Saturday, September 19, 2015

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே 


சில மதங்களைப் பார்த்தால், அவை, எங்கள் கடவுளை வணங்குபவர்களுக்குத்தான் சொர்க்கம், எங்கள் புனித நூலை பின் பற்றுபவர்களுக்குத்தான் சொர்க்கம், வீடு பேறு என்று கூறும். நற்கதி  அடைய வேண்டும் என்றால் முதலில் அவர்கள் மதத்துக்கு மாற வேண்டும்.

இந்து மதப் பெரியவர்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.

ஞான சம்பந்தர் கூறுகிறார்.....

வையகம் துயர் தீர்கவே என்று. இந்த உலகம் பூராவிலும் உள்ள துயரங்கள் தீரட்டும் என்று.

இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, சைவ சமயத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல....உலகில் உள்ள அனைத்து துயரமும் தீரட்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


பொருள்

வாழ்க அந்தணர் = அந்தணர்கள் வாழ்க

வானவ ரானினம் = தேவர்கள் , பசுக்கள்  வாழ்க

வீழ்க தண்புனல் = குளிர்ந்த மழை விழட்டும்

வேந்தனு மோங்குக = அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்து பெருமை அடையட்டும்

ஆழ்க தீயதெல் லாம் = தீயது என்று சொல்லப் பட்டது எல்லாம், மூழ்கிப் போகட்டும்

அரன் நாமமே சூழ்க = சிவனின் நாமமே எங்கும் நிறையட்டும்

வையக முந்துயர் தீர்கவே. = வையகமும் துயர் தீரட்டும்

அந்தணர்கள் வாழ்க என்றார். ஏன் அந்தணர் மட்டும் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ வேண்டாமா ?

அந்தணர் என்போர் அறவோர் என்பார் திருவள்ளுவர். அறவழியில் நிற்பவர்கள் யார் என்றாலும் அவர்கள் அந்தணர்கள் தான். அறவழியில் நிற்பவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மக்கள் அற வழியில் நிற்க வேண்டும்.
நல்ல மழை பொழிய வேண்டும்.
பசுக்கள் வாழ வேண்டும் என்றால் நிறைய புல் வேண்டும். ஊரெல்லாம் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.
அரசன் நல்ல ஆட்சியை தர வேண்டும்.
தீமை எல்லாம் குழி தோண்டி  புதைக்கப் பட வேண்டும்
வையகம் துயர் தீர வேண்டும். வையகத்தில் யாரும் துன்பப் படக் கூடாது.

எவ்வளவு பெரிய  மனம்.எவ்வளவு உயர்ந்த எண்ணம்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் வாழ்ந்த நாடு இது.





திருப் புகழ் - இவன் நம்ம ஆளு

திருப் புகழ் - இவன் நம்ம ஆளு 


ஆளும் கட்சி ஆள் என்றால் காவல் துறை தொடப் பயப்படும். நமக்கு எதுக்கு பெரிய இடத்து வம்பு என்று.

அது போல, முருகனின் பக்தர்கள் என்றால், எமன் தொடப் பயப்படுவான்.

ஆனால், நீங்கள் முருகனின் பக்தர்கள் என்று யார் சொல்வது ? யார் சொன்னால் எமன் கேட்பான் ?

முருகனே வந்து சொன்னால் , அதுக்கு வேற அப்பீல் இல்லை அல்லவா ?

எமன் வரும்போது, முருகன் நேரில் வந்து அவனிடம், "இவன் நம்ம ஆளு" என்று சொல்வானாம்.

எப்ப தெரியுமா ?

கடைசி காலத்தில், நம்மைச் சுற்றி கொஞ்ச பேர் நிற்ப்பார்கள்....அப்போது வருவான்....

யார் எல்லாம் அந்த கொஞ்சப் பேர்?

