Friday, February 26, 2016

திருக்குறள் - திருமணம் செய்வது எதற்காக ?

திருக்குறள் - திருமணம் செய்வது எதற்காக ?


இது என்ன கேள்வி ?

கல்யாணம் பண்ணிக் கொண்டால் மனைவியோடு (அல்லது கணவனோடு) உல்லாசமாக இருக்கலாம், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், அவர்களை வளர்ப்பது ஒரு சுகம், நமக்கென்று ஒரு வீடு, மனைவி, மக்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ...இதற்குத்தானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பதே நம் விடையாக இருக்கும்.

இவை எல்லாம் சுய நலத்தின் பாற்பட்டது.

திருமணம், குடும்பம் என்பது அவ்வளவுதானா ? குடும்பத்திற்கு ஒரு சமுதாயப் பொறுப்பு என்று ஒன்றும் இல்லையா ?

இருக்கிறது.

பதினொரு பொறுப்புகளைச் சொல்கிறார் வள்ளுவர்.


திருமணம் என்பதே ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்கிறார்.

இந்தப் பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லையென்றால் திருமணம் உனக்கு ஏற்றது அல்ல என்கிறார்.

அது என்ன பதினொரு கடமைகள் ?

இருப்பது ஒண்ணே முக்கால் அடி, ஏழே ஏழு வார்த்தைகள் அதில் பதினொரு கடமையை எப்படிச் சொல்ல முடியும்?

மூன்று குறளாக பிரித்துக் கொண்டு, அந்த பதினொரு பொறுப்புகள் அல்லது கடமைகளைச் சொல்கிறார்.

முதல் குறள்

பாடல்

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள்

இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்

இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு

நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக

நின்ற துணை = துணையாக

அது யார் மூன்று பேர் ?

- பிரமச்சாரி
-  இல்லத்தைத் துறந்து மனைவியோடு வனம் சென்றவன்
- முற்றும் துறந்த துறவி

இந்த மூன்று பேருக்கும், இல்லத்தில் மனைவியோடு இருப்பவன் உதவி செய்ய வேண்டும்.

சரி, ஒரு பிரமச்சாரி தவறான வழியில்  போகிறான் என்றால் அதற்கும் உதவி செய்ய வேண்டுமா ?

இல்லை,

"நல்லாற்றின் "

நல்ல வழி என்று பொருள். அவர்கள் நல்ல வழியில் போக உதவி செய்ய வேண்டும்.

திருமணம் முடிக்காத ஒருவன் உங்கள் இல்லத்திற்கு வந்தால், அவனுக்கு உணவு  அளிக்க வேண்டியது உங்கள் கடமை, நீங்கள் இல்லறத்தில் இருந்தால்.

திருமணம் முடித்தவன் , திருமணம் முடிக்காத ஒருவன் வீட்டுக்குப் போனால் அந்த பிரமச்சாரி இவனுக்கு உணவு அளிக்க வேண்டியது கடமை இல்லை.

இதை வேறு ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்ப்போம்.

நம் குழந்தைகள் படிப்பிற்காக அல்லது புதிதாக வேலை பொறுப்பை ஏற்று வெளி நாட்டில்  இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை யாராவது  பொறுப்பாக பார்த்துக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா ?

அதே போல், நாம் இருக்கும் இடத்தில் , நமக்குத் தெரிந்த பிரமசாரிகள் யாராவது இருந்தால்  அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

அடுத்தது இல்லத்தை துறந்த கணவன் மற்றும் மனைவி. இவர்களையும் ஒரு இல் வாழ்வான்  காக்க வேண்டும்.

ஏன் ?

வயதான தம்பதிகளுக்கு பிள்ளை இல்லாமல் இருக்கலாம். அல்லது பிள்ளைகளால் கை விடப் பட்டவர்களாக  இருக்கலாம் அல்லது பிள்ளைகள் வெளி நாட்டில்  இருக்கலாம். அப்படிப்பட்ட தம்பதிகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள  முடியாதவர்கள். அவர்களை இல்வாழ்வான் பாதுகாக்க வேண்டும்.

நம் வீட்டுக்கு அருகில் அப்படி யாராவது இருந்தால், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை  செய்ய வேண்டும்.

மூன்றாவது, முற்றும் துறந்த துறவிகள்.

துறவிகளுக்கு நம் சமுதாயம் மிக உயர்ந்த மதிப்பு தந்து வந்திருக்கிறது.

ஏன் என்றால், ஒரு துறவி தான் சுயநலக் கலப்பு இல்லாமல், அறத்தை மக்களுக்கு  எடுத்துச் சொல்ல முடியும். அறம் வாழ வேண்டும் என்றால் துறவிகளை  போற்ற வேண்டும்.

இது முதல் மூன்று கடமைகள்.

இன்னும் வரும்.


  

Thursday, February 11, 2016

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்




நின்ற சொல்லரநீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.


தலைவன் உன்னை விட்டு பிரிந்து போகப் போகிறான் என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

அவர்களுக்குள் இன்னும் திருமணம் ஆகவில்லை. காதல்தான்.

அவனுக்கு, அவள் மேல் உள்ள காதலை விட, அவளுக்கு, அவன் மேல் உள்ள காதல்  அதிகம். அது மட்டும் அல்ல, அவன் தன்னை அளவு கடந்து நேசிக்கிறான்  என்றும் அவள் நினைக்கிறாள். மேலும், அவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியாது என்பதையும் அவன் அறிவான் என்றும் நினைக்கிறாள்.


இவை எல்லாம் உண்மையா ? தெரியாது.

அவன் தன்னை விட்டுப் பிரிந்து போகப் போகிறான் என்று சொன்னவுடன், தலைவி  உருகுகிறாள்.

அப்படியெல்லாம் இருக்காது.

"அவன் எப்போதும் என் தோள்களை விட்டுப் பிரிய மாட்டான். இந்த உலகுக்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவன் எனக்கு முக்கியம் என்பதை அவன் அறிவான். அவனை விட்டுப் பிரிந்தால், நான் வாடிப் போய்விடுவேன் என்பது அவனுக்குத் தெரியும். எனவே  அவன் என்னை விட்டுப் பிரிய மாட்டான்"

சீர் பிரித்த பின்

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் 
என்றும் என் தோள் பிரிவு அறியலரே 
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின்ற்றி அமையா உலகம் போலத்
தம் இன்றி அமையா நன்மை நயந்து அருளி 
நறு நுதல் பசத்தல் அஞ்சி 


சிறுமை உறுபவோ செய்வது அறியலரே 

பொருள் 

நின்ற சொல்லர் = நிலைத்த சொல்லை உடையவர். பேச்சு மாறாதவர். ஒன்று சொன்னால், அதில் எப்போதும் நிலையாக நிற்பவர்

நீடு தோன்று இனியர் = எப்போதும் இனிமையானவர். நீடு என்பதற்கு நீண்ட நாட்களாக என்று பொருள் கொள்ளலாம். நீண்ட நாள் இனிமையாக இருப்பவர் என்பதால், இப்போதும் அந்த இனிமை மாறமாட்டார் என்ற பொருள் மறைந்து நிற்கிறது.

என்றும் = எப்போதும்

என் தோள் = என் தோள்களை

பிரிவு அறியலரே = பிரிவு என்ன என்றால் அறியாதவர். பிரிந்தால் அல்லவா , பிரிவு என்ன என்பதை அறிய

தாமரைத் = தாமரை மலரின்

தண் = குளிர்ந்த

தாது = மகரந்தமும்

ஊதி = பறந்து

மீமிசைச் = மேலே சென்று

சாந்தின் தொடுத்த = சந்தன மரத்தில் உள்ள

தீந் தேன் போலப் = சுவையான தேனைப் போல

புரைய மன்ற = புரை என்றால் உயர்ந்த என்று பொருள். புரைய மன்ற என்றால் உயர்ந்தது அன்றோ

புரையோர் கேண்மை = உயர்ந்தவர் நட்பு

நீரின்ற்றி அமையா உலகம் போலத் = தண்ணீர் இல்லாமல் இயங்க முடியாத உலகம் போல. பயிர் வளர்க, உயிர் வளர்க நீர் எவ்வளவு முக்கியமோ அவன் எனக்கு அவ்வளவு முக்கியம். நீர் இல்லாவிட்டால், பயிர் வாடி, வதங்கி கருகி விடும். அது போல, அவன் இன்றி நான் வாடி வதங்கி இறந்து போய் விடுவேன். மழைத் துளி விழுந்தவுடன் செடிகள் சிலிர்த்து புத்துயிர் பெற்று விளங்கும். அது போல, அவன் வந்தால் நான் மலர்ந்து, சிலிர்த்து புதுப் பொலிவுடன் இருப்பேன்.

தம் இன்றி = அவர் இன்றி

அமையா = என்னால் உயிர் வாழ முடியாது

நன்மை நயந்து அருளி = என் மேல் அன்பு வைத்து நன்மையை விரும்பி அருளிச் செய்த

நறு நுதல் = என் நெற்றி

பசத்தல் அஞ்சி = பசலை நிறம் அடைவதை நினைத்து



சிறுமை உறுபவோ = என்னை விட்டுப் பிரியும் அந்த சிறிய செயலை

செய்வது அறியலரே = செய்வது எப்படி என்று அறிய மாட்டார்

தன்னை விட்டு அவன் பிரியப் போகிறான் என்ற கவலையால் இவற்றை சொல்கிறாள்  என்பது பாட்டில் நேரடியாக இல்லை. அது ஊடாடும் சோகம்.

கவிதை என்பது வார்த்தைகளைத் தாண்டி, வரிகளைத் தாண்டி, உள்ளாடும் உணர்வு.

அந்த உணர்வு , இந்தக் கவிதையில் உங்களுக்குப் புரிந்தால், நீங்கள் பாக்கியசாலிகள்.



Sunday, February 7, 2016

பிரபந்தம் - சொல் நல்லதென்று சொல்லி

பிரபந்தம் - சொல் நல்லதென்று சொல்லி




பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

பிரபந்தம் போன்ற நூல்களை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிக்கக் கூடாது. மனனம் செய்து திருப்பிப் படிப்பது என்றால் அதற்கு நாம் எதற்கு ? ஒரு ஒலிப் பதிவு நாடா (tape recorder) போதுமே. ஒரு முறை பதிவு செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அது அப்படியே பாடும்.

பெரியாழ்வார் சொல்கிறார்....இந்த பல்லாண்டு பாடல்களை நவில வேண்டும் என்று.

"நவின்றுரைப் பார்"

நவின்று உரைப்பார்.

அது என்ன நவில்தல் ?

நவில்தல் என்றால் அறிந்து கொள்ள வேண்டும் என்று வாசிப்பது . சும்மா மேலோட்டமாக வாசித்துக் கொண்டு போவது அல்ல. ஒரு நூலின் ஆழ்ந்த பொருளை  அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு வாசிப்பதற்கு நவில்தல் என்று பெயர்.

திருவள்ளுவர் சொல்லுவார் ....


 நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு. (783)

நவில் தொரும் நூல் நயம் போலும் பயில் தொரும் பண்புடையாளர் தொடர்பு.

ஒரு நூலை நவில நவில எப்படி அதில் புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதோ, அது போல நல்லவர்களின் தொடர்பு புது புது நன்மைகளை  தரும் என்கிறார்.

திருப்பல்லாண்டை நவில வேண்டும். ஆழ்ந்து கற்க வேண்டும்.

இது ஒரு செய்தி.

அறிய வேண்டும், கற்க வேண்டும் என்றால் எதை அறிய வேண்டும் ? எதை கற்க வேண்டும் என்ற கேள்வி வரும்.

அதற்கும் அவர் விடை தருகிறார்.

"நல்லாண் டென்று நவின்று "

இது நமக்கு நல்லது என்று அறிந்து கொண்டு.

பெரியாழ்வார் சொன்னார் என்பதற்காக கற்க வேண்டாம், அது பெருமாள் மேல் பாடப் பட்ட  பாடல் என்பதால் கற்க வேண்டாம், உங்களுக்கு நல்லது என்று அறிந்து  கொள்ளுங்கள்  என்கிறார்.

சரி, ஆழ்ந்து படித்து, அதில் உள்ள நன்மைகளை அறிந்து கொண்டாயிற்று, அடுத்து என்ன செய்ய வேண்டும் ?

மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். நீங்கள் மட்டும் அதை அறிந்தால் போதாது. அறியாத மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

"நல்லாண் டென்று நவின்றுரைப் பார்"

நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்

நமக்கு நல்லது என்று அறிந்து (நவின்று) உரைப்பார்

எதை உரைப்பார்கள் ?

"நமோ நாராய ணாயவென்று"

நமோ நாராயாணாய  என்று

இப்போது பாடலை முழுதும் பார்ப்போம்

பாடல்

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

சீர் பிரித்தபின் 


பல்லாண்டு என்று  பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராய ணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர்  பல்லாண்டே




பொருள்




பல்லாண்டு என்று = பல்லாண்டு என்று 

பவித்திரனை = பவித்தரமானவனை 

பரமேட்டியை = பரம ஏட்டில் பரம பதத்தில் உள்ளவனை 

சார்ங்கம் என்னும் = சார்ங்கம் என்ற 

வில் ஆண்டான் தன்னை = வில்லை ஆண்டவனை 

வில்லிபுத்தூர் விட்டுசித்தன் = ஸ்ரீ வில்லிபுத்தூர் என்ற ஊரில் இருந்த விஷ்ணு சித்தன் என்ற நான் 

விரும்பிய சொல் = விரும்பிய இந்த பல்லாண்டு என்ற பாடல்களை 

நல் ஆண்டு என்று = நல்லது என்று 

நவின்று = கற்று உணர்ந்து 

உரைப்பார் = மற்றவர்களுக்கு சொல்லுவார் 

நமோ நாராய ணாய என்று = நமோ நாராய ணாய என்று

பல்லாண்டும் = பல ஆண்டுகள் 

பரமாத்மனைச் = பரமாத்மனை, பெருமாளை 

சூழ்ந்து இருந்து ஏத்துவர்  பல்லாண்டே = சுற்றி இருந்து புகழ்வர் பல்லாண்டே 

இந்தப் பாசுரத்தோடு திருப்பலாண்டு நிறைவு பெறுகிறது 

இந்தத் திருப்பலாண்டு ஒரு புரட்சிகரமான வெளிப்பாடு. 

பொதுவாக வாழ்த்துபவர், வாழ்த்து பெறுபவரை விட உயர்ந்தவராக இருக்க வேண்டும். 

பெற்றோர், பிள்ளைகளை வாழ்தலாம், ஆசிரியர் மாணவனை வாழ்தலாம்...ஆனால் மாணவன் ஆசிரியரை வாழ்துவது என்பது நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. 

பெருமாள், பெரியாழ்வாரை விட எந்த விதத்தில் குறைந்தவர். இருந்தும் பெரியாழ்வார் "நீ பல்லாண்டு வாழ்க" என்று வாழ்துகிறார். அது மட்டும் அல்ல, அவர் பெருமாளை மட்டும் அல்ல, பெருமாளையும், ஸ்ரீதேவியையும், சங்கு , மற்றும் சக்ரத்தையும்  வாழ்துகிறார். 

