Tuesday, February 18, 2014

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை

நீத்தல் விண்ணப்பம் - ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை




 நமக்கு ஒரு பொருள் சொந்தம் என்றால் அதை நாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் அல்லவா ?

அதை அனுபவிக்கலாம், விக்கலாம், அடமானம் வைக்கலாம்...நம் இஷ்டம் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்.

தன்னையே இறைவனுக்கு கொடுத்துவிட்ட மாணிக்க வாசகர்  சொல்கிறார்.

"இனி நான் உன் பொருள். என்னை நீ ஆண்டுகொள், விற்றுக் கொள், அடமானம் வை...என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இந்த பிறவிப் பிணிக்கு மருந்து போன்றவனே, என்னை கை விட்டு விடாதே " என்று கெஞ்சுகிறார்.

பாடல்

இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.


பொருள் 

இருந்து என்னை = இங்கிருந்து என்னை

ஆண்டுகொள் = ஆட்கொள்

விற்றுக்கொள் = விற்றுக் கொள்

ஒற்றி வை = ஒத்தி வைப்பது என்றால் அடமானம் வைப்பது

என்னின் அல்லால் = இது போல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்

விருந்தினனேனை = விருந்து என்றால் எப்பவாவது வருவது. அடிக்கடி வருவது விருந்து அல்ல. நாம் பக்தி செய்வது, கோவிலுக்குப் போவது எல்லாம் எப்பவாவது தானே. எனவே விருந்தினேனை  என்றார்.


(இராமாயணத்தில் இராம இலக்குவனர்களை ஜனகனுக்கு அறிமுகம் செய்யும் போது "விருந்தினர்" என்று அறிமுகம் செய்வான். இவர்கள் வைகுந்தத்தில் இருப்பவர்கள். எப்பவாவது இந்தப் பக்கம் வருவார்கள் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில்


இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்!' என்ன,
'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணிய வந்தார்; வில்லும் காண்பார்;

பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என, அவர் தகைமை பேசலுற்றான்)


 விடுதி கண்டாய்? = விட்டு விடாதே

 மிக்க நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுதா அருந்தினனே= அமுதம் போல அருந்தியவனே. நான் கெட்டவன் தான். ஆனால் நீ தான் விஷத்தையே அமுதமாக ஏற்றுக் கொண்டவன் ஆயிற்றே. என்னையும் ஏற்றுக் கொள்.

 மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே = மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே

மருந்தினனே = மருந்து போன்றவனே

பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே = பிறவி என்னும் பிணியில் கிடந்து உழல்பவர்கே

நோய், பிணி என்று இரண்டு சொல் உண்டு.

நோய் வந்தால் போய் விடும்.

பிணி போகாது.

பசிப் பிணி என்பார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

பிறவியும் ஒரு பிணி தான். மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். அந்த பிறவிப் பிணிக்கு மருந்து அவன்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் 
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே! 

பணியேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.

என்பார் அபிராமி பட்டர்


Monday, February 17, 2014

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளே

நீத்தல் விண்ணப்பம் - மெய்ம்மையார் விழுங்கும் அருளே



முந்தைய பாடலை பொருளே என்று முடித்தார். இந்த பாடலை பொருளே என்று  ஆரம்பிக்கிறார்.


"பொருளே, நான் வேறு எங்கு போவேன் உன்னை விட்டு. உன்னை விட்டால் எனக்கு ஒரு புகலிடம் இல்லை. உன் புகழை இகழ்பவர்களுக்கு அச்சம் தருபவனே, என்னை விட்டு விடாதே. உண்மையானவர்கள் விழுங்கும் அருளே. உத்திர கோச மங்கைக்கு அரசே, இருளே. வெளியே. இம்மை மறுமை என்று இரண்டுமாய் இருப்பவனே. "

பாடல்

பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

பொருள் 

பொருளே = பொருளே. "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே"

தமியேன் = தனியனாகிய  நான்

புகல் இடமே = புகல் அடையும் இடமே

நின் புகழ் இகழ்வார் = உன் புகழை இகழ்பவர்களுக்கு

வெருளே = அச்சமே

எனை விட்டிடுதி கண்டாய்? = என்னை விட்டு விடாதே

மெய்ம்மையார் = உண்மையானவர்கள்

விழுங்கும் அருளே = விழுங்கும் அருளே

அணி பொழில் = அழகிய சோலைகள் நிறைந்த

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

இருளே = இருளே

வெளியே = வெளிச்சமே

இக = இம்மை

பரம் = மறுமை

ஆகி இருந்தவனே = ஆகிய இரண்டுமாய் இருப்பவனே

அது என்ன அருளை விழுங்கும் அன்பர்கள் ? 

அவ்வளவு ஆர்வம். அவளை கண்ணாலேயே விழுங்கினான் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா. அவளைத் தனக்குள் இருத்திக் கொள்ள விரும்புகிறான். அவளை விட்டு எந்நேரமும் பிரிய மனமில்லை அவனுக்கு. அதற்காக  அவளை வாயில் போட்டு விழுங்கவா முடியும். விழியால் விழுங்கினான். 

அது போல இறைவன் அருளை விழுங்கினார்கள் என்றார். பின்னொரு பாடலில்  "விக்கினேன் வினையுடையேன்" என்பார். 

தாகம் எடுத்தவன், நீரைக் கண்டவன் அவசரம் அவசரமாக பருகத் தலைப் படுவான். கொஞ்சம் கொஞ்சாமாக குடிக்க மாட்டான். அவன் உடலில் ஒவ்வொரு அணுவும்  "நீர் நீர் " என்று தவிக்கும். தண்ணீரைக் கண்டவுடன் அப்படியே எடுத்து விழுங்குவான். அது போல அருள் வேண்டித் தவிப்பவர்கள் அது கிடைத்தவுடன்  எடுத்து விழுங்கினார்கள். 

இருளே வெளியே : இருள் வெளிச்சம் என்பது எல்லாம் குறியீடுகள். ஆன்மீக உலகில்  இருள் என்பது அறியாமை. வெளிச்சம் என்பது ஞானம், அறிவு. 

அவன் எல்லாமாக இருக்கிறான் என்றால் அறியாமையாகவும் இருக்கிறான். 

குழந்தை அப்பாவின் முதுகில் யானை ஏறி விளையாடும். குழந்தைக்குத் தான் தெரியாது. அப்பாவுக்குமா தெரியாது. நானாவது யானையாவது என்று குழந்தையிடம்  சண்டை பிடிப்பது இல்லை. அவரும் யானை போல  நடிப்பார்.வெளியில் இருந்து  பார்த்தால் அப்பாவுக்கு அறிவில்லை என்று தான் தோன்றும். குழந்தையின் மகிழ்ச்சிக்கு அவர் தன் அறிவை சற்று விலக்கி வைத்து   நடிக்கிறார்.

குழந்தை பொம்மை கேட்கும். இந்த பொம்மையில் என்ன இருக்கிறது என்று அப்பா குழந்தையிடம்  கேள்வி கேட்பது இல்லை. 

புலன் இன்பங்கள் நமக்கு பொம்மைகள். அந்த பொம்மை இல்லாமல் குழந்தை வளர முடியாது. 

விளையாடி விட்டு தூக்கி வைத்து விட வேண்டும். 

இறைவன் ஏன் நமக்கு அறியாமையை தந்தான் என்று கேட்க்கக் கூடாது. வளர்ச்சியில் அதுவும் ஒரு படி. 

இருளே வெளியே இக பரமாக இருந்தவனே....


Sunday, February 16, 2014

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய்

கந்தர் அலங்காரம் - கூற்றுவன் பிடிக்கும் போது அஞ்சல் என்பாய் 


ஒரு ஊருக்குப் போக வேண்டும் என்றால் இரயிலிலோ, விமானத்திலோ முன் பதிவு செய்து கொள்வது புத்திசாலித்தனம். இல்லை என்றால் கடைசி நேரத்தில் இருக்க இடம் கிடைக்காமல் அல்லல் பட நேரிடும்.

வேறு ஏதாவது காரியம் செய்ய வேண்டும் என்றால் முன் கூட்டியே அதைப் பற்றி திட்டமிட்டு செய்வது நலம்.

மரணம் என்று ஒன்று வரும்.  அதற்கு என்ன திட்டம் இட்டு வைத்து இருக்கிறோம் ? ஏதோ அப்படி ஒன்று நிகழவே போவது இல்லை என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அருணகிரியார் நமக்கு அதை நினைவு  படுத்துகிறார்.

மரணம் வரும். கூற்றுவன் வருவான். பாசக் கயிறை வீசுவான். அப்போது அவனிடம் இருந்து யார் நம்மை காக்க முடியும் ? முருகா, நீ தான் எனக்கு "அஞ்சாதே" என்று ஆறுதல் சொல்ல முடியும். அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு திருப்புகழை படித்து போற்றுவேன்.

பாடல்

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை

இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.

