னை மரத்தின் 


குறும் பூ = சின்ன சின்ன பூக்களின் 


நறுஞ் = மணம் வீசும் 


சுண்ணம் = பொடிகள் (மகரந்தப் பொடிகள்) 


பூசாது = இராமன் மேல் பூசாது 


ஒருகால் போகாதே = ஒரு காலத்திலும் போகாது 


பூசாமல் போகாது என்றால், பூசிவிட்டுப் போகும் என்று அர்த்தம். 


"உன்னிடம் கொடுத்த கடனை வாங்காமல் விட மாட்டேன் என்றால் வாங்கியே தீருவேன் என்று அர்த்தம்". 


இராமன் வாடுகிறான். 


கடல் அழுகிறது. 


தென்றலுக்கு அது எல்லாம் தெரியவில்லை. 


"பிள்ளைத் தென்றல் தவழ்ந்து" என்கிறான் கம்பன். 


அலை வருகிறது. அதன் மேல தென்றல் உட்கார்ந்து கொண்டு வருகிறது. அது சிறு பிள்ளை தவழ்ந்து வருவது போல இருக்கிறதாம். அலையை , குழந்தையின் தவழ்தலுக்கு உவமை சொல்லி கேட்டு இருக்கிறோமா? 


இவ்வளவு நுணுக்கமான அழகான பாடலை எங்கு வைக்கிறான் கம்பன்? யுத்த காண்டத்தில். 


வாழ்வில் எத்தனை சிக்கல் வந்தால் என்ன?  இரசிப்பதற்கு இடம் இருக்கிறது என்று கோடு போட்டு காட்டுகிறான். 


G K Chesterson என்று ஒரு ஆங்கில கட்டுரையாளர் இருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு ஒரு கால் போய்விட்டது அல்லது முறிந்து விட்டது. நாமாக இருந்தால் எவ்வளவு வருத்தப் படுவோம் .


அவர், The advantages of having one leg என்று ஒரு கட்டுரை எழுதினார். பள்ளிப் பருவத்தில் படித்த ஞாபகம். 


துன்பம் என்பது நாம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. 


கோடிகணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு தூக்கமில்லாமல், பசி இல்லாமல் துன்பப் படுபவர்களும் இருக்கிறார்கள். 


கையில் காலணா காசு இருக்காது. நன்றாக உண்டு, தன்னை மறந்து தூங்குபவர்களும் இருக்கிறார்கள். 


வாழ்க்கை, நம் பார்வையில் இருக்கிறது. 


 


Friday, October 13, 2023

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்


வானர சேனைகளோடு தென் கடற்கரையில் நிற்கிறான் இராமன். ஒரு புறம் மனைவியைத் துறந்த வருத்தம். இன்னொரு புறம் இந்த சேனையை நடத்திச் சென்று இராவணனை போரிட்டு வெல்ல வேண்டிய வேலை. இரண்டுக்கும் நடுவில் நிற்கிறான் இராமன். 


அந்தக் கடல் நீர், எப்படி வந்தது என்றால், இராமனைப் பிரிந்த சீதை அழுத கண்ணீர் கடல் நீராக மாறி இராமனை நோக்கி வந்ததாம். அல்லது அவனுக்கு அப்படித் தெரிகிறது. 


இன்னொரு புறம் மன்மதன் வீசும் கணைகள். 


இரண்டுக்கும் இலக்காகி நின்றான் இராமன். 


பாடல்  


வழிக்கும் கண்ணீர் அழுவத்து  வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த

பழிக்கும், காமன் பூங்கணைக்கும்  பற்றாநின்றான் பொன் தோளைச்

சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில்  துள்ளும் பொறியின் சுடும் அன்னே!

கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த்  தென்றல் தூற்றும் குறுந்து திவலை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_13.html


(please click the above link to continue reading)



வழிக்கும் கண்ணீர் = வழியும் கண்ணீர் 


அழுவத்து = கடலில் (அழுவம் = கடல்) 


வஞ்சி  = பெண், சீதை 


அழுங்க = வருந்தி 


வந்து அடர்ந்த = வந்து சேர்ந்த (கடல் நீர்)  


பழிக்கும் = அந்த பழிக்கும் 


காமன் பூங்கணைக்கும் = மன்மதனின் பூங் கணைகளுக்கும் 


பற்றாநின்றான் = பற்றி நின்றான் 


பொன் தோளைச் = அழகிய தோள்களை 


சுழிக்கும் = சுழித்து எழும் 


கொல்லன் = கொல்லனுடைய (நகை செய்பவன்) 


