Sunday, May 7, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - எது துணை 


கானகம் சென்ற இராமனை கண்டு அவனிடம் அரசை மீண்டும் தர வந்தான் பரதன். வந்த இடத்தில் தயரதன் இறந்த செய்தியை சொல்கிறான் பரதன். அதை கேட்ட இராமன் மயங்கி விழுகிறான். அவனை மயக்கம் தெளிவித்து அவனுக்கு எல்லோரும் தேறுதல் கூறுகிறார்கள்.

மரணத்தின் தன்மை பற்றி வசிட்டன் கூறத் தொடங்குகிறான். ஆழ்ந்த கருத்து உடைய ஏழு பாடல்கள்.

அதில் முதல் பாடல்.

"மறை நூல்களின் எல்லை கண்ட நீ (இராமா), இறப்பும் பிறப்பும் உயிர்களுக்கு இயற்கையானது என்பதை எப்படி மறந்தாய் ? மனிதனுக்கு இல்லறம் , துறவறம் தவிர வேறு ஒரு துணையும் இல்லை "

என்றான்.

பாடல்

துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை,
     பொருந்தும் மன்னுயிர்க்கு;
“இறத்தலும் பிறத்தலும்
     இயற்கை” என்பதை
மறத்தியோ, மறைகளின்
     வரம்பு கண்ட நீ?


பொருள்


துறத்தலும் = துறவறமும்

நல் அறத் துறையும் = நல்ல அறத்தின் துறையும்

அல்லது = அல்லாமல்

புறத்து = வெளியே

ஒரு துணை இலை = ஒரு துணையும் இல்லை

பொருந்தும் = பொருந்திய

மன்னுயிர்க்கு =நிலைத்த உயிர்களுக்கு

“இறத்தலும் = இறப்பதும்

பிறத்தலும் = பிறப்பதும்

இயற்கை” என்பதை =இயற்கையானது என்பதை

மறத்தியோ, = மறந்து விட்டாயா ?

மறைகளின் = மறை நூல்களின்

வரம்பு கண்ட நீ? = எல்லையை கண்ட நீ


இறப்பதும் பிறப்பதும் இயற்கைதான். நாம் தினமும் காண்கிறோம். இருந்தும் நெருங்கிய ஒருவர் இறந்து போனால் துக்கம் வருகிறது. ஆனானப்பட்ட இராமனே மயங்கி  விழுகிறான். புலம்புகிறான்.

மறைகளின் எல்லை கண்டவனுக்கே அப்படி என்றால் நாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏன் வருகிறது ? பற்றினால் துன்பம் வருகிறது.

அப்படி என்றால் பற்று இல்லாமல் இருக்க முடியுமா ? பற்றற்று இருக்க நாம் எல்லாம் என்ன துறவிகளா ? சாமியார்களா ? எல்லோரும் துறவியாக முடியுமா ?

வசிட்டன் சொல்லவந்தது அது அல்ல.

நாம் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்படி யார் மேல் அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் இறந்து போனால் நமக்கு துன்பம் வருகிறது.

சற்று யோசிப்போமா ?

நாம் அன்பு செலுத்துபவர் இறந்து போனால் மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ? ஏன் அந்த ஒருவர் மேல் மட்டும் அன்பு செலுத்த வேண்டும் ? மற்றவர்கள் மேல் அன்பு செலுத்த முடியாதா ?

உண்மை என்ன என்றால் , நாம் அன்பு செலுத்துவதில் இல்லை சிக்கல். அன்பை பெறுவதில். யார் இறந்து போனாரரோ அவரிடம் இருந்து அன்பு நமக்கு கிடைக்காது. அவர் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நமக்கு துணையாக இருந்து இருக்கிறார். அந்த துணை இப்போது போய் விட்டது.

நாம் அன்பு செலுத்தவும், நாம் அன்பை பெறவும், வேறு ஏதோ ஒரு விதத்திலும் அவர் நமக்கு துணையாக இருந்திருக்கிறார். அந்த துணை போய் விட்டதால் துக்கம்.

வசிட்டர் சொல்கிறார், மனிதனுக்கு இரண்டே துணைகள்தான் உண்டு.

ஒன்று , அற வழியில் செல்லுதல். பின்னால் துறவறம் என்று சொல்லுவதால், முதலில் உள்ள அறத்தை இல்லறம் என்று கொள்ளலாம். 

இன்னொன்று, துறவறம்.

இல்லறம், துறவறம் இது இரண்டும்தான் துணை.