அது எப்படி சரியாகும் ?

பக்தியின் உச்ச கட்டம் - அன்பு மட்டுமே நிறைந்த மனம். வாழ்த்த வயது, அறிவு போன்ற  தகுதி எதுவும் வேண்டாம்....அன்பு மட்டும் இருந்தால் போதும். அது ஒன்றே தகுதி.

வைணவர்கள்தான், வாழ்த்த அன்பைத் தவிர வேறு ஒரு தகுதியும் வேண்டாம் என்று   முன் மொழிந்தவர்கள். 

இனிமேல், வாழ்த்த தகுதியை பார்க்காதீர்கள். 

இது ஒரு செய்தி.

மற்றொன்று, எவ்வளவு கிடைத்தாலும், இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று தான் மனிதன் பறக்கிறான். 

கோவிலுக்குப் போனால், ஏழைகளை விட பணக்காரன் தான் அதிக ம் கேட்கிறான். அதைக் கொடு, இதைக் கொடு என்று பிச்சைக் காரனைப் போல கடவுளிடம் எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறான். 

இருப்பது போதும் என்ற எண்ணம் வருவதே இல்லை. 

இத்தனை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல மனம் வருவது இல்லை. இன்னும் தா, இன்னும் தா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

"நீ இதுவரை எனக்கு தந்ததற்கு நன்றி. போதும். நீ உன் மனைவி மற்றும் சொத்துக்களோடு நல்லா இரு" என்று கடவுளிடம்  கூறிய முதல் ஆள் பெரியாழ்வார். 

திருப்தி படுங்கள். கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லுங்கள். கொடுத்தவனை வாழ்த்துங்கள்.

எல்லாம் நல்லபடியா நடக்கும். 








Thursday, February 4, 2016

நற்றிணை - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்

நற்றிணை - அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்


பெண்கள், திருமணம் முடிந்த பின் கணவன் வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். திருமணத்திற்கு முன், தங்கள் வீட்டில் அந்த பெண்கள் மிக மிக செல்லமாக வளர்க்கப் பட்டிருப்பார்கள். திருமணம் ஆன பின் வீட்டை விட்டு போய் விடுவாளே என்று பொதுவாகவே பெண் பிள்ளைகளுக்கு கொஞ்சம் செல்லம் அதிகம்தான் வீட்டில். கேட்டது எல்லாம் கிடைக்கும், ரொம்ப வேலை சொல்வது கிடையாது...கிட்டத் தட்ட இராணி மாதிரிதான் நடத்துவார்கள்.

திருமணம் ஆன பின், கணவன் வீட்டில் இந்த செல்லம் எல்லாம் நடக்காது. வசதியான வீடாக இருந்தால் கூட, மருமகளுக்கு உடனே அவ்வளவு செல்வாக்கும் அதிகாரமும் வந்து விடாது. அது வரை அந்தப் பெண் கொஞ்சம் அடங்கியும், பொறுமையுடனும்தான் இருக்க வேண்டும்.

போன இடம் கொஞ்சம் வறுமையான இடமாக இருந்தால், இன்னும் கஷ்டம்.

இங்கே, நற்றிணையில், பணக்கார வீட்டுப் பெண், ஒரு ஏழை வீட்டில் வாக்கப் பட்டுப் போகிறாள். திருமணம் முடிந்த கொஞ்ச நாள் கழித்து, அந்தப் பெண்ணின் தாயார் , தன் மகள் எப்படி குடும்பம் நடத்துகிறாள் என்று காண்பதற்குச் செல்கிறாள்.

புகுந்த வீட்டில் வறுமை. மூணு வேளை சாப்பாடு கூட கிடையாது.  அதை உண்டு, அந்தப் பெண் மகிழ்வாக இருக்கிறாள்.

நம் வீட்டில், தேன் போல சுவைக்கும் உணவை வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சாப்பிட வா என்றாள் வர மாட்டேன் என்று அங்கும் இங்கும் ஓடிய இந்தச் சின்னப் பெண், எப்படி இந்த மாதிரி மாறி விட்டாள் . இந்த அறிவும், ஆசாரமும் இவ எப்ப படித்தாள் என்று தாய் வியக்கிறாள்.

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 அழகான ஒரு கிராமம். அதில் ஒரு பணக்கார் வீடு. அந்த வீட்டில் ஒரு அழகான  ஒரு பெண் குழந்தை. செல்லமோ செல்லம். அவளை பார்த்துக் கொள்ள தனி வேலைப் பெண்கள். அவளுக்கு சோறு ஊட்டுவது என்றால் எளிதான காரியம்  அல்ல.தங்கக் கிண்ணத்தில் பாலும் தேனும் சேர்த்து எடுத்துக் கொண்டு சாப்பிடுமா சாப்பிடுமா என்று வந்தால், ஒரே ஓட்டம் ஓடி விடுவாள். வீட்டின் வெளிய நிறைய மல்லிகை,முல்லை பந்தல் எல்லாம் இருக்கிறது. அந்த பந்தலுக்குள் ஓடி விடுவாள். இந்தப் பணி பெண்கள் அவளை துரத்திக் கொண்டு ஓடுவார்கள்.

