Showing posts with label neeththal vinnappam. Show all posts
Showing posts with label neeththal vinnappam. Show all posts

Friday, February 21, 2014

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல்

நீத்தல் விண்ணப்பம் - கொம்பர் இல்லா கொடி போல் 


 

நமக்குத் துணை யார் ?

முதலில் பெற்றோரை பற்றி இருக்கிறோம். பின் உடன் பிறப்புகள், நண்பர்கள், துணைவன்/துணைவி, பிள்ளைகள் என்று இது விரிந்து கொண்டே போகிறது.

இவர்கள் எல்லாம் நமக்கு சிறந்த பற்றுகோல்களா ? இல்லை.

அவர்களே நமக்குத் துணையாவார் யார் என்று அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆகாய விமானத்தில் இருந்து தவறி விழுந்தவன் , அவன் கூடவே விழுந்த ஒரு காகிதத்தை துணைக்கு பற்றிக் கொண்ட மாதிரி.


 ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே 
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! 

என்பார் பட்டினத்தார்.

எது நிரந்தரமோ அதை பற்றிக் கொள்ள வேண்டும்.

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் 
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

என்பது அபிராமி பட்டர் வாக்கு.  அபிராமியை துணையாகக் கொண்டார் பட்டர்.


ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத, மன
அதீதா சுரலோக சிகாமணியே.

உன் அருளைப் பெற ஒரு ஆதாரமும் இல்லாமல் தவிக்கிறேன் என்றார் அருணகிரி.


பற்றிப் படர ஒரு கொழு கொம்பு இல்லா கொடி போலத் தவிக்கிறேன். என்னை கை விட்டு  விடாதே. விண்ணவர்களும் அறியாத நீ, பஞ்ச பூதங்களும் ஆனவன் நீ என்று உருகுகிறார் மணிவாசகப் பெருந்தகை.

பாடல்

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.

பொருள் 

கொம்பர் = பற்றி படர ஒரு கொம்பு

இல்லாக் கொடிபோல் = இல்லாத ஒரு கொடி போல

அலமந்தனன் = வழி தெரியாமல் அலைந்தேன்

 கோமளமே = இளமையானவனே

வெம்புகின்றேனை = வெம்புகின்ற என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

விண்ணவர் = தேவர்களும்

நண்ணுகில்லா = அணுக முடியாத இடத்தில்

உம்பர் = உயர்ந்த இடத்தில்
உள்ளாய் = உள்ளாய்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அம்பரமே = வானே

நிலனே = நிலமே

அனல் = தீயே

காலொடு = காற்றே

அப்பு = நீரே

ஆனவனே = ஆனவனே


Thursday, February 20, 2014

நீத்தல் விண்ணப்பம் - வினைக் காட்டை எரிக்க

நீத்தல் விண்ணப்பம் - வினைக் காட்டை எரிக்க 




நம் வினைகளை நாம் தான் செய்கிறோம். நாமே செய்வதில்லை. தூண்டப் பட்டு செய்கிறோம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள், சமுதாயம், நம் துணைவன்/துணைவி என்று ஆயிரம் பேரால் தூண்டப் பட்டு வினைகளை செய்கிறோம்.

பல வினைகள் ஆராய்ந்து  .இல்லை. அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு ஏதேதோ செய்து கொண்டு போகிறோம்.

நம் வினைகள் தோட்டம் போல அல்ல, காடு போல வளர்ந்து கிடக்கின்றன. இந்த காட்டை வெட்டி சீர் படுத்த முடியாது. இதை மாற்ற வேண்டும் என்றால் மொத்தமாக கொளுத்த வேண்டும். எரிந்து கரிந்து சாம்பல் ஆன பின், முதலில் இருந்து சரியாக தோட்டம் வளர்க்கலாம்.

இவ்வளவு பெரிய காட்டை எப்படி எரிப்பது. என்னால் ஆகாத காரியம். இறைவா, நீயே என் வல் வினைக் காட்டை எரித்து விடு. உன்னால் முடியாதது எதுவும் இல்லை. கஜமுகாசுரன் என்ற கொடிய யானையை கொன்று அதன் தோலை உரித்து போர்த்துக் கொண்டவன் ஆயிற்றே நீ. உன்னால் முடியாதா ?

என்கிறார் மணிவாசகர்....

பாடல்


மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே


பொருள் 


மடங்க = அழிந்து போக 

என் வல் வினைக் காட்டை = என்னுடைய வினையான காட்டினை 

நின் = உன்னுடைய 

மன் = நிலைத்த 

அருள் தீக் கொளுவும் = அருளினால் தீயிட்டு கொளுத்தவும் 

விடங்க = வீரம் உள்ளவனே 

என்தன்னை = என்னை 

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே 

என் பிறவியை = என் பிறவியை 

வேரொடும் களைந்து = வேரோடு களைந்து. அதாவது மீண்டும் முளைக்காமல்  

ஆண்டுகொள் = என்னை ஆட்கொள் 

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

கொடும்  = கொடுமையான 

கரிக்குன்று = கருமையான குன்றைப் போல் இருக்கும் யானையை 

உரித்து = அதன் தோலை உரித்து 

அஞ்சுவித்தாய் = அச்சத்தை அவித்தாய் 

வஞ்சிக் கொம்பினையே = வஞ்சிக் கொடி  போன்ற உமை அம்மையின்

 

Tuesday, February 18, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை




 நமக்கு ஒரு பொருள் சொந்தம் என்றால் அதை நாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் அல்லவா ?

அதை அனுபவிக்கலாம், விக்கலாம், அடமானம் வைக்கலாம்...நம் இஷ்டம் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்.

தன்னையே இறைவனுக்கு கொடுத்துவிட்ட மாணிக்க வாசகர்  சொல்கிறார்.

"இனி நான் உன் பொருள். என்னை நீ ஆண்டுகொள், விற்றுக் கொள், அடமானம் வை...என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இந்த பிறவிப் பிணிக்கு மருந்து போன்றவனே, என்னை கை விட்டு விடாதே " என்று கெஞ்சுகிறார்.

பாடல்

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.


பொருள் 

இருந்து என்னை = இங்கிருந்து என்னை

ஆண்டுகொள் = ஆட்கொள்

விற்றுக்கொள் = விற்றுக் கொள்

ஒற்றி வை = ஒத்தி வைப்பது என்றால் அடமானம் வைப்பது

என்னின் அல்லால் = இது போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்

விருந்தினனேனை = விருந்து என்றால் எப்பவாவது வருவது. அடிக்கடி வருவது விருந்து அல்ல. நாம் பக்தி செய்வது, கோவிலுக்குப் போவது எல்லாம் எப்பவாவது தானே. எனவே விருந்தினேனை  என்றார்.


(இராமாயணத்தில் இராம இலக்குவனர்களை ஜனகனுக்கு அறிமுகம் செய்யும் போது "விருந்தினர்" என்று அறிமுகம் செய்வான். இவர்கள் வைகுந்தத்தில் இருப்பவர்கள். எப்பவாவது இந்தப் பக்கம் வருவார்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில்


இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்!' என்ன,
'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணிய வந்தார்; வில்லும் காண்பார்;

பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என, அவர் தகைமை பேசலுற்றான்)


 விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 மிக்க நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுதா அருந்தினனே= அமுதம் போல அருந்தியவனே. நான் கெட்டவன் தான். ஆனால் நீ தான் விஷத்தையே அமுதமாக ஏற்றுக் கொண்டவன் ஆயிற்றே. என்னையும் ஏற்றுக் கொள்.

 மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

மருந்தினனே = மருந்து போன்றவனே

பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே = பிறவி என்னும் பிணியில் கிடந்து உழல்பவர்கே

நோய், பிணி என்று இரண்டு சொல் உண்டு.

நோய் வந்தால் போய் விடும்.

பிணி போகாது.

பசிப் பிணி என்பார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

பிறவியும் ஒரு பிணி தான். மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். அந்த பிறவிப் பிணிக்கு மருந்து அவன்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் 
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே! 

பணியேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.

என்பார் அபிராமி பட்டர்


Monday, February 17, 2014

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளே

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளே



முந்தைய பாடலை பொருளே என்று முடித்தார். இந்த பாடலை பொருளே என்று  ஆரம்பிக்கிறார்.


"பொருளே, நான் வேறு எங்கு போவேன் உன்னை விட்டு. உன்னை விட்டால் எனக்கு ஒரு புகலிடம் இல்லை. உன் புகழை இகழ்பவர்களுக்கு அச்சம் தருபவனே, என்னை விட்டு விடாதே. உண்மையானவர்கள் விழுங்கும் அருளே. உத்திர கோச மங்கைக்கு அரசே, இருளே. வெளியே. இம்மை மறுமை என்று இரண்டுமாய் இருப்பவனே. "

பாடல்

பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

பொருள் 

பொருளே = பொருளே. "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே"

தமியேன் = தனியனாகிய  நான்

புகல் இடமே = புகல் அடையும் இடமே

நின் புகழ் இகழ்வார் = உன் புகழை இகழ்பவர்களுக்கு

வெருளே = அச்சமே

எனை விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

மெய்ம்மையார் = உண்மையானவர்கள்

விழுங்கும் அருளே = விழுங்கும் அருளே

அணி பொழில் = அழகிய சோலைகள் நிறைந்த

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

இருளே = இருளே

வெளியே = வெளிச்சமே

இக = இம்மை

பரம் = மறுமை

ஆகி இருந்தவனே = ஆகிய இரண்டுமாய் இருப்பவனே

அது என்ன அருளை விழுங்கும் அன்பர்கள் ? 

அவ்வளவு ஆர்வம். அவளை கண்ணாலேயே விழுங்கினான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா. அவளைத் தனக்குள் இருத்திக் கொள்ள விரும்புகிறான். அவளை விட்டு எந்நேரமும் பிரிய மனமில்லை அவனுக்கு. அதற்காக  அவளை வாயில் போட்டு விழுங்கவா முடியும். விழியால் விழுங்கினான். 

அது போல இறைவன் அருளை விழுங்கினார்கள் என்றார். பின்னொரு பாடலில்  "விக்கினேன் வினையுடையேன்" என்பார். 

தாகம் எடுத்தவன், நீரைக் கண்டவன் அவசரம் அவசரமாக பருகத் தலைப் படுவான். கொஞ்சம் கொஞ்சாமாக குடிக்க மாட்டான். அவன் உடலில் ஒவ்வொரு அணுவும்  "நீர் நீர் " என்று தவிக்கும். தண்ணீரைக் கண்டவுடன் அப்படியே எடுத்து விழுங்குவான். அது போல அருள் வேண்டித் தவிப்பவர்கள் அது கிடைத்தவுடன்  எடுத்து விழுங்கினார்கள். 

இருளே வெளியே : இருள் வெளிச்சம் என்பது எல்லாம் குறியீடுகள். ஆன்மீக உலகில்  இருள் என்பது அறியாமை. வெளிச்சம் என்பது ஞானம், அறிவு. 

அவன் எல்லாமாக இருக்கிறான் என்றால் அறியாமையாகவும் இருக்கிறான். 

குழந்தை அப்பாவின் முதுகில் யானை ஏறி விளையாடும். குழந்தைக்குத் தான் தெரியாது. அப்பாவுக்குமா தெரியாது. நானாவது யானையாவது என்று குழந்தையிடம்  சண்டை பிடிப்பது இல்லை. அவரும் யானை போல  நடிப்பார்.வெளியில் இருந்து  பார்த்தால் அப்பாவுக்கு அறிவில்லை என்று தான் தோன்றும். குழந்தையின் மகிழ்ச்சிக்கு அவர் தன் அறிவை சற்று விலக்கி வைத்து   நடிக்கிறார்.

குழந்தை பொம்மை கேட்கும். இந்த பொம்மையில் என்ன இருக்கிறது என்று அப்பா குழந்தையிடம்  கேள்வி கேட்பது இல்லை. 

புலன் இன்பங்கள் நமக்கு பொம்மைகள். அந்த பொம்மை இல்லாமல் குழந்தை வளர முடியாது. 

விளையாடி விட்டு தூக்கி வைத்து விட வேண்டும். 

இறைவன் ஏன் நமக்கு அறியாமையை தந்தான் என்று கேட்க்கக் கூடாது. வளர்ச்சியில் அதுவும் ஒரு படி. 

இருளே வெளியே இக பரமாக இருந்தவனே....


Saturday, February 15, 2014

நீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே

நீத்தல் விண்ணப்பம் - நீ பயப்படாதே 


எதில் எதிலேயோ நமக்கு பயம்.

எதிர் காலம் பற்றி, பிள்ளைகள் பற்றி, கணவன் மனைவி பற்றி, செய்யும் வேலை, நாம் சேமித்து வைத்திருக்கும் செல்வம், அதன் பாதுகாப்பு, நம் ஆரோக்கியம், நம்மைச் சேர்ந்தவர்களின் ஆரோக்கியம் என்று ஆயிரம் பயம்.

இப்படி ஆகி விடுமோ, அப்படி ஆகி விடுமோ என்ற பயம்.

சில நிஜமான பயங்கள் , பல கற்பனையில் உள்ள பயங்கள்....

நம் பயத்தை யார் போக்குவார்?...யாரிடம் போனாலும் அவர்கள் தங்கள் பயங்களோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களிடம் போனால் அவர்கள் தங்கள் பயங்களை நம்மிடம் கொட்டுவார்கள்.

என்ன செய்வது ? யாரிடம் போவது ? பல சமயங்களில் ரொம்பத் தனியாக விடப் பட்டதை போல உணர்வோம் ....

அதைப் போல தவிக்கிறார் மணிவாசகர்...

"பயப்படாதே என்று சொல்ல எனக்கு யாரும் இல்லை. எனக்கு நீ தான் தாயும் தந்தையும். நீ தான் என் பயத்தை நீக்கி எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் " என்று  வேண்டுகிறார்.

பாடல்  

என்னை `அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்;
மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே
உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!

பொருள் 


என்னை  = என்னை

`அப்பா, அஞ்சல்,' = பயப்படாதே

என்பவர் இன்றி = என்று சொல்ல யாரும் இன்றி

நின்று = தனித்து நின்று

எய்த்து = தேடி

அலைந்தேன் = அலைந்தேன்

மின்னை ஒப்பாய் = மின்னலை போன்றவனே (ஒளி பொருந்தியவன் )

விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

உவமிக்கின், = உனக்கு உவமை சொல்ல வேண்டும் என்றால்

மெய்யே = உண்மையானவனே

உன்னை ஒப்பாய் = உனக்கு நீயே உவமையானவன்

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

அன்னை ஒப்பாய்; = எனக்கு தாய் போன்றவன் நீ

எனக்கு அத்தன் ஒப்பாய் = எனக்கு தந்தை போன்றவன் நீ

என் அரும் பொருளே! = என்னுடைய சிறந்த பொருளே


பொருள் என்றால் ஏதோ கடையில் வாங்கும் ஒன்று அல்ல. நம் வாழ்வின் முதல் பொருள் அவன்.

திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகர் சொல்லுவார்

போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு

ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம்

சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!

ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


அபிராமி அந்தாதியில்,  அபிராமி பட்டர் கூறுவார்..உலகில் எல்லா பொருளும் அவள் தான், அந்த பொருள்கள் தரும் இன்பங்களும் அவள் தான்,  

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

Thursday, February 13, 2014

நீத்தல் விண்ணப்பம் - கலந்தருள வெளி வந்திலேனே

நீத்தல் விண்ணப்பம் - கலந்தருள வெளி வந்திலேனே 



இறைவன் திருவடியில் இருக்க வேண்டும், பரம பதம் போக வேண்டும், வைகுண்டம் போக வேண்டும், கைலாசம் போக வேண்டும் என்று பக்தி செய்வார்கள்.

நாளையே இறைவன் அவர்கள் முன் வந்து, "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம், கிளம்பு என்னோடு, நீ விரும்பிய அந்த இடத்துக்கு போகலாம் " என்று கூப்பிட்டால் எத்தனை பேர் கிளம்பிப் போவார்கள் ?

"வர்றேன்...ஆனால் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன்...பெண்டாட்டி பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி வருவது, பிள்ளைகளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டு வருகிறேன், நான் இல்லாம என் பெண்டாட்டி தனியாக எப்படி குடும்பத்தை சமாளிப்பாள், அவளுக்கு ஒரு வழி பண்ணிவிட்டு வருகிறேன்...." என்று சொல்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.


குடும்ப பொறுப்பு ஒரு புறம் இருந்தாலும், இந்த உலகை விட்டு போக ஆசை இல்லை. எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும், இதில் ஒரு சுகம் இருக்கிறது.

எத்தனை ஆயிரம் அற நூல்கள் வந்து  விட்டன.ஒன்றை ஒழுங்காக கடைப் பிடித்திருந்தால் கூட எவ்வளவோ உயர்ந்திருப்போம். "...படிக்க நல்லாத்தான் இருக்கு....இது எல்லாம் நடை முறைக்கு சரிப் பட்டு வராது " என்று நாம் நம் வழியில் போய்  விடுகிறோம்.

மாணிக்க வாசகர் இந்தப் போராட்டத்தை படம்  பிடிக்கிறார்.

இறைவன் தெரிகிறது. அவன் அருள் தெரிகிறது. அது வேண்டும் என்று தெரிகிறது. ஆனால், உலகப் பற்றை விட முடியவில்லை.  தவிக்கிறார்.

பாடல்

களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்? மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே,
எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!

பொருள் 


களி வந்த சிந்தையொடு = மகிழ்ச்சியான  மனதுடன்.மனதுடன்

உன் கழல் கண்டும் = உன் திருவடிகளை கண்டும் 

கலந்தருள = கலந்து உன் அருளைப் பெற

வெளி வந்திலேனை = இந்த உலகப் பாசங்களை விட்டு வெளியே வராத என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

மெய்ச் சுடருக்கு = உண்மையான ஒளிக்கு

எல்லாம் ஒளிவந்த பூம் கழல் = எல்லாம் ஒளி தரும் திருவடிகளை உடைய

 உத்தரகோசமங்கைக்கு அரசே =  உத்தரகோசமங்கைக்கு அரசே

எளிவந்த எந்தை பிரான் = உன்னை அடைவது ஒன்றும் ரொம்ப கடினம் இல்லை. நீ மிக எளிமையானவன். என் தந்தை போன்றவன். என்னை விட்டு என்றும்  பிரியாதவன்.

என்னை ஆளுடை என் அப்பனே! = என்னை ஆண்டு கொள் என் தந்தை போன்றவனே

நானே வர மாட்டேன். நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொள்.  என்னை விட்டால் , இந்த உலகிலேயே கிடந்து உழன்று கொண்டிருப்பேன். எப்படியாவது  என்னை ஆண்டு கொள்.



