Sunday, July 7, 2019

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்


பயம்.

பயம் என்பது ஒரு நல்ல உணர்வு. பயம் நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். பயம் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் முட்டாள் தனமாக ஏதாவது செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்வோம்.

வண்டிக்கு brake இருப்பது போல, குதிரைக்கு கடிவாளம் இருப்பது போல, பயம் நம்மை கட்டுப் படுத்தி ஒரு எல்லைக்குள் நிறுத்துகிறது.

இவ்வளவு செய்யலாம், இதற்கு மேல் செய்யக் கூடாது என்று நம்மை அறிவுறுத்துவது பயமே.

ஆனால், அந்த பயமே அளவு கடந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும். எதற்கு எடுத்தாலும் பயந்து கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

அதே போல், ஒன்றும் செய்ய முடியாததற்கு பயந்தால் வாழ்க்கை துன்பமயமாகி விடும்.

மரணம் கட்டாயம் வரும். அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதற்கு பயந்தால் பின் எப்படி வாழ்வது.

மரணம் பற்றிய பயம்.

மீண்டும் என்னவாக பிறப்போமோ என்று பயம்.

கணவன்/மனைவி/பிள்ளைகளை விட்டு விட்டு போகிறோமே என்ற பயம்

வரும் நாட்களில் முதுமை வந்து என்ன பாடு படுத்துமோ என்ற பயம்.

தனித்து விடப் படுவோமோ என்ற பயம்.

இந்த பயத்தில் இருந்து எல்லாம் எப்படி விடுபடுவது?

பயமற்ற வாழ்க்கை எப்படி வாழ்வது?

ஒரு தனிப்பாடல் சமீபத்தில் படித்தேன். பெரிய கருத்தாழம், சொல் ஆழம் உள்ள பாடல் இல்லைதான்.  இருந்தும் அதில் ஒரு எளிமையான அழகு இருப்பதைக் கண்டேன்.

ஒரு அலங்காரமும் இல்லாமல் சிலர் அழகாக இருப்பதைப் போல...


பாடல்

“ நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப்
பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
வண்டுறங்கும் சோலை மதிலரங்கத் தேஉலகை
உண்டுறங்கு வான்.ஒருவன் உண்டு “ 


பொருள்


“ நாவுண்டு = என்னுடைய நாக்கு உண்டு

நீயுண்டு = (பெருமாளே) நீ உண்டு

நாமம் = உன்னுடைய திரு நாமத்தை

தரித்தோதப் = நாக்கில் ஏற்றுக் கொண்டு ஓத

பாவுண்டு = நல்ல பாடல்கள் உண்டு

நெஞ்சே = என்னுடைய நெஞ்சே

பயமுண்டோ = நமக்கு பயம் என்று ஒன்று உண்டா ?

பூவுண்டு = நல்ல மலர்கள் உண்டு , பூவை உண்டு அதாவது பூவில் தேனை உண்டு

வண்டுறங்கும் = வண்டுகள் உறங்கும்

சோலை  = சோலைகள் நிறைந்த

மதிலரங்கத் தே = நீண்ட மதில்களை கொண்ட திருவரங்கத்தில்

உலகை = இந்த உலகத்தை

உண்டு = வாயில் போட்டு உண்டு

உறங்கு வான்.ஒருவன் உண்டு  = உறங்குவான் (பள்ளி கொண்டான்) ஒருவன் உண்டு

கற்பனை பண்ணிப் பாருங்கள். இன்றைக்கு சுமார் 300 அல்லது 400 ஆண்டுகள் பின் நோக்கி போய் விடவேண்டும்.

அதி காலை நேரம். சூரியன் இன்னும் முழுவதும் வெளி வரவில்லை.

மின்சாரம் கிடையாது.  பெட்ரோல் டீசல் கிடையாது. பெரிய வண்டிகள் கிடையாது. செல் போன் கிடையாது.  டிவி கிடையாது.

இவ்வளவு மக்கள் தொகை கிடையாது.

திருவரங்கம். சின்ன கிராமம். 200 அல்லது 300 பேர் இருக்கலாம். நிறைய திறந்த வெளி.  ஊரின் ஓரம் காவிரியும், கொள்ளிடமும் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஊரில் நிறைய தோட்டங்கள். சோலைகள்.

சோலையில் நிறைய மலர்கள். அதில் நிறைய தேன் . அந்த தேனை குடித்த மயக்கத்தில் வண்டுகள்  தூங்குகின்றன.

ஸ்ரீரங்கத்தில், பெருமாள் அமைதியாக பள்ளி கொண்டிருக்கிறார். எங்கும் அமைதி.

தூரத்தில் யாரோ நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுகிறார்கள். இன்னொரு பக்கம் சுப்ரபாதம் கேட்கிறது.

இதற்கு  மேல் என்ன வேண்டும்.

எதைப் பற்றி பயம்?

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் முழுவதுமாக  அனுபவியுங்கள். எதிர் காலத்தை பற்றி பயந்து கொண்டே இருக்காதீர்கள். இந்த கணம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று அனுபவியுங்கள்.

பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

பயம் ஓடி விடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_7.html

2 comments:

  1. இனிமையான பாடலுக்கு நல்ல உரை.

    ஆனால் நாம் 200-300 பேர் வாழும் திருவரங்கத்தில் வாழவில்லையே, அதுதானே பிரச்சினை!

    ReplyDelete
  2. ராசிகமணி T .K .சிதம்பரநாத முதலியார் அவர்கள் ரசித்து பலபேரிடம் சொல்லி அனுபவித்த பாடல் இது.

    ReplyDelete