இல்லறம் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் இது தானே. அப்படி என்றால் அவர்கள் துணை தானே. அவர்கள் இல்லாமல் போனால் துன்பம் வராதா ?

இல்லறம் என்றால் இல்லம் + அறம். இல்லத்தில் இருந்து செய்யும் அறம்.

அதையும் காலத்தில் விட்டு விட்டு துறவறம் மேற் கொள்ள வேண்டும். துறவு + அறம்.

அறம் ஒன்றுதான் துணை. வேறு எதுவும் துணை இல்லை.



"துறத்தலும் நல் அறத்
     துறையும் அல்லது"

அது என்ன "நல் அறத் துறை"

ஆறு போய் கொண்டே இருக்கும். அங்கங்கே படிகள் அமைத்து மக்கள் ஆற்றில் இறங்கி நீராடுவார்கள். அதற்கு படித்துறை என்று பெயர்.

அறம் என்ற ஆறு ஓடிக் கொண்டே இருக்குறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இறங்கி அந்த அறத்தை அறிகிறார்கள். படித்துறை போல அது அறத்துறை.

அது மதமாக இருக்கலாம், கொள்கையாக இருக்கலாம், அவரவர் விரும்பும் தர்மமாக இருக்கலாம், செய்யும் வேலையாக இருக்கலாம்...எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அறத்தின் ஏதோ ஒரு கூறு. (துறை என்றால் department என்று இப்போது வைத்து இருக்கிறார்கள்.)

சைவத் துறை விளங்க என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

வேத நெறி தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.

சைவம் ஒரு துறை. வைணவம் ஒரு துறை. கிறித்துவம் ஒரு துறை.

அறத்தின் ஏதோ ஒரு துறையைப் பற்றிக் கொள்ள வேண்டும். அது தான் நமக்குத் துணை.

நாம் எதை துணை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். 

Wednesday, May 3, 2017

பழமொழி - தாம் தர வாரா நோய்

பழமொழி - தாம் தர வாரா நோய் 


பழமொழி என்பது அனுபவத்தின் சாரம். பட்டு , தெளிந்து சொன்னது. பழைய மொழிதானே , இந்த காலத்துக்கு ஒத்து வருமா என்று நினைத்து ஒதுக்கி விடக் கூடாது. ஆராய்ந்து பார்த்து அதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை அல்லவா.

ஏதாவது துன்பம் வந்தால், எனக்கு மட்டும் ஏன் இப்படி துன்பம் வருகிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கே இந்த மாதிரி துன்பங்கள் ஏன் வருகிறது என்று நொந்து கொள்பவர்கள் பலர்.

ஏதோ தாங்கள் ஏதோ தவறே செய்யாதவர்கள் போல.


"தாஅம் தரவாரா நோய்." என்கிறது பழமொழி.

அப்படினா என்ன ?

நாமே  நமக்கு துன்பம் செய்து கொள்வது அல்லாமல் வேறு யாரும் நமக்கு துன்பம் செய்வது இல்லை

என்று அர்த்தம்.

அது சரியா என்று யோசித்துப் பார்ப்போம்.

பெரியவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்க மாட்டோம். எனக்குத் தெரியாதா என்று மனம் போன வழியில் சென்றிருப்போம். அது எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போய் , இறுதியில் துன்பத்தில் தள்ளி விடும்.

தவறான வழியில் செல்பவர்கள் தங்களுக்கு தாங்களே துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

"வந்திருப்பவன் சாதாரணமான ஆள் இல்லை. அவன் கேட்கும் மூன்றடி நிலத்தை தானமாக கொடுக்காதே " என்று குருவான சுக்கிராச்சாரியார் கூறினார். "நான் எவ்வளவு பெரிய அரசன். எனக்குத் தெரியாத " என்று குரு வார்த்தையை மீறி மூன்றடி நிலம் தானம் கொடுக்க ஒத்துக் கொண்டான் மாவலி சக்ரவர்த்தி. இருந்த சொத்தெல்லாம் இழந்து, பாதாளத்தில் அழுந்தினான் .

பெரியவர் சொல் கேளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கில் சென்றதனால் தேடிக் கொண்ட வினை அது.

பாடல்

ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய்.

