Sunday, August 21, 2016

இராமாயணம் - வாலி வதம் - பொறித்த நாமத்தை

இராமாயணம் - வாலி வதம்  - பொறித்த நாமத்தை 


Self Realization என்பது பெரிய விஷயம்.

உன்னையே நீ அறிவாய் என்றார் சாக்கரடீஸ்.

தன்னைத் தான் அறிவது என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாகக் கூட இருக்குமோ ?

வாழ்க்கை தூண்டிக் கொண்டே இருக்கிறது. அறிந்து கொள் , அறிந்து கொள் என்று. நாம் தான் அறிய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறோம்.

ஒவ்வொரு முறை நாம் கற்றுக் கொள்ளத் தவறும் போதும் வாழ்க்கை இன்னும் அதிக அழுத்தமாக சொல்லித் தர முயல்கிறது.

சில பேர் சீக்கிரம் அதை பற்றிக் கொள்கிறார்கள்.

சிலருக்கு நேரம் ஆகிறது.

வாலி, தான் வலிமை, திறமை, பூஜை, புனஸ்காரம் என்று இருந்து கொண்டிருந்தான்.

தன்னை வெல்ல யாரும் இல்லை என்று நினைத்திருந்தான்.

இராமன் மறைந்து இருந்து ஏவிய அம்பு அவன் மார்பில் பாய்ந்தது.

மிகப் பெரிய அடி. நினைத்துப் பார்க்க முடியாத அடி . வலி.

திகைத்துப் போனான் வாலி.

அவன் மார்பில் தைத்த அம்பை வாலினாலும் கையினாலும் பிடித்து இழுத்து அதில் யார் பெயர் எழுதி இருக்கிறது என்று பார்க்க எத்தனிக்கிறான்.

பாடல்

பறித்த வாளியைப் பரு வலித்
    தடக்கையால் பற்றி,
‘இறுப்பென் ‘என்று கொண்டு எழுந்தனன்,
    மேருவை இறுப்போன்;
‘முறிப்பென் என்னினும் முறிவது
    அன்றாம் ‘என மொழியாப்,
பொறித்த நாமத்தை அறிகுவான்
    நோக்கினன், புகழோன்.


பொருள் 

பறித்த வாளியைப் = மாரிபில் இருந்து பிடுங்கிய அம்பை

 பரு = பருத்த, பெரிய

வலித் = வலிமையான

தடக்கையால் = பெரிய கைகளால்

 பற்றி = இறுகப் பிடித்து


‘இறுப்பென் ‘ = உடைப்பேன்

என்று  = என்று

கொண்டு எழுந்தனன் = எழுந்தான்.

மேருவை = மேரு மலையை

இறுப்போன் = உடைப்பவன், முறிப்பவன்

‘முறிப்பென் என்னினும் = அந்த அம்பை முறித்துப் போடுவேன் என்று நினைத்தாலும்

முறிவது அன்றாம் ‘ = முறிக்க முடியாதது

என மொழியாப் = என்று சொல்லும் படி

பொறித்த = அதில் எழுதி உள்ள

நாமத்தை = நாமத்தை, பெயரை

அறிகுவான் நோக்கினன் = அறியவேண்டி நோக்கினான்

புகழோன் = புகழ் உடைய வாலி

நமக்கு வாழ்வில் வரும் துன்பங்கள் நம்மிடம் சொல்லி விட்டா வருகின்றன ? இன்ன தேதியில், இன்னார் மூலம், இப்படி இப்படி வரும் என்று  சொல்லி விட்டா வருகின்றன.

வாலி மேல் இராமன் மறைந்து இருந்து அம்பு எய்தான் என்பது ஒரு குறியீடு.

துன்பம் வரும் வழி நாம் அறிவதே இல்லை.

துன்பத்தை இறைவன் நமக்குத் தருகிறான் என்றால் , சொல்லி விட்டுத் தருவதில்லை.

இராமன் நேரில் வந்து வாலியிடம் சொல்லி இருந்தால் , ஒரு வேளை வாலி இராமன் சொல்வதைக் கேட்டு அரசை சுக்ரீவனிடம் கொடுத்து விட்டு இராமன் பின்னால் கிளம்பி இருப்பான்.

 ஆனால், வாலி தன்னைத் தான் அறிந்திருக்க மாட்டான்.

இராமனே தான் தான் பரம் பொருள் என்று சொல்லி இருந்தாலும், முதலில் நம்பி  இருந்தாலும், பின்னால் சந்தேகப் பட்டிருப்பான் .  "பரம் பொருள்னு சொல்றான்...கட்டிய மனைவியை பறி கொடுத்து விட்டு காடு மேடெல்லாம் அலைகிறானே ...ஒரு வேளை உண்மையிலேயே இவன் பரம் பொருள் இல்லையோ " என்ற சந்தேகம் வந்திருக்கலாம்.

துன்பம் வரும் போதுதான் நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம்.

பற்றை விட்டால் தான், பரமனை அறிய முடியும்.

வாலியோ ஒவ்வொரு நாளும் மற்றவர்களிடம் உள்ள வலிமை எல்லாம் தனக்கு வேண்டும் என்று மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருக்கிறான்.

என்று இவன் பற்றை விடுவது, என்று இவன் உண்மையை அறிவது ?

அம்பைப் பறித்த வாலி கண்டது என்ன ?


http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_21.html



Saturday, August 20, 2016

திருக்குறள் - தோல்வியும் வெற்றிதான்

திருக்குறள் - தோல்வியும் வெற்றிதான் 


அவன் ஒரு பெரிய வீரன். அவன் பேரை கேட்டாலே எதிரிகள் நடுங்குவார்கள். பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல என்பது மாதிரி.

அப்படிப் பட்ட வீரன், அவனுடைய காதலியை காணச் செல்கிறான். அவளுடைய நெற்றியை பார்க்கிறான். அவனுடைய வீரம் எல்லாம் எங்கோ போய் விட்டது. அவள் அழகின் முன், அவன் வீரம் மண்டியிட்டது.

பாடல்

ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.

பொருள்

ஒள்நுதற் கோஒ = ஒள் + நுதலுக்கோ = ஒளி பொருந்திய நெற்றிக்கோ

உடைந்ததே = உடைந்ததே

ஞாட்பினுள் = போர் களத்தில்

நண்ணாரும் = பகைவர்களும்

உட்கும் = அச்சம் கொள்ளும்

என்  பீடு = என் பெருமை, அல்லது வலிமை

பாட்டும் பொருளும் நல்லாத்தான் இருக்கு.

பாட்டிலில் உள்ள சில வார்த்தைத் தெரிவுகளை பார்ப்போம்.

ஏன் நெற்றியைப் பார்த்து அவன் வீரம் உடைய வேண்டும் ?

கண்ணைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம் ...

அல்லது சிறுத்த இடையைப் பார்த்து என்று சொல்லி இருக்கலாம்...

அல்லது சிவந்த பாதங்களை பார்த்து என்று சொல்லி இருக்கலாம்

அல்லது பெண்ணுக்கே உரிய வேறு பல சிறந்த அங்கங்களை காட்டிச் சொல்லி இருக்கலாம்...

நெற்றியை ஏன் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

பெண்களுக்கு கருணை அதிகம்.

கருணை கண்ணில் இருந்து வெளிப்படும்.

கருணை அதிகமாக அதிகமாக கண்ணின் விசாலம் அதிகமாகும்.

அவளுக்கு விசாலாக்ஷி என்றும் பெயர்.

கண் பெரிதாகும் போது நெற்றி சுருங்கும்.

சின்னப் பெண் தான். இருந்தும் அவளின் மனதில் ஊற்றெடுக்கும் அந்த அன்பு, கருணை , பாசம் ...அவளது சின்ன நெற்றியில் தெரிகிறது.

அவனது வீரம் , மற்றவர்களை பயப்பட வைக்கும். எதிரிகளை கொல்லும் .

ஆனால், இவளது கருணை மிகுந்த பார்வையும், அதனால் சிறுத்த நெற்றியும்  உயிர்களை வாழ வைக்கும்.

அதை நினைத்து அவன் வெட்கப் பட்டு, அதனால், அவன் பெருமை உடைந்தது.

மற்றவர்களை கொல்லுவது , அவர்கள் நம்மைக் கண்டால் மிரளும் படி முரட்டுத் தனமாய் இருப்பது எல்லாம் ஒரு பெரிய விஷயமா...இல்லவே இல்லை என்று அவன் உணர்ந்த தருணம். முரடனையும் , மென்மையானவனாய் மாற்றும் பெண்ணின் கருணை.


இந் நன்னுதல் அவள் நின் கேள் என்று சீதையை அறிமுகம் செய்வான் குகனிடம் இராமன்.

இந்த அழகிய நெற்றியை உடைய பெண் உன்னுடைய உறவினள் என்று கூறுகிறான். அங்கும் நெற்றியை குறித்து கம்பன் பேசுகிறான்.


"ஒள்நுதற் கோஒ" என்று ஒரு 'ஓ" வை ஏன் வள்ளுவர் போடுகிறார் ? அந்த அளபெடை எதற்கு ?

"ஓ" என்பது ஒரு ஆச்சரியக் குறி. அடடா, கருணையும் மக்களை அடிமை கொள்ளுமா ?  இந்த சின்ன நெற்றிக்கு இவ்வளவு வலிமையா என்ற ஆச்சரியம். அதை எப்படி சொல்லுவது ? ஒரே ஒரு எழுத்தில் காட்டி விட்டுப் போகிறார் வள்ளுவர். 

ஆச்சரியம், திகைப்பு எல்லாம் அந்த ஒரு 'ஓ' வில் இருக்கிறது. 

ஒரு முறை சொல்லிப் பாருங்கள் , புரியும். 

அது என்ன "நண்ணார் ".கேள்விப் படாத பெயராக இருக்கிறதே.

நண்ணுதல் என்றால் நெருங்கி வருதல் நண்பர் என்பது அதில் இருந்து வந்தது. 

நண்ணார் என்றால் நெருங்காதவர். தள்ளியே இருப்பவர். பகைவர். 

ஒன்றே முக்கால் அடி தான். ஏழே ஏழு வார்த்தை தான். 

எவ்வளவு அர்த்தம்.

இப்படி 1330 பாடல் பாடி வைத்திருக்கிறார்.

நேரம் இருப்பின், படித்துப் பாருங்கள். 

கொட்டிக் கிடக்குது பொக்கிஷம். 




Friday, August 19, 2016

இராமாயணம் - வாலி வதம் - வார்த்தையின் வலிமை - பாகம் 2.3

இராமாயணம் - வாலி வதம்  - வார்த்தையின் வலிமை  - பாகம் 2.3




நமக்குத் துன்பம் வரும் போது , யாரால் இந்த துன்பம் வந்தது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் நாம் நொந்து கொள்கிறோம். ஏதோ எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும், நாம் மட்டும் தான் துன்பத்தில் வாடுவது போலவும் நாம் நினைத்து வருந்துவோம்.

அது மட்டும் அல்ல, நமக்கு ஏன் துன்பம் வரக் கூடாது ? எல்லோருக்கும் வருகிறது. அது போல நமக்கும் இன்பமும் துன்பமும் வருகிறது.

துன்பம் யார் தந்தோ வருவது இல்லை. நாமே தேடிக் கொள்வதுதான். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு துன்பத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு வகையில் நாம் செய்த அறம் அல்லாத காரியம் இருந்திருக்கும்.

வாலியின் மார்பில் இராமன் விட்ட அம்பு பாய்ந்தது.

வாலி அதை தன் கைகளாலும், வாலினாலும் பிடித்து நிறுத்தி விட்டான். இராம பாணத்தை தடுத்து நிறுத்திய ஆற்றல் அவன் ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது.

இவ்வளவு வலிமை வாய்ந்த என் மார்பில் அம்பை ஒரு வில்லின் மூலம் எய்ய முடியாது. அவ்வளவு ஆற்றல் உள்ள ஒருவன் இருக்க முடியாது. இது ஏதோ ஒரு தவ முனிவரின் சாபத்தால் (சொல்லினால்) வந்ததாகத் தான்  இருக்க முடியும் என்று நினைத்து, பல்கலைக் கடித்துக் கொண்டு அந்த அம்பை கொஞ்சம் வெளியே இழுத்துப் பார்த்தான்.



பாடல்

‘வில்லினால் துரப்ப அரிது, இவ் வெம்
    சரம்! ‘என வியக்கும்;
‘சொல்லினால் நெடு முனிவரோ
    தூண்டினார்? ‘என்னும்;
பல்லினால் கடிப்புறும் பல
    காலும்; தன் உரத்தைக்
கல்லி, ஆர்ப்பொடும் பறிக்கும் அப்
    பகழியைக் கண்டான்.

பொருள்

‘வில்லினால் = வில்லில் இருந்து

துரப்ப அரிது = எய்ய முடியாது

இவ் வெம் சரம்! = இந்த கொடிய அம்பை

‘என வியக்கும்; = என்று வியந்து

‘சொல்லினால் = சாபத்தால்

நெடு முனிவரோ தூண்டினார்? ‘என்னும்; = உயர்ந்த முனிவர் எவரோ அனுப்பி இருப்பாரோ என்று எண்ணினான்

பல்லினால் கடிப்புறும் = பல்லை கடித்துக் கொண்டு

பல காலும்; = நீண்ட நேரம்

தன் உரத்தைக் கல்லி, = மார்பை பிளந்து

ஆர்ப்பொடும் பறிக்கும் = மிகுந்த ஒலியோடு பறித்தான்

 அப் பகழியைக் கண்டான். = அந்த "அம்பைக்" கண்டான்


வார்த்தைகளுக்கு உள்ள மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இராம பாணத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட வாலி சொல்கிறான், இப்படி பட்ட அம்பை வில்லின் மூலம் யாரும் எய்திருக்க முடியாது, முனிவரின் சொல் தான் இவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்று.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை உண்டு.

அசோக வனத்தில் சிறை இருக்கும் சீதை சொல்லுவாள்


"அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ 
எல்லை நீத்த இவ் உலகம் யாவதையும் என் 
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் 
வில்லின் ஆற்றலுக்கு மாசென்று வீசினேன் என்றாள்"

ஒரு வார்த்தையில் அனைத்து உலகையும் பொசுக்கி விடுவேன் என்றாள்

அப்படி என்றால் வார்த்தைக்கு, சொல்லுக்கு எவ்வளவு வலிமை இருக்க வேண்டும்.

இராமன் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்ற ஆராய்ச்சி ஒரு புறம்  இருக்கட்டும்.

வாரத்தைகளின் மகத்துவம் அறிவோம்.

அவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தைகளை எவ்வளவு மோசமாக நாம் உபயோகிக்கிறோம்.

அர்த்தம் அற்ற பேச்சுக்கள். வம்பு. புரணி . கோள் சொல்லுதல். என்று எத்தனை வகைகளில் வார்த்தைகளை வீணடிக்கிறோம்.

ஆராய்ந்து பேசுவோம். அர்த்தமுடன் பேசுவோம்.

மந்திரங்கள் என்பது என்ன ? வார்த்தைகளின் தொகுப்பு தானே.

