Tuesday, November 21, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன் 


நைமிசாரண்யம் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாள் மேல் திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்கள் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். 


அற்புதமான பாடல்கள். 


இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நினைப்பது நம் அறிவின் குறைபாடு. உருவம் இல்லா ஒன்றை நம்மால் சிந்திக்க முடியாது. ஏதோ ஒரு உருவத்தைப் பற்றிக் கொள்கிறோம். சிக்கல் என்ன என்றால், அதை விடுத்து மேலே போவது இல்லை. அதுவே சதம் என்று இருந்து விடுகிறோம். 


நம் மதம், அதில் இருந்து விடுபட பல வழிகளைச் சொல்லித் தருகிறது. 


பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன், விக்ரகத்தை கடலில் கரைத்து விடுகிறார்கள். ஏன்?  வேலை மெனக்கெட்டு செய்வானேன், பின் அதைக் கொண்டு கடலில் போடுவானேன்?


காரணம் என்ன என்றால்,


உருவமாய் இருந்தது, இப்போது அருவமாகி விட்டது. பிள்ளையார் வடிவில் இருந்த அந்த உருவம், இப்போது கடலில் கரைந்து விட்டது. இப்போது கடலைப் பார்த்தால், அதில் அந்த உருவம் இருக்கிறது என்று தெரியும். ஆனால், அதை காண முடியாது. அடுத்த கட்டம், கடலையும் தாண்டி, இந்த உலகம் பூராவும் அந்த சக்தி நிறைத்து கரைந்து நிற்கிறது என்று உணர்வது. 


இதை ஏன் சொல்கிறேன் என்றால், 


நைமிசாரண்யம் என்பது ஒரு காடு. அந்த காட்டையே இறைவானாகக் கண்டார்கள். திருவண்ணாமலையில், அந்த மலையே சிவன் என்று கொண்டாடுவார்கள். 


நைமிசாரன்யத்துள் உறை பெருமாளே, உன்னிடம் சரண் அடைந்தேன் என்று உருகுகிறார் திருமங்கை.


"இந்த பெண்ணாசையில் கிடந்து நீண்ட நாள் உழன்று விட்டேன். அது தவறு என்று உணர்ந்து கொண்டேன். இந்த பிறவி என்ற நோயில் இருந்து விடுபட எண்ணம் இல்லாமல், இந்த உலக இன்பங்களில் மூழ்கிக் கிடந்தேன். இப்போது அதையெல்லாம் அறிந்து வெட்கப் படுகிறேன். உன் திருவடியே சரணம் என்று வந்துவிட்டேன் " என்று உருகுகிறார். 


பாடல்   


வாணிலா முறுவல் சிறுனுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே


பேணினேன் அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான்,


ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந் திறத்தை


நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_21.html


(please click the above link to continue reading)



வாணிலாமுறுவல் = வான் + நிலா + முறுவல் = வானில் உள்ள நிலவைப் போல ஒரு புன்முறுவல்  


சிறுனுதல் = சிறிய நெற்றி 


பெருந்தோள் = பெரிய தோள்கள் 


மாதரார் = பெண்கள் 


வனமுலைப் = வனப்பான மார்பகங்களே 


பயனே = அதுதான் இன்பம் என்று 



பேணினேன்  = போற்றினேன் 


அதனைப் = அப்படி போற்றியதை 


பிழையெனக்கருதிப் = தவறு என்று உணர்ந்து 


பேதையேன் =  அறிவில்லா பேதையான நான் 


பிறவிநோயறுப்பான் = பிறவி என்ற நோயை நீக்கும் ,


ஏணிலேனிருந்தேன் = ஏண் இலேன் இருந்தேன் = ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தேன் 

 


னெண்ணினேன் = எண்ணினேன் (யோசித்துப் பார்த்தேன்)  


னெண்ணி = எண்ணிய பின் 


இளையவர்க் = அறிவில் சிறியவர்களின் 


கலவியிந்திறத்தை = கலவியின் திறத்தை = அவர்களோடு சேர்ந்து இருப்பதை 



நாணினேன் = வெட்கப்பட்டேன் 


வந்துந் = உன்னிடம் வந்து 


திருவடியடைந்தேன் = உன்னுடைய திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்துளெந்தாய் = நைமிசாரண்யம் என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் என் தந்தை போன்றவனே 


ஒரு தவறில் இருந்து மீள வேண்டும் என்றால், முதலில் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். 


Alcoholic Anonyms என்று ஒரு இயக்கம் இருக்கிறது. மது, போன்ற போதை பொருள்களுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு.  அந்த அமைப்பில் உள்ளவர்கள் முதலில் சொல்லுவது...


"I am so-and-so and I am an addict"


என்று ஆரம்பிப்பார்கள். 


காரணம், எது தவறு என்று தெரிந்தால் தானே அதில் இருந்து விடுபட முடியும். 


தவறு செய்து பழகி விட்டால், அதைச் செய்வதற்கு ஒரு ஞாயம் கற்பிக்கத் தொடங்கி விடுவோம். 


முதலில் ஆழ்வார், இதெல்லாம் நான் செய்த தவறுகள் என்று பட்டியலிடுகிறார். 


- பெண்ணாசையில் மூழ்கிக் கிடந்தது 

- சிறியோர் தொடர்பு 

- பிறவி பற்றி எண்ணம் இல்லாமல் இருந்தது 


அது மட்டும் அல்ல , அதை ஏன் செய்தேன் தெரியுமா என்று அதை நியாயப் படுத்த முயலவில்லை. 


"நாணினேன்", வெட்கப் படுகிறேன் என்கிறார். 


சரி, இதெல்லாம் தவறு என்று தெரிகிறது. திருத்தி என்ன செய்வது?


"அதெல்லாம் எனக்குத் தெரியாது...உன்னிடம் வந்து விட்டேன்...இனி உன்பாடு' என்று பெருமாளிடம் விட்டு விடுகிறார்.   


பாசுரத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். ஏதோ பெருமாளிடம் நேரில் பேசுவது போல இருக்கும். 



2 comments:

  1. மணிகண்டன்November 22, 2023 at 2:56 PM

    ஐயா திருவாசகம் விளக்கம் அதிகம் எழுதுங்கள், நீங்கள் எழுதிய திரு அம்மானை விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது. படிக்க படிக்க திருவாசகம் பாடல்கள் முழுவதற்கும் பொருள் தெரிந்து படிக்க ஆர்வம் அதிகமாகிறது. தயவுசெய்து தினம் ஒரு பதிவாவது திருவாசகத்திற்கு எழுதுங்கள் ஐயா நன்றி.

    ReplyDelete
    Replies
    1. குருவருள் கூடின் அது நிகழலாம்.

      Delete