Showing posts with label திருப்பாவை. Show all posts
Showing posts with label திருப்பாவை. Show all posts

Wednesday, January 16, 2019

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?

திருப்பாவை - பேச்சு அரவம் கேட்டிலையோ?





பாடல்

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.


பொருள்

கீசுகீசு = கீச் கீச்

என்று = என்று

எங்கும் = எல்லா இடத்திலும்

ஆனைச்சாத் தன்  = ஆனை சாத்தன் என்பது ஒரு வகை பறவை. காகம், புறா மாதிரி

கலந்து = தங்களுக்குள் கலந்து

பேசின = பேசிக் கொண்ட

பேச்சரவம் = பேச்சு சத்தம்

கேட்டிலையோ = நீ கேட்கவில்லையா ?

பேய்ப் பெண்ணே = பேய் போன்ற குணம் கொண்ட பெண்ணே

காசும் பிறப்பும் = காசு பிறப்பு போன்ற ஆபரணங்கள்  (பெண்கள் அணியும் ஆபரணம்)

கலகலப்பக் = கல கல என்று

கைபேர்த்து = கை அசைத்து

வாச நறும்குழல் = வாசம் வீசும் கூந்தலைக் கொண்ட

ஆய்ச்சியர் = ஆயர் பாடி பெண்கள்

மத்தினால் = மத்தினால்

ஓசை படுத்த = ஓசை உண்டாக்கும்

தயிரரவம் = தயிர் கடையும் சப்த்தம்

கேட்டிலையோ = கேட்கவில்லையா ?

நாயகப் பெண்பிள்ளாய் = முக்கியமான பெண் பிள்ளையே

நாரா யணன்மூர்த்தி = நாராயண மூர்த்தி

கேசவனைப் = கேசவனைப்

பாடவும் = பாடுவதையும்

நீ கேட்டே கிடத்தியோ = நீ கேட்டுக் கொண்டே படுத்துக் கிடக்கிறாயா ?

தேச முடையாய் = தேமல் உடையவளே

திறவேலோர் எம்பாவாய் = திறப்பாய் என் பாவையே

இது என்ன பாட்டு ? இதுக்கு எதுக்கு பெரிய உரை , வியாக்கியானம் எல்லாம்?

பறவைகள் கூட்டில் கத்துகின்றன. பெண்கள் தயிர் கடைகிறார்கள். பக்த கோடிகள் இறைவன் பெயரை உச்சரிக்கிறார்கள். இந்த சத்தத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு தூங்குகிறாயா? எழுந்து வா.

இதுதான் பாடல். இதில் என்ன இருக்கிறது தெரிந்து கொள்ள? இதை தெரிந்து நமக்கு  என்ன பயன் ?

ஒன்றும் இல்லாமலா இத்தனை நாள் இந்தப் பாசுரங்கள் நிலைத்து நின்றிருக்கும் ?

நமது சிக்கல் என்ன என்றால் நம்மிடம் நிறைய சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்தச் சாவிகள் எந்தப் பூட்டைத் திறக்கும் என்று நமக்குத் தெரியாது. சாவிகளை தூக்கிக் கொண்டு திரிகிறோம்.

இது போல ஆயிரம் பாடல்கள், ஆயிரம் வழி முறைகள் இருக்கின்றன. ஏன் செய்கிறோம்  என்று அறியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம்.

சரி, பாசுரத்துக்கு வருவோம்.

நம்மைச் சுற்றி பல நல்ல விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. நல்லது மட்டும் அல்ல, அல்லாததும் நடக்கிறது. நாம் பலவற்றை கேட்பதே இல்லை. அப்படியே கேட்டாலும், நல்லதை விட்டு விட்டு அல்லாதவற்றை கேட்கிறோம். நல்லதை கேட்டாலும், புரிவது இல்லை. புரிந்தாலும், "இதெல்லாம்  நடை முறைக்கு சாத்தியம் இல்லை ..கேக்க நல்லா இருக்கும் , ஆனால் வாழ்க்கைக்கு ஒத்து வருமா என்று தெரியாது " என்று தள்ளி வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

முதலில் தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்று அறிய வேண்டும். சூழ்நிலையை அறிந்தால் அல்லவா நம்மை அறிய முடியும்.

பறவைகள் கத்துகின்றன. தயிர் கடையும் சத்தம் கேட்கிறது. நகைகள் ஒன்றோடு ஒன்று உரசும் சப்த்தம் கேட்கிறது.

இதெல்லாம் தேவை இல்லாத சத்தங்கள். டிவி செய்திகள் போல. எங்கோ யாரோ யார் கூடவோ ஏதோ செய்தார்கள் என்றால் அதை ஏன் நேரம் செலவழித்து கேட்க வேண்டும். அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள்  உட்கார்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள். விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

இது ஒரு வகை சத்தங்கள்.

இன்னொரு புறம், வாட்ஸாப்ப், youtube , instagram , facebook என்று இடைவிடாத சத்தங்கள். அதையும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த சத்தங்களினால்  ஏதாவது ஒரு பலன் உண்டா என்றால் ஒன்றும் இல்லை.

அவற்றையும் தாண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல விஷயங்கள் நடக்கின்றன.

இம்மைக்கும், மறுமைக்கும் நன்மை தரும் செய்திகள் இருக்கின்றன. அவற்றை கேட்க வேண்டும்.

ஆண்டாள் கையாளும் சொற்களைப் பாருங்கள்:

- பறவைகள் பேசும் பேச்சு - அரவம் (ஓசை)
- தயிர் கடையும் ஓசை - தயிரரவம்
- கேசவனை பாடவும் - கேசவனை பற்றி சொல்லும் போது அது அரவம் இல்லை, பாடல்.

இவற்றை எல்லாம் கேட்காமல் படுத்து உறங்குகிறாயே "பேய் பெண்ணே" என்கிறாள்.

பேயின் குணம், பிடித்தால் விடாது. பேய் பிடித்தவர்கள் என்று சொல்லுவதை கேட்டு இருப்பீர்கள்.

சிலர் தான் கொண்டதே சரி என்று இருப்பார்கள். அது பேய் குணம். ஆராய வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்தது மட்டும்தான் சரி என்று நினைப்பது பேய் குணம்.

மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வா, என் பாவாய் என்று அழைக்கிறாள்  ஆண்டாள்.

தேவை இல்லாததை கேட்பதை நிறுத்த வேண்டும். நம் வாழ்க்கை நல்ல சொற்களினால், இசையால், உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும் பேச்சுக்களால்  நிறையட்டும்.

தேவை இல்லாத குப்பைகளை மண்டைக்குள் போட்டு திணிப்பானேன்?

முதலில், மண்டைக்குள் இருக்கும் குப்பைகளை அள்ளி வெளியே போடுங்கள்.

இனி குப்பை சேர்ப்பதில்லை என்று முடிவு செய்யுங்கள்.

நல்லதை மட்டுமே சேர்ப்பது என்று முடிவு செய்யுங்கள்.

வாழ்வு சிறக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/01/blog-post.html





Monday, December 31, 2018

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை



ஆண்டாள், தன்னுடைய தோழிகளை ஒவ்வொருவராக எழுப்பி கண்ணனை காண அழைத்துக் கொண்டு போகிறாள்.

இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது. கோவிலுக்குப் போகிற வழியில் தோழிகளை கூட்டிக் கொண்டு போகிறாள். இது ஒரு பெரிய விஷயமா? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இதைப் படிப்பதால் நமக்கு என்ன பயன். படிக்க எளிமையாக இருக்கிறது. அதைத் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும்.

ஒன்றும் இல்லாத பாடல்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம் எழுதும் பாடல்கள் ஒரு சில மாதங்கள் கூடத் தங்குவது இல்லை.

அப்படி என்றால், இந்தப் பாடல்களில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.


இந்தப் பாடல்களில் இலயிக்க இலயிக்க அது நம்மை எங்கெங்கெல்லாமோ இழுத்துக் கொண்டு போவதை நாம் உணர முடியும்.

பாடல்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்

புள்ளும் = பறவைகளும்
சிலம்பினகாண் = சிலம்பு போல் சப்தித்தன
புள்ளரையன் = பறவைகளின் தலைவன், கருடன் 
கோயிலில் = கோவிலில்
வெள்ளை = வெண்மையான 
விளிசங்கின் = விளிக்கின்ற, சப்திகின்ற சங்கின் 
பேரரவம் = பெரிய சப்தத்தை 
கேட்டிலையோ = கேட்கவில்லையோபிள்ளாய்! எழுந்திராய் = பிள்ளை போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய் 
பேய்முலை நஞ்சுண்டு = பூதகியின் நஞ்சை உண்டு 
கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி
சகடம் = சக்கரம்
கள்ள சகடம் = கெட்ட (வழியில் செல்லும் )சக்கரம்
கலக்கழிய = அந்த வழியில் சென்று அழியாமல்
கால் ஓச்சி = ஓச்சி என்றால் ஆளுதல் என்று பொருள். கோல் ஓச்சி என்றால் அரசு ஆளுதல்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
வெள்ளத்து = வெள்ளம் போல் உள்ள பாற்  கடலில்
அரவில் = பாம்பின் மேல்
துயில் = உறங்கிய
அமர்ந்த = இருந்த
வித்தினை = விதையை, மூலத்தை
உள்ளத்துக் கொண்டு = உள்ளத்தில் கொண்டு
முனிவர்களும் யோகிகளும் = முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து = அரக்க பறக்க அல்ல, மெல்ல எழுந்து
அரியென்ற பேரரவம் = அரிஎன்ற உச்சரிக்கும் ஒலி
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

தூங்குவது யார் ? ஆயர்பாடி பெண்கள் அல்ல. நாம் தான்.

