Monday, September 26, 2016

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே 


தவறான தீர்ப்பினால் கோவலன் மாண்டு போனான். கண்ணகி வீறு கொண்டு எழுகிறாள்.

வாழும் நாள் எல்லாம் கணவனை பிரிந்து இருந்தவள். கோவலன் மாதவி பின்னால் போய் விட்டான். மனம் திருந்தி வாழலாம் என்று வந்தவனுடன் மதுரை வந்தாள். வந்த இடத்தில் , விதியின் விளையாட்டால் கோவலன் கொல்லப் படுகிறான்.

கண்ணகிக்கு தாங்க முடியவில்லை. இது வரை அமைதியாக இருந்த பெண், ஏரி மலையாக வெடிக்கிறாள்.

வாழ்க்கையின் மேல் உள்ள மொத்த கோபமும் பொங்கி எழுகிறது.

பாண்டியன் அரண்மனைக்கு வருகிறாள்.

வாசலில் நிற்கும் காவலனைப் பார்த்து சொல்கிறாள்...

அறிவில்லாத அரசனின் மாளிகைக்கு காவல் நிற்கும் காவலனே, கையில் ஒரு சிலம்புடன், கணவனை இழந்தவள் வாசலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் போய் சொல் என்கிறாள்.

பாடல்

வாயி லோயே வாயி லோயே 
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே 
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் 
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று 
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள்


வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

அறிவறை போகிய = ஞானம் இல்லாத

பொறியறு = புலன்கள் அறிவோடு தொடர்பு அற்ற

நெஞ்சத்து = மனதைக் கொண்ட

இறைமுறை = அரச முறை

பிழைத்தோன்= பிழைத்த அரசனின்

வாயி லோயே = வாயில் காப்பாளனே

இணையரிச் = இணை + அரி = இணையான அரிய

சிலம்பொன் றேந்திய கையள் = சிலம்பு ஒன்று ஏந்திய கையள்

கணவனை யிழந்தாள் = கணவனை இழந்தவள்

கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என = அறிவிப்பாயே, அறிவிப்பாயே என்றாள்


உணர்ச்சியின் உச்சத்தில் இளங்கோவடிகள் வடிக்கும் கவிதையின் ஆழத்தை  நாம் சிந்திக்க வேண்டும்.

வாயிலோயே, வாயிலோயே,
அறிவிப்பாயே, அறிவிப்பாயே

என்று ஏன் இரண்டு முறை கூறுகிறாள் ?

இந்த மன்னனுக்கு எதுவும் ஒரு முறை சொன்னால் புரியாது. அவசர புத்திக்காரன். ஒண்ணுக்கு இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று  நினைத்து இரண்டு முறை கூறுகிறாள்.

நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த நிறுவனத்தின்  மேலதிகாரி எப்படி இருப்பானோ அப்படி தான் , அந்த அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களும் இருப்பார்கள் என்று உலகம்  எடை போடும்.

அரசன் மோசமானவன் , அப்படிபட்ட அரசன் கீழ் வேலை பார்க்கும் வாயில் காப்பாளனே என்று அவனையும் ஏசுகிறாள் கண்ணகி.


அரசன் மேல் மூன்று குற்றங்களை சுமத்துகிறாள் கண்ணகி.


அறிவறை போகிய = மனத்  தெளிவின்மை

பொறியறு நெஞ்சத்து = பொறி என்றால் புலன்கள். கண் காது மூக்கு
போன்ற புலன்கள் , புத்தியோடு சேர்ந்து வேலை
செய்யவில்லை.காதால் கேட்டதை அப்படியே உண்மை என்று நம்பிவிட்டான்  பாண்டியன். சிந்திக்கவில்லை . அறிவுக்கு வேலை தரவில்லை.

இறைமுறை பிழைத்தோன் = அரசனை இறைவனுக்கு இணையாக வைத்துப் பார்த்தவர்கள்  நம்  முன்னோர்கள். ஏன் என்றால், இறைவனுக்கு  மூன்று தொழில். படைத்தல், காத்தல், அழித்தல் என்று.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

இறைவா என்னை படைத்து விடு என்றா ? இல்லை. அது தான் ஏற்கனவே படைத்து  விட்டானே.

இறைவா என்னை அழித்துவிடு என்றா - யாரும் அப்படி கேட்க மாட்டார்கள்.

என்னை காப்பாற்று என்றுதான் வேண்டுவார்கள்.

காப்பதுதான் இறைவனின் தொழில்களில் நாம் விரும்பி வேண்டுவது.

அரசனுக்கும் தன் குடிகளை காக்கும் கடமை இருப்பதால், அரசனை  இறைவனுக்கு ஒப்பிட்டு கூறினார்கள்.

இறை மாட்சி என்று ஒரு அதிகாரமே  வைத்தார் வள்ளுவர்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.


இருப்பதோ மன்னர் ஆட்சி. மன்னனின் அதிகாரம் வானளாவியது. அவன் ஒன்று  செய்தால் அவனை யாரும் ஏன் என்று தட்டிக் கேட்க முடியாது.

கண்ணகியோ ஒரு அபலைப் பெண். உலகம் அறியாதவள். கணவனை இழந்தவள். புரியாத, தெரியாத ஊர்.

நேரே அரண்மனைக்கு சென்று மன்னனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனையும் தருகிறாள்.

ஆட்சி எப்படி நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

முடியுமா இன்று ? தவறு செய்யும் ஒரு அரசியல்வாதியை குடிமக்கள் தட்டிக் கேட்க முடியுமா ?

அருகில் வர விடுவார்களா ?

அரசன், நீதிக்கு கட்டுப் பட்டான். குடிகளின் குறை கேட்டான். தான்  குடி மக்களுக்கு கட்டுப் பட்டவன் என்று நினைத்தான்.

ஒரு கடைக் கோடி பெண் கூட , மாளிகையைத் தட்டி நீதி கேட்க முடிந்தது.

அப்படி இருந்தது ஒரு  காலம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு பக்கம், இது சொல்லும் வாழ்க்கை நெறி முறை.

தவறை யார் செய்தாலும் தட்டி கேட்க வேண்டும். அந்த போராடும் மனோ நிலை வேண்டும்.  அரசன் என்ன செய்வானோ, ஒரு வேளை என்னையும்  வெட்டி விடுவானோ என்று கண்ணகி பயப் படவில்லை. துணிந்து போராடினாள் . இன்று , ஞாயம் தன் பக்கம் இருந்தால் கூட  போராட தயாராக இல்லை யாரும். பயந்து பயந்து வாழப் பழகி விட்டோம்.

ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவன் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள மற்றவர்களை மாட்டி விட நினைப்பார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்  நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வினாடி நிதானம் தவறினான் பாண்டியன். ஊரே எரிந்து சாம்பல் ஆனது.

யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும்.

பாடம் படிக்க வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_74.html



1 comment:

  1. அருமை இந்த காலத்து மக்களும் கண்ணகி போல் இல்லை நம்மை ஆளும் அரசியல் வாதிகளு்கு இது தெரிந்தும் தெரியாமலும் போல் நடித்து தன் சுய இன்பம் காணும் தலைவர்களே உள்ளனர்கள்.மனவருத்தம்.......?

    ReplyDelete