Thursday, July 31, 2014

திருபூவல்லி - சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்

திருபூவல்லி - சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் 


வாழ்க்கைக்குத் துணை அவசியம்.

யார் அல்லது எது துணை என்பதில்தான் சிக்கல்.

பிள்ளைகள் துணையா ? அவர்கள் வாழ்க்கை வேறு போக்கில் போய் விடும். அவர்களை நம்பி பயன் இல்லை. கடைசிக் காலத்தில், அவர்களின் வேலையையயும் குடும்பத்தையும் விட்டு விட்டு நம் பக்கம் வந்து  இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மதியீனம்.

அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமன், மச்சான் என்ற உறவுகள் எல்லாம்  பேருக்குத்தான்.

கணவன் மனைவி - முடியலாம். வயதான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் பாரம்தான். ஒருவேளை சகித்துப் போகலாம்.


ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற 
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும் 
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே 
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! 

என்பது பட்டினத்தார் வாக்கு 


மாணிக்க வாசகர் கூறுகிறார்....

இறைவா நீ உன் திருவடிகளை என்   தலை மேல் வைத்த பின் எனக்கு துணை என்று இருந்த சுற்றங்கள் அத்தனையும் துறந்து  விட்டேன். அப்பேற்பட்ட சிவனின்  பெருமைகளைப் பாடி நாம் பூ கொய்வோம்

பாடல்

இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

பொருள்

இணையார் திருவடி = இணையான இரண்டு திருவடிகளை

என்தலைமேல் = என் தலைமேல்

வைத்தலுமே = வைத்தவுடன்

துணையான சுற்றங்கள் = துணையான சுற்றங்கள்

அத்தனையுந் = அனைத்தையும்

துறந்தொழிந்தேன் = துறந்தேன்

அணையார் = அணையில் உள்ள

புனற்றில்லை = நீர் ஆடும் தில்லை

அம்பலத்தே ஆடுகின்ற = அம்பலத்தே ஆடுகின்ற

புணையாளன் = துணைவன்

சீர்பாடிப் = பெருமைகளைப் பாடி

 பூவல்லி கொய்யாமோ = நாம் பூ கொய்வோம்

இறைவனின் திருவடிகள் என்று நம் மதம் கூறுவது ஒரு குறியீடு. திருவடி என்பது ஞானம்.

ஞானம் வரும்போது பற்றுகள் அகலும்.

திருவடி என்பது ஞானம் என்பது சரியா ?

மேலும் சில பாடல்களைப் பார்ப்போம்.







Wednesday, July 30, 2014

தேவாரம் - என் வேதனையை விலக்கிடாய்

தேவாரம் - என் வேதனையை விலக்கிடாய் 


மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனின் ஆணவம்.

நான் , எனது என்ற ஆணவமே அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்.

நான் பெரியவன் - இறுமாப்பு

என்னைப் பற்றி தவறாகச் சொன்னால் - கோபம் வருகிறது

எனக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வருகிறது

என்னை மதிக்க வில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை

நான் உண்மையில் பெரிய ஆள் இல்லையோ என்ற சந்தேகம்

என் உடமைகளை யாரும் கவர்ந்து கொள்வார்களோ என்ற பயம்

என்னைத் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்

அவள் எனக்குத் தான் சொந்தம் என்ற காமம்

அது எனக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற தவிப்பு

நான் செய்த தவறு மற்றவர்களுக்குத் தெரிய வந்தால் என் மதிப்பு என்ன ஆகும் என்ற கவலை

என்று நமக்கு வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் ஆணவம்.

ஆணவ மலம் ஆதி மலம். குழந்தையாக இருக்கும்போதே நம்மோடு வந்து  விடுகிறது.

தேவாரத்தில், அப்பர் ஸ்வாமிகள் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது  பாட்டில்  இராவணனை  குறித்து  பாடுவார்.

இராவணன் ஆணவத்தின் உச்சம். அவனுக்கே அருள் புரிந்தாயே எனக்கும் அருள் புரி என்ற வேண்டுதலாக இருக்கும் அந்த பாடல்கள்.

நாம் ஒன்றும் இராவணனுக்கு குறைந்தவர்கள் அல்ல. அவனுக்கு பலம் இருந்தது, ஆணவமும் இருந்தது.