திருமணத்திற்கு பின், மூணு வேளை கூட உணவு கிடையாது. இருந்தும், தந்தை வீட்டு   செல்வத்தை  நினைக்காமல், புகுந்த வீட்டில் மகிழ்வோடு இருக்கிறாள்.




பாடல்
   

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று 5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என 10
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே

பொருள்

பிரசம் கலந்த = தேன் கலந்த

வெண் சுவை = சிறந்த சுவை உடைய

தீம் பால்  = சிறந்த பாலினால் செய்த உணவை

விரி கதிர் = ஒளி விடும்

பொன் கலத்து = பொன்னால் செய்த ஒரு பாத்திரத்தில்

ஒரு கை ஏந்தி = ஒரு கையில் ஏந்திக் கொண்டு

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் = ஒரு சிறிய குச்சியில், பூவை சுற்றி, அவளை அந்த கோலால் அடிப்பது போல விரட்டி

உண் என்று = சாப்பிடு என்று மிரட்டி

ஓக்குபு பிழைப்ப = ஓங்கி கொண்டு சென்றாலும், தப்பி ஓடிய அவள்

தெண் நீர் = தெளிந்த நீர் போல

முத்து அரி = முத்துக்கள் கொண்ட

பொன் சிலம்பு ஒலிப்ப = பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு ஒலிக்க  

தத்து_உற்று = தத்தி தத்தி ஓடி

அரி நரை கூந்தல் = அங்கொன்றும் இங்கொன்றுமாக நரைத்த கூந்தல்

செம் முது செவிலியர் = சிறந்த செவிலித்தாயார்

பரி மெலிந்து ஒழிய = பற்ற முடியாமல் 

பந்தர் ஓடி = பந்தலின் கீழ் ஓடி

ஏவல் மறுக்கும் = சொன்னதைக் கேட்க மறுக்கும்

சிறு விளையாட்டி = விளையாட்டுப் பெண்

அறிவும் ஒழுக்கமும் = அறிவும் ஒழுக்கமும்

யாண்டு உணர்ந்தனள்-கொல்  = எப்போது பெற்றாள்

கொண்ட கொழுநன் = கொண்ட கணவன்

குடி வறன்_உற்று என = குடும்பம் வறுமையில் உள்ள போது

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் = தன் தந்தை வீட்டில் கிடைத்த சிறந்த உணவினை நினைக்க மாட்டாள்

ஒழுகு நீர்= ஆற்றில் செல்லும் நீரில் (ஒழுங்கு நீர் = ஒழுங்காக செல்லும் நீர்)

நுணங்கு அறல் போல = மெல்லிய சிறு சிறு கூழான் கற்களைப் போல

பொழுது மறுத்து உண்ணும்  = ஒரு வேளை விட்டு மறு வேளை உண்ணும்

சிறு மதுகையளே =சிறிய இனிய    கைகளைக் கொண்டவளே

Wednesday, February 3, 2016

பிரபந்தம் - அல் வழக்கு ஒன்றும் இல்லா

பிரபந்தம் - அல் வழக்கு ஒன்றும் இல்லா 



பாடல்

அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே

கொஞ்சம் சீர் பிரிப்போம்

அல் வழக்கு ஒன்றும் இல்லாத அணி கோட்டியர் கோன் அபிமானத்து உங்கள் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று  நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே

பொருள் 

அல் வழக்கு ஒன்றும் இல்லாத = வழக்கு என்றால் வழக்கம். அல் என்றால் அல்லாத. அல்லாத வழக்கம் என்றால் என்ன ? தீய வழக்கம். அப்படி என்றால் வழக்கம் என்றாலே நல்ல வழக்கம் என்று ஆகிறது அல்லவா ? அது சரிதானா ?

பெரியவர்கள் எப்போதும் வழக்கம் என்றால் நல்ல வழக்கத்தைத்தான் கூறுவார்கள்.

வழியே ஏகுக, வழியே மீளுக என்றாள் ஔவை. அதற்கு என்ன அர்த்தம் ? நல்ல வழியில் சென்று, நல்ல வழியில் திரும்பி வரவேண்டும் என்று அர்த்தம்.

தீய வழியில் போய் , தீய வழியில் மீளுதல் என்று அத்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது.

நெறி அல்லா நெறி தன்னை நெறியாக முயல்வேனை  என்பார் மணிவாசகர்

நெறி அல்லா நெறி தன்னை நெறியாக நினைவேனை,
சிறு நெறிகள் சேராமே, திருஅருளே சேரும்வண்ணம்,
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

நெறி என்றால் நல்ல நெறி. நெறி அல்லா நெறி என்றால் தீய நெறி.

அதே போல , வழக்கு என்றால் நல்ல வழக்கம். அல் வழக்கு என்றால் தீய வழக்கம்.

தமிழில் பழக்க வழக்கம் என்று ஒரு சொற்றொடர் உண்டு.

