Sunday, June 1, 2014

இராமாயணம் - ஓடிப் போ

இராமாயணம் - ஓடிப் போ 


சீதையைத் தொடர்ந்து வந்தாள் இந்த சூர்பனகை , நல்லாள் பின் சென்றாள் பொல்லாள், சூர்பனகையால் சீதைக்கு ஏதேனும் துன்பம் வருமோ என்று எண்ணி அவளின் மூக்கையும், காதையும், முலையையும் நான் வெட்டினேன் என்றான் இலக்குவன், இராமனிடம்.

அவன் அப்படி சொல்லி முடிக்கக் கூட இல்லை, சூர்பனகை உடனே சொல்லுவாள், தன் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருந்தாள் எந்த பெண்ணுக்குத்தான் கோபம் வராது என்று.

இராமனைத்  தன் கணவனாகவே அவள் நினைத்துக் கொள்கிறாள்.

இராமன் திருமணம் ஆனவன் என்று சூர்பனகை அறிவாள் .

அதைக் கேட்ட பின் இராமன் சொல்கிறான்

"மாயப் போரில் வல்லவர்களான அரக்கர்களின் குலத்தை ஒரேயடியாக அழிக்க வந்திருக்கிறோம் நாங்கள். நீ தீய சொற்களை சொல்லி வீணாகப் போகாதே. இந்த காட்டை விட்டு ஓடிப் போ "

என்கிறான்.

பாடல்

'பேடிப் போர் வல் அரக்கர்
     பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று,
     தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப் போகாதே; இம்
     மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப் போ' என்று உரைத்த
     உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்:

பொருள்

'பேடிப் போர் = மாயப் போரில்

வல் அரக்கர் = வல்லவர்களான அரக்கர்களின்

பெருங் குலத்தை = பெரிய குலத்தை

ஒருங்கு அவிப்பான் = ஒரேயடியாக அழிப்பதற்கு

தேடிப் போந்தனம் = தேடி புறப்பட்டு வந்து இருக்கிறோம்

இன்று = இன்று

தீ மாற்றம் = தீ போன்ற மாற்று பேச்சுகளை

சில விளம்பி = சிலவற்றைச் சொல்லி

வீடிப் போகாதே = வீணாகப் போகாதே

இம்  = இந்த

மெய் வனத்தை விட்டு = உண்மையான வனத்தை விட்டு அல்லது உண்மை தேடும் முனிவர்கள் நிறைந்த வனத்தை விட்டு (வனம் = காடு )

அகல ஓடிப் போ' = விலகி (அகன்று ) ஓடிப் போ

என்று உரைத்த = என்று கூறிய

உரைகள் தந்தாற்கு, =வார்த்தைகளை சொன்ன இராமனுக்கு

அவள் உரைப்பாள் = அவள் (சூர்பனகை) பதில் சொல்லுவாள்

இலக்குவன் சந்தேகப் பட்டான். அதில் உண்மையும் இருந்தது. சீதைக்கு தீமை செய்யத்தான்  சூர்பனகை சென்றாள் . அதில் சந்தேகம் இல்லை.

மூக்கையும் , காதையும், முலையையும் வெட்ட வேண்டிய அளவுக்கு அது ஒரு பெரிய  தவறா ?

சூர்பனகை செய்த தவறுதான் என்ன ?

நான் படித்த உரைகளில் இரண்டு பெரிய தவறுகளைச் சொல்லுகிறார்கள்:

முதலலவது, சூர்பனகை இராமனையும் சீதையையும் பிரிக்க நினைத்தாள். இராமனையும்   சீதையையும் ஒன்றாகத்தான் சேர்த்துப் பார்க்க வேண்டும். சூர்பனகை இராமன் மட்டும் வேண்டும் என்றால். இராவணன், சீதை மட்டும் வேண்டும் என்றான். இது ஒரு பாவம் என்று சொல்கிறார்கள்.

அனுமன் சீதையையும் இராமனையும் சேர்க்க பாடு பட்டான். சிரஞ்சீவி ஆனான்.

இராவணனும் சூர்பனகையும் அவர்களை பிரிக்க முயன்றார்கள். அழிந்து போனார்கள்.

ஒரு படி   மேலே போனால், கணவன் மனைவியை பிரிப்பது பெரிய குற்றம்.

இன்னொரு குற்றம்,ஒரு பெண் தன் உணர்சிகளை, குறிப்பாக காம உணர்சிகளை  வெளிப்படையாக காட்டியது ஒரு தவறு என்கிறார்கள். பெண் அளவுக்கு அதிகமாக  காம வசப் பட்டால் அழிவு நேரும் என்கிறார்கள். அடக்கம் என்ற பெண்மை  குணம் இல்லாமல் காமத்தை கொட்டி தீர்த்தது  ஒரு குற்றம்  என்று ஒரு வாதம் இருக்கிறது.

உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்....


Friday, May 30, 2014

திருக்குறள் - நினைக்கும் உயிர் காதல் மனம்

திருக்குறள் - நினைக்கும் உயிர் காதல் மனம் 


அவனும் அவளும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தார்கள். திருமணமும் செய்து  கொண்டார்கள். அல்லது காதலிக்காமலேயே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாள் வாழ்க்கை மிக இனிமையாக  இருந்தது.

நாள் ஆக நாள் ஆக, இனிமை குறையத் தொடங்கியது.

இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்.

காரணம் என்ன ?

வள்ளுவர் ஆராய்கிறார்....

நாள் ஆக நாள் ஆக ...ஒருவர் மற்றவரின் குறைகளை காண ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் காரணம்.

மனைவி கணவனின் குறையை கண்டு அதை அவனிடம் சொல்கிறாள்.

அவனுக்கு கோபம் வருகிறது.

நீ மட்டும் என்ன உயர்வா என்று அவன் அவளின் குறைகளை கண்டு சொல்கிறான்.

அவளுக்கு கோபம் வருகிறது.

 இதுதான் காதல் குறையக் காரணம்.

காதல் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மற்றவரின் குறைகளை காணாமல் அவர்களின் நல்ல திறமைகளை கண்டு பாராட்ட வேண்டும்.


பாடல்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு”   


பொருள்

எள்ளின் = தவறு கண்டு சிரித்தால்

இளிவாம் = கீழ்மை

என்று எண்ணி = என்று நினைத்து

அவர் = அவருடைய

திறம் = திறமைகளை

உள்ளும் = நினைக்கும்

உயிர்க்காதல் நெஞ்சு = உயிர் போல காதல் கொண்ட மனம்

 
உங்கள் துணைவியோ, துணைவனோ - அவர்களின் நல்ல பண்புகளை, திறமைகளை  பட்டியல் போடுங்கள். அவற்றைப் பற்றி அவர்களிடம் சமயம் வரும்போதெல்லாம் உயர்வாகப்   பேசுங்கள்.

காதல் வராமல் எங்கே போகும் !

இராமாயணம் - சூர்பனகை செய்த தவறு

இராமாயணம் - சூர்பனகை செய்த தவறு 


சூர்பனகை என்ன தவறு செய்தாள் என்று இராமன் இலக்குவனிடம் கேட்டான்.

அதாவது, இராமனுக்குத் தெரியாது சூர்பனகை என்ன செய்தாள் என்று.

இலக்குவனுக்கும் சரியாகத்  தெரியவில்லை.

இவள் சீதையின் பின்னால் போனாள். ஒரு வேளை இவள் சீதையை பிடித்து தின்பதற்கோ, அல்லது இவளுக்கு பின் வேறு யாரும் இருக்கிறார்களோ...எதற்காக இவள் சீதையின் பின்னால் போனால் என்று தெரியவில்லை...கண்கள் தீப் பறக்க இவள் கோபத்தோடு சீதை பின்னால் போனாள்

அவ்வளவுதான் சூர்பனகை செய்த தவறு என்று இலக்குவன் கூறுகிறான்.

