Monday, November 25, 2019

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும்

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும் 


கர்ணன் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறான். அர்ஜுனன் எத்தனையோ அம்புகளை விடுகிறான். அவை கர்ணனை தீண்டவில்லை. கர்ணன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது.

பார்த்தான் கண்ணன். கர்ணன் செய்த தர்மம் அவனுக்கு பக்க பலமாக உள்ளவரை அவனை கொல்ல முடியாது என்று கருதி, கிழ வேதியர் வடிவம் தாங்கி, கர்ணனிடம் அவன் செய்த தவங்கள் யாவையும் தானமாகப் பெற்றான். (செய் தர்மம் - வினைத்தொகை). அதற்குப் பின், அர்ஜுனனிடம் "நீ இனி அம்பு விடு, அவன் இறந்து விடுவான்" என்று சொல்கிறான்.

அதே போல் அர்ஜுனனும், அம்பு விட்டு அவனை கொல்கிறான்.

நான் சொல்ல வந்தது இந்த கதை அல்ல.

அர்ஜுனன் விட்ட அம்பு குறி தவறாமல் கர்ணனின் மார்பை துளைத்தது என்பதற்கு ஒரு உவமை சொல்ல வேண்டும் என்று நினைத்த வில்லி புத்தூர் ஆழ் வார் ஒரு உவமையை தேர்வு செய்கிறார்.

"தகலுடையார் மொழி போல"

என்று சொல்கிறார்.

அதாவது தவம் செய்த பெரியவர்கள் சொன்ன சொல் எப்படி தவறாகாதோ , அது போல் தவறில்லாமல் அந்த அம்பு அதன் இலக்கை அடைந்தது என்கிறார்.

அந்த மாதிரி பெரியவர்கள் சபித்தாலும் சரி, ஆசீர்வாதம் செய்தாலும் சரி, அது பலிக்கும் என்று நம்மவர்கள் நம்பினார்கள்.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அது சொல்பவர்களைப் பொறுத்தது.

பாடல்

பகலவன்தன்மதலையைநீபகலோன்மேல்பாற்பவ்வத்திற்
                    படுவதன்முன்படுத்தியென்ன,
விகல்விசயனுறுதியுறவஞ்சரீக மெனுமம்பாலவ
                            னிதயமிலக்கமாக,
வகலுலகில்வீரரெலாமதிக்கவெய்தா னந்தவாசுக
                         முருவியப்பாலோடித்,
தகலுடையார்மொழிபோலத்தரணியூடு தப்பா
               மற்குளித்ததவன்றானும்வீழ்ந்தான்.


பொருள்

பகலவன்தன்மதலையை = பகலைத் தருகின்ற சூரியனின் மகனை (கர்ணனை)

நீ = நீ (அர்ஜுனா)

பகலோன் = சூரியன்

மேல்பாற் = மேற்கு திசையில்

பவ்வத்திற் = உள்ள கடலில்

படுவதன்முன் = மறைவதன் முன்

படுத்தியென்ன, = அம்புகளை விடுவாய் என்று  சொல்ல

விகல்விசயனும் = இகல் விஜயன் - வீரம் பொருந்திய அர்ஜுனன்

உறுதியுற = உறுதியாக,

அஞ்சரீக மெனும் அம்பால்  = அஞ்சீரகம் என்ற அந்த அம்பால்

அவனிதயமிலக்கமாக, = அவன் (கர்ணன்) இதயம் இலக்காக  (குறி வைத்து)

அகலுலகில் = அகன்ற உலகில்

வீரரெலாமதிக்க = வீரர் எல்லாம் மதிக்க

வெய்தா னந்த = எய்தான், அந்த

ஆசுகம் = அம்பு

முருவியப்பாலோடித், = உருவி அப்பால் ஓடி

தகலுடையார் = தவமுடையவர்

மொழிபோலத் = மொழி போல

தரணியூடு = உலகத்தின் வழி

தப்பாமற் = தப்பாமல்

குளித்ததது = விழுந்தது

வன்றானும்வீழ்ந்தான். = அவனும் (கர்ணனும்) வீழ்ந்தான்

வார்த்தைகள் வலிமை மிக்கவை. அவற்றை நாம் வீணடிக்கக் கூடாது.

பெரியவர்களின் ஆசி அப்படியே பலிக்கும்.

பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் அல்ல. திருதராட்டிரன் கூட வயதில் பெரியவன் தான். அதற்காக அவன் சொன்னது எல்லாம் நடக்கும் என்று கொள்ளக் கூடாது. காட்டு எருமைக்கும், காண்டா மிருகத்துக்கும், கடல் ஆமைக்கும் கூடத்தான் வயதாகும். வயது ஒரு பொருட்டு அல்ல.

தவத்தால், ஒழுக்கத்தால் , அறிவால் பெரியவர்கள்.


அப்படிப் பட்டவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.

நாமும் அப்படிப்பட்டவர்களாக முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_25.html

1 comment: