Showing posts with label nootriyettu thirupadhi andhaadhi. Show all posts
Showing posts with label nootriyettu thirupadhi andhaadhi. Show all posts

Sunday, December 3, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவுறையூர்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவுறையூர்


எவ்வளவோ படிக்கிறோம். எவ்வளவோ கேட்கிறோம். நேரில் கேப்பது அல்லாமால் இப்போது youtube என்று வசதி வேறு வந்து விட்டது. தரவிறக்கம் செய்து வேண்டும் போது கேட்டுக் கொள்கிறோம்.

இருந்தாலும், வாழ்க்கை என்னவோ அப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கிறது. எத்தனை படித்தாலும், கேட்டாலும் நடை முறை வாழ்க்கையில் அதை எல்லாம் மறந்து விட்டு , நமக்கு எது சௌகரியமோ , எது பிடித்து இருக்கிறதோ அதைச் செய்கிறோம். கேட்டால், அது எல்லாம் படிக்க , கேட்க நல்லா இருக்கும், நடை முறைக்கு ஒத்து வருமா என்று மேதாவி மாதிரி கேட்டு விட்டு , வேலையைப் பார்க்கப் போய் விடுகிறோம்.

இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல, பிள்ளை பெருமாள் ஐயங்காருக்கும் இருந்திருக்கிறது.

பெருமாளே, நீ சிறப்பான பல திருப்பதிகளில் இருப்பவன். நானோ, மறதி உடையவன், நாயைப் போல கீழானவன். என் மனதில் வந்து எப்படி வந்து இருந்தாய். அதைச் சொல் , என்று பெருமாளிடம் வியந்து கேட்கிறார்.


பாடல்


சிறப்புடையசெல்வத்திருப்பதிகள்போல
மறப்புடையநாயேன்மனத்து - ளுறப்போந்
தறந்தையாநின்றவரங்கா திருவா
ழுறந்தையா யிங்குறைந்த தோது.


சீர் பிரித்த பின்


சிறப்பு உடைய செல்வ திருப்பதிகள் போல 
மறப்பு உடைய நாயேன் மனத்து - உறப் போந்து 
அறம் தையா நின்ற அரங்கா - திரு வாழ் 
உறந்தாய் இங்கு உறைந்தது ஓது 

பொருள்


சிறப்பு உடைய = பல சிறப்புகளை உடைய

செல்வ = செல்வம் தரும்

திருப்பதிகள் போல = திவ்ய தேசங்களைப் போல

மறப்பு உடைய நாயேன்  = மறதி உள்ள நாய் போன்ற கீழான

மனத்து = மனதினில்

உறப் போந்து = நன்றாக புகுந்து

அறம் தையா நின்ற = தர்மம் வழுவாமல் நின்ற

அரங்கா = அரங்கனே

திரு வாழ் = இலட்சுமி வாழும்

உறந்தாய் = திரு உறந்தை என்ற திவ்ய தேசத்தில் வசிப்பவனே

இங்கு உறைந்தது ஓது = என் மனதில் வந்து இருந்தது எப்படி என்று சொல்


நாய் நல்ல பிராணி தான். நன்றி உள்ளது. பல நல்ல குணங்கள் உள்ளது. இருந்தும், எவ்வளவுதான் சொன்னாலும், பழக்கினாலும், யாரும் இல்லாத சமயத்தில் , அது தெருவில் சென்று எதையாவது தின்று விடும். 

மனித மனமும் அப்படித்தான். எத்தனை படித்தாலும், கேட்டாலும், அதன் படி நடப்பது இல்லை. வாலை குழைத்துக் கொண்டு எங்கோதான் செல்லும்.

அது ஒரு புறம் இருக்கட்டும். 

வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார் என்றால் , நாம் வீட்டை இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருப்போம் அல்லவா ? சாமான்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி, புது துவாலை, சோப்பு என்று வைத்து , எப்போதும் வைத்திருப்பதை விட கொஞ்சம் அதிகம் கவனம் எடுத்து சரி செய்து வைப்போம் அல்லவா. 

வரும் விருந்து பெரிய விருந்தாக இருந்தால் ? ஒரு வேளை பெண் பார்க்க வருகிறார்கள், சம்பந்தம் பேச வருகிறார்கள் என்றால், இன்னும் முனைப்பாக வீட்டை  அழகு செய்வோம் அல்லவா.