சீதைக்கு ஆபத்து என்று இலக்குவன் நினைத்ததில் தவறு காண முடியாது.

ஒரு விசாரணை இல்லை. சந்தேகத்தின் மேல் கொடுக்கப்பட்ட தண்டனை இது.

பாடல்
 

'தேட்டம்தான் வாள் எயிற்றில் 
     தின்னவோ? தீவினையோர் 
கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த 
     பொருள் உணர்ந்திலனால்; 
நாட்டம்தான் எரி உமிழ, 
     நல்லாள்மேல் பொல்லாதாள் 
ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று 
     எழுந்தாள்' என உரைத்தான்.

பொருள்

தேட்டம்தான் = தேடுவது (சூர்பனகை தேடுவது )

வாள் = வாள் போன்ற கூரிய

எயிற்றில் = பற்களால்

தின்னவோ? = தின்பதற்கோ ? (கேள்விக் குறி...சந்தேகம் )

தீவினையோர் = தீவினை செய்பவர்கள்

கூட்டம்தான் = கூட்டம்

புறத்து உளதோ? = வெளியே இருக்கிறதோ (மறுபடியும் கேள்விக் குறி...சந்தேகம்)


 குறித்த பொருள் = எதற்காக இவள் வந்து இருக்கிறாள் என்று 

உணர்ந்திலனால் = தெரியாததால்

நாட்டம்தான் = அவளின் நோக்கம், இங்கே விழி

எரி உமிழ = தீக் கக்க
 
நல்லாள்மேல் = சீதையின் மேல்

பொல்லாதாள் = பொல்லாதவளான சூர்பனகை

ஓட்டந்தாள்; = பின்னால் வேகமாக போனாள்

அரிதின் = யாருக்கும் தெரியாமல்

இவள் = சூர்பனகை

உடன்று = தீராக் கோபத்தோடு

எழுந்தாள்' = எழுந்தாள்

என உரைத்தான் = என்று கூறினான்

சூர்பனகை கோபத்தோடு சீதையின் பின்னால் போனாள் .

அது தான் அவள் செய்த தவறு என்று இலக்குவன் கூறுகிறான்.


சீதைக்கு துணையாக இலக்குவன் என்ற வீரம் மிக்க ஆண்மகன் இருக்கிறான் என்று தெரிந்தாலே சூர்பனகை ஓடிப் போய் இருப்பாள்.

அவளை மிரட்டி விரட்டி இருக்கலாம்.

வேண்டுமானால் இரண்டு அடி கூட கொடுத்து இருக்கலாம்.

அவள் முடியைப் பிடித்து இழுத்து, காலால் உதைத்து, காதையும், மூக்கையும், முலையும் வெட்ட வேண்டுமா ?

Thursday, May 29, 2014

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின்

கலிங்கத்துப் பரணி - விடுமின் பிடிமின் 


அவனோடு ஊடல் கொண்டு கதவைத் திறக்காமல் இருக்கிறாள் அவள். அவளிடம் கெஞ்சுகிறான் அவன்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் போது, அவள் ஆடையை அவன்  பற்றுவான்.அப்போது அவள், அய்யோ விடுங்கள் விடுங்கள் என்று மழலை மொழியில் கெஞ்சுவாள் அவனிடம். விடு விடு என்று சொன்னாலும், அந்த இடத்தை விட்டு விலக மாட்டாள். அது என்னவோ, விடாதே, பிடித்துக் கொள் என்று சொல்வது மாதிரி இருக்கிறது அவனுக்கு. உண்மை கூட அதுதானோ என்னவோ.

அவள் அப்படி விலகிச் செல்லாமல் இருப்பது, அவனுக்கு அருள் செய்வது மாதிரி  இருக்கிறதாம்.


