Sunday, September 14, 2014

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே

சிவபுராணம் - பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே 



பாடல்

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

சீர் பிரித்த பின்

நிலந்தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே

பொருள் 

நிலந்தன் மேல் வந்து அருளி = நிலத்தின் மேல் வந்து அருளி.  மனிதன் இறைவனை காலம் காலமாய்  தேடிக் கொண்டிருக்கிறான். தேடி கண்டு அடைய முடியாதவன் இறைவன் என்று அவனுக்கு புரிவதில்லை. தேடுகிறோம் என்றால் எதைத் தேடுகிறோம் என்று தெரிய வேண்டும். அது எப்படி இருக்கும், எந்த மாதிரி இருக்கும், என்ன வடிவில் இருக்கும், தெரிய வேண்டும். அது தெரியாமல் எப்படி தேடுவது ? அது மட்டும் அல்ல, அது எங்கே இருக்கும் என்றும் தெரிய வேண்டும். தொலைத்தது ஒரு இடத்தில், தேடுவது இன்னொரு இடத்தில் என்றால் கிடக்குமா ? இத்தனையும் தெரிந்து விட்டால் பின் எதற்கு தேடுவது ?

தேடினால் கிடைக்காது என்று நம் மதம் பல விதங்களில் சொல்லி இருக்கிறது. மாலும், அயனும் தேடிக் காண முடியாத திருவடி என்று சொல்வது ஒரு குறியீடு. தேடினால் கிடைக்காது என்பது அதன் அர்த்தம்.

தேடுவதை நிறுத்தினால் ஒரு வேளை கிடைக்கலாம்.

மணிவாசகர் சொல்கிறார் - நிலத்தில் வந்து அருளினான் என்று. அவனே வந்து, அவனே அருளினான்.

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்

என்பது மற்ற மத நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்து மதம், அதிலும் குறிப்பாக சைவ மதம், தேடினால் அடைய முடியாது என்றே சொல்லி வந்திருக்கிறது.


நீள் கழல்கள் காட்டி = தன்னுடைய நீண்ட கழல் அணிந்த திருவடிகளை காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் = நாயை விட கீழாக இருந்த அடியேனுக்கு

தாயிற் சிறந்த = தாயை விட சிறந்த

தயாவான தத்துவனே. = தயாவான தத்துவனே

மாசற்ற சோதி = குற்றம் குறை இல்லாத சோதியே

மலர்ந்த மலர்ச்சுடரே = மலர்ந்த மலர் போன்ற சுடரே. சுடர் என்றால் வெளிச்சம் இருக்கும். வெப்பமும் இருக்கும். இந்தச் சுடரில் வெளிச்சம் இருக்கும், ஆனால் மலர் போல குளிர்ச்சியாக இருக்கும். மலர்ந்த மலர்ச் சுடர். ஞானத்தைத் தரும், துன்பத்தைத் தராது.

தேசனே = குரு போன்றவனே

தேனார் அமுதே  = தேனே, அருமையான அமுதம் போன்றவனே

சிவபுரனே = சிவ புரத்தில் உள்ளவனே

பாசமாம் பற்று அறுத்து  பாரிக்கும் ஆரியனே = பாசம் என்ற பற்றை அறுத்து காவல் புரியும் ஆரியனே



திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம்

திருவிளையாடற் புராணம் - வந்தி அறிமுகம் 


வரலாறு என்பது அரசர்களின், மந்திரிகளின், சேனாதிபதிகளின் வாழ்க்கையைப் பற்றி பேசிய அளவுக்கு சாதாரண மக்களைப் பற்றிப் பேசுவது இல்லை.

யானைகள் சண்டை இட்டால், இடையில் கிடந்து நசுங்கும் செடிகளைப் பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்.

மாணிக்க வாசகரின் பக்தியை, அவரின் தமிழை உலகுக்கு காட்ட நினைத்த இறைவன், வைகையில் வெள்ளப் பெருக்கு  வர  வைத்தார்.

