Monday, April 20, 2015

பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி

பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி 


வெளி ஊரில் உள்ள உங்கள் நண்பர் வீட்டுக்குப் போய் இருக்கிறீர்கள். நண்பர் வசதியானவர். நன்றாக உபசரித்து, உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார். இரவு வருகிறது. உங்களுக்கு என்று ஒரு தனி அறை தந்து "எங்கே படுத்துக் கொள்ளுங்கள்.  A C இருக்கிறது. இங்கே தண்ணி இருக்கிறது..." என்று எல்லாம்  எடுத்து வைத்துவிட்டு போகிறார். நீங்களும் பயணக் களைப்பு, உண்ட மயக்கம் 'அப்பாட' என்று நிம்மதியாக படுக்கிறீர்கள்.

சிறிது நேரத்தில் நண்பர் வந்து "ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்...இராத்திரி ஒரு பத்து பதினொரு மணிக்கு ஒரு ஆறடி நீள கரிய நாகப் பாம்பு ஒண்ணு இந்த ஜன்னல் வழியா வந்து அந்த ஜன்னல் வழியா போயிரும். உங்களை ஒண்ணும் செய்யாது...நீங்க பாட்டுக்கு தூங்குங்க" என்று சொல்லி விட்டுப் போகிறார்.

அப்புறம் தூக்கம் வருமா ? எப்போ பாம்பு வருமோ, என்ன செய்யுமோ என்று நெஞ்சு திக்கு திக்கு என்று அடித்துக் கொள்ளும் அல்லவா ? களைப்பு போயிரும், தூக்கம் போயிரும்....பயம் மட்டுமே இருக்கும்.

அது போல, இந்த வாழ்கை.

எல்லா சுகமும் இருக்கிறது...உணவு, உடை, மனைவி , மக்கள், நண்பர்கள், உறவு, சொத்து சுகம் எல்லாம் இருக்கிறது...புலன் இன்பம் அல்லது ஆசை என்ற பாம்பு அப்பப்ப வந்து போகும்...மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை....

இன்பங்களை அனுபவிக்க முடியுமா ? பாம்போடு வாழ முடியுமா ?

வேண்டாம்ப்பா இந்த பிறவி ...போதும்,  பட்டது எல்லாம் போதும், இனி ஒரு பிறவி  வேண்டாம் என்கிறார்  திருமங்கையாழ்வார்.

பாடல்


தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா.

பொருள்


தூங்கார் = சஞ்சலம் மிக்க

பிறவிக்க ளின்னம்= பிறவிகளில் இன்னும் 

புகப்பெய்து = நுழைய வைத்து

வாங்காயென்று = என்னை நீ வாங்கிக் கொள்ள மாட்டாய் என்று

சிந்தித்து = நினைத்து

நானதற் கஞ்சி = நான் அதற்கு அஞ்சி

பாம்போடு = பாம்போடு

ஒரு கூ ரையிலே = ஒரே கூரையின் கீழ் (வீட்டில் )

பயின்றாற்போல் = வசித்தார் போல

தாங்காதுள் ளம்தள்ளும்  = என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாது

என் தாமரைக் கண்ணா.= தாமரை போன்ற கண்களை உடையவனே


தூங்கும்போது பாம்பு வரும் என்று தெரிந்தும் தூங்குபவர்களை  என்ன செய்ய முடியும் ?


Saturday, April 18, 2015

பிரபந்தம் - வா போ வா

பிரபந்தம் - வா போ வா 


வீட்டில் பிள்ளைகள் இருக்கும் போது , அவர்களை அவ்வபோது கூப்பிட்டு ஏதாவது கேட்போம், சொல்வோம். குழந்தைகள், வீட்டின் வெறுமையை போக்குவார்கள். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஏதாவது சத்தம் இருக்கும், அதைக் காணோம், இதைக் காணோம் என்று தேடுவதும், கண்டு பிடித்தபின் மகிழ்வதும் நிகழும்.

அவர்களின் இருப்பின் அருமை எப்போது தெரியும் என்றால் அவர்கள் மேல் படிப்புக்காக, அல்லது திருமணம் முடித்து வீட்டை விட்டு போன பின் தெரியும். வீடு வெறுமையாக இருக்கும்.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள், அவர்களின் சத்தம், அவர்களுக்கு பிடித்த உணவு என்று எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அவர்கள் வீட்டை விட்டுப் போகப் போகிறார்கள் என்று தெரிந்த பின் அவர்கள் மேல் பாசம் மிக அதிகமாகும். இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கப் போகிறார்கள் என்று ஏக்கமாய் இருக்கும்.

அது மட்டும் அல்ல, அவர்கள் புது இடத்துக்குப் போய் எப்படி சமாளிப்பார்களோ, உணவு எப்படி இருக்குமோ, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்களோ , என்றெலாம் நம் பிள்ளைகளைப் பற்றிப் கவலைப் படுவோம் அல்லவா ?


இராமன் கானகம் போகப் போகிறான். தசரதனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

இராமன் மாளிகையில்  இருக்கும் போது ஒரு நிமிடம் கூட அவனை பார்க்காமல் இருக்க முடியாது  தசரதனுக்கு.  உடனே அவனை "வா" என்று கூப்பிடுவான். இராமன் வந்து "என்ன " என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் கூப்பிட்டேன், சரி நீ போ " என்பான். இராமன் போக ஆரம்பித்து கொஞ்ச தூரம் போன பின் "ஒரு நிமிஷம், இங்க வந்துட்டுப் போ " என்பான் . இராமனை பார்க்காமல் தசரதானால் ஒரு நிமிடம் இருக்க முடியாது.



புலம்புகிறான் ....


வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்

வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று

நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

பொருள்

வா = இராமா, நீ இங்கே வா என்பேன்

போகு = ஒண்ணும் இல்லை போ என்பேன்

வாஇன்னம் = இன்னொரு தரம் வா

வந்தொருகால் கண்டுபோ = ஒரு நிமிஷம் வந்து என்னை பாதுவிட்டுப் போ என்பேன்

மலராள் கூந்தல் = மலர் உள்ள கூந்தலைக் கொண்ட

வேய்போலு = மூங்கில் போல

மெழில் = அழகான

தோளி = தோள்களைக் கொண்ட (சீதையின் )

தன்பொருட்டா = அவளுக்காக

விடையோன்றன் = (விடை = எருது ) எருதின் மேல் ஏறியவனின் (சிவனின்)

வில்லைச் செற்றாய் = வில்லை முறித்தாய்

மாபோகு = யானைகள் அலையும்

நெடுங்கானம் = பெரிய வனம்

வல்வினையேன் = கொடிய வினை உடைய

மனமுருக்கும்  = மனத்தை உருக்கும்

மகனே = மகனே

இன்று = இன்று

நீபோக = நீ போக

என்னெஞ்ச = ஏன் நெஞ்சம்

இரு பிளவாய்ப் = இரண்டு பிளவாகப்

போகாதே = போகாமல்

நிற்கு மாறே = நிற்கின்றேனே



Friday, April 17, 2015

திருக்குறள் - நினைக்கப்படும்

திருக்குறள் - நினைக்கப்படும் 


நல்லவன் எல்லாம் துன்பப் படுகிறான்.

தீமை செய்பவன் நன்றாக சுகமாக இருக்கிறான்.

இதுதான் நாம் வாழ்வில் அன்றாடம் காண்பது.

சட்டத்தை மதிப்பவன், சமுதாயத்திற்கு பயப்படுபவன், நீதி நேர்மையை மதிப்பவன் துன்பத்தில் உழல்கிறான்.

பொய், புரட்டு, இலஞ்சம், இலாவண்யம், கொலை, கொள்ளை, திருட்டு என்று இருப்பவன் பெரிய பணக்காரனாக, பேரும் பெகுழுமாக இருக்கிறான்.

இப்படி இருந்தால் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று யாருக்குத் தோன்றும் ?

அறம் என்று ஒன்று இல்லையா ? இது எப்படி என்று வள்ளுவரிடம் கேட்டால் , இது நினைக்கப்படும் என்கிறார்.

பாடல்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

பொருள்

அவ்விய நெஞ்சத்தான் = கோட்டம் உள்ள மனம் கொண்டவனின்

ஆக்கமும் = செல்வமும், புகழும், பெருமையும்

செவ்வியான் = நேரிய வழியில் வாழ்பவனது


கேடும் = துன்பமான வாழ்கையும்

நினைக்கப் படும் = யோசிக்கப் பட வேண்டிய விஷயம்.


கேள்வி கேட்டால், நீயே யோசித்துக் கொள் என்கிறார் வள்ளுவர்.

காரணம் இல்லாமல் இல்லை.

நாம் யோசிப்போம்.

முதலில் இரண்டு மாணவர்களை எடுத்துக் கொள்வோம்.

ஒருவன் நல்லவன். மற்றவன் கெட்டவன் .

நல்ல மாணவன், தினமும் ஒழுங்காக படிப்பான், அனைத்து வகுப்புகளுக்கும் சென்று ஆசிரியர் சொல்வதை கவனமாக கேட்பான், அவர் சொல்வதை குறிப்பு எடுத்துக்  கொள்வான். வீட்டில் வந்து அவர் சொன்னதை படித்துப் பார்ப்பான். கடினமாக உழைப்பான். பரிட்சையில் ஒழுங்காக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுகிறான்.


மற்றவன், படிப்பது இல்லை, பாதி நாள் பள்ளிக்கு வருவது இல்லை, ஆசிரியர் சொல்லவதை கேட்பது இல்லை. பரிட்சையில் காப்பி அடித்து, பிட் வைத்து எழுதி பாஸ் பண்ணி அவன் நல்ல மாணவனை விட அதிகம் மதிப்பெண் பெற்று விடுகிறான்.


இப்போது யோசித்துப் பாருங்கள்.

கெட்டவனின் அதிக மதிப்பெண்களா, நல்ல மாணவனின் குறைந்த மதிப்பெண்களா  எது உயர்ந்தது ?

இருந்தாலும், நல்ல மாணவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காதே, நல்ல வேலை  கிடைக்காதே என்று நீங்கள் நினைக்கலாம்.

கெட்ட மாணவன், கல்லூரியிலும் இதையே தான் செய்வான். அப்படியே கல்லூரியில் வெற்றி பெற்று விட்டால் கூட , வேலை கிடைத்தால் கூட, செய்யும்  வேலைகளை தப்பும் தவறுமாக செய்து என்றோ ஒரு நாள் தனக்கும் , தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் கேட்டினையே தேடித் தருவான். அதில்  சந்தேகமே இல்லை. வேலை தெரியாமல் இருந்து கொண்டு அந்த வேலையை தக்க வைத்துக் கொள்ள படாத பாடு படுவான். செய்ய கூடாதனவற்றை எல்லாம் செய்வான். அவனுக்கு கீழேவேலை பார்ப்பவன் அவனை மதிக்க மாட்டான், அவனை ஏமாற்றுவான், அவனை பயமுறுத்துவான். நாளும் செத்து செத்து பிழைக்க வேண்டும்.

நினைத்துப் பாருங்கள்,  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் சிறந்ததா ? அப்படி ஒரு  வாழ்கை உங்களுக்கு வேண்டுமா ?

ஊரை ஏமாற்றி வாழ்பவன் சிறப்பாக இருக்கிறானே என்று நாம் நினைக்கலாம் ?

அவன் சிறப்பு என்ன என்று அவனுக்குத் தெரியும். என்றோ ஒரு நாள் சிறை செல்ல வேண்டி  இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். மரியாதை இழக்க வேண்டி வரும்.  மனைவியின் முன், பெற்ற பிள்ளைகளின் முன் தலை குனிந்து நிற்க வேண்டும் என்று நாளும் அவன் மனதுக்குள் புளுங்குவான். நிம்மதி  இருக்காது.

கெட்டவன் பெற்ற செல்வம் எப்படி வந்தது ? பல கெட்டவர்களின் கூட்டால் வந்தது. கெட்டவர்களின் சகவாசம் எங்கே கொண்டு போய் விடுமோ என்று அவன்  நாளும் நடுங்கிக் கொண்டிருப்பான். நம்மைப் போலத்தானே அவனும் ஒரு அயோக்கியன். நாளை என்னை காட்டி கொடுத்து விட்டால் என்ன செய்வது  என்று யாரைப் பார்த்தாலும் பயப் படுவான். நாளும் பயந்து பயந்து வாழ்வான்.

கெட்ட வழியில் பணம் சேர்த்தவன் எல்லோருக்கும் பயப்படவேண்டும்..

அதுமட்டும் அல்ல, எப்போ இந்த செல்வம் போகுமோ என்று மனதுக்குள் வருந்திக் கொண்டு  இருப்பான்.  இருக்கும் போதே அனுபவித்து விடுவோம் என்று  என்னென்ன தீய வழிகள் இருக்கிறதோ அத்தனையும் முயல்வான். அது அவனை மேலும் தீய வழியில் செலுத்தும்.

அது மட்டும் அல்ல, தீய வழியில் வந்த செல்வம் போகும்போது, அது நல்ல வழியில்  சேர்த்த கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் சேர்த்து கொண்டு போகும்.

கெட்ட வழியில் வந்த செல்வத்தை பாதுகாக்க மேலும் பல கெட்ட வழிகளில் செல்ல  வேண்டி இருக்கும். பணத்தை பதுக்க வேண்டும், மற்றவன் பேரில் சொத்து  வாங்க வேண்டி வரும், அவன் ஏமாற்றி விடாமல் இருக்க அவனை தாஜா செய்ய வேண்டும், மீறினால் அவனை கொலையும் செய்ய வேண்டும், எங்கே இந்த  கெட்டவன் தன்னை கொலை செய்து விடுவானோ என்று மற்றவன்  கெட்டவனை கொலை செய்ய வழி தேடிக் கொண்டிருப்பான்.

தூக்கம் போகும்.

நிம்மதி போகும்.

மானம் மரியாதை போகும்.

யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும்.

மாறாக, நல்லவன் சேர்த்த சொத்து கொஞ்சமாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழ  முடியும். நிம்மதியாக இருக்க முடியும். மரியாதையுடன் வாழ முடியும்.

நினைத்துப் பாருங்கள் - செவியான் கேடு உண்மையிலேயே கேடா ?

ஆழ்ந்த அர்த்தங்களை கொண்ட குறள் இது. இது பற்றி மேலும் சிந்திப்போம்.



Thursday, April 16, 2015

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?



கவிதைகளைப்  படிக்க, அது எழுதப் பட்ட மொழி மட்டும் தெரிந்தால் போதாது. கவிதைக்குப் பின்னால் இருக்கும் கவியின் மனநிலை புரியவேண்டும். அதை உணர வேண்டும்.

தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருவாசகம் படிக்கும் போது இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

எவ்வளவு ஆழமான நம்பிக்கை, குழைந்த மனம், பொங்கி பொங்கி வரும் சந்தோஷம், உருகும் பக்தி என்று அனைத்தையும் காணலாம்....காணும் மனம் இருந்தால்.

நாம் இறைவனை  வணங்குகிறோம்.சில பல பாடல்களை அவன் முன்னால் பாடுகிறோம். முடிந்த நாட்களில் கோவிலுக்குப் போகிறோம். மற்ற நேரம் எல்லாம், தினசரி வாழ்கை பிரச்சனைகளில் கிடந்து உழல்கிறோம். பிரச்னை மட்டும் இல்லை, வாழ்கை தரும் சந்தோஷங்களையும் அனுபவிக்கிறோம்  ....அப்பப்ப திரைப் படம் , டிவி , நல்ல தின்பண்டங்ள் , கணவன் மனைவியோடு இன்பம் , குழந்தைகளோடு, நண்பர்களோடு, உறவினர்களோடு என்று ஒன்றையும் விடுவது இல்லை.

இது என்ன பக்தி ?

கடவுளையும், வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு இறை அருள் கிடைக்குமா ? நாம் செய்வது உண்மையான பக்தியா ?

கிடைக்கும் என்கிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் சொல்கிறார்...

எனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூடஎனக்குத்  தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும்  உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள்.  எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.

பாடல்

கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.


சீர் பிரித்த பின்

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,
மெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.


பொருள் 

கையார் = கையில்

சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட

என் கரு மாணிக்கமே = என் கரு மாணிக்கமே

என்றென்று = என்று என்று

பொய்யே கைம்மை சொல்லிப்  = பொய்யாகச் சொல்லி

புறமே புறமே ஆடி = உலக விஷயங்களில் மூழ்கி  (இருந்தாலும்)

மெய்யே பெற்று ஒழிந்தேன் = உண்மையான உன்னை பெற்றேன்

விதிவாய்கு இன்று காப்பார் யார் = உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும்

ஐயோ = ஐயோ

கண்ணபிரான் = கண்ணபிரான்

அறையோ இனிப் போனாலே = நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது )

பொய்யாகவேனும் பக்தி செய்து   பாருங்கள்.நாளடைவில் அதுவே உண்மையாக  மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது. 


Wednesday, April 15, 2015

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?


இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? கருப்பா? சிவப்பா ? உயரமா ? குள்ளமா ? 

நமக்கு ஒன்றும் தெரியாது. சிலைகளும் படங்களும் யாரோ கற்பனையில் செய்தவை. நேரில் பார்த்து வந்து யாரும் அதைச் செய்யவில்லை. 

எனவே, இறைவன் நேரில் வந்தால் கூட நமக்கு அவன் இறைவன் என்று தெரியாது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்வோமா என்றால் அதுவும் சந்தேகம்தான். 

உனக்கு  எப்படித் தெரியும் என்று அவர்களை மேல் கேள்வி கேட்போம்.

அப்படி ஒரு முறை நிகழ்ந்தது. 

இறைவன் நேரில் வந்தான். 

அங்கிருத்த பெரியோர்கள் எல்லாம் அவன் இறைவன் என்றே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு சிலர் ஏற்றுக்  கொள்ளவில்லை. அவர்களில் ஒருவன் சிசுபாலன். 

வந்த இறை கண்ணன். 

ஏற்றுக் கொண்ட பெரியவர்கள் பீஷ்மர், துரோணர் போன்றோர்.

நடந்த இடம் தர்மனின் அசுவமேத யாகம் பூர்த்தி அடைந்த மண்டபத்தில், முதல் தாம்பூலம் யாருக்கு தருவது என்ற சிக்கல் எழுந்த போது .

 எல்லோரும் கண்ணனுக்கே முதல் தாம்பூலம் என்று ஏற்றுக் கொண்டார்கள். சிசு பாலனுக்கு பொறுக்கவில்லை. 

அரசர்கள் இருக்கும் அவையில் ஒரு இடையனுக்கு முதல் தாம்பூலமா என்று கொதித்து எழுந்தான். 

பாடல் 

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார், 
                                புறங்கானில் வாழ் 
கோபாலரோ'' என்று உருத்து, அங்கு அதிர்த்து, 
                                கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின் 
                                எய்தி, ஏழ் 
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.

