Friday, November 22, 2019

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்



கல்லூரி நாட்களில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார காதலித்தார்கள். ஆனால், வெளியே காட்டிக் கொல்வதில்லை. எப்போதாவது பேசிக் கொள்வது. ஓடை நீர் பார்வை பரிமாற்றம் மட்டும்தான். கல்லூரி  முடிந்து ஆளுக்கு ஒரு பக்கமாய் போய் விட்டாலும், தொலை பேசியிலும், whatsapp லும் அவர்கள் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

அவர்களின் நண்பர்களுக்கு அரசல் புரசலாகத் தெரியும். இருந்தும் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. என்ன பெரிய விஷயம் என்று விட்டு விட்டார்கள்.

எப்போதாவது, ஆண்டுக்கு ஒரு முறை, அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நண்பர்கள் எல்லோரும் கூடுவார்கள். அல்லது நண்பர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற விஷேசம் வந்தால் கூடுவார்கள்.

அவர்களும் வருவார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒன்றும் இல்லாதது போல பார்த்துக் கொள்வார்கள்.

அவளுடைய தோழிகளும், அவனுடைய தோழர்களும் அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ம்ஹூம் ...ஒன்றும் தெரியாது.  யாரோ, எவரோ போல இருப்பார்கள்.

இரண்டும் சரியான கல்லுளி மங்கர்கள். அழுத்தமான ஆளுகள் தான்....


இது இன்று நடக்கும் ஏதோ சினிமாவோ அல்லது சீரியலோ அல்ல, திருவள்ளுவர்  காலத்தில் நடந்த நாடகம்...அவரே சொல்கிறார் பாருங்கள் ....


பாடல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

பொருள்

ஏதிலார் = ஒருவரை ஒருவர் அறியாதவர்

போலப் = போல

பொதுநோக்கு நோக்குதல் = பொதுப்படையாக நோக்குதல்

காதலார் =காதலர்கள்

கண்ணே உள = கண்ணில் மட்டும் தான் இருக்கும்

உள என்பது பன்மை. இரண்டு பேர் மனத்திலும் காதல் இருப்பதால் உள என்ற பன்மையை போடுகிறார் வள்ளுவர்.


நோக்குதல் என்பது ஒன்று தானே?  இரண்டு பேரும் ஒரே காரியத்தைத்தானே செய்கிறார்கள். பின் எதற்கு பன்மை போட வேண்டும்?

எல்லோரையும் நோக்குவது ஒரு தொழில். காதலியை (காதலனை) நோக்குவது இன்னொரு தொழில். அது வேறு பார்வை. இது வேறு பார்வை. பார்த்தால் ஒரே மாதிரிதான்   இருக்கும். இருந்தாலும், உள்ளுக்குள் வேறுபாடு உண்டு   என்பதால்,  "உள" என்ற பன்மையை கையாள்கிறார் வள்ளுவர்.


அவளுக்கு , அவன் மேல் காதல்.

அவனுக்கு, அவள் மேல் காதல்.

இருவரும் மனதுக்குள் அந்த காதலை நினைத்து மகிழ்கிறார்கள். அருகில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.  இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஒன்றும் தெரியாதவர் போல பார்த்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் அந்த கண நேரத்தில் பட்டுத் தெறிக்கும் காதல். அதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று மறைத்து வைக்கும் செயல் என்று   பல செயல்கள் நடப்பதால், "உள" என்றார்.

சரி, அது என்ன "காதலார்". காதலர் என்று தானே இருக்க வேண்டும். ஏன் 'லார்" என்று ஒரு பொருந்தாத சொல்லப் போடுகிறார் ?

அவர்கள் காதலிக்கிறார்கள். ஆனால், காதலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அது ஒரு  முரண் தானே. அந்த முரணைக் பாட்டில் கொண்டு வருகிறார் வள்ளுவர்.

"காதலார்" என்று ஒரு நெருடலான சொல்லைப்  போடுகிறார்.

அந்த சூழ்நிலையில் அவர்கள் செயல் அப்படி பொருத்தம் இல்லாததாக இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்.

எவ்வளவு சுவையாக இருக்கிறது.  படிக்கும் போதே ஒரு சுகம் தெரிகிறது அல்லவா? முகத்தில் ஒரு புன்னகை வருகிறது அல்லவா?

ஆண் பெண் உறவை அவ்வளவு இனிமையாக சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

படிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_22.html


No comments:

Post a Comment