வீட்டுக்கு ஒருவர் வந்து ஆற்றின் கரையை பலப் படுத்த வேண்டும் என்பது அரசனின் ஆணை.

தண்டோரா போட்டு சொல்லியாகி விட்டது.

அப்போது.....

அந்த ஊரில் (மதுரையில்) எல்லோருக்கும் ஆள் கிடைத்து விட்டது, ஒருத்தியைத் தவிர. அவள் பெயர் வந்தி . அவள் மதுரையின் தென் கிழக்கு திசையில் வசிப்பவள். மிக வயதானவள்.

பாடல்


இந் நிலை ஊரில் உள்ளார் யாவர்க்கும் கூலி யாளர் 
துன்னி முன் அளந்த எல்லைத் தொழில் முறை மூண்டு 
                                                       செய்வார் 
அந்நிலை நகரின் தென் கீழ்த் திசை உளாள் அளவில் 
                                                       ஆண்டு 

மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி பேர் வந்தி என்பாள்.


பொருள்

இந் நிலை = அந்த நிலையில்

ஊரில் உள்ளார் யாவர்க்கும் = ஊரில் உள்ள அனைவர்க்கும்

கூலி யாளர் = கூலி வேலை செய்பவர்கள் கிடைத்து, அவர்களும்

துன்னி = செறிதல் (ஒன்றாகக் கூடுதல்)

முன் அளந்த எல்லைத் = முன்பே யார் யாருக்கு எந்த இடத்தில் கரையை அடைக்க வேண்டும் என்று அளந்து கொடுத்த எல்லையில்

தொழில் முறை மூண்டு = தொழில் செய்ய ஆவலுடன்

செய்வார் = செய்வார்

அந்நிலை = அந்த நிலையில்

நகரின் = மதுரை நகரின்

தென் கீழ்த் திசை உளாள் = தென் கிழக்கு திசையில் உள்ளவள்

அளவில் = காலத்தில்

ஆண்டு மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி = ஆண்டுகள் பல கழிந்த நரை மூதாட்டி ஒருத்தி

 பேர் வந்தி என்பாள் = அவள் பேர் வந்தி.



Saturday, September 13, 2014

இராமாயணம் - வாலியின் குற்ற உணர்வு

இராமாயணம் - வாலியின் குற்ற உணர்வு 


வாலி இறக்கும் தறுவாயில், இராமனிடம் சுக்ரீவனை அடைக்கலப் படுத்துகிறான். என் தம்பி தவறு செய்தால் அவனை தண்டித்து விடாதே என்று வேண்டுகிறான். அனுமனை இராமனிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். "உன் கையில் உள்ள வில்லைப் போன்ற ஆற்றல் உள்ளவன் இவன் "என்று அனுமனைப் பற்றி கூறுகிறான்.

பின் தன் மகன் அங்கதனை அழைத்து வரச்   சொல்கிறான்.அவனை இராமனிடம் அடைக்கலப் படுத்துகிறான்.

பின் இறந்து போகிறான்.

எல்லோரும் அந்த இடத்தை விட்டு கிளம்பிப் போகிறார்கள். வாலி இறந்த செய்தி கேட்டு அவன் மனைவி தாரை வந்து அவன் மேல் விழுந்து ..புலம்புகிறாள்...

பாடல்

வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு
      இலா உலகில் இன்பம்
பாலியா, முன்னர் நின்ற பரிதி
      சேய் செங் கை பற்றி,
ஆல் இலைப் பள்ளியானும்,
      அங்கதனோடும், போனான்;
வேல் விழித் தாரை கேட்டாள்;
      வந்து, அவன் மேனி வீழ்ந்தாள்.

பொருள்

வாலியும் ஏக = வாலி வானகம் ஏக

யார்க்கும் = எவருக்கும்

வரம்பு இலா உலகில் = எல்லை அற்ற உலகில்

இன்பம் பாலியா = இன்பத்தை நல்கும்

முன்னர் நின்ற = முன்னால் நின்ற

பரிதி சேய் = சூரியனின் மகன் (சுக்ரீவன் )

செங் கை பற்றி = சிவந்த கைகளைப் பற்றிக் கொண்டு

ஆல் இலைப் பள்ளியானும் = ஆல் இலையில் பள்ளி கொண்ட அந்த பரந்தாமனும்

அங்கதனோடும், போனான் = அங்கதனையும் அழைத்துக் கொண்டு போனான்

வேல் விழித் தாரை கேட்டாள் = (வாலி இறந்த செய்தியை) வேல் போன்ற விழியைக் கொண்ட தாரை கேள்விப் பட்டு

வந்து, அவன் மேனி வீழ்ந்தாள் = போர்க் களத்துக்கு வந்து அவன் மேல் விழுந்தாள்

இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இடம் எது என்றால்....

சுக்ரீவனை அடைக்கலப் படுத்தினான் வாலி

அனுமனை அறிமுகம் செய்து வைத்தான்

அங்கதனை அழைத்து வரச் செய்து இராமனிடம் ஒப்புவித்தான்

ஆனால் ....தன் மனைவி தாரையை அழைத்து வரச் சொல்லி ஒரு வார்த்தை பேசவில்லை.

ஏன் ?

சொல்லி அனுப்பி இருந்தால் அவளும் வந்திருப்பாள் தானே ? கடைசியாக அவளிடம் ஒரு  வார்த்தை பேசி இருக்கலாம் தானே ? ஏன் அவளை வாலி சந்திக்க வில்லை ?

கதைப் போக்கிற்கு அது தேவை இல்லை கம்பன் நினைத்து இருப்பானோ என்றால் அப்படியும் நினைக்க முடியவில்லை. வாலி இறந்த மறு நாள் சூரியன்  எப்படி உதித்தான் என்பது வரை  நிறுத்தி நிதானமாக கதையைக் கொண்டு போகிறான். பின் ஏன் வாலி தாரையை வரச் சொல்லவில்லை ?

பிறர் பழியும் தன் பழியும் நாணுவார் என்ற குறளை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப்  பார்ப்போம்.

வாலியை சுக்ரீவன் போருக்கு அழைத்த போது தாரை வாலியை தடுக்கிறாள். " "இராமன் என்பவன் துணையாக இருக்கும் தைரியத்தில் சுக்ரீவன் உங்களை போருக்கு அழைக்கிறான். போகாதீர்கள் " என்று தடுக்கிறாள்.

கேட்காமல் போகிறான். தாரை சொன்ன படியே நடந்தது.

இப்போது , தாரையின் சொல்லை கேட்காமல் வந்தததிற்கு வாலி நாணுகிறான்.  அவள் முகத்தில் எப்படி விழிப்பது என்று வெட்கப் படுகிறான். எனவே கடைசியாக அவளை காணமலேயே விண்ணுலகம் போய் சேர்கிறான்.

வாலி வதம் நமக்குச் சொல்லிப் போகும் பாடம் என்ன ?

ஒன்று, தவறு என்று தெரிந்த ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்.

இரண்டு, பிறர் பழியை தன் பழியாக எண்ணி நாணுங்கள்

மூன்று, நீங்கள் செய்யும் பழிக்கும் நாணம் கொள்ளுங்கள்

நான்கு, துன்பங்கள் பிறர் தந்து வருவது இல்லை. மறைந்து நிற்காமலேயே கூட இராமன் வாலியை கொன்றிருப்பான். வாலி கொல்லப் பட்டது இராமனால்  நிகழவில்லை. அது வாலியின் அறம் பிறழ்ந்த வாழ்க்கையால் வந்தது.  துன்பம் வரும் போது மற்றவர்களை ஏசாதீர்கள். மற்றவர்கள் மேல் பழி போடாதீர்கள். நீங்கள் செய்த மறம் உங்களை வாட்டுகிறது என்று எண்ணுங்கள்.  இராமனை குறை கூறிய வாலி கடைசியில் உண்மையை உணர்கிறான்.  