பொருள்

ஆஅம் = ஆம்

எனக்கெளி தென்றுலகம் = எனக்கு எளிது என்று உலகம்

ஆண்டவன் = ஆண்டவன் (மாவலி)

மேஎந் துணையறியான் = மேவும் துணை அறியான்

மிக்குநீர் = மிகுந்த நீர்

பெய்திழந்தான் = பெய்து இழந்தான்

தோஓ முடைய = குற்றம் உள்ள காரியங்களை

தொடங்குவார்க் கில்லையே = தொடங்குவார்க்கு இல்லையே

தாஅம் = தாமே

தர = தருவதைத் தவிர

வாரா நோய் = (வேறு) நோய் வராது  . (நோய் = துன்பம்)


நல்லவர்களை, படித்தவர்களை , அனுபவம் உள்ளவர்களை துணையாகக் கொள்ள வேண்டும்.

அவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கு துன்பத்தில் முடியும்.

பழைய மொழி தான். சிந்தித்துப் பார்ப்போம். சரி என்றால் எடுத்துக் கொள்வோம்.




Monday, May 1, 2017

திருக்குறள் - எதை கேட்க வேண்டும்

திருக்குறள் - எதை கேட்க வேண்டும் 


எதை கேட்பது ?

செய்திகளும் , சேதிகளும் நம் காதுகளில் அருவி போல் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.

எதை எடுப்பது, எதை விடுவது என்று புரியாமல் எல்லாவற்றையும் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

அந்த செய்திகள் நமக்குள் விளைவிக்கும் விளைவுகளை அறியாமல் எல்லாவற்றையும் உள்ளே வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

வள்ளுவர் சொல்கிறார் எதை கேட்க வேண்டும், எவ்வளவு கேட்க வேண்டும்.

அவர் சொல்வதை கேப்டப்போமா ?

பாடல்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.

பொருள்

எனைத்தானும் = எவ்வளவு சிரியதாயினும்

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க

அனைத்தானும் = கேட்ட அளவுக்கு

ஆன்ற = நிறைந்த

பெருமை தரும் = பெருமை தரும்


நல்லவற்றை கேட்டால் பெருமை தரும். அவ்வளவுதானே ? இது என்ன பெரிய பெரிய விஷயம். இது தான் எல்லோருக்கும் தெரியுமே என்று நினைக்கலாம்.

சற்று ஆழ்ந்து சிந்தித்தால் அதில் உள் அடங்கி இருக்கும் பொருள் விளங்கும்.

எனைத்தானும் = எவ்வளவு சிறிதாயினும். சிறியது என்பது கேட்கும் பொருளாக இருக்கலாம், கேட்கும் கால அளவாக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும், 5 நிமிடம், 10 நிமிடம் கூட போதும். நல்லதை கேட்க வேண்டும்.

நல்லவை கேட்க = நல்லவற்றை கேட்க வேண்டும். அது தான் சிக்கல். எது நல்லது ? எப்படி கண்டு பிடிப்பது ? டிவி செய்திகள், யார் யாரை கொலை செய்தார்கள், யாரை யார் ஏமாற்றினார்கள், சீரியல்கள், ஒன்றுக்கும் உதவாத திரைப்படங்கள், நகைச்சுவை என்ற பெயரில் கொட்டப்படும் குப்பைகள்...இவை எல்லாம் நல்லவையா ?

நல்லது என்பதற்கு இரண்டு பரீட்சை உண்டு. அதில் தேறினால் அது நல்லது.

அது, ஒரு செய்தி நமக்கு இம்மைக்காவது அல்லது மறுமைக்காவது அல்லது இரண்டுக்கும் பயனுள்ளதாக இருக்குமா ?

ஒன்றை கேட்பதனால் இந்தப் பிறவியில் ,இந்த வாழ்க்கையில் ஏதாவது பயன் இருக்குமா ? பிறவி முடிந்த பின் , மறு உலகில் நன்மை பயக்குமா ? என்று அறிய வேண்டும்.

மறு பிறப்பு, சொர்கம் இவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. இந்த வாழ்க்கைக்கு நன்மை பயக்குமா ? நன்மை என்றால் எந்த விதத்தில் நன்மை என்று அறிந்து கொண்டு கேட்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 நிமிடம் நல்ல விஷயங்களை கேட்டால் என்ன பெரிய பலன் வந்து விடும் என்று நாம் நினைக்கலாம்.

சிறு சிறு மழைத் துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாய் மாறி பலன் தருவது போல , சின்ன சின்ன நல்ல விஷயங்கள் பின்னாளில் பெரிய நனமை பயக்கும்.


ஆன்ற = ஆன்ற என்றால் அகன்ற , பெரிய என்று பொருள். ஆன்றோர். கொஞ்சம் கொஞ்சம் கேட்டால் கூட, கேட்ட அளவுக்கு  மிகுந்த பெருமை தரும் என்கிறார்.