நாம் எங்கே தூங்குகிறோம். விழித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இதோ இதைப் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நாம் எப்படி தூங்குவது ஆகும்?

விழித்து இருந்தால் எல்லாம் தெரியும் அல்லவா? எதையும் தெளிவாக பார்க்க முடியும் அல்லவா? தூங்கும் போது ஒன்றும் தெரியாது. கனவில் வேண்டுமானால் தெரியலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மை போல இருக்கும். விழித்துக் கொண்டால் கனவில் கண்டது உண்மை அல்ல என்று தெரிந்து போகும் அல்லவா. விழித்துக் கொள்ளாதவரை கனவுதான் உண்மை என்று நாம் இருப்போம். 

நாம் விழித்துக் கொண்டிருந்தாலும் கனவு கண்டு கொண்டுதான் இருக்கிறோம். 

நாம் பெரிய ஆள் என்று, நிறைய படித்தவர்கள் என்று, அழகானவர்கள் என்று, நல்லவர்கள் என்று, நல்லது செய்கிறோம் என்று, இறந்த பின் சுவர்க்கம் போவோம் என்று, பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்று, டிவி இல், செய்தித் தாளில் வருவது எல்லாம் உண்மை  என்று ஆயிரம் கனவுகளோடு நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறோம்.

நாம் யார் என்றே நமக்குத் தெரியாது. அப்புறம் அல்லவா மற்றவை எல்லாம் தெரிய. 

விழித்துக் கொள்ளச் சொல்வது , தன்னைத் தான் அறிய. self realization 



ஆண்டாள் என்ன சொல்ல வருகிறாள் ?

பறவைகள் கத்துகின்றன......சங்கின் ஒலி கேட்கிறது, முனிவர்களும் யோகிகளும் அரி என்று  ஓதுகிறார்கள்...என்ன அர்த்தம்.

இயற்கையை, இந்த உலகை நாம் அப்படியே நேரடியாக உணர வேண்டும்.

நாம் இந்த உலகை நாம் நேரடியாக அறிவது இல்லை.  அதற்கு ஒரு சாயம் பூசுகிறோம்.

இது இந்தியா, இது பாக்கிஸ்தான்,
இவன் ஹிந்து, இவன் கிருத்துவன்,
இவன் நல்லவன், இவன் கெட்டவன்
இவன் படித்தவன், இவன் படிக்காதவன்
இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்
செல்வன், ஏழை


என்று ஆயிரம் பாகுபாடுகளோடு பார்க்கிறோம்.  உலகை இந்த பாகுபாடுகள் இல்லாமால்  பார்க்க முடியுமா ? வேறுபாடு இல்லாத ஒரு உலகை நம்மால் உணர முடியுமா ?

பறவைகளின் ஒலி , சங்கின் சப்தம், முனிவர்களின் வேத கோஷம் அனைத்துக்கும் அடி நாதமாய் விளங்கும் அந்த நாதத்தை அறிய முடியுமா ?

சப்தங்கள் வேறு. நாதம் ஒன்று.

"துயில் அமர்ந்த வித்தினை"

அது என்ன துயில் அமர்வது?

தூக்கம் வந்தால் தூங்க வேண்டியது தானே?

தூக்கம் என்றால் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஒரே ஒரு வகை தூக்கம் தான்.

தூக்கத்தில் பல வகை உண்டு.

அவை என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_31.html

Saturday, December 29, 2018

திருப்பாவை - தீயினில் தூசாகும்

திருப்பாவை - தீயினில் தூசாகும் 



நாம் பல நல்ல காரியங்களை செய்ய முனையும் போது ஏதோ ஒரு தடங்கல் வந்து சேர்த்திருக்கும். ஏதோ ஒண்ணு தட்டிப் போகும். இது நமக்கு மட்டும் நடப்பது அல்ல.

நாள், கிழமை, முகூர்த்தம் எல்லாம் பார்த்து, வசிட்டன் குறித்த பட்டாபிஷேகமே இராமனுக்கு தட்டிப் போனது என்றால் நம் ஊரு பஞ்சாங்கம், ஜோசியம் எல்லாம் என்ன செய்வது.

முடி சூட்டு தள்ளிப் போனது போகட்டும், இருக்கிற எல்லாவற்றையும் இழந்து, மர உரி உடுத்து, காட்டுக்குப் போனான். நாள் குறிக்கச் சொன்ன தசரதன் மாரடைப்பால் மாண்டு போனான்.

ஏன் இவ்வாறு நிகழ்கிறது ? இதற்கு என்ன காரணம் ?

ஆண்டாள் கூறுகிறாள் பதில்.

எல்லாம் வினை.

தசரதன் செய்த வினை. யானை என்று நினைத்து ஷ்ரவணன் என்ற அந்தணப் பையனை கொன்றதால் வந்த வினை.

"நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை மைந்த விதியின் பிழை" என்பான் இலக்குவனிடம் இராமன்.

விதி. செய்த வினை.

கோபியர்கள் குளிக்கும் போது அவர்கள் ஆடைகளை கவர்ந்து அவர்களை சங்கடப் படுத்தியதால், பின்னொரு நாள் ஆற்றில் குளிக்கும் போது தன் கீழ் ஆடை  ஆற்றில் போக தவித்து நின்றான் கண்ணன். அவன் செய்த வினை.

அப்படி ஆற்றில் தவித்து நின்ற கண்ணனுக்கு தன் சேலையில் இருந்து ஒரு முழத்தை கிழித்து கொடுத்து மானம் காப்பாற்றினாள் பாஞ்சாலி. பின்னொரு நாள் அவளுக்கு சபையில் சேலை பறி போகும் போல் இருந்த போது , முழ சேலைக்கு பதிலாக கோடி கோடியாக சேலை கொடுத்தான் கண்ணன். அது அவள் செய்த நல் வினை.


விதி யாரையும் விடாது.

அப்படி என்றால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாதா? எல்லாம் விதி விட்ட வழி தானா என்றால், இல்லை. அந்த விதியையும் மாற்றலாம் என்கிறாள் ஆண்டாள்.

செய்த வினை, செய்கின்ற வினை எல்லாம் தீயில் போட்ட தூசு போல இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்கிறாள்.

அதுக்கு என்ன செய்ய வேண்டும் ?

பாடல்


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


பொருள்



மாயனை   = மாயங்கள் செய்பவனை

மன்னு வடமதுரை மைந்தனைத்  = என்றும் இருக்கும் வட மதுரையின் மைந்தனை



தூய பெருநீர் யமுனைத் துறைவனை   - தூய்மையான நீரைக் கொண்ட யமுனை ஆற்றின் துறையில் உறைபவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்  - ஆயர் குலத்தில் தோன்றும் அழகிய விளக்கை


தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத் - தான் பிறந்ததால் தாய்க்கு பெருமை தேடித் தந்தவனை

தூயோமாய்  - தூய்மை உடையவர்களாய்

வந்து நாம் = நாம் வந்து

தூமலர்தூ வித்தொழுது = மலர் தூவி தொழுது

வாயினால் பாடி = வாயினால் பாடி

மனத்தினால் சிந்திக்கப் = மனதில் சிந்திக்க

போய பிழையும் = முன்பு செய்த பாவங்களும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது செய்த பாவங்களும்

தீயினில் தூசாகும் = தீயில் போட்ட துரும்பு போல் ஆகும்

செப்பேலோர் எம்பாவாய். = சொல்லுவாய் என் பாவையே


இறைவனைத் தொழுதால் முன்பு செய்த பாவங்களும், இப்பிறவியில் செய்த பாவங்களும் தீயில் போட்ட தூசு போல எரிந்து சாம்பலாகும்.

அட, இது ரொம்ப easy யா இருக்கே. செய்றதெல்லாம் செஞ்சிட்டு, இறைவனை தொழுதால் போதுமா ? எல்லா பாவங்களும் போயிருமா ? அப்படினா இன்னும் கொஞ்சம் பாவம் செஞ்சிட்டு ஒண்ணா போய் தொழுதுருவோம்...அப்படின்னு சில பேர் நினைக்கலாம்.

தொழுவதற்கு ஆண்டாள் சில நிபந்தனைகள் வைக்கிறாள்.

முதலில் "தூயோமாய்".

செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி, இனி செய்வது இல்லை என்று உறுதி பூண்டு, மனதில் கூட பாவங்களை நினையாமல் இருக்க வேண்டும். அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். அது முதல் நிபந்தனை.

இரண்டாவது, நம்ம கிட்ட நிறைய பணம் இருக்கு. சில பல இலட்சங்களை உண்டியலில் போட்டு விட்டால் போதுமா ? ஒரு வைர கிரீடம், ஒரு தங்க சங்கிலி, ஒரு tube light வாங்கிப் போட்டு விட்டால் போதுமா ? பணம் எல்லாம் நடக்காது. இறைவன் எளிமையை விரும்புபவன்.

"ஏழை பங்காளனை பாடேலோர் எம்பாவாய் "

என்பார் மணிவாசகர். ஏழையிடம் பங்கு போட என்ன இருக்கிறது, வறுமையைத் தவிர ?

ஆண்டாள் சொல்கிறார், "தூ மலர் தூவி"

மலர் போதும். பணம் காசு வேண்டாம்.

"வாயினால் பாடி" - வாயால் தான் பாட முடியும். அது என்ன வாயினால் பாடி ?  பொறுங்கள். அடுத்த வரியையும் சேர்த்து பார்த்துவிடலாம்.

"மனதினால் சிந்திக்க"

மனம் + வாக்கு + காயம் என்பார்கள். திரிகரண சுத்தி.

