Tuesday, August 27, 2013

திருக்குறள் - பாலோடு தேன்

திருக்குறள் - பாலோடு தேன் 


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

தமிழில் நிறைய காம இரசம் உள்ள புத்தகங்கள் உள்ளன. விடலைப் பருவத்தில் மாணவர்கள் அவற்றை மறைத்து மறைத்து வைத்துப் படிப்பார்கள். 

திருக்குறளிலும் காமத்துப் பால் உண்டு. ஒரு பையன் தன் தந்தையோடு அமர்ந்து படிக்கலாம். முகம் சுளிக்க வேண்டியது இல்லை. மறைத்து வைத்துப் படிக்க வேண்டியது இல்லை. 

 அதில் இல்லாத காமம் இல்லை....சைட் அடிப்பதில் இருந்து, கனவு, உண்ணாமல் மெலிவது, கண்டவுடன் கட்டி அணைப்பது, களவு, வதந்தி, புணர்ச்சி என்று எல்லாம் இருக்கிறது. 

அவை அனைத்தையும் விரசம் எங்கும் தட்டாமல் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார் ஜொல்லுவர் . 

அவள் தந்த முத்தம். 

அது எப்படி இருந்தது ? மிக மிக சுவையாக இருந்தது...

சுவை என்றால் எப்படி ? 

பால் சுவையாக இருக்கும்.  தேன் சுவையாக இருக்கும். அந்த இரண்டையும் கலந்தால்  அதன் சுவை எப்படி இருக்கும் ?

தனித்தனியாக இரண்டின் சுவையும் தெரியும். ஒன்றாகக் கலந்தால் அதன் சுவை தெரியாது. அது போல இருந்தது அவள் வாயில் ஊறிய நீர். 

அது மட்டும் அல்ல, பாலும் தேனும் கலக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒரு தனிச் சுவை  தோன்றும். ஏன் என்றால் பாலின் சுவையும் தேனின் சுவையும் தனித்தனியே எப்போதும் ஒன்று போல் இருக்காது.   அதுவும் அன்றி அவற்றை எந்த  விகிதத்தில் சேர்கிறோமோ அதற்க்கு தகுந்த மாதிரி சுவை  மாறும்.


அவள் முத்தமும் அப்படித்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவை. 

பாலும் தேனும் அப்படியே எளிதாகக் கிடைப்பது இல்லை.  தேன் வேண்டும் என்றால்  கொஞ்சம் முயற்சி செய்ய  வேண்டும். 

இரண்டும் வற்றாமல் வந்து கொண்டே இருப்பது அல்ல. கொஞ்சம் கிடைத்த பின் நின்று போகும்.  இன்னும் வேண்டும் என்றால், பொறுத்து இருக்க வேண்டும். 

பொருள் 


பாலொடு = பாலோடு

தேன்கலந் தற்றே = தேன் கலந்த மாதிரி

பணிமொழி = பணிவான மொழி பேசும்

வாலெயி றூறிய நீர் = வாயில் உள்ள பல்/எயிறு ஊறிய நீர்

ஊறிய என்றால் மீண்டும் மீண்டும் சுரக்கும். ஊற்றுபோல் ஊறிக் கொண்டே இருக்கும். 

தொட்டனைதூறும் மணர்க் கேணி என்பதும் வள்ளுவம்.

இப்படி ஒரு 250 பாட்டு இருக்கு.


நேரம் கிடைத்தால் மூல நூலை படித்து நீங்களும் ஜொள்ளு விடலாம்....



Sunday, August 25, 2013

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே

அபிராமி அந்தாதி - வல்லி , நீ செய்த வல்லபமே 




ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம் 
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம் 
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் 
மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.

சூர பத்மனை அழிக்க ஒரு பிள்ளை  வேண்டும்.அதை  சிவன்தான் உருவாக்க வேண்டும். சிவனோ தவத்தில்  இருக்கிறான். அந்த தவத்தை கலைக்க வேண்டும்.

என்ன  செய்வது என்று யோசித்த தேவர்கள், சிவனின் தவத்தை கலைக்க  காமனை அனுப்பினார்கள்.

காமனும்  சென்றான்.சிவன் நெற்றிக் கண்ணால்  வந்தான்.

சிவன் காமத்தை  கடந்தவன்.

பிள்ளை வேண்டும் என்றால் காமம் வேண்டும். என்ன செய்வது. ?

