Friday, November 1, 2019

கந்த புராணம் - அந்த மூன்று

கந்த புராணம் - அந்த மூன்று 


எல்லாவற்றிற்கும் அடிப்படை எது என்ற ஆராய்ச்சி எல்லா துறைகளிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

பொருள், அதன் அடிப்படை அணு என்றார்கள் . பின், அனுவின் அடிப்படை ப்ரோடான், நியூட்ரான், எலக்ட்ரான் என்றார்கள். பின் அதற்கும் உள்ளே போய் போஸான், Neuon, quarks என்று சொல்லுகிறார்கள். நாளை வேறு ஏதாவது வரும்.

உடல், அதன் அடிப்படை உறுப்புகள், அதற்குக் கீழே திசுக்கள், அதற்கு கீழே செல்கள், அதற்கு கீழே DNA , mitochandria, golgai bodies என்று போய் கொண்டே இருக்கிறது.


எது நிரந்தரமானது என்று தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலே சொன்னவை வெளி உலக ஆராய்ச்சி. நமக்கு எது அடிப்படை. மனித வாழ்வு, மனித உறவு, உண்மை, மெய் பொருள் இவற்றிற்கு எல்லாம் எது அடிப்படை என்று ஆராய்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின், அவர்கள் மூன்று பொருள்கள் நிரந்தரணமானவை, அழிவில்லாதவை என்று கண்டு கொண்டார்கள்.

இந்த உலகம், நம் வாழ்க்கை, நம் ஆசா பாசங்கள், உறவுகள், அதில் வரும் சிக்கல்கள், வாழ்வின் நோக்கம், குறிக்கோள், தோற்றம், வளர்ப்பு, முடிவு என்ற இவை அனைத்துமே  அந்த மூன்றை அடிப்படையாகக் கொண்டது என்று கண்டு  கொண்டார்கள்.

அது என்ன மூன்று ?

நமது சித்தாந்தம் மிக மிக விரிவாக அது பற்றி சொல்கிறது.  அந்த விரிவை பின்னொரு நாள் சிந்திப்போம்.

அந்த மூன்று என்ன என்று கச்சியப்பர் சொல்லுகிறார்.

அவை பதி , பசு, பாசம் என்ற மூன்று.  நம் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் எல்லாம் இதன் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் என்கிறார் கச்சியப்பர்.

பாடல்



சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம் பொருள்
மூன்று உள மறை எலாம் மொழிய நின்றன
ஆன்றது ஓர் தொல் பதி ஆர் உயிர்த்தொகை
வான் திகழ் தளை என வகுப்பர் அன்னவே .


பொருள்


சான்றவர் = பெரியவர்கள்

ஆய்ந்திடத் தக்க  வாம் = ஆராய்ச்சி செய்யத் தக்க

பொருள் = பொருள்கள்

மூன்று உள = மூன்று உள்ளன

மறை எலாம் = நம் வேதங்கள், உபநிடதங்கள் எல்லாம்

மொழிய நின்றன = அதையே சொல்லி நிற்கின்றன

ஆன்றது = அது என்ன என்றால்

ஓர் தொல் பதி  = பழமையான "பதி"

ஆர் உயிர்த்தொகை = உயிர்களின் கூட்டம் - "பசு"

வான் திகழ் = பெரிதாக விளங்குகின்ற

தளை  = தளை என்றால் விலங்கு, கையில் பூட்டும் விலங்கு.  அதாவது "பாசம்"

என வகுப்பர் அன்னவே . = என்று வகுப்பார்கள்

"பதி  - பசு - பாசம்"  என்ற மூன்றும் அனைத்துக்கும் அடிப்படை.

பதி கடவுள்

பசு நாம் மற்றும் உயிர் கூட்டங்கள்

பாசம் உயிரை , இந்த உலகோடு பிணிக்கும் தளை.

இது ஒரு மிகப் பெரிய தத்துவம். இதை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னவர்கள்  பின்னிய  சித்தாந்த வலை இருக்கிறதே, அது மிக மிக ஆச்சரியமானது. எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்று வியக்க வைக்கும்.

நேரம் ஒதுக்கி, தேடிப் பாருங்கள். கிடைக்காமலா போய் விடும்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post.html

No comments:

Post a Comment