அது என்ன பழக்கம், வழக்கம் ?

பழக்கம் என்றால் அறிந்து செய்வது.

வழக்கம் என்றால் அறிவின், மனதின் தூண்டுதல் இல்லாமல் தானாகச் செய்வது.

ஒன்றைப் பழக்கப் படுத்தி விட்டால், அது வழக்கமாகி விடும்.

குழந்தகைள் காலையில் எழுந்தவுடன் பல் விளக்க ரொம்ப அடம் பிடிப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப் படுத்தி விட்டால், அதுவே வழக்கமாகி விடும். பின், காலையில் எழுந்தவுடன் தன்னால் சென்று பல் விளக்குவார்கள். பல் விளக்காமல் முடியாது.

நல்ல பண்புகளை பழக்கப் படுத்தி வைத்தால் அது வழக்கமாகி விடும்.

நமச்சிவாய, நமச்சிவாய என்று சொல்லி நாக்கை பழக்கப் படுத்தி இருந்தார் சுந்தரர். "சொல்லு நா நமச்சிவாயவே" என்பார். நான் நினைத்துச் சொல்லாவிட்டாலும், என் நாக்கு சொல்லும் என்கிறார்.

அது போல, பெரியாழ்வாரும், நல்லன அல்லாததை செய்யாமல் இருப்பதை வழக்கமாக்கி கொண்டு விட்டார்.

அணி கோட்டியர் = அழகிய திருகோட்டியூரில் உள்ளவர்களுக்கு


 கோன்  = தலைவன்

அபிமானத்து உங்கள் = உன்னுடைய அபிமானத்துக்கு உகந்த

செல்வனைப் போலத் = செல்வனைப் போல (திருக்கோட்டியூர் நம்பியை சொல்கிறார்)

திருமாலே = திருமாலே

நானும் உனக்குப் பழ அடியேன் = நானும் உனக்கு பழைய அடியவன். அது என்ன பழைய அடியவன். சில பேர் , மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ, ஏதோ புத்தகத்தில் படித்தோ பக்தி செய்யத் தொடங்குவார்கள். வேறு யாராவது, வேறு விதமாகச் சொன்னால், அல்லது, வேறு புத்தகத்தில் வேறு வேறுவிதமாகச்  சொல்லி இருந்தால், இதை விட்டு விட்டு அதைப் பற்றிக் கொள்வார்கள். நான் அப்படி அல்ல. ரொம்ப நாளாகவே உனக்கு அடியவன். உன்னை என் அனுபவத்தால் அறிந்தவன் என்கிறார் ஆழ்வார்.


நல் வகையால் = நல்ல வழியில்

நமோ நாராயணா என்று = நமோ நாராயான என்று

நாமம் பல பரவி = பல விதங்களில் அவன் நாமத்தைக் கூறி

பல் வகையாலும் = பல விதங்களிலும்

பவித்திரனே = தூய்மையானவனே

உன்னைப் பல்லாண்டு கூறுவனே = உனக்கு பல்லாண்டு கூறுவேன்

தீய வழக்கங்களை விட்டு விட்டு, நல்ல வழக்கங்களை கொள்ளுங்கள்.

நம்பிக்கை வையுங்கள். வைத்து உயந்தோர் பலர்.



Sunday, January 31, 2016

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே

பிரபந்தம் - ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே


எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

நாம் யாருக்குமே அடிமையாக, அடியவனாக இருக்க விரும்புவதில்லை. எப்போதுமே தலைவனாக, மற்றவர்களுக்கு வழி நடத்துபவர்களாக, எல்லாவற்றையும் கட்டுபாட்டுக்குள் வைத்து இருப்பவர்களாவே இருக்க விரும்புகிறோம்.

ஆனால், நடப்பது என்ன. எவ்வளவுகெவ்வளவு நாம் இந்த உலகை, அதில் உள்ள மக்களை நம் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாம் அவற்றிற்கு அடிமையாக மாறிப் போகிறோம்.

எதன் மேல் பற்று இருக்கிறதோ, அதற்கு நாம் அடிமையாகிப் போகிறோம்.

அது எப்படி ?

என் வீட்டு வேலையாள், அலுவகலத்தில் எனக்கு கீழே வேலை பார்பவர்கள், தோட்டக்காரன், வண்டி ஓட்டுபவன், இவர்களுக்கெல்லாம் நான் எப்படி அடிமையாவேன் ?

எந்தத் தலைவனும், தொண்டனுக்கு அடிமைதான்.

தொண்டனுக்கு வேண்டியதை, விரும்பியதை செய்யும் வரை தான் தொண்டன் தலைவன் பின்னால் நிற்பான்.

தொண்டன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று தலைவன் நினைத்தால், தொண்டனுக்கு எது பிடிக்கும், எது தேவை என்று பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.

குடும்பத்திலும் அப்படித்தான். குடும்பத் தலைவன் சம்பாதித்து கொண்டு வரும்வரை, குடும்பத்திற்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருக்கும்வரை மற்றவர்கள் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

 இப்படி ஆயிரம் இடத்தில் அடிமைகளாகத்தான் இருக்கிறோம்.