நாம் பலம் இல்லாமலேயே அவனை விட அதிகம் ஆணவம் கொண்டு அலைகிறோம் .

அவனை விட பெரிய ஆணவக்காரார்கள் நாம்.

அப்பர் குறிப்பிடும் இராவணன் நாம் தான் என்று எண்ணிப் பார்த்தால் பதிகம்  விளங்கும்.


பாடல்

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங்காநட மாடவல்லாய்

ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்

வேர்த்தும்புரண்டும்விழுந் தும்எழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்

ஆர்த்தார்புனல் சூழ்அதிகைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

சீர்  பிரித்த பின்

போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்! புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!

ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால், என் வேதனை ஆன விலக்கியிடாய்-

ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

பொருள்

போர்த்தாய் = போர்த்திக் கொண்டாய். உடுத்திக் கொண்டாய்

அங்கு = அங்கு

ஒர் ஆனையின் = ஒரு யானையின்

ஈர் உரி-தோல்! = உரித்த தோலை

புறங்காடு = புறத்தே இருக்கும் காடு, சுடுகாடு

அரங்கா = அதை அரங்கமாகக் கொண்டவனே

நடம் ஆட வல்லாய் = நன்றாக நடனம் ஆட வல்லாய்

ஆர்த்தான் = ஆரவாரித்தான்

அரக்கன் தனை = இராவணன் தன்னை

மால் வரைக் கீழ் = கயிலை மலையின் கீழ்

அடர்த்திட்டு = நழுக்கி, அழுத்தி

அருள் செய்த  அது கருதாய் = பின் அருள் செய்த அதை நினைக்க மாட்டாய்

வேர்த்தும் = வியர்த்து

புரண்டும் = புரண்டு

விழுந்தும் எழுந்தால் = விழுந்தும் எழுந்தால்

என் வேதனை ஆன விலக்கியிடாய் = என் வேதனைகளை விலக்க மாட்டாய்

ஆர்த்து ஆர் புனல் சூழ் = பொங்கி வரும் நீர் சூழ்ந்து வரும்

அதிகைக் = திருவதிகை என்ற திருத் தலத்தில்

கெடில = கெடில நதிக் கரையில்

வீரட்டானத்து உறை அம்மானே = எட்டு வீரட்டானங்களுள் ஒன்றான அங்கு வாழும் என் அம்மானே

ஆணவம் துன்பத்தைத்  தரும்.

ஆண்டவனிடம் சரண் அடைவது அந்த ஆணவத்தைப்  போக்கும்.

நாம் சரண் அடைவதால் அவனுக்கு ஆகப் போவது என்ன.

நம் ஆணவம் குறையும். அதனால் துன்பம் குறையும்.

துன்பங்களைத் தாங்கும் மனபலம் வரும்.

கைலாய மலையைத் தூக்கிய இராவணன் துன்பப் பட்டான் என்றால் நாம் எம்மாத்திரம்.

ஆணவம் மனிதனை அளவுக்கு அதிகமாக ஆட வைக்கிறது. மலையைத் தூக்கினால்  என்ன என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திப்போம்



Monday, July 28, 2014

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை 


ஒருவனுக்கு ஒரு வேலை வரவில்லை என்றால் விட்டு விடவேண்டும். வரதா ஒன்றை செய் செய் என்று அவனை வற்புறுத்தக் கூடாது. அப்படி வற்புறுத்தாமல் இருப்பது இனிமையானது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற நினைவோடு வாழ்ந்தால் நல்லதே செய்யத் தோன்றும். எப்போது வேண்டுமானாலும் போய் விடுவோம். இருக்கும் வரை நாலு நல்லது செய்துவிட்டு போவோம். வாழ்வு ஒரு நாள் முடியும். கூற்றுவன் வருவது நிச்சயம் என்று எண்ணி வாழ்வது இனிமை.

இன்பமும், துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வம் வருவதும், போவதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும். செல்வம் குறைந்த போது அறம் அல்லாதவற்றை கூறாமல் இருப்பது நலம்.

பாடல்

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.


சீர் பிரித்த பின்

ஆற்றானை ஆற்று என்று அழியாமை முன்இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.

பொருள்

ஆற்றானை = ஒரு செயலை செய்ய முடியாதவனை

ஆற்று என்று  = செய் என்று  கூறி

அழியாமை முன்இனிதே = துன்பப்படாமல் இருப்பது இனிது

கூற்றம் = எமன்

வரவு = வருவது

உண்மை = உண்மை என்று

சிந்தித்து வாழ்வினிதே = சிந்தித்து வாழ்வது இனிது

இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி ஒருத்தருக்கும் தீவினை எண்ணாதே என்றார் பட்டினத்தார்

ஆக்கம் அழியினும் = செல்வம் அழிந்தாலும்

அல்லவை கூறாத = நல்லவை அல்லாதவற்றை கூறாமல் இருக்கும் 

தேர்ச்சியின் தேர்வினியது இல்.= தெளிந்த அறிவைப் போன்ற இனிமையானது  வேறு ஒன்றும் இல்லை. 

Sunday, July 27, 2014

திருக்குறள் - கற்க கசடற

திருக்குறள் - கற்க கசடற 


எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் .


கற்க கசடற கற்பவை கற்றபின் 
நிற்க அதற்கு தக 

கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

நல்ல அர்த்தம் உள்ள குறள்  தான்.

சிந்திக்க சிந்திக்க புதுப் புது அர்த்தங்களை தரும் குறள் .

எதை கற்க வேண்டும் ? கற்பவை கற்க வேண்டும். எது கற்பவை ?

கற்க கசடற = கசடு என்றால் ஒரு திரவத்தை வடி கட்டும் போது, வடி கட்டியில் கொஞ்சம் தங்கி விடும். அதற்கு கசடு என்று பெயர்.  அதே போல் படிக்கும் போது சில விஷயங்கள் புரியாமல் இருக்கும். அந்த மாதிரி புரியாதது ஒன்றும் இல்லாமல், அனைத்தும் புரியும் படி கற்க வேண்டும்.

இன்னொரு பொருள்,

கற்பது, மனதில் உள்ள கசடுகளை போக்க வேண்டும். உயர்ந்த நூல்களை படித்த பின்னும் மன மாசுகள் போக வில்லை என்றால் கற்றதனால் என்ன பயன்.

மனம் மட்டும் அல்ல மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் உள்ள கசடுகளை போக்க வேண்டும்.

வாக்கில் இனிமை வேண்டும்.

செயல் சிறந்ததாக இருக்க வேண்டும்.

மனம் தூயதாக இருக்க வேண்டும்.

நம் மனம், மொழி, மெய்யை கசடு இல்லாமல் ஆக்கும் விஷயங்களை கற்க வேண்டும்.

சரி, யார் கற்க வேண்டும் ?

தன் உயிரையும் பிற உயிரையும் காக்கும் பொறுப்பில் உள்ள அரசன் அல்லது தலைவன் இப்படி கற்க வேண்டும் என்று கூறுவது போல இந்த குரல் அரசியல் அதிகாரத்தில் வருகிறது.





கம்ப இராமாயணம் - பிரிவின் மன நிலை

கம்ப இராமாயணம் - பிரிவின் மன நிலை


மனைவி: ஏங்க இன்னைக்கு சினிமாவுக்கு போலாமா ?

கணவன்: சரி, சாயங்காலம் office முடிஞ்சு நேரா தியேட்டருக்கு வந்திர்றேன். நீயும் வந்திரு...

மனைவி: சரிங்க....

சாயங்கலாம் கணவன் வர கொஞ்ச நேரம் ஆச்சு....

மனைவி: (தனக்குள்ளேயே)....எப்பவுமே இப்படித்தான்...ஒரு நாள் கூட சொன்ன நேரத்துக்கு வர்றது கிடையாது. ஒரு விஷயம் சொன்னா அது படி நடக்கிறது கிடையாது. ஒரு காரியம் உருப்படியா செய்யத் தெரியுதா....எப்படித்தான் இவரை எல்லாம் வச்சு வேலை வாங்குறாங்களோ....

இப்படி கணவன் மேல் எரிந்து விழும் பெண்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். எரிச்சல் வர கொஞ்ச முன்ன பின்ன ஆகலாம் ....ஆனால் கட்டாயம் வரும்.

சரி, அது அப்படியே இருக்கட்டும்.....

அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராமன் வந்து சிறை மீட்பான் என்ற நம்பிக்கையோடு.

சீதை என்ன நினைத்திருக்க வேண்டும்.....இராமன் மேல் கோபித்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் எரிச்சலாவது பட்டிருக்க வேண்டும்....

