Saturday, June 13, 2015

இராமாயணம் - பிறவியின் பகைவன்

இராமாயணம் - பிறவியின் பகைவன் 



இறைவனை யாரும் கண்டதில்லை. இறைவனைப் பற்றி நிறைய கதைகள் கேள்விப் பட்டிருக்கிறோம். அவையெல்லாம் உண்மையா கற்பனையா என்று தெரியாது.

அப்படி இருக்கும் போது , காணாத ஒன்றின் மேல் எப்படி அன்பு, பக்தி எல்லாம் வரும் ?

வீடணன் எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாய் இல்லை. இராவணனை விட்டு விட்டு இராமனிடம் செல்வதாக முடிவு செய்து விட்டான்.

"நான் இராமனை இதற்கு முன்னாள் பார்த்தது இல்லை. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை. ஆனாலும் அவன் மேல் அன்பு தோன்றக் காரணம் எதுவும் தெரியவில்லை. எலும்பு வரைக் குளிர்கிறது. நெஞ்சு உருகுகிறது. இந்த புன்மையான பிறவியின் பகைவன் அவன் போலும் "

என்று உருகுகிறான்.

பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.


பொருள்

'முன்புறக் கண்டிலென் = முன்பு அவனைக் கண்டதில்லை

கேள்வி முன்பு இலென் = அவனைப் பற்றி முன்பு கேட்டது கூட இல்லை

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் = அவன் மேல் அன்பு வரக் காரணம் தெரியவில்லை

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிரும்

நெஞ்சு உருகுமேல் = என் மனம் உருகுகிறது

அவன் = இராமன்

புன் புறப் பிறவியின் = புன்மையான பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல் இருக்கிறது .

காணவும் இல்லை.

கேட்கவும் இல்லை.

இருந்தும் அன்பு பிறக்கிறது.

எனவேதான் அரக்க குலத்தில் பிறந்த வீடணனை விபீஷண ஆழ்வார் என்று கொண்டாடுகிறது வைணவம்.

நம்புங்கள், காண்பீர்கள்.

You will see it, when you believe it.



திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.

திருவாசகம் - கற்பனவும் இனி அமையும்.


முந்தைய ப்ளாகில் திருவாசகத்தில் இருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். அதில் வரும் ஒரு வரி, "கற்பனவும் இனி அமையும்" என்பது.

அதன் அர்த்தம் என்ன ?

கற்பனவும் + இனி + அமையும் = இனி மேல் கற்க வேண்டியது ஒன்றும் இல்லை. நூல்களை கற்று பெரிதாக ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது என்ற தொனியில். படித்தது எல்லாம் போதும். இது வரை படித்தது போதும்...இறைவன் என்பவன் படித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அல்ல என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

அமையும் என்ற சொல்ல அபிராமி பட்டரும் கையாண்டிருக்கிறார்.....


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

என்ற பாடலில்


உலகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்றல்ல.

பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்லுவார்

"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்"  என்று.

இறைவனை உணர முடியும். ஓத முடியாது.

அதாவது, படித்து புரிந்து கொள்ள முடியாது. உணர முடியும்.

கன்றை ஈன்ற பசு எப்படி தன் கன்றை உணர்கிறதோ அப்படி. பசு படித்து அறிவது அல்ல. ஆனாலும் அது உணர்கிறது.

பிறிதொரு இடத்தில் மாணிக்க வாசகர் சொல்லுவார்.


சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் 

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


சொல்லிய பாட்டின் பொருள் "உணர்ந்து" சொல்லுவார் என்றார்.

சொல்லிய பாட்டின் பொருள் "அறிந்து " சொல்லுவார் என்று சொல்லவில்லை.

இறை என்பது தனி மனித அனுபவம்.

மனித அறிவுக்கு எல்லை உண்டு. அந்த எல்லையை தாண்டிய ஒன்று இறை அனுபவம்.


சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க

என்பார் மணிவாசகர்.

சொல்லும், பதமும், சித்தமும் செல்லாத இடம் அது.


பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும்

பிரபந்தம் - வேண்டியதும், வேண்டாததும் 


இன்பமும் நிம்மதியும் எங்கு இருக்கிறது ?