பசி என்று அறிந்து, பால் தந்து, முதுகு தடவி விட்ட தாயார்,
உடன் பிறந்த தம்பி
வேலை ஆட்கள்
அன்பான தங்கை (அது என்ன தங்கைக்கு மட்டும் அன்பான ?)
மருமக்கள்
பிள்ளைகள்
மனைவி

எல்லோரும் சுத்தி நின்று வருந்தி நிற்கும் போது , மயில் மேல் வலிய ஏறி வந்து, பயப்படாதே என்று ஆறுதல் கூறி, இந்த மனிதன் நம் அன்பன் என்று அந்த எமனிடம் கூறுவாயே,

சிவன் தந்தவனே, திருச்செந்தில் இருப்பவனே....

என்று பொழிகிறார் அருணகிரிநாதர்.

திருச்செந்தூர் திருப்புகழ்.....

பாடல்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

சீர் பிரித்த பின்

தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து
முதுகு தடவிய தாயார்

தம்பி

பணிவிடை செய் தொண்டர்

பிரியமுள தங்கை

மருகருயிர் எனவே சார்

மைந்தர்

மனைவியர்

கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி

பகர் கேடா

வந்து தலை மயிர் அவிழ்த்து தரை புக மயங்க

ஒரு மகிட (எருமை)  .மிசை ஏறி

அந்தகனும் எனை அடர்ந்து  வருகையில்

இனி அஞ்சல் என வலிய மயில் மேல் நீ

அந்த மறலியொடு அந்த மனிதன்
எமது அன்பன் எனது அன்பன் என மொழிய வருவாயே

சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் (மார்பகங்கள்)

சிந்து பய மயிலும் அயில் வீரா (சிந்தும் பாலினை அருந்தும் கூர்மையான வேலினைக் கொண்ட வீரனே) 

திங்கள் அரவு நதி  துன்று சடிலர்  அருள் (நிலவும், பாம்பும், கங்கை நதியும் தலையில் கொண்ட சிவன் அருளிய )

செந்தில் நகரில் உரை பெருமாளே


Friday, September 18, 2015

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம்

திருக்கடைக் காப்பு - மிக்கு சோதிக்க வேண்டாம் 


எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, சோதனை செய்து, தர்க ரீதியாக நிரூபணம் செய்ய வேண்டும் என்று மனம் எதிர் பார்க்கிறது.

எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் பண்ணி விட முடியுமா ?

எதையுமே ஓரளவுக்கு மேல் ஆராய்ந்து கொண்டு இருக்கக் கூடாது. ஆராய்ச்சிக்கு முடிவே இல்லை. முடிந்த முடிவு தெரிந்த பின்தான் எதையும் செய்வேன் என்று இருந்தால் எதையுமே செய்ய முடியாது.

லட்டை கையில் கொடுத்தால் , அது என்ன, எப்படி இருக்கும்  என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் முகர்ந்து பார்த்து அதன் வாசனையை இரசிக்கலாம். சிறிது வாயில் போட்டு சுவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். பிடித்தால் முழு லட்டையும் உண்ண வேண்டியதுதான்.

அதை விட்டு விட்டு, இனிப்பு என்றால் என்ன, அந்த இனிப்பு எப்படி வருகிறது, இந்த மஞ்சள் நிறம் எப்படி வந்தது.  இந்த நறுமணம் எப்படி வருகிறது. அது எப்படி இந்த மூக்கினால் நுகரப் படுகிறது, மனத்தால் அறியப்படுகிறது என்று ஆராய்ச்சியில் இறங்கி, இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வான விடை காணாமல் இந்த லட்டை உண்பது இல்லை என்று இருந்தால் வாழ்வில் எந்த இன்பத்தையும் அனுபவிக்க முடியாது.


ஞான சம்பந்தர் சொல்கிறார்....காரண காரியங்களை ரொம்பவும் சோதிக்க வேண்டாம். சோதியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ரொம்ப ஆராய்ச்சியில் இறங்கி விடாதீர்கள். சோதி வடிவாக இருக்கிறான் அவன். உங்கள் துக்கங்கள் நீங்க மனம் பற்றி வாழுங்கள். அறிவு பற்றாது. அறிவு கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.