பூ போடுவது - கை - உடல்

பாடுவது = வாய்

சிந்திப்பது = மனம்

மூன்றும் ஒன்றாக செயல் பட வேண்டும்.


கையொன்று செய்ய விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக
நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று
சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

என்பார் பட்டினத்தார். ஐந்து புலன்களும் ஒன்ற வேண்டும். அப்படி ஒன்றாகி வணங்கினால்

'போய பிழை" = முன்பு செய்த பிழையும்

புகுதருவான் நின்றனவும் = இப்போது வந்து நிற்கும் பிழைகளும்

தீயில் தூசாகும்.

ஏன் தீயில் தூசாகும் ? ஏன் நீரில் கரைந்து போகும் என்று சொல்லவில்லை ?

நீரில் கரைந்தாலும் அது நீர் வற்றிய பின் எது கரைந்ததோ அது மீண்டும் தெரியும்.

தீயில் விட்டு பொசுக்கி விட்டால் இருந்த இடம் தெரியாமல் போகும்.

"அவன் தாள் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கையெழுத்தே "

என்பார் அருணகிரிநாதர்.

தலை எழுத்து மாறும். செய்த வினை அழியும்.

செய்து பாருங்கள். ஆண்டாள் என்ன பொய்யா சொல்லப் போகிறாள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_29.html

Wednesday, December 26, 2018

திருப்பாவை - உலகினில் பெய்திடாய்

திருப்பாவை - தெய்வ நம்பிக்கை மூட நம்பிக்கையா ?



தெய்வ நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கையா ? ஒரு அறிவியல் பார்வை இல்லாதர்வர்கள் தான் தெய்வத்தை நம்புவார்களா ? நம்பிக்கை என்பதே ஒரு சோம்பேறிகளின் இருப்பிடமா? நம்புவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்ய வேண்டாம் ? சும்மா தலையை தலையை ஆட்டினால் போதும்...அப்படித்தான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆண்டாள் ஒரே பாசுரத்தில் மிகத் தெளிவான அறிவியல் பார்வையையும் , ஆன்மீகப் பார்வையையும் கொண்டு வருகிறாள். இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள்.

முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்.

பாடல்


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


பொருள்

எளிய பாடல் தான். ஆண்டாளின் அனைத்து பாடல்களும் மிக எளிமையானவைதான்.

ஆழி மழைக்கண்ணா! = ஆழி என்றால் கடல். கடல் போல் மழை நீரைத் தரும் வருண தேவனே.

ஒன்று நீ கைகரவேல் = கரத்தல் என்றால் மறைத்தல். உடையது கரவேல் என்பாள் ஒளவை.  இங்கே, நீ எதையும் மறைக்காதே

ஆழியுள் புக்கு = கடலில் புகுந்து

முகர்ந்துகொ டார்த்தேறி = நீரை மொண்டு கொண்டு, ஆர்த்து ஏறி என்றால் சப்தம் போட்டுக் கொண்டு  மேலே சென்று

ஊழி முதல்வன் = ஊழி காலம் தொட்டு இருக்கும் முதல்வன் (திருமால் )

உருவம்போல் = உருவத்தைப் போல

மெய்கறுத்து = உடல் கருமை வண்ணம் கொண்டு

பாழியந் தோளுடைப் = பாழி என்றால் அகன்ற என்று பொருள். அம் தோள் என்றால் அழகிய தோள்.

பற்பநா பன்கையில் = பத்ம நாபன் கையில். தாமரை மலரை நாபிக் கமலத்தில் கொண்டவன். அவன் கையில் உள்ள

ஆழிபோல் = சக்கரம் போல

மின்னி = மின்னல் அடித்து

வலம்புரிபோல் நின்றதிர்ந்து = வலம்புரி சங்கு போல நின்று அதிரும் படி சப்தம் செய்து

தாழாதே = தாமதம் செய்யாமல்

சார்ங்கம் = இராமனின் வில்

உதைத்த சரமழைபோல் = புறப்பட்ட அம்பு மழை போல

வாழ = வாழ

 உலகினில்  = உலகினில்

பெய்திடாய் = பெய்திடுவாய்

நாங்களும் = நாங்களும்

மார்கழி நீராட = மார்கழியில் நீராட

மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்! = மகிழ்ந்து ஏற்றுக் கொள்வாய், என் பாவையே

மழை என்பது ஏதோ அதிசயம் அல்ல. அது நீர் ஆவியாகி , மேலே சென்று, மேகமாகி, கறுத்து , பின் நீராக பொழிவது தான் மழை. இது ஒரு அறிவியல் நோக்கு. பார்வை. நவீன விஞ்ஞானம் இதை கண்டு சொல்வதற்கு பல ஆண்டுகள் முன்பே ஆடல் சொல்லி விட்டாள்.

மழை எப்படி பொழிகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான விடை.

நீர் ஆவியாகி மழையாகப் பொழிகிறது. அதிலும் ஆண்டாள் குறிப்பாக சொல்கிறாள். "ஏ வருண பகவானே, நீ பாட்டுக்கு ஊருக்குள்ள இருக்கிற கிணறு , குளம் , குட்டை, ஏரி இதில் உள்ள நீரை ஆவியாக்கி கொண்டு போய் மழையாகப் பெய்யாதே . அதில் என்ன பலன். இருக்கிற நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் அதையே மழையாகத் தருவதில்? அதனால, கடல்ல போய் நீரை எடுத்துக் கொண்டு வந்து மழையாகப் பொழி" என்கிறாள்.


சரி, மழை பொழிகிறது. மேகம் எல்லாம் மழை பொழிந்தவுடன் காலியாகி விடும். அப்பறம் என்ன செய்வது ?

ஆண்டாள் வருணனிடம் சொல்கிறாள்..."ஏதோ வந்தோம், பெய்தோம் , போனோம் என்று இருக்கக் கூடாது. நீ எப்படி பெய்ய வேண்டும் தெரியுமா ...இராமனின் அம்பு போல எடுக்க எடுக்க குறையாத அம்பு போல நீ பெய்ய வேண்டும் "

"சார்ங்கம் உதைத்த சரமழைபோல்"

சர மழை போல பெய்ய வேண்டும்.

அதுதான் சாக்கு என்று வருணன் விடாமல் பெய்தால் , ஊரே வெள்ளக் காடாகி விடும் அல்லவா?

அதையும் யோசித்து இரண்டு விஷயம் சொல்கிறாள் ஆண்டாள்

ஒன்று, கருணையோடு பெய்ய வேண்டும். இராமன், நிறம் கறுப்பு. "வருணனே , நீ மழை பொழிந்த பின் உன் மேகங்கள் கறுமை மாறி வெண்மையாகி விடுகின்றன. அப்படி இருக்கக் கூடாது. எப்போதும் இராமன் மாதிரி கறுப்பாக இருக்க வேண்டும்." அப்படி என்றால், எப்போதும் கருணையோடு தேவைப் படும் போதெல்லாம் பெய்ய வேண்டும்.

இராமனின் அம்புகள் பகைவர்கள் மேல் பாய்ந்து அவர்களை கொன்றது.  அது போல  மழை பெய்ய வேண்டுமா என்றால், இல்லை.


"வாழ உலகினில் பெய்திடாய்"

சாவதற்கு இல்லை, வாழ்வதற்கு பெய்வாய் என்கிறாள்.

ஒரு புறம் அறிவியல் சார்ந்த ஒரு நோக்கு.

இன்னொரு புறம்  ஆன்மீகப் பார்வை.

இரண்டையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாள் ஆண்டாள்.

அறிவியல் வேறு, ஆன்மீகம் வேறு அல்ல. இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று காட்டுகிறாள்.

தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் ஆன்மீகத்தை ஒதுக்கத் தேவை இல்லை.

ஆன்மீகத்தில் உள்ளவர்கள், அறிவியலை வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை.

இரண்டையும் அரவணைத்துக் கொண்டு போகலாம் என்று காட்டுகிறாள் ஆண்டாள்.

ஒன்றுக்கொன்று முரண் அல்ல. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு அறிவியல் பார்வை இருப்பது ஒன்றும் தவறு அல்ல. அதே போல் அறிவியலில் இருப்பவர்களும் ஆன்மீக அனுபவத்தை தேடுவதில், அதை அடைவதில் தவறு இல்லை.

அது மட்டும் அல்ல, ஆண்டாளின் பரந்த பார்வையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு எல்லாமே இறை வடிவாகத்தான் தெரியும்.

மழையின் ஒவ்வொரு அங்கமும் இறை வடிவாகவே பார்க்கிறாள்.

சக்கரம் போல மின்னி

சங்கு போல ஆர்ப்பரித்து

அம்பு போல பாய்ந்து

என்று எல்லாமே அவன் வடிவாகவே அவளுக்குத் தெரிகிறது.

இயற்கையும், இறைவனும் ஒன்றென காண்கிறாள் ஆண்டாள்.

அறிவியலும் ஆன்மீகமும் இயற்கையின் கூறுகள் தானே.

இறைவன் என்பது ஒரு ஆள் அல்ல. இந்த இயற்கைதான் இறைவன். எங்கும் நிறைந்த இந்த இயற்கை தான் இறைவன்.  மழை ஒரு உதாரணம்.

மின்னல் - ஒளி - கண்ணால் காண்பது.