ஒல் உலையில் = கொதிக்கும் உலையில் 


துள்ளும்  = துள்ளி வெடித்து தெறிக்கும் 


பொறியின் = தீப் பொறியை போல 


சுடும் அன்னே! = சுட்டது 


கொழிக்கும் கடலின் = ஆராவரிக்கும் கடலின்


நெடும் திரைவாய்த்  = நீண்ட பெரிய கரையில் 


தென்றல் = தென்றல் 


தூற்றும் = மேலே அள்ளி வீசும் 


குறுந்து திவலை = சிறு சிறு நீர் துளிகள் 


கையை நீரில் நனைத்து மற்றொருவர் மேல் தெளித்தால் எப்படி இருக்கும்? அது போல, தென்றல் , கடலில் தன் கையை முக்கி இராமன் மேல் தெளித்தது போல இருந்ததாம்.


மனைவியை பிரிந்ததில் இரண்டு விடயங்களை கம்பன் காட்டுகிறான்.. 


ஒன்று, வருத்தம். 


இன்னொன்று, காமன் கணைகள். அன்பை செலுத்த, பகிர்ந்து கொள்ள, கொஞ்ச, அவள் இல்லையே என்ற ஏக்கம். 


எவ்வளவு துல்லியமாக கம்பன் உணர்சிகளை படம் பிடிக்கிறான் !






Wednesday, October 11, 2023

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்


எந்நேரமும் ஒரு பதற்றம். ஒரு அவசரம். ஏதோ ஒரு சிந்தனை. குழப்பம். 


எதையும் நிறுத்தி, நிதானமாக, பொறுமையாக கையாள நேரம் இல்லை. இரசிக்க நேரம் இல்லை. 


வாழ்வின் வேகத்தை குறைக்க வேண்டும். இனிய காலைப் பொழுது, மரத்தின் இலைகளில் இருந்து சொட்டும் மழை நீர், மென்மையான தென்றல், சூடான காப்பி, சுவையான உணவு, மயக்கும் பாடல், குழந்தையின் மழலை...என்று எவ்வளவோ இருக்கிறது. 


வீட்டில், மனைவியோ, அம்மாவோ இரண்டு மணி நேரம் போராடி உணவு தயாரித்து இருப்பார்கள் . அது என்ன என்று கூட பார்க்காமல், டிவி பார்த்து கொண்டே உள்ளே அள்ளிப் போடுவது. நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. சொல்லக் கூடாது என்று இல்லை. பழக்கம் இல்லை. இரசிக்கப் பழகவில்லை. 



இரசனை என்பது ஒரு நாளில் வந்து விடாது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியின் மூலம் வளர்க்க வேண்டும். 


இலக்கியங்கள் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகின்றன. 


யுத்த காண்டம் சொல்ல வந்த கம்பன், எங்கு, எப்படி ஆரம்பிக்கிறான் பாருங்கள். 


இராமன் கடற்கரையில் நிற்கிறான். அவ்வளவுதான் செய்தி. அதை கம்பன் எப்படிச் சொல்கிறான் பாருங்கள். 


"பாற்கடலில் இருந்து பிரிந்து வந்த திருமால், எங்கெங்கோ போய் விட்டு, இப்போது நம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்து இருக்கிறான். அவன் கண் மூடி தூங்க நல்ல மென்மையான பாய் போடுவோம் என்று அலை என்ற பாயை உதறி உதறிப் போடுகிறதாம்..வா இராமா வந்து படுத்துக் கொள்" என்று. 


பாடல் 


சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,

மாயன், வந்தான்; இனிவளர்வான்' என்று கருதி, வரும் தென்றல்

தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்

பாயல் உதறிப் படுப்பதே ஒத்த-திரையின் பரப்பு அம்மா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_11.html


(pl click the above link to continue reading)


சேய காலம் = நீண்ட காலம் 


பிரிந்து = பிரிந்து இருந்து 


அகலத் திரிந்தான் = அகன்று திரிந்தான் (இராமன்) 


மீண்டும் = மீண்டும் 


சேக்கையின்பால் = படுக்கையின் பக்கம் 


மாயன் = மாயனான இராமன் 


வந்தான் = வந்தான் 


இனி = இனிமேல் 


வளர்வான்' = கண் வளர்வான் (தூங்குவான்) 


