Monday, December 31, 2018

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை

திருப்பாவை - துயில் அமர்ந்த வித்தினை



ஆண்டாள், தன்னுடைய தோழிகளை ஒவ்வொருவராக எழுப்பி கண்ணனை காண அழைத்துக் கொண்டு போகிறாள்.

இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது. கோவிலுக்குப் போகிற வழியில் தோழிகளை கூட்டிக் கொண்டு போகிறாள். இது ஒரு பெரிய விஷயமா? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்? இதைப் படிப்பதால் நமக்கு என்ன பயன். படிக்க எளிமையாக இருக்கிறது. அதைத் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும்.

ஒன்றும் இல்லாத பாடல்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம் எழுதும் பாடல்கள் ஒரு சில மாதங்கள் கூடத் தங்குவது இல்லை.

அப்படி என்றால், இந்தப் பாடல்களில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.


இந்தப் பாடல்களில் இலயிக்க இலயிக்க அது நம்மை எங்கெங்கெல்லாமோ இழுத்துக் கொண்டு போவதை நாம் உணர முடியும்.

பாடல்

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பொருள்

புள்ளும் = பறவைகளும்
சிலம்பினகாண் = சிலம்பு போல் சப்தித்தன
புள்ளரையன் = பறவைகளின் தலைவன், கருடன் 
கோயிலில் = கோவிலில்
வெள்ளை = வெண்மையான 
விளிசங்கின் = விளிக்கின்ற, சப்திகின்ற சங்கின் 
பேரரவம் = பெரிய சப்தத்தை 
கேட்டிலையோ = கேட்கவில்லையோபிள்ளாய்! எழுந்திராய் = பிள்ளை போன்ற மனம் கொண்டவளே, எழுந்திராய் 
பேய்முலை நஞ்சுண்டு = பூதகியின் நஞ்சை உண்டு 
கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி
சகடம் = சக்கரம்
கள்ள சகடம் = கெட்ட (வழியில் செல்லும் )சக்கரம்
கலக்கழிய = அந்த வழியில் சென்று அழியாமல்
கால் ஓச்சி = ஓச்சி என்றால் ஆளுதல் என்று பொருள். கோல் ஓச்சி என்றால் அரசு ஆளுதல்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
வெள்ளத்து = வெள்ளம் போல் உள்ள பாற்  கடலில்
அரவில் = பாம்பின் மேல்
துயில் = உறங்கிய
அமர்ந்த = இருந்த
வித்தினை = விதையை, மூலத்தை
உள்ளத்துக் கொண்டு = உள்ளத்தில் கொண்டு
முனிவர்களும் யோகிகளும் = முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து = அரக்க பறக்க அல்ல, மெல்ல எழுந்து
அரியென்ற பேரரவம் = அரிஎன்ற உச்சரிக்கும் ஒலி
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

தூங்குவது யார் ? ஆயர்பாடி பெண்கள் அல்ல. நாம் தான்.

நாம் எங்கே தூங்குகிறோம். விழித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இதோ இதைப் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம். நாம் எப்படி தூங்குவது ஆகும்?

விழித்து இருந்தால் எல்லாம் தெரியும் அல்லவா? எதையும் தெளிவாக பார்க்க முடியும் அல்லவா? தூங்கும் போது ஒன்றும் தெரியாது. கனவில் வேண்டுமானால் தெரியலாம். ஆனால் அது உண்மை அல்ல. உண்மை போல இருக்கும். விழித்துக் கொண்டால் கனவில் கண்டது உண்மை அல்ல என்று தெரிந்து போகும் அல்லவா. விழித்துக் கொள்ளாதவரை கனவுதான் உண்மை என்று நாம் இருப்போம். 

நாம் விழித்துக் கொண்டிருந்தாலும் கனவு கண்டு கொண்டுதான் இருக்கிறோம். 

நாம் பெரிய ஆள் என்று, நிறைய படித்தவர்கள் என்று, அழகானவர்கள் என்று, நல்லவர்கள் என்று, நல்லது செய்கிறோம் என்று, இறந்த பின் சுவர்க்கம் போவோம் என்று, பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்று, டிவி இல், செய்தித் தாளில் வருவது எல்லாம் உண்மை  என்று ஆயிரம் கனவுகளோடு நாம் அலைந்து கொண்டிருக்கிறோம். கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறோம்.

நாம் யார் என்றே நமக்குத் தெரியாது. அப்புறம் அல்லவா மற்றவை எல்லாம் தெரிய. 

விழித்துக் கொள்ளச் சொல்வது , தன்னைத் தான் அறிய. self realization 



ஆண்டாள் என்ன சொல்ல வருகிறாள் ?

பறவைகள் கத்துகின்றன......சங்கின் ஒலி கேட்கிறது, முனிவர்களும் யோகிகளும் அரி என்று  ஓதுகிறார்கள்...என்ன அர்த்தம்.

இயற்கையை, இந்த உலகை நாம் அப்படியே நேரடியாக உணர வேண்டும்.

நாம் இந்த உலகை நாம் நேரடியாக அறிவது இல்லை.  அதற்கு ஒரு சாயம் பூசுகிறோம்.

இது இந்தியா, இது பாக்கிஸ்தான்,
இவன் ஹிந்து, இவன் கிருத்துவன்,
இவன் நல்லவன், இவன் கெட்டவன்
இவன் படித்தவன், இவன் படிக்காதவன்
இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன்
செல்வன், ஏழை


என்று ஆயிரம் பாகுபாடுகளோடு பார்க்கிறோம்.  உலகை இந்த பாகுபாடுகள் இல்லாமால்  பார்க்க முடியுமா ? வேறுபாடு இல்லாத ஒரு உலகை நம்மால் உணர முடியுமா ?

பறவைகளின் ஒலி , சங்கின் சப்தம், முனிவர்களின் வேத கோஷம் அனைத்துக்கும் அடி நாதமாய் விளங்கும் அந்த நாதத்தை அறிய முடியுமா ?

சப்தங்கள் வேறு. நாதம் ஒன்று.

"துயில் அமர்ந்த வித்தினை"

அது என்ன துயில் அமர்வது?

தூக்கம் வந்தால் தூங்க வேண்டியது தானே?

தூக்கம் என்றால் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஒரே ஒரு வகை தூக்கம் தான்.

தூக்கத்தில் பல வகை உண்டு.

அவை என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_31.html

3 comments:

  1. துயில் அமர்வது என்றால் என்ன?

    ReplyDelete
  2. திருப்பாவையை இவ்வளுவு அழகாக எடுத்து உரத்தைத்தருக்கு நன்றி

    ReplyDelete
  3. திருப்பாவையை இவ்வளுவு அழகாக எடுத்து உரைத்ததற்கு நன்றி, எல்லா பாடல்களையும் விரிவாக்கம் செய்யதால் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete