Wednesday, October 22, 2014

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை

திருப்புகழ் - பெண் என்ற விடுகதை 


பெண் இன்பம் என்பது புரியாத புதிராய்தான் இருந்து இருக்கிறது. அருணகிரிநாதர் புலம்புகிறார்.



கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
          கண்கள்குழல் கொண்டல் என்று                  பலகாலும்
 கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
          கங்குல்பகல் என்று நின்று                              விதியாலே
 பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
          பங்கயப தங்கள் தந்து                                      புகழோதும்
 பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு  டன்க  லந்து
          பண்புபெற அஞ்ச லஞ்ச                                  லெனவாராய்
 வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
           வம்பினைய டைந்து சந்தின்                          மிகமூழ்கி
 வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
          வந்தழகு  டன்க  லந்த                                      மணிமார்பா
 திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
          செஞ்சமர்பு னைந்து  துங்க                              மயில்மீதே
 சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
          செந்தில்நகர் வந்த மர்ந்த                                பெருமாளே.


கொஞ்சம் சீர் பிரிப்போம். 


கற் கண்டுமொழி

கொம்பு கொங்கை

வஞ்சியிடை அம்பு

நஞ்சு கண்கள்

குழல் கொண்டல்

என்று

பலகாலும்

கண்டு உளம் வருந்தி நொந்து

மங்கையர் வசம் புரிந்து

கங்குல் பகல் என்று நின்று

விதியாலே

பண்டை வினை  கொண்டு உழன்று

வெந்து விழுகின்றல் கண்டு

பங்கய பதங்கள் தந்து

புகழ் ஓதும்

பண்புடைய சிந்தை அன்பர்  தங்களில் உடன் கலந்து

பண்பு பெற அஞ்சல்  அஞ்சல் என வாராய்

 வண்டு படுகின்ற தொங்கல்

கொண்டு அற நெருங்கி யிண்டு

வம்பினை அடைந்து

சந்தின் மிக மூழ்கி

வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை

செங்கை வந்த அழகுடன் கலந்த  மணிமார்பா

திண் திரல் புனைந்த அண்டர் தங்கள் பயங்கள் கண்டு

செஞ் அமர்  புனைந்து  துங்க  மயில்மீதே

சென்றசுரர் அஞ்சு வென்று குன்றிடை மணம் புணர்ந்து

செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே.

Tuesday, October 21, 2014

சிவ புராணம் - மாற்றமாம் வையகத்தே 


பாடல்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் 
தேற்றனே தேற்றத் தெளிவே  என் சிந்தையுள்
ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே

பொருள்

மாற்றமாம் = மாறுதலை உள்ள

வையகத்தின் = உலகில்

வெவ்வேறே = வேறு வேறானவற்றை

வந்தறிவாம் = வந்து அறிவாம்

தேற்றனே = தெளிவானவனே

தேற்றத் தெளிவே = தெளிவின் தெளிவே

என் சிந்தையுள் = என் சிந்தனையுள்

ஊற்றான = ஊற்றான

வுண்ணா ரமுதே = உண்பதற்கு அருமையான அமுதம் போன்றவனே 

உடையானே  = எல்லாவற்றையும் உடையவனே

மிக மிக எளிமையாகத் தோன்றும் பாடல் வரிகள்...ஆழமான அர்த்தம் கொண்டவை 

இந்த உலகில் மாறாதது எது ? எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. தத்துவங்களும், அறிவியல் உண்மைகளும் கூட மாறிக் கொண்டே இருக்கின்றன.

ஒன்று மற்றொன்றாக மாறி மாறி வருகிறது.எதுவும் நிரந்தரம் இல்லை.

இது பிடிக்கும், இது பிடிக்கும்,
இவர் நல்லவர், இவர் கெட்டவர்,
அவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர்

என்று நினைப்பது எல்லாம் மாறிக் கொண்டே வரும்.