இடி - ஒலி - காதால் கேட்பது

மழை - குளுமை - உடலால் உணர்வது

மழை மண்ணில் விழும் போது எழும் மண்வாசம் - மூக்கால் உணர்வது

மழை தரும் பயிர்கள் - உணவாகி நாக்குக்கு சுவை தருவது

இப்படி இயற்கை, ஐம்புலன்களுக்கும் அனுபவம் தருவது. அது தான் இயற்கை. அது தான் இறை.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப் பாருங்கள். கண் மூடி இரசித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_26.html

Friday, December 21, 2018

திருப்பாவை - ஓங்கி உலகளந்த

திருப்பாவை -  ஓங்கி உலகளந்த 


பாடல்


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்

ஓங்கி = உயர்ந்த

உலகளந்த =உலகை அளந்த

உத்தமன் பேர்பாடி = உத்தமனின் பேரைச் சொல்லிப் பாடி

நாங்கள் = நாம் எல்லாம்

நம்பாவைக்குச் = நம் பாவை நோன்பில்

சாற்றி நீராடினால் = சாற்றி நீர் ஆடினால்

தீங்கின்றி = தீமை இல்லாமல்

நாடெல்லாம் = நாடெங்கும்

திங்கள்மும் மாரி பெய்து = மழை மாதம் மூன்று முறை பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் = ஓங்கி வளரும் பெரிய நெல் பயிர்கள்

ஊடு = ஊடே செல்லும்

கயல் உகளப் = கயல் (மீன்) நீந்தி விளையாட

பூங்குவளைப் போதில் = குவளை மலரின் தளிரில்

பொறிவண்டு கண்படுப்ப = வண்டுகள் கண் துயில

தேங்காதே = தயங்காமல்

புக்கிருந்து = உள்ளிருந்து

சீர்த்த முலைபற்றி = சிறந்த முலைகளை பற்றி

வாங்கக் = வாங்கும் போது

குடம்நிறைக்கும் = குடங்களை நிறைக்கும்

வள்ளல் பெரும்பசுக்கள் = வள்ளலான பெரும் பசங்கள்

நீங்காத செல்வம் = நீங்காத செல்வம்

நிறைந்தேலோ ரெம்பாவாய்! = நிறைந்தேலோர் எம்பாவாய்

மற்றுமொரு எளிய பாடல்.

தவறு செய்யாதவர்கள் யார் இந்த உலகில்? எல்லோரும் தவறு செய்கிறோம். பாவம் செய்கிறோம். நம் சக்திக்கு ஏற்றவாறு, நம் பாவங்கள் இருக்கின்றன.

மகாபலியிடம் அளவற்ற ஆற்றல் இருந்தது. அனைத்து உலகையும் கட்டி ஆண்டான். தான் தான் பெரிய ஆள் என்ற ஆணவம் அவன் மனதில் குடி கொண்டது. நல்லவர்களை துன்புறுத்தினான். அவன் ஆணவத்தை அகற்றி அவனுக்கு நல் அறிவு புகட்டினான் குள்ள உருவத்தில் வந்த திருமால்.

தவறு செய்தவனை அழிக்கவில்லை. தன் திருவடியை அவன் தலை மேல் வைத்து அவனை ஆடிக்கொண்டான்.

 எனவே,

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி"

என்கிறாள் ஆண்டாள்.   மகாபலிக்கு அவன் தவறுகளை பொறுத்து அருள் தந்தது போல  நமக்கும் அருள் புரிவான் என்பது ஒரு பொருள்.

அவன் திருவடிகளில் சரண் அடைந்து விட்டால், அவன் பார்த்துக் கொள்வான் என்பது இன்னொரு பொருள். சரணாகதி தத்துவம்.

அப்படி நாம் சரண் அடைந்து விட்டால், நமக்கு  அல்ல, இந்த ஊருக்கே நன்மை தரும் மழை பொழியும்.

மழை இருக்கிறதே அது அதிகமாக பெய்தாலும் தீமை தான், பெய்யாவிட்டாலும் தீமை தான். அதைத்தான் ஆண்டாள் சொல்கிறாள்

"தீங்கின்றி மும்மாரி பெய்து" என்று.

நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று சொல்லுவதைப் போல, நாம் இறைவன் திருவடிகளில் சரண் அடைந்தால் நாட்டில் உள்ள எல்லோருக்கும் மழை பொழியும்.

குழந்தைக்கு தாய் பால் தருவாள். அவள் பால் தராவிட்டால், அது மார்பில் கட்டிக் கொள்ளும். மிகுந்த வேதனையைத் தரும். சில சமயம் அதை அறுவை சிகிச்சை மூலம் தான் சரி செய்ய முடியும். தாய் பால் தருகிறாள் என்றால் அவளுக்கு வேறு வழி  இல்லை. அது போல இறைவனுக்கும் நமக்கு அருள் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

"சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்"

முலையைப் பற்றினால் போதும், குடம் குடமாய் பால் தரும். அது போல, இறைவனை அண்டினால் போதும், கேட்க வேண்டாம், அவன் பாட்டுக்கு தந்து கொண்டே இருப்பான்.

அது மட்டும் அல்ல, பசு தன்னுடைய கன்று குட்டிக்கு மட்டும் அல்ல, வீட்டில் உள்ளவர்களுக்கும் பால் தரும். நம் வீட்டுக்கு பால் வருகிறது. நாம் பசு வளர்ப்பதில்லை.

அது போல, நல்லவர்கள், பெரியவர்கள், சான்றோர், ஆச்சாரியர்கள் இறைவனை அண்டி  அருள் பெறும் போது, அந்த அருள் நமக்கும் வந்து சேரும். பசுவின் பால் கன்று குட்டிக்கும், மற்றவர்களுக்கும் சென்று சேர்வதைப் போல.

இந்த செல்வம் இருக்கிறதே, அது பாட்டுக்கு வரும். சொல்லாமல் கொள்ளாமல் போய் விடும். எனவே தான் அதற்கு "செல்வம்" என்று பெயர் வைத்தார்கள். செல்வோம் என்று சொல்லாமல் சொல்கிறது.

இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் ஒரு நாள் நம்மை விட்டு செல்லக் கூடியவை.

இறை அருளால் கிடைப்பது "நீங்காத செல்வம்" என்கிறாள். ஒரு முறை வந்து விட்டால், பின் நீங்கவே நீங்காது.

அப்படி நீங்காத செல்வம் கொஞ்சம் அல்ல, "நிறைந்தேலோர் எம்பாவாய்" என்று அருளுகிறாள் ஆண்டாள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_21.html

Thursday, December 20, 2018

திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள்

திருப்பாவை - வையத்து வாழ்வீர்காள் 



பாடல்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!


பொருள்

வையத்து  = உலகில்

வாழ்வீர்காள்! = வாழ்பவர்களே

நாமும் = நாமும்

நம் பாவைக்கு = நம்முடைய பாவை நோன்புக்கு

செய்யும் கிரிசைகள் = செய்ய வேண்டிய காரியங்களை

கேளீரோ!  = கேட்க மாட்டீர்களா

பாற்கடலுள்  = பால் கடலில்

பையத் = மெல்ல

துயின்ற = உறங்கிய

பரமனடி பாடி = பரமன் அடி பாடி

நெய்யுண்ணோம்  = நெய் உண்ண மாட்டோம்

பாலுண்ணோம்  = பால் உண்ண மாட்டோம்

நாட்காலே = அதிகாலையில்

நீராடி = நீராடி , குளித்து

மையிட்டெழுதோம் = கண்ணுக்கு மை இட்டுக் கொள்ள மாட்டோம்

மலரிட்டு = கூந்தலில் மலரை

நாம் முடியோம் = நாம் சூடிக் கொள்ள மாட்டோம்

செய்யாதன செய்யோம் = செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம்

தீக்குறளைச் = தீய குறளை

சென்றோதோம் = சென்று + ஓதோம்.

ஐயமும்  = ஐயமும்

பிச்சையும் = பிச்சையும்

ஆந்தனையும் = ஆகும் அளவும்

கைகாட்டி = கையால் செய்து

உய்யுமாறெண்ணி  = உய்யுமாறு எண்ணி

உகந்தேலோரெம்பாவாய்! = விருப்பத்துடன் ஏற்று செய்வோம், என் பாவையே


மிக எளிய பாசுரம். ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது.

 ஒவ்வொன்றாக பார்ப்போம்.


வையத்து வாழ்வீர்காள்! -  முதலில் ஆயர்பாடி பெண்களை மட்டும் அழைத்தாள். அது என்ன ஆயர்பாடி மட்டும் என்று நினைத்தாளே என்னவோ, உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள்.

யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்று திருமூலர் கூறிய மாதிரி..உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள்.

இறைவன் கருணை நமக்கு மட்டும் கிடைத்தால் போதாது, எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த மனம்.

அடுத்தமுறை கோவிலுக்குப் போகும் போதோ, அல்லது வேறு ஏதாவது நல்ல காரியம் செய்யும் போதோ இன்னும் கொஞ்ச பேரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அந்த பாற்கடல், யார் குடித்தும் வற்றி விடாது.


"நாமும் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் கேளீரோ! "

நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டால் அதை நாலு பேருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் பயன் பெற்றதைப் போல மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும். இங்கே ஆண்டாள்,  இறைவனை அடையும் வழிகள் என்ன என்று சொல்கிறாள்.

எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று இரண்டு பட்டியல் தருகிறாள்.

அறம் என்றால் என்ன ? அறம் என்பது என்ன என்று சொல்லுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதை ஒரே வரியில் சொன்னார் பரிமேலழகர்.

"வேதம் முதலிய நூல்களில் சொன்னவற்றை செய்வதும், அவை விலக்க வேண்டும் என்று சொன்னவற்றை விலக்குவவதும் அறம் "

என்றார்.

அதாவது, நல்லனவற்றை செய்வதும் அறம். தீயனவற்றை செய்யாமல் இருப்பதும் அறம்.

உதாரணமாக, தானம் செய்வதும், ஏழைகளுக்கு உதவுவதும் அறம் .

