Wednesday, January 27, 2016

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல

பிரபந்தம் - வெள்ளுயிர் ஆக்க வல்ல


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நெய்யோடு கூடிய சோறு, தினமும், அரசாங்கத்தில் பெரிய வேலையும், தாம்பூலமும், கழுத்துக்கும், காதுக்கும்  அணியும் ஆபரணங்களும், உடம்பில் பூசிக் கொள்ள நல்ல சந்தனமும் தந்து என்னை நல்லவானாக்கிய, படம் எடுத்து ஆடும் பாம்பின் எதிரியான கருடனைக் கொடியாகக் கொண்டவனை பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.

இதில் என்ன இருக்கிறது ? பெருமாள் எனக்கு எல்லா சௌகரியங்களும் செய்து தந்து இருக்கிறார், நான் அவரை அவரை வாழ்த்துகிறேன் என்று சொல்கிறார்.

சரி. இதில் நமக்கு என்ன செய்தி இருக்கிறது ? இதன் ஆழ்ந்த அர்த்தம் என்ன ?

நாம் இறைவனை எப்போது சிந்திப்போம் ?

நமக்கு ஏதாவது துன்பம் வந்தால், ஆபத்து வந்தால், சிக்கல் வந்தால் , துக்கம் வந்தால் இறைவனை  நினைப்போம். அவனிடம் வேண்டிக் கொள்வோம்.

சந்தோஷம் வந்தால் எப்போவாவது இறைவனை நினைப்போமா ? ஏதோ எல்லாம் நாமே சாதித்து முடித்தது போல நாம் நினைப்போம். என் உழைப்பு, என் திறமையால் எனக்கு இந்த செல்வங்கள் கிடைத்தது, இந்த வாழ்வு கிடைத்தது, இந்த சந்தோஷம் கிடைத்தது என்று நினைப்போம்.

அப்படி அல்ல.

நமக்கு கிடைக்கும் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், வரும்போது அளவு கடந்த சந்தோஷம் வராது. போகும் போது நெஞ்சை அடைக்கும் துக்கம் வராது.

அவன் தந்தது, அவன் எடுத்துக் கொண்டான். இதில் என் வேலை என்ன என்ற சம நிலை வரும்.

எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் உருகுவார்.

வேண்டத் தக்கது அறிவை நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாலுக்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
    யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
    அதுவும் உன்றன் விருப்பன்றே.


எனவே, பெருமாளே, எனக்கு கிடைத்தது எல்லாம் நீ பார்த்து தந்தது என்று நன்றியோடு நினைக்கிறார்.

செல்வம் , பதவி, இன்பம் வரும்போது அவனை நினையுங்கள். எல்லாம் அவன் தந்தது என்று நினையுங்கள்.

அப்படி நினைத்தால் என்ன நிகழும் ?

இறைவன் தந்தது என்று நினைத்தால் அது பிரசாதமாகி விடுகிறது. அதை பக்தியோடு பெற்றுக் கொள்ள வேண்டும். பக்தியோடு அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும்.

அதில் குறை நிறை பார்க்கத் தோன்றாது. கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடையத் தோன்றும்.

மேலும் வேண்டும், மேலும் வேண்டும் என்ற ஆசை தோன்றாது. ஒரு துளசி இலை கிடைத்தாலும் சந்தோஷம்தான். ஒரு மூட்டை துளசி இலை பிரசாதம் வேண்டும்  என்று மனம் நினைக்காது. ஒரு தேக்கரண்டி தீர்த்தம் கிடைத்தாலும்  சந்தோஷமாக பெற்றுக் கொள்ளத் தோன்றும். ஒரு அண்டா நிறைய தீர்த்தம் வேண்டும் என்று நினைக்கத் தோன்றாது.

கிடைத்தது எல்லாம் பிரசாதம் என்று நினையுங்கள். கிடைத்ததில் திருப்தி தோன்றும். பேராசை தோன்றாது. கிடைக்கவில்லை என்றால் துக்கம் வராது.

இது ஒரு அர்த்தம்.

இன்னொரு அர்த்தம், மனிதனுக்கு தேவைகள் இருக்கும் வரை, அவற்றை அடையும் ஆசை இருக்கும் வரை இறை நினைவு வராது.

இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும், பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் , ஊக்கத் தொகை (bonus ) வேண்டும், அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று மனிதன் உலக சுகங்களின் பின்னால் அலைந்து கொண்டே இருப்பான்.

அதற்கு ஒரு முடிவே இல்லை. இதில் இறை நினைப்பு எங்கே வரப்போகிறது ?

நம்மாழ்வார் சொல்கிறார்...உண்ணும் உணவு, மெல்லும் வெற்றிலை, (அடைக் காய்), அன்றாடம் செய்யும் வேலை, உடம்பில் பூசும் சந்தனம் எல்லாம் அவன் தந்தது என்று நினைத்தால், அல்லும் பகலும் அனவரதமும் அவன் நினைப்பு இருக்கும். அது மட்டும் அல்ல, அப்படி நினைக்கும் போது மனம் தூய்மை ஆகிறது. "வெள்ளுயிர் ஆக்க வல்ல "

வெள்ளுயிர் என்றால் வெண்மையான உயிர். தூய்மையான உயிர்.

அவன் தந்தான், நான் பெற்றுக் கொண்டேன் என்று நினைப்பு வரும்போது மனம் தூய்மை அடைகிறது.

என் வாழ்வும் வசதியும் என் மேல் அதிகாரி எனக்குத் தந்தது இல்லை, என் சக ஊழியனிடம் இருந்து நான் தட்டிப் பறித்தது இல்லை, மற்றவனுக்கு கிடைக்க நான் தடையாய்...அவரவர்களுக்கு களுக்கு வேண்டியதை அவன் தருகிறான்.

யாருக்கு எவ்வளவு , எப்போது தரவேண்டுமோ அப்போது பங்கிட்டுக் கொடுக்கிறான்.

பகுத்து கொடுப்பதால் அவன் பகவன்.

அகர முதல் எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு.

என் மேலதிகாரி எனக்கு ஊதிய உயர்வு தருவானோ, மாட்டானோ ?

எனக்குத் தராமல் மற்றவர்களுக்குத் தந்து விடுவானோ ?

என்றெல்லாம் நமக்கு ஒரு பயமும், பதற்றமும் இருக்கும். இந்த பயத்தில், பதற்றத்தில் மேலதிகாரி சொல்வதெல்லாம் கேட்க வேண்டும், தேவை இல்லாமல் அவனைப் புகழ வேண்டும்...

இவர்கள் யார் எனக்குத் தருவதற்கு. பெருமாள் தருகிறார். நான் பெறுகிறேன். இடையில் இவர்கள் யார் என்ற நிமிர்வு வருகிற போது வாழ்க்கையில் பயமும், பதற்றமும் போய் மிதக்கும் மேகம் போல மனம் இலேசாகிப் போகிறது.


பாடல்

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

பொருள் 

நெய்யிடை =நெய் இடை இடையே இட்ட

நல்லதோர் சோறும் = நல்ல உணவும்

நியதமும் = தினமும்

அத்தாணிச் சேவகமும் = அத்தாணி என்றால் அரச மண்டபம். அரசவை. பெரிய வேலை என்று வைத்துக் கொள்ளலாம்.

கையடைக் காயும் = அடைக் காய் என்றால் பாக்கு. வெற்றிலை பாக்கும்.

கழுத்துக்குப்  பூணொடு = கழுத்தில் அணியும் சங்கிலியோடு

காதுக்குக் குண்டலமும் = காதில் அணியும் குண்டலமும்

மெய்யிட = மெய்யில் இட. உடம்பில் பூசிக் கொள்ள

நல்லதோர் சாந்தமும் = நல்ல மணமுள்ள சந்தனமும்

தந்து = தந்து

என்னை = என்னை

வெள்ளுயி ராக்கவல்ல = தூய்மையானவனாக ஆக்கும் வல்லமை படைத்த



பையுடை = படம் எடுத்து ஆடும் 

நாகப் = நாகப் பாம்புக்கு 

பகைக் = பகையான கருடனை 

கொடி யானுக்குப் = கொடியாகக் கொண்டவனுக்கு 

பல்லாண்டு கூறுவனே = பல்லாண்டு கூறுவேன் 

அவன் தராமல் வராது.

அவன் தடுக்காமல் நிற்காது.

வருவது வரட்டும் என்று இருங்கள். வாழ்கை இனிக்கும். 




Sunday, January 24, 2016

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

பிரபந்தம் - ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே


பாடல்

தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி
பாய* சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பொருள்

"நெருப்பை விட சுடர் விட்டு பிரகாசிக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை உடலில் சின்னமாகக் கொண்டு வழி வழியாக அவனுக்கு ஆட் செய்கின்றோம். மாயங்களில் வல்லவனான பாணனை அவனுடைய ஆயிரம் தோள்களும் இரத்தம் சிந்த சக்கரத்தை விடுத்த அவனுக்கு பல்லாண்டு கூறுவோம் "

தீயிற்பொலிகின்ற = நெருப்பை விட பொலிவுடன் விளங்கும்

செஞ்சுடராழி = சிவந்த சக்கரம்

திகழ் திருச்சக்கரத்தின் = கரத்தில் திகழும் சக்கரத்தின்

கோயிற் = உடலில்

பொறியாலே = சின்னமாகத் தரித்துக் கொண்டு

ஒற்றுண்டு = ஒன்றாகக் கூடி

 நின்று = நின்று

 குடிகுடி ஆட்செய்கின்றோம் = தலை முறை தலை முறையாக  ஆட் செய்கின்றோம்

மாயப் = மாயங்களில் வல்லவனான

பொருபடைவாணனை = சண்டையிடும் படைகளைக் கொண்ட வாணன் என்ற அசுரனை

ஆயிரந்தோளும்= அவனுடைய ஆயிரம் தோள்களும்

பொழிகுருதி பாய = இரத்தம் பொழிந்து பாய

சுழற்றிய ஆழிவல்லானுக்குப் = சக்கரத்தை சுழற்றிய வல்லவனான பெருமாளுக்கு

 பல்லாண்டு கூறுதுமே. = பல்லாண்டு கூறுவோமே

சரி. இதன் மூலம் பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். நாங்கள் அவனுக்கு  தொண்டு செய்கிறோம். அவன் அரக்கனை கொன்றான்.

அதனால் என்ன ? இதை அறிந்து நாம் என்ன செய்யப் போகிறோம்.  இதை ஏன் வேலை மெனக்கெட்டு ஆழ்வார் சொல்கிறார் ? இதில் ஆழ்ந்த அர்த்தம் எதாவது இருக்குமா ?

தேடுவோம் .

உலகில் எவ்வளவோ பேர் கை, கால், கண் போன்ற அவயங்கள் இல்லாமல் துன்பப் படுகிறார்கள்.  சிலருக்கு அவை இருந்து சரி வர செயல் படாமல் துன்பப் படுகிறார்கள்.

நமக்கு எல்லா அவயங்களும் நான்றாக இருக்கின்றன. நம் உடலில் உள்ள அவயங்கள் எல்லாம் நல்லபடி இயங்க நாம் செய்தது என்ன ? ஒன்றும் இல்லை.  நமக்கு வழங்கப் பட்டது அவ்வளவுதான்.

ஆரோக்கியமான உடல், சிறந்த மனம் , நல்ல வகையில் செயல் படும் அறிவு இவற்றை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்கிறோம் ?

சில பேர் தனக்கு தனக்கு என்று சுய நலமாக தங்களுக்கு வேண்டியதை செய்து கொள்கிறார்கள்.

சிலர் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்.

சிலர், இவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கிறார்கள். அவனை எப்படி கெடுக்கலாம், அவன் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், மற்றவனை எப்படி  அழிக்கலாம், என்று தீய வழியில் போகிறார்கள்.

அறிவை பெற்றதின் பயன் அவனை வணங்குவது.

வள்ளுவர் சொல்கிறார்

கற்றதனால் ஆய பயன் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

கல்வியினால் பயன் என்ன, அவன் திருவடிகளை தொழாவிட்டால் ?

வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், 
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச் 
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே 
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

என்பார் திருநாவுக்கரசர்.

பெரியாழ்வார் சொல்கிறார் , சங்கையும் சக்கரத்தையும் தோளில் பொரித்துக் கொண்டு  அவனுக்கு தலை முறை தலை முறையாக தொண்டு செய்கிறோம் என்று.

பகவான் பானாசுரனுக்கு ஆயிரம் கைகள் கொடுத்தார். ஆயிரம் கைகளில் எவ்வளவு  நல்லது செய்து இருக்கலாம் ? செய்யவில்லை. மாறாக, அவற்றின் மூலம்  மற்றவர்களுக்கு துன்பம் செய்தான். பகவான் அவன் கரங்களை அறுத்து எறிந்தார்.  அவனைக் கொல்லவில்லை. பிறருக்குத் துன்பம் தந்த கைகளை  துண்டித்தார்.

பலன் தராத மரங்கள் எல்லாம் வெட்டி தீயில் இடப்படும் என்றார் இயேசு கிறிஸ்து .

சிந்தித்துப் பார்ப்போம்.

நமக்கு கிடைத்தது எத்தனை ? அவற்றின் மூலம் எத்தனை பேருக்கு நல்லது செய்து இருக்கிறோம் ?  எத்தனை உள்ளகளை மகிழச் செய்து இருக்கிறோம் என்று.

இது வரை செய்யாவிட்டால் என்ன ...இன்றிலிருந்து செய்யலாமே.

என்ன சரிதானே ?




திருக்குறள் - இகல்

திருக்குறள் - இகல் 



இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

மனிதனுக்கு துன்பம் பெரும்பாலும் இரண்டு இடங்களில் இருந்து வருகிறது...ஒன்று உடலினால் ஏற்படும் துன்பம், இரண்டாவது மனிதனால் ஏற்படும் துன்பம்.

உடல் உபாதைகளை எளிதில் கண்டு கொள்ளலாம்...உடலுக்கு ஒரு வியாதி வரும் என்றால் அதன் விளைவுகள் அதைக் காட்டிக் கொடுத்து விடும்...உடல் சூடு அதிகம் ஆகும், தலை வலி, காய்ச்சல், பசி இன்மை, தூக்கம் இன்மை என்று பல விதங்களில் அந்த நோய் வெளிப்படும். அதைக் கொண்டு இது இன்ன நோய் என்று அறிந்து அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்யலாம்.

மனதில் வரும் நோயை கண்டு கொள்வதும் கடினம். குணப் படுத்துவதும் கடினம்.

பொறாமை, பேராசை, களவு எண்ணம், கோபம், பொருந்தாக் காமம் போன்ற  மனதில் தோன்றும் நோய்களை கண்டு கொள்வதும் கடினம், நீக்குவதும் கடினம்.

மாற்றான் மனைவி மேல் காமம் கொண்ட இராவணனுக்கு தான் செய்வது தவறு என்றே தெரியவில்லை. தெரிந்தால் அல்லவா திருத்திக் கொள்ள.

மேலும், மன நோய்களுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இந்த நோயை வளர்த்து விட்டு அதில் ஆதாயம் பார்ப்பார்கள்.

அதில் முதலாவதாக வருவது, பிரிவினை.

மக்களை பிரித்து வைத்தால், அவர்களை ஆள முடியும். நாட்டின் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால் மக்களை பிரித்து ஒருவர் மேல் மற்றவருக்கு ஒரு வெறுப்பினை வளர்த்து விட்டு ஒவ்வொரு அரசியல் வாதியும், மத குருமார்களும் தங்கள் ஆதாயத்தை பார்த்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் அது தெரியாமல் வெறுப்பினை வளர்த்துக் கொண்டு நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், எப்படி எல்லாம் மக்களை பிரித்துப் போட்டிருக்கிறார்கள்..

மொழியின் பெயரால், ஜாதியின் பெயரால், வட இந்தியா, தென் இந்தியா என்ற நில பாகுபாடால்...இப்படி பல வழிகளில் மக்கள் மத்தியில் வெறுப்பினை தூவி அரசியல் வாதிகள் குளிர் காய்கிறார்கள்.

நாடு அளவுக்கு ஏன் போக வேண்டும்.

சொந்தத்தில், வீட்டில், நட்பில், அலுவலகத்தில் - மற்றவர் கொண்ட வெறுப்பால் எவ்வளவு சிக்கல்கள் வருகின்றன. வெறுப்பு என்ற குணம் வந்தவுடன், யார் மேல் வெறுப்பு கொண்டோமோ அவர்களை விட்டு விலகிப் போய் விடுகிறோம். பின், விலகியதற்கு காரணம் கண்டு பிடிக்கிறோம். மேலும் வெறுப்பை கூட்டுகிறோம்.

வெறுப்பு என்பது இல்லாவிட்டால், யார் மீதும் பகை இல்லை.

நட்பு இருக்கிறதோ இல்லையோ, பகை இருக்காது.

இந்த வெறுப்பைப் பற்றி வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்....

இகல் என்று பெயர்.

இகல் என்றால் வெறுப்பு.

பாடல்

இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.

பொருள்

இகல் என்ப = இகல் என்பது என்ன என்றால்

எல்லா உயிர்க்கும் = அனைத்து உயிர்களுக்கும்

பகல் என்னும் = பிரிவினை என்னும் (பகுத்தல் என்பதில் இருந்து பகல்)

பண்புஇன்மை = பண்பற்ற செயல்

பாரிக்கும் நோய் = உலகில் நிலவும் நோய் (பார் = உலகம்)

வெறுப்பு வந்தால் பிரிவினை வரும். பிரிவினை வந்தால், சேர்ந்து வாழ்வதில் உள்ள சுகம் போகும். அதன் மூலம் வரும் வசதிகள், நன்மைகள் போகும்.

சிந்தித்துப் பாருங்கள்...யார் மேல் எல்லாம் உங்களுக்கு வெறுப்பு என்று. அந்த வெறுப்பு எங்கிருந்து வந்தது என்று. அந்த வெறுப்பினால் விளைந்தவைகள் என்ன என்ன என்று.

வெறுப்பை மாற்றுங்கள். வாழ்வு இனிக்கும்.

வள்ளுவர் சொல்கிறார்.



















Saturday, January 23, 2016

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே 


எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

ஒரு நாள் கொஞ்சம் அதிகமா வேலை செய்து விட்டால் உடம்பு அசந்து போகிறது. ஒரு நாள் கொஞ்சம் அதிகம் வெயிலில் நடந்து விட்டால் தலை வலி வந்து விடுகிறது. எங்காவது வரிசையில் கொஞ்ச நேரம் அதிகம் நின்று விட்டால் கால் வலிக்கிறது.

பெருமாள் எத்தனை காலம் அவன் பக்தர்களுக்காக எவ்வளவு வேலை செய்கிறான். அவனுக்கு அசதி வராதா ?

அதைப் பற்றி யோசிக்காமல் , பெருமாளே எனக்கு இதைச் செய்து கொடு, அதைச் செய்து கொடு என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். எப்போதாவது அவனுக்கு கொஞ்சம் ஓய்வு தரவேண்டும் என்று நமக்குத் தோன்றியது உண்டா ? 

பெருமாளுக்கு அசதி வருமோ வராதோ தெரியாது. ஆனால் வருமே என்று நினைத்து பெரியாழ்வார் உருகுகிறார். அவன் உடல் அசதி தீர்ந்து அவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பல்லாண்டு பாடுகிறார். 

அது, அவரின் பக்தியின் உச்சம்.

"பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே"

பந்தம் என்றால் கட்டுதல், பிணைத்தல். இங்கே கட்டப் பட்டதால் வரும் வலி அல்லது  அசதி என்று கொள்வது சரியாக இருக்கும்.

எங்கே கட்டப்பட்டு கிடந்தான் ?


"அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை"

அந்தி நேரத்தில் சிங்க உருவாகி அரக்கனை அழித்தவனை

அவன் பக்தனான பிரகலாதனுக்காக தூணுக்குள் அடங்கி இருந்தான். இரணியன் தூணைப் பிளந்தவுடன் அதில் இருந்து வெளிப் பட்டு அவனைக் கொன்றான்.

பக்தனுக்காக கல் தூணுக்குள் அடைந்து கிடந்தான். 

கல்லுக்குள் அடைந்து கிடந்தால் உடம்பு வலிகுமா இல்லையா ?

பெருமாள் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்து வியந்திருக்கிறோமே தவிர கல் தூணுக்குள் அடைந்து கிடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோமா ?

அடுத்த முறை நரசிங்க பெருமாளை பார்க்கும் போது , பாவம் நமக்காக எவ்வளவு எல்லாம்  கஷ்டப் பட்டு இருக்கிறார் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். 

இந்த பக்தி , எந்த பேரன்பு, பெரியாழ்வாருக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று ?

அவரே சொல்கிறார்.

இது இன்று நேற்று வந்தது அல்ல. "என் தந்தை, அவரின் தந்தை என்று போய்க் கொண்டே இருந்தால் எல்லோருக்கும் முதலாக ஒரு தந்தை இருப்பானே அவனில் இருந்து  தொடங்கி இன்று வரை அவனுக்காக நாங்கள் பக்தி செய்கிறோம் " என்கிறார். 

பெரியாழ்வார் என்ன சொல்கிறார் என்றால்...உங்கள் முன்னோர்கள் செய்த  புண்ணியம்  நீங்கள் இன்று அவன் மேல் பக்தி செய்யும் நிலை அடைந்து இருக்கிறீர்கள். அந்தத் தொடர்பை துண்டித்து விடாதீர்கள். அந்த பாரம்பரியத்தை  தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள். 

அவர்களுக்கு பிரபந்தத்தையும், கீதையையும், இராமாயணத்தையும் சொல்லித் தாருங்கள். 

அது உங்கள் கடமை. உங்கள் முன்னோர்கள் , உங்கள் வரை இதை கொண்டு வந்து சேர்த்து  விட்டார்கள். இதை மேலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு  இருக்கிறது. 

பாடல் 

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

பொருள் 

எந்தை = என் தந்தை

தந்தை தந்தை = தந்தையின் தந்தை

தம் மூத்தப்பன் = இவர்களின் மூத்த தந்தை

ஏழ்படி கால்தொடங்கி = எழேழு தலை முறையாக

வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் = வழி வழியாக அவனுக்கு ஆட்பட்டு தொண்டு செய்கிறோம்

திரு வோணத் திருவிழவில் = திருவோணத் திருவிழாவில்

அந்தியம் போதில் = அந்தி நேரத்தில்

அரியுரு வாகி = சிம்ம உருவாகி

அரியை யழித்தவனை = அரக்கனை (இரணியனை) அழித்தவனை

பந்தனை தீரப் = அனுக்கம் , உடல் அசதி தீர 

பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று  பாடுவோமே


Friday, January 22, 2016

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து 


அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே

இறந்த காலம் , கழிந்த காலங்கள் மனிதனின் தோள் மேல் பெரிய பாரமாக எப்போதும் அழுத்திக் கொண்டே இருக்கிறது.

செய்த தவறுகள், செய்யாமல் விட்ட நல்லவைகள், சொன்ன பொய்கள், தெரிந்த செய்த துரோகங்கள், சுயநலத்துக்காக செய்த செயல்கள், அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் மனிதனை துரத்திக் கொண்டே இருக்கின்றன.

இது ஒரு புறம்.

இன்னொரு புறம், பிறந்த வீடு, ஜாதி, நாடு, மதம், பெற்றார், உற்றார் , குலம் , கோத்திரம் என்று ஆயிரம் விஷயங்கள் மனிதனை அழுத்திக் கொண்டிருக்கின்றன. என்னால் அதைச் செய்ய முடியவில்லை காரணம்  என் குடும்பச்  சூழ்நிலை. முன்னேறியவர்கள் பட்டியலில் இருந்ததால் எனக்கு எனக்கு இடம் கிடைக்கவில்லை, தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் என் எண்ணமும் செயலும் இப்படி இருக்கிறது என்று பிறந்து வளர்ந்த சூழ்நிலை நம்மை பாதிக்கிறது.

இது இன்னொரு புறம்.

மூன்றாவது என்னவென்றால், பிறந்தது முதலே நம் பெற்றோரும், சமுதாயமும்,  பள்ளிக் கூடமும் சில விஷயங்களை நம் தலையில் ஏற்றி விடுகின்றன. இறைவன் என்றால் யார், இதில் உயர்ந்த இறைவன் யார், தாழ்ந்த இறைவன் யார், சமயப் பெரியார்கள், நல்லது, கெட்டது , அறம் , மறம் , பாவம் , புண்ணியம் என்று வண்டி வண்டியாக மண்டையில் திணித்து விடுகிறார்கள். சிறு வயதில் மூளைச் சலவை செய்யப் பட்டதால் நாம் அவற்றை உண்மை என்றே நம்புகிறோம். அவற்றைத் தாண்டி நம்மால் வர முடிவதில்லை.  அதைத் தவிர மற்றவை எல்லாம் பொய் என்றே நினைக்கத் தலைப் படுகிறோம்.

உண்மையை அறிய வேண்டும் என்றால், பழையன எல்லாவற்றையும் கட்டி தூக்கி எறிந்து விட வேண்டும்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்று பாரதி சொன்ன மாதிரி, பழையன எல்லாவற்றையும் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, குழந்தையின் மனதோடு  உண்மையைத் தேட வேண்டும். 

"பண்டைக் குலத்தைத் தவிர்ந்து"

நீங்கள் யாராக இருந்தாலும் கவலை இல்லை. உங்கள் பழையனவற்றை விட்டு விட்டு வாருங்கள். இறைவன் முன் எல்லோரும் சமம். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், படித்தவன், முட்டாள் என்ற பேதமும் கிடையாது.


மனிதனுக்கு பணமும் செல்வமும் வந்தால் புத்தி மாறிப் போய் விடுகிறது. எவ்வளவோ கஷ்டப் பட்டு தவம் செய்கிறான். நிறைய வரங்களைப் பெறுகிறான். அவற்றின் மூலம் செல்வமும் பதவியும் கிடைக்கிறது. சந்தோஷமாக இருக்க   வேண்டியது தானே ? பணமும் செல்வாக்கும் வந்த உடன், மற்றவர்களை இம்சிக்கத் தொடங்குகிறான். பேராசை மேலும் மேலும் வேண்டும் என்கிறது. இறைவனை யார் என்று கேட்க்கும் அகங்காரம் வருகிறது. இறைவனை நிந்திக்கிறான். அவன் அடியார்களை நிந்திக்கத் தலைப் படுகிறான். அழிகிறான்.

"அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த"


அகில உலகங்களுக்கும் அதிபதியான அசுரரை, இராக்கதரை, கொலை தொழில் செய்வோரை எடுத்து களைந்த.

அதிகாரமும், செல்வமும் அகங்காரத்தை கொடுக்கும். அகங்காரம் அறிவை மயக்கும். எனவே, பணமும், அதிகாரமும் வரும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எடுத்துக் களைந்தவன் யார் ?

இருடி கேசன். 

அது என்ன இருடிகேசன் ?

ரிஷி+ கேசன். ரிஷி என்பது தமிழில் இருடி என்று வந்தது. ரிஷிகளுக்கு எல்லாம் தலைவன். ரிஷிகள், முனிவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள். அவர்களின் தலைவன்.

எனக்கு, உங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை இட்டு அழைத்தால் திரும்பிப் பார்ப்போம். இறைவனுக்கு என்ன பெயர் ? அவனுக்கு ஒரு பெயரும் இல்லை. அவனுக்கு ஒரு பெயரும் இல்லாவிட்டாலும், அவனை எப்படித் தான் அழைப்பது ? ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த பெயரில்  அழைக்கிறார்கள்.

"வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி:

வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி.

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்

திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! என்பார் மணிவாசகர்.

இப்போது முழு பாசுரத்தையும் பார்ப்போம்.


பாடல்

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே


சீர் பிரித்த பின் 

அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை 
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த  இருடீ கேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ 

பொருள்

அண்டக் குலத்துக்கு = அண்டங்களுக்கு எல்லாம்

அதி பதியாகி =அதிபதியாகி

அசுரர் = அசுரர்களை

இராக்கதரை  = இராகதர்களை

இண்டைக் குலத்தை = கொலைத் தொழிலில் ஈடு படுபவர்களை

எடுத்துக் களைந்த = களைந்து எடுத்த

இருடீ கேசன் தனக்கு = ரிஷிகளின் தலைவனுக்கு

தொண்டக் குலத்திலுள்ளீர் = தொண்டர்கள் குலத்தில் உள்ளவர்களே

வந்து = வந்து

அடி தொழுது = அடி தொழுது

ஆயிர நாமம்சொல்லி = ஆயிரம் நாமம் சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து = உங்கள் பழைய குலத்தினை மறந்து

பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று கூறுங்கள்







Thursday, January 21, 2016

பிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ

பிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ


ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே



இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ?

பார்த்து விட்டு வந்த யாராவது நம்மிடம் சொல்லி இருக்கிறார்களா ? நாம் நேரடியாக கேட்டு இருக்கிறோமா?

இல்லை.

இருந்தாலும், பெருமாள் இப்படி இருப்பார், இவ்வளவு உயரம், இன்ன நிறம், இத்தனை கை, இந்த மாதிரி பொருள் எல்லாம் கையில் வைத்து இருப்பார், இந்த மாதிரி உடை உடுத்து இருப்பார் என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.

இது சரியா ?

இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவனை தேட வேண்டும். தேட வேண்டும் என்றால், அவனைப் பற்றி தெரியாது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவனை பற்றி எல்லாம் தெரியும் என்றால் பின் எதற்கு தேடுவது ?

நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, பிறர் சொன்ன செய்திகளை எல்லாம் உதறி விட்டு, சொந்தமாக தேடத் தொடங்குங்கள். இறை என்பது ஒரு அனுபவம். ஒவ்வொருவரும் தனித் தனியே அனுபவிக்க வேண்டிய ஒன்று. என் அனுபவம் உங்களுக்குப் புரியாது. உங்கள் அனுபவம் எனக்குத் தெரியாது.

இறைவன் ஒரு வரையறைக்குள் உட்பட்டவன் அல்ல. நம் சிற்றறிவால் அவனை அறிந்து கொள்ள முடியாது.

"சித்தமும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர்.

நம் சித்தத்துக்குள் அகப்படாது.

அப்படி என்றால் இறைவனை நாம் அறிந்து கொள்ளவே முடியாதா ? தெரிந்து கொள்ளவே முடியாதா என்றால் முடியும்.

அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அவன், நமக்காக இரங்கி இறங்கி வருவான். அவதாரம் என்றால் இறங்கி வருதல் என்று பொருள். அவன் இறங்கி வரும் போது நாம் அவனை அறிய முடியும்.

பெரியாழ்வார் அழைக்கிறார்


"வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ"

வரம்பு ஒழிந்து வந்து ஒல்லை கூடுமினோ.

வரம்பு என்றால் எல்லைக் கோடு . இது தான் என்று இறைவனை ஒரு கட்டத்துக்குள் அடைக்காதீர்கள். அவன் எல்லை அற்றவன். நீங்கள் அந்த எல்லைகளை கடந்து சீக்கிரமாக வாருங்கள்.

அது என்ன ஒல்லை ? ஒல்லை என்றால் சீக்கிரம் என்று அர்த்தம்.

