இராமாயணம் - பரதன் - 1
இராமாயணத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு குடும்பச் சண்டை. இளைய மனைவியின் பேச்சைக் கேட்டு, மூத்த மகனுக்கு சேர வேண்டிய நாட்டை அவனுக்குத் தராமல், இளைய மனைவியின் மகனுக்கு ஒரு அரசன் தந்து விட்டான். அரசன் சொன்னான் என்பதற்காக , அந்த மூத்த மகன் கானகம் போனான். போன இடத்தில் அவனுடைய மனைவியை இன்னொருவன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். தூக்கிப் போனவனோடு சண்டை இட்டு, மனைவியை மீட்டு வந்தான்.
இவ்வளவுதான் கதை.
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இதை விட அருமையான கதைகள் எவ்வளவோ இருக்கிறது. இருந்தும் இராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது ?
அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் இப்போது இருப்பதை போலத்தான் இருக்கிறது. நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. நல்லவர்களிடமும் சில தவறுகள் உண்டு. தீயவர்களிடமும் சில நல்ல குணங்கள் உண்டு.
நல்லவர்கள் பாதையில் போகலாம் என்றால் அவர்களும் அங்கங்கே சில சந்தேகத்து இடமான காரியங்களை செய்து இருக்கிறார்கள். அது சரியா , தவறா என்ற சர்ச்சை இன்று வரை நீள்கிறது.
தீயவர்கள் போன பாதையில் போகக் கூடாது என்று நினைத்தால் , அவர்களும் பல நல்ல குணங்களுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள்.
எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் இருக்கிறது.
அது ஒரு புறம் இருக்க.
இராமாயணம் என்பது , என்றோ எப்போதோ ஒரு அரசனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு.
இராமாயணம் முடிந்து எத்தனையோ காலம் கழிந்து விட்டது. சூழ் நிலைகள் மாறி விட்டது. சமுதாயம், அதன் விதி முறைகள், சட்ட திட்டங்கள் மாறி விட்டன. இன்றும், இராமாயணம் படித்து, அதன் படி வாழ நினைத்தால் சரியாக இருக்குமா ? சுவாரசியமான கதை என்று படிக்கலாமே தவிர அது நடைமுறைக்கு வழி காட்டுமா ?
இதை எல்லாம் படிப்பது ஒரு கால விரயம். இராமன் நல்லவன், வல்லவன் என்றே இருந்து விட்டு ப் போகட்டும். ஒவ்வொரு கதையிலும் கதாநாயகன் நல்லவன் வல்லவனாகவே இருப்பான். செய்ய முடியாத காரியங்களை செய்வான். அதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்க முடியாத கற்பனை சம்பவங்கள் . எனவே ஒரு கதையைப் படித்து விட்டு, அதன் படி வாழ நினைப்பது யதார்த்தத்துக்கு ஒவ்வாத செயல் என்ற நினைப்பது வரும்.
அது இன்னொரு புறம் இருக்கட்டும்.
வாழ்வில் முன்னேற, மிக உயர்ந்த நிலையை அடைய, சிறப்பாக வாழ இராமாயணம் வழி காட்டுகிறது என்பது உண்மை. சத்தியம்.
என்ன ஒரு சிக்கல் என்றால் அதை நேரடியாகச் சொல்லவில்லை.
கதையோடு, கதை மாந்தர்களோடு அதை பிணித்து வைத்திருக்கிறது.
மண்ணில் புதைந்து கிடைக்கும் வைரம் போல அது கிடக்கிறது. கொஞ்சம் தோண்டித்தான் எடுக்க வேண்டி இருக்கிறது.
வாருங்கள். இராமாயணம் தரும் வைரங்களை தோண்டி எடுப்போம்.
வாழ்வில் முன்னேற, மிக மிக உறுதியான வழியை பரதன் என்ற பாத்திரத்தின் மூலம் இராமாயணம் சொல்லுகிறது.
அப்படி என்ன பரதன் செய்து விட்டான் ? சண்டை போட்டானா ? அரக்கர்களை அழித்தானா ? மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ததாக குறிப்பு ஏதேனும் இருக்கிறதா ? நாட்டை விரிவு படுத்தினானா ?
அப்படி என்ன தான் பெரிதாக செய்து விட்டான் ?
வாழ்வின் மிகப் பெரிய இரகசியங்களை உள்ளடக்கியது பரதன் பாத்திரம்.
வாருங்கள். அது என்ன இரகசியம் என்று அறிவோம்.