பாடல்

விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
     வெகுளி மென் குதலை துகிலினைப் 
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய் 
   பெடைந லீர்கடைகள் திறமினோ.

பொருள்

விடுமின் = விடுங்கள்

எங்கள்துகில் = எங்கள் ஆடைகளை

விடுமின் = விடுங்கள்

என்று = என்று

முனி வெகுளி = கோபித்து (ஊடல்)

மென் = மென்மையான

குதலை = மழலைச் சொல்லால் 

துகிலினைப் = ஆடையை

பிடிமின் = பிடித்து கொள்ளுங்கள்

என்ற பொருள் விளைய = என்ற அர்த்தம் தோன்ற

நின்றருள்செய் = நின்று அருள் செய்யும்

பெடை = அன்னம்

நலீர் = நல்லவர்களே

கடைகள் திறமினோ = கதவுகளை திறவுங்கள்


அந்த அருள் என்ற வார்த்தையை கண்டு நான் அசந்து போனேன்.

தெய்வம் தான் அருள் புரியும். அருள் கிடைத்தால் முக்தி கிடைக்கும். சொர்க்கம் கிடைக்கும்.

அவள் அதைத்தானே தருகிறாள்.

அதுவும் நின்று அருள் செய்யும்.  ஆடையை விடு விடு என்று சொன்னாலும், அவனை விட்டு விலகாமல் அங்கேயே நின்று அவனுக்கு அருள் செய்கிறாள்.

"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை  என் சொல்வேன்"



இராமாயணம் - பகை என்ற சொல்லே இல்லாத இராவணன்

இராமாயணம் - பகை என்ற சொல்லே இல்லாத இராவணன் 


இலக்குவனனால் மூக்கும், காதும், முலையும் வெட்டப்பட்ட சூர்பனகை இராமனிடம் வந்து முறையிடுகிறாள்.

இராமனுக்கு அவள் யார் என்றே தெரியவில்லை.

முதலில் வரும் போது அழகான பெண்ணாக வந்தவள் இப்போது அரக்கி வடிவில், உடல் அவயங்கள் எல்லாம் அறுபட்டு இரத்தம் வழிய நிற்பதைப் பார்த்த பின் இராமனுக்கு அவளை யார் என்றே தெரியவில்லை.

நீ யார் என்று கேட்கிறான்..."உன் மேல் அன்பு வைத்த பாவம் அன்றி வேறு ஒன்றும் செய்யாதவள் " என்று சூர்பனகை கூறிய பின்னும்.

சூர்பனகைக்கு மேலும் கோபம் வருகிறது...

"என்னை நீ அறிய மாட்டாயா ? யாருடைய சீற்றத்தைக் கண்டால் இந்த உலகம் அனைத்தும் பயந்து அவன் முன் எதிர்த்து நிற்கப் பயபடுமோ, எவன் இலை போன்ற கூறிய வேலை உடையவனோ, எவன் விண்ணுலகம் உட்பட அனைத்து உலகையும் உடையவனோ அந்த இராவணின் தங்கை " என்றாள் .


பாடல்

அவ் உரை கேட்டு, அடல் அரக்கி, 
     'அறியாயோ நீ, என்னை? 
தெவ் உரை என்று ஓர் உலகும் 
     இல்லாத சீற்றத்தான்; 
வெவ் இலை வேல் இராவணனாம், 
     விண் உலகம் முதல் ஆக 
எவ் உலகும் உடையானுக்கு 
     உடன்பிறந்தேன் யான்' என்றாள்.

பொருள்

அவ் உரை கேட்டு = அந்த உரையைக் கேட்டு. "நீ யார்": என்று இராமன் கேட்ட அந்த உரையைக் கேட்டு 

அடல் அரக்கி = சண்டை போடும் அரக்கி

'அறியாயோ நீ, என்னை? = என்னை நீ அறிய மாட்டாயா ?