வருபவர் ஆண்டவனாக இருந்தால் , அவன் இருக்கும் மன வீட்டை எப்படி வைத்திருக்க வேண்டும் ?

அவன் எப்போது வருவான் என்று சொல்ல முடியாது. 

எனவே எப்போதும், மனதை செம்மையாக வைத்திருக்க வேண்டும். 

என்ன ? சரிதானே ?


Friday, December 1, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவரங்கம்

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவரங்கம் 



ஆச்சாரியார்களுக்கு வணக்கம் செய்த பின், நூலுக்குள் செல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

முதல் திவ்ய தேசம், திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மாதிரி முதல் பாடல் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் , "திருமாலின் நாபிக் கமலத்தில் வந்த பிரமனைத் தவிர , பற்றறவர்களை பற்றும் அந்த திருமால் கோவில் கொண்ட திருவரங்கத்தின் பெருமையை யாரால் சொல்லமுடியும் ? அதுவும் என் போன்ற சொல்லில் சோர்வு கொண்ட ஒருத்தனால் சொல்ல முடியுமா ?" என்று கேட்கிறார்.

பாடல்

சீர்வந்தவுந்தித்திசைமுகனாலல்லாதென்
சோர்வந்தசொல்லிற்சுருங்குமோ - வார்வ
மொருவரங்கங்கோயிலுகந்தவரையாள்வான்
றிருவரங்கங்கோயிற்சிறப்பு.

நேரடியாக படித்தால் கொஞ்சம் சிக்கலாகத் தெரியும். கொஞ்சம் சீர் பிரிப்போம். சீர் பிரித்த பின் , மிக எளிய தமிழ் தான் என்று விளங்கும்.


சீர் வந்த உந்தி திசை முகன் அல்லாது என் 
சோர்வு வந்த சொல்லில் சுருங்குமோ ? ஆர்வ 
ஒருவர் அங்கு ஓயில் உகந்து அவரை ஆள்வான் 
திருவரங்க கோயில் சிறப்பு 


பொருள்


சீர் வந்த உந்தி = சிறப்பு உந்தியில் வந்த

திசை முகன் = ப்ரம்மா

அல்லாது என் = அல்லாது மாற்று ஒருவர் எவ்வாறு

சோர்வு வந்த சொல்லில் = குற்றம் உள்ள சொல்லில்

சுருங்குமோ ? = சுருக்கி கூற முடியுமோ ?

ஆர்வம் = ஆசை

ஒருவர் = ஒருவற்கு

அங்கு ஓயில் = அங்கு ஓய்ந்து போன பின்

உகந்து = மகிழ்ந்து

அவரை ஆள்வான் = அவரை ஆட் கொள்வான்

திருவரங்க கோயில் சிறப்பு  = திருவரங்கத்தில் உள்ள கோவிலின் சிறப்பு


மேலெழுந்த வாரியாக பார்த்தால் சாதாரண பாடல் போலத் தெரியும். 

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல். 

எதைத் தொடங்கினாலும் ஒரு மங்கல சொல்லோடு தொடங்க வேண்டும் என்பது தமிழ் மரபு. 

"சீர்" என்றால் சிறப்பு என்று பொருள். சிறந்த , உயர்ந்த என்ற மங்கலச் சொல்லோடு பாடலை தொடங்குகிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார். 

எதைச் செய்தாலும், பேசினாலும், தொடங்கினாலும் நல்லதையே நினைத்து தொடங்க வேண்டும். 

அடுத்தது அவை அடக்கம் என்று தனியாக பாடுவார்கள் . அது ஒரு நூல் மரபு. 

தன்னை தாழ்த்தி , பாடும் பொருளை, கருவை , படிக்கும் மற்றவர்களை உயர்த்திப் பாடுவது   அவை அடக்கம். 

பல மேலை நாட்டு உளவியல் அறிஞர்கள் அது ஒரு வித தாழ்வு மனப்பான்மை என்று கூறுகிறார்கள். தமிழர்கள் எப்போதும் தங்களை , தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். அது ஒரு வித மன நோய் என்று குறிப்பிடுகிறார்கள். (Inferiority complex). அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். 

அவை அடக்கம் பாடுவது , தன் திறமையை குறைத்து கூறுவதற்கு அல்ல. அறிவின், கல்வியின், ஆழம் தெரிந்ததால் வரும் அடக்கம். கல்வி எவ்வளவு பெரிய கடல். அதில் நாம் ஒரு ஆள் எவ்வளவு தெரிந்து கொள்ள முடியும் என்ற அறிவு முதிர்ச்சியால் வரும் உணர்வு அது. 

