Tuesday, September 16, 2014

விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது

விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது 


எல்லோரும் ஒரு கால கட்டத்தில் தேவை இல்லாதவர்களாகப் போய் விடுகிறோம்.

நம்மிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் வரை தான் உலகம் நம்மை வேண்டும்,  விரும்பும்.அதற்குப் பின், தூக்கிப் போட்டு  விடும்.

எப்படி எல்லாம் என் பின்னால் சுற்றினார்கள், இப்போது ஒரு நாதியும் இல்லை எனக்கு என்று சொல்லும் ஒரு காலம் எல்லோருக்கும் வரும். அப்போது வருத்தப் படக் கூடாது என்று இப்போதே நம்மை தயார் படுத்துகிறது விவேக சிந்தாமணி.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டால் பெற்றோரின் சொல்லை கேட்க  .மாட்டார்கள்.  வயதானால் மனைவி கணவனை மதிக்க மாட்டாள். எல்லா வித்தையும் கற்ற பின்னால் சீடன் ஆசிரியனை மதிக்க  மாட்டான். நோய் குணமாகி விட்டால் நோயாளி மருத்துவனை மதிக்க மாட்டான்.

இது உலக இயற்கை. உலகம்  சுயநலமானது. நம்மால் உபயோகம் இருக்கும் வரைதான் உலகம் நம்மை  மதிக்கும். அது தகப்பனாக இருந்தாலும்  சரி, கணவனாக இருந்தாலும் சரி, ஆசிரியனாக இருந்தாலும் சரி, மருத்துவனாக இருந்தாலும் சரி....எல்லோருக்கும் இதே கதிதான்.

இவர்கள் தான் உலகம் என்று உடல் பொருள் ஆவி அனைத்தையும்   அவர்களுக்காக   செலவிடுவது உசிதமா ?

பாடல்


பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் 
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள் 
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான் 
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்

(பண்டிதர் , இங்கே மருத்துவர் )

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 2

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 2


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )


Monday, September 15, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 1

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 1 


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்

சிந்திப்போம் 

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி 


(கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். மற்றவர்கள் தயவு செய்து இதைப் படிக்க  வேண்டாம். பெண்ணின் உடல் அழகை வர்ணிக்கும் பாடல். கொஞ்சம் அதிகப்  படியாகவே. வெளிப்படையான வர்ணனைகளில் முகம் சுளிப்பவர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)



அவளின் தொப்புளில் இருந்து கீழே செல்லும் வழியில் மெல்லிய கரிய முடி, கீழே செல்லச் செல்ல அடர்ந்து கருப்பாக உள்ளது. அது ஏதோ கரிய நாகம் படம் எடுத்து ஆடுவது போல இருக்கிறது. அந்த நாகம் கீழே இருந்து அவளின் முகத்தை பார்த்தது. அந்த முகம் நிலவு போல இருந்தது. நிலவைக் கண்டு நாகம் படம் எடுத்து ஆடியது.

ஆனால், அந்த நிலவை இரண்டு மலைக் குன்றுகள் மறைத்தன. உடனே அந்த கரு நாகம், அந்த தடையை அவளுடைய கண்களிடம் சொல்லியது. அந்த கண் நீண்டு காதுவரைப் போய் அந்த செய்தியை காதிடம் சொன்னது.

பாடல்

உந்தியின் சுழியின் கீழ் சேருரோமமாம் கரியநாகம் 
சந்திரன் எனவே எண்ணித் தையலாள் முகத்தை நோக்க 
மந்திர கிரிகள் விம்மி வழிமறித் திடுதல் கண்டு 
சிந்துரக் கயற் கண்ணோடிச் செவிதனக்கு உரைத்ததம்மா

பொருள்

உந்தியின்  = வயிற்றின்

சுழியின் = தொப்புளில்

கீழ் = கீழே

சேருரோமமாம் = சேருகின்ற ரோமங்கள்

கரியநாகம் = கரிய நாகம் படம் விரித்து ஆடுவதைப் போல இருக்கிறது

சந்திரன் எனவே = சந்திரன் என்று

எண்ணித் = நினைத்து

தையலாள் முகத்தை நோக்க = அந்த பெண்ணின் முகத்தை நோக்க

மந்திர கிரிகள் = மந்திரம் போன்ற இரண்டு மலைகள்

விம்மி = விம்மி

வழிமறித் திடுதல் கண்டு = பார்க்கும் வழியை மறைப்பது கண்டு

சிந்துரக்  = சிவந்த

கயற் = மீன் போன்ற

கண்ணோடிச்  = கண்ணோடு சொல்ல. அது

செவிதனக்கு உரைத்ததம்மா = செவியிடம் சொன்னது



Sunday, September 14, 2014

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே 



பாடல்

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

சீர் பிரித்த பின்

நிலந்தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே

பொருள் 

நிலந்தன் மேல் வந்து அருளி = நிலத்தின் மேல் வந்து அருளி.  மனிதன் இறைவனை காலம் காலமாய்  தேடிக் கொண்டிருக்கிறான். தேடி கண்டு அடைய முடியாதவன் இறைவன் என்று அவனுக்கு புரிவதில்லை. தேடுகிறோம் என்றால் எதைத் தேடுகிறோம் என்று தெரிய வேண்டும். அது எப்படி இருக்கும், எந்த மாதிரி இருக்கும், என்ன வடிவில் இருக்கும், தெரிய வேண்டும். அது தெரியாமல் எப்படி தேடுவது ? அது மட்டும் அல்ல, அது எங்கே இருக்கும் என்றும் தெரிய வேண்டும். தொலைத்தது ஒரு இடத்தில், தேடுவது இன்னொரு இடத்தில் என்றால் கிடக்குமா ? இத்தனையும் தெரிந்து விட்டால் பின் எதற்கு தேடுவது ?

தேடினால் கிடைக்காது என்று நம் மதம் பல விதங்களில் சொல்லி இருக்கிறது. மாலும், அயனும் தேடிக் காண முடியாத திருவடி என்று சொல்வது ஒரு குறியீடு. தேடினால் கிடைக்காது என்பது அதன் அர்த்தம்.

தேடுவதை நிறுத்தினால் ஒரு வேளை கிடைக்கலாம்.

மணிவாசகர் சொல்கிறார் - நிலத்தில் வந்து அருளினான் என்று. அவனே வந்து, அவனே அருளினான்.

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்

என்பது மற்ற மத நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்து மதம், அதிலும் குறிப்பாக சைவ மதம், தேடினால் அடைய முடியாது என்றே சொல்லி வந்திருக்கிறது.


நீள் கழல்கள் காட்டி = தன்னுடைய நீண்ட கழல் அணிந்த திருவடிகளை காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் = நாயை விட கீழாக இருந்த அடியேனுக்கு

தாயிற் சிறந்த = தாயை விட சிறந்த

தயாவான தத்துவனே. = தயாவான தத்துவனே

மாசற்ற சோதி = குற்றம் குறை இல்லாத சோதியே

மலர்ந்த மலர்ச்சுடரே = மலர்ந்த மலர் போன்ற சுடரே. சுடர் என்றால் வெளிச்சம் இருக்கும். வெப்பமும் இருக்கும். இந்தச் சுடரில் வெளிச்சம் இருக்கும், ஆனால் மலர் போல குளிர்ச்சியாக இருக்கும். மலர்ந்த மலர்ச் சுடர். ஞானத்தைத் தரும், துன்பத்தைத் தராது.

தேசனே = குரு போன்றவனே

தேனார் அமுதே  = தேனே, அருமையான அமுதம் போன்றவனே

சிவபுரனே = சிவ புரத்தில் உள்ளவனே

பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே = பாசம் என்ற பற்றை அறுத்து காவல் புரியும் ஆரியனே



திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம்

திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம் 


வரலாறு என்பது அரசர்களின், மந்திரிகளின், சேனாதிபதிகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிய அளவுக்கு சாதாரண மக்களைப் பற்றிப் பேசுவது இல்லை.

யானைகள் சண்டை இட்டால், இடையில் கிடந்து நசுங்கும் செடிகளைப் பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்.

மாணிக்க வாசகரின் பக்தியை, அவரின் தமிழை உலகுக்கு காட்ட நினைத்த இறைவன், வைகையில் வெள்ளப் பெருக்கு  வர  வைத்தார்.

வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கரையை பலப் படுத்த வேண்டும் என்பது அரசனின் ஆணை.

தண்டோரா போட்டு சொல்லியாகி விட்டது.

அப்போது.....

அந்த ஊரில் (மதுரையில்) எல்லோருக்கும் ஆள் கிடைத்து விட்டது, ஒருத்தியைத் தவிர. அவள் பெயர் வந்தி . அவள் மதுரையின் தென் கிழக்கு திசையில் வசிப்பவள். மிக வயதானவள்.

பாடல்


இந் நிலை ஊரில் உள்ளார் யாவர்க்கும் கூலி யாளர் 
துன்னி முன் அளந்த எல்லைத் தொழில் முறை மூண்டு 
                                                       செய்வார் 
அந்நிலை நகரின் தென் கீழ்த் திசை உளாள் அளவில் 
                                                       ஆண்டு 

மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி பேர் வந்தி என்பாள்.


பொருள்

இந் நிலை = அந்த நிலையில்

ஊரில் உள்ளார் யாவர்க்கும் = ஊரில் உள்ள அனைவர்க்கும்

கூலி யாளர் = கூலி வேலை செய்பவர்கள் கிடைத்து, அவர்களும்

துன்னி = செறிதல் (ஒன்றாகக் கூடுதல்)

முன் அளந்த எல்லைத் = முன்பே யார் யாருக்கு எந்த இடத்தில் கரையை அடைக்க வேண்டும் என்று அளந்து கொடுத்த எல்லையில்

தொழில் முறை மூண்டு = தொழில் செய்ய ஆவலுடன்

செய்வார் = செய்வார்

அந்நிலை = அந்த நிலையில்

நகரின் = மதுரை நகரின்

தென் கீழ்த் திசை உளாள் = தென் கிழக்கு திசையில் உள்ளவள்

அளவில் = காலத்தில்

ஆண்டு மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி = ஆண்டுகள் பல கழிந்த நரை மூதாட்டி ஒருத்தி

 பேர் வந்தி என்பாள் = அவள் பேர் வந்தி.



Saturday, September 13, 2014

இராமாயணம் - வாலியின் குற்ற உணர்வு

இராமாயணம் - வாலியின் குற்ற உணர்வு 


வாலி இறக்கும் தறுவாயில், இராமனிடம் சுக்ரீவனை அடைக்கலப் படுத்துகிறான். என் தம்பி தவறு செய்தால் அவனை தண்டித்து விடாதே என்று வேண்டுகிறான். அனுமனை இராமனிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். "உன் கையில் உள்ள வில்லைப் போன்ற ஆற்றல் உள்ளவன் இவன் "என்று அனுமனைப் பற்றி கூறுகிறான்.

பின் தன் மகன் அங்கதனை அழைத்து வரச்   சொல்கிறான்.அவனை இராமனிடம் அடைக்கலப் படுத்துகிறான்.

பின் இறந்து போகிறான்.

எல்லோரும் அந்த இடத்தை விட்டு கிளம்பிப் போகிறார்கள். வாலி இறந்த செய்தி கேட்டு அவன் மனைவி தாரை வந்து அவன் மேல் விழுந்து ..புலம்புகிறாள்...

பாடல்

வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு
      இலா உலகில் இன்பம்
பாலியா, முன்னர் நின்ற பரிதி
      சேய் செங் கை பற்றி,
ஆல் இலைப் பள்ளியானும்,
      அங்கதனோடும், போனான்;
வேல் விழித் தாரை கேட்டாள்;
      வந்து, அவன் மேனி வீழ்ந்தாள்.