எல்லாம் சரிங்க, பாடம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு....எதுக்காக மறைந்து  இருந்து  அம்பு எய்ய வேண்டும் ? அதுக்கு என்ன பதில் ?


விவேக சிந்தாமணி - தெய்வம் எனலாமே

விவேக சிந்தாமணி - தெய்வம் எனலாமே 


காதலியின் வரவுக்காக காத்திருக்கிறான் காதலன்.

தூரத்தில் அவள் வருவது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் இருக்கும் இடம் நோக்கி வருகிறாள்.

கிட்ட வர வர அவன் இதயத் துடிப்பு எகிறுகிறது. உள்ளம் உருகுகிறது.

இன்னும் அருகில் வந்து விட்டாள் .  அவள் கூந்தல் காற்றில் அலை பாய்வது தெரிகிறது. அவள் கரிய  கூந்தல் அவன் மனதை  மயக்குகிறது. மயில் போல சாயல்.  பெரிய தனங்கள். இடையோ  சிறியது. சிறு குழந்தை போன்ற  முகம்.

அவளின் அழகைப் பார்க்கும் போது கை எடுத்து கும்பிடலாம் போல இருக்கும் அழகு.

அப்படி ஒரு தெய்வீக அழகு !


பாடல்

அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும் 
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல் 
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ 
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே

Friday, September 12, 2014

இராமாயணம் - நாய் அடியனேன்

இராமாயணம் - நாய் அடியனேன் 


நாய் நல்ல பிராணிதான். நன்றியுள்ள பிராணிதான். இருந்தாலும் நம் சமய நூல்களில் மிக மிக கீழான ஒன்றை சுட்டிச் சொல்ல வேண்டும் என்றால் நாயை உதாரணம் கட்டுகிறார்கள்.

"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்பார்  மணிவாசகர்.

"நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து" என்பதும் அவர் வாக்கே.

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--

தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே

என்பார் அபிராமி பட்டர்.

ஏன் நாயை உதாரணம் சொல்லுகிறார்கள்.

நாயிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.

அது உணவு உண்ணும். உண்ட பின், தன் உடலுக்கு எது சரியில்லையோ அதை கக்கி  விடும். கக்கிய பின், மீண்டும் அந்த கக்கியதை உண்ணும். வேறு எந்த விலங்கும் செய்யாத அருவருப்பான  செயல் இது.

நாம் என்ன அப்படி செய்கிறோம் ?

தவறு என்று தெரிந்தும் அதே செயலை நாம் மீண்டும் மீண்டும் செய்வது இல்லையா ?

உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் இனிப்பை, எண்ணெய் பலகாரங்களை, அதிகமான உணவை உட்கொள்வது இல்லையா.

உணவு ஒரு உதாரணம். இப்படி பலப் பல தீய செயல்களை நாம் தெரிந்தே செய்கிறோம்.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று அறிந்த பின்னும் ஆசை  வைக்கிறோம்.

பிறன் மனை நோக்கும் பாவம், பொறாமை, கோபம், அழுக்காறு, அவா, இன்னாச் சொல், என்று நாம் செய்யும் தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெரிந்தே செய்யும்  தவறுகள்.

தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து மீண்டும் மீண்டும் பிறவி  எடுக்கிறோம்.இது ஒரு அருவருப்பான செயல் இல்லையா ?

எனவே தான் நம்மை நாயோடு ஒப்பிட்டுப் பேசினார்கள் நம் சமயக் குரவர்கள்.

வாலி, இராமனின் அம்பு பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான்.

"இராமா, உன்னுடைய  கூரிய அம்பினால் எய்து, நாய் போன்ற அடியவனான என்னுடைய ஆவி போகும் வேளையில் வந்து அறிவு தந்து அருளினாய். மூவரும்  நீ,முதல்வனும் நீ...."என்று  போற்றுகிறான்.

அப்படி என்ன செய்த தவறையே மீண்டும் செய்து  விட்டான் வாலி ?

வாலி இந்திரனின்  அம்சம்.

முன்பு ஒரு  முறை  மாற்றான்  மனைவியான அகலிகையை விரும்பினான். அதற்கு தண்டனை பெற்றான்.

மீண்டும் மாற்றான் மனைவியை (சுக்ரீவனின் மனைவியான ருமையை) பிடித்து வைத்துக் கொண்டான். செய்த தவறை மீண்டும் செய்கிறான்.

அதை அவனே உணர்ந்து சொல்கிறான் "நாய் அடியேனின் ஆவி போகும் வேளையில் நல் அறிவு தந்தாய் "என்று.

இராமன் தவறு செய்தானா இல்லையா என்பதல்ல கேள்வி.

வாலி தவறு செய்தானா இல்லையா என்பதல்ல கேள்வி.

நீங்கள் செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருக்கிறீர்களா? அது தான் கேள்வி. அது தான்  முக்கியம்.

சிந்தியுங்கள். வாலி வதம் நம்மை உயர்த்திக் கொள்ள உதவி செய்தால் அது அது படித்ததின் பலன்.

பாடல்

ஏவு கூர் வாளியால்
      எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய்,
      அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ! முதல்வன் நீ!
      முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ!
      பகையும் நீ! உறவும் நீ!


பொருள்

இதற்கு முந்தைய ப்ளாகில் பார்த்தோம். பார்க்காதவர்கள் அந்த ப்ளாகை  மீண்டும் ஒரு  முறை படிப்பது நலம்.


Thursday, September 11, 2014

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம்

வில்லி பாரதம் - பாரதம் பாடிய காரணம் 


பாரதம் ஏன் பாடினேன் என்பதற்கு காரணம் கூறுகிறார் வில்லி புத்துராழ்வார்.

பாரதம் மறை ஓதும் தேவர்களும், முனிவர்களும் , மற்றவர்களும் கூறும் அரிய  பெரிய கருத்துகளை கொண்டது என்பதினால் அல்ல, அதில் இடை இடையே மாதவனான கண்ணனின் சரித்திரம் இடையிடையே வரும் என்ற ஆசையால் இந்த பாரதத்தை நான் எழுதுகிறேன்  என்கிறார்.


பாடல்

முன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும்
பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமு மிடையிடை வழங்கும்
என்னு மாசையால் யானுமீ தியம்புதற் கிசைந்தேன்.

பொருள்

முன்னு = அனைத்திற்கும் முன்னால்  இருக்கும்

மாமறை = பெரிய வேதங்களை (கூறும்)

முனிவருந் = முனிவர்களும்

தேவரும் = தேவர்களும்

பிறரும் = மற்றவர்களும்

பன்னு = சொல்லும்

மாமொழிப் = பெரிய கருத்துகள் உள்ளதும்

பாரதப் பெருமையும் பாரேன் = பாரத கதையில் உள்ள பெருமைக்காக இல்லை

மன்னு= என்றும் நிலைத்து நிற்கும்

மாதவன் = கண்ணன்

சரிதமு மிடையிடை வழங்கும் = சரித்திரம் இடை இடையே வரும்

என்னு மாசையால்  = என்ற ஆசையால்

யானும் = நானும்

ஈது = இதை

இயம்புதற் கிசைந்தேன் = சொல்லுவதற்கு ஒத்துக் கொண்டேன்



Wednesday, September 10, 2014

இராமாயணம் - பிறன் பழி - பாகம் 2

இராமாயணம் -  பிறன் பழி - பாகம் 2 



ஒரு வீட்டில் கணவன் காலையில் செய்தித் தாள் படித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய மனைவி காப்பியை கொண்டுவந்து மேஜை மேல் வைத்து விட்டுப் போகிறாள். கணவன் , செய்தித்தாள் படிக்கும் சுவாரசியத்தில் காப்பி கோப்பையை பார்க்கவில்லை. செய்தித் தாளை திருப்பும் போது கை தட்டி காப்பி கொட்டி  விடுகிறது.

அந்த சமயத்தில் ....