பிள்ளை பெருமாள் ஐயங்கார் தனியாக அவை அடக்கம் பாடவில்லை. முதல் பாடலிலேயே அதை சேர்த்து விடுகிறார். 

'சோர்வு வந்த என் சொல்லால் எப்படி பாட முடியும் " என்று அவை அடக்கம் கூறுகிறார். 

எதை தன்னால் பாட முடியாது என்று கூறுகிறார் ?

பெருமாளின் பெருமையையா ? இல்லை இல்லை. அவர் அவ்வளவு தூரம் எல்லாம் போகவில்லை . அந்த பெருமாள் கோவில் கொண்டிருக்கும் திருவரங்கத்தின் சிறப்பை தன்னால் பாட முடியாது என்கிறார். அப்படி என்றால், திருமாலின் பெருமையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவதைப் போல. 

அவை அடக்கத்திலும், மற்றொரு செய்தியை எப்படி வைக்கிறார் பாருங்கள். 

இன்னொரு மிக மிக முக்கியமான விஷயத்தை இங்கே கூறுகிறார். 


இறைவனை அடைய வேண்டும் அனைத்து அடியவர்களும் விரும்புவார்கள். சரி, எப்படி அவனை அடைவது ? நாமோ அவனை முன்னே பின்னே பார்த்தது கிடையாது.  ஒரு வேளை நாளை பெருமாள் நேரில் வந்து நின்றால், நம்மால் அவரை அடையாளம் காண முடியுமா ? நாம் பார்த்த படங்கள், சிற்பங்கள், சிலைகள் இவை போல இருப்பார் என்று எண்ணிக் கொண்டிருப்போம். அவர் வேறு விதமாக இருந்தால் ? குழம்பிப் போய் விடுவோம். 

சரி, அவன் இங்கே வந்தால்  நமக்கு அடையாளம் தெரியாது. நாம் அங்கே போனால் ? 

அங்கே எப்படி போவது ? விலாசம் இல்லையே ? விலாசம் இருந்தாலும், போகும் வழி தெரியாதே. பின் எப்படி போவது ?

இந்த சிக்கலில் இருந்து விடுபட ஒரு வழி சொல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

நமக்கு அவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியும் தானே. அவனே வந்து நம்மை கூட்டிக் கொண்டு செல்லும் படி செய்தால் ? 

அது ஒரு நல்ல வழியாக தெரிகிறது அல்லவா ? நாம் அலையவே வேண்டாம். அவனே வந்து கூட்டிக் கொண்டு போவான் ?

எப்படி ?


"ஆர்வ  ஒருவர் அங்கு ஓயில் உகந்து அவரை ஆள்வான்"


ஆர்வம் ஓய்ந்தால் , அப்படிப்பட்டவரை அவனே வந்து ஆள்வான். 

ஆசை ஓய்ந்தால் , பற்று அற்று விட்டால் , அவனே வருவான். 

அதுவும் எப்படி வருவான், "உகந்து அவரை ஆள்வான்"...சந்தோஷமாக அவர்களை ஏற்றுக் கொள்ளவான். 


பற்றறவர்களை நோக்கி பகவான் ஆர்வத்துடன் வந்து ஏற்றுக் கொள்வான் என்கிறார். 

பற்றை விடுங்கள், அவன் உங்களைப் பற்றிக் கொள்வான். 

அப்படிப் பட்ட திருமால் இருக்கும் கோவிலின் சிறப்பை, ஒரு வேளை நான்முகனால் சொல்ல முடியலாம். என்னால் முடியாது என்கிறார். 

திருவரங்கம் கோவில் பல வரலாற்றுச் சிக்கல்கள் நிறைந்தது. அந்நிய படை எடுப்பில் பாதிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் தாண்டி இந்த கோவிலுக்கு ஒரு சிறப்பு என்று வைணவர்கள் கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 

(நான் பாடலை விட்டு வெளியே செல்கிறேன் என்று எனக்குத் தெரிகிறது. இருந்தும், தொடர்பு கருதி அதைச் செய்கிறேன். மன்னிக்க).

திருமாலுக்கு ஐந்து நிலைகளை கூறப் படுகிறது 

அவை 

- பரத்துவம் 
- வியூகம் 

இவை இரண்டும் தவிர்த்து மற்றவை "அர்ச்சை " என்ற வகையை சார்ந்தவை. 