பொருள்

படிக்கும் = படிக்கும்

திருப்புகழ் = திருப்புகழ், சிறந்த புகழ், என்று அழியாத புகழ்

போற்றுவன் = போற்றுவேன்

கூற்றுவன் = உடலையும் உயிரையும் கூறு போடுபவன், கூற்றுவன்

பாசத்தினாற் = பாசக் கயிற்றால்

பிடிக்கும் பொழுது = என்னை வந்து பிடிக்கும் போது

வந்து = என் எதிரில் வந்து

அஞ்லென் பாய் = அஞ்சல் என்பாய்

பெரும் பாம்பினின்று = பெரிய பாம்பின் மேல் நின்று

நடிக்கும் = நடனமாடும்

பிரான் = கண்ணன், திருமால்

மருகா = மருமகனே

கொடுஞ் = கொடுமையான

சூரனடுங்க = சூரன் நடுங்க

வெற்பை = மலையை


இடிக்கும் = இடிக்கும், பொடித்து துகள் துகளாக்கும் 

கலாபத் = தோகை  உள்ள

தனி மயில் = தனித்துவம் உள்ள மயில் (special )

 ஏறும் இராவுத்தனே = ஏறும் இராவுத்தனே 

இராவுத்தன் என்றால் முஸ்லிம் அல்லவா ? குதிரை விற்பவனை , குதிரை வண்டி ஓட்டுபவனை இராவுத்தன் என்று சொல்லலாம். முருகன் மயில் மேல் அல்லவா வருகிறான் ? அவனை எப்படி இராவுத்தன் என்று சொல்லலாம் ?

ஒரு காலத்தில், மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் குதிரை விற்பவனாக  வந்து குதிரை  விற்றார். அந்த தகப்பனுக்கு மகன் தானே  இவன்.எனவே குதிரை விற்பவனின் மகன்  இராவுத்தன். 

எதற்கு சம்பந்தம் இல்லாமல் பாம்பின் மேல் ஆடும் மருகன், மயில் மேல் வரும் முருகன் என்று  சொல்கிறார் ?

இவை எல்லாம் ஒரு குறியீடுகள்.

பாம்பு புஸ் புஸ் என்று சீரும். பெரிதாக காற்றை வெளியே விடும். அப்படி புஸ் புஸ் என்று சீரும்  பாம்பை அடக்கி வைப்பது மயில். 

பிராண வாயுவின் ஓட்டத்தை கட்டுப் படுத்தினால் மரண பயம் வராது. 

மூச்சு சீரானால் , கட்டுப் பட்டால் மனம்  வசமாகும்.

மனம் வசமானால் பயம் நீங்கும். பயத்தில் பெரிய பயம் மரண பயம். அதுவும் நீங்கும். 





திருக் கோத்தும்பீ - பொய்யான செல்வம்

திருக் கோத்தும்பீ - பொய்யான செல்வம் 


செல்வம் வேண்டும் என்று நாளும் அலைகிறோம் . அதற்குத்தானே இத்தனை ஓட்டமும். அலைச்சலும்.

செல்வம் கிடைத்து விட்டால் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி எல்லாம் வந்துவிடும் என்று நினைக்கிறோம்.

அப்படி, ஓடி ஆடி அலைந்து செல்வத்தை பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?

அது அவர்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தந்திருக்கிறதா ?

பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்க வாசகர். பணமும், அதிகாரமும் தேவைக்கு அதிகமாகவே இருந்திருக்கும்.

அதையெல்லாம் பொய் என்கிறார் மணிவாசகர்.

பாடல்

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பொருள்


பொய்யாய = பொய்யான

செல்வத்தே = செல்வங்களை

புக்கழுந்தி = புக்கு அழுந்தி

நாள்தோறும் = நாள் தோறும்

மெய்யாக் கருதிக் = உண்மைய என்று கருதி

கிடந்தேனை = இருந்தவனை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

ஐயா = ஐயா 

என் ஆரூயிரே = ஏன் ஆருயிரே

அம்பலவா  = அம்பலத்தில் ஆடுபவனே

என்றவன்றன் = என்று அவன் தன்

செய்யார் மலரடிக்கே = சிவந்த தாமரை போன்ற மலரடிகளுக்கே

சென்றூதாய் = சென்று ஊதாய் 

கோத்தும்பீ. = கோ+தும்பீ = அரச தும்பியே

செல்வம் நில்லாதது. அதனால் தான் அதற்கு "செல்வம்" ...எப்ப வேண்டுமானாலும் செல்வோம் என்று அது சொல்லாமல் சொல்கிறது.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

என்பது வள்ளுவம்.