சீதை நினைக்கிறாள் ...

"அவருக்கு உணவை தானா எடுத்துப் போட்டுச் சாப்பிடத் தெரியாதே..யார் அவருக்கு வேளா வேளைக்கு உணவு தருகிறார்களோ ? அவரைப் பார்க்க யாராவது வந்தால் வந்தவர்களை எப்படி உபசரிப்பார் ? " என்று விம்முகிறாள்.

"எனக்கு வந்த இந்த நோய்க்கு மருந்து இருக்கிறதா ?" என்று இருந்த இடத்தை விட்டு நகர வில்லையாம். இருந்த இடம் செல் அரித்துப் போனது. இருந்தும் அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.....


பாடல்

அருந்தும் மெல் அடகு ஆர் இட
    அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
    என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
    நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
    எழவும் ஆண்டு எழாதாள்.

பொருள்

அருந்தும் = உண்ணும்

மெல் அடகு = மென்மையான காய் கனிகளை

ஆர் இட அருந்தும்? = யார் போட சாப்பிடுவார் ?

என்று அழுங்கும் = என்று மனதுக்குள் அழுந்தினாள்

‘விருந்து கண்டபோது என் உறுமோ?  = விருந்தினர் வந்தால் என்ன பாடு படுவாரோ

என்று விம்மும் = என்று நினைத்து விம்முவாள்

‘மருந்தும் உண்டுகொல் = மருந்து இருக்கிறதா ?

யான்கொண்ட நோய்க்கு? = எனக்கு வந்த இந்த நோய்க்கு

என்று மயங்கும் = என்று மயங்குவாள்

இருந்த மா நிலம் = இருந்த இடத்தில்

 செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் = செல் (கரையான்) அரித்துப் போன பின்பும் அந்த இடத்தை விட்டு எழாமல் அதே இடத்தில் இருந்தாள்

தன்னைப் பற்றி அவள் கவலைப் படவில்லை.

இராமனைப் பற்றி கவலைப் படுகிறாள்.

இதில் சில வாழ்க்கைப் பாடங்கள் நமக்கு கிடைக்கிறது.

உயர்ந்தவர்களின் வாழ்கையே ஒரு பாடம் தானே:

1. மனைவி பரிமாறி கணவன் சாப்பிட வேண்டும் ? ஏன் ? அவருக்கு கை கால் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. மனைவி பரிமாறி கணவன் உண்பதில் சில தாம்பத்திய இரகசியங்கள் இருக்கிறது.....

- கணவனோடு இடைஞ்சல் இல்லாமல் பேசலாம்

- அவன் வேறு எங்காவது சாப்பிட்டு விட்டு வந்தானா என்று தெரியும்

- எனக்காக இவள் விழித்திருந்து உணவு பரிமாறுகிறாள் என்ற எண்ணம் வரும்போது , அவள் மேல் இன்னும் காதல் பிறக்கும்.

- உணவு சரியாக இருக்கிறதா என்று அவன் முகம் பார்த்து அறிய முடியும்

- எங்க ஊர் சுற்றப் போனாலும், கணவன் உண்ணும் நேரம் வீட்டுக்கு வர வேண்டும் என்று தோன்றும். "எல்லாம் டேபிள் மேலதான் இருக்கு...போட்டு சாப்பிடுங்க" என்று sms அனுப்பத் தோன்றாது. ஐயோ, நான் இல்லை என்றால் அவர் பசித்து இருப்பாரே என்ற அன்பு தோன்றும். "அவள் வரட்டும் " என்று கணவன் காத்திருக்க வேண்டும். இது தாம்பத்ய இரகசியம்.

தானாக போட்டு சாப்பிட ஆரம்பித்தால் பலதும் தானாகச் செய்ய தொடங்கி விடுவான்.

கணவனுக்கு மனைவி மேல் ஒரு சார்பு இருக்க வேண்டும். மனைவிக்கும் அப்படித்தான். நீ இல்லாமல் நான் இருக்க முடியும், நான் இல்லாமல் அவள்/வான் சமாளித்துக் கொள்வான்  என்று காண்பிக்கத் தொடங்கிவிட்டால் குடும்பப் பிடிப்பு தளரும்.

சீதை பரிமாறி இருக்கிறாள். நான் பெரிய சக்கரவர்த்தி மகள். நான் ஏன் பரிமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை.


2. விருந்தோம்பல் எந்த அளவிற்கு உயர்ந்து இருந்திருக்கிறது. கணவனும் மனைவியும் பிரிந்து துன்பப் படுகிறார்கள். அவர்கள் கவலை விருந்தினரை எப்படி உபசரிப்பது   என்று.  நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள் நம்மவர்கள். விருந்தோம்பல் என்று ஒரு அதிகாரத்தை அறத்துப் பாலில் வைத்தவர்கள் நம்மவர்கள். இந்த கால குழந்தைகள் விருந்தினர் வந்தால் "வாங்க " என்று கூட சொல்லுவது இல்லை. பண்பாடுகள் சிதைந்து வருகிறது.

இலக்கியம் படிக்கும் போது சிறிது வாழ்க்கைப் பாடமும் படிப்போமே.

இது வரை எப்படியோ. இதைப் படித்த பின் இன்று முதல் கடை பிடித்துப் பாருங்கள்.

வாழ்க்கையில் இன்னமொரு இனிமை சேரும்.






Saturday, July 26, 2014

ஐந்திணை ஐம்பது - கேட்க நினைத்தது ஒன்று உண்டு

ஐந்திணை ஐம்பது -  கேட்க நினைத்தது  ஒன்று உண்டு 


காதலை சொல்வது ஒன்றும் அத்தனை எளிதான செயலாகத் தெரியவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை அது வயிற்றிக்குள் அமிலம் வார்க்கும் சங்கடமாகத்தான் இருந்து வந்து இருக்கிறது.

ஆசை ஒரு புறம், பயம் ஒரு புறம், காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஒரு புறம், சொல்லாமல் இருந்தால் பின் எப்படிதான் சம்மதம் பெறுவது என்ற சந்தேகம் ஒரு புறம்...

பட்டவர்களுக்குத்தான் தெரியும் அந்த அவஸ்தை.

சங்க காலத்தில் ஒரு நிகழ்வு.

அவளும், அவளின் தோழியும் பயிரை பறவைகள் அண்டாமல் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவன் அந்தப் பக்கம் வருகிறான். பார்த்த உடன் காதல். அல்லது பல நாள் பார்த்து வந்திருக்கலாம். இன்று எப்படியாவது பேசி விடுவது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் சென்று கேட்டே விடுகிறான்

"மான் இந்தப் பக்கம் வந்ததா" என்று.

சொல்ல நினைத்தது அவன் காதலை.

 கேட்க்க நினைத்தது அவளின் சம்மதத்தை

சொல்லி நின்றது " மான் இந்த இந்தப் பக்கம் வந்ததா " என்று.

தோழிக்கு தெரியாதா என்ன ?

தலைவியிடம் சொல்கிறாள்....அவன் கேட்டதில் இன்னொன்றும் உண்டு என்று. மானை மட்டும் அல்ல....அவன் வேறு ஒன்றையும் கேட்டான் என்று புன்னகயுடன் கூறுகிறாள்...

பாடல்

புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் ! சாரற்
றினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு.


சீர் பிரித்த பின்

புனை பூந்தழை அல்குல்  பொன் அன்னாய் ! சாரற்
தினை காத்திருந்தேம் யாமாக - வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவலுற்றது ஒன்று உண்டு 

பொருள்


புனை= புனைந்த , தொடுக்கப் பட்ட

பூ = பூ

தழை  = தழைகள்

அல்குல் = இடுப்பினை உடைய

பொன் அன்னாய்  ! = பொன் போன்றவளே

சாரற் = மாலைச் சாரலில்

தினை காத்திருந்தேம் = தினைப் புனங்களை காத்து இருந்தோம்

யாமாக = தானாக

வினை வாய்த்து = வேலை காரணமாக (என்ன வேலை ?)

மா = மான்

வினவுவார் போல = (இந்தப் பக்கம் வந்ததா என்று ) வினவுவார் போல

வந்தவர் = வந்த தலைவன்

நம்மாட்டுத் = நம்மிடம்

தாம் வினவலுற்றது = அவன்    கேட்க நினைத்தது 

ஒன்று உண்டு =  ஒன்று உண்டு 




Friday, July 25, 2014

ஐந்திணை ஐம்பது - உன்னைத் காற்று வந்து என்னைத் தொட்டது

ஐந்திணை ஐம்பது - உன்னைத்  காற்று வந்து என்னைத் தொட்டது 


காதலர்கள் பிரிந்து இருந்தால் அவர்கள் காதலோ காதலியோ தந்த ஏதோ ஒரு பொருளை கையில் வைத்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது கையில் இருக்கும் போது ஏதோ அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் அருகில் இருப்பது போலவே அவர்களுக்குத்  தோன்றும்.