இதில் மறைந்து கிடைக்கும் பொருள் எது என்ன என்றால், நல்லதை கேட்டால் ஆன்ற பெருமை தரும் என்றால், தீயதை கேட்டால் ?

தீயனவற்றை கேட்டால்  பெரிய தீமை வந்து சேரும் என்பது உணர பட வேண்டிய ஒன்று.

நல்லது எல்லாவற்றை கொஞ்சம் கேட்டாலும் அந்த அளவுக்கு ஆன்ற தீமையை தரும்.

நல்லது அல்லாதவற்றை கேட்கவே கூடாது.

சரி வள்ளுவர் கேட்பதை மட்டும்தானே சொல்லி இருக்கிறார் ? பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. படிப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. தீயதை படிக்கலாமா ?

பார்ப்பதை தவிர்க்க இமை இருக்கிறது. கண்ணை மூடிக் கொண்டால் பார்க்காமல் இருந்து விடலாம்.

படிப்பதை எளிதாக நிறுத்தி விடலாம்.

காதுக்கு ஒரு மூடி இல்லை. காதில் விழுவதை நம்மால் தடுக்க முடியாது.

எங்கிருந்து தீய சொற்கள் வருகின்றனவோ, அங்கிருந்து விலகி விடவேண்டும். அங்கேயே இருந்தால் அவை காதில் விழுந்து கொண்டே இருக்கும். தடுக்க முடியாது. தீயவர்கள் இருக்கும் இடம் விட்டு உடனே விலகி விட வேண்டும். டீவியை உடனே நிறுத்தி விட வேண்டும். மாறாக அதிக சப்தம்  வைத்து கேட்டுக் கொக்ண்டிருக்க கூடாது.

நல்லதைக் கேளுங்கள். எவ்வளவு கொஞ்சமாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் ஒரு சுவை வந்து விட்டால், மேலும் மேலும் கேட்கத் தூண்டும்.

நல்லதை, கேட்க கேட்க நல்லதுதான்.













Friday, April 28, 2017

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - உன் உயிர்க்கும் கூற்றாய்

இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - உன் உயிர்க்கும் கூற்றாய் 


நல்லது நடந்தால் அதற்கு சொந்தம் கொண்டாட எல்லாரும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அல்லது நடந்தால் தான் எப்படி அதற்கு காரணம் அல்ல என்று எல்லோரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.

அது உலக இயற்கை.

தன்னிடம் அரசை திருப்பித் தர வந்த பரதனிடம் , தயரதன் எவ்வாறு இருக்கிறான் என்று இராமன் கேட்டான். தயரதன் இறந்த செய்தியை பரதன் கூற கேட்ட இராமன் மயங்கி விழுகிறான்.

பின் மயக்கம் தெளிந்து எழுந்து , துக்கத்தில் புலம்புகிறான்.

"அரசை எனக்கு தந்துவிட்டு நீ ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சொன்னது இது தானா ? உனது உயிருக்கு நானே எமனாகி விட்டேனே " என்று புலம்புகிறான்.

பாடல்


‘மன் உயிர்க்கு நல்கு உரிமை
    மண் பாரம் நான் சுமக்கப்
பொன் உயிர்க்கும் தாரோய்!
    பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்கும் கூற்றாய்
    உலகு ஆள உற்றேனோ?
மின் உயிர்க்கும் தீவாய் வெயில்
    உயிர்க்கும் வெள் வேலோய்! ‘


பொருள்


‘மன் உயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு

நல்கு உரிமை = நல்லது செய்யும் உரிமையை

மண் பாரம் = அரச பொறுப்பை

நான் சுமக்கப் = நான் ஏற்றுக் கொள்ள

பொன் = பொன் போன்ற நிறமுடைய மலர்களை

உயிர்க்கும் = உதிர்க்கும்

தாரோய்! = மாலை அணிந்தவனே (தார் = மாலை )

பொறை = பொறுமை. இங்கே இளைப்பாறுதல்

உயிர்த்த ஆறு இதுவோ? = அடையும் வழி இதுவோ ?