அதே போல், பொய் சொல்லாமல் இருப்பது, கொலை களவு செய்யாமல் இருப்பதும் அறம்.  நீங்கள் இதுவரை கொலை செய்யாமல் இருந்தீர்கள் என்றால், நீங்கள் அற வழியில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.

அறம் பொருள் இன்பம் என்று தனது நூலை வகுத்த வள்ளுவர் , அறத்துப் பாலில் எது செய்ய வேண்டும், எது செய்யக் கூடாது என்று சொல்கிறார்.

கல்வி, கேள்வி,  ஊருடன் ஒத்து வாழ்தல், அன்பு , அருள், என்று செய்ய வேண்டியதை சொன்ன வள்ளுவர்,

கள்ளுண்ணாமை, வெகுளாமை, சிற்றினம் சேராமை என்று செய்யக் கூடாதவற்றையும் எடுத்துக் கூறுகிறார்.

அதே போல, ஆண்டாளும், செய்ய வேண்டியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் கூறுகிறாள்.


"பாற்கடலுள் பையத்துயின்ற " - இந்த பைய துயின்ற சொல் தொடருக்கு பின் வருவோம்.

செய்ய  வேண்டியவை

"நாட்காலே நீராடி" = அதி காலையில் நீராடி

"பரமனடி பாடி"  = இறைவன் திருவடிகளை பாடி

"ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி" = நம்மை விட உயர்ந்தவர்களுக்குத் தருவது ஐயம் எனப்படும். துறவிகளுக்கு, ஆச்சாரியனுக்கு, சான்றோருக்குத் தருவது பிச்சை அல்ல, அது ஐயம் எனப்படும்.

நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு அதாவது உடல் ஊனம் உற்றவர்கள்,  நோய்வாய்ப் பட்டவர்கள் ...போன்றோருக்கு உதவுவது பிச்சை எனப்படும்.

இரண்டையும் செய்ய வேண்டும்.

எவ்வளவு செய்ய வேண்டும் என்றும் ஆண்டாள் கூறுகிறாள். ஆகும் அளவு. எவ்வளவு முடியுமோ.  இலட்ச கணக்கில் பணம் இருக்கும்,உடல் ஊனம் உற்றவருக்கு ஐம்பது பைசா போடுவார்கள். ஒரு பத்து உரூபாய் கொடுத்தால் ஒண்ணும் குறைந்து விடாது. கொடுக்க மனம் வராது.


முடிந்தவரை செய்யுங்கள் என்கிறாள் ஆண்டாள்.

செய்யக் கூடாதது:

நெய்யுண்ணோம் =  நெய் உண்ணோம்

பாலுண்ணோம் = பால் உண்ணோம்

அது என்ன நெய்யும் பாலும் மட்டும் உண்ண மாட்டேன் என்கிறாள். மத்தது எல்லாம் ஒரு கட்டு கட்டலாமா?

அது அல்ல அர்த்தம். ஆயர் பாடியில் நெய்யும் பாலும் பஞ்சமில்லாமல் இருக்கும். எல்லோரும் விரும்பி உண்பார்கள். விருப்பமானவற்றை தள்ளி வைப்போம் என்கிறாள். அதாவது புலன்கள் போகின்ற பக்கம் எல்லாம் போகாமல், அவற்றை அடக்கி இறைவனை நினைப்போம் என்கிறாள்.

சில பேர், காலையில் எழுந்து ஒரு காப்பி குடித்த பின் தான் பூஜை முதலியவற்றை செய்வார்கள். நாக்கு.


மையிட்டெழுதோம் =கண்ணுக்கு மை இட மாட்டோம்

மலரிட்டு நாம் முடியோம் = கூந்தலுக்கு மலர் சூடிக் கொள்ள மாட்டோம்

இறைவன் புற அழகை விரும்புவது இல்லை. அகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறாள். கோவிலுக்குப் போகும் போது கூட , பட்டுப் புடவை, வைர அட்டிகை, கொஞ்சம் பௌடர் , கொஞ்சம் லிப்ஸ்டிக், மேட்சிங் கைப் பை (handbag ) என்று மினுக்கிக் கொண்டு செல்பவர்கள் இருக்கிறார்கள். தலையில் பூ கூட வைத்துக் கொள்ள மாட்டோம் என்கிறாள்.

அதாவது, புற அழகு முக்கியம் அல்ல. மனமும், அறிவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பொருள்


செய்யாதன செய்யோம்  =  பெரியவர்கள், நல்லவர்கள், சான்றோர் செய்யாத எதையும் நாம் செய்ய மாட்டோம். அது தானே ஒழுக்கம் என்பது. ஒழுகுதல் என்றால் மேலிருந்து கீழே வருவது. கூரை ஒழுகுகிறது என்கிறோம். அதே போல் பெரியவர்கள் செய்ததை நாம் செய்வதும், அவர்கள் செய்யாமல் இருந்ததை நாம் செய்யாமல் இருப்பதும் ஒழுக்கம் எனப்படும்.

தீக்குறளைச் சென்றோதோம் = தீயனவற்றை பேசக் கூடாது. செய்வது மட்டும் அல்ல, பேசுவதும் கூட கூடாது. எவ்வளவு பேசுகிறோம்? அரட்டை அடிக்கிறோம்.  அவற்றை நிறுத்த வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.


உய்யுமாறெண்ணி  = இதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும் ? செய்தால் தப்பிக்கலாம். இதில் இருந்து தப்பிக்கலாம்? இந்த பிறவி சுழலில் இருந்து தப்பிக்கலாம்.

உகந்தேலோரெம்பாவாய்! = இதை எல்லாம் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.  உகந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். கடமையே என்று செய்யக் கூடாது.

பூஜை செய்யும் போது உங்கள் முகம் சந்தோஷமாக இருக்கிறதா என்று எண்ணிப் பாருங்கள். ஒரு பாசுரம் படிக்கும் போது , விளக்கு ஏற்றும் போது , நாலு பூ போடும் போது மனம் மகிழ்ச்சியில் மிதக்க வேண்டும். அது தான் பூஜை.

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, இயந்திரம் போல் வாய் எதையோ முணுமுணுக்க , கை எதையோ செய்ய, மனம் எதையோ நினைக்க அப்படி செய்வது பூஜை இல்லை.

மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். விருப்பத்துடன் செய்ய வேண்டும்.

அலுத்துக் கொள்ளாமல், கோபம் கொள்ளாமல், எரிச்சல் படாமல், மகிழ்ச்சியோடு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்து பழகுங்கள்.

வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தைப் படித்துப் பாருங்கள்.

மனதில் ஒரு இனம் புரியாத இன்பம் பிறக்கிறதா இல்லையா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_20.html

Wednesday, December 19, 2018

திருப்பாவை - நமக்கே பறை வருவான் - பாகம் 2

திருப்பாவை - நமக்கே பறை வருவான் - பாகம் 2



பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_18.html



எப்படிப் போகிறாள், எப்போது போகிறாள், எதை நினைத்துக் கொண்டு போகிறாள்...

என்று போன பிளாகில் முடித்திருந்தோம்.

அதிகாலையில் நீராடி இறைவனைத் தொழப் போகிறாள். 

ஏன் அதிகாலை? ஒரு ஒன்பது பத்து மணிக்குப் போனால் என்ன? 

நமது மனம் மூன்று நிலைகளில் செயல் படுவதாக நமது இலக்கியங்கள் பேசுகின்றன. 

சாத்வீகம், தாமசம்,  ரஜோ குணம் என்ற மூன்று நிலைகளில் நம் மனம் இயங்குகின்றது. 

நான் உண்ணும் உணவு, பருகும் நீர், உடுத்தும் உடை, தட்ப வெப்ப நிலை, யாரோடு பழகுகிறோம், நம் சுவாசத்தின் வகை, என்று  இவற்றை எல்லாம் பொறுத்து நம் மனம் மாறிக் கொண்டே இருக்கும். 

நாம் கவனிப்பது இல்லை. உற்று கவனித்தால் தெரியும் நம் மனம் எந்த நிலையில் இருந்து செயல்படுகிறது என்று. 

நாம் இயந்திரம் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் நம் மனதின் நிலையை நாம் அறிவதில்லை.

நம் உள் உணர்வை கூர்மை படுத்திக் கொண்டால், நம் மனதை நாம் அறிய முடியும். 


இந்த மூன்று மன நிலையும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நாம் ஊன்றி கவனித்தால் அது தெரியும். 

இதில் சாத்வீகம் என்பது நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மன நிலை. படிப்பது,  சிந்தனை செய்வது, தொழுவது, என்று நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மன நிலை சாத்வீகம். 

அது அதிகாலையில் உச்சம் பெற்று இருக்கும். நாள் ஏற ஏற ரஜோ குணம் ஓங்கும்..பின் தாமச குணம் வரும்.

சாத்வீக நிலையில் மனம் இருக்கும் போது இறைவனை தொழ வேண்டும். 

நன்றாக கவனித்துப் பாருங்கள்...ஒரு  நாள் ...காலை ஐந்து மணிக்கு தொழுது பாருங்கள், இன்னொரு நாள் மதியம் ஒரு மணிக்கு தொழுது பாருங்கள். வித்தியாசம் தெரியும். மதியம் ஒரு மணிக்கு பிரார்த்தனை செய்தால் மனம் ஒருமுகப் படாது. 

அடுத்து,நீராடி இறைவனை தொழ செல்கிறாள் ஆண்டாள். 

சாத்வீக குணம் தூய்மையின் இருப்பிடம். வெண்மை, தூய்மை என்பன எல்லாம் அவற்றின் குணம். 

