Friday, September 13, 2013

இராமாயணம் - இராமன் கானகம் போனதும் நல்லது தான்

இராமாயணம் - இராமன் கானகம் போனதும் நல்லது தான் 


இராமன், குகனை கண்டபின், கங்கை கரை கடந்து வனம்  புகுந்தான். அவனை தேடிக் கொண்டு வந்தான் பரதன்.  முதலில் பரதனைக் கண்டு, அவன் இராமனை கொல்லத்தான் வந்திருக்கிறான் என்று தவறாக நினைத்தான்  குகன்.பின் தெளிவு பெற்று "ஆயிரம் இராமர் நின் கேள்வர் ஆவரோ தெரியின் அம்மா " என்று கூறுகிறான்.

எல்லோரும் படகில் ஏறுகிறார்கள். கோசலையை கண்டு பரதனிடம் குகன் கேட்டான், "இந்தத் தாய் யார்" என்று.

பரதன் சொன்னான் "இந்த உலகை ஈன்றவனை ,  ஈன்றவள்.நான் பிறந்ததால் அவனை இழந்தவள்"  என்றான்.

கேட்டவுடன் குகன் அவள் காலில் விழுந்து கதறி  அழுதான்.

இங்கே ஒரு நிமிடம்  நிறுத்துவோம்.

ஏன் குகன் அழுதான் ?

ஒரே ஒரு நாள் இராமனைப் பார்த்த பின்  குகனால் இராமனைப் பிரிந்து இருக்க  முடியவில்லை.

"உன்னை இங்ஙனம் பார்த்த கண்களை ஈர்க்கலா கள்வன் யான்" என்று  கூறியவன். இராமனைப் பார்த்த கண்களை எடுக்க  முடியவில்லையாம்.அப்படி ஒரு நாள் பார்த்த என்னாலேயே அவனைப் பிரிந்து இருக்க முடியவில்லையே, பத்து மாதம் அவனை சுமந்து பெற்று வளர்த்த நீ எப்படித்தான் அவனை பிரிந்து இருக்கிறாயோ என்று நினைத்து அழுதான்.

அவன் அழுவதைப் பார்த்து கோசலைக்கு  ஆச்சரியம்.

அவனை யார் என்று பரதனிடம் கேட்டாள்.

பரதன் கூறினான் "இராமனுக்கு இனிய  துணைவன். எங்கள் எல்லோருக்கும்  மூத்தவன் " என்று.

கோசலை கூறுகிறாள்...

"இராமன் நாடு விட்டு காடு வந்ததும் நல்லதாகப் போயிற்று. அவன் கானகம் வரமால் இருந்திருந்தால், இப்படி பட்ட ஒரு நல்லவனை தம்பி கிடைத்திருப்பானா ? இனி நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாக இந்த அவனியை ஆளுங்கள் " என்றாள் .

கோசலை - சக்ரவர்த்தியின் பட்டத்து  மகாராணி. இராமனைப்  பெற்றவள். அவளின் பெருமை எவ்வளவு இருக்கும் ? குகனை யார் என்று கேட்டு  இருக்கிறாள். குகனை இதற்க்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது.  நீங்கள் ஐந்து பேரும் ஒன்றாக நாட்டை ஆளுங்கள்  என்கிறாள்.

இராமனின் அன்பு எங்கிருந்து வந்தது என்று இப்போது தெரிகிறதா ? அவனின் தாய் கோசலையிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

அவள் எவ்வளவு எளிமையானவளாய் இருந்திருக்க வேண்டும். எவ்வளவு  அன்பும்,பாசமும் உள்ளவளாய் இருந்திருக்க வேண்டும் ? அவளிடம் எவ்வளவு தாய்மை உணர்வு நிறைந்திருக்க வேண்டும் ?


பாடல்

நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்; நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங் காலம் அளித்திர்' என்றாள்


பொருள்


இராமாயணம் - சடாயு இறுதிக் கடன்

இராமாயணம் - சடாயு இறுதிக் கடன் 


இலக்கியத்தை அதன் கதைக்காக  படிக்கிறோம்.அதில் உள்ள கவிதை சுவைக்காக படிக்கிறோம். சொல் விளையாட்டுகள் பிடித்து இருக்கிறது.

ஆனால், அவை சொல்லும் செய்திகளை விட்டு விடுகிறோம்.

மிகப் பெரிய இழப்பில் இருக்கிறான் இராமன். சக்ரவர்த்தி பதவி போயிற்று.  நாட்டை விட்டு விரட்டி விட்டார்கள். மனைவியை எவனோ தூக்கிக் கொண்டு போய் விட்டான். தந்தையின் நண்பன் அவனுக்காக அடிபட்டு சாகக் கிடக்கிறான்.

நாமாக இருந்தால் எப்படி இருப்போம் ?  கோபம், எரிச்சல்,ஏமாற்றம், வெறுப்பு எல்லாம் வரும்.

அவ்வளவு சிக்கலிலும் இராமன் வாழ்ந்து  காட்டுகிறான்.

 குகனை, சுக்ரீவனை, விபிஷணனை சகோதரனாக கொள்கிறான். ஏன் ?

சடாயுவுக்கு இறுதி கடன் செய்கிறான் . ஏன் ?

தீண்டாமை, மனிதர்களுக்குள்  உயர்வு தாழ்வு பாராட்டுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதன் கூட அல்ல. ஒரு பறவையை தொட்டு தூக்கி, அந்தப் பறவையை தந்தை என நினைத்து அதற்க்கு இறுதி கடன் செய்கிறான். அந்த பறவையை அப்படியே விட்டு விட்டு சென்றிருந்தால் யாரும் இராமன் மேல் தவறு காண முடியாது.

இருந்தாலும், சடாயுவுக்கு இறுதி கடன் செய்கிறான்.

இராமன் சொல்லும் செய்தி - தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது. தீண்டத்தகாதவன் என்று யாரும் கிடையாது. எல்லோரும் இறைவனின் படைப்பு.

இதை படித்த பின்னும் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டினால், படித்ததன் பலன் தான் என்ன ?

பாடல்

ஏந்தினன் இரு கைதன்னால்; 
     ஏற்றினன் ஈமம்தன்மேல்; 
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; 
     தலையின் சாரல் 
காந்து எரி கஞல மூட்டி, கடன் 
     முறை கடவாவண்ணம் 
நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர 

     நெறியின் வல்லான்.

பொருள்


Wednesday, September 11, 2013

குறுந்தொகை - பிரிவுத் துயர்

குறுந்தொகை - பிரிவுத் துயர்

பிரிவுத் துயர் எவ்வளவு கடினமானது என்று அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

இருப்பு கொள்ளாது. எப்ப பாக்கப் போறோம், எப்ப பாக்க போறோம் என்று மனம் கிடந்து தவிக்கும். வெளியேயும் சொல்ல முடியாது. உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாது.

இங்கே பார்க்க மாட்டோமா, அங்கே பார்த்து விட மாட்டோமா என்று மனம் கிடந்து அலையும்.

பார்க்கும் இடம் எல்லாம் அவன் அல்லது அவளாகத் தெரியும்.

கூட்டமாக இருக்கும் இடம் எல்லாம் மனம் கவர்ந்தவனையோ, வளையோ மனம் கண்டு விட பர பரக்கும் .

காணாமல் சோர்ந்து போகும்.

அந்த பிரிவு துயரை தாங்கிக் கொள்ளவும் ஒரு வலு வேண்டும். எவ்வளவு நாள் தான் இந்த பிரிவைத் தாங்க முடியும் ?

குறுந்தொகையில் , தலைவி தலைவனை பிரிந்த துயரை தோழிக்கு சொல்கிறாள்.

அவள் ஊரில் மலைகள் உண்டு. அழகிய சோலைகள் உண்டு. அந்த சோலைகளில் வாழும் மயில்கள்,  பாறையோரம் முட்டை இட்டு வைத்து இருக்கும். அந்த முட்டைகளை, அங்கு உள்ள ஆண் குரங்கு குட்டிகள் பந்து என நினைத்து உருட்டி விளையாடும். அப்படிபட்ட குரங்குகளை கொண்ட நாட்டின் தலைவனை நட்பாக கொண்டேன். இன்று அவன் பிரிவு என்ன வாட்டுகிறது. இந்த பிரிவுத் துயரை ஆற்றல் உள்ளவர்களால் தான் தாங்க முடியும். (என்னால் முடியாது என்பது பொருள்)

பாடல்

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே.

பொருள்


திருக்குறள் - இரகசியமான ஆசைகள்

திருக்குறள் - இரகசியமான ஆசைகள் 


யாரிடம்தான் இரகசியமான ஆசைகள் இல்லை ? வெளியே சொல்ல முடியாத ஆசைகள் எல்லோர் மனத்திலும் இருக்கத்தான் செய்கிறது. குடும்பம், நண்பர்கள், சமுதாயம், சட்டம் இவை எல்லாம் ஒத்துக் கொள்ளாது என்று பூட்டி வைத்த ஆசைகள் மனதில் ஏதோ ஓரத்தில் உறங்கித்தான் கிடக்கிறது.

இது தவிர்க்க முடியாதது.

அவை எல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்து வராது. சொன்னால் யார் கேட்பார்கள். அது தவறு என்று எல்லோர்க்கும் தெரியும்....ஆனால் இந்த மனம் எங்கே கேட்கிறது ?

இதற்கு வள்ளுவர் என்ன சொல்கிறார்.

மிக மிக ஆச்சரியமான ஒரு கருத்தை சொல்கிறார்.

அந்த மாதிரி ஆசைகளை மற்றவர்கள் அறியாமல் அனுபவிக்கச் சொல்கிறார். இவைகள் ஒருவனுக்கு பலவீனம். பலவீனம் இல்லாத மனிதன் கிடையாது. ஆனால் அந்த பலவீனம் மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

நம்ப முடியாத அந்த குறள் ....



காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.


பொருள்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் = தான் விரும்பியவற்றை, தான் அவற்றை விரும்பி அனுபவிக்கிறேன் என்று மற்றவர் அறியாமல் அனுபவித்தால்




ஏதில ஏதிலார் நூல் = ஏதிலார் என்றால் பகைவர்கள் அல்லது நம்மோடு ஒத்து போகாதவர்கள். அவர்கள் நம்மை வஞ்சிக்க மாட்டார்கள். அதாவது நம் பலவீனத்தை  அவர்கள் தங்களுக்கு சாதகமாகக் கொள்ள முடியாது.


இதில் இன்னும் நுணுக்கமான அர்த்தம் உள்ளது.

காமம், வெகுளி, உவகை இவை எல்லாம் முற்றுமே விலக்க வேண்டிய குற்றங்கள் அல்ல என்கிறார் பரிமேலழகர். 

இதில் காமம் என்பதைத்தான் இந்த குறளில் குறிப்பிடுகிறார். 

காதல காதல் அறியாமை என்பது காமத்தை மட்டும் குறிப்பிடுவதாக பரிமேல் அழகர்  குறிப்பிடுகிறார். 

இரகசியமான காதல் மற்றும் காமத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. 

அதாவது, அதை முற்றாக விலக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லவில்லை. 

உய்தல் என்றால் மீண்டு வருந்தல், கடைந்தேறுதல் .

உய்வார்கள் உய்யும் வழியெல்லாம் உய்ந்து ஒழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவை என்பார் மணிவாசகர் 

காமத்தை மற்றவர்கள் அறியாமல் அனுபவித்து மீண்டு வா என்பது பொருள். 

இது அரசனுக்குச்  சொன்னது என்று சொல்லி முடிக்கிறேன்....:)


Monday, September 9, 2013

அபிராமி அந்தாதி - கற்ற கயவர்

அபிராமி அந்தாதி - கற்ற கயவர் 


அபிராமி அந்தாதியில் சில பல பாடல்கள், அந்த அந்தாதிப் பாடல்களை படிப்பதால் வரும் பலன்களையும், அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பற்றி கூறுகிறது.

அப்படி, அபிராமியை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளை கூறும் ஒரு பாடல்.

வாழ்க்கையில் அதிக பட்ச நேரம் அலுவலகத்தில், வேலை பார்ப்பதில் சென்று விடுகிறது. வேலை பார்பதும், சம்பாதிப்பதும், இல்லாதை இட்டு நிரப்புவதிலும் வாழ்க்கை மொத்தமும் போய் விடுகிறது. எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் பொதுவாக பெரும்பாலோனருக்கு அப்படித்தான் நடக்கிறது.