உன் உயிர்க்கும் = உன்னுடைய உயிர்க்கும்

 கூற்றாய் = எமனாய் (உடலையும், உயிரையும் கூறு படுத்துவதால் கூற்றுவன்)

உலகு ஆள உற்றேனோ? = உலகை ஆள பிறந்தேனோ

மின் உயிர்க்கும் =மின்னல் போல் ஒளி வீசும்

தீவாய் = அனல் கக்கும்

வெயில் = வெயில் போல பிரகாசமாக உள்ள

உயிர்க்கும் வெள் வேலோய்! = வெண்மையான வேலை கொண்டவனே

தயரதன் இறந்ததற்கு இராமன் எந்த விதத்திலும் காரணம் அல்ல. கானகம் போ என்று சொன்னவுடன்  மறு பேச்சு சொல்லாமல் கிளம்பி விட்டான். இருந்தும், தயரதன் இறந்ததற்கு தான் காரணம் என்று இராமன் நினைக்கிறான்.

கைகேயி காரணம், பரதன் காரணம், கூனி காரணம் என்று சொல்லவில்லை. அறிவின் உச்சம் உலகில் உள்ள அனைத்து தவறுகளுக்கும் தானும் ஏதோ ஒரு விதத்தில்  காரணம் என்று அறிவது.

மதத்தின் அடிப்படையில்  ஏதோ ஒரு தீவிரவாதி எங்கோ ஒரு கொடிய செயலை  செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். மதப் பற்று உள்ள எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அந்த கொடுமைக்கு காரணம் என்று அறிய வேண்டும். "நான் செய்ய வில்லை" என்பது சரியான காரணம் அல்ல. அந்த கொடுமைக்கு  மதம் தான் காரணம் என்றால் , மத கோட்பாடுகளை பின் பற்றும், அது சரி என்று நினைக்கும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம்.


இரண்டு நாடுகள் எங்கோ சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். தேசப் பற்று கொண்ட எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம். பொறுப்பு. நான் என் நாட்டின் மேல் கொண்ட அபிமானத்துக்கும் ஏதோ  வேறு இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்  என்று கேட்டால், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தேசத்தின் மேல் கொண்ட பற்று , மற்ற தேசத்தின் மேல் வெறுப்பாக, பகையாக மாறுகிறது.

அது முதலாவது செய்தி.

இரண்டாவது,  துக்கம் வந்தால் அதை வெளிக் கொட்ட வேண்டும். மனதுக்குள் வைத்து புளுங்க கூடாது. அழுது, புலம்பி அதை வெளிப்படுத்த வேண்டும்.

இராமன் புலம்பிய செய்தி இராமாயணம் என்ற பெரிய காப்பியத்தில் ஒரு முக்கியம் இல்லாத செய்தி. கம்பர் அதை சொல்லாமல் விட்டு விட்டுப் போயிருக்கலாம். யாருக்குத் தெரிய போகிறது ? இருந்தும் வேலை மெனக்கெட்டு  இராமனின் புலம்பலை எழுதுகிறார் கம்பர்.

ஏன் ?

மகிழ்ச்சியைப் போல துக்கத்தையும் வெளிப் படுத்த வேண்டும். மனம் ஒரு நல்ல நிலையில் இருக்க உணர்ச்சிகளின் வெளிப்பாடு முக்கியம். அமுக்கி வைத்துக் கொண்டிருந்தால் அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

உணர்ச்சிகளை , பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்வு சிறக்கும்.




Tuesday, April 25, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - மண் இடை விழுந்தான் 


தன்னிடம் அரசை மீண்டும் தர கானகம் வந்த பரதனிடம் , தந்தை தயரதன் எப்படி இருக்கிறான் என்று இராமன் கேட்டான்.

"உன்னைப் பிரிந்த பிரிவு என்ற நோயாலும், என் தாய் கைகேயி கேட்ட வரம் என்ற எமனாலும் தந்தை இறந்து விண்ணகம் போனான் "  என்று பரதன் இராமனிடம் கூறினான்.

அப்படி சொன்னதுதான் தாமதம், அந்த சொல் முழுவதுமாகக் கூட காதில் நுழையவில்லை, அதற்குள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினால் போல துன்பம் அடைந்து கண்ணும் மனமும் காற்றாடி போல சுழன்று மயங்கி மண்ணில் விழுந்தான்.

பாடல்

‘விண் இடை அடைந்தனன் ‘
    என்ற வெய்ய சொல்,
புண் இடை அயில் எனச்
    செவி புகாமுனம்,
கண்ணொடு மனம் சுழல்
    கறங்கு போல ஆய்,
மண் இடை விழுந்தனன்
    வானின் உம்பரான்.