அபிராமி, சிவனுக்கு முருகனை படைக்கும் வல்லமையை தந்தாள் என்று பட்டர்  நாசூக்காக  சொல்கிறார்.

அகிலமும், வானும்,பூமியும் அறிய காமனை எரித்த சிவனுக்கு முருகனை உருவாக்கும்  சக்தி தந்த உன் வல்லமையே வல்லமை என்று அபிராமியை துதிக்கிறார்.

அவளும் காமத்தை ஆட்சி  செய்யும் காமாட்சி தான்...



பொருள்


ககனமும் = அண்ட சராசரங்களும்

வானும் = வானமும்

புவனமும் = இந்த பூமியும்

காண = காணும்படி

விற் காமன் = வில் பிடித்த மன்மதனின்

அங்கம் = அங்கங்களை

தகனம் முன் செய்த = முன்பு தகனம் செய்த

தவம் பெருமாற்கு = தவம்  கொண்டிருந்த பெருமானான சிவனுக்கு

தடக்கையும் =  தடக் கைகளும்

செம் முகனும் = செம்மையான முகங்களும்

முந்நான்கு = பன்னிரண்டு (தடக் கைகள் )

இருமூன்று = ஆறு (முகங்கள்)

எனத் தோன்றிய = என்று தொன்றிய

மூதறிவின் = முதிர்ந்த அறிவின்

மகனும் உண்டாயது அன்றோ? = பிள்ளை உண்டானது உண்டானது அன்றோ

வல்லி = வல்லி , கள்ளி

நீ செய்த வல்லபமே = உன்னுடைய திறமையான காரியமே

காமத்தை வென்ற காமேஸ்வரனுக்கும் அன்பை சுரக்க வைத்து, பிள்ளை உருவாக  வழி செய்தாள் என்றால் என்னே அவள் அன்பின் எல்லை.

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதியை ஒவ்வொரு வார்த்தையாக  படிக்கக் கூடாது....அதை முழுமையாக உணர வேண்டும்.     பட்டரின் மனதில் இருந்து அதைப் படிக்க வேண்டும்



இராமாயணம் - இராமனிடம் தசரதன் கேட்டுப் பெற்றது

இராமாயணம் - இராமனிடம் தசரதன் கேட்டுப் பெற்றது 


ஆண்டு, தன் மருங்கு இரீஇ, உவந்து,
     அன்புற நோக்கி,
‘பூண்ட போர் மழு உடையவன்
     பெரும் புகழ் குறுக
நீண்ட தோள் ஐய ! 
     நிற் பயந்தெடுத்த யான், நின்னை
வேண்டி, எய்திட விழைவது ஒன்று உளது’
     என, விளம்பும்.

முந்தைய ப்ளாகில் தசரன் தன் அரசை இராமனுக்கு தருவது என்ற நிச்சயித்த பின்,  அதற்கு தகுதியானவன் தானா என்று அவனை தன் தோளால்  அளந்தான் என்று பார்த்தோம்.

இராமன் தகுதியானவன் தான் என்று  அறிந்த பின், "இந்தா அரசாட்சி,   ஏற்றுக் கொள்" என்று கொடுத்து  விடவில்லை.

ஒரு வேளை இராமன் அரசாட்சியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாவிட்டால் ? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று நினைத்து விட்டால் ? இப்ப தானே திருமணம் முடிந்தது, இன்னும் கொஞ்ச நாள்  சந்தோஷமாக இருந்து விட்டு அப்புறம் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டால் ?

பதவி  என்பது பெரிய  விஷயம். அதை சரியாக பரிபாலித்தவர்களுக்குத்தான் தெரியும்  அதன்  கஷ்டம்.

இராமா, நீ தான் மூத்த  மகன்,நீ தான் இந்த அரசை ஏற்று நடத்த வேண்டும் என்று  வலுக் கட்டாயமாக அவன் மேல் அரசை திணிக்கவில்லை.

ஒரு பெரிய பதவியில் இருப்பவன், வேலையை விடுவது என்று முடிவு செய்து விட்டால்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக்  கூடாது.

தனக்குப் பின் தகுதியான ஒருவனை கண்டு பிடித்து, அவன் விருப்பம் அறிந்து, அந்த பொறுப்பை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அது தான் முறை.

தசரதன் , இராமனிடம்  கெஞ்சுகிறான்...நீ இந்த அரச பாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று....