இராமாயணத்தில், இராமன் மிதிலை நோக்கி வருகிறான். அப்போது மிதிலை நகரின் கோட்டையின் மேல் இருந்த கொடிகள் எல்லாம், "மிதிலை நகரமாகிய நான் செய்த மா தவத்தினால், தாமரை மலரில் இருக்கும் திருமகள் இங்கு வந்து இருக்கிறாள். அவளை கரம் பிடிக்க நீ சீக்கிரம் வா " என்று அழைப்பது போல அந்த கொடிகள் அசைந்தன என்பார் கம்பர்.

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


பெரியாழ்வாரும் சீக்கிரம் வாருங்கள் என்று அழைக்கிறார்.

ஏன் ? என்ன அவசரம் ?

மனிதனின் வாழ்நாள் மிகச் சிறியது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், கடவுளை பற்றி சிந்திக்க எல்லாம் எங்க நேரம் இருக்கு ? இருக்கிற வேலைய பாக்கவே நேரம் இல்லை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். சீக்கிரமாக   எங்கள் குழுவில் வந்து சேருங்கள் என்று அழைக்கிறார்.
பிள்ளையை பள்ளியில் சேர்க்க வேண்டும், பின் அதுக்கு கல்லூரியில் இடம் பார்க்க வேண்டும், பின் வேலை, பின் கல்யாணம், ஒரு பேரப் பிள்ளையை பார்க்க வேண்டும், அதற்குள் பெற்றோர்களுக்கு வயதாகி விடும், அவர்களை பார்க்க வேண்டும்...இப்படி தள்ளிக் கொண்டே போனால் நமக்கும் வயதாகி விடும்.

எனவே தள்ளிப் போடாமல் சீக்கிரம் வாருங்கள் என்று அழைப்பு  விடுகிறார்.

"ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்"

எல்லோருக்கும் ஒரு குறிப்பேடு இருக்கிறது. பிறக்கின்ற  தினம்,இறக்கின்ற தினம் என்று குறித்து வைத்திருக்கிறது  அதில்.அது நிலத்தில் விழு முன் வாருங்கள்.

ஒன்றாகச் சேர்ந்தாலும், நமக்கு என்ன என்ன இலாபம் என்று பார்க்காமல் எல்லோருக்கும் நன்மை கிட்ட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

"கூடும் மனம் உடையீர்கள் "  என்கிறார்.

அவனுக்கு முக்தி கிடைத்து விடுமோ, அவனுக்கு பெருமாள் அருள் செய்து விடுவாரோ, நானும் தான் தினமும் பெருமாளை சேவிக்கிறேன், எனக்கு ஒண்ணும் இல்லை, அவனுக்கு மட்டும் பெருமாள் எல்லா சௌபாக்கியத்தையும் அள்ளி அள்ளி தருகிறார் என்று பொறாமை படக் கூடாது. எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது உள்ளம் குளிர வேண்டும்.

"கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்." என்று ஆண்டாள் கூறியபடி. மனத்தில் சூடு இருக்கக் கூடாது. குளிர்ந்து இருக்க வேண்டும்.


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்த பின் என்ன செய்ய வேண்டும் ?

நாடும் நகரமும் நன்கு அறிய "நமோ நாராயாணா" என்று கூறி அவனை பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் என்கிறார்.

 பாடல்;

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே


பொருள்

ஏடு = இந்த உடல்

நிலத்தில் = நிலத்தில்

இடுவதன் முன்னம் = விழுவதற்கு முன்னால்

வந்து = இங்கே வந்து

எங்கள் குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து

கூடு மனமுடை யீர்கள் = கூட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களே

வரம்பொழி வந்து = உங்கள் வாழ்க்கையில் எது எது எல்லைகள் என்று நீங்கள் வகுத்து வைத்து இருந்தீர்களோ அவற்றை எல்லாம் தாண்டி

ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வந்து கூடுங்கள்

நாடும் நகரமும் = நாடும் நகரமும்

நன்கறி ய = நன்றாக அறியும் படி

நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயாணா என்று

பாடு = பாடும்

மனமுடைப் பத்தருள் ளீர் = பாடும் பக்தர்களுக்கு நடுவே

வந்து = வந்து

பல்லாண்டு கூறுமினே = பல்லாண்டு கூறுங்கள்


Tuesday, January 19, 2016

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2


பாடல்

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே


பொருள்

வாழ்வதற்காக என்று இருப்பவர்களே, வந்து மண்ணும், மணமும் பெற்றுக் கொள்ளுங்கள். கூழுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஏழேழு பிறவியாக ஒரு பழி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அரக்கர்கள் வாழும் இலங்கை மேல் படை எடுத்துச் சென்று அதை பாழாக்கியவனுக்கு பல்லாண்டு கூறுவோம்.

இது அடுத்த பாசுரம்.

வாழாட் பட்டு = வாழ்வதற்காக ஆட்பட்டு

நின் றீருள்ளீ ரேல் = நின்று உள்ளீரேல்

வந்து = இங்கு வந்து

மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் பெற்றுக் கொள்ளுங்கள்

கூழாட் பட்டு = கூழுக்கு ஆட்பட்டு

நின் றீர்களை = நிற்பவர்களை

எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் = எங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்

ஏழாட் காலும் = ஏழு பிறப்பிலும்

பழிப்பிலோம் நாங்கள் = பழி இல்லாமல் வாழ்பவர்கள் நாங்கள்

இராக்கதர் வாழ் இலங்கை = அரக்கர்கள் வாழும் இலங்கை

பாழா ளாகப் = பாழ் படும்படி

படைபொரு தானுக்குப் =      படை  எடுத்தவனுக்கு

பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோம்

சரி, இந்த பாட்டில் அப்படி என்ன விசேஷம் ?