நாம் கோவிலுக்குப் போகும் போது நம் மனம் எப்படி இருக்கும்...? வீட்டுப் பிரச்சனை, பணப் பிரச்சனை, இப்போது போனால் parking கிடைக்குமா என்ற கவலை, எவ்வளவு சீக்கிரம் வர முடியும் என்ற கேள்வி, வந்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை இவற்றோடு கோவிலுக்குப் போவோம். உடல் மட்டும் கோவிலுக்குப் போகிறது மனம் எங்கெங்கோ செல்லும். 

ஆண்டாளின் மனம் நாராயணன் மேல் குவிந்து நிற்கிறது. 

அவனுடைய தாயார் (ஏரார்ந்த இளம் கண்ணி), தந்தையார் (கூர்வேல் கொடுந்தொழிலன்),  அவன் முகம் (கதிர் மதியம் போல் முகத்தான்) என்று அவளுடைய சித்தனை எல்லாம் அவன் மேல் படிந்து நிற்கிறது. 

இப்படி ஒரு மனப் பட்டு சென்றால் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்பதில் அவளுக்கு ஒரு சந்தேகமும் இல்லை. 

அடித்துச் சொல்கிறாள். 

பாடலைப் படிக்கும் போது அதில் உள்ள ஒவ்வொரு குறிப்பையும் உன்னிப்பாக கவனித்தால் பல உண்மைகள் புலப்படும். 

எந்த வேலையை செய்தாலும், அதில் மனம் இலயித்து, ஒரு முகப் பட்டு  செய்தால்  வெற்றிதான் என்று சொல்லாமல் சொல்கிறாள் ஆண்டாள். 


Tuesday, December 18, 2018

திருப்பாவை - நமக்கே பறை வருவான்

திருப்பாவை - நமக்கே பறை வருவான் 



பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்


மார்கழி திங்கள் = மார்கழி மாதத்தில்

மதிநிறைந்த = நிலவு நிறைந்த

நன்னாளால் = நல்ல நாளில்

நீராடப் போதுவீர்! = நீராடப் போகின்றவர்களே

போதுமினோ, = போவோம் வாருங்கள்

நேரிழையீர்! = உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களே

சீர்மல்கும் =செல்வம் கொழிக்கும்

ஆய்பாடிச் = ஆயர்பாடியில்

செல்வச் சிறுமீர்காள்! = செல்வ சிறுமிகளே

கூர்வேல் = கூரிய வேலைக் கொண்டு

கொடுந்தொழிலன் = கொடுமையான தொழில் செய்யும்

நந்தகோபன் = நந்தகோபனின்

குமரன் = குமரன்

ஏரார்ந்த கண்ணி = ஏர் போன்ற கூர்மையான கண்களை உடைய

யசோதை  = யசோதையின்

இளஞ்சிங்கம் = இளைய சிங்கம்

கார்மேனிச் = கரிய மேனியை உடைய

செங்கண் = சிவந்த கண்களை உடைய

கதிர் = சூரியன்

மதியம் = நிலவு

போல் = போன்ற

முகத்தான் = முகத்தை உடைய

நாரா யணனே = நாராயணனே

நமக்கே = நமக்கே

பறைதருவான் = பறை தருவான்

பாரோர் = உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும்

புகழப் = புகழும்படி

படிந்தேலோ ரெம்பாவாய்! = (நோன்பில்) படிந்து இதை ஏற்றுக் கொள்வாய்

இரண்டு சொற்களை சேர்க்கும் போது ஒரு புது எழுத்தோ அல்லது சொல்லோ வரும். இரண்டு சொற்களை ஒட்டுப் போடும் பசை போல. அந்த விதிக்கு புணர்ச்சி இலக்கணம் என்று பெயர்.

இலக்கணத்தில் அது ஒரு பெரிய பிரிவு. வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள், பண்புப் பெயர் புணர்ச்சி என்று பல விதிகள் உள்ளன.

இடைச் சொல் என்பது அவற்றுள் ஒன்று. இரண்டு சொற்கள் சேரும் பொழுது நடுவில் ஒரு எழுத்தோ சொல்லோ வந்து அந்த சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை, சிறப்பை குறிக்கும் சொல்லுக்கு இடைச் சொல் என்று பெயர்.

ஏகாரம் அவற்றுள் ஒன்று.

இரண்டு சொற்களுக்கு நடுவில் "ஏ" என்று ஒரு எழுத்து வந்து அந்த சொற்களை இணைத்து அவற்றிற்கு மேலும் பொருள் சேர்ப்பது ஏகாரம்.

நால்வரில் இராமன் சிறந்தவன்.

நால்வரில் இராமனே சிறந்தவன்.

இதில் இரண்டாவது வரும் வாக்கியத்தில் உள்ள இராமனே என்ற சொல்லில் ஏகாரம் வருகிறது. அந்த ஏகாரம் பிரி நிலை ஏகாரம் எனப்படும். மற்றவர்களில் இருந்து இராமனை பிரித்துக் காட்டுவதால்.


ஊருக்குத்தானே போகிறாய் என்ற வாக்கியத்தில் வரும் ஏகாரம் வினாப் பொருளில் வந்தது. 


அன்பே சிறந்தது என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. தேற்றம் என்றால் உறுதி என்று பொருள்.

அவள் சிரித்தால் முத்தே தோற்றுப் போகும் என்பதில் உள்ள ஏகாரம் உயர்வு சிறப்பு ஏகாரம். முத்து தோற்றுப் போகும் என்றும் சொல்லலாம். முத்தே தோற்றுப் போகும் என்றால் வேறு எதுவும் வெல்லாது என்று நாம் அறிந்து கொள்ள முடியும். 

பிச்சைக் காரனே கூட இதை வாங்கிக் கொள்ள மாட்டான் என்று சொல்லும் போது ஏகாரம் இழிவு நிலையில் வந்தது. 

இந்த பாசுரத்தில் ஆண்டாள் இரண்டு இடங்களில் ஏகாரத்தை கையாளுகிறாள். 

நாராயணனே, நமக்கே பறை தருவான் என்கிறாள். 

நாராயணன் நமக்கு பறை தருவான் என்று சொல்லி இருக்கலாம். 

நாராயணனே என்பதில் உள்ள ஏகாரம் உயர்வு சிறப்பு. வேறு  யார் தந்தாலும் அவ்வளவு சிறப்பு இல்லை. 

அவன் எல்லோருக்கும் தர மாட்டான், "நமக்கே" தருவான். 

சரி, என்ன தருவான்? "பறை" தருவான். 

இது என்ன பறை? வேறு யாருமே சொல்லாத ஒன்றாக இருக்கிறதே. பறை என்றால்  ஒலி எழுப்பும் ஒரு வித தோல் கருவி. அதை வாங்கவா இந்தப் பாடு?

இருக்காது. 

பறை என்றால் சொல்லுவது. சத்தியம் செய்வது என்று எடுத்துக் கொள்ளலாம். 

பறைதல் என்றால் சொல்லுதல். இன்றும் மலையாளத்தில் இந்த சொல் வழங்குகிறது. 

"ஞான் பறையுன்னது கேக்கு"

"ஞான் பறைஞ்சிட்டலே"

என்று சொல்லுவார்கள். 

நாராயணன் நமக்கு வாக்கு தருவான். நமக்கு வரம் தருவான் என்று சொல்கிறாள். 

வரம் என்பது என்ன? நாம் கேட்பதை, விரும்புவதை இறைவன் "அப்படியே ஆகட்டும் " என்று சொல்லுவது தானே?

அதுதான் பறை தருவது. 

நாம்  இறைவனிடம் என்று இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கிறோம்.  இறைவனுக்குத் தெரியாதா, நமக்கு எது வேண்டும், எப்போது வேண்டும் என்று? அவனிடம் சென்று கேட்பது அவனுடைய சக்தியை குறைத்து மதிப்பிடுவது போன்றது. 

பெற்ற குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்று அறிந்து பால் தருவாள் தாய். அந்தக் குழந்தை வந்து, "அம்மா, எனக்கு பசிக்கிறது , பால் தா " என்று கேட்பதில்லை. 

தாய்க்குத் தெரியும் எப்போது என்ன தர வேண்டும் என்று. 

இறைவன் தாயினும் மேலானவன் அல்லவா?

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து 

என்பார் மணிவாசகர். 

நமக்குஎன்ன வேண்டும் என்று நாம் அறிவதற்கு முன்பே இறைவன் அறிந்து நமக்குத் தருவான் என்பது அதன் பொருள். 

அதைத்தான் ஆண்டாள் சொல்கிறாள்....

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

அவனுக்குத் தெரியும் நமக்கு எது தேவை என்று. எதுக்கு நாம போயி கேக்கணும். அவனே தருவான். 

இன்னொரு செய்தியும் கூட எனக்கு இந்த பாசுரத்தில் பிடித்தது....அது என்ன என்றால்...


நமக்கு ஒரு நல்லது கிடைக்கும் என்றால் அது எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்ற பரந்த மனப்பான்மை. 

யோசித்துப் பார்ப்போம். நமக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைக்கிறது என்றால் நாம்  அதை எல்லோரிடமும் சொல்வோமா ? எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள நினைப்போமா அல்லது நமக்கு மட்டுமே வேண்டும் என்று நினைப்போமா?

ஆண்டாள், இறைவனை நாடி,  அவன் அருள் பெற நினைக்கிறாள். தான் மட்டும் இரகசியமாக போய்  அதைப் பெற்றுக் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கவில்லை.

"செல்வச் சிறுமிகாள்" என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டுப் போகிறாள். 

எப்படிப் போகிறாள், எப்போது போகிறாள், எதை நினைத்துக் கொண்டு போகிறாள்...

மேலும் சிந்திப்போம்.




Sunday, February 25, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 4


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"கூர்வேல் கொடுந்தொழிலன்"

கூர்மையான வேலைக் கொண்டவன், கொடுமையான தொழில்களை செய்பவன். 

யார், கண்ணனின் வளர்ப்பு தந்தை நந்தகோபன். 

இது கொஞ்சம் சற்று நெருடலான இடம். 


முதல் பாசுரத்திலே ஆண்டாள், கண்ணனின் தந்தையை ஏன் இப்படி அறிமுகம் செய்கிறாள். 


நாம் யாரோடு பழகுகிறோமோ அவர்கள் குணம், மன நிலை தான் நமக்கு வரும். 

அதனால் தான் , தீயாரை காண்பதுவும் தீது என்று சொன்னார்கள். நல்லாரை காண்பதுவும் நன்றே என்றார்கள். 

அது நமக்குத் தெரிகிறது. 

ஆனால், நமக்குத் தெரியாத நுண்ணிய விஷயம் என்ன என்றால், நாம் எவற்றோடு பழகுகிறோமோ, எதை அடிக்கடி கையாள்கிறோமோ அவற்றின் தன்மை நமக்கு வந்து விடும். 

அது ஒரு உயிரில்லா திடப் பொருளாக இருக்கலாம். நாம் எதை அடிக்கடி கை கொள்கிறோமோ, அதன் குணம் நமக்கு வந்து விடும். 


இராமனைப் பற்றி ஜனகனிடம் கூறும்போது, ஜனகனை "உறை ஓடும் நெடு வேலாய் " , இந்த இராமனுக்கு தந்தை தயரதன் தான் என்றாலும், இவனை படிபித்தது எல்லாம் வசிட்டன் தான் என்றான். 

இது கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். 

கையில் எப்போதும் அறிவாளும் கையுமாக திரிந்தால், எதையாவது வெட்ட வேண்டும் என்று தோன்றும். 

கையில் எப்போதும் சுத்தியலை கொண்டு திரிந்தால், எதையாவது தட்ட வேண்டும் என்று தோன்றும். 

நம்மை சுற்றி என்ன இருக்கிறது என்று நாம் கவனிக்க வேண்டும். 

நம்மை சுற்றி புத்தகங்கள் இருந்தால், எதையாவது எடுத்து படிக்கத் தோன்றும். 

நம்மை சுற்றி டப்பா டப்பாவாக முறுக்கு, சீடை என்று நொறுக்குத் தீனிகள் இருந்தால் அதில் இரண்டை எடுத்து வாயில் போடத் தோன்றும். 

அப்படிஎன்றால், நமக்கு என்ன வேண்டுமோ, அது சம்பந்தப்பட்ட பொருள்களை, அது சம்பந்தப்பட்ட மனிதர்களை நம்மோடு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஹை,இது என்ன புது கதை. இது சரிதானா, அப்படியும் கூட இருக்குமா என்ற சந்தேகம் வரலாம். 

வள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா ? 

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன் 

உடல்சுவை உண்டார் மனம்

படை கருவிகளை கொண்டவர் மனதில் எப்படி அன்பு, அருள் , கருணை போன்ற நல்ல குணங்கள் இருக்காதோ , அது போல மாமிசம் தின்பவரின் மனத்திலும் அந்த நல்ல குணங்கள் இருக்காது என்கிறார். ஒன்றன் உடல் சுவை கொண்டார் மனம். மற்ற ஒரு உடலை கொன்று தின்பவரின் மனதில்  அருள் எப்படி இருக்கும் ? அது எப்படி என்றால், கத்தி , வேல்  போன்ற படைக் கருவிகளை கொணடவர் மனதில் நல்ல குணங்கள் எவ்வாறு இருக்காதோ அது போல என்கிறார். 

நந்த கோபன் நல்லவனா, கெட்டவனா என்பது அல்ல ஆண்டாள் சொல்ல வந்தது. கையில் வேல் இருந்தால், யாரையாவது குத்தச் சொல்லும். அது கொடும் தொழில். எனவே, அவற்றை விட்டு விடுங்கள். 

சாத்வீகம் மேலோங்கி, மெய்யுணர்வு பெற வேண்டுமா, மென்மையான பொருள்களை கை கொள்ளுங்கள், நல்லவர்களோடு பழகுங்கள் என்று சொல்ல வருகிறாள். 

சரி, இது வள்ளுவர் மட்டும் தான் சொன்னாரா ? அல்லது வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

கம்பர் சொல்லி இருக்கிறார். 

சனகனிடம் வேல் இருந்ததாம். ஆனால் அது எப்போதும் உறையிலேயே இருக்குமாம். வெளியே எடுக்கவே மாட்டானாம். கையில் எடுத்தால் அல்லவா, யாரை குத்தலாம் என்று தோன்றும். உறை போட்டு மூடி வைத்து இருந்தானாம். 


"உரை ஓடும் நெடு வேலாய் " என்கிறார். 


‘திறையோடும் அரசு இறைஞ்சும்
   செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான்
   புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!
   உபநயன விதி முடித்து.
மறை ஓதுவித்து. இவரை

   வளர்த்தானும் வசிட்டன்காண்.

நாம் கவனிக்க வேண்டிய தொடர் "உறை ஓடும் நெடு வேலாய்!". சனகனிடம் நீண்ட வேல் இருந்தது. அனால் அது உறையிலேயே கிடந்தது. சண்டை போட வாய்ப்பே இல்லை. சனகனை யாரும்  எதிர்த்து நிற்கவில்லை என்பது ஒரு பொருள். சனகன் யாரிடமும் பகைமை பாராட்டவில்லை என்பது இன்னொரு பொருள். 


நம் சூழ்நிலை நம்மை பாதிக்கும். 


ஆண்டாளுக்கு , நந்தகோபனை நினைத்தால் அவன் வேல் நினைவுக்கு வருகிறது. வேல் என்றால் அது செய்யும் கொடும் தொழில்கள் நினைவுக்கு வருகிறது. 

உயிர் கொலை பாவம் , கொடிய செயல் என்று நினைக்கிறாள். 

உயிர் கொலை செய்ய வேண்டாம் என்றால், பின் ஆயுதம் எதற்கு ?

ஆயுதங்களுக்காக கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்யும் அரசுகள் இதை கவனிக்க வேண்டும். 

ஆயுதங்களை குறையுங்கள். அன்பைப் பெருக்குங்கள்.

பகைம்மைக்கு பகைமை அல்ல மாற்று. அன்புதான் மாற்று. 

பகைவனை கொன்றாலும் கொலை தானே.

மனித நேயத்தின் உச்சம் தொடுகிறாள் ஆண்டாள்.

மேலும் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/4.html


Friday, February 23, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 3

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 3


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"மதி நிறைந்த நன்னாளால்"

நமக்கு நல்ல காரியங்கள் செய்ய பெரிய பட்டியலே இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் நேரம் இருக்காது. பிள்ளைகள் படிப்பு, அவர்கள் வேலை, அவர்கள் திருமணம், பேரன் பேத்தியை பார்த்துக் கொள்ள வேண்டும், வயதான பெற்றோரை பார்க்க வேண்டும், மாமனார் மாமியாரைப் பார்க்க வேண்டும் என்று அந்த நல்ல காரியத்தை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். 

ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் கூட , அதற்கு முன் ஆயிரம் வேலைகள் இருக்கும் அதையெல்லாம் முடிந்து பின் தான் செய்ய முடியும் என்று அலுத்துக் கொள்வோம். 

எங்க நேரம் இருக்கு? செய்யணும்னுதான் நினைக்கிறேன். நேரம் வாச்சால்ல செய்ய என்று எல்லா நல்ல காரியங்களையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். 

வள்ளலார் சொல்கிறார் 

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

முதலில் தாய் தடை என்றேன். வயதான அம்மா அப்பாவை விட்டு விட்டு எங்கே போவது என்று ஒரு தடை. 

பின் தாரமே தடை என்றேன். பெண்ட்டாட்டியை விட்டு விட்டு எப்படி சன்யாசம் போக முடியும். அவள் பாவம் அல்லவா. 

சேய் தடை என்றேன். பிள்ளைகளை படிக்க வேண்டும், அவர்களுக்கு வேலை, திருமணம், அவர்களின் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் 

என்று இப்படி ஒவ்வொரு தடையாக வந்தால், இவற்றை எல்லாம் தாண்ட நான் என்ன செய்யப் போகிறேன் என்று வருந்துகிறார். 

அவருக்கே இப்படி என்றால், நமக்கு எவ்வளவு இருக்கும்?

ஒரு காலும் நம்மால் நல்ல காரியங்கள் செய்ய முடியாது. 


நல்ல காரியம் செய்ய எல்லா நாளும் நல்ல நாள் தான் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். கண்ணனை பார்க்கப் போகிறோம், எனவே இந்த நாள் நல்ல நாள் தான் என்று ஆண்டாள் முடிவு செய்கிறாள். இது நல்ல நாள், எனவே நாம் கண்ணனை பார்க்கப் போகலாம் என்று சொல்ல வில்லை. 


"நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"

அகம் தூய்மையாக வேண்டும் என்றால், புறம் தூய்மையாக வேண்டும். 

நம்மிடம் நிறைய சாவிகள் இருக்கின்றன. ஆனால், அவை எந்த பூட்டை திறக்கும் என்று நமக்குத் தெரியவில்லைல். ஒரு காலத்தில், கையில் சாவியை கொடுத்து "திறந்து விட்டு வா " என்றால் அவர்களுக்குத் தெரிந்திருந்தது அந்த சாவி  எந்த பூட்டை திறக்கும் என்று.

இப்போது நம் கையில் சாவி இருக்கிறது. பூட்டு எது என்று தெரியவில்லை. 