பொருள்

வாலியும் ஏக = வாலி வானகம் ஏக

யார்க்கும் = எவருக்கும்

வரம்பு இலா உலகில் = எல்லை அற்ற உலகில்

இன்பம் பாலியா = இன்பத்தை நல்கும்

முன்னர் நின்ற = முன்னால் நின்ற

பரிதி சேய் = சூரியனின் மகன் (சுக்ரீவன் )

செங் கை பற்றி = சிவந்த கைகளைப் பற்றிக் கொண்டு

ஆல் இலைப் பள்ளியானும் = ஆல் இலையில் பள்ளி கொண்ட அந்த பரந்தாமனும்

அங்கதனோடும், போனான் = அங்கதனையும் அழைத்துக் கொண்டு போனான்

வேல் விழித் தாரை கேட்டாள் = (வாலி இறந்த செய்தியை) வேல் போன்ற விழியைக் கொண்ட தாரை கேள்விப் பட்டு

வந்து, அவன் மேனி வீழ்ந்தாள் = போர்க் களத்துக்கு வந்து அவன் மேல் விழுந்தாள்

இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இடம் எது என்றால்....

சுக்ரீவனை அடைக்கலப் படுத்தினான் வாலி

அனுமனை அறிமுகம் செய்து வைத்தான்

அங்கதனை அழைத்து வரச் செய்து இராமனிடம் ஒப்புவித்தான்

ஆனால் ....தன் மனைவி தாரையை அழைத்து வரச் சொல்லி ஒரு வார்த்தை பேசவில்லை.

ஏன் ?

சொல்லி அனுப்பி இருந்தால் அவளும் வந்திருப்பாள் தானே ? கடைசியாக அவளிடம் ஒரு  வார்த்தை பேசி இருக்கலாம் தானே ? ஏன் அவளை வாலி சந்திக்க வில்லை ?

கதைப் போக்கிற்கு அது தேவை இல்லை கம்பன் நினைத்து இருப்பானோ என்றால் அப்படியும் நினைக்க முடியவில்லை. வாலி இறந்த மறு நாள் சூரியன்  எப்படி உதித்தான் என்பது வரை  நிறுத்தி நிதானமாக கதையைக் கொண்டு போகிறான். பின் ஏன் வாலி தாரையை வரச் சொல்லவில்லை ?

பிறர் பழியும் தன் பழியும் நாணுவார் என்ற குறளை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப்  பார்ப்போம்.

வாலியை சுக்ரீவன் போருக்கு அழைத்த போது தாரை வாலியை தடுக்கிறாள். " "இராமன் என்பவன் துணையாக இருக்கும் தைரியத்தில் சுக்ரீவன் உங்களை போருக்கு அழைக்கிறான். போகாதீர்கள் " என்று தடுக்கிறாள்.

கேட்காமல் போகிறான். தாரை சொன்ன படியே நடந்தது.

இப்போது , தாரையின் சொல்லை கேட்காமல் வந்தததிற்கு வாலி நாணுகிறான்.  அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்று வெட்கப் படுகிறான். எனவே கடைசியாக அவளை காணமலேயே விண்ணுலகம் போய் சேர்கிறான்.

வாலி வதம் நமக்குச் சொல்லிப் போகும் பாடம் என்ன ?

ஒன்று, தவறு என்று தெரிந்த ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்.

இரண்டு, பிறர் பழியை தன் பழியாக எண்ணி நாணுங்கள்

மூன்று, நீங்கள் செய்யும் பழிக்கும் நாணம் கொள்ளுங்கள்

நான்கு, துன்பங்கள் பிறர் தந்து வருவது இல்லை. மறைந்து நிற்காமலேயே கூட இராமன் வாலியை கொன்றிருப்பான். வாலி கொல்லப் பட்டது இராமனால்  நிகழவில்லை. அது வாலியின் அறம் பிறழ்ந்த வாழ்க்கையால் வந்தது.  துன்பம் வரும் போது மற்றவர்களை ஏசாதீர்கள். மற்றவர்கள் மேல் பழி போடாதீர்கள். நீங்கள் செய்த மறம் உங்களை வாட்டுகிறது என்று எண்ணுங்கள்.  இராமனை குறை கூறிய வாலி கடைசியில் உண்மையை உணர்கிறான்.  

எல்லாம் சரிங்க, பாடம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு....எதுக்காக மறைந்து  இருந்து  அம்பு எய்ய வேண்டும் ? அதுக்கு என்ன பதில் ?