பொருள்
 

ஆண்டு = அங்கு

தன் மருங்கு இரீஇ = தன் அருகில் இருந்த இராமனை

உவந்து = மகிழ்வுடன்

அன்புற நோக்கி = அன்போடு பார்த்து

‘பூண்ட போர் மழு உடையவன் = எப்போதும் போர்க் கோலம் பூண்டு, கையில் மழு என்ற ஆயுதத்தோடு இருப்பவன் (பரசுராமன்)

பெரும் புகழ் குறுக =  அவனுடைய பெரிய புகழ் குன்றும்படி செய்த 

நீண்ட தோள் ஐய = நீண்ட நெடிய தோள்களை உள்ள ஐயனே

நிற் பயந்தெடுத்த யான் = உன்னை பெற்றெடுத்த யான்

நின்னை வேண்டி = உன்னை வேண்டி

எய்திட விழைவது ஒன்று உளது பெற்றுக் கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது

என, விளம்பும் = என்று சொல்லினான்

எவ்வளவு பெரிய பாரம்பரியம் இந்த நாட்டில் இருந்திருக்கிறது !

எல்லாவற்றையும் தொலைத்து விட்டோமோ என்று கவலையாக இருக்கிறது....



நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை

நன்னூல் - கல்வி கற்றுத் தரும் முறை 




ஈத லியல்பே யியம்புங் காலைக்
காலமு மிடனும் வாலிதி னோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக்
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப .

கல்வியை எப்படி கற்றுத் தர வேண்டும் என்று சொல்கிறார் பவணந்தியார்.

கல்வி கற்றுத் தரும் ஆசிரியனின் தகுதி, சொல்லிக் கொடுக்கும் இடம், மாணவனின் அறிவுத் திறம் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது கல்வி கற்றுத் தரும் முறை.

முதலில் சீர் பிரிப்போம்.


ஈதல் இயல்பு இயம்பும் காலை 
காலமும் இடமும் வால் இதனை நோக்கி 
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி 
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைந்து 
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து 
கொள்வான் கொள் வகை அறிந்து அவன் உள்ளம் கொள்ள 
கோட்டம் இல் மனதில் நூல் கொடுத்தல் என்ப 

பொருள்


ஈதல் = கல்வி கற்றுத் தருதல்  என்பது தானம் தருவது போன்றது. அது வியாபாரம்  அல்ல. வேண்டுபவர்களுக்கு தானமாகக் கொடுப்பது ஈதல் எனப்படும்.

இயல்பு = அது இயல்பாக இருக்க வேண்டும். பழக்கமாக இருக்க வேண்டும்.

இயம்பும் காலை  = எப்படி என்று சொல்லுவது என்றால்


காலமும் = கல்வி கற்க சிறந்த காலத்தை தேர்ந்து எடுக்க வேண்டும்.

இடமும் = படிக்கும் இடம் நன்றாக இருக்க வேண்டும்

வால் இதனை நோக்கி = இவற்றை நோக்கி

சிறந்துழி இருந்து = இதில் சிறந்தவற்றை தேர்ந்து எடுத்து

தன் தெய்வம் வாழ்த்தி = (ஆசிரியனின்) குல தெய்வத்தை வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் = எதை சொல்லிக் கொடுக்கப் போகிறோமோ அதன் பொருளை

உள்ளத்து அமைந்து = மனதில் அமைத்து....புத்தகத்தை பார்த்து சும்மா வாசிக்கக் கூடாது. ஆசிரியனின் மனதில் அந்த பாடமும், அதன் பொருளும் இருக்க வேண்டும். புத்தகம் , நோட்ஸ் இல்லாமல் பாடம் நடத்த வேண்டும்.

 
விரையான் = அவசரப் படக் கூடாது

வெகுளான் = மாணவனுக்கு புரியவில்லை என்றால், கோபிக்கக் கூடாது. மாணவன் தவறாக புரிந்து கொண்டாலோ, தவறு செய்தாலோ, அவன் மேல் கோபம் கொள்ளக் கூடாது

விரும்பி = விருப்பத்துடன் சொல்லித் தர வேண்டும். ஏதோ வாங்கின சம்பளத்திற்கு வேலை என்று இருக்கக் கூடாது

முகமலர்ந்து = மலர்ந்த முகத்துடன்

கொள்வான் கொள் வகை அறிந்து = மாணவனின் அறியும் திறம் அறிந்து

அவன் உள்ளம் கொள்ள = அவன் உள்ளத்தில் பாடம் ஏறும் வண்ணம்

கோட்டம் இல் மனதில் = கோட்டம் என்றால் வளைவு. குற்றம் இல்லாத மனத்தோடு

 நூல் கொடுத்தல் என்ப = நூலை சொல்லிக் கொடுத்தல் முறை

இன்றைய காலக் கட்டத்தில் இது எல்லாம் முழுவதுமாக முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தவரை முயற்சிக்கலாம்.