சேவை செய்வதில் இருக்கிறது. எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும் மனதில் ஒரு திருப்தி, நிம்மதி, சுகம் எப்போது வரும் என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது . பலன் கருதா உதவி செய்யும் போது இன்பம் பிறக்கும்.

எனக்கு, எனக்கு என்று ஆலாய் பறந்து பணம் சேர்த்துக் கொண்டே இருந்தால் செல்வம் பெருகும், ஆனால் இன்பம் பெருகுமா ?

பக்தி மார்கத்தில் இதை இறைவனுக்கு அடிமை செய்வது என்று சொல்கிறார்கள். அடிமை என்றால் ஏதோ கேவலமான வார்த்தை இல்லை. பலன் எதுவும் எதிர் பார்க்காமல், அவனுக்கு என்று செய்வது. அவ்வளவுதான்.

எல்லோருமே அவன் குழந்தைகள் தானே ? அவனுக்குச் செய்தால் என்ன, அவன் குழந்தைகளுக்குச் செய்தால் என்ன ?

பிரதி பலன் எதிர்பாராமல் பிறருக்குச் செய்யும் உதவி, அவனுக்குச் செய்யும் பக்திதான்.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடு, செல்வம் கொடு, பட்டம் , பதவி கொடு என்று கேட்போம்.

குலசேகர ஆழ்வார் இதையெல்லாம் வேண்டாம் என்று ஆண்டவனை வேண்டுகிறார்.

இந்த உடல் இருக்கிறதே, ஒவ்வொரு நாளும் மாமிசத்தால் எடை ஏறிக் கொண்டே போகிறது.  வேண்டாம் இந்த உடலே வேண்டாம்.  பெருமாளே உனக்கு அடிமை செய்வது மட்டும் தான் வேண்டும். திருவேங்கட மலையில் உள்ள கோனேரி என்ற தீர்த்தத்தில் குருகு (நாரை) ஆக பிறப்பதையே வேண்டுவேன் என்கிறார்.

பாடல்

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

சீர் பிரித்த பின்

ஊன் ஏறு  செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ்  வென்றான் அடிமை  திறம் அல்லாமல் 
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

பொருள் 

ஊன் ஏறு = மாமிசம் ஏறும்

செல்வத்து = செல்வத்துடன் கூடிய

உடற் பிறவி  = இந்த உடலை

யான் வேண்டேன் = நான் வேண்டேன்

ஆன் ஏறு ஏழ்  = ஏழு காளைகளை

 வென்றான்  = வென்ற கண்ணனின்

அடிமை  திறம் அல்லாமல் = அடிமை செய்யும் தொழில் அல்லாமால்

கூன் ஏறு சங்கம் = வளைந்த சங்கை

இடத்தான் தன் = இடக்கையில் கொண்ட

வேங்கடத்து = திரு வேங்கட மலையில்

கோனேரி = கோனேரி என்ற தீர்த்தத்தில்

வாழும் = வாழும்

குருகாய்ப் பிறப்பேனே = நாரையாகப் பிறக்கும் படி வேண்டுவேன்

அது என்ன மனிதப் பிறவியை வேண்டாம், ஆனால் நாரையாகப் பிறக்க வேண்டும் என்கிறாரே ஆழ்வார் என்று நமக்குத் தோன்றும்.

மனிதப் பிறவியை விட நாரை உயர்ந்ததா ?

இல்லை. ஆனால், விலங்குகளிடம் பேராசை இல்லை, பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணுவது இல்லை, அளவுக்கு அதிகமாக உண்பது இல்லை, மிக எளிமையாக வாழ வேண்டும் என்று சொல்ல வருகிறார் ஆழ்வார்.

இதே கருத்தை மாணிக்க வாசகரிலும் நாம் பார்க்கலாம்.

இவர் நாரையாக பிறக்க வேண்டும் என்றார் ,அவர் கன்றை ஈன்ற பசுவைப் போல ஆக வேண்டும்  என்றார்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

(கற்றா = கன்றை ஈன்ற ஆ , பசு )

நாரை,  நீர் இருக்கும் வரை இருக்கும். நீர் வற்றிப் போனால் திருவேங்கட மலையை விட்டுப்   போய்விடுமே ...என்ற சந்தேகம் ஆழ்வாருக்கு வருகிறது.

