Tuesday, November 12, 2019

திருவாசகம் - அறைகூவி வீடருளும்

திருவாசகம் - அறைகூவி வீடருளும்


மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?

புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

கதையோடு நின்று விடக் கூடாது.

சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும். அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள்.

கதை சொல்ல வந்த கருத்து என்ன?

திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன்.

ப்ரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.

இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால்,  நிறைய   புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது  என்று சொல்ல வந்த கதை அது.

யார் பெரியவர் , யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.

வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம்  என்று நினைக்கக் கூடாது.

"ஏழை பங்காளனை பாடுதுங்காண் அம்மானாய் " என்பார் மணிவாசகர்.

"இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் " என்பது பிரபந்தம்.

பல பட்டங்கள் பெற்றால் இறைவனை  அறிந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

பாடல்


செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் அறைகூவி வீடருளும்
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணண் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.


பொருள்


செங்கண் = சிவந்த கண்களை உடைய

நெடுமாலும்= திருமாலும்

சென்றிடந்துங் = சென்று, தோண்டி

காண்பரிய = காண்பதற்கு அரிய

பொங்கு = மலரும்

மலர்ப்பாதம் = மலர் போன்ற பாதம்

பூதலத்தே = இந்த பூவுலகில்

போந்தருளி = போய் அருளி

எங்கள் = எங்கள்

பிறப்பறுத்திட் = பிறப்பு அறுத்து

என் தரமும் = என் தரமும்

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

தெங்கு= தென்னை மரங்கள்

திரள் = திரண்டு இருக்கும்

சோலைத் = சோலைகள் சூழ்ந்த

தென்னன் = தென்னன்

பெருந்துறையான் = பெருந்துறையான்

அங்கணண் = அழகிய கண்களை உடைய

அந்தணனாய் = அந்தணனாய்

அறைகூவி = கூப்பிட்டு

வீடருளும் = வீடு பேற்றை அருளும்

அங்கருணை = அந்த கருணையை

வார்கழலே = வீர திருவடிகளை

பாடுதுங்காண் = பாடுதுங்காண்

அம்மானாய். = அம்மானாய்

வீடு பேறு அடைவது என்பது கடினமான ஒன்றா ? அதை அடைய என்னென்னவோ செய்ய வேண்டும்  என்று சொல்கிறார்கள்.

ஆனால், மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த கத்தரிக்காய், முருங்கை காய் விற்பது போல  இறைவன் "அறை கூவி" வீடு பேற்றை அருளுவானாம்.


"அறைகூவி வீடருளும்"

இந்த பேருந்து நிலையங்களில் பயணிகளை, ஊர் பேரைச் சொல்லி அழைப்பது போல,  "வீடு பேறு , வீடு பேறு போக விரும்புவர்கள் வாருங்கள் " என்று   இறைவன் கூவி கூவி அழைப்பானாம்.

நாம் தான் கேட்க மறுக்கிறோம்.

பேருந்து நிலையத்தில் எல்லா ஊருக்கும் போக வண்டிகள் இருக்கும். யாருக்கு எந்த ஊர் வேண்டுமோ, அதில் ஏறிப் போகலாம்.

வீடு பேறு அடையும் வண்டிக்கு நடத்துனர் இறைவன். கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.  யார் போகிறார்கள் அங்கே. அப்புறம் போய் கொள்ளலாம் என்று  வேறு வேறு வண்டியில் ஏறி பணம், செல்வம், புகழ், அதிகாரம், பதவி என்ற ஊர்களுக்குப் போகும் வண்டியில்  பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

வண்டியை நிறுத்தி, சரியான வண்டியில் ஏறுங்கள்.

நம்மை எல்லாம் அந்த வண்டியில் ஏற்றுவானா?  ஏற்றுவான் என்கிறார்.

"எந்தரமும் ஆட்கொண்டு" 

என்னுடைய தகுதி அறிந்தும் என்னை ஆட்கொண்டான் என்கிறான்.

யாராலும் காண முடியாத அவன், நமக்காக இங்கு வந்து, அறை கூவி அழைத்துக் கொண்டிருக்கிறான்.

திரு அம்மானை என்ற பகுதியில் இது போல இனிமையான பாடல்கள் 20 இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_12.html

No comments:

Post a Comment