தெவ் உரை = பகை என்ற சொல்

என்று = என்று

ஓர் உலகும் இல்லாத = ஒரு உலகிலும் இல்லாத

சீற்றத்தான் = கோபம் கொண்டவன். அவன் கோபத்தைக் கண்டால், அவன் முன் பகை கொண்டு நிற்க யாரும் அஞ்சுவார்கள் 

வெவ் இலை= இல்லை போன்ற

வேல் இராவணனாம் = வேலைக் கொண்ட இராவணன்

விண் உலகம் முதல் ஆக = விண்ணுலகம் தொடங்கி

எவ் உலகும் உடையானுக்கு = அனைத்து உலகையும் உடையவனுக்கு

உடன்பிறந்தேன் யான்' என்றாள்.= உடன் பிறந்தவள் நான்

ஒரு புறம் வலி. இன்னொரு புறம் அவமானம். இன்னொரு புறம் இராமனை அடைய முடியவில்லையே  என்ற ஏக்கம், ஆதங்கம். இதற்கு நடுவில் "நீ யார்" இராமனே  கேட்ட வலி.

இத்தனைக்கும் நடுவில் நிற்கிறாள் சூர்பனகை.

அப்போதும் அவள் தன் அண்ணனின் பெருமையை மறக்கவில்லை. அவன் பெருமை  பேசுகிறாள்.

இராமன் அடுத்து என்ன செய்தான் ?


Wednesday, May 28, 2014

கம்ப இராமாயணம் - அன்பு செய்த பிழை

கம்ப இராமாயணம் - அன்பு செய்த பிழை 


மூக்கையும், காதையும் மற்றும் முலையையும் அறுக்கும் அளவுக்கு சூர்பனகை செய்த பிழைதான் என்ன ?

அவ்வாறு அறுபட்ட சூர்பனகை வலியில் துடிக்கிறாள். துவள்கிறாள். அண்ணனை அழைக்கிறாள். தனக்கு நேர்ந்த துன்பத்தை வாய் விட்டு அழுது அரற்றுகிறாள். அந்த வனத்தில், கேட்பார் யாரும் இல்லை.

அப்போது, அங்கு இராமன் வருகிறான்.

இராமனிடம் முறையிடுகிறாள்.

இராமனின் முகத்தைப் பார்த்து, வயற்றில் அடித்துக் கொண்டு, கண்ணீரும் இரத்தமும் ஒழுகி , அவை நிலத்தை சகதியாக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சொல்வாள், அந்தோ, உன் திருமேனி மேல் அன்பு செய்த ஒரு பிழையால் நான் பட்ட பாடை கண்டாயா என்று அவன் காலில் விழுந்தாள்.

சூர்பனகை மொத்தம் செய்தது அந்த ஒரு பிழைதான். இராமன் மேல் அன்பு கொண்டாள் . அவனை அடைய ஆசைப் பட்டாள்.

அவ்வளவுதான்.


பாடல்

'வந்தானை முகம் நோக்கி, 
     வயிறு அலைத்து, மழைக் கண்ணீர், 
செந் தாரைக் குருதியொடு 
     செழு நிலத்தைச் சேறு ஆக்கி, 
அந்தோ! உன் திருமேனிக்கு 
     அன்பு இழைத்த வன் பிழையால் 
எந்தாய்! யான் பட்டபடி 
     இது காண்' என்று, எதிர் விழுந்தாள்.

பொருள்

'வந்தானை = வந்த இராமனை

முகம் நோக்கி = அவன் முகத்தைப் பார்த்து

வயிறு அலைத்து = வயிற்றில் அடித்துக் கொண்டு

மழைக் கண்ணீர் = மழையே கண்ணீராக கொட்ட

செந் தாரைக் = சிவந்த நீர் அருவி. அதாவது, இரத்தம் அருவி போல  கொட்டுகிறது.