எல்லா ஆசிரியருக்கும் இதை முதலில் சொல்லித் தர வேண்டும்.


எப்படி இருந்த இனம், இந்தத் தமிழ் இனம். எவ்வளவு சிந்தித்திருக்கிறார்கள்.



வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை

வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை 




வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.

நிறைய நல்ல விஷயங்களை நாளை செய்வோம், நாளை செய்வோம்  என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். நாளை வருமா ? வரும்போது நமக்கு நினைவு இருக்குமா ?

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார்  வள்ளுவர். அன்னைக்கு செய்துக் கொள்ளலாம் என்று . இருக்கக் கூடாது.  எப்போதும் அற வழியில் நிற்க வேண்டும் என்றார். 

கர்ணன் இறக்கும் தருவாயில் சொல்கிறான்...."கண்ணா, இறக்கும் தருணத்தில்   உன் திருவடிகளை வணங்கும் பேறு பெற்றேன், உன்னால் மதிகப் பெற்றேன், உன்  கைகளால் தீண்டப் பெற்றேன், உன் நாமத்தை உரைக்கும்  பேறு பெற்றேன்...இந்தப் பேறு உலகில் யாருக்கு கிடைக்கும் " என்றான். 

நினைத்துப் பாருங்கள்.  மரணம் நம்மிடம் சொல்லிவிட்டா வருகிறது. என்று , எப்படி வரும் என்று  நமக்குத் தெரியாது. 

அப்புறம் செய்யலாம் என்று நினைத்தது எல்லாம் அப் புறம் போய் விடும். கர்ணனுக்கு  இறக்கும் தருவாயில் இறைவனின் தரிசனம் கிடைத்தது, அவன் பெயரை சொல்லும்  புண்ணியம் இருந்தது, அவன் திருவடிகளைத் தொழ அவகாசம் இருந்தது, கிருஷ்ணனே அவனைத் தொட்டு அனுக்ரஹம் பண்ணினான்....

அதற்கு காரணம் அவன் செய்த கொடை , அவன் செய்த தர்மம்...மங்காத புகழையும் , முக்தியையும் கொடுத்தது....

பாடல் 


வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.


சீர் பிரித்த பின் 


வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப் பெற்றேன் மதி பெற்ற
             திரு உள்ளத்தால் தான் மதிக்கப் பெற்றேன்,
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப  மார்பும் 
             திருப்புயமும் தை வந்து தீண்டப் பெற்றேன் ,
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்து உணர்வுடன் உன் திரு 
             நாமம் உரைக்க பெற்றேன்,
யான் பெற்ற பெருந்தவப் பேற்றை என்னை அன்றி இரு நிலத்தில் 
             பிறந்தோரில் யார் பெற்றாரே 


பொருள்



Saturday, August 24, 2013

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல்

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல் 


சாகும் தருவாயில், எத்தனை பிறவி எடுத்தாலும் இல்லை என்று வருவோருக்கு இல்லை என்று கூறாமல் இருக்கும் வரம் என்று கண்ணனிடம் கேட்டான். கண்ணனும் மகிழ்ந்து அந்த வரத்தை  தந்தான். பின் அவனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டினனான்.

கர்ணன் இறக்கும் செய்தி குந்திக்கு அசரீரி மூலம் தெரிய வந்தது.

கர்ணன், குந்தியிடம் வரம் வாங்கி இருந்தான், தான் சாகும் முன்னம், அவள் தன்னை அவள் மடியில் ஏந்தி பிள்ளை போல் அமுது ஊட்ட வேண்டும் என்று.

மனதை உருக்கும் அந்தப் பாடல்


என்றென்றே யமர்க்களத்தி னின்ற வேந்தர் யாவருங்
                   கேட் டதிசயிப்ப வேங்கி யேங்கி,
யன்றன்போ டெடுத்தணைத்து முலைக்க ணூற
               லமுதூட்டி நேயமுட னணித்தா வீன்ற,
கன்றெஞ்ச வினைந்தினைந்துமறுகா நின்ற கபிலையைப்போ
                      லென்பட்டாள் கலாபம் வீசிக்,
குன்றெங்கு மிளஞ்சாயன் மயில்க ளாடுங் குருநாடன்
                           றிருத்தேவி குந்திதேவி..