அவர்கள் தந்த சாக்லேட்-ன் பேப்பர், அவள் தலையில் இருந்த உதிர்ந்த பூவின் இதழ், அவள் எழுதிய கடிதம்  என்று ஏதோ அவளை நினைவூட்டும் ஒன்று அவனுக்கு.

அவளுக்கும் அப்படித்தான்.

இங்கே, ஒரு சங்க காலப் பெண். அவளின் காதலன் கொஞ்ச நாளாகவே அவளைப் பார்க்க  வரவில்லை.அவளின் தோழி "அவ்வளவுதான், அவன் உன்னை மறந்து விட்டான்...இனி மேல் வரமாட்டான் " என்று பயமுறுத்திக் கொடிருக்கிறாள்.

அவள் அதற்கெல்லாம்    பயப் படுபவள் அல்ல.

"அவன் என் தோள்களைச் சேர மாட்டான் என்றா சொல்கிறாய். பரவாயில்லை. அவன் ஊரின் வழியே வரும் ஆறு நம் ஊருக்கும் வருகிறது. அந்த ஆற்றில் நான் நீராடுவேன் என்கிறாள் "

அவனும் அந்த ஆற்றில் நீராடி இருப்பான். அவன் மேல் பட்ட நீர் என் மேலும் படும். அதுவே அவன் என்னை அணைத்த மாதிரி என்கிறாள்.

இந்த ஆறு, அவனின் நீண்ட கைகள் போல என்னை வந்து தீண்டும் என்கிறாள்.

நாங்கள் ஒருவர் இந்த நீர்க் கைகளால் பற்றிக் கொள்வோம் என்கிறாள்.

பாடல்


கானக நாடன் கலவானென் றோளென்று
மானமர் கண்ணாய் ! மயங்கனீ ;- நானங்
கலந்திழியு நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பு மகன் றுநில் லா.


சீர்  பிரித்த பின்

கானக நாடன் கலவான் என் தோள் என்று 
மான் அமர் கண்ணாய் ! மயங்க நீ ; - நானம் 
கலந்து இழியும் நன் மலை மேல் வால் அருவி ஆடப் 
புலம்பும்  அகன்று நில்லா 


பொருள்

கானக நாடன் = காண்க நாட்டின் தலைவன்

கலவான் = கலக்க மாட்டான்

என் தோள் என்று = என்னுடைய தோள்களை என்று

மான் அமர் கண்ணாய் ! = மான் போன்ற கண்களைக் கொண்ட என் தோழியே

 மயங்க நீ ;  = நீ மயங்காதே

நானம் = நறுமணப் பொருள்கள்

கலந்து இழியும் = கலந்து இறங்கி வரும் (அருவி)

 நன் மலை மேல் வால் அருவி = நல்ல மலை மேல் உள்ள அருவி

ஆடப் = நீர் ஆடினால்

புலம்பும்  அகன்று = அவன் வரவில்லையே, அவனைக் காண முடியவில்லையே, அவன் என் தோள்களைச் சேரவில்லையே என்ற புலம்பல் அகன்று

நில்லா = நில்லாமல் ஓடி விடும்

எவ்வளவு மென்மையான காதல். எவ்வளவு நம்பிக்கை. எவ்வளவு குழந்தைத் தனம். எவ்வளவு  தாபம்.

உணர்சிகள் இந்த அளவு மென்மை பட்டு , ஆழமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களின் பண்பாடு எந்த அளவு உயர்ந்து இருக்க வேண்டும் - அந்தக் காலத்தில்

நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்து  இருக்கிறார்கள்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்றானே பாரதி அது போல.

யார் கண்டது...அந்தப் பெண் நம் பாட்டியின், பாட்டியின் .....பாட்டியாகக்... கூட இருக்கலாம்.

நம் பரம்பரை அப்படி.

நம் பாரம்பரியம் அப்படி.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நீங்கள்.

சற்றே நிமிர்ந்து நடவுங்கள்.