பொருள்

‘விண் இடை = வானகம்

அடைந்தனன் = அடைந்தான் (தயரதன்)

என்ற= என்ற

வெய்ய சொல் = கொடிய சொல்

புண் இடை = புண்ணில்

அயில் எனச் = வேல் புகுந்தார் போல

செவி புகாமுனம் = காதில் விழு முன்

கண்ணொடு = கண்ணோடு

மனம் சுழல் = மனமும் , சுழலும்

கறங்கு போல ஆய் = பட்டம் போல ஆகி

மண் இடை விழுந்தனன் = மண்ணில் விழுந்தான்

வானின் உம்பரான் = வானத்திற்கும் அப்பாற்பட்ட இடத்தை சேர்ந்தவன்


ஆண் என்பவன் வலிமையானவன்.. முரடன்.  மென்மையான உணர்வுகள் மிக குறைவாக உள்ளவன். சண்டையும், வேகமும், கோபமும், வலிமையும், இரத்தமும்  அவன் குறியீடுகள்.

அன்பு, காதல், நேசம், கண்ணீர், நெகிழ்வு அவனுக்கு அந்நியமான ஒன்று என்றே முத்திரை குத்தி வளர்க்கப் படுகிறான்.

அழும் ஆண்மகனை யாரும் விரும்புவதில்லை.

துன்பம் கண்டு துவளும் ஆண்மகன் பரிகசிக்கப் படுகிறான்.

எத்தனை துன்பம் வந்தாலும் , பாறை போல உறுதியாக நிற்க வேண்டும் என்பது அவனுக்கு  விதித்த விதி.

அது சரி அல்ல.

உணர்ச்சிகளை சரியான அளவில் கையாளத் தெரிய வேண்டும்.

அன்பு செலுத்த வேண்டிய இடத்தில் அன்பு செலுத்த வேண்டும்.

பணிந்து போக வேண்டிய இடத்தில் பணிந்து போக வேண்டும்.

தோற்க வேண்டிய இடத்தில் தோற்க வேண்டும்.  இராவணனை பற்றி சொல்ல வந்த கம்பர் , படுக்கை அறையில் கூட பணியாதவன் என்கிறார். படுக்கை அறையா வீரத்தைக் காட்டும் இடம் ? அன்பு காட்ட வேண்டிய இடத்தில் ஆணவத்தை காட்டுவது அரக்க குணம்.

அழுவதும், துன்பத்தில் துவ;ளுவதும் தவறொன்றும் அல்ல.

தந்தை இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட இராமன் மயங்கி விழுந்தான்  என்கிறான்  கம்பன்.

ஒரு வேளை ,  அப்படி சொல்லாமல் , தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட இராமன் , சிறிதும் கலங்காமல் இருந்தான். அன்றலர்ந்த மலர் போல இருந்தது அவன்  முகம் என்று எழுதி இருந்தால், எல்லோரும் அதை இரசித்து இருப்பார்கள். "பார், இராமன் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் கலங்காமல் இருக்கிறான் ..." என்று அவனை பாராட்டி இருப்பார்கள்.

கம்பர் அப்படி சொல்லவில்லை. மயங்கி விழுந்தான் என்று  சொன்னார்.அருகில் இருந்த சீதை மயங்கி விழுந்தாள் என்று சொல்லவில்லை.  இராமன் மயங்கினான்.

பாசத்தின் உச்சம். தந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியவில்லை. அவன் மயங்கி விழுந்ததால் அவன் மேல் உள்ள மதிப்பு ஒன்றும் குறைந்து விடவில்லை.

ஆண்களுக்கு ஒரு பாடம். எப்போதும் ஒரு முரட்டு தன்மையோடேயே இருக்க வேண்டும் என்ற  கட்டாயம் இல்லை.

அழ வேண்டும் என்றால் அழுங்கள்.

துக்கம் தாளவில்லை என்றால் மயங்குவது கூட சரிதான்.

இவை எல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு. உணர்ச்சிகளை அடக்கி வைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

ஆங்கிலத்தில் emotional intelligence என்று சொல்லுவார்கள்.

உணர்ச்சிகளை சரியாக கையாள பழக வேண்டும்.


Monday, April 24, 2017

குறுந்தொகை - நல்லை அல்லை

குறுந்தொகை - நல்லை அல்லை 



காதல், அது காலங்களை கடந்து மட்டும் அல்ல, காலங்களுக்கு முன்னாலும் நின்றிருக்கிறது.

குறுந்தொகை காலம்.