பெரியாழ்வாரின் பாடல்கள், அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள்.

வாருங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

தாய் நமக்கு தந்தையை காட்டித் தருகிறாள். அவள் சொல்லித்தான் தந்தை யார் என்று நமக்குத் தெரிகிறது.

தந்தை, நம்மை ஆசாரியனிடம் கொண்டு சேர்க்கிறார். தந்தை சொல்லித்தான் ஆசாரியனை நமக்குத் தெரியும்.

அந்த ஆசாரியன் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பான். அவன் சொல்லித்தான் இறைவன் யார் என்று நமக்குத் தெரியும்.

பெரியாழ்வார் இறைவனை கண்டு கொண்டார். அவனுக்கும், திருமகளுக்கும், சங்கு சக்ரத்துக்கும் பல்லாண்டு பாடினார்.

அடுத்து என்ன செய்வது ?

தான் மட்டும் அறிந்தால் போதாது, இறைவனைத் தேடி அலையும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது, அந்த பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று அவரது தாயுள்ளம் விரும்புகிறது.


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பக்தர்களை நான்காகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது, உலகில் உள்ள பொருள் செல்வத்தைப் பெறுவதற்காக பக்தி பண்ணுபவர்கள். அவர்கள் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது, ஆத்மாவை அறிய விரும்புபவர்கள். ஆத்ம அனுபவத்தை தேடுபவர்கள். அதற்காக இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள்.

மூன்றாவது, மோட்சம், வைகுண்டம் வேண்டி இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள். அவர்களுக்கு பணம் வேண்டாம், செல்வம் வேண்டாம், ஆத்ம அனுபவம் வேண்டாம்...முக்தி ஒன்றையே விரும்பி இறைவனிடம் பக்தி செலுத்துவார்கள்.

நான்காவது, இறைவனையே வேண்டும் என்று, அவனை அடைய வேண்டும் என்று பக்தி செலுத்துபவர்கள்.

(மேலும் சிந்திப்போம்)

அடியவர்களை ஆண்டவனிடம் சேர்பிப்பது ஆசாரியனின் கடமை. 

ஒவ்வொருவராக அழைக்கிறார் பெரியாழ்வார்.

முதலில், யார் வர வேண்டாம் என்று நிர்ணயம் பண்ணிக் கொள்கிறார். 

பணத்துக்காக  இறைவனை வேண்டுபவர்களை முதலிலேயே தள்ளி வைத்து விடுகிறார். உலக இன்பத்துக்காக அலைபவர்கள் ஒரு போதும் இறைவனை அடைய முடியாது  என்பதை குறிப்பால் உணர்த்த ...

"கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்"

கூழுக்காக அலைபவர்களை (கூழுக்கு ஆட் பட்டு ) எங்கள் குழுவில் புக விடமாட்டோம்   என்கிறார்.  இறைவனின் அடியவர்களின் கூட்டத்தில் சேர வேண்டும் என்றால்  முதல் தகுதி செல்வத்தின் மேல் உள்ள ஆசையை விட வேண்டும். 

அடுத்து மீதி உள்ள மூன்று  விதமான பக்தர்களில் யாரை அழைப்பது ?

எப்போதும் சிறந்தவர்களை முதலில் அழைக்க வேண்டும் என்ற மரபுப் படி , இறைவனையே  அடைய வேண்டும் என்று விரும்பும் பக்தர்களை முதலில் அழைக்கிறார். 

"வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்"

வாழ்வதற்காக ஆட்பட்டு நின்று உள்ளீரேல் (இருப்பீர்கள் ஆனால்) வந்து மண்ணும் மணமும் கொண்மின் என்கிறார். 

மண்ணும் மணமும் கொள்ளுங்கள் என்றால் - திருமண்ணும், துளசியும் கொள்ளுங்கள் என்று பொருள் சொல்கிறார்கள். 

இறைவனை அடைய விரும்பும் பக்தர்களுக்கு இன்னொரு தகுதி சொல்கிறார். 


ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்

நாம் இந்த பிறவி மட்டும் பழி செயலில் ஈடு படாமல் இருந்தால் போதாது ....ஏழேழ் பிறவியும் பழி இல்லாமல் இருக்க வேண்டும். இப்போது யாராவது அவன்  அடியவர்களாக இருக்கிறார்கள் என்றால் அது இந்தப் பிறவியில் மட்டும்   நல்லவர்களாக இருந்ததால் வந்த நிலை அல்ல. முன்பு பல பிறவிகளில்  பழி இல்லாமல் வாழ்ந்ததால் இப்போது அவன் பக்தனாக ஆகும் வாய்ப்பு கிடைத்து  இருக்கிறது. 

அப்படி செல்வத்தில் நாட்டம் இல்லாமல்,  ஏழேழ் பிறவியில் பழி இல்லாமல்  வாழ்ந்து, அவனையே அடையும் உள்ளம் கொண்டவர்களே வாருங்கள், அவனுக்கு  பல்லாண்டு கூறுவோம் என்கிறார்.