பாடல்

ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.

சீர் பிரித்த பின்

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும்  மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள்  சோதி
மா துக்கம்  நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்க  இறையே  வந்து சார்மின்களே.

பொருள் 

ஏதுக்களாலும் = காரணங்களாலும்

எடுத்த மொழியாலும் = தர்க வாதத்தாலும்

மிக்குச் = மிகுதியாக

சோதிக்க வேண்டா = சோதிக்க வேண்டாம்

சுடர் விட்டுளன் = சுடர் வடிவாக உள்ளான்

எங்கள்  சோதி = எங்கள் ஜோதியான அந்த இறைவன்

மா துக்கம்  = பெரிய துக்கம் (பிறவிப் பிணிதான் பெரிய துக்கம்)

நீங்கல் உறுவீர் = நீங்கப் பெறுவீர்

மனம் பற்றி வாழ்மின் = மனம் ஒன்றி வாழ்வீர்

சாதுக்கண் மிக்க  = அன்பு நிறைந்தவர்களே

இறையே  வந்து சார்மின்களே  = இறைவனையே வந்து பற்றுங்கள்


கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அறிவோ எல்லை அற்றது.

வாழ் நாளோ மிகக் குறைவு.

அதிலும், அறிவை சேர்த்துக் கொள்ள செலவழிக்கும் நாட்கள் இன்னும் மிக மிகக் குறைவு.


எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்தாலும், ஒரு சிறு துளியின் ஒரு பகுதியைக் கூட   முழவதும் அறிந்து கொள்ள முடியாது.

என்ன செய்யலாம் ?







பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?

பிரபந்தம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?


அனைத்து உயிர்களும் இன்பம் வேண்டுகின்றன. துன்பம் வேண்டும் உயிர் எதுவும் கிடையாது.

இருந்தும், துன்பம் வரத்தான் செய்கிறது.

பணக் கஷ்டம், மனக் கஷ்டம், உடல் நலக் குறைவு, ஏமாற்றங்கள், தோல்விகள், கண்ணீர், என்று ஏதோ ஒன்று அவ்வப்போது தலை காட்டித்தான் போகிறது.

இன்பம் எவ்வளவு வந்தாலும் தடையின்றி ஏற்றுக் கொள்கிறோம்.

துன்பம் வந்தால் ?

கொஞ்சம் துன்பம் வந்தாலும் துவண்டு போகிறோம்.

ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்துகிறோம் ? நான் யாருக்கு என்ன தீமை செய்தேன், எனக்கு ஏன் இது வர வேண்டும் என்று அங்கலாய்கிறோம்.

எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன், நினைக்கிறேன், கோவில் குளங்களுக்குப் போகிறேன், பூஜை புனஸ்காரங்கள் செய்கிறேன்...இருந்தும் எனக்கு ஏன் இந்த சோதனை என்று வருந்துகிறோம்.

சாத்திரங்கள் எல்லாம் பொய்யா ? இதுக்கெலாம் ஒரு அர்த்தம் இல்லையா , கடவுள் ஒன்று   இல்லையா என்று கூட சந்தேகம் வருகிறது.

யாரிடம் போனால் துன்பம் தீரும் என்று பார்க்கிறோம்.

கொஞ்ச பேர் வருந்துவார்கள், பின் அவர்கள் வேலையை பார்த்துகொண்டு போய் விடுவார்கள்.

இன்னும் சில பேர், "நல்லா வேணும் " என்று உள்ளுக்குள் மகிழக் கூட மகிழ்வார்கள்.

யார் துணை ?

நம் சமய இலக்கியங்கள் துன்பத்தை ஏற்றுக் கொள்ள நம்மை பக்குவப் படுத்துகின்றன.