பாடல்

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு 
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் 
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் 
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.



இல்லாமை சொல்லி = இல்லை என்று சொல்லி,

ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று

இழிவுபட்டு = இழிவு பட்டு

நில்லாமை = நிற்காமல் இருக்க வேண்டும் என்று

நெஞ்சில் நினைகுவிரேல் = நெஞ்சில் நினைத்தால் 

நித்தம் நீடு தவம் = தினமும் நீண்ட தவம்

கல்லாமை = கல்லாத மடையர்கள்

கற்ற கயவர் = கற்ற கயவர்கள். கல்லாத கயவர்கள் என்று சொல்லவில்லை, கற்ற கயவர்கள் என்று சொல்கிறார்.  படித்தவன் தான் எல்லா அயோக்கியத்தனமும் செய்வான்

தம்பால் = அவர்களிடம்

ஒரு காலத்திலும் செல்லாமை = ஒரு போதும் செல்ல வேண்டியது இல்லாமல்

வைத்த = நம்மை அந்த இடத்தில் வைத்த

திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. = மூன்று உலகங்களுக்கும் தலைவியான அபிராமியின் பாதங்களைச்  சேருங்கள்

யாரிடமும் போய் கைகட்டி நிற்க வேண்டாம் - எனக்கு நிறைய சம்பளம் கொடு, எனக்கு பதவி உயர்வு கொடு என்று கேட்டு கஷ்டப்பட வேண்டாம்.

பணத்தையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்கிறார் பட்டர்.




திருக்குறள் - உலகம் என்பது என்ன ?

திருக்குறள் - உலகம் என்பது என்ன ?


குறள்

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் 
வகைதெரிவான் கட்டே யுலகு.

சீர்  பிரித்த பின்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு

பொருள்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் =  சுவை, ஒளி , ஊறு , ஓசை, நாற்றம்

என ஐந்தின் = என இந்த ஐந்தின்

வகை தெரிவான் கட்டே உலகு = வகைகளை தெரிவான் பக்கமே, இந்த உலகு.

அட, இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ? இது நமக்கே தெரியுமே...

வள்ளுவர் அவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டு போபவர்  அல்ல.

இந்த உலகம், நம் புலன்களைத் தாண்டி தனியாக ஏதாவது இருக்கிறதா ? நமக்கு ஐந்து புலன்கள்  இருக்கின்றன. எனவே நாம்  இந்த உலகை இந்த ஐந்து புலன்கள் வழியாக  உணர்கிறோம்.

ஒருவேளை நமக்கு ஆறு புலன்கள் இருந்திருந்தால், இந்த உலகை வேறு விதமாகப் நாம் உணர்ந்து இருப்போம்.

எது உண்மை ? இந்த புலன்களைத் தாண்டி ஏதேனும் உண்மை என்று இருக்கிறதா ?

சரி, புலன்கள் மட்டும் இருந்தால் போதுமா ? குருடனுக்குக் கூட கண் இருக்கிறது. பார்க்க முடியவில்லை.  செவிடனுக்கு காது இருக்கிறது. கேட்க்க முடியவில்லை. புலன்கள் மட்டும் இருந்தால் போதாது, அவற்றை இயக்கம் புத்தி, மூளை, மனம் என்று ஏதோ ஒன்று வேண்டும்.

புலன்கள் ஐந்து . இவற்றை கர்மேந்திரியங்கள் என்று சொல்கிறார்கள்.

அந்த புலன்களை இயக்கம் அறிவு ஐந்து.  இவற்றை ஞானேந்திரியங்கள் என்று சொல்கிறார்கள்.

புலன்களுக்கு வந்து சேரும் உணர்வுகள் ஐந்து - சுவை, ஒளி , ஊறு , ஓசை , நாற்றம்  என்று ஐந்து விதமான உணர்வுகள்.

இந்த ஐந்து வித உணர்வுகளை உருவாகும் பொருள்களின் தன்மை அல்லது இயல்பு ஐந்து. ஒரு பொருள் சுவையாக இருக்கலாம், சூடாக இருக்கலாம் ...


பொருள்கள் ஐந்து விதம்
அவற்றின் குணங்கள் ஐந்து விதம்
அவற்றை அறியும் நமது புலன்கள் ஐந்து விதம்
அந்த புலன்களை இயக்கம் அறிவின் கூறு ஐந்து விதம்

இந்த இருப்பதை அறியும் அவனைத் தாண்டி உலகம் என்று ஒன்று இல்லை.