 குருதியொடு = இரத்தத்தோடு

செழு நிலத்தைச் சேறு ஆக்கி = நல்ல நிலத்தை சேறாக்கி

அந்தோ! = ஐயோ

உன் திருமேனிக்கு = உன் திருமேனிமேல்

அன்பு இழைத்த = அன்பு வைத்த

வன் பிழையால் = பெரிய பிழையால்

எந்தாய்! = என் தந்தை போன்றவேன்

யான் பட்டபடி = நான் பட்டவைகளை அப்படியே

இது காண்' =  இதைப் பார்

என்று = என்று

எதிர் விழுந்தாள் = அவன் முன் விழுந்தாள் .

சூர்பனகையை பொறுத்த வரை , அவள் செய்த ஒரே பிழை இராமன் மேல் அன்பு  வைத்தது. 

பின் இராமன் சூர்பனகையை விசாரிக்கிறான், அடுத்து இலக்குவனை விசாரிக்கிறான். பின் நடந்தது என்ன ?

பார்ப்போம்.


ஐந்திணை ஐம்பது - நண்டே , வழியை அழிக்காதே

ஐந்திணை ஐம்பது - நண்டே , வழியை அழிக்காதே 


அது ஒரு கடற்கரை கிராமம்.

தலை வருடும் காற்று, செவி வருடும் அலை ஓசை. பரந்து பட்ட மணல் வெளி.

அவளை விட்டு அவன் பிரிந்து சென்று விட்டான். அவன் போன வழி பார்த்து அவள் காத்து இருக்கிறாள். அவன் ஞாபகமாக அவன் ஒன்றையும் விட்டுச் செல்லவில்லை. ஒரு கடிதம், ஒரு சாக்லேட் பேப்பர், ஒரு பேனா என்று ஒன்றும் தந்து விட்டுச் செல்லவில்லை.

அவன் நினைவாக அவளிடம் இருப்பது ஒன்றே ஒன்று தான்....அவன் தேர் சென்ற வழித் தடம். அதைப் பார்க்கும் போதெல்லாம் அவன் நினவு அவளை வாட்டும்.

அந்த வழித் தடத்திருக்கும் வந்தது ஆபத்து.

அவள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வழிகளில் உள்ள நண்டுகள் வெளியே வந்து அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலையும் போது , தலைவன் சென்ற அந்த வழித் தடத்தின் மேலும் நடக்கின்றன.


அவள் பதறுகிறாள் .

நண்டிடம் சொல்லுகிறாள், நண்டு தயவுசெய்து அந்த தேர் தடத்தின் மேல் நடந்து அதை அழித்து விடாதே என்று அந்த நண்டிடம் வேண்டுகிறாள்.


பாடல்


கொடுந்தா ளலவ ! குறையா மிரப்பே
மொடுங்கா வொலிகடற் சேர்ப்ப - னெடுந்தேர்
கடந்த வழியையெங் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ.

பொருள்


கொடுந்தா ளலவ ! = வளைந்த கால்களை உள்ள நண்டே 

குறையா மிரப்பே = என்னுடைய குறையை உன்னிடம் கூறி வேண்டுகிறேன்

மொடுங்கா வொலி = ஒடுங்கா ஒலி. நிற்காமல் வரும் அலை ஓசை

கடற் சேர்ப்ப = கடற்கரையின் தலைவன்

னெடுந்தேர் = நெடுந்தேர். நீண்ட தூரம் சென்ற தேர். அவளை விட்டு விலகி நீண்ட தூரம் சென்று விட்டான்.

கடந்த வழியை = சென்ற வழியை

யெங் கண்ணாரக் காண = என் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ = அவற்றின் மேல் நடந்து சிதைக்காதே நீ

மலரினும் மெல்லியது காமம் என்றார்  வள்ளுவர்.அந்த மென்மையான காதலை  இங்கே காணலாம்.