Saturday, November 9, 2019

கம்ப இராமாயணம் - அது வருத்தோ?

கம்ப இராமாயணம் - அது வருத்தோ?


மனைவி இருந்தால் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். அது செய்யல, இது செய்யல, என்று ஏதாவது பட்டியல் வாசித்துக் கொண்டே இருப்பாள். என்னடா இது எந்நேரம் பார்த்தாலும் இதே பாட்டுத் தானா என்று பல கணவன்மார்கள் அலுத்துக் கொள்வார்கள்.

மனைவி ஊருக்குப் போய் விட்டால் ஒரு இரண்டு நாளைக்கு நிம்மதியா இருப்பது போலத் தெரியும். ஆனால், அவள் இல்லாவிட்டால் ஏதோ ஒரு வெறுமை இருக்கத்தான் செய்யும். குயில் போல் இல்லாவிட்டாலும், அவள் குரல் கேட்டுக் கொண்டாவது இருக்கும். அவள் இல்லாமல், அவள் குரல் இல்லாமல், வீடே கொஞ்சம் 'வெறிச்" என்று இருப்பது போல இருக்கும்.

சீதையின் குரல் தேனையும், அமிழ்தையும் குழைத்து செய்தது போல இருக்குமாம். அவ்வளவு இனிமையான குரல். அந்த குரலை கேட்காமல் இராமன் தவிக்கிறான்.


"அளவு இல்லாத அந்த கார் காலம் வந்தால், தவம் புரிவோர் கூட தடுமாறுவார்கள் என்றால் அமுதையும், தேனையும் குழைத்து செய்த குரலைக் கொண்ட சீதையின் தோளில் இன்பம் கண்ட இராமனின் துன்பத்திற்கு எதை உவமை சொல்ல முடியும்"

பாடல்


அளவு இல் கார் எனும் அப்
      பெரும் பருவம் வந்து அணைந்தால்,
தளர்வர் என்பது தவம்
     புரிவோர்கட்கும் தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
      குழைந்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன், வருந்தும்என்றால்,
      அது வருத்தோ?


பொருள்

அளவு இல் = அளவற்ற, நீண்ட

கார் எனும் = கார் என்ற

அப் = அந்த

பெரும் பருவம் = பெரிய பருவ நிலை

வந்து அணைந்தால், = வந்து விட்டால்

தளர்வர் = தளர்ந்து போவார்கள்

என்பது = என்பது

தவம் புரிவோர்கட்கும் = தவம் செய்யும் முனிவர்களுக்கும்

தகுமால்; =பொருந்தும் என்றால்

கிளவி = மொழி, குரல்

தேனினும் = தேனையும்

அமிழ்தினும் = அமுதத்தையும்

குழைந்தவள் = குழைத்து செய்த குரலைக் கொண்ட சீதையின்

கிளைத் = மூங்கில் போன்ற

தோள் = தோள்களை

வளவி = அணைத்து

உண்டவன் = இன்பம் கண்டவன்

 வருந்தும் = வருந்தினான்

என்றால், = என்றால்

அது வருத்தோ? = அது என்ன அவ்வளவு எளிய ஒன்றா ?

பேசும்போது அப்படி பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். அடடா, அந்த குரலை கேட்க முடியவில்லையே என்று மற்றவர்கள் வருந்த வேண்டும். அன்போடு, நல்ல சொற்களை தேர்ந்து எடுத்து, இனிமையாகப் பேச வேண்டும்.

வாயைத் திறந்தாலே, எப்படா மூடுவாள் என்று நினைக்கக் கூடாது.

கோபம், வருத்தம், ஆங்காரம், வெறுப்பு போன்ற குணங்களை நீக்கி அன்போடு, பண்போடு பேசிப் பழக வேண்டும்.

செய்து பாருங்கள். உங்களிடம் பேசுவதற்காகவே மற்றவர்கள் காத்துக் கிடப்பார்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_9.html

2 comments:

  1. பேஷ் பேஷ் அழகாக சொல்லி உள்ளார் .கற்று கொள்ள பாடங்கள் அநேகம்.

    ReplyDelete
  2. சும்மா எப்படிப் பேச வேண்டும் என்பதைவிட, இராமன் எப்படி வருந்தினான் என்பது இந்தப் பாடலின் முதல் பொருள் அல்லவா?

    ReplyDelete