Sunday, December 9, 2018

வில்லி பாரதம் - அவை அடக்கம்

வில்லி பாரதம் - அவை அடக்கம் 


பெரிய இலக்கியங்களை செய்தவர்கள், இறை வணக்கம் செய்த பின் அவை அடக்கம் சொல்வது வழக்கம்.

தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்ல வந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல இருக்கும்.

இதற்கு அவை அடக்கம் என்று பெயர்.

எதற்கு இந்த அவை அடக்கம்? வித்தை என்றால் ஒரு கர்வம் வேண்டாமா? ஒரு பெருமை வேண்டாமா? இது என்ன தாழ்வு மனப்பான்மை என்று கேட்கலாம். இப்படி சொல்லி சொல்லியே தமிழர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது என்று சொல்கிறார்கள். கம்பரும், வில்லி புத்தூர் ஆழ்வாரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்கள் என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று மற்ற தமிழர்ககள் அடங்கிப் போய் விடுகிறார்கள்.

இது தேவையா ? மற்ற மொழிகளில் இப்படி இருப்பதாகக் காணோம்.

அவை அடக்கத்துக்குக் காரணம் தாழ்வு மனப்பான்மை அல்ல. கல்வியின் ஆழ அகலம் தெரிந்ததால் வந்த பயம், வந்த பணிவு.

ஏதோ கொஞ்சம் தெரிந்து விட்டு, எல்லாம் தனக்குத் தெரியும் என்று மார் தட்டி அலைபவர்களைப் பார்க்கிறோம். அறிவின் ஆழம் தெரியாதவர்கள். அறிவின் ஆழம் தெரிந்தால் பேச்சு வருமா ?

அவை அடக்கம் சொல்பவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை. கல்வியின், அறிவின் வீச்சு அறிந்ததால் அவர்களிடம் தானே வந்த பணிவு அது.

வில்லிப் புத்தூர் ஆழ்வார் அவை அடக்கம் பாடுகிறார்.

"வட மொழியில் வியாசர் பாடிய மகா பாரதத்தை நான் பாடுவது எப்படி இருக்கிறது தெரியுமா? சூரிய உதயத்தின் அழகை கண்ணில்லாதவனுக்கு ஒரு ஊமையன் சொல்லியது மாதிரி இருக்கிறது" என்கிறார்.

கண்ணில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் சூரிய ஒளியின் அழகு புரிபட போவதில்லை. அதுவும் சொல்லுவான் ஒரு ஊமையன் என்றால் எப்படி இருக்கும்.

மகா பாரதம் என்ற சூரிய ஒளி போன்ற பெரிய காவியத்தை ஊமையனான நான் கண்ணில்லாத உங்களுக்குச் சொல்கிறேன். விளங்கின மாதிரிதான் என்கிறார்.

பாடல்

மண்ணிலாரணநிகரெனவியாதனார்வகுத்த
எண்ணிலாநெடுங்காதையையானறிந்தியம்பல்
விண்ணிலாதவன்விளங்குநீடெல்லையையூமன்
கண்ணிலாதவன்கேட்டலுங்காண்டலுங்கடுக்கும்.

பொருள்


மண்ணில் = இந்த உலகில்

ஆரண = வேதத்துக்கு

நிகரென = ஒப்பான

வியாதனார் = வியாசர்

வகுத்த = அருளிய

எண்ணிலா = கணக்கில் அடங்காத

நெடுங்காதையை = பெரிய கதையை

யானறிந்தியம்பல் = யான் + அறிந்து + இயம்பல் = நான் அறிந்து சொல்லுவது

விண்ணில் = ஆகாயத்தில்

ஆதவன் = சூரியன்

விளங்கு = ஒளிவிட்டு விளங்குகின்றதை

நீடெல்லையை = அந்த பெரிய ஆகாயத்தை

யூமன் = ஊமை

கண்ணிலாதவன் = குருடன்

கேட்டலுங் = கேட்டததும்

காண்டலுங் = கண்டதும்

கடுக்கும். = ஆகும்

ஒளி வீசும் அந்த வானத்தின் அழகை , அந்த ஆகாயத்தைப் பற்றி ஊமையன் சொல்ல குருடன்  கேட்ட கதை மாதிரி என்கிறார்.

அவை அடக்கம் ஒரு புறம் இருக்கட்டும்.

பெரிய காவியங்களில், இலக்கிய படைப்புகளில் எவ்வளவோ அரிய பெரிய உண்மைகள் , தத்துவங்கள் கொட்டிக் கிடக்கும். ஆழ்ந்து, அறிய வேண்டும்.

மாறாக, நமது சிற்றறிவைக் கொண்டு அந்த இலக்கியங்களை உரசிப் பார்த்து , அது சரி இல்லை, இது சரி இல்லை என்று அவற்றை நம் தரத்துக்கு கீழே கொண்டு வரக் கூடாது. நாம் மேலே போக நினைக்க வேண்டுமே அல்லாமல், அவற்றை கீழே கொண்டு வரக் கூடாது.

மிகப் பெரிய உண்மைகளை கண்டு நம்மிடம் சொல்கிறார்கள். கண் இருந்தும்  குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் இருந்து விடக் கூடாது.

புரியவில்லை என்றால் தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

எவ்வளவோ பெரியவர்கள், எவ்வளவோ நல்லதை சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள். கேட்டுத்தான் பார்ப்போமே.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_9.html


No comments:

Post a Comment