Tuesday, November 26, 2019

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர்

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர் 


எது சரி, எது தவறு என்று மக்கள் குழம்பும் போது, உண்மை அறிந்த ஞானியர்களை மக்கள் நாடினார்கள்.

அனைத்தும் துறந்த, சுயநலம் இல்லாத ஞானிகள் அவர்கள். அவர்கள் சொல்வதை மக்கள் சந்தேகம் கொள்ளாமல் ஏற்று நடந்தார்கள்.

புத்தர், இயேசு, சங்கரர், இராமானுஜர், வள்ளலார், வள்ளுவர் போன்றவர்கள் மக்களை வழி நடத்தினார்கள்.

ஆனால், இன்று அப்படி யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் கேட்பது?

யார் உண்மையானவர், யார் பொய்யானவர் என்று தெரியமால் மக்கள் குழப்புகிறார்கள்.

பட்டினத்தார், உண்மை ஞானம் கண்டு தெரிந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவர்களின் இலக்கணம் சொல்லுகிறார்.

நீங்கள் யார் பேச்சையாவது கேப்டதாய் இருந்தால், அவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கேட்காதீர்கள்.


பாடல்

பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே.


பொருள்

பேய்போற்றிரிந்து= பேய் போல் திரிந்து

பிணம்போற்கிடந்து = பிணம் போல கிடந்து

இட்டபிச்சையெல்லா = இட்ட பிச்சை எல்லாம்

நாய்போலருந்தி = நாய் போல் அருந்தி

நரிபோலுழன்று = நரி போல் உழன்று

நன்மங்கையரைத் = நல்ல பெண்களை

தாய்போற்கருதித் = தாய் போல கருதி

தமர்போலனைவர்க்குந் = உறவினர் போல அனைவருக்கும்

தாழ்மைசொல்லிச் = பணிவாகப் பேசி

சேய்போலிருப்பர் = குழந்தையைப் போல இருப்பார்கள்

கண்டீர் = கண்டீர்

உண்மை ஞானந் தெளிந்தவரே. = உண்மையான ஞானம் தெளிந்தவரே


பேய் போல திரிந்து - பேய்க்கு ஒரு இருப்பிடம் கிடையாது.  அது பாட்டுக்கு காட்டில் அலையும்.  அதன் பேரில் ஒரு வீடு, பேங்க் அக்கௌன்ட் எல்லாம் கிடையாது.

பிணம் போல கிடந்து - பிணத்துக்கு உணர்ச்சி இருக்காது. நல்ல உணவு,  குளிர் சாதன அறை, பெரிய கார், பெண்கள், என்று உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள்.

இட்ட பிச்சை எல்லாம் - அந்த உணவு வேண்டும், இந்த உணவு வேண்டும் என்று கேட்பது எல்லாம் கிடையாது. கிடைத்த பிச்சையை

நாய் போல் அருந்தி - தட்டு கூட கிடையாது

நன் மகளிரை தாய் போல் கருதி - பெண்களை தாயைப் போல கருதுவார்களாம்.

எல்லோரையும் உறவினர் போல நினைத்து பணிவாகப் பேசுவார்கள்.  என் ஜாதி,  என் மதம். இது பார்க்கும் நேரம். அதற்கு கட்டணம்.  யார் கிட்ட வரலாம், யார் தள்ளி நிற்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு கிடையாது.

சேய் போல் இருப்பர் - சின்ன பிள்ளை போல கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள்.

முதலில், சாமியாருக்கு மடம் எதற்கு?  எல்லாவற்றையும் வேண்டாம் என்று தானே  துறவறம் பூண்டு சாமியாராக ஆனாய். பின் எதற்கு மடம் , அதில் ஏக்கர் கணக்கில்  நிலம், பணம், தங்கம், சொத்து, வருமானம், வரி என்றெல்லாம்.  இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?  மடத்தில் இருக்கும்  யாரும், பட்டினத்தார் பட்டியலில் வர மாட்டார்கள்.

சொத்து சேர்த்து, அதை காப்பாற்றி, அதை பெருக்கி, அதை நிர்வாகம் பண்ண ஆளை போட்டு, அவன் ஏமாற்றாமல் இருக்கிறானா என்று தெரிந்து  கொள்ள  ஒரு ஆடிட்டர் ஐ போட்டு...இதெல்லாம் ஞானம் அடைந்ததின் குறியீடா?

உண்மையான ஞானிகளை பார்க்க போக வேண்டும் என்றால் மடத்திற்குப் போகாதீர்கள்.

எந்த மதத்திலும், எந்த பிரிவிலும், எங்கே பணமும் சொத்தும் புரள்கிறதோ அங்கே ஞானம் இருக்காது. உங்களுக்கு பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், காரியம் நடக்க யாரையாவது பிடிக்க வேண்டும் என்றால் அங்கே போங்கள். ஞானம்?

ஞானிகள் தங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஞானம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் தேடிப்  போக வேண்டும்.

அந்தத் தேடல் தான் உங்கள் ஞானத்தின் முதல் படி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_26.html

2 comments:

  1. மடம் என்று எல்லோரையும் ஒதுக்கிவிடமுடியாது.சில தொன்மையானது.அதற்கு மடாதிபதிகள் வருவர். எல்லோரும் ஞானிகள் அல்லர். நூற்றிலோ ஆயிரத்திலோ ஒருவர் ஞானியாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆக பட்டினத்தார் சொன்ன லக்ஷணங்கள் இருக்கும் பக்ஷ்த்தில் அவரையும் நாடலாம்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு மற்றும் மிகவும் அருமையாக விளக்கம் 💓💓 வாழ்த்துக்கள்

    ReplyDelete