பொருள் 

பூபாலர் அவையத்து = பூலோகத்தை காக்கும் அரசர்கள் இருக்கும் அவையில் 

முற்பூசை பெறுவார் = முதல் பூசை (தாம்பூலம்) பெறுவது 
 
புறங்கானில் = ஊருக்குப் புறத்தே காட்டில் 

வாழ் = வாழும் 
 
கோபாலரோ'' = மாடு மேய்பவனோ (கோ என்றால் பசு. பாலர் என்றால் காப்பவன்) 

என்று உருத்து = என்று கூறி 

அங்கு அதிர்த்து = அதிரச் சொல்லி 

கொதித்து = உள்ளம் கொதித்து 

ஓதினான் = கூறினான் 

காபாலி = சிவன் 

முனியாத = கோபம் கொள்ளாத 

வெங் காமன் = மன்மதன் 

நிகரான  = நிகரான , சமமான  

கவின் எய்தி =  அழகு கொண்ட  

ஏழ் தீ பால் = ஏழு தீவுகளிலும் 

அடங்காத புகழ் = அடங்காத புகழ் கொண்ட 

வீர = வீரனான 

கயம் அன்ன = யானையைப் போன்ற பலம் பொருந்திய 

சிசுபாலனே = சிசுபாலனே 


அது கதை. 

அழகு, வீரம், புகழ் இருக்கிறது. ஆணவம் தலைக்கு ஏறுகிறது. என்னை விட உயர்ந்தவன்  யார் என்ற எண்ணம் வருகிறது. 

இறைவனே வந்தால் கூட ஆணவம் கண்ணை மறைக்கிறது. 

திருமாலை இடையன்   என்று சொல்லி அழிந்தான் சிசுபாலன். 

திருமாலை மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

ஆணவம். 

ஆணவம் கண்ணை மறைக்கிறது. அறிவை மயக்குகிறது. அழிவைத் தருகிறது. 

தெளிந்த பார்வை வேண்டுமா ? எங்கேயாவது ஆணவம் இருக்கிறதா என்று பாருங்கள். ஆணவம் இருக்கும்வரை உண்மை தெரியாது. 

இறைவன் அருகில் இருந்தால் கூட உணர முடியாமல் போகும். 

யாருக்குத் தெரியும் ?  இறைவனுக்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள்  என்று ?


Tuesday, April 14, 2015

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை 


கணவனுக்கு சர்க்கரை வியாதி. இனிப்புப் பண்டங்களை சுவைக்க முடியாது. அதற்காக மனைவியும் இனிப்பு சாபிடாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும் எத்தனை நாள் இருக்க முடியும் ?

வாழ் நாள் பூராவும் இருந்தாள் காந்தாரி.

கணவனுக்கு கண் தெரியாது என்று அறிந்ததும், தன் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டாள் . கணவனுக்கு கிடைக்காத காட்சி இன்பம் எனக்கும் வேண்டாம் என்று வாழ் நாள் பூராவும் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் . கணவன் மேல் அவ்வளவு அன்பு.

காந்தாரிக்கும் திருதராஷ்டினருக்கும் 100 பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படி ? வருடத்திற்கு ஒன்று என்றாலும் நூறு வருடம் ஆக வேண்டுமே ?

காந்தாரியும், குந்தியும் ஒரே சமயத்தில் கருவுற்றார்கள். முதலில் குந்திக்கு பிள்ளை பிறந்தது.

இதை அறிந்த காந்தாரி , பொறாமையால், தன் வயிற்றில் கல்லால் இடித்துக் கொண்டாள் . அதனால் அவளின் கர்ப்பம் கலைந்தது. உதிரம் வெளிப்பட்டது. அந்த உதிரத்தை 100 கலன்களில்  சேமித்து வைத்தார்கள். அதனோடு கூட வெளிப்பட்ட திசுக்களையும் தனியாக சேர்த்து வைத்தார்கள். வியாதன் என்பவன்  கை படாமல் அவற்றை வளர்த்து 100 பிள்ளைகளாகச் செய்தான்.