இன்று பிடிப்பது நாளை பிடிக்காமல் போகும்.

இன்று விரும்புவதை நாளை நாமே வெறுப்போம்.

"மாற்றமாம் வையகத்தே" என்றார்.

நாளும் மாறும் வையகம் இது.

"வெவ்வேறே வந்தறிவாம் "

வேறு வேறாக தெரிவது எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.


இப்படி எல்லாம் மாறிக் கொண்டே இருந்தால், எப்படி இந்த உலகை நாம் எப்படித்தான்  புரிந்து கொள்வது.

இந்த குழப்பத்திற்கு எல்லாம் தெளிவு அவன்.

"தேற்றேனே , தேற்றத் தெளிவே"

இந்தத் தெளிவு அவருக்கு சிந்தனயில் வந்தது . எப்படி வந்தது ?

படித்துத் தெரிந்து கொண்டாரா ? யாரும் சொல்லித் தந்தார்களா ? பின் எப்படி அறிந்தார் ?

அவரே சொல்கிறார்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்



நாம் யாரோடு சேர்கிறோமோ அவர்களின் குணம் தான் நமக்கும் வரும். நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மை போலவே சிற்றின்பங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு சேர்ந்தால் நாமும் அவர்களைப் போலத்தானே ஆவோம்

எனவேதான் பெரியவர்கள் எப்போதும் நல்லவர்கள் மற்றும் அடியார் கூட்டத்தோடு சேரும்படி மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்.

நல்லவர்கள் , அறிவுள்ளவர்கள் கிடைக்கவில்லையா, பரவாயில்லை. கெட்டவர்களோடு சேராமல் இருந்தாலே போதும்.

குலசேகர ஆழ்வார் சொல்கிறார், பெண் இன்பம் தேடி அலையும் இந்த உலகத்தினரோடு நான் சேர மாட்டேன். உலகில் உள்ள ஆட்களை விட்டு விட்டால் பின் யாரோடு தான் சேர்வது ? அரங்கா என்று அவன் மேல் அன்பு கொண்டேன்  என்கிறார்.


பாடல்

நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

சீர் பிரித்த பின்

நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் அழுந்து ஒழிந்தேன் என்றன் மாலுக்கே


பொருள்


நூலின் நேர் = நூல் போல

இடையார் =  இடையைக் கொண்ட  பெண்களின்

திறத்தே = பின்னே

நிற்கும் = நிற்கும்

ஞாலந் தன்னொடும் = உலகில் உள்ளவர்களோடு

கூடுவது இல்லை யான் = சேர மாட்டேன்

ஆலியா = ஆலியா

அழையா = என்று அழைத்து

அரங்கா என்று = அரங்கா என்று

மால் அழுந்து ஒழிந்தேன் = அன்பால், ஆசையால்  மூழ்கி ஒழிந்தேன்

என்றன் மாலுக்கே = என்றன் திருமாலுக்கே



Monday, October 20, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலவியே கருதி ஓடினேன் 


தவறு செய்யாதவர்கள் யார் இங்கே ?

செய்த தவறை ஒப்புக்கொள்ளும் தைரியம் எத்தனை பேருக்கு இருக்கிறது ?

செய்த தவறுகளை ஞாயப்படுத்துகிறோமே தவிர அது தவறு என்று ஒப்புக் கொள்வதில்லை.

பெண்கள் பின்னால் அலைந்தேன் என்று தைரியமாக ஒப்புக் கொள்கிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு பக்கம் வாழ்க்கையில் வருத்தம். துன்பம். இதற்கிடையில் பெண்களோடு சவகாசம். அந்த இளம் பெண்கள் தரும் இன்பமே பெரிதென்று அவர்கள் பின்னால் அலைவது. அப்படி அலையும் நாளில் ஒரு நாள் உண்மை புரிகிறது. இந்த பெண்கள் தரும் இன்பம் நிலையானது அல்ல என்று அறிந்து கொள்கிறார். வாழ்வின் பெரிய நிலையைத் தரக் கூடியது நாராயாணா என்ற நாமமே என்று அறிந்து கொண்டேன் என்கிறார்.

பாடல்

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.


பொருள்

வாடினேன் = வாடினேன். செடி நீர் இல்லாமல் வாடும். நீர் தெளித்தால் மீண்டும் தளிர்க்கும். அது போல, இறைவனின் அருள் இன்றி வான்டினேன். அவன் அருள் கிடைத்தால் வாட்டம் நீங்கும் என்ற பொருள் பட வாடினேன் என்றார். 

வாடி வருந்தினேன் = வாடி வருந்தினேன்

மனத்தால் = மனத்தால். உடல் வருத்தம் மட்டும் இல்லை, மன வருத்தமும் உண்டு.

பெருந்துயரிடும்பையில்  பிறந்து = பெரிய துன்பமான துக்கத்தில் பிறந்து

கூடினேன் = கூடினேன்

கூடி = கூடிய பின்

யிளையவர்த்தம்மோடு = இளமையான பெண்களோடு

அவர்த்தரும் கலவியேகருதி = அவர்கள் தரும் இன்பமே வேண்டும் என்று நினைத்து


ஓடினேன் = அவர்கள் பின்னால் ஓடினேன்

ஓடியுய்வதோர்ப் = ஓடியபின், பிழைக்கும் ஒரு

பொருளால்= பொருளால்

உணர்வெனும் = உணர்வு என்ற

பெரும் பதம் திரிந்து = பெரிய பதத்தை , அலைந்து திரிந்த பின்
,
நாடினேன் = நாடினேன்


நாடி நான் கண்டுகொண்டேன் = நாடி நான் கண்டு கொண்டேன்


நாராயணா வென்னும் நாமம் = நாராயணா என்ற நாமத்தை

.
சிற்றின்பம் சலிக்கும். அதில் சலித்த மனம், பேரின்பத்தை நோக்கி  . தானே நகரும்.

நாடினேன் என்றார். அவரே தேடித் போனார்.

பெண்கள் பின்னால் அலைந்தவர், தானே நாடி கண்டு கொண்டேன் என்கிறார்.

செய்த தவறுகளை ஒப்புக் கொள்ளும் போது மன அழுத்தம் குறைகிறது.  வருத்தம்  விலகுகிறது.

மனம் இலேசாகிப் போகிறது.

எல்லோரும் அறிய சொல்லாவிட்டாலும்,  உங்கள் உயிர் நண்பர்களிடம் சொல்லலாம் தானே...

சிந்தித்துப் பாருங்கள்.


இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்

இராமாயணம் - அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்


சாம்ராஜ்யம் உன்னது  என்ற போது இராமன் மகிழவில்லை.

சாம்ராஜ்யம் உனக்கு இல்லை, நீ கானகம் போக வேண்டும் என்று சொன்னபோதும்  கலங்கவில்லை.

கோபம் கொண்ட இலக்குவனைக் கூட "நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை...விதியின் பிழை " என்று அமைதிப் படுத்தினான் இராமன்.

ஆனால், மனைவியை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் வர கால தாமதம் ஆனதால் கோபம் பொங்குகிறது இராமனிடம்.

இராஜ்ஜியம் பொருட்டு அல்ல, கானகத் துன்பம் பெரிதல்ல. மனைவியின் பிரிவு ரொம்பப் பெரியது . கோபம் இல்லாத இராமனையும் கோபம் கொள்ளச் செய்கிறது சீதையின் பிரிவு .

அமிழ்து உடலையும், உயிரையும் சேர்த்து வைக்கும்.

மனைவி அமிழ்து போன்றவள். போன உயிரையும் மீட்டு வருவாள். கணவனின் உயிரை காபாற்றுபவள்.

"ஆவியை, அமிழ்தின் வந்த தேவியை பிரிந்ததால் திகைத்தனை போலும் செய்கை " என்று வாலி, சீதையைப் பற்றி, இராமனிடம் கூறுவான்.


இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்

"நஞ்சு போன்றவர்களை தண்டித்தால் அது வஞ்சம் அல்ல, மனு நீதி ஆகும். ஆதலால், அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் நெஞ்சில் உரைக்கும் படி கூறுவாய் "  என்று.....

பாடல்


‘நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.


பொருள் 

‘நஞ்சம் = கொடுமையான

அன்னவரை = மக்களை

நலிந்தால் = தண்டித்தால்

அது = அது

வஞ்சம் அன்று = வஞ்சம் அன்று

மனுவழக்கு = மனு நீதி ஆகும்

ஆதலால் = ஆதலால்

அஞ்சில்  ஐம்பதில் = அஞ்சில் அம்பதில்

ஒன்று அறியாதவன் = ஒன்றும் அறியாதவன்

நெஞ்சில் = மனதில் 

நின்று = நிலைத்து 

நிலாவ = நிற்கும் படி 

நிறுத்துவாய் = செய்வாய்


அது என்ன அஞ்சில் அம்பதில் ஒன்றரியாதவன்  ?

ஒரு அர்த்தம்,

அஞ்சில் = ஐந்து வயதில்
அம்பதில் = ஐம்பது வயதில்
ஒன்றும் அறியாதவன். அஞ்சு வயதிலும் தெரியாது. ஐம்பது வயதிலும் தெரியாது.


இன்னொரு அர்த்தம்;

அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன் = அச்சம் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறிய  மாட்டான்.

இன்னொரு அர்த்தம்;

இன்னொரு அர்த்தம்

அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன் = அந்த மலையில் (சிலம்பு என்றால் மலை) உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்

நான்காவது = அஞ்சு + அம்பது + ஒன்று = 56 . அதாவது , 56 ஆவது வருடம் தந்துபி வருடம். இலக்குவன் தந்துபி என்ற அரக்கனின் எலும்பு கூட்டை கால் கட்டை விரலால் உந்தி தள்ளினான். அதை சுக்ரீவன் அறிந்தான் இல்லை. அதை அவன் நெஞ்சில் நின்று உலாவ நிறுத்துவாய்.

ஐந்தாவது = அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன் = அச்சமும் இல்லை, எனக்கு தருவதற்கு ஒரு பதிலும் இல்லை, திரு திரு என்று முழிக்கும் அவன் ஒன்றும் அறியாதவன்




Saturday, October 18, 2014

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல்

திருவிளையாடற் புராணம் - இணை கடந்த திருத் தோள் மேல் 


எளியோரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இடுப்பில் ஒரு அழுக்கான துணி, தலையில் ஒரு சும்மாடு, தோளில் முனை மழுங்கிய ஒரு மண் வெட்டி.

இப்படி ஒரு ஆளைக் கண்டால் நமக்கு என்ன தோன்றும். ஏதோ ஒரு கூலி ஆள் என்று நினைப்போம். அதற்கு மேல் நினைக்க என்ன இருக்கிறது.

இறைவன் அப்படித் தான் வந்தான்.  

முன்பு ஒரு நாள் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது.

கரையை உயர்த்த வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப  வேண்டும் என்று பாண்டிய மன்னன் அறிவித்து விட்டான்.

மதுரையம்பதியில், பிட்டு விற்று வாழும் ஒரு வயதான கிழவி இருந்தாள் . அவளுக்கு யாரும் இல்லை. என்ன செய்வதென்று தவித்துக் கொண்டு இருந்தாள்.

அப்போது....

அழுக்கான பழந்துணி உடுத்து, தலையில் ஒரு சும்மாடை சுமந்து கொண்டு, தோளில் ஒரு மண் வெட்டியோடு இறைவன் வந்தான்...