காலையில் நீராடி இறைவனை காண வேண்டும் என்கிறாள் ஆண்டாள். 

ஏன் நீராட வேண்டும் ? நீராடினால் என்ன ஆகும். நீராடாமல் போனால் என்ன ஆகும்? தெரியாது.  எல்லோரும் செய்கிறார்கள், நாமும் செய்கிறோம். 

நீராடுதல் என்பது ஒரு சாவி. அது எந்த பூட்டை திறக்கும் என்று தெரியாது. ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்குத் தெரியாது. 

உன்னிப்ப்பாக கவனித்துப் பாருங்கள். குளிக்கும் முன் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, குளித்த பின் எப்படி இருக்கிறது என்று. நிச்சயம் மாறுதல் இருக்கும். 

உடல் குளிரும். இரத்த சூடு கொஞ்சம் குறையும். மூளை குளிரும். சாத்வீகம் இன்னும்  மேம்படும். 

அதி காலையில் குளித்துப் பாருங்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும். 

"கூர்வேல் கொடுந் தொழிலன் "

கண்ணனின் வளர்ப்பு தந்தையான நந்தகோபனை பற்றி கூற வந்தவள், கூர்மையான வேலை கொண்ட கொடுமையான தொழில் புரிபவன் என்று கூறுகிறாள். 

அதற்கு ஏதேதோ வியாக்கியானம் சொல்கிறார்கள். 

ஒரு கொடுங்கோலனுக்கு பிள்ளையாய் இருப்பவனே என்று ஆண்டாள் சொல்வாளா ? அவன் கொடுமையான தொழில் புரிபவனாகவே இருந்தாலும் , அதை வேலை மெனெக்கெட்டு சொல்லுவானேன்? சொல்லாமல் விட்டு விட்டு போயிருக்கலாமே. ஏன் வலிந்து அதை சொல்கிறாள் ?


http://interestingtamilpoems.blogspot.in/2018/02/3.html


Tuesday, February 20, 2018

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 2

திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 2


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*

"மார்கழி திங்கள்" 

ஏன் மார்கழி திங்கள் ? ஏன் வேறு எந்த மாதங்களில் இந்த பாவை நோன்பு செய்யக் கூடாது ? கீதையில் கூட கண்ணன், "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்கிறான். மார்கழிக்கு என்ன பெரிய சிறப்பு ?

இறைவனை நாம் எப்போது நினைப்போம்? ரொம்ப சந்தோஷமாக இருக்கும் போது நாம் இறைவனை நினைப்பது இல்லை. 

ரொம்ப சோகமாக இருக்கும் போதும் இறைவனை நினைப்பது இல்லை. அப்படி நினைத்தாலும், "ஆமா, இந்த கடவுள் இருந்தும் ஒன்றும் தான் இல்லாததும் ஒன்று தான் "  என்று கடவுளை நிந்திக்க தலைப்படுகிரோம்.

உண்மையிலேயே நாம் இறைவனை நினைப்பது, ஒரு குழப்பமான மன நிலையில் தான். என்ன ஆகுமோ என்ற குழப்பம் வரும்போது , "கடவுளே  இது நல்ல படியாக முடியனும். அப்படி முடிந்தால், உன் சந்நிதிக்கு வருகிறேன். அதைச் செய்கிறேன் , இதைச் செய்கிறேன் " என்று உருகு உருகி  இறைவனை நினைப்போம். 

மனம் சஞ்சலம் அடையும் போது , குழப்பம் வரும் போது நாம் நினைக்கிறோம். 

நீங்கள் உங்கள் மன நிலையை உன்னிப்பாக கவனித்து, ஒரு டையரியில் உங்கள் மன நிலையை குறித்துக் கொண்டே வந்தால் அது ஒரு அலை போல எழுவதும், குறைவதும் தெரியும். 

இத்தனை மணிக்கு சந்தோஷம், இத்தனை மணிக்கு கோபம், வெறுப்பு, எரிச்சல், காதல், காமம், பசி, தூக்கம் என்று எல்லாவற்றையும் எழுதிக் கொண்டே வாருங்கள். 

ஒரு மாதம் கழித்து பாருங்கள். உங்கள் மன நிலை ஏறக்குறைய ஒரே மாதிரி ஒரு சுழற்சியில் இருப்பதை காணபீர்கள்.

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் மன நிலை உங்கள் கையில் இருக்கிறது என்று. இல்லை. அது பாட்டுக்கு வருகிறது போகிறது. கடலின் அலை போல. 

ஒரு வாரம் சேர்த்து வைத்த குறிப்புகளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் நாம் எப்படி இருக்கிறோம் என்று தெரியும். 

ஒரு சில மாதங்கள் சேர்த்த குறிப்பை பார்த்தால், ஒவ்வொரு வாரமும் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியும். 

ஒரு வருடம் முழுவதும் நாம் ஆராய்ந்தால், ஒவ்வொரு மாதமும் நாம் எப்படி இருந்தோம் என்று தெரியும். 

சித்தரை மாதம் நம் மன நிலை பொதுவாக எப்படி இருந்தது. ஆணியில், ஆவடியில்  என்று நாம் பார்க்க முடியும். 

நம்மை நாமே உணர கொஞ்சம் தன்னுணர்வு (sensitivity ) வேண்டும். கோபம் வரும் போது நான் இப்போது கோபமாக இருக்கிறேன் என்ற அறிவு வேண்டும். பல பேருக்கு அந்த அறிவு இருப்பது இல்லை. கோபப் படும்போது கோபம் மட்டுமே  இருக்கிறது. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு வாழ்க்கை செல்கிறது.

உணவின் அளவை குறைத்தால் இந்த sensitivty வரும். 

அப்படி வந்தவர்கள், அறிந்து சொன்னது, மார்கழி மாதம் மிகுந்த குழப்பம் நிறைந்த மாதம். 

ஏன் ?

நம் மன நிலை பலவித வெளிக் காரணங்களால் பாதிக்கப் படுகிறது. 

நாம் உண்ணும் உணவு, நாம் பருகும் திரவங்கள். நாம் இழுத்து விடும் மூச்சின் தன்மை. நாம் வாழும் சூழ்நிலை என்ற பல காரணங்கள் இருக்கின்றன. 

இதில் முக்கியமானது, நாம் எளிதில் அறிந்து கொள்ள முடியாதது சூழ்நிலை. 

இரவு பகல், கோடை குளிர் என்பவை நம் மனதை பாதிக்கின்றன. 

சூரியன் நாம் பூமியில் இருக்கும் வட பகுதிக்கு நுழையும் நாள் உத்தராயணம் எனப்படும்.  அது தை மாதம் முதல் தேதி. 

தை முதல் ஆனி  வரை ஆறு மாதம் சூரியன் வட பகுதியில் இருப்பான். 

ஆனி  தொடங்கி  மார்கழி வரை ஆறு மாதம் சூரியன் தென் பகுதியில் இருப்பான். சூரியன் நம்மை விட்டு விலகி இருக்கும் நாட்கள் ஒளி குன்றி இருக்கும். 

அப்படி என்றால், மார்கழி மாதம் தான், இருள் விலகவும், ஒளி பிறக்கவும் உள்ள ஒரு இடைப்பட்ட காலம். இந்த நேரத்தில் மனம் மிகுந்த குழப்பங்களுக்கு உள்ளாகும். 

மனம் நெகிழ்ந்து இருக்கும். 

இதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். 

இப்படி யோசித்துப் பாருங்கள். இரவு நன்றாக தூங்கினால், அதி காலை விழிப்பு வரும். அந்த இருள் விலகி ஒளி வரும் நேரம் மனம் தூய்மையாக இருக்கும். சாத்வீக குணம் ஓங்கி இருக்கும் நேரம். அதனால் தான் அந்த நேரத்தில் பூஜை செய்யவும், படிக்கவும் சொன்னார்கள்.. மனதில் அப்படியே படியும். 

நாள் என்பதால் நம்மால் அதை உடனடியே அறிய முடிகிறது. 

இதுவே மாதம் என்று வந்தால் , காலம் நீண்டு இருப்பதால் நம்மால் அதை உணர்ந்து  கொள்ள முடிவதில்லை.

ஒரு நாளின் அதி காலை எப்படியோ, மாதங்களில் மார்கழி அப்படி. 

மனம் தெளிந்து, குழப்பங்கள் விலகி, இருள் நீங்கி, ஒளி பிறக்கும் மாதம். 

மார்கழி திருவாதிரை அன்று தீபம் ஏற்றி சிறப்பாக கொண்டாட காரணம், அது ஒளி முழுவதுமாக நம் வாழ்வில் அடி எடுத்து வைக்கும் நேரம். 

எனவே மார்கழி திங்கள் . 

மார்கழியில் பாவை நோன்பு. 

திருப்பாவை முழுவதும், தூங்கும் பெண்களை எழுப்பும் பாடலாக இருக்கும். இது என்ன பக்தி பாடல் ? தூக்கம் ஆட்களை எழுப்புவது ஒரு பக்தியா ? 

எழுப்புதல் என்பது அறியாமை என்ற தூக்கத்தில் இருக்கும் நம்மை எழுப்பி அறிவுடைய செய்வது. மெய்யுணர்வு பெறச் செய்வது. தூக்கத்தில் இருக்கும் போது கனவை உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்போம்.  அது உண்மையல்ல. விழித்துக் கொள் என்று சொல்ல வந்த பாடல்கள் திருப்பாவை. 

எனவே, முதல் இரண்டு வார்த்தைகள், "மார்கழி திங்கள் "

மேலும் சிந்திப்போம்.  

http://interestingtamilpoems.blogspot.in/2018/02/2_20.html