Friday, December 27, 2019

திருக்குறள் - கேட்டார் பிணிக்கும்

திருக்குறள் - கேட்டார் பிணிக்கும் 


சொல் அல்லது பேச்சு என்றால் எப்படி இருக்க வேண்டுமாம் ? கேட்பவர்களை கட்டிப் போட வேண்டும். கேட்காதவர்கள் கூட, அடடா , கேட்க விட்டுப் போய் விட்டதே என்று கேட்க விரும்பும் படி இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

பொருள்

கேட்டார்ப் = கேட்டவர்களை

பிணிக்கும் = கட்டிப் போடும்

தகையவாய்க் = தன்மை உள்ளதாய்

கேளாரும் = கேட்காதவர்களும்

வேட்ப = ஆசைப் படும்படி

மொழிவதாம் = சொல்லுவதாம்

சொல் = நல்ல சொல் அல்லது பேச்சு

இதற்கு பலவிதங்களில் பெரியவர்கள் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். என் அறிவு அவ்வளவு தூரம் எல்லாம் போகாது.

நம் அன்றாட வாழ்க்கையில் இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். மேலும், இந்த குறள் எப்படி நம் இனிய வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது என்று சிந்திப்போம்.


வீட்டில் நாம் அன்றாடம் கேட்கும் பேச்சு என்ன ....


'என்ன சொன்னாலும் இந்த பிள்ளைகள் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்...அவங்க நல்லதுக்குத்தானே சொல்கிறோம்...கேட்டால் என்ன "

"அவரு நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரு. அவங்க அம்மா சொன்னா கேப்பாரு "

"அவளுக்கு என்ன தான் வேணும் என்றே தெரியல...எதைச் சொன்னாலும் இடக்கு மடக்கா பேசுறா...அவளோட வர வர பேசவே முடியல "

இப்படி எங்க பார்த்தாலும் சொன்னால் கேட்பதில்லை என்ற அங்கலாய்ப்பு நிறைந்து இருக்கிறது.

பிள்ளகைள் சொன்ன மாதிரி கேட்டு, கணவன்/மனைவி ஒருவரை ஒருவர் மற்றவர் சொல்வதை கேட்டு புரிந்து கொண்டு நடந்தால் வாழ்கை எப்படி இனிமையாக இருக்கும்?

அது ஏன் நிகழ மாட்டேன் என்கிறது.

தவறு அடுத்தவரிடம் இல்லை. நம்மிடம் இருக்கிறது.

பேசத் தெரியவில்லை.

பேசத் தெரியாமல் பேசி, இருப்பதை மேலும் குழப்பம் ஆக்கி விடுகிறோம்.

கணவனோ மனைவியோ ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒன்று சொல்லப் போகிறார்கள். அது மற்றவருக்கு பிடிக்காது என்று தெரியும். சொன்னால் கேட்க மாட்டார்கள் என்றும் புரியும். அப்படி இருந்தால் கூட, "சரி என்னதான்  சொல்றா/ங்க னு கேப்போமே " என்று விரும்பும்படி பேச வேண்டுமாம்.

பேச்சு என்பது கலை. மேடைப் பேச்சு மட்டும் அல்ல. வீட்டில் பேசுவதும் கலைதான்.

கணவன்/மனைவி/மாமியார்/பிள்ளைகள்/மாமனார்/உறவினர்/நண்பர்கள்/அதிகாரிகள்/ கீழே வேலை செய்பவர்கள்/அண்டை/அயல் என்று எங்கும் பேச வேண்டி இருக்கிறது. நாம் பேசுவதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவிட்டால் கூட, அவர்கள் நம் பேச்சை கேட்க விரும்பும் படி பேச வேண்டும்.

நன்றாக பேசத் தெரிந்து விட்டால், நம் வாழ்கை மட்டும் அல்ல, நம்மைச் சுற்றி உள்ளவர்கள் வாழ்வும் இனிமையாக இருக்கும்.

சரி. புரியுது. ஆனால், எப்படி நன்றாக பேசுவது? இனிமையாக எப்படி பேசுவது?

நல்ல பேச்சின் குணங்கள் என்ன என்ன? நம் எதிரி கூட நம் பேச்சை விரும்ப வேண்டும் என்றால் எப்படி பேச வேண்டும்?

 அது பற்றி வள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? அல்லது நம் இலக்கியங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_27.html



1 comment:

  1. நல்ல பேச்சின் குணங்கள் என்ன என்ன? நம் எதிரி கூட நம் பேச்சை விரும்ப வேண்டும் என்றால் எப்படி பேச வேண்டும்?

    அது பற்றி வள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? அல்லது நம் இலக்கியங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா ?

    ReplyDelete