பாடல்

அழுக்கடைந்த பழந்துணியொன் றரைக்கசைத்து 
                                விழுத்தொண்டர்
குழுக்கடந்த விண்டைநிகர் சுமையடைமேற் கூடைகவிழ்த்
தெழுக்கடந்து திசைகடந்திட் டிணைகடந்த 
                                திருத்தோண்மேன்
மழுக்கடைந்து விளங்கியவாய் மண்டொடுதிண் படையேந்தி.

பொருள்

அழுக்கடைந்த = அழுக்கு ஏறிய

பழந்துணி = பழைய துணி

யொன் = ஒன்றை

றரைக்கசைத்து = அரைக்கு அசைத்து (இடுப்பில் கட்டி ) 

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 

விழுத்தொண்டர் = சிறந்த தொண்டர்கள்

குழுக்கடந்த = குழுக்கள் தந்த

விண்டை நிகர் = இண்டை மாலை ஒத்த

சுமையடை = தலைச் சுமையின்

மேற் = மேல்


கூடை கவிழ்த் =  கூடை ஒன்றை கவிழ்த்து

தெழுக் கடந்து = எழு கடந்து (எழு என்றால் தூண் என்று சொல்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை)


திசைகடந்திட் டிணைகடந்த = திசை கடந்து + இணை கடந்து = திசைகளை கடந்து, அதற்கு இணை என்று சொல்ல முடியாமல், அனைத்தையும் கடந்து நின்று 


திருத்தோண்மேன் = புனிதமான தோள்கள் மேல்

மழுக்கடைந்து விளங்கிய = மழுக்கென்று, முனை மழுங்கி 

வாய் = முனை

மண்டொடுதிண் படையேந்தி = மண் வெட்டும் திண்மையான கருவியை ஏந்தி


யாருக்குத் தெரியும், எந்த கூலித் தொழிலாளி வடிவில் அவன் இருக்கிறானோ. 


Wednesday, October 15, 2014

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே

கார் நாற்பது - நேரம் தாழ்த்தாதே


வருகிறேன் என்று சொல்லிப் போனவன் இன்னும் வரவில்லை. அவள் மனம் ஏங்குகிறது. ஒரு வேளை வர மாட்டானோ என்று சந்தேகிக்கிறது. அவனுக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்று பயப் படுகிறது.

அவளின் சோர்ந்த நிலை கண்டு, அவளின் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள்.

"கவலைப் பட்டு எதுக்கு நீ இப்படி மெலிஞ்சு போற. இந்த வானம் இப்படி இடி இடிக்கிறதே ஏன் தெரியுமா ? உன்னை விட்டு பிரிந்த உன் தலைவனைப் பார்த்து, "காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் உன் தலைவியிடம் போ " என்று சொல்லத்தான்."

இடி இடிப்பது கூட, காதலுனுக்கு சேதி சொல்வது போல இருக்கிறது என்று தோழி ஆறுதல் சொல்லுகிறாள்.

பாடல்

தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பொருள்

தொடியிட = தொடி+ இட = தொடி என்றால் வளையல். வளையல் இட

வாற்றா = ஆற்றாமல், முடியாமல்

தொலைந்த = மெலிந்த (அழகு தொலைந்த)

தோ ணோக்கி = தோள் நோக்கி

வடு = மாவடுவை

விடைப் = இடையில், நடுவில் 

போழ்ந்த = பிழந்த

கன்ற = அகன்ற

கண்ணாய் = கண்ணைக் கொண்டவளே

வருந்தல் = வருத்தப் படாதே

கடி = பெரிய, வலிய

திடி = இடி முழக்கும்

வான = வானம்

முரறு = சப்தம் இடுவது

நெடுவிடைச் = நீண்ட தொலைவு

சென்றாரை = சென்றவரை

நீடன்மி னென்று = இன்னும் காலத்தை நீட்டாதே என்று சொல்ல