என்ன ஒரு ஆறுதல் என்றால், நாம் விரும்பியே அடிமைகளாக இருக்கிறோம்.

இப்படி யார் யாருக்கோ அடிமைகளாக இருப்பதை விட, ஏன் இறைவனுக்கே அடியவனாக இருக்கக் கூடாது ?


 பெரியாழ்வார் சொல்கிறார்

"உனக்கு என்று ஆட்பட்டோமோ அன்றில் இருந்து நான் மட்டும் அல்ல, என் குடும்பமே வீடு பேற்றை அடைந்து விட்டோம் "

இறைவனுக்கு ஆட்படுவதில்தான் பெரியவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம்....

"நான் உன் அடிமை. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். நான் உன்னுடைய பொருள். நீ என்னை ஆண்டு கொள், விற்க வேண்டும் என்றால் விற்றுக் கொள், அடமானம் வைக்க வேண்டும் என்றால் அடமானம் வைத்துக் கொள். ஆனா ல், என்ன செய்தாலும், என்னை விட்டு விடாதே" என்று உருகுகிறார் மணிவாசகர்.

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,

மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

நான் என்றைக்கு உனக்கு அடியவனானேனோ, அன்றே நானும் என் குலமும் வீடு பேற்றினை அடைந்து விட்டோம்.

அப்படி என்று யாரிடம் சொல்கிறார் ?

"ஐந்தலைய பை நாகத்தலைப் பாய்ந்தவனே "

ஐந்து தலையுடன் படம் எடுத்து ஆடும் நாகப் பாம்பின் மேல் பாய்ந்தவனே என்று கண்ணனாக வந்த திருமாலிடம் கூறுகிறார்.

அது என்ன ஐந்து தலை நாகம் ?

புலன்கள் ஐந்தையும் அடக்கி அதன் மேல் நடனம் ஆடியவன். மற்றவர்கள் இந்த ஐந்து புலன்களையும் கண்டு பயப்படுவார்கள். கண்ணன் , அந்த பாம்பை அடக்கி அதன் மேல் நடனம் ஆடினான். புலன்களை அடக்கி விட்டால், பின் அவை நாம் சொல்வதை  கேட்கும். இல்லை என்றால் , அது நம்மை பாடாய் படுத்தும்.

பாடல்

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண்
சென்னாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனிந்து ஐந்தலைய
பை நாகத்தலைப் பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பொருள் 

எந்நாள் =எந்த நாளில்

எம்பெருமான் = என்னுடைய பெருமானே

உன்றனுக்கு = உனக்கு

அ டியோமென்று = அடியவன் என்று

எழுத்துப் பட்ட = எழுதி தந்து விட்டோமோ

அந்நாளே = அந்த நாளே

அடியோங்கள் = அடியவர்களாகிய நாங்கள்

அடிக்குடில் = குலம் முழுவதும்

வீடு பெற்றுய்ந்தது காண் = வீடு பேற்றினை அடைந்தோம்

சென்னாள்  = செம்மையான நாளில் . சிறந்த நாளில்

தோற்றித் = தோன்றி

திருமதுரையுட் = மதுராபுரியில்

சிலைகுனிந்து = வில்லை வளைத்து

ஐந்தலைய = ஐந்து தலையை கொண்ட

பை = படம் எடுத்து ஆடும்

நாகத்தலைப் பாய்ந்தவனே ! = நாகத்தின் தலையின் மேல் பாய்ந்தவனே

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே = உனக்கு பல்லாண்டு என்று வாழ்த்து கூறுகிறோம்















Saturday, January 30, 2016

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை

பிரபந்தம் -உடுத்து களைந்த ஆடை 




உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 

எப்போதாவது அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்தது உண்டா ? அம்மாவின் சேலைக்கு ஒரு மணம் உண்டு. அம்மாவின் மணம் அந்த சேலையில் இருக்கும்.

எப்போதாவது அப்பாவின் மடியில் தலைவைத்து படுத்தது உண்டா ? அப்பாவின் வேட்டியிலும் அப்பாவின் மணம் தெரியும்.

குழந்தையை தோளில் போட்டு தூங்க வைக்கும் போது குழந்தையின் மணம் தெரியும்.

அன்யோன்யமாய் இருப்பவர்களுக்கு இந்த வாசம் தெரியும்.

உடுத்த உடையில், உடுத்தியவரின் வாசம் இருக்கும்.

இந்த உலகை யார் படைத்தார் ? படைத்தவன் பெயர் என்ன ? ஊர், விலாசம் என்ன ? உலகம் படைக்கப் பட்டதா அல்லது தன்னைத் தானே படைபித்துக் கொண்டதா ?

விடை தெரியாத கேள்விகள்.

எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம், நீங்களோ, நானோ இந்த உலகைப் படைக்கவில்லை.

யாராலோ, எப்படியோ படைக்கப் பட்டது. அது யார் என்று தெரிய வேண்டும் என்றால், உலகை அன்யோன்யமாக, ஆழ்ந்து அனுபவித்தால் இது யாரிடம் இருந்து  வந்தது என்று தெரியும்.