வார்த்தைகளுக்கு வலிமை இருக்கும் என்றால் மந்திரங்களுக்கும் வலிமை இருக்கும் தானே ?

சிந்திப்போம்....

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/23.html





Thursday, August 18, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2


தன்னை யாராலும் வெல்ல முடியாது, நீ பயப்படாதே என்று மனைவிக்கு தேறுதல் சொல்லிவிட்டு வாலி போருக்கு புறப்படுகிறான்.

சுக்ரீவனோடு சண்டை போடுகிறான்.

சுக்ரீவனை தலைக்கு மேல் தூக்கி நிற்கும் போது இராமன் , இராமன் வலியின் மேல் அம்பு எய்துகிறான்.

மிக மிக வலிமை மிக்கவன் வாலி.

இருந்தும் அவன் மார்பில், கனிந்த வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல இராமனின் அம்பு நுழைகிறது.

பாடல்

காரும் வார் சுவைக் கதலியின்
    கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது
    நின்றது என் செப்ப?
நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை அப் பகழி.

பொருள்

காரும் வார் சுவைக் கதலியின் = கனிந்த சுவையான வாழைப் பழத்தில்

கனியினைக் = பழத்தினை

கழியச் சேரும் = விரைந்து செல்லும்

ஊசியிற் சென்றது = ஊசி போல சென்றது

நின்றது = நின்றது

என் செப்ப? = என்ன சொல்ல

நீரும் = நீரும்

நீர்தரு நெருப்பும் = நீரைத் தரும் நெருப்பும்

வன் காற்றும் = ஆற்றல் மிகுந்த காற்றும்

கீழ் நிமிர்ந்த பாரும் = இவற்றிற்கு கீழே உள்ள நிலமும்

சார் வலி படைத்தவன் = மிகுந்த வலிமை கொண்டவனான

உரத்தை அப் பகழி = வலிமையை அந்த அம்பு



ஒரு பரு வெடிப்பில் (Big Bang ) இருந்து இந்த உலகம் வந்தது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு நெருப்புக் கோளம் வெடித்து சிதறியதில் இருந்து உலகம் அனைத்தும் வந்தது என்று அறிவியல் கூறுகிறது.

கம்பன் கூறுகிறான், ஆதியில் நெருப்பு இருந்தது என்றும், அதில் இருந்து நீர்  வந்தது என்றும், அதில் இருந்து காற்றும் நிலமும் வந்தது என்றும்.

வன் காற்று என்று ஏன் கூறுகிறான் ?

வேன் நெருப்பு என்றோ, வன் நீர் என்றோ கூறி இருக்கலாம் அல்லவா ?

காற்றுக்குத்தான் வலிமை அதிகம்.

இராமாயணத்திலும் சரி, பாரதத்திலும் சரி,  மிக்க உடல் வலிமை மிக்கவர்கள்  வாயு புத்திரர்களே.

இராமாயணத்தில் அனுமன்

பாரதத்தில் பீமன்.

என்ன காரணம் ?

மூச்சை அடக்கினால் வலிமை வரும்.

நாடியில் இருக்கிறது அத்தனை வலிமையையும்.


சரி, வாலியின் பலத்தை எடுத்தது யார் ? இராமனா ?

கம்பன் கூறுகிறான் , வாலியின் பலத்தை எடுத்தது இராமன் அல்ல, அவன்  எய்த அம்பு என்று.

இது என்ன புதுக் கதை ? அம்பு தானாகவா தாக்கியது ?


இராமன் தானே எய்தான் ?

எய்தது இராமன் தான். அதில் சந்தேகம் இல்லை.

"    உரத்தை அப் பகழி."

வாலியின் வலிமையை அந்த "அம்பு"  கொண்டு சென்றது என்கிறான்.

