Saturday, November 16, 2019

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன்

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன் 


ஆசிரியர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால், அந்த ஒன்றில் இருந்து பத்தாக, நூறாக படித்துக் கொள்ள வேண்டும். எல்லாமா ஆசிரியர் சொல்லித் தருவார். மாணவன்தான் தேடி பிடித்து படிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது, செய்து பார்க்க வேண்டும்.

இராமனுக்கு வில் வித்தை எல்லாம் சொல்லித் தந்தவர் விஸ்வாமித்ரர். ஜனகனிடம் , இராமனை அறிமுகப்படுத்தும் போது, அவர் சொல்கிறார்

"நான் தான் இந்த அஸ்திர பிரயோகங்களைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அந்த படைக் கலன்களை இராமன் கையாளும் போது, எனக்கே பயமாக இருக்கிறது..அப்படி ஒரு வேகம், இலாகவம் " என்று கூறுகிறார்.

பாடல்


ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
   அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
   கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
   படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
   இவற்கு ஏவல் செய்குனவால்.



பொருள்


ஆய்ந்து = ஆராய்ச்சி செய்து

ஏற  = ஏற்புடையதாக

உணர் = உணர்ந்து கொள்வாய்

ஐய!- = ஜனகனே

அயற்கேயும் = பிரம்மாவுக்கும் (அயன் - பிரமன்)

அறிவு அரிய = அறிந்து கொள்ள முடியாத

காய்ந்து ஏவினன் = எரித்து ஏவினான்

உலகு அனைத்தும் = உலகம் அனைத்தையும்

கடலோடும் = கடலோடும்

மலையோடும் = மலையோடும்

தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் = அனைத்தையும் தீய்த்து சுட்டு பொசுக்கும்

படைக் கலங்கள் = படை கலங்கள்

செய் தவத்தால் = அவை, செய்த தவத்தால்

ஈந்தேனும் = ஈந்த (தந்த) நானும்

மனம் உட்க. =மனம் நடுங்க

இவற்கு = இராமனுக்கு

ஏவல் செய்குனவால். =ஏவல் செய்கின்றன


அம்புகளை கொடுத்தது நான் தான். மந்திரங்களை சொல்லிக் கொடுத்தது நான்தான்.

ஆனால், இராமன் அவற்றை விடும்போது, எனக்கு மனம் நடுங்குகிறது என்கிறார்.

அப்படி படிக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_16.html

No comments:

Post a Comment