புடவையின் மணத்தைக் கொண்டு அம்மாவை அறிவதைப் போல, உலகினை அறிந்தால், உலகைப் படைத்தவனை அறிய முடியும்.

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்

அவன் உடுத்த ஆடை, அவன் உண்ட உணவு, அவன் சூடிய மாலை இவற்றை உடுத்து, உண்டு, சூடி அவனை அறியலாம்.

உண்ணும் உணவு, உடுக்கும் உடை, சூடும் மாலை என்பன குறியீடுகள். இந்த உலகில் எல்லாம்   எங்கிருந்தோ வந்தது. உலகில் உள்ளவற்றை ஆழ்ந்து அறிவதன் மூலம்   இதைப் படைத்தவனை அறியலாம்.

ஆடை - கண்டு அறிவது. பார்த்தால் அதன் நிறம் தெரியும். கனம் தெரியும். பார்த்து அறிவது.  புறத் தோற்றம். பீதக ஆடை என்றார். பீதகம் என்றால் மஞ்சள். மஞ்சள் நிற ஆடை. மஞ்சள் அல்ல எங்கே முக்கியம். ஆடை என்பது பார்த்து அறியக் கூடியது. ஒரு புறத் தோற்றம் உள்ளது. 

உணவு - உணர்வது. உணவை பார்த்து அறிய முடியாது. சுவைத்துத் தான் உணர முடியும்.  எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியாது. இனிப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா ? வெளியில் சொல்ல முடியாது. அனுபவிக்க முடியும். 

மணம்  -  துளசியின் மணம் .  மணம் காற்றில் இருக்கும். உருவம் அற்றது. எங்கும் பரந்து விரிந்து கிடக்கும். 

ஆடையை நான் மட்டும்தான் அணிய முடியும்.

உணவை கொஞ்ச பேருடன் பகிர்ந்து உண்ணலாம். 

மணம் என்பதை நான் பிடித்து வைக்க முடியாது. ஒரு சமயம் இருக்கும், அதை உணர்வதற்குள் மறைந்து விடும். அது எல்லோருக்கும் பொது. 

முதலில்  இறைவன் என்பவன் எனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் இருக்கும். எனக்கு அருள் புரிய வேண்டும், எனக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு பரம பதம் அருள வேண்டும்,  என்ற  சுயநலம் சார்ந்தே பக்தி ஆரம்பிக்கிறது. 

அடுத்த கட்டம், பக்தியை, இறை அனுபவத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வது. எல்லோரிடமும் என்றால் நமக்கு தெரிந்த, அருகில் உள்ள எல்லோரிடமும். 

அதற்கும் அடுத்த கட்டம், இறை உணர்வ, பக்தி என்பது எங்கும் பரவி நிற்பது. நான் யார்   அதை மற்றவர்களுக்குத் தர ? அது எல்லோருக்கும் பொது என்ற எண்ணம் வருவது. 

அவனை அறிவது. அறிந்த அவனை மற்றவர்களோடு  பகிர்ந்து கொள்வது. அறிவதும், உணர்வதும், பகிர்வதும் சுய முயற்சியால் நிகழ்வது. இவை அனைத்தையும் தாண்டி, என்றும் எப்போதும் இருக்கும் இறை தன்மையை உணர்வது  அடுத்த கட்டம். அது நம் சிந்தனைக்கும், அறிவுக்கும் சிக்காதது. ஒரு சமயம்  புரிந்த மாதிரி இருக்கும். மறு சமயம் நழுவி விடும்.  துளசியின் மணம் போல.

அறிவால் அறிவது. - "நீ உடுத்த பீதக ஆடை "

உணர்வால் புரிவது.- "கலந்தது உண்டு "

அறிவையும், உணர்வையும் தாண்டி நிற்பது  " தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன"

பாடல்

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
      உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
      சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
      வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
      பல்லாண்டு கூறுதுமே 


பொருள்

உடுத்துக் களைந்த = உடுத்து களைந்த

நின் = உன்னுடைய

பீதக ஆடை = மஞ்சள் நிற ஆடை

உடுத்து = (அதை நாங்கள் ) உடுத்து

கலத்தது உண்டு = (நீ) உண்ட கலத்தில் உண்டு

தொடுத்த துழாய் மலர் = தொடுத்த துளசி மற்றும் மலர்  மாலையை

சூடிக் = நீ சூடி

களைந்தன சூடும் = நீ அதை களைந்த பிறகு அதை சூடும்

இத்தொண்டர்களோம் = தொண்டர்களாகிய நாங்கள்

விடுத்த = நீ சொல்லிய

திசைக் கருமம் = அன்றாட கருமங்களை

திருத்தித் = திருத்தமாகச் செய்து

திரு வோணத் திருவிழவில் = திருவோண நட்சத்திரத்தில் வரும்
திருவிழாவில்

படுத்த = பள்ளி கொண்ட

பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் = படம் எடுத்து ஆடும் நாகத்தின் மீது பள்ளி கொண்டவனுக்கு

பல்லாண்டு கூறுதுமே = பல்லாண்டு கூறுவோம்