அந்த அர்ச்சை என்பது 

மாநுஷம் 
ஆர்ஷம் 
தைவம் 
ஸ்வயம்வ்யக்தம்

என்று நான்கு வகைப்படும் 

மானுஷம் என்பது சாதாரண மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுபவை. 

ஆர்ஷம் என்பது  பெரிய மக ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை 
செய்யப்படுபவை. 

தைவம் என்பது தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுபவை.

ஸ்வயம்வ்யக்தம் என்பது இதற்கும் ஒரு படி மேலே போய் இறைவனே சுயமாக உண்டாகி பின் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுபவை. 

இராமாயணத்தில் , இராமன் மீண்டும் அயோத்தி திரும்பி , முடி சூட்டிக் கொண்டு எல்லோருக்கும் பரிசுகள் வழங்கி அவர் அவர்களை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பினான். அப்போது விபீஷணனுக்கு தான் பூஜை செய்த  விஷ்ணுவின் சிலையை வழங்கினார். 

விபீஷணன் இலங்கை செல்லும் வழியில் அந்த சிலையை கொள்ளிடக் கரையில் வைத்து பூஜை செய்தான். திருமாலுக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டது. அங்கேயே இருந்து விட்டார். 

திருவரங்கத்தில் உள்ள சிலை, திருமால் தானே செய்து, பூஜித்த சிலை.  

அப்படி திருமாலே உண்டாக்கிய சிலைகள் உள்ள இடங்கள் மொத்தம் எட்டு. 

அவை  

ஸ்ரீரங்கம், 
ஸ்ரீமுஷ்ணம், 
பதரிகாச்சிரமம், 
புஷ்கரம், 
திருவேங்கடம், 
வானமாமலை, 
நைமிசாரணியம், 
சாளக்கிராமம் 

என்பவையாகும்.

இவற்றில் சிறப்பானதாக கொண்டாடப் படுவது திருவரங்கம். 


அரங்கம் என்றால் கூடம், மண்டபம், அவை என்று சொல்லலாம். 

விளையாட்டு அரங்கம், திரை அரங்கம், நாடக அரங்கம் என்றெல்லாம் இருக்கிறது. 

அரங்கத்தில் இருப்பவர்கள் அரங்கத்தின் நடுவில் நடப்பதை காண முடியும். ஆனால் , அரங்கத்தில் உள்ள மற்றவர்களை சரியாக காண முடியாது. 

ஆனால், அரங்கத்தின் மையத்தில் இருப்பவர்கள் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஒரே சமயத்தில் கானம் முடியும். 

இந்த பிரபஞ்சம் என்ற அரங்கத்தின் மையத்தில் ஆண்டவன் இருக்கிறான். அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சொல்லவே  திருவரங்கம் என்று பெயர் சூட்டப் பட்டது. 

அந்த அரங்கன் உள்ளும், புறமும் எங்கும் நிறைந்து , அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். 

ஒரு பாடலுக்கு இவ்வளவு, எனக்குத் தோன்றியது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ ? இப்படி 108 பாடல்கள். 

தேடிப் பிடித்து படியுங்கள். 

அத்தனையும் ஆழ்ந்த பொருள் கொண்ட அழகான இனிய பாடல்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post.html




Thursday, November 30, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - கூரத்தாழ்வான் துதி


108 திவ்ய தேசங்களை பற்றி பாடுவதற்கு முன்னால் , ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்கிறார் பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

முந்தைய பிளாகில் அவர் இராமானுஜருக்கு வணக்கம் செய்ததை பார்த்தோம்.

அடுத்த பாடலில் கூரத்தாழ்வானுக்கு வணக்கம் சொல்கிறார்.


நாம் ஒரு புது இடத்துக்குப் போகிறோம். அங்கே முன்னே பின்னே போனதில்லை. போகும் இடத்துக்கு ஒரு வரைபடமும் (map ) இல்லை. பின் எப்படி போய்ச் சேர்வது.

தமிழில் ஒரு பழ மொழி உண்டு.

"வழி வாயில " என்று.

கேட்டு கேட்டு போக வேண்டியதுதான்.

யாரிடம் கேட்பது ? அந்த இடம் பற்றி தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

உள்ளூரிலேயே இந்தப் பாடு என்றால், வைகுந்தம் எப்படி போவது ? யாரிடம் கேட்பது ?

ஆச்சாரியர்களிடம் கேட்க வேண்டும்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் சொல்கிறார், "கூரத்தாழ்வான் அடியை கூடுவதற்கு காத்திருக்கிறேன் " என்று. அவன் திருவடிகளை பற்றிக் கொண்டால், வைகுந்தம் போய் விடலாம் என்கிறார்.


பாடல்

முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்
தெக்காலஞ்செல்வானிருக்கின்றேன் - தக்காரெண்
கூரத்தாழ்வானடியைக்கூடுதற்கு நாயடியேன்
போரத்தாழ்வான சடம்போட்டு


கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முக் காலமும் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்துக்கு
எக் காலம் செல்வான் இருக்கின்றேன் - தக்கார் எண்
கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு நாய் அடியேன்
போர தாழ்வான சடம் போட்டு

பொருள்

முக் காலமும் = மூன்று காலமும்

இல்லா = இல்லாத

முகில் = மேகம் போன்ற

வண்ணன் = நிறம் கொண்ட

வைகுந்தத்துக்கு = வைகுண்டத்துக்கு

எக் காலம் = எந்த காலத்தில்

செல்வான் = செல்லுவது என்று

இருக்கின்றேன் = இருக்கிறேன்

தக்கார் = தகுதி உடையவர்கள்

எண் = எண்ணும்

கூரத்தாழ்வான் = கூரத்தாழ்வான்

அடியை = திருவடிகளை

கூடுதற்கு = சேர்வதற்கு

நாய் அடியேன் = நாய் போன்ற கீழ்மையான அடியேன்

போர = மிகவும்

தாழ்வான = கீழான

சடம் = இந்த உடலை

போட்டு = போட்டு விட்டு

வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

வைகுண்டம் ....வைகுண்டம் என்றால் என்ன ?

குண்டம் என்றால் குழி. யாக குண்டம் என்றால் யாகத்தில் வேள்வி செய்ய தோண்டப்பட்ட குழி.

சாலை ஒரே குண்டும் குழியும் இருக்கிறது என்று சொல்வதில்லையா.

உள்ளத்திலே பெரிய குழி எது ? நரகக் குழி.

"வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்"

என்பார் அபிராமி பட்டர்.


விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே

பாவம் செய்பவர்கள் சென்று அடையும் இடம் நரகக் குழி.

சரி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

வி என்றால் இல்லை என்று அர்த்தம்.

நாயகன் என்றால் தலைவன்.

தனக்கு மேலே ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்.

பாவம் செய்பவர்கள் செல்லும் இடம் குண்டம்.

பாவம் செய்யாதவர்கள் செல்லும் இடம் வி-குண்டம். வைகுண்டம். வி-குண்டம் என்பது வைகுண்டம் என்று ஆனது.

புண்ணியம் செய்தவர்கள், பாவம் இல்லாதவர்கள் இருக்கும் இடம் வைகுண்டம். 

வைகுண்டம் எப்படி இருக்கும் தெரியுமா ?

பாற்கடல்,

அரம்பை, திலோத்தமை, ஊர்வசி போன்ற நடன மாந்தர்களின் நாட்டியம்,

பஜனை பாடல்கள்

என்று இதெல்லாம் இருக்குமா ?

பிள்ளை பெருமாள் ஐயங்கார் முக்கியமான ஒன்றை கூறுகிறார்.

அங்கே காலம் என்பது கிடையாது.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பது கிடையாது.

"முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத்" என்கிறார்.

காலம் இல்லை என்றால் வினை கிடையாது. நேற்று செய்ததன் பலன் இன்று வந்தது என்ற பேச்சு கிடையாது.

கால தத்துவத்தை தாண்டி நிற்கும் இடம் அது.

வயது ஆகாது.

பிறப்பு இறப்பு மூப்பு என்பபது கிடையாது.

காலத்தை வென்று இருப்பார் என்பார் அருணகிரிநாதர்.

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.

காலம் என்பது இல்லாத ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா ?

காலம் இல்லாத இடம் வைகுண்டம். சிந்தித்துப் பாருங்கள். காலம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று. 

ஆனால், இந்த பூமியில் காலம் என்ற சிறையில் நாம் அகப்பட்டு இருக்கிறோம். 

"எக் காலம் செல்வான் இருக்கின்றேன் "

இந்த காலச் சிறையை விட்டு எப்போது செல்வது என்று இருக்கின்றேன் என்கிறார்.