இரவு நேரம். நிலவு பால் போல் பொழிகிறது. தலைவி , கானகத்தில் காத்து இருக்கிறாள். தலைவன் வர வேண்டும். வருவான், வருவான் என்று காத்து இருக்கிறாள். நிலவு , பகல் போல் எங்கும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

தலைவன் வரும் வழியில் பெரிய வேங்கை மரங்கள் இருக்கும். அந்த மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து கிடக்கும் . அந்த மரத்தின் அடியில் சில பல பாறைகள் இருக்கும். அந்த பாறைகளின் மேலும் ஒரு சில பூக்கள் உதிர்ந்து இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தால், பாறையும், அதன் மேல் இருக்கும் பூக்களும் நிலவொளியில் ஏதோ ஒரு புலிக் குட்டி இருப்பது போலத் தெரியும். தலைவன் அதைக் கண்டு தயங்கலாம் . ஒரு வேளை புலியாக இருக்குமோ என்று நிறுத்தி நிதானித்து வரலாம். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்று நினைக்கிறாள்.

அது மட்டும் அல்ல, இந்த நிலவு இப்படி வெளிச்சம் போட்டு காண்பித்தால்  தங்கள் களவு ஒழுக்கம் வெளிப்பட்டு விடுமே என்று அஞ்சுகிறாள். யாருக்கும் தெரியாமல் , தலைவன் பதுங்கி பதுங்கி வர வேண்டும். அதனால் கால தாமதம் ஆகிறதோ என்றும் நினைக்கிறாள்.

நிலவே, நீ ஏன் இப்படி பிரகாசமாக ஒளி வீசுகிறாய். நீ ஒன்றும் நல்லவள் இல்லை என்கிறாள்.

பாடல்

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் 
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை 
எல்லி வருநர் களவிற்கு 
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 


பொருள்

கருங்கால் = கரிய கால்களைக் கொண்ட மரத்தின் அடி வேர்)

வேங்கை = புலி

வீயுகு = (மலர்கள் ) வீழ்ந்த

துறுகல் =உறு கல் = பெரிய கல்

இரும்புலிக் = கொடிய புலி

குருளையிற் = குட்டியைப் போல

றோன்றுங் = தோன்றும்

காட்டிடை  = காட்டில்

எல்லி = இரவில்

வருநர் = வரும் அவர்

களவிற்கு = களவு ஒழுக்கத்துக்கு

நல்லை யல்லை = நல்லது அல்லை . நல்லவள் அல்லை

நெடு = நீண்ட

வெண் ணிலவே = வெண் நிலவே


அது நிலவுக்குச் சொன்னாலும், தலைவனுக்கும் சொன்னது தான்.

காடு  பயங்கரமான இடம். உண்மையிலேயே புலி இருந்தாலும் இருக்கும். யாரும் பார்த்து விடலாம். காலா காலத்தில் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்லாமல்  சொன்னது.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு இந்த பாடலை படிக்கும் போது ஒரு லேசான பதற்றமும், பரிதாப உணர்ச்சியும் வருகிறது.

காட்டில் ஒரு இளம் பெண்ணை வரச் சொல்லி விட்டு , கால தாமதம் செய்யும் தலைவன். நினைத்துப் பார்த்தால் , பதறத்தான் செய்கிறது மனம்.  கள்ளர் பயம், புலி பயம் அந்த பெண்ணுக்கு மட்டும் இருக்காதா ?

அவளுக்கு அவன் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இரவில் வந்து அவனுக்காக காத்திருப்பாள் ?

அது மட்டும் அல்ல, காலம் தாழ்த்தி வரும் அவன் மேல் அவளுக்கு கோபம் இல்லை. நல்லை இல்லை என்று நிலவை சாடுகிறாள்.

எந்தக்  காலத்தில் பெண்ணின் தவிப்பு ஆணுக்கு புரிந்திருக்கிறது ?

சங்க காலம் தொட்டு , இன்று வரை, பெண்ணை புரிந்து கொள்ளாமலே தான் ஆண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




Sunday, April 23, 2017

திருக்குறள் - அறமும் அருளும்

திருக்குறள் - அறமும் அருளும் 


அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது தெளிவில்லாதவன் பெற்ற மெய் பொருள் போன்றது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

பொருள்

தெருளாதான் = தெளிவு இல்லாதவன்

மெய்ப்பொருள் = உண்மையான ஞானத்தை

கண்டற்றால் = கண்டது

தேரின் = ஆராய்ந்தால்

அருளாதான் = அருள் இல்லாதவன்

செய்யும் அறம் = செய்யும் அறத்துக்கு ஒப்பானது

சில பேர் நிறைய தானம் தர்மம் செய்வார்கள். அந்த உதவிகளுக்குப் பின்னால் அருள்  மனம் இருக்காது. ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து தான் அந்த தானம் செய்வார்கள்.