என்று கருதி = என்று நினைத்து 


வரும் தென்றல் = மெல்ல வரும் தென்றல் 


தூய மலர்போல்  = தூய்மையான மலர் போன்ற 


நுரைத் தொகையும் = நுரைகளை  


முத்தும் சிந்தி = முத்துப் போல சிதறி 


புடை சுருட்டிப் = அருகில் சுருட்டி  


பாயல் = பாயை 


உதறிப் படுப்பதே = உதறி படுப்பதற்கு போட்டது 


ஒத்த = மாதிரி இருந்தது 


திரையின் = அலைகளின் 


பரப்பு = விரிந்த பரப்பு 


அம்மா = ஆச்சரியச் சொல் 


அலைகளைப் பார்த்தால் அதன் மேல் பரப்பில் நீர் குமிழிகள் இருக்கும். அந்தக் குமிழிகள் முத்துப் போல இருக்கிறதாம். 


அலை சுருண்டு, சுருண்டு எழுவதும், விழுவதும் ஏதோ கடல் பாயை உதறிப் போடுவது போல இருக்கிறதாம். 


பின்னாடி இரத்த ஆறு ஓடப் போகிறது. யுத்தம் என்றால் வலியும், இழப்பும் இருக்கும் தானே. கம்பனுக்கு அது தெரியாதா.


அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இதை இரசிப்போம் என்று கற்பனையை தவழ விடுகிறான். 


நம் வாழ்வில், நாளை என்ன வரும் என்று நமக்குத் தெரியாது. விபத்து, உடல் நலக் குறைவு, துக்க செய்தி, தோல்வி, என்று எது வேண்டுமானாலும் வரலாம். 


இன்றை, இந்த நொடியை இரசித்துப் பழக வேண்டும். 


வாழ்வை இரசிக்க காரணம் எல்லாம் வேண்டாம். அனைத்தையும் இரசிக்கப் பழக வேண்டும். 


Monday, October 9, 2023

கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன்

 கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன் 



உணர்சிகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம்தான். இருந்தாலும், நாம் சில உணர்ச்சிகளை பெண்களுக்கு உள்ளது என்றும், சிலவற்றை ஆண்களுக்கு உள்ளது என்றும் சொல்லி சொல்லி பிள்ளைகளை வளர்க்கிறோம்.


உதாரணமாக, ஆண் பிள்ளை அழக் கூடாது. சிறு வயதில் அழுதால் கூட "..சீ, என்ன இது பொம்பள பிள்ளை மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்வார்கள். நாளடைவில் அழுவது அசிங்கம் என்று அந்தப் பையன் புரிந்து கொள்கிறான். அழுவது பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைத்துக் கொள்கிறான். அது மட்டும் அல்ல, தான் அழுதால் பலவீனம் என்று நினைத்தால் பரவாயில்லை. அழுகை என்பதே பலவீனம் என்று நினைக்கிறான். நாளை அவன் மனைவி அழுதாலும், அவள் பலவீனமானவள் என்று எடை போடும் அவன் மனது. 


அது மட்டும் அல்ல, ஒரு துக்கம், கவலை என்றால் வெளியே சொல்லக் கூடாது, தைரியமாக இரு என்று சொல்லி வளர்க்கப் படுகிறான். சிறு வயதில் சரி. வயதாகும் போது பெரிய பிரச்சனைகள் வரும் போது, தனக்குத் தானே மனதில் வைத்துக் கொண்டு புளுங்குவான். மனைவி கேட்டால் கூட, "சும்மா இரு, ஒண்ணும் இல்ல" என்று எரிந்து விழுவான். 


இராமன் தனித்து நிற்கிறான். வானர படையை கொண்டு வந்தாகி விட்டது. இலங்கைக்குப் போக வேண்டும். 


கடலைப் பார்க்கிறான். சீதையை பிரிந்த துயர் அவனை வாட்டுகிறது. 


எவ்வளவு பெரிய, வலிமையான ஆளாக இருந்தாலும், மனைவியைப் பிரிந்த துயர் அவனுக்கும் இருக்கும் தானே. 


இரவெல்லாம் தூக்கம் இல்லை. அதிகாலையில் எழுந்து விட்டான். இன்னும் சூரியன் வெளி வரவில்லை. இராமன் வெளியே வந்து பார்க்கிறான். தாமரை மலர்கள் இன்னும் விரிய வில்லை...பொழுது இன்னும் சரியாக புலரவில்லை ....