பொதுவாக இலக்கியங்களையும், குறிப்பாக சமய இலக்கியங்களையும் படிக்கும் போது , துன்பம் என்பது ஏதோ நமக்கு மட்டும் வருவது அல்ல, நம் துன்பம் ஒன்றும் அப்படி பெரியது அல்ல, இதைவிட பெரிய பெரிய துன்பங்களை மனிதர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அவற்றிற்கு முன்னால் என் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற ஆறுதல் பிறக்கும்.

மேலும், துன்பங்களுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்ற எண்ணம் வரும். துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் வரும்

.
நோய் என்றால் துன்பம். நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதலும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமையும் தவத்தின் வடிவம் என்கிறார் திருவள்ளுவர்.


உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.

துன்பம்     வரும்போது அதை அமைதியோடு ஏற்றுக் கொள்வதுதான் தவம் என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தை எவ்வாறு எதிர் கொள்வது ? துன்பம் வந்து விட்டால் என்ன செய்வது ?

சரி, துன்பம் வந்தால் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

எனக்கு துன்பம் தா என்று யாராவது வேண்டுவார்களா ?

என்னை கத்தியை எடுத்து வெட்டு, எனக்கு சூடு போடு என்று யாராவது வேண்டுவார்களா ?

வேண்டுவார்கள்.

அப்படி வெட்டுவதன் மூலமும், சூடு போடுவதன் மூலமும் அதை விட பெரிய துன்பம் தீரும் என்றால்.

மருத்துவரிடம் போய் அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுக்கிறோம். என்னை வெட்டு, அறு , ஊசியால் குத்து , தையல் போடு என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி செய்வதற்கு பணம் தருகிறோம். செய்து விட்டால் மருத்துவருக்கு நன்றி சொல்கிறோம்.

ஏன், அறுக்கும், வெட்டும், ஊசி குத்தும் துன்பங்கள், அவற்றை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கும் என்பதால்.

இப்போது யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு வந்த துன்பங்கள், அவற்றை விட  ஒரு பெரிய துன்பத்தில் இருந்து உங்களை காக்கும் என்றால், வந்த துன்பத்தை  சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா ?

இறைவன் நமக்குத் துன்பத்தை தருகிறான் என்றால், அதை விட ஒரு பெரிய துன்பத்தில் இருந்து நம்மை காக்கிறான் என்று பொருள். அதற்காக அவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

சொன்னார் - குலசேகர ஆழ்வார்.

பாடல்


வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

வித்துவ கோட்டத்தில் உள்ள பெருமாளே, நீ எனக்கு எவ்வளவு துன்பம் தந்தாலும், அந்த துன்பங்களை தருவதற்குக் காரணமான உன் அருளையே நான் பார்ப்பேன் என்கிறார். மருத்துவன் அறுத்து சுட்டாலும், அவன் மேல் மீளாத காதல் கொண்ட நோயாளன் போல, நீ எனக்கு துன்பங்களைத் தந்தாலும், அதற்கான உன் அருளையே நான் நினைப்பேன் என்கிறார். 


பொருள்

வாளால் அறுத்துச் = கத்தியால் அறுத்து

சுடினும் = புண் புரையோடாமல் இருக்க சூடு வைத்தாலும்

மருத்துவன் பால் = மருத்துவன் மேல்

மாளாத = தீராத

காதல் = காதல் கொண்ட

நோயாளன் போல் = நோயுள்ளவனைப் போல்

மாயத்தால் = மாயத்தால்

மீளாத் துயர் தரினும் = இறுதியே இல்லாத துயரை நீ தரினும்

வித்துவக்கோட்டம்மா நீ = வித்துவக் கோட்டத்தில் உள்ள பெருமானே

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே! = உன் அருளையே நான் அதில் பார்ப்பேன்

பிரபந்தத்தை வாசியுங்கள். வாழ்க்கையில் துன்பங்களை எப்படி ஏற்றுக் கொள்வது, தாங்கிக் கொள்வது என்று புரிபடும்.