 சரி, செய்து விட்டு போகட்டுமே. அருள் இல்லாவிட்டால் என்ன . உதவி செய்து விட்டுப் போகட்டுமே. எப்படி நினைத்து செய்தாலும் அறம் நல்லது தானே என்று நினைப்போம்.

அது சரி அல்ல.

ஒட்டு வாங்க பணம்  தருகிறார்கள். அந்த பணம் தானம் தான். இலவசம் தான். பணம் பெற்றுக் கொண்டவர்கள் , யார் பணம் தந்தார்களோ அவர்களுக்குத் தான்  ஓட்டு போடுவார்கள் என்று நிச்சயம் இல்லை.  எனவே,அந்த பணம் தானம் தான்.

அது சரியா ?

அப்படி தானமாக பணம் தந்தவன், ஆட்சிக்கு வந்தால் தகாதன  செய்வான்.

சரி, அது போகட்டும். அரசியலை விட்டு  விடுவோம்.

அருள் இல்லாமல் ஒருவன் உதவி செய்தால், மறு உதவி எதிர் பார்க்காவிட்டால் கூட, எப்போதாவது சொல்லி காண்பிப்பான். "உனக்கு அன்று  அப்படி உதவி செய்தேனே " என்று  பலர் முன்னிலையில் சொல்லுவான். நமக்கு தர்ம சங்கடமாக இருக்கும்.

அருள் இல்லாதவன் செய்யும் அறம் ஆபத்தானது.

எவ்வளவு ஆபத்தானது என்றால் ,

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் அறிவு போன்றது.

அது என்ன உதாரணம்.

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் ஞானத்தால் என்ன ஆபத்து ?

ஏதோ ஓரிரு புத்தகங்களை படித்து விட்டு எல்லாம் அறிந்த மேதாவி போல  சிலர்  எல்லா பிரச்சனைகளுக்கும் வழி சொல்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு  நடந்தால் , அது ஆபத்தில் தான் போய் முடியும்.

ஒன்றும் இல்லை, நீங்கள் இருக்கும் whatsapp group இல் , உங்களுக்கு உடலில் ஏதோ ஒரு  வலி என்று சொல்லிப் பாருங்கள். தலை வலி, கால் வலி என்று சொல்லிப் பாருங்கள். உடனே எத்தனை பேர் எத்தனை மருந்து சொல்கிறார்கள் என்று. மருத்துவம் சம்பந்தமாக ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக  படித்திருப்பார்கள், கேள்வி பட்டிருப்பார்கள். அவ்வளவு தான், எல்லாம் படித்த , அனுபவம் வாய்ந்த மருத்துவர் மாதிரி மருந்து சொல்ல ஆரம்பித்து  விடுவார்கள்.

மருத்துவம் என்று இல்லை. எந்த பிரச்சனை என்றாலும் அதுக்கு வழி சொல்ல கிளம்பி விடுவார்கள்.

தெளிவு இல்லாதவன் என்றால் அரை குறை அறிவு. அரை வேக்காட்டு அறிவு உள்ளவன் என்று அர்த்தம். அது ஆபத்தில் கொண்டு போய் முடியும்.

ஆன்மீகமாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், எந்தத் துறையாக வேண்டுமானாலும்  இருக்கட்டும். அரைகுறை அறிவு ஆபத்துதான்.

அது போல அருள் இல்லாதவன் செய்யும் அறம் , அவனுடைய அருளற்ற தன்மையினால் , முன் செய்த அறம் அழிந்து போகும் அல்லது அழிக்கப்படும்.

கொடுக்கும் போது , இது என் பணம், என் செல்வம் என்று நினைத்துக் கொடுக்காதீர்கள். இந்த அளவுக்கு தானம் செய்ய செல்வத்தைத் தந்த இறைவனை வாழ்த்தி தானம் செய்யுங்கள் என்கிறார்  அருணகிரிநாதர்.

முருகன் எனக்கு  கொடுத்தான்,நான் எல்லா உயிர்களுக்கும் அதை  கொடுக்கிறேன் என்று நினைத்து, முருகனை வாழ்த்தி தானம்  செய்யச்  சொக்கிறார்.

  வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.


அருளை முதலில் மனதில் வையுங்கள், அப்புறம் தானம் செய்யுங்கள்.

தெளிவு பிறக்கும் வரை,  உங்கள்  வெளிப் படுத்தாதீர்கள்.