இந்த கட்டுக்குள் இருப்பதுதான் உலகம்.

பன்னிய உலகினில் பயின்ற பாவத்தை
நன்னி நின்று அறுப்பது நமச்சிவாயவே என்பார் நாவுக்கரசர்.

நாம் பன்னிய உலகம் இது.

நாம் உருவாக்கிய உலகத்தோடு நாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.



Sunday, September 8, 2013

குறுந்தொகை - நனைந்த பாறைகள்

குறுந்தொகை - நனைந்த பாறைகள் 


மழை !

மழையைக் கண்டால் எல்லோரும் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். குடைக்குள் மறைந்து கொள்கிறார்கள்.

எத்தனை பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும் ?

மழை முதலில் உடையை நனைக்கும்...பின் உடலை ...பின் உயிரை நனைக்கும்.

மழை விட்ட பின், ஊரே கழுவி விட்ட மாதிரி சுத்தமாக இருக்கும். இலைகள் எல்லாம் பளிச்சென்று இருக்கும். காற்றில் ஈரம் காதோரம் கவிதை சொல்லும்.

அது ஒரு சின்ன கிராமம். அவனும் அவளும் ஊருக்கு வெளியே அடிக்கடி சந்திப்பார்கள். யார் கண்ணிலும் படாமல் இருக்க அங்கிருக்கும் பெரிய பாறைகளுக்கு பின்னே மறைவாக அமர்ந்து பேசுவார்கள், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயல்வார்கள்...

கொஞ்ச நாளாக அவன் வரவில்லை. அவனைத் தேடி அவள் போகிறாள். அவர்கள் அமர்ந்திருந்த ஒவ்வொரு பாறையாக சென்று பார்க்கிறாள்.

அவர்கள் வருவார்களோ இல்லையோ, காத்திருப்பது ஒரு சுகம். அதிலும் மழையில் காத்திருப்பது இன்னும் சுகம்.

அவள் காத்து இருக்கிறாள்.

மழை அன்றும் பெய்தது.

பெய்து ஓய்ந்தது.

அங்கிருந்த பாறைகள் எல்லாம் குளித்து வரும் யானை போல பள பளப்பாக இருக்கிறது.

அவளோட தோழி கேட்க்கிறாள் "எங்கடி போயிட்டு வர்ற..இந்த மழையில் ?"

"அவனைத் தேடித்தான்...ஒரு வேளை வருவானோ என்று காத்து இருந்தேன்...வரலை " என்றாள்.

அவள் கண்ணில் வருத்தம் ஒரு புறம், இன்னொரு புறம் அவனுக்காக காத்திருந்த காதல் ஒரு புறம்....அதைத்தான் பசலை என்கிறார்களோ....

பாடல்


மாசுஅறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே- தோழி!
பசலை ஆர்ந்த , நம் குவளை அம் கண்ணே.

பொருள்

மாசுஅறக் = தூசி இல்லாத

கழீஇய = கழுவி விட்ட


யானை போலப் = யானையைப் போல

பெரும்பெயல் = அடித்துப் பெய்த மழையில்

உழந்த = அங்கும் இங்கும் அலையும்

இரும்பிணர்த் = கரிய, கரடு முரடான

துறு கல் = பெரிய பாறைகள்

பைதல் = நனைந்த, ஈரமான

ஒருதலைச் சேக்கும் = அந்த பாறைகளின் மறுபக்கம் என்னை சேர்க்கும். ஒருதலை என்றால் ஒரு பக்கம். பாறையின் அந்தப் பக்கம்.

நாடன் = அந்த ஊர்க் காரன்

நோய் தந்தனனே = காதல் எனும் நோய் தந்தான். பிரிவு எனும் நோய் தந்தான்.

தோழி! = தோழி

பசலை ஆர்ந்த = பசலை படர்ந்தது

 நம் குவளை அம் கண்ணே = குவளை போன்ற என் அழகிய  கண்ணே


காலம் காலமாக , இந்த காதல் பயிரை , மழைதான் நீர் விட்டு வளர்த்து இருக்கிறது.