அதற்கு என்ன காரணம் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/22.html


Wednesday, August 17, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1


வாலி வதம் , இராமாயணத்தில் ஜீரணிக்க முடியாத ஒரு பகுதி. எத்தனை ஆயிரம் சமாதானம் சொன்னாலும், இராமன் மறைந்து இருந்து அம்பு எய்ததை , அவனுடைய பக்தர்களே கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இடம் அது.

ஏன் அது நடந்தது ? இராமன் குழம்பிப் போனானா ? மனைவியைப் பிரிந்ததால் அவன் முடிவு எடுப்பதில் தடுமாறினானா ? அப்படி என்றால் அவனை நம்பி ஒரு பெரிய அரசை எப்படி ஒப்படைப்பது ?

வால்மீகிக்கும், கம்பனுக்கும் இது தெரியாதா ? ஏன் வேலை மெனக்கெட்டு அதை பாட வேண்டும். விட்டு விட்டுப் போகவேண்டியது தானே ? இராமன் போன்ற உயர்ந்த பாத்திரத்தை ஏன் அதன் மதிப்பில் இருந்து நழுவி விழச் செய்தார்கள்.

ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா ?

அது என்ன காரணம் ?

சிந்திப்போம்.

மனிதனின் அறிவை அழிப்பது அவனுடைய ஆணவம். தான் என்ற ஆணவம் வரும்போது மனிதன் வீழ்ச்சியின் முதல் படியில் காலை வைக்கிறான்.

ஆணவம் அறிவுக்குப் போடும் திரை. அது உண்மையை மறைக்கும்.

ஆணவ மலம் ஆதி மலம் என்று சொல்லுவார்கள்.

வாலி, சுக்ரீவனோடு போர் செய்யப் புறப்படுகிறான்.

வாலிலியின் மனைவி தாரை தடுக்கிறாள். இத்தனை நாள் இல்லாத வீரம் சுக்ரீவனுக்கு எப்படி வந்தது ? என்று பலவும் சொல்லி வாலியை தடுத்து நிறுத்த முயல்கிறாள்.

வாலி ஆணவத்தின் உச்சியில் இருந்து பேசுகிறான் .

"இந்த மூன்று உலகமும் என் எதிரில் வந்தாலும், அவை என் முன்னால் நிற்காமல் தோற்று ஓடும் " என்று கூறுகிறான்.

பாடல்

மூன்று என முற்றிய
    முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன
    எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று அவை
    தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை
    தையல் கேட்டியால். ‘


பொருள்

‘மூன்று என முற்றிய = மேல் , நடு , கீழ் என்று கூறப் படும் அந்த

முடிவு இல் பேர் உலகு = எல்லை அற்ற இந்த பெரிய உலகம் யாவும்

ஏன்று உடன் உற்றன = ஒன்று திரண்டு

எனக்கு நேர் எனத் தோன்றினும், = எனக்கு முன்னே தோன்றினாலும்

 தோற்று அவை  தொலையும் என்றலின் = அவை யாவும் தோற்று ஓடும்

சான்று உள; =அதற்கு சான்று உள்ளது

அன்னவை = அவற்றை

தையல் கேட்டியால். ‘ = பெண்ணே நீ கேட்டுக் கொள்

தன்னை மிஞ்ச இந்த மூன்று உலகிலும் யாரும் இல்லை என்கிறான்.

தனித் தனியாக கூட இல்லை, இந்த மூன்று உலகங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறான்.

அது ஆணவத்தின் உச்சம்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆணவம் கெட்டிப் பட்டிருக்கிறதோ , அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை நம் கண்களுக்குத் தெரியாது.



Tuesday, August 16, 2016

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?




முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மழையோ 

என்ற சினிமா பாடல் வரிகளை கேட்ட உடன் சொக்கிப் போகிறோம். அட டா என்ன ஒரு கற்பனை என்று.

அந்தக் காலத்திலேயே ,  இந்த கற்பனையெல்லாம் தூக்கி அடிக்கும்படி ஆண்டாள் எழுதி இருக்கிறாள்.

மேகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. அது வானம் என்ற பெண்ணுக்கு போட்ட மேலாக்கு மாதிரி இருக்கிறது. காற்றில் அது அங்கும் இங்கும் அலைவது , வான மகளின் மேலாடை அசைவது போல இருக்கிறது.

அந்த மேகங்களிடம் ஆண்டாள் கேட்கிறாள்...."என் ஆள், மதுசூதனன் அங்க இருக்கானா " என்று.

மேகங்கள் பதில் சொல்ல மாட்டேன் என்கின்றன.

அதனால், ஆண்டாளுக்கு இன்னும் துக்கம் அதிகம் ஆகிறது. இங்கும் இல்லை. அங்கும் இல்லை என்றால் எங்கு தான் போனான் இந்த மாயக் கண்ணன் என்று.

அவள் கண்ணில் இருந்து நீர் வழிகிறது.

அது வழிந்து கன்னத்தில் இருந்து நேரே சொட்டு சொட்டாக அவள் மார்பில் விழுகிறது. அவளுடைய மார்பும் கண்ணீரால் நனைகிறது.


பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிறமான வானத்தில்

மேலாப்பு = தாவணி, அல்லது சேலை

விரித்தாற்போல் = அணிந்திருப்பதைப் போல

மேகங்காள் = மேகங்களே


தெண்ணீர்பாய் = தெளிந்த நீர் பாயும்

வேங்கடத்தென் = திரு வேங்கடத்தில் உள்ள என்

திருமாலும் =திருமாலும்

போந்தானே = அங்கு வந்தானா ?

கண்ணீர்கள் = இரண்டு கண்ணில் இருந்தும் வழியும் கண்ணீர்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

துளிசோரச் = துளி துளியாக வடிய

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் =பெண்ணின் குணங்களான நாணம் போன்றவற்றை அழிக்கும்

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா

என்னதான் ஆனாலும் பெண் வாய் விட்டு தன் காமத்தை வெளியே சொல்ல மாட்டாள். தன் ஆசையை வெளிப் படுத்த மாட்டாள். ஆனால், வேறு வழி இல்லாமல், தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விடுகிறது. துக்கம் ஒரு புறம். இப்படி , தன்னை கட்டுப் படுத்த முடியாமல் எல்லோரிடமும் தன் காதல் இப்படி ஒரு வெட்கம் இல்லாமல்  வெளிப் பட்டுவிட்டதே என்ற சங்கடம் ஒரு புறம்.

படிக்கும் எந்த பெண்ணுக்கும் ஆண்டாளின் அவஸ்தை புரியும்.

காதலித்திருந்தால் , ஆணுக்கும் புரியும் அந்த அவஸ்தை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/boss.html

Monday, August 15, 2016

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?


வாலி வதை என்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. இராமன் என்ற அவதார புருஷன் இப்படி ஒரு தவறு செய்யலாமா என்று அவனின் பக்தர்களே ஜீரணிக்க முடியாமல் திணறும் ஒரு இடம் வாலி வதம் .

இராமன் தவறு செய்தான் என்று வைத்துக் கொண்டாள் , ஏன் அந்தத் தவற்றை செய்தான் ? அதற்கு காரணம் என்ன ? காரணம் இருந்தாலும், செய்தது சரிதானா  என்ற கேள்விகள் காலம் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இராமன் , ஆராயாமல் எடுத்த முடிவுக்குக் காரணம் அனுமன்.

மனைவியைப் பிரிந்து, சோகத்தில் இருக்கும் இராமனை தூண்டி விட்டு , அவனை உணர்ச்சி வசப்படச் செய்து தன் காரியத்தை முடித்துக் கொண்டது அனுமனின் சாமர்த்தியம்.

"சுக்ரீவனனின் மனைவியையும் எடுத்துக் கொண்டான்" என்று சொல்கிறான் அனுமன். அப்படி என்றால் என்ன ? சுக்ரீவனனின் அரசையும் எடுத்துக் கொண்டான் என்று பொருள் பட பேசுகிறான்.

வாலி மூத்தவன். அரசு அவனுக்குத் தான் சொந்தம். அப்படி இருக்க , சுக்ரீவனின் அரசை அவன் எடுத்துக் கொண்டான் என்று சொல்வது எப்படி சரியாகும்.

அது மட்டும் அல்ல.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று ஒரு இடத்தில் கூட கம்பன் பதிவு செய்யவில்லை.

இறைவனின் மேல் விழுந்து அழும் மண்டோதரி சொல்கிறாள் "சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் என நாடி தடவியதோ ஒருவன் வாளி " என்று.

வாலியின் மேல் விழுந்து புலம்பும் தாரை அப்படி ஒரு வரிகூட சொல்ல வில்லை.

வாலியின் மேல் வீண் பழியை சுமத்தியது அனுமன். இராமனை தூண்டி அவனிடம் வாலியை கொல்லுவேன் என்று சத்யம் வாங்கியது அனுமனின் பேச்சுத் திறம்.

பாடல்

உருமை என்று இவர்க்கு உரிய தாரமாம் 
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்.

பொருள்

உருமை = சுக்ரீவனின் மனைவியின் பெயர் ருமை . அது உருமை என்று வந்தது.

என்று = என்று

இவர்க்கு = சுக்ரீவனுக்கு

உரிய தாரமாம் = உரிமை உள்ள தாரமாம்

அருமருந்தையும் = அறிய மருந்தையும். இங்கு அவன் கூறும் அந்த 'ம்' காவியத்தின் போக்கை மாற்றுகிறது.

அவன் = வாலி

விரும்பினான் = விரும்பினான்

இருமையும் = தாரத்தையும், அரசையும்

துறந்து = துறந்து

இவன்= சுக்ரீவன்

இருந்தனன் = இருந்தான்

கருமம் இங்கு இது = இங்கு நடந்தது இதுதான்

எம் கடவுள் = எமக்கு கடவுள் போன்றவனே

என்றனன் = என்று அனுமன் கூறினான்

அனுமன் , சொற்களை மிக மிக தேர்ந்தெடுத்துப் போடுகிறான்.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று சொல்ல வில்லை. "விரும்பினான்" என்று கூறுகிறான்.

பின், சுக்ரீவன் "இருமையும் இழந்தான்" என்று கூறுகிறான்.

மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த இராமன், எல்லாவற்றையும்  தானே முடிச்சுப் போட்டுக் கொண்டு "சுக்ரீவனுக்கு உரிய  தாரத்தையும், அரசையும் வாலி கவர்ந்து கொண்டான் " என்ற முடிவுக்கு வருகிறான்.

பாடம் நடத்துகிறான் கம்பன்.

1. உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. அறிவு பூர்வமாக, சிந்தித்து, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்தால்  கால காலத்துக்கும் துன்பம் தான்.

2. மனைவி என்பவள் மருந்தைப் போன்றவள் என்கிறான் கம்பன். இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் இது போல கூறுகிறான். துன்பத்தை போக்குவது  மருந்து. வலியை குறைப்பது, நீக்குவது மருந்து. கணவனுக்கு வரும் துன்பத்தை போக்குபவளாக மனைவி இருக்க வேண்டும்.  துன்பத்தை கொண்டு வந்து தருபவளாக அல்ல.

3. எப்படி பேசுவது என்று தெரிந்தால், எவ்வளவு பெரிய காரியத்தையும்  நடத்தி விடலாம். யாருடைய உதவியையும் பெற்றுக்  கொள்ள முடியும். பேசிப் பழக வேண்டும். வார்த்தைகளை கையாள்வதில்  திறமை வேண்டும். வெற்றிக்கு அது முதல் படி.

இராமன் செய்தது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

அதில் இருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

அறிவோம். உயர்வோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_15.html