Wednesday, September 16, 2015

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து

பட்டினத்தார் பாடல்கள் - அங்கமெல்லாம் நொந்து 


உடம்பில் ஒரு பாகத்தில் வலி வந்தால், அந்த பகுதி மட்டும் வலிக்கும். 

கண் வலி என்றால் கண் மட்டும் வலிக்கும். 

கால் வலி என்றால் கால் மட்டும் வலிக்கும். கை வலிக்காது.

ஆனால், இந்த பிரசவ காலமும், பிரசவமும் இருக்கிறதே, உடம்பின் ஒவ்வொரு பாகமும் வலிக்கும், சோர்ந்து போகும். அது மட்டும் அல்ல, ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, பத்து மாதமும் ஏதோ ஒரு அங்கம் வலித்துக் கொண்டே இருக்கும். ஒரு நாள் கால் வலிக்கும், இன்னொரு நாள் முதுகு, இன்னொரு நாள் தலை என்று அங்கமெல்லாம் நோகும்.

பட்டினத்தார், எல்லாம் துறந்தவர், தாயின் அந்த வேதனையை உணர்ந்து பாடுகிறார். 

பாடல் 


ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி”

பொருள் 

ஐயிரண்டு = ஐந்து இரண்டு = பத்து 

திங்களாய் = மாதமாய் 

அங்கமெலாம் = அனைத்து அங்கங்களும் 

நொந்து = சோர்ந்து, சலித்து 

பெற்றுப்  = பிள்ளையைப் பெற்று 

பையலென்ற போதே  = பையுள் என்றால் துன்பம். அந்த பிரசவ வலியோடே 

பரிந்தெடுத்துச் = குழந்தையை அன்போடு எடுத்து 

செய்ய இரு கைப்புறத்தி லேந்திக் = கையில் ஏந்தி 

கனக முலை தந்தாளை = தங்கம் போல உயர்ந்த தன் தனங்களைத் தந்தாளை 

எப்பிறப்பிற் காண்பே னினி = இனி எந்தப் பிறப்பில் காண்பேன் 




நந்திக் கலம்பகம் - என்னதே

நந்திக் கலம்பகம் - என்னதே 


காதலையும், காமத்தையும் நேரடியாகச் சொல்வதை விட மறைமுகமாக சொல்வதில் சுவை அதிகம்.

நந்திக் கலம்பகத்தில் ஒரு பாடல்.

தலைவி சொல்கிறாள்....நான் அணிந்திருக்கும் இந்த உடையும் , வளையலும் என்னுடையதே...நந்திவர்மன் என்னோடு இல்லாத போது.

அவ்வளவுதான் பாடல் வரியின் அர்த்தம்.

நந்தி வர்மன் வந்து விட்டால், இந்த ஆடைகளையும், வளையலையும் அவன் எடுத்துக் கொள்வான் என்று சொல்லாமல் சொல்கிறாள்.


சொல்லாமல் விட்டதை புரிந்து கொள்ளும் போது, அந்த பெண்ணின் நாணம், தவிப்பு, வெட்கம், பிரிவின் வேதனை, அவன் மேல் அவள் கொண்டிருக்கும் ஆசை அனைத்தும் தெரியும்.

பாடல்

எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
பூமறுகில் போகாப் பொழுது

பொருள்

எனதே கலை = கலை என்றால் உடை. என் உடை என்னுடையதுதான்

வளையும் என்னதே = வளையலும் என்னுடையதுதான்

மன்னர் = மன்னவனாகிய

சின = சினம் கொண்ட

ஏறு = எருதினைப் போன்ற

செந்தனிக்கோல்= செம்மையானா, செங்கோல் செலுத்தும்

நந்தி = நந்திவர்மன்

இனவேழம் = யானை போல

கோமறுகில் = வீதியில்

சீறிக் = கோபம் கொண்டு

குருக்கோட்டை வென்றாடும் பூமறுகில் = குருக் கோட்டை என்ற இடத்தில் