Monday, October 20, 2014

இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்

இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்


சாம்ராஜ்யம் உன்னது  என்ற போது இராமன் மகிழவில்லை.

சாம்ராஜ்யம் உனக்கு இல்லை, நீ கானகம் போக வேண்டும் என்று சொன்னபோதும்  கலங்கவில்லை.

கோபம் கொண்ட இலக்குவனைக் கூட "நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை...விதியின் பிழை " என்று அமைதிப் படுத்தினான் இராமன்.

ஆனால், மனைவியை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் வர கால தாமதம் ஆனதால் கோபம் பொங்குகிறது இராமனிடம்.

இராஜ்ஜியம் பொருட்டு அல்ல, கானகத் துன்பம் பெரிதல்ல. மனைவியின் பிரிவு ரொம்பப் பெரியது . கோபம் இல்லாத இராமனையும் கோபம் கொள்ளச் செய்கிறது சீதையின் பிரிவு .

அமிழ்து உடலையும், உயிரையும் சேர்த்து வைக்கும்.

மனைவி அமிழ்து போன்றவள். போன உயிரையும் மீட்டு வருவாள். கணவனின் உயிரை காபாற்றுபவள்.

"ஆவியை, அமிழ்தின் வந்த தேவியை பிரிந்ததால் திகைத்தனை போலும் செய்கை " என்று வாலி, சீதையைப் பற்றி, இராமனிடம் கூறுவான்.


இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்

"நஞ்சு போன்றவர்களை தண்டித்தால் அது வஞ்சம் அல்ல, மனு நீதி ஆகும். ஆதலால், அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் நெஞ்சில் உரைக்கும் படி கூறுவாய் "  என்று.....

பாடல்


‘நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.


பொருள் 

‘நஞ்சம் = கொடுமையான

அன்னவரை = மக்களை

நலிந்தால் = தண்டித்தால்

அது = அது

வஞ்சம் அன்று = வஞ்சம் அன்று

மனுவழக்கு = மனு நீதி ஆகும்

ஆதலால் = ஆதலால்

அஞ்சில்  ஐம்பதில் = அஞ்சில் அம்பதில்

ஒன்று அறியாதவன் = ஒன்றும் அறியாதவன்

நெஞ்சில் = மனதில் 

நின்று = நிலைத்து 

நிலாவ = நிற்கும் படி 

நிறுத்துவாய் = செய்வாய்


அது என்ன அஞ்சில் அம்பதில் ஒன்றரியாதவன்  ?

ஒரு அர்த்தம்,

அஞ்சில் = ஐந்து வயதில்
அம்பதில் = ஐம்பது வயதில்
ஒன்றும் அறியாதவன். அஞ்சு வயதிலும் தெரியாது. ஐம்பது வயதிலும் தெரியாது.


இன்னொரு அர்த்தம்;

அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன் = அச்சம் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறிய  மாட்டான்.

இன்னொரு அர்த்தம்;

இன்னொரு அர்த்தம்

அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன் = அந்த மலையில் (சிலம்பு என்றால் மலை) உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்

நான்காவது = அஞ்சு + அம்பது + ஒன்று = 56 . அதாவது , 56 ஆவது வருடம் தந்துபி வருடம். இலக்குவன் தந்துபி என்ற அரக்கனின் எலும்பு கூட்டை கால் கட்டை விரலால் உந்தி தள்ளினான். அதை சுக்ரீவன் அறிந்தான் இல்லை. அதை அவன் நெஞ்சில் நின்று உலாவ நிறுத்துவாய்.

ஐந்தாவது = அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன் = அச்சமும் இல்லை, எனக்கு தருவதற்கு ஒரு பதிலும் இல்லை, திரு திரு என்று முழிக்கும் அவன் ஒன்றும் அறியாதவன்




Saturday, October 18, 2014

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல்

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல் 


எளியோரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இடுப்பில் ஒரு அழுக்கான துணி, தலையில் ஒரு சும்மாடு, தோளில் முனை மழுங்கிய ஒரு மண் வெட்டி.

இப்படி ஒரு ஆளைக் கண்டால் நமக்கு என்ன தோன்றும். ஏதோ ஒரு கூலி ஆள் என்று நினைப்போம். அதற்கு மேல் நினைக்க என்ன இருக்கிறது.

இறைவன் அப்படித் தான் வந்தான்.  

முன்பு ஒரு நாள் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

கரையை உயர்த்த வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப  வேண்டும் என்று பாண்டிய மன்னன் அறிவித்து விட்டான்.

மதுரையம்பதியில், பிட்டு விற்று வாழும் ஒரு வயதான கிழவி இருந்தாள் . அவளுக்கு யாரும் இல்லை. என்ன செய்வதென்று தவித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது....

அழுக்கான பழந்துணி உடுத்து, தலையில் ஒரு சும்மாடை சுமந்து கொண்டு, தோளில் ஒரு மண் வெட்டியோடு இறைவன் வந்தான்...


பாடல்

அழுக்கடைந்த பழந்துணியொன் றரைக்கசைத்து 
                                விழுத்தொண்டர்
குழுக்கடந்த விண்டைநிகர் சுமையடைமேற் கூடைகவிழ்த்
தெழுக்கடந்து திசைகடந்திட் டிணைகடந்த 
                                திருத்தோண்மேன்
மழுக்கடைந்து விளங்கியவாய் மண்டொடுதிண் படையேந்தி.

பொருள்

அழுக்கடைந்த = அழுக்கு ஏறிய

பழந்துணி = பழைய துணி

யொன் = ஒன்றை

றரைக்கசைத்து = அரைக்கு அசைத்து (இடுப்பில் கட்டி ) 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 

விழுத்தொண்டர் = சிறந்த தொண்டர்கள்

குழுக்கடந்த = குழுக்கள் தந்த

விண்டை நிகர் = இண்டை மாலை ஒத்த

சுமையடை = தலைச் சுமையின்

மேற் = மேல்


கூடை கவிழ்த் =  கூடை ஒன்றை கவிழ்த்து

தெழுக் கடந்து = எழு கடந்து (எழு என்றால் தூண் என்று சொல்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை)


திசைகடந்திட் டிணைகடந்த = திசை கடந்து + இணை கடந்து = திசைகளை கடந்து, அதற்கு இணை என்று சொல்ல முடியாமல், அனைத்தையும் கடந்து நின்று 


திருத்தோண்மேன் = புனிதமான தோள்கள் மேல்

மழுக்கடைந்து விளங்கிய = மழுக்கென்று, முனை மழுங்கி 

வாய் = முனை

மண்டொடுதிண் படையேந்தி = மண் வெட்டும் திண்மையான கருவியை ஏந்தி


யாருக்குத் தெரியும், எந்த கூலித் தொழிலாளி வடிவில் அவன் இருக்கிறானோ. 


Wednesday, October 15, 2014

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே


வருகிறேன் என்று சொல்லிப் போனவன் இன்னும் வரவில்லை. அவள் மனம் ஏங்குகிறது. ஒரு வேளை வர மாட்டானோ என்று சந்தேகிக்கிறது. அவனுக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்று பயப் படுகிறது.

அவளின் சோர்ந்த நிலை கண்டு, அவளின் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள்.

"கவலைப் பட்டு எதுக்கு நீ இப்படி மெலிஞ்சு போற. இந்த வானம் இப்படி இடி இடிக்கிறதே ஏன் தெரியுமா ? உன்னை விட்டு பிரிந்த உன் தலைவனைப் பார்த்து, "காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் உன் தலைவியிடம் போ " என்று சொல்லத்தான்."

இடி இடிப்பது கூட, காதலுனுக்கு சேதி சொல்வது போல இருக்கிறது என்று தோழி ஆறுதல் சொல்லுகிறாள்.

பாடல்

தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பொருள்

தொடியிட = தொடி+ இட = தொடி என்றால் வளையல். வளையல் இட

வாற்றா = ஆற்றாமல், முடியாமல்

தொலைந்த = மெலிந்த (அழகு தொலைந்த)

தோ ணோக்கி = தோள் நோக்கி

வடு = மாவடுவை

விடைப் = இடையில், நடுவில் 

போழ்ந்த = பிழந்த

கன்ற = அகன்ற

கண்ணாய் = கண்ணைக் கொண்டவளே

வருந்தல் = வருத்தப் படாதே

கடி = பெரிய, வலிய

திடி = இடி முழக்கும்

வான = வானம்

முரறு = சப்தம் இடுவது

நெடுவிடைச் = நீண்ட தொலைவு

சென்றாரை = சென்றவரை

நீடன்மி னென்று = இன்னும் காலத்தை நீட்டாதே என்று சொல்ல


சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய்

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய் 


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே


சொல்லாத நுண் உணர்வாய்

இறைவன் என்றால் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ? என்ற கேள்விகள்   ஒரு புறம்  இருக்கட்டும்.

இந்த உலகத்திற்கு வருவோம். 

லட்டு, ஜிலேபி போன்ற பல இனிப்புகளை நாம்  சுவைக்கிறோம். இனிப்பு என்றால் ? அந்த இனிப்பு எப்படி  இருக்கும் ? 

தாய் , தந்தை, அண்ணன் ,  தம்பி, அக்கா,தங்கை, கணவன் , மனைவி என்ற பல உறவுகளை  நாம் அனுபவிக்கிறோம். தாய்மை என்றால் என்ன ? மனைவியின் பாசம்  என்றால் என்ன? குழந்தையின் அன்பு என்றால் என்ன ? 

இவற்றை நம்மால் விளக்க முடியுமா ?

முடியாது.

உணர்வுகளை அனுபவிக்க  முடியும்.  உணர முடியும். ஆனால் விளக்க முடியாது. 

அன்றாடம் அனுபவிக்கும் உணர்வுகளுக்கே இந்த மாதிரி என்றால், இறை உணர்வை  என்ன என்று சொல்லுவது. 

அது இவற்றை எல்லாம் விட மிக நுண்மையானது. 

ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று. 

எனவே 

"சொல்லாத நுண் உணர்வு "  என்றார்.

இது வரை யாரும் சொல்லாதது. சொல்லவும் முடியாது. 


உணர்வு அறிய மெய் ஞானம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவம் முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்பார் பிறிதொரு இடத்தில் 

அது சிந்தனை அற்ற இடம். 

Monday, October 13, 2014

திருக்குறள் - சொற்புத்தி, சுயபுத்தி

திருக்குறள்  - சொற்புத்தி, சுயபுத்தி 


வாழ்வில் வெற்றி பெற வள்ளுவர் எளிமையான வழியைச் சொல்கிறார்.

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் போவார்கள். அவர் ஒரு மருந்தைத் தருவார். அதை ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது. தனக்கும் தெரியாது, மருத்துவர் சொன்னாலும் கேட்பது இல்லை.

உயர்ந்த நூல்களை படிக்க வேண்டியது. ஆனால் அதில் சொல்லி உள்ளது போல நடப்பது கிடையாது. குதர்க்கம் செய்ய வேண்டியது.

அப்படிப் பட்டவர்களின் உயிர் அவர்களின் உடலுக்கு நோய் என்கிறார் வள்ளுவர்.

எப்படி நோய் உடலை வருத்துமோ  அது போல அந்த மடையர்களுக்கு உயிர் இருக்கும் வரை  துன்பம்தான்.உயிரே துன்பம் தான்.

பாடல்

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் 
போஒ மளவுமோர் நோய்.

சீர் பிரித்த பின்

வவும் செய்கலான் தான் தேரான் அவ் உயிர் 
போகும் அளவும் ஓர் நோய் 


பொருள்

ஏவவும் செய்கலான் = சொன்னதைச் செய்ய மாட்டான் 

தான் தேரான்  = அவனாகவும் தேர்ந்து அறிய மாட்டன்

அவ் உயிர் = அவன் உயிர்

போகும் அளவும் = உடலை விட்டு போகும் அளவும்

ஓர் நோய் = ஒரு நோய் போன்றதாகும்

நோய் உடலை வருத்தும். அது போல அறிவற்றகளின் உயிர் அவர்களை வருத்தும்.

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள்.

இன்றும் இதை நாம் காண முடியும். முட்டாள்கள் எவ்வளவு துன்பத்தைத் தருகிறார்கள்.  தாங்கள் கெடுவது மட்டும் அல்ல. மற்றவர்களையும் கெடுத்து துன்பத்தை விதைக்கிறார்கள்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.





இராமாயணம் - அறம் மறந்தனன்

இராமாயணம் - அறம் மறந்தனன் 


வாலி வதைக்குப் பின், சுக்ரீவன்  அரச பதவி பெற்றான். கார் காலம் வந்தது. பின்  சென்றது.