பாடல் 




பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்

சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்

கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்

கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_9.html


(pl click the above link to continue reading)



பொங்கிப் பரந்த = பொங்கி, பெரிதாக உள்ள 


பெருஞ்சேனை  = பெரிய சேனை, பெரிய படை


புறத்தும் அகத்தும் = உள்ளும் வெளியும், எங்க பார்த்தாலும் 


புடைசுற்றச் = சுற்றி நிற்க 


சங்கின் = சங்கைப் போல 


பொலிந்த = பொலிவான, அழகான 


கையாளைப் = கைகளை உடைய சீதையைப்  


 பிரிந்த பின்பு= பிரிந்த பின்பு 


தமக்கு இனமாம் = தனக்கு நிகரனா (எது எதற்கு நிகர் என்று பின்னால் பார்ப்போம்)


கொங்கின் பொலிந்த = தேன் நிறைந்து விளங்கும் 


தாமரையின்  = தாமரைப் பூக்கள் 


குழுவும் = கூட்டம் அத்தனையும் 


துயில்வு உற்று = தூங்கி 


இதழ் குவிக்கும் = இதழ் மூடி இருக்கும் 


கங்குல் பொழுதும்= இரவு நேரத்திலும் 


துயிலாத கண்ணன் = தூக்கம் வராத கண்களை உள்ள இராமன் 


கடலைக் கண்ணுற்றான் = கடலை பார்த்தான் 


கண்களுக்கு தாமரையை உவமையாக சொல்வார்கள்.  அதிகாலையில் குவிந்து இருக்கும் தாமரை மலர். தாமரை கூட தூங்குகிறது. இராமனின் கண்கள் தூக்கம் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. 


எந்த ஒரு மன நிலையில் இருந்து யுத்தம் செய்யப் போகிறான் என்று கம்பன் காட்டுகிறான். 


இராமனின் சோகத்தை பாட்டில் வழிய விட இருக்கிறான் கம்பன். 


அவற்றையும் காண்போம். 




Saturday, October 7, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2 


இராமன் வானர சேனைகளோடு இந்தியாவின் தென் கோடிக்கு வந்து விட்டான். இனி கடல்தான் இருக்கிறது. கடலைத் தாண்ட வேண்டும். ஒரு ஆள் தாண்டினால் போதாது. எழுபது வெள்ளம் வானர சேனையை அந்தக் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். 


சாதரணமான காரியமா? 


மிகப் பெரிய வேலை. சிக்கலானதும் கூட. 


இராமனின் மனநிலை என்ன. அவன் நாடு பிடிக்க புறப்பட்டவன் அல்ல. மனைவியை பறி கொடுத்து, அந்தக் கவலையில் இருக்கிறான். 


நாமாக இருந்தால் என்ன செய்து இருப்போம். 


தளர்ந்து போய் இருப்போம். ஒரு சின்ன விடயம் கொஞ்சம் மாறிப் போனால் கூட சோர்ந்து விடுகிறோம். "ஆமா, அது கிடக்குது, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் ...இப்ப அது ரொம்ப முக்கியமா" என்று அலுத்துக் கொள்வோம். 


கவலை ஒரு புறம் இருந்தாலும், செய்ய வேண்டிய வேலை மிகப் பெரியதாக இருந்தாலும், மனம் தளராமல் இராமன் அதை செய்து முடிக்கிறான். 


இராமன் செய்து முடித்தான் என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டு மேலே போய் விடுகிறோம். அவன் எந்த அளவு மனத் துயரத்தில் இருந்தான் என்று கம்பன் பின்னால் காட்டுவான். பார்ப்போம்.  


சீதை போன்ற அன்பான மனைவியை பிரிந்து இருப்பது என்பது எவ்வளவு துயரம். அந்த துயரம் ஒரு புறம் இருந்தாலும், எடுத்துக் கொண்ட வேலையை இராமன் சரியாக செய்து முடிக்கிறான். 


அது ஒரு பாடம். 


பாடல் 


ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்,

வாழி வற்றா மறி கடலும், மண்ணும், வட பால் வான் தோய,

பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ, பரந்து எழுந்த

ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/2.html


(pl click the above link to continue reading)



ஊழி திரியும் காலத்தும் = ஊழித் தீ பிடித்து எரியும் காலத்திலும் 


 உலையா = மாறாத, சிதையாத 


நிலைய = நிலையான 


உயர் கிரியும் = உயர்ந்த மலையும் (இமய மலை) 


வாழி வற்றா மறி கடலும்= என்றும் வாழும் வற்றாத பெரிய கடலும் (இந்தியப் பெருங் கடல்) 


மண்ணும் = அந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மண், இந்திய நிலப் பரப்பு 


வட பால் வான் தோய = வடக்குப் பக்கம் உயர்ந்து வானத்தைத் தொட 


பாழித் = பெருமை உள்ள 


தெற்கு உள்ளன கிரியும் = தெற்குப் புறம் உள்ள மலை (விந்திய மலை) 


நிலனும் தாழ = தென் இந்தியாவும் தாழ 


பரந்து எழுந்த = புறப்பட்டு எழுந்த 


ஏழு-பத்தின் = எழுபது 


பெரு வெள்ளம் = வெள்ளம் என்பது இங்கே பெரிய கணக்கில் அடங்காத என்று பொருளில் வந்தது. பெரு வெள்ளம் என்றால் எண்ணில் அடங்கா 


மகர வெள்ளத்து இறுத்ததால் = மீன்கள் நிறைந்த தென் கடற்கரையை அடைந்தது. 


கொஞ்சம் குழப்பமாக இருக்கும். 


பெரிய படை வந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். மற்ற புலவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் - கடல் போன்ற பெரிய படை, இதுவரை யாரும் காணாத பெரிய படை, அந்த படை நடந்து வந்த தூசி வானைத் தொட்டது என்றெல்லாம் எழுதி இருப்பார்கள். 


கம்பன் அவ்வளவு சாதாரண புலவன் இல்லை. 


அவன் சொல்கிறான் 


"இவ்வளவு பெரிய படை வடக்கில் இருந்து தெற்கில் வந்து விட்டது. எனவே, தெற்கில் பாரம் அதிகம் ஆகி தென் புறம் தாழ்ந்து விட்டது. அதனால் வட புறம் உயர்ந்து விட்டது. இமய மலையும் அது சார்ந்த இடங்களும் மேலே ஏறி வானைத் தொட்டது, விந்திய மலையும் அது சார்ந்த தென் பகுதியும் தாழுந்து விட்டது"


என்று. 


கற்பனை பண்ணிப் பாருங்கள். முழு இந்தியாவை ஒரு சீசா பலகை போல ஆக்கிக் காட்டுகிறான். இந்த பிரமாண்டத்தை நம்மால் சிந்திக்க முடியுமா?  


மனம் விரிய வேண்டும். சின்ன சின்ன விடயங்களை விட்டு விட்டு மனம் இப்படி ஒரு பிரமாண்டத்தை யோசிக்க வேண்டும். இப்படி யோசிக்க யோசிக்க மனம் விரியும். இப்படி பழக பழக எல்லாவற்றிலும் பெரிய இறைவனை உணர முடியும். 


மேலும் சிந்திப்போம். 



Wednesday, October 4, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி 


யுத்த காண்டத்தில் என்ன இருக்கப் போகிறது. இவன் அவனை வெட்டினான், அவன் இவனைக் கொன்றான் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். "இன்று போய் நாளை வா" போன்ற பஞ்ச் டயலாக் ஓரிரண்டு இருக்கலாம் என்பதுதான் பொதுவான அப்பிராயம். 


அது ஒரு புறம் இருக்க....


கணவன் மனைவி உறவு, அதில் எழும் சிக்கல்கள், அண்ணன் தம்பி பாசம், அப்பா மகன் வாஞ்சை, பாகப் பிரிவு, நட்பு இதெல்லாம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் இருக்கும். அதைப் பற்றி எல்லாம் எல்லோருக்கும் அனுபவம் இருக்கும். கம்பன் அவற்றை மிக நுணுக்கமாக, அழகாக, ஆழமாக சொல்லி இருக்கிறான்.  அவை நித்தமும் நம்மை சுற்றி நிகழ்பவை. 


கம்பன் வாழ்விலும், அவன் வாழ்ந்த சூழ் நிலையிலும் இவை எல்லாம் இருந்து இருக்கும். 


யுத்தம் என்பதை எத்தனை பேர் நேரில் பார்த்து இருக்கிறோம். அது பற்றி நமக்கு என்ன அனுபவம் இருக்கிறது. ஏதோ கதையில், சினிமாவில் பார்த்து இருக்கலாம். யுத்தம் என்றால் ஏதோ கத்தி, துப்பாக்கி கொண்டு சண்டை போடுவது மாத்திரம் அல்ல. யுத்தம் பற்றி சிந்திப்பது, எப்படி ஆலோசனை செய்வது, யாரை எப்படி அனுப்புவது, இழப்புகளை எப்படி சமாளிப்பது, எதிரியை எப்படி எடை போடுவது, இப்படி பல விடயங்கள் இருக்கின்றன. சண்டை போடும் வீரனுக்குக் கூட இது எல்லாம் தெரியாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_4.html


(click the above link to continue reading)


கம்பன் விவரிக்கும் யுத்த காண்டம் மிக விரிவானது, ஆழமானது, அதிசயிக்கும் படி இருக்கிறது. எப்படி இந்த மனிதனால் இவ்வளவு தூரம் சிந்திக்க முடிந்திருக்கிறது. ஏதோ நேரில் பார்த்த மாதிரி எழுதி இருக்கிறாரே என்று நமக்கு வியப்பாக இருக்கும். கம்பன் போர் களத்துக்குப் போய் இருக்க மாட்டான். கத்தி எடுத்து சண்டை போட்டிருக்க மாட்டான். பின் எப்படி இவ்வளவு நுணுக்கமாக எழுத முடிந்தது. அவன் ஒரு தெய்வப் புலவன் என்பதற்கு இந்த யுத்த காண்டம் இன்னொரு சாட்சி. 


ஆடு மட்டும் அல்ல, சண்டையை எப்படி அழகாகச் சொல்ல முடியும்? தலையை வெட்டினான், இரத்தம் பீரிட்டு வந்தது, கை உடைந்தது, கால் முறிந்தது என்பதை அழகாக எப்படி சொல்வது? 


சொல்கிறானே. படு பாவி, அதையும் இவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறானே. 


உதரணத்துக்கு, இந்திர சித்து இறந்து போகிறான். இராவணன் அவன் மேல் விழுந்து அழுகிறான். ஒரு பத்துப் பாடல் இருக்கிறது. அதைப் படித்து விட்டு இரசிகமணி டி கே சி கூறினார் "இப்படி பத்துப் பாடல் கிடைக்கும் என்றால் இன்னும் இரண்டு மூணு பிள்ளைகளை போரில் இழக்கலாமே" என்று. அவ்வளவு  அருமையான பாடல்கள். உலகையே புரட்டிப் போட்ட இராவணனை புரட்டிப் போட்ட சோகம் அது. 


அவன் சோகத்தை கண்டு வருந்துவதா, அதை இப்படி அழகாகச் சொல்லி இருக்கிறானே என்று வியப்பதா என்று நாம் செயலற்று நிற்கும் இடங்கள் அவை.  


யுத்தத்தில், வீரம், சந்தேகம், பாசம், கண்ணீர், இறுமாப்பு, உறுதி என்ற உணர்சிக் கொந்தளிப்புகள் உண்டு. 


கம்பன் அத்தனையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். 


ஒரு புறம் மனைவியை இழந்து, வருந்தி, கோபம் கொண்டு, சண்டை போட வந்திருக்கும் இராமன். 


மறுபுறம் சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை, குரங்கு வந்து நாட்டை எரித்து விட்டுப் போய் விட்டது, மனிதர்களை எதிர்த்து சண்டை செய்ய வேண்டும், நம் பலம் என்ன, வரம் என்ன, பராகிரமம் என்ன என்று தோள் தட்டி நிற்கும் இராவணன் மறு புறம். 


காய் நகர்த்த வேண்டும். 


ஒரு தேர்ந்த டைரக்டர் மாதிரி, காமெராவை அங்கும் இங்கும் நகர்த்துகிறான் கம்பன். 


யுத்த காண்டத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று வியந்து போவீர்கள் என்பதில் அணுவளவும் எனக்கு சந்தேகம் இல்லை. 


வாருங்கள், கம்பன் காட்டும் யுத்தத்தை காண்போம். 


இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை போர் சம்பந்தப்பட்ட படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சுவாரசியமாக கம்பன் அதைக் காட்டுகிறான். 


கம்ப இராமாயணத்தின் கிளைமாக்ஸ் அது. 


அதற்குப் பின், அக்னிப் பரீட்சை, முடி சூட்டு விழா, என்று படம் முடிந்து விடும். யுத்த காண்டம் தான் கம்ப இராமாயணத்தின் மகுடம் என்பேன்.