இந்த உலகை விட்டு விட்டு வைகுண்டம் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார்.

வைகுண்டம் போக வேண்டும் என்றால் கூரத்தாழ்வான் திருவடியை பற்ற வேண்டும்.

அப்படி என்று யார் சொன்னது ?

"தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு "

தக்கார் என்றால் தகுதியானவர், பெரியவர், சிறந்தவர் என்று பொருள்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

என்பது குறள்.

பெரியவர்கள் எல்லோரும் எண்ணும் கூரத்தாழ்வான்.

குரு வணக்கம் முடிந்தது. நூலுக்குள் போவோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_30.html

Wednesday, November 29, 2017

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர்

நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - உடையவர் 


108 திவ்ய தேசங்களை பற்றி பிள்ளை பெருமாள் ஐயங்கார் அந்தாதி முறையில் பாடி அருளி இருக்கிறார்.

இறைவனைப் பாடலாம், அவன் பெருமைகளை பாடலாம். அவன் அடியார்களைப்  பாடலாம்.  அவன் கோவில் கொண்ட இடங்களைப் பற்றி பாட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம் ? எல்லா இடமும் ஒன்றுதானே.

ஒரு ஊரு, ஒரு கோவில், பக்கத்தில் ஒரு திருக்குளம் ....இதில் பாடுவதற்கு என்ன இருக்கிறது என்று நினைப்போம் .

பிள்ளை பெருமாள் ஐயங்கார் உருகி உருகி பாடி இருக்கிறார்.

அவ்வளவு அழகான எளிமையான பாடல்கள்.

இவற்றை படித்து அறிவதால் நமக்கு என்ன பலன் என்று கேட்டால் எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை ?

இவற்றில் ஏதோ ஒரு அழகு, ஒரு வசீகரம், ஒரு ஊடாடும் இலயம் இருக்கிறது.

ரோஜா இதழின் மேல் இருக்கும் ஒரு பனித்துளியைப் போல, விரல் பிடிக்கும் குழந்தையின் ஸ்பரிசம் போல,  தனிமையில் நடக்கும் போது எங்கோ ஒலிக்கும் அந்த இனிய பழைய பாடல் போல...இந்த அந்தாதி மனதை வருடத்தான் செய்கிறது.

படித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.


அந்தாதியை தொடங்குமுன், ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

நான்கு ஆச்சாரியர்களுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

அதில் , உடையவர் என்று போற்றப் படும் இராமானுஜர் மேல் பாடிய பாடலைப் பார்ப்போம்.


தித்திக்கும் பாடல்




வீட்டில் , பையன் வேகமாக ஓடி வருவான். வந்த வேகத்தில் நிலை தடுக்கி கீழே விழுவான்.

அம்மா "ஏம்பா பாத்து வரக் கூடாதா ? போன வாரம் தான இந்த மாதிரி ஓடி வந்து தடுக்கி விழுந்த...சரி சரி கால உதறு ...இனிமேலாவது பாத்து வா " என்று அன்போடு கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா ?


அந்த அன்போடு பிள்ளை பெருமாள் ஐயங்கார் நம்மிடம்  கூறுகிறார்.

இதற்கு முன் எத்தனை பிறவிகள் எடுத்து , பிறந்து இறந்து , பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறீர்கள். அதெல்லாம் ஞாபகம் இல்லையா ? இனிமேலும் பிறவிகள் வேண்டாம் என்றால், ஒரு எளிய வழி இருக்கிறது.

எதிராஜன் என்ற இராமானுஜன் நாமத்தைச் சொல் என்கிறார்.



பாடல்

முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம்
என்னே மறந்தனையோ வென்னெஞ்சே!- சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி


பொருள் 


முன்னே = முன்பு

பிறந்திறந்து = பிறந்து இறந்து

மூதுலகிற் = மூதுலகில் , மூத்த இந்த உலகில், பழமையான இந்த உலகில்

பட்டவெல்லாம் = பட்ட துன்பமெல்லாம்

என்னே = எத்தனை எத்தனையோ

மறந்தனையோ = அவை அனைத்தையும் மறந்து விட்டாயா

வென்னெஞ்சே!- = என் நெஞ்சே. என் மனமே

சொன்னேன் = சொன்னேன்

இனி = இனிமேல் , இன்றிலிருந்து

எதிரா சன்மங்கள் = பிறவிகள் இனி மேல் வராது

ளின்றுமுதற் = இன்று முதல்

 பூதூர் = திருப்பூதுர்

முனியெதிரா சன் =முனி எதிராசன்

பேர் மொழி = பேரைச் சொல்


அதெப்படி, எதிராஜன் பேரைச் சொன்னால் பிறவி வராமல் போய் விடுமா ? என்று கேட்கலாம். 


கடலிலே போய் கொண்டிருக்கிறீர்கள். போகின்ற கப்பல் பாறையில் மோதி உடைந்து போகிறது. உங்களுக்கோ நீச்சல் தெரியாது. என்ன செய்வீர்கள் ?

அங்கே மிதக்கும் கட்டையை பிடித்துக் கொள்வீர்கள் அல்லவா ? அந்த கட்டை மிதந்து மிதந்து சென்று கரை சேரும் என்றால் , அதோடு சேர்ந்து நீங்களும் கரை சேர முடியும் அல்லவா ? நீச்சல் தெரியாவிட்டாலும், கட்டையை பிடித்துக் கொண்டால், கரை சேர்ந்து விடலாம். 

பிறவி என்ற பெருங்கடலை நம்மால் நீந்தி கடக்க முடியாது. 

பெரியவர்களின் வழி காட்டுதலாகிய தெப்பமே நம்மை கரை சேர்க்கும். 

எதிராஜன் பேரை மொழி என்றால், அவர் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது. அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். அதுவே பிறவி பெருங்கடலை கடக்க வழி. 

அடடா, இது தெரியாமல் இத்தனை நாள் வீணே பொழுதை கழித்து விட்டேனே என்று  வருத்தப் படாதீர்கள். 

பிள்ளை பெருமாள் சொல்கிறார், "இன்று முதல் எதிராஜன் பெயரை மொழி".

இத்தனை நாள் எப்படியோ போய்விட்டுப் போகட்டும். இன்றிலிருந்து தொடங்கு  என்கிறார். 

இன்னைக்கு விட்டுட்டு நாளை முதல் தொடங்கலாமா என்றால். இல்லை. இன்றிலிருந்து  தொடங்கினால், "ஜன்மங்கள் இனி எதிரில் வராது"

பிறவி பெரிய பிணி. இதை மற்றவர்கள் சொல்ல வேண்டாம். "நீயே எத்தனை முறை பிறந்து இறந்து துன்பப் பட்டிருக்கிறாய் ...பட்ட பின்பும் அறிவு வரவில்லையா " என்று தன் மனதிடம் கேட்பதைப் போல நம்மிடம் சொல்கிறார். 


"சொன்னேன்
இனியெதிரா சன்மங்க ளின்றுமுதற் பூதூர்
முனியெதிரா சன்பேர் மொழி"

இப்போது தானே சொல்கிறார் , சொன்னேன் என்று இறந்த காலத்தை குறிக்கும் சொல்லால் கூறுகிறாரே என்றால், "நான் இப்போது மட்டும் சொல்லவில்லை, முன்பும் பல முறை கூறி இருக்கிறேன். நீ தான் கேட்காமல்  பல  பிறவிகள் எடுத்து துன்பப் படுகிறாய். இப்போதாவது கேள் " என்று கூறுவதைப் போல "சொன்னேன்" என்றார்.

இதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில் எதிராஜனின் பேரைச் சொல். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றி அறியும் ஆவல் வரும், பின் அவர் என்ன சொன்னார் என்று அறியும் ஆவல் வரும், பின் அவற்றை கடைபிடித்தால் என்ன என்று தோன்றும், கடை பிடிப்பாய் , உன் பிறவிப் பிணி போகும் ...எனவே எதிராஜன் பெயரைச் சொல்லி ஆரம்பி.

மற்றதெல்லாம் தானே நடக்கும்.


நமக்கு மறதி அதிகம். நடந்ததெல்லாம் மறந்து போய் விடுகிறது.  உள்ளுணர்வு கூர்மையாக இருந்தால் ஞாபகம் இருக்கும்.

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் "

என்பார் மணிவாசகர்.

சடையவனே , தளர்ந்தேன் ,எம்பெருமான் என்னைத் தாங்கிக்கொள்ளே என்று கெஞ்சுவார் மணிவாசகர்.

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.


பிடித்திருந்தால் சொல்லுங்கள், மேலும் எழுத ஆசை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/11/blog-post_29.html