இதைத்தான், பொறாமையில் காரியம் செய்தால் , "காந்தாரி இடித்துக் கொண்டு பிள்ளை பெற்றது போல " என்று சொல்லுவார்கள்.

பாடல்


அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற் 
பெற்றனள், குந்தி' என்னும் பேர் உரை கேட்ட அன்றே, 
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு 
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.


பொருள்

அற்றனள் துயரம் எல்லாம் =துன்பம் எல்லாம் தொலைத்தாள்

அருந் தவப் பயனால் = தான் செய்த பெரிய தவத்தால்

மைந்தற் பெற்றனள், குந்தி' = மைந்தனைப் பெற்றனள் குந்தி

என்னும் பேர் உரை கேட்ட அன்றே = என்ற பெரிய செய்தியைக் கேட்ட உடனே

உற்றனள் பொறாமை = பொறாமை உற்றாள் (காந்தாரி)

கல்லால் = கல்லால்

உதரம் = வயறு

உள் குழம்புமாறு =உள்ளே குழம்புமாறு

செற்றனள் = இடித்துக் கொண்டாள்

 தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் = தனக்கு நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்காமல்

.
இதில் உள்ள நுண்ணிய பொருளை சிந்திப்போம்:

பொறாமை - மற்றவர்கள் நன்மை அடைவதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாமை. 

பொறாமை கொண்டவன் தனக்குத் தானே தீமை தேடிக் கொள்வான். காந்தாரி  கல்லால் தன்  வயிற்றில் அடித்துக் கொண்டாள் குந்திக்கு என்ன தீங்கு வந்து விடும் ?  துன்பம் காந்தாரிக்குத் தான்.  பொறாமை  யாரிடம் இருக்கிறதோ அது அவர்களுக்குத்தான்  தீமை செய்யும். 

இரண்டாவது, பொறாமை கொண்டவர்கள் எது சரி எது தவறு என்று அறியமாட்டார்கள். "ஆக்கமும் கெடும் சிந்தியாதாள் " என்றார் வில்லிபுத்துராழ்வார்.  பொறாமை அறிவை மறைக்கும். 

மூன்றாவது, பொறாமை கொண்டவனுக்கு தீமை விளைவிக்கும். பொறாமையில்  இருந்து விளைவது ஊருக்குத் தீமை விளைவிக்கும். பொறாமையில் பிறந்தவர்கள் கௌரவர்கள். அவர்களால் அரச குலம் முற்றாக  அழிந்தது. 

நான்காவது, பொறாமை கஞ்சத் தனத்தை  தரும்.யாரும் நன்மை அடைந்து விடக் கூடாது  என்று நினைக்கும். எல்லாம் தனக்கே என்று நினைக்கும். 

பாண்டவர்கள் ஐந்து வீடுதான் கேட்டார்கள்.  ஐந்து வீடு கொடுத்து இருந்தால் சண்டையே இல்லை.  ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று கூறினான் துரியோதனன். 35,00,000 பேர் மாண்டு போனார்கள்....ஐந்து வீட்டுக்காக. 

பொறாமை தந்த கஞ்சத்தனம். 

எது வந்தாலும் வரலாம், பொறாமை வரவே கூடாது. 

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை என்ற ஒரு பாவி நம் செல்வத்தை  அழித்து, தீராத துன்பத்தில் நம்மை தள்ளி விடும் என்கிறார்  வள்ளுவர்.

குந்தியின் பெருமை கண்டு பொறாமை கொண்ட காந்தாரியின் செயல் அவளின்  பிள்ளைகளை  கொன்று,அரசை இழந்து, தீராத பழியையும் தேடித் தந்தது. 

ஒரு பாட்டில் இவ்வளவு அர்த்தம் - என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. இன்னும் எவ்வளவு  அர்த்தங்களோ. இப்படி எத்தனையோ பாடல்களைக் கொண்டது வில்லிப்புத்துராழ்வார் அருளிச் செய்த மகா பாரதத்தில். 