கம்ப இராமாயணம் - நாள் படா மறைகள்

கம்ப இராமாயணம் - நாள் படா மறைகள் 



அனுமன் , இராமனையும் இலக்குவனையும் முதன் முதல் சந்திக்கிறான். அவர்களுக்குள் அறிமுகம் நடக்கிறது. இராமனும் அனுமனும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்கிறார்கள்.

அனுமன் தன் விஸ்வரூபத்தை காட்டுகிறான்.

இராமாயணத்தில் இராமனுக்கு விஸ்வரூபம் இல்லை. அனுமனுக்கு இருக்கிறது.

அனுமனின் விஸ்வரூபத்தை கண்டபின் , இராமன் அனுமனை பரம்பொருள் என்கிறான். பரம்பொருள் என்று நேரடியாக கூறவில்லை....பரம்பொருள் தத்துவம் என்று கூறுகிறான்.

அருமையான பாடல்


தாள்படாக்கமலம் அன்ன தடங் கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர் படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய! குரக்கு உருக்கொண்டது' என்றான்.


பொருள்

தாள்படாக்கமலம் அன்ன தடங் கணான் = தாள் என்றால் தண்டு. இராமனின் கண்கள் தாமரை மலர் போல் இருக்கிறது. ஆனால் தண்டு இல்லாத தாமரை. ஏன் என்றால், தண்டு உள்ள தாமரை ஒரே இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். இராமனோ எல்லா இடங்களிலும் இருக்கிறான். எனவே, தாள் படா கமலம்.


 தம்பிக்கு = இலக்குவனுக்கு

அம்மா! = ஆச்சரியக் குறி

கீழ்ப் படாநின்ற நீக்கி = கீழான குணங்களை நீக்கி

கிளர் படாது ஆகி = ஒளி கெடாமல். கிளர்ந்து எழும் ஞான ஒளி குறையாமல்

என்றும் = என்றென்றும்

நாட்படா மறைகளாலும் = காலத்தால் அழியாத, என்றும் புதுமையாக இருக்கும் வேதங்களாலும்

 நவை படா ஞானத்தாலும் = குற்றம் இல்லாத ஞானத்தாலும்

கோட்படாப் பதமே = அறிந்து கொள்ள முடியாத பதமே

ஐய! = ஐயனே

குரக்கு உருக்கொண்டது' என்றான் = குரங்கு உருக் கொண்டது என்றான்

வேதங்களாலும் அறிந்து கொள்ள முடியாத பாதம் அனுமனின் பாதம்.

சொல்லியது இராமன்.


Saturday, February 15, 2014

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம்

திருப்பாவை - அருள் எனும் வெள்ளம் 



காதல் என்பது கொடுப்பது. பெறுவது அல்ல.

ஒரு தாய், தன் பிள்ளைக்கு பால் அமுது ஊட்டுவது போல. அந்த கைக் குழந்தையிடம் அவள் என்ன எதிர்பார்ப்பாள் ? ஒன்றும் இல்லை. அவளின் அளவு கடந்த அன்பினால் அந்த குழந்தைக்கு அவள் பால் தருகிறாள்.

சில சமயம் குழந்தை உடல் நலக் குறைவால் பால் குடிக்காது. குழந்தை பால் அருந்தாத அந்த நாட்களில் அந்த தாய் படும் வேதனை அவளுக்குத்தான் தெரியும். குழந்தைக்கென்று சுரந்த பால், குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் கட்டிக் கொள்ளும். அவளுக்கு மிகுந்த வேதனையைத் தரும். சில சமயம், அந்தப் பாலை கிண்ணத்தில் பெற்று தூர ஊத்தி விடுவது கூட உண்டு. பால் தராமல் அவளால் இருக்க முடியாது.

அது போல, பிள்ளைகளுக்குத் தருவதற்கு என்று ஆண்டவன் அருளை தன் மனம் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். பல சமயம் நாம் தான் அவற்றை பெற்றுக் கொள்வதில்லை. பால் அருந்தாத குழந்தையைப் போல.

அருள் வெள்ளம் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஆண்டாள் அந்த அருளின் பல வடிவங்களை காட்டுகிறாள்..எப்படி அது உயிர்களுக்கு உறுதி செய்கிறது என்று. அவள் பார்வையில் இறைவனின் அருள் எங்கும் பொங்கி பரவிக் கிடக்கிறது.

பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

ஓங்கி உலகளந்த = ஓங்கி உலகை அளந்த

உத்தமன் பேர்பாடி = உத்தமனாகிய திருமாலின் பேரைப் பாடி

நாங்கள் = நாங்கள் 

நம் = நம்முடைய

பாவைக்குச் சாற்றி = பாவைக்கு நோன்பு மேற்கொண்டு

நீ ராடினால் = நீராடினால்

தீங்கின்றி = ஒரு தீங்கும் இன்றி

நாடெல்லாம் = நாடெங்கும்

திங்கள்மும் மாரிபெய்து = மாதம் மூன்று முறை மழை பொழிந்து

ஓங்கு பெறும்செந் நெல் = ஓங்கி வளர்ந்த நெல் பயிர்களின்

ஊடு = ஊடே , இடையில் 

கயலுகளப் = கயல் என்ற மீன் அசைந்து ஓட

பூங்குவளைப் போதில் = குவளை மலரில்


பொறிவண்டு கண்படுப்பத் = வண்டுகள் கண் அயர்ந்து தூங்க

தேங்காதே = அஞ்சி, பயந்து 

புக்கிருந்து = உள்ளிருந்து  

சீர்த்த முலைபற்றி வாங்க  = சீரிய முலைகளைப் பற்றி

 குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் = குடங்களை நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் = என்று நீங்காத செல்வம் 

நிறைந்தேலோர் எம்பாவாய். = நிறையட்டும் என் பாவையே

மழை நன்றாகப் பெய்கிறது. வயல்கள் எல்லாம் நிறைந்து விட்டன. நெல் வயல்களில்  மீன்கள் விளையாடுகின்றன. இருந்தும் அவை குவளை மலர்களை  தொந்தரவு செய்யவில்லை. அதில் வண்டுகள் நிறைய தேன் குடித்து விட்டதால் கண் அயர்ந்து தூங்குகின்றன.

மழை நன்றாகப் பெய்ததால் ஊரில் புல் நன்றாக விளைந்திருக்கும். அவற்றை உண்ட பசுக்கள் மடி நிறைய பாலை சுமந்து கொண்டிருக்கும்.

பசுக்களின் மடியைத் தொட்டால் எங்கே அவை பாலை குடம் குடமாக தந்து அவை வழிந்து இல்லமெல்லாம் சேறு ஆகி விடுமோ என்று தயங்கி தயங்கி அவற்றின் மடியைப் பற்றினால், உடனே அவை குடங்களை நிறைத்து விடுமாம்.

இறைவனிடம் கொஞ்சம் கேட்டால் போதும் அவன் குடம் குடமாக நிறைத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் பாடல்.

அருளை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான் ? கேளுங்கள்.



கம்ப இராமாயணம் - இலை கூடத் துடிக்காது

கம்ப இராமாயணம் - இலை கூடத்  துடிக்காது 


வாலியின் அரசாட்சி நடக்கிறது. எப்படி தெரியுமா ?

அவனுக்கு சத்தம் கேட்டால் பிடிக்காது.

அதனால், அவன் ஊரில் மழை பெய்யும் போது இடி இடிக்காது.

அங்கு, குகைளில் உள்ள சிங்கங்கள் கர்ஜனை செய்யாது. அந்த சிங்கங்களுக்கு வாலியின் மேல் பயம்.

எங்கே காற்றடித்து அதனால் இலைகள் அசைந்து அந்த சத்தம் கேட்டால் வாலி கோவிப்பானோ என்று பயந்து காற்று கூட இலைகள் வேகமாக அசையாமல் மெல்ல அசையும் படி வீசுமாம்.

அப்படி ஒரு பலசாலி

பாடல்


மழைஇடிப்பு உறா; வய
     வெஞ் சீய மா
முழை இடிப்பு உறா;
     முரண் வெங்காலும் மென்
தழை துடிப்புறச் சார்வு
     உறாது; - அவன்
விழைவிடத்தின்மேல்,
     விளிவை அஞ்சலால்.


பொருள்

மழை இடிப்பு உறா = மழை பெய்யும் போது இடி இடிக்காது 

வய = வலிமை மிக்க

வெஞ் = வெம்மையான

சீய மா = சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் 

முழை  = குகையில்

இடிப்பு உறா = கர்ஜனை செய்யாது

முரண் = வலிய

வெங் காலும் = பலமாக வீசும் காற்று (கால் என்றால் காற்று)

மென் தழை = மென்மையான தளிர் இலைகள் 

துடிப்புறச் = துடித்தால்

சார்வு உறாது = பக்கத்தில் கூட வராது

அவன் = வாலி

விழை விடத்தின்மேல் = விழைந்து (விரும்பி) இருக்கும் இடத்தின் மேல்

விளிவை அஞ்சலால் = முடிவை எண்ணி அஞ்சுவதால் (வாலியின் கோபத்தால்)

அவ்வளவு பெரிய ஆள் - வாலி