சீதையை தேட உதவி செய்கிறேன் என்று தான் சொன்ன வாக்குறுதியை மறந்தான்.

அந்த நேரத்தில் இராமன் , இலக்குவனிடம் கூறுகிறான்.

"பெறுவதற்கு அரிய செல்வத்தைப் பெற்றான். நாம் உதவி செய்த, நம் திறமையை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஒழுக்கம் தவறி விட்டான். அறத்தை மறந்து விட்டான். நம் மேல் உள்ள அன்பையும் மறந்து விட்டான். அது தான் போகட்டும் என்றால் நம் வீரத்தையுமா மறந்து விட்டான் அந்த வாழ்வில் மயங்கியவன் " என்று

பாடல்


'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.


பொருள்

'பெறல் = பெறுவதற்கு

அருந் = அருமையான

திருப் பெற்று = செல்வத்தைப்

உதவிப் = நாம் செய்த உதவி

பெருந் திறம் நினைந்திலன் =என்ற பெரும் திறமையை நினைக்கவில்லை

சீர்மையின் தீர்ந்தனன் = ஒழுக்கம் குறைந்தவன்

அறம் மறந்தனன்; = அறத்தை மறந்தான்

அன்பு கிடக்க = அன்பு ஒரு புறம் கிடக்க, அதையும் மறந்து விட்டான்

நம் மறன் அறிந்திலன் = நம்முடைய வீரத்தைப்  அவன் சரியாக அறியவில்லை 

வாழ்வின் மயங்கினான் = வாழ்வியல் இன்பங்களில் மயங்கிக்   . கிடக்கிறான்

நன்றி மறப்பது அறம் அல்ல என்று நம் இலக்கியங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நன்றி மறந்ததால் அழிந்தவன் சூரபத்மன்.

எவ்வளவு எளிதாக பிறர் செய்த நன்றிகளை நாம் மறந்து விடுகிறோம்.

இனி மேல் ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள்....உங்களுக்கு யார் யார் என்ன என்ன உதவி செய்தார்கள் என்று. மறக்காமல் இருக்க  உதவும்.

நன்றி மறப்பது நன்றல்ல.

இராமணயம் படிப்பது கதை தெரிந்து கொள்வதற்கு அல்ல. வாழ்கையை தெரிந்து கொள்ள.

இனி என்ன நடந்தது ?

மேலும்  பார்ப்போம்.







பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை

பழமொழி - நாவிற்கு வறுமை இல்லை 


இராமனை மனிதன் மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

கண்ணனை இடையன் இடையன் என்று சொல்லி அழிந்தான் துரியோதனன்

இராமனுக்கும், கண்ணனுக்கும்  இந்த நிலை என்றால் நம் நிலை என்ன.

பழி சொல்லும் நாவுக்கு வறுமை என்று ஒன்று கிடையாது. எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும்.

"பசுக் கூட்டங்களை மழையில் இருந்து காப்பாற்றிய கண்ணனை இடையன் என்று இந்த உலகம் கூறிற்று. தீங்கு சொல்லும் நாவுக்கு தேவர்கள், மனிதர்கள் என்று பாகுபாட்டெல்லாம் கிடையாது. நாவுக்கு வறுமை இல்லை".

பாடல்

ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

சீர் பிரித்த பின்

ஆவிற்கு அரும் பனி  தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்று உலகம்  கூறுமால்
தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குர(வு) இல்.

பொருள்


ஆவிற்கு = பசு கூட்டங்களுக்கு

அரும் பனி  = பெரிய மழையில் இருந்து

தாங்கிய = காப்பாற்றிய

மாலையும் = திருமாலையும்

கோவிற்குக் கோவலன் = மாடு மேய்ப்பவன்

என்று உலகம்  கூறுமால் = என்று உலகம் கூறியது

தேவர்க்கு = தேவர்களுக்கு (உயர்ந்தவர்களுக்கு)

மக்கட்கு = மக்களுக்கு

எனல் வேண்டா = என்ற பாகு பாடு இல்லாமல்

தீங்கு உரைக்கும் = தீங்கு சொல்லும் 

நாவிற்கு = நாக்கிற்கு

நல்குர(வு) இல் = வறுமை என்பது கிடையாது.