அதற்கு அடுத்த பாசுரத்தில் சொல்கிறார் ஆழ்வார்....



Friday, June 12, 2015

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?

வில்லி பாரதம் - இறைவனுக்குத்தான் வேறு வேலை என்ன இருக்கிறது ?


நம்பிக்கை.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு செல்வம், அதிகாரம், இருந்தாலும்...வாழ்வில் சில நேரம் வரும்...நம்பிக்கை தளரும் நேரம் வரும்....

அத்தனை செல்வமும், அதிகாரமும், உறவும், நட்பும் உதவாமல் போகும் காலம் வரும்.

நம் பலத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று சில நேரம் வரும்.

நம்பிக்கை தளரும். என்னால் முடியாது என்று மனமும் உடலும் சோர்ந்து போகும் நேரம் வரும்.

என்ன செய்வது ? யாரைக் கேட்பது, யார் உதவுவார்கள், எப்படி சமாளிப்பது என்று திகைக்கும் காலம் வரும்.

அந்த நேரத்தில் நம்பிக்கையை ஊட்ட நம் இலக்கியங்கள் உதவுகின்றன.

இறைவனை நம்பு. அவன் உனக்கு உதவே காத்து இருக்கிறான்...அவனுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது என்று படித்துப்  படித்து சொல்கின்றன.

அப்படி ஒரு நெருக்கடி பாண்டவர்களுக்கு வந்தது.....

பாண்டவர்கள் வன வாசம் செய்யும் காலம்.

அந்த நேரத்தில் துருவாசர் என்ற முனிவர் தன் சீடர்கள் புடை சூழ துரியோதனின் அரண்மனைக்கு வந்தார். துரியோதனனும் அவரை நன்றாக உபசரித்தான். அதில் மகிழ்ந்த அவர், "உனக்கு என்ன வேண்டும் " என்று கேட்டார்.

"முனிவரே, எப்படி இங்கு வந்து விருந்து உண்டு எங்களை மகிழ்வித்தீர்களோ, அதே போல் பாண்டவர்களையும் மகிழ்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

பாண்டவர்களோ வனத்தில் இருக்கிறார்கள். முனிவரின் கூட்டமோ பெரியது. எப்படியும் பாண்டவர்களால் முனிவரின் கூட்டத்திற்கு உணவளிக்க முடியாது. அதனால் சினம் கொண்டு முனிவர் அவர்களை   சபிப்பார்...பாண்டவர்கள் நல்லா கஷ்டப்பட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அப்படி கேட்டான் துரியோதனன்.

முனிவரும் தன் மாணவ குழாத்துடன் பாண்டவர்கள் இருக்கும் இடம் வந்தார்.

பாண்டவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். பாண்டவர்களில் புத்திசாலி சகாதேவன்.

அவன் சொன்னான் "கண்ணனை அழைப்போம்...அவன்தான் நம்மை காக்க முடியும் " என்று.

கண்ணன் இருப்பது துவாரகையில். பாண்டவர்கள் இருப்பதோ கானகத்தில். முனிவர் குளிக்கப் போய் இருக்கிறார். அவர் குளித்து வருவதற்குள் கண்ணன் வந்து  இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.

முதலில் கண்ணனுக்கு எப்படி செய்தி அனுப்புவது ?

இறைவன் , தன்னை யார் எப்போது எங்கு அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பானாம். கூப்பிட்ட உடனே ஓடி வந்து விடுவானாம்.

தருமன் , கண்ணனை நினைத்தவுடன் உடனே அவன் மனத்தில் வந்து நின்றானாம்.

பாடல்

தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக, 
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை 
                           அறத்தின் மகன்; 
'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்' 
                           என நின்ற 
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை 
                           வந்து உதித்தானே.

பொருள்

தப்பு ஓதாமல் = தவறாக எதையும் பேசாத (தருமன்)

தம்பியர்க்கும் = தம்பிகளுக்கும்

தருமக் கொடிக்கும் = தர்மமே கொடியாக வந்தது போல் இருந்த பாஞ்சாலிக்கும்

இதமாக = இதமாக

அப்போது = அந்த நேரத்தில்

உணரும்படி = தன்னை உணரும்படி கண்ணனிடம் வேண்டினான்

உணர்ந்தான் =  அதை உணர்ந்தான். யார் ?

அசோதை மகனை = யசோதை மகன்

அறத்தின் மகன்= தர்மத்தின் மகன் (தர்ம புத்திரன்)

'எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்'
                           என நின்ற = எப்போது , யாவர், எவ்விடத்தில் என்னை நினைப்பார்கள்  என்று இருக்கும்

ஒப்பு ஓத அரியான் = தனக்கு ஒப்பு இல்லாத , வாசித்து அறியமுடியாத அவன்

உதிட்டிரன் தன் = தர்ம புத்திரனின்

உளப்போதிடை = உள்ளித்தில்

வந்து உதித்தானே = வந்து உதித்தான்


நம்புங்கள். அதுதான் வாழ்க்கை. 


Wednesday, June 10, 2015

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே

பிரபந்தம் - குட்டி யானை போன்றவனே 



பிள்ளை இல்லை என்றால் அது ஒரு கவலை.

பெற்ற பிள்ளையை கையில் எடுத்து கொஞ்ச முடியவில்லை என்றால் அது எவ்வளவு துன்பமாக இருக்கும் ஒரு தாய்க்கு ?

தேவகி கண்ணனை பெற்றாள் .

பெற்ற அன்றே அவனை ஆயர்பாடிக்கு அனுப்பி விட்டாள் .

அவனை, கொஞ்சி கொஞ்சி வளர்த்தது எல்லாம் யசோதைதான்.

தேவகி, கண்ணனை தாலாட்டி , சீராட்டி , கொஞ்சி வளர்க்க முடியவில்லையே என்று உருகி வருந்திப் பாடுவதாக குலசேகர ஆழ்வார் பத்துப் பாடல்கள் பாடி இருக்கிறார்.

படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் வரும்.

பாடல்

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே

சீர் பிரித்தபின்

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ,  அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று உன்னை என் வாயிடை 
நிறைய தால் ஒலித்திடும் திருவினை  இல்லாத் தாயரில் கடையாயின தாயே

பொருள்

ஆலை = ஆலையில்

நீள் கரும்பு = நீண்ட கரும்பு

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

அம்புயத் = அன்புஜம், தாமரை போன்ற

தடங் = அகன்ற

கண்ணினன் தாலோ = கண்ணினைக் கொண்டவனே தாலேலோ

வேலை = கடல்

நீர் = நீர்

நிறத்து = நிறம்

அன்னவன் = போன்றவனே

தாலோ = தாலேலோ

வேழப் = யானை

போதகம் = குட்டி

அன்னவன் தாலோ = போன்றவனே தாலேலோ

ஏலவார் குழல் = மணம்மிக்க  முடியை உடைய 

என் மகன் தாலோ = என் மகனே தாலேலோ

என்று = என்று

உன்னை  = உன்னை

என் வாயிடை = என் வாயால்

நிறைய = நிறைய

தால் ஒலித்திடும் = தாலாட்டுப் பாடிடும்

திருவினை = திருவினை , புண்ணியம்

இல்லாத் தாயரில் = இல்லாத தாயரில்

கடையாயின தாயே = மிக கடைப் பட்டவள் நானே

கரும்பு போல இருப்பானாம்....கண்ணன் தலையில் மயில் பீலி செருகி இருப்பான். கருப்பாய் இருப்பான். அது போல கரும்பும் கருப்பாய் தலையில் தோகையோடு இருக்கும். பொருத்தமான உதாரணம்.

கண்ணன், பாலும், வெண்ணையும், நெய்யும் தின்று குண்டு குண்டாக கறுப்பாக இருப்பன் அல்லவா ...எனவே யானைக் குட்டி என்றாள்.

தால் என்றால் நாக்கு என்று பொருள்.

தால் + ஆட்டு = தாலாட்டு.

தாய்மார்கள், குழந்தையை தூங்கப் பண்ண "ரோ ரோ...",. "லா லா " என்று  நாக்கை அசைத்து  ஒலி எழுப்புவார்கள். குழந்தைக்கு மொழி தெரியாது. அந்த நாக்கு அசையும் சத்தத்தில் அது தூங்கிப் போய்விடும். எனவே அதற்கு தாலாட்டு என்று பெயர்.

எப்படி எல்லாம் யசோதை கண்ணனை கொஞ்சி, தாலாட்டி சீராட்டி இருப்பாள்....எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று வருந்துவதாக  குலசேகர ஆழ்வார் பாடுகிறார்.

தேவகியே கூட இவ்வளவு உருகி இருப்பாளா என்று தெரியாது. ஆழ்வார் அவ்வளவு உருகுகிறார்.

மனம் ஒன்றி வாசித்துப் பாருங்கள்....மனதுக்குள் என்னவோ செய்யும்.

 





Monday, June 8, 2015

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?

பிரபந்தம் - எப்போது பக்தி செய்ய ஆரம்பிக்கலாம் ?


பொதுவாக ஒரு அம்பது, அறுபதுகளில் பக்தி செய்யலாம் என்று ஒரு விதி வைத்து இருக்கிறோம்.

கோவில், கதா கலாட்சேபம் என்று பார்த்தால் வயதானவர்கள்தான் பொதுவாக இருப்பார்கள்.

படிக்கணும், வேலை தேடணும் , கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும், பின் பிள்ளைகள், பின் பிள்ளைகளை வளர்க்க வேண்டும், அதுகளுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், அதுகளுக்கு ஒரு வாரிசு வேண்டும், இதற்கிடையில் வயதான பெற்றோர், அவர்களை வேறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எல்லாம் முடிந்து, இவற்றில் இருந்து விடுதலை அடைந்த பின், இறைவன் மேல் பக்தி செலுத்த நேரம் இருக்கும் என்று நினைக்கிறோம். அது வரை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

இராமலிங்க அடிகள் கூறினார்...பக்தியில் தோய்ந்து இறைவனை வழிபட முதலில் தாய் தடை என்றேன், பின் தாரம் தடை என்றேன், பின் பிள்ளைகள் தடை என்றேன், இப்படி ஒவ்வொரு தடையாக வந்து கொண்டே இருந்தால் நான் எப்போதுதான் உன் அருளை பெறுவது என்று...

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே. 

என் செய்வேன், என் செய்வேன் என்று புலம்புகிறார்.


அப்புறம், நாளை, அடுத்த வருடம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

சரி, ஒத்துக் கொள்கிறேன்...அம்பது அறுபது கொஞ்சம் தாமதமான வருடம் தான்...ஒரு நாப்பது ? முப்பது சரியாக இருக்குமா என்று பொய்கை ஆழ்வாரிடம் கேட்போம்....

இல்லை, அதுவும் ரொம்ப தாமதமான காலம் என்கிறார்.

சரி, ஒரு இருபது , முப்பது ?

இல்லவே இல்லை என்று சாதிக்கிறார்.

சரி, ஒரு அஞ்சு பத்து வயசு சரியாக இருக்குமா என்று கேட்டால், இல்லை அதுவும் late என்கிறார்.

பின் எப்ப ஆரம்பிப்பது ? பிறந்த உடனேயா என்றால் , இல்லை அதுவும் காலம் கடந்தது என்கிறார்.

கருவிலேயே பக்தி செய்யத் தொடங்கி விட்டாராம்....

பாடல்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

சீர் பிரித்த பின்

ஒன்றும்  மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கரு அரங்கத்துள் கிடந்து  கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை.

பொருள்

ஒன்றும்  மறந்து அறியேன் = எதையும் நான் மறக்க வில்லை

ஓத நீர் = பொங்கும் நீர் (கடல் )

வண்ணனை நான் = போன்ற வண்ணம் கொண்ட (கடல் போன்ற நிறம் கொண்ட அவனை )

இன்று மறப்பனோ ஏழைகாள் = இன்று மறப்பேனா ?

அன்று = அன்று

கரு அரங்கத்துள் கிடந்து = கருவில் இருக்கும் போதே

கை தொழுதேன் = கை தொழுதேன்

கண்டேன் = கண்டேன்

திருவரங்க மேயான் திசை = திருவரங்கத்தில் உள்ள அவன் திசை

இது ஆழ்வார் மட்டும் சொல்லவில்லை.

திருநாவுகரசரும் இதையே சொல்கிறார்.

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

சீர் பிரிப்போம்.

கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும்  கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உந்தன் நாமம் பயின்றேன் உனதருளால் 
திருவாய்ப் பொலியச் "சிவாய நம" என்று  நீறு அணிந்தேன் 
தருவாய் சிவ கதி நீ பாதிரிப் புலியூர் அரனே.

நம்மால் கருவில் இருந்து இப்போது தொடங்க முடியாது.

நாம் இரண்டு செய்யலாம்...

ஒன்று, பக்தி பற்றி இன்றிலிருந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

இரண்டு, பிள்ளைகளுக்கு, இளையவர்களுக்கு அது பற்றி சிந்திக்கக் கற்றுத் தரலாம்.

பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள்...இளமையிலேயே பக்தி என்ற உணர்வைப் பெறுவதில் ஏதோ நன்மை இருக்கலாம்.

சிந்திப்போம்.

Sunday, June 7, 2015

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன்

பிரபந்தம் - உன் வழிகளை நான் அறியேன் 


நமக்கு நெருங்கியவர்களிடம் நாம் செலுத்தும் அன்புக்கு ஏதாவது விதி வைத்து இருக்கிறோமா ?

படித்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று பிள்ளைகளிடம் சொல்கிறோமா ?

பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று கணவனிடம் சொல்கிறோமா ?

நம் பிள்ளை, நம் கணவன், நம் மனைவி, என்று எல்லோரிடமும் அன்பு செலுத்த நாம் காரணம் கேட்பது இல்லை. நம் பிள்ளைகள், என் மனைவி, என் கணவன் என்பது மட்டும் போதும்.

அது போல, இறைவனிடம் அன்பு செலுத்தவும், காரணம் ஒன்றும் வேண்டாம்.

அவன் நமக்காக அற்புதங்கள் செய்து காட்ட வேண்டாம், மலையை தூக்கினால் தான் உன் மேல் அன்பு செலுத்துவேன் என்று சொல்ல வேண்டாம்.




பொய்கை ஆழ்வார் சொல்கிறார்....நீ ஓரடியால் இந்த உலகம் அனைத்தையும் நீ அளந்தாய் என்று சொல்கிறார்கள். இன்னோர் அடியால் மேல் உலகத்தை அளந்தாய் என்று சொல்கிறார்கள். நீ சிறு பிள்ளையாக இருக்கும் போது பேய் உருவில் வந்த பூதகியை கொன்றாய் என்று சொல்கிறார்கள். நீ எப்படி செய்தாயோ எனக்குத் தெரியாது. ....என்று சொல்லும் போதே , உன் மேல் எனக்குள்ள அன்பு  இந்த வித்தைகளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லுவது நமக்குப் புரியும்.

பாடல்

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

சீர் பிரித்தபின்

பார் அளவு ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த 
நீர் அளவும்  செல்ல நிமிர்ந்ததே –  சூர் உருவில் 
பேய் அளவு  கண்ட பெருமான் அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி.

பொருள்

பார் அளவு = இந்த உலகின் அளவை

ஓர் அடி வைத்து = ஓர் அடி வைத்து அளந்தாய்

ஓர் அடியும் = இன்னோர் அடியாள்

பார் உடுத்த = இந்த உலகை சூழ்ந்த

நீர் அளவும்  =  ஆவரண நீர் என்று சொல்வார்களே

செல்ல நிமிர்ந்ததே –  அது வரை சென்றது

சூர் உருவில் = தெய்வப் பெண் வடிவில் வந்த

பேய் = பூதகியின்

அளவு  கண்ட = ஆயுளின் எல்லை கண்ட (அவளை கொன்ற )

பெருமான் = பெருமானே

அறிகிலேன்,= நான் அறிய மாட்டேன்

நீயளவு கண்ட நெறி = நீ எப்படி, யாரை அளக்கிறாய் என்பதை

குணங்களைத் தாண்டி, அவனை , அவனுக்காகவே நேசித்தார் பொய்கை ஆழ்வார்.

காரணம் இல்லாத அன்பு.

எதிர் பார்ப்பு எதுவும் இல்லாத அன்பு.

ஒரு தாய் , தன் பிள்ளையின் மேல் செலுத்தும் அன்பைப் போல.

பக்தியின் புதிய எல்லை.

மீண்டும் ஒரு முறை பாசுரத்தை வாசித்துப்  பாருங்கள்.