Monday, February 10, 2020

வில்லி பாரதம் - சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்

வில்லி பாரதம் -  சிகண்டி - பேதை கூறமன நொந்தி ரங்கியவன்


அம்பையை பீஷ்மர் சிறை எடுத்தார். அம்பையோ, தான் சாளுவ மன்னனை விரும்பவதாகச் சொன்னாள். 'சரி, நீ அவனையே மணந்து கொள் ' என்று பீஷ்மரும் அம்பையை சாளுவனிடம் அனுப்பி வைத்தார். மாற்றான் கவர்ந்து சென்ற பெண்ணை தான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவளை திருப்பி அனுப்பிவிட்டான்.

போக வழி இல்லாமல் தவித்த அவள், தன்னுடைய தந்தையிடமே வந்து சேர்ந்தாள். நடந்ததை எல்லாம் கூறினாள். தன் மகள் நிலை கண்டு வருந்தி, காசி மன்னனும், பீஷ்மருக்கு ஒரு தூது அனுப்பினான்.


பாடல்


தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்த னின்னலுரை
                                           தந்ததும்,
கோதை யாலுறவு கொண்டு கைதரல் குறித்த கோமகன்
                                         மறுத்ததும்,
பேதை கூறமன நொந்தி ரங்கியவன் மிக்க நண்பினொடு
                                        பின்னையும்,
தூதை யேவிமண முற்றி ரந்தனன்வி சும்பு லாவுநதி
                                         சுதனையே.

பொருள்

தாதை  = தந்தை

தாளினில் = கால்களில்

விழுந்து = விழுந்து

சந்தனுவின் = சந்தனு மகாராஜாவின்

மைந்த னின் = மைந்தனின் (பீஷ்மர்)

இன்னலுரை = துன்பம் தரும் செய்தி

தந்ததும் = தந்ததும்

கோதை யால் = பூ மாலையால்

உறவு கொண்டு = மணந்து கொள்ள இருந்த

கைதரல் = கை பற்றி

குறித்த = தான் மனதில் நினைத்த

கோமகன் = மன்னன் (சாளுவன் மன்னன்)

மறுத்ததும், = தன்னை மணந்து கொள்ள மறுத்ததுவும்

பேதை கூற = மகள் கூற

மன நொந்து = மனம் வாடி

இ ரங்கியவன் = இரக்கப்பட்டு அவன்

மிக்க நண்பினொடு = மிகுந்த நட்போடும்

பின்னையும், = மேலும்

தூதை யேவி = தூதை அனுப்பி

மண முற்றி ரந்தனன் = மணம் செய்து கொள்ளும் படி வேண்டினான்

விசும்பு லாவு = ஆகாயத்தில் உலவும்

நதி = கங்கை

சுதனையே. = மகனையே

கங்கா தேவியின் மகனான பீஷ்மரிடம் தன் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி  வேண்டினான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.

தூக்கிச் சென்ற பீஷ்மர் வேண்டாம் என்று சாளுவனிடம் போனாள், மகள்.

சாளுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

கையை பிசைந்து கொண்டு நிற்கும் மகள். அவளின் மன நிலை எப்படி இருக்கும்.

தன் மகளின் வாழ்வு இப்படி ஆகி விட்டதே என்று வருந்தும் தந்தையின் மன நிலை எப்படி இருக்கும்?

பீஷ்மரை எதிர்க்கவும் முடியாது. சாளுவன் கூறுவதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது. பெண் ஆசைப்பட்டதிலும் தவறு இல்லை.

பாரதம் பூராவும் இது போன்ற உணர்ச்சி மிகுந்த இடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனித மனத்தின் சலனங்களை, ஆசா பாசங்களை, சிக்கல்களை  படம் பிடித்து காட்டுவதில் பாரதம், இராமாயணத்தை விட ஒரு படி  மேலே நிற்கிறது.

சரி, இதற்கு என்னதான் தீர்வு?

கதை எப்படி மேலே நகர்கிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2020/02/blog-post_10.html

1 comment:

  1. அடுத்த பதிவை பார்ப்போம்

    ReplyDelete