Tuesday, February 11, 2014

நீத்தல் விண்ணப்பம் - களியாத களி எனக்கே

நீத்தல் விண்ணப்பம் - களியாத களி எனக்கே 


ஒருவன் தெளிந்த நீர் ஓடும் ஆற்றில் நின்று கொண்டிருக்கிறான். தாகம் எடுக்கிறது. ஓடும் நீரை அள்ளிப் பருக வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு , ஐயோ, தாகம் எடுக்கிறதே, உயிர் போகிறதே, யாராவது எனக்கு நீர் தாருங்களேன் என்று அவன் கூவினால்  அவனைப் பற்றி என்ன  நினைப்போம் ?

அறியாத மூடன் என்று தானே நினைப்போம்.

அவன் இருக்கட்டும் அங்கேயே.

நம் வாழ்வில் எத்தனை துன்பங்கள். பணம், தொழில், பிள்ளைகள், கணவன்,மனைவி, அலுவலகம், அண்டை அயல், எதிர் காலம், ஆரோக்கியம் என்று ஆயிரம் கவலைகள்.

நம்ம சுற்றி உள்ள நல்லவற்றை நாம் பார்க்கிறோமா என்றால் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைத்திருக்கின்ற நன்மைகளை, நல்லவைகளை நினைத்துப் பார்த்தால் நம் துன்பம் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

நம்மைச் சுற்றி ஆற்றின் வெள்ளம் போல கணக்கில் அடங்காத இன்பங்கள் சூழ்ந்து  கிடக்கின்றன.அவற்றை காணாமல், தாகம் எடுக்கிறதே என்று துன்பப் படுகிறோம்.

நம்மை சந்தோஷமாக இருப்பதை தடை செய்வது யார் ? தண்ணீர் இருக்கிறது. முகந்து குடிப்பதை தடை செய்வது யார் ?

நம் அறியாமை.

மாணிக்க வாசகர் உருகுகிறார்....

"வெள்ளத்தின் நடுவில் நின்று கொண்டு நாக்கு வறண்டு தாகம் எடுக்கிறது என்று புலம்பும் மனிதனைப் போல உன் அருள் பெற்றும் துன்பத்தில் இருந்து விடுபடாமல் இருக்கும் என்னை கை விட்டு விடாதே. அடியார்கள் உள்ளத்தில் உள்ளவனே, தீராத இன்பத்தை எனக்கு தந்தருள்வாய் "

பாடல்

வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.


பொருள் 

வெள்ளத்துள் = வெள்ளத்தின் நடுவில். இது ஏதோ குளம் குட்டை இல்லை. குடித்தால் குறைந்து போக. வெள்ளம். வந்து கொண்டே இருக்கும். புதிது புதியதாய் நாளும் இன்பம் வந்து கொண்டே இருக்கும்.

நா வற்றி = நாக்கு வறண்டு

ஆங்கு = அங்கு

 உன் அருள் பெற்றுத் = உன் அருளைப் பெற்றப் பின்னும்

துன்பத்தின் [நின்]றும் = துன்பத்தில் கிடக்கும் என்னை

விள்ளக்கிலேனை  = வெளி வராமல் தவிக்கும் என்னை

விடுதி கண்டாய்?= விட்டு விடுவாயா ?

 விரும்பும் அடியார் = விரும்பும் அடியார். ஏதோ கடமைக்கு, வேறு வழியில்லாமல் ஆன அடியார்கள் அல்ல. விரும்பி அடியார்கள் ஆனவர்கள்

உள்ளத்து உள்ளாய் = உள்ளத்தில் இருப்பவனே

மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

கள்ளத்து உளேற்கு = கள்ளத்தனம் நிறைந்த எனக்கு

அருளாய் = அருளாய். என்ன அருள் வேண்டுமாம் ?

களியாத களி, எனக்கே = களியாத களி எனக்கே. தீராத இன்பம்.

Count your blessings என்று சொல்லுவார்களே அது போல.

இறை அருள் எங்கும் விரவிக் கிடக்கிறது. அள்ளிப் பருகுங்கள். யார் தடுப்பது உங்களை.

தண்ணீரில் நின்று கொண்டே தாகம் என்று சொல்லுவது அறியாமை.