நிலை - 1

கணவன்: சனியனே, காப்பிய கைக் கிட்டவா கொண்டு வந்து வைப்ப ? எத எங்க வைக்கிறதுனு தெரியாது...என்று கத்துகிறான்...

மனைவி: கண்ணு என்ன பிடனியிலா இருக்கு ...முன்னாடிதான இருக்கு ? பாக்க வேண்டியது தான ?

இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்தம் சொல்லி சண்டை வலுக்கிறது.

நிலை 2

கணவன்:  ஐயையோ ... நீ காப்பிய இங்க வச்சத நான் பார்க்கவே இல்ல. என் தப்புதான்... பாத்து இருக்கணும்.


மனைவி: நீங்க என்ன பண்ணுவீங்க...நான் அங்க வச்சிருக்க கூடாது...இல்லேன்னா வச்சத உங்க கிட்டயாவது சொல்லி இருக்கணும்....என் தப்புதான் ...


இப்படி ஒருவர் மற்றவரின் பழியை ஏற்றுக் கொண்டு மற்றவர் செய்த தவறுக்கு தான் நாணும் போது இல்லறம் இனிக்கும்.

ஒரு அலுவலகத்தில்

ஒரு ரிப்போர்ட்  அனுப்புகிறோம்.அதில் ஏதோ ஒரு தவறு இருந்து விடுகிறது. சரியாக பார்க்காமல் நாமும் அனுப்பி விடுகிறோம்.  மேலிடத்தில் கண்டு பிடித்து நம்மை திட்டுகிறான்.

நிலை 1

நாம் அந்த ரிபோர்டை தயார் செய்த ஆளை கூப்பிட்டு சத்தம்  போடுகிறோம்.அவனும் "சார், நான் தான் தப்பு பண்ணினேன், நீங்களாவது கண்டு பிடிசிருகலாம்ல " என்று நம்மை முறைக்கிறான்...

மாறாக

நிலை 2

நாம் அந்த ரிபோர்ட் தயார் செய்த  ஆளிடம்,"நீங்க தந்த ரிபோர்ட்ட நான்  சரியா படிக்காம அனுப்பிட்டேன்...அதுல ஏதோ தப்பு இருக்காம்...நான் ஒழுங்கா படிச்சிருக்கணும் "என்று  சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்....அவன் என்ன சொல்வான் "சாரி சார், தப்பு என் மேலதான், நான் சரியா செக் பண்ணி இருக்கணும் ...இனிமேல் ஜாக்கிரதையா இருப்பேன் "என்று சொல்வான்.

அவன் பழியை நாம் ஏற்று அதற்காக நாம் வெட்கப்  படும்போது, அவனும் அதை ஏற்று அவன் வெட்கப்  படுவான்.

அலுவலகம் இனிமையாக  இருக்கும்.

அதை விடுத்து ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக் கொண்டிருந்தால் எதுவும் சரியாக  நடக்காது.

இன்று குடும்பங்களும், சமுதாயமும் சந்திக்கும் சிக்கல் இதுதான். யாரும் எதற்கும் பொறுப்பு எடுக்கத் தயாராக இல்லை. மற்றவனை குறை கூறியே பொழுதை போக்கி  விடுகிறார்கள்.

பிறருடைய பழிக்காக எவன் தான் நாணுவானோ அவன் நாணத்தின் உறைவிடம் என்பார் வள்ளுவர்.....

பாடல்

'பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி' என்னும், உலகு.

 பொருள்

'பிறர் பழியும் = மற்றவர்களின் பழியையும்

தம் பழியும் = தன்னுடைய பழி என்றே

நாணுவார் = நாணுவார். நாணம் கொள்வார்

நாணுக்கு = நாணத்தின்

உறைபதி' = உறைவிடம்

என்னும், உலகு = என்று உலகம்

.சான்றோர்கள் மற்றவர்களின் தவறுகளை தங்களின் தவறு என்றே எண்ணி அதற்காக வெட்கப் படுவார்கள்.

மாறாக, முட்டாள்கள் தங்கள் தவறையும் மற்றவர்கள் தவறு என்றே கூறித்  திரிவார்கள்.

இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்தார் என்று விவிலியம்  கூறும்.

இன்று முதல் உங்கள் கணவனோ, மனைவியோ - அவர்களின் குற்றத்தை உங்கள் குற்றமாக எண்ணி அவர்களிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு பெரிய    மாற்றம்   குடும்பத்தில் நிகழ்கிறது என்று பாருங்கள்.

சரி,இதற்கும் வாலி வதைக்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கே ...


----------------------------------------------------------------------------------------------------------

பாகம் 2

இராமன் மறைந்து இருந்து அம்பு எய்து விட்டான். அந்த அம்பை வாலி தன் உடலில் ஊடுருவிப்  போகாமல் தடுத்து நிறுத்தி விட்டான்.  இது யார் எய்த அம்பு என்று   பார்க்கிறான்.

அது இராமன் எய்த அம்பு என்று தெரிந்து கொள்கிறான்.

அந்த நிலையில் அவனுக்கு என்ன உணர்ச்சி தோன்றியிருக்க வேண்டும் ?

அதிர்ச்சி அல்லது கோபம் அல்லது வலி அல்லது வேதனை அல்லது வருத்தம் என்று  இந்த உணர்சிகள் ஏதாவது தோன்றியிருக்க வேண்டும் அல்லவா ?

இவை எல்லாம் தோன்றவில்லை.

அவனுக்கு வெட்கம் வந்ததாம்.

அதுவும் அந்த வெட்கத்தை வெளியே சொல்ல முடியாமல் விழுங்கிக் கொண்டான்  என்கிறார் கம்பர்.

இராமன் செய்த தவறுக்கு வாலி வெட்கப் படுகிறான்.


பாடல்

இல் அறம் துறந்த நம்பி,
    எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன்,
    தோன்றலால், வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
    சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது என்னா,

    நகை வர, நாண் உள் கொண்டான்.

பொருள் 

இல் அறம் துறந்த நம்பி = மனைவியை துறந்த நம்பி 

எம்மனோர்க்கு ஆகத் = எங்களுக்காக 

தங்கள் வில் அறம் துறந்த வீரன் = தன்னுடைய வில் அறத்தை துறந்து நிற்கும் வீரன் 

தோன்றலால் = தோன்றியதால் 

வேத நூலில் = வேத நூல்களில் சொல்லப் பட்ட 

சொல் அறம் துறந்திலாத = சொல் அறத்தை துறக்காத 

சூரியன் மரபும் = சூரிய குலத்தின் மரபும் 

தொல்லை = பழமையான 

நல் அறம் துறந்தது = நல்ல அறங்களை துறந்தது 

என்னா = எண்ணி 

நகை வர = சிரிப்பு வர 

நாண் உள் கொண்டான் = நாணத்தை உள்ளே கொண்டான் 

இராமன் செய்த பழிக்கு வாலி நாணுகிறான். நாணத்தை உள் கொண்டான் என்று ஒரு உள் குத்தாக கம்பர் சொல்கிறார்.

உள்ளத்தில் கொண்டான். 
உட்கொண்டான்
வெளியே சொல்ல முடியாமல் விழுங்கினான் என்று பொருள் கொள்ளலாம். 

இப்போது மேலே உள்ள குறளைப் படித்துப் பாருங்கள். 

" பிறர் பழியும் தம் பழியும் நாணுவார்"

இப்போது இராமன் செய்த பழிக்கு நாணுகிறான். உலகில் நடக்கும் தவறுகளுக்கு தானும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்று ஆன்றோர் நினைப்பர்.

பின்னால் தான் செய்த பழிக்கும் வாலி நாணுகிறான். 

தான் ஏதோ தவறு செய்து விட்டோம், அதனால் இது நிகழ்ந்தது என்று வாலி நினைக்கிறான். 

அப்படி அவன் செய்த தவறுதான் என்ன ? அதை எப்படி அவன் வெளிப் படுத்துகிறான் என்று மேலும் சிந்திப்போம்.