நேரம் இருப்பின்,  மூல நூலை படித்துப் பாருங்கள். 

பருக பருக திகட்டாத தேன்.  


Monday, April 13, 2015

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது 


நிறைய செல்வம் இருந்தால் நமக்கு என்ன என்ன இன்பம் எல்லாம் கிடைக்கும் ?

புகழ், மதிப்பு, இன்பம், துன்பம் இல்லா வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, பெரிவர்களின் தொடர்பு ...இது போன்றவை கிடைக்கும் அல்லவா ?

அது போல, நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்தால் இவை எல்லாம் கிடைக்கும். நல்ல ஒழுக்கம் வாழ்வில் முன்னேற்றம் தரும், நல்லவர்களின் தொடர்பைத் தரும், வாழ்கை சுகமாக இருக்கும், யாரைப் பற்றியும் பயம் இருக்காது, அது நம்மை முன்னேற்றி செல்வமும் தரும். எனவே, நல்ல ஒழுக்கம் செல்வத்தைப் போன்றது. செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை என்று சிலர் ஒழுக்கம் அற்ற வழியில் அதை தேட முயல்கிறார்கள். அது தவறான வழி. ஒழுக்கமான வாழ்வே செல்வம் நிறைந்த வாழ்வை போன்ற திருப்தியும் நிம்மதியும் தரும்.

துறவறம் இனிமையானது. எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. இதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு கானகம் போக வேண்டிய அவசியம் இல்லை. இல்லறத்தில் இருந்து, எதையும் அளவோடு அனுபவித்து வாழ்வது துறவம் போன்றது. எதிலும் நிதானம். எதிலும் ஒரு அளவு. கிடைக்கும் போது அளவோடு அனுபவிப்பது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருந்துவது இல்லை. இது துறவறம் போன்றது ஆகும்.

ஒருவரிடம் நடப்பாக இருக்கும் போது அவர் தன்னைப் பற்றியும், தனக்கு நிகழும் நல்லது கெட்டது பற்றியும் நம்மிடம் சொல்லி இருப்பார். பின், அந்த நட்பு முறிந்து விலக நேரிட்டால், அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்வது அவரை கொலை செய்வது போன்றது ஆகும்.

நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றி சொல்வது, இழிவான செயலாகும்.

பாடல்

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.

பொருள்


திருவொக்குந் = திரு ஒக்கும். செல்வத்தை போன்றது.

தீதில் ஒழுக்கம் = தீது இல்லாத ஒழுக்கம்

பெரிய அறனொக்கும் = பெரிய அறத்தைப் போன்றது. அது என்ன பெரிய அறம் ? துறவறம் உள்ள அறங்களில் பெரிய அறம்

ஆற்றின் ஒழுகல் = முறையோடு வாழ்தல்.  முறையோடு வாழ்தல் என்பது இல்லறத்தில் இருந்து முறைப் படி வாழ்தல்.

பிறனைக் கொலையொக்குங் = பிறனை + கொலை + ஒக்கும் = பிறனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்

கொண்டு = முதலில் நட்பு கொண்டு

கண் மாறல்= பின் அது மாறி, நடப்புக்கு எதிரான செயல்களை செய்வது

புலையொக்கும் = இழிவானதாகும்

போற்றாதார் முன்னர்ச் செலவு = நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றிச்  சொல்வது


அது எப்படி ஒழுக்கமாக இருப்பது செல்வத்திற்கு ஒப்பாகும் ? இன்னும் சொல்லப் போனால் ஒழுக்கமாக வாழ்பவன் செல்வம் இல்லாமல் துன்பப் படுவதைப் பார்க்கிறோம். ஒழுக்கம் இல்லாதவன் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்த்து  சந்தோஷமாக இருப்பது கண்ணெதிரில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நம்பும் படி இல்லை. கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராது ...என்று நாம் நினைக்கலாம்.

இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.