சீர் பிரித்த பின்


என்றென்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் 
கேட்டு அதிசயிப்ப ஏங்கி ஏங்கி 
அன்போடு எடுத்து அணைத்து முலைக் கண் ஊற 
அமுது ஊட்டி நேயமுடன் ஆ ஈன்ற 
கன்று ஏஞ்ச இனைத்து இனைந்து மறுகா நின்ற கபிலையைப் போல் 
எனப் பட்டாள் கபலாம் வீசி 
குன்று எங்கும் இளம் மஞ்சு சாயல் மயில்கள் ஆடும் குருநாடன் 
திருத்தேவி குந்திதேவி 

பொருள்


திருக்குறள் - எல்லா அறமும் ஒரே வரியில்

திருக்குறள் - எல்லா அறமும் ஒரே வரியில் 


 நாம்: ஐயா, வணக்கம். இந்த அறம் அறம் அப்படின்னு சொல்றாங்களே, அப்படினா என்ன ?

வள்ளுவர்: அதைத்தானே இந்த திருக்குறளில் சொல்லி இருக்கேன். படித்துப் பாரு...

நாம்: ஐயா, இந்த 1330 குறளையும் படித்து, அதுக்கு அர்த்தம் புரிஞ்சு...ரொம்ப நாள் ....ஆகும் போல இருக்கே...சட்டுன்னு, எளிமையா புரியும்படி சொல்லுங்களேன்...

வள்ளுவர்: அப்படியா...சரி...உனக்கு...சுருக்கமா அறம் அப்படினா என்னனு தெரியனும் அவ்வளவு தானே....

நாம்: ஆமாங்க ஐயா...

வள்ளுவர்: சரி சொல்றேன் கேட்டுக்கோ ... இரண்டே வரியில் சொல்றதுனா

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

நாம்: அப்படினா என்னங்க ஐயா ?


வள்ளுவர்: மனசுல ஒரு குற்றமும் இல்லாட்டி, அதுவே எல்லா அறமும் செய்த மாதிரிதான்.

நாம்: புரியலேயே ஐயா...இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

வள்ளுவர்: எல்லா குற்றங்களும், அறத்தில் இருந்து விலகி நடத்தலும், முதலில் மனதில் நிகழ்கிறது. மனம் ஒரு செயலை நினைத்தபின் தான் வாக்கும்  செயலும்  அதை செயல்படுத்துகிறது.  நினைக்காத ஒன்றை பேசவோ செய்யவோ முடியாது அல்லவா ?

நாம்: ஆம்...

வள்ளுவர்:  எனவே,மனதில் மாசு, அதாவது, குற்றம் இல்லை இல்லை என்றால் ஒரு குற்றமும் நிகழாது.

நாம்: சரிதான் ஐயா ...ஆகுல நீர பிற என்று சொல்லி இருக்கிறீர்களே, அது என்ன ?


வள்ளுவர்: ஆகுல என்றால் ஆராவரம் நிறைந்த என்று பொருள். நீர என்றால் தன்மை உடைய என்று பொருள். பிற என்றால் மற்றவை.


நாம்: கொஞ்சம் விளக்க முடியுமா ?


வள்ளுவர்:  ஒருவன் மனதில் மாசை, அதாவது குற்றத்தை வைத்துக் கொண்டு மற்ற அறங்களை செய்தால், அது மனக் குற்றத்தை மறைக்க செய்ததாகும். ஒரு குற்றத்தை மறைக்க ஆராவாரம், பகட்டு, விளம்பரம் என்று எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்.

மனதில் மாசு இல்லாதவன், விளம்பரம் வேண்டும் என்று கூட நினைக்க மாட்டான்...அவனிடம் ஒழுக்கம் இருக்கும், அன்பு இருக்கும், இரக்கம் இருக்கும், வேண்டாத படோபாடம் இருக்காது.

-------------------------------------

மனம் தான் எல்லாவற்றிற்கும் மூலம்.


விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்தஅன்பு ஆகிக், கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத, சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி,

என்பார் மாணிக்க வாசகர்.  மனம் விலங்கு போன்றது.  நல்லது கெட்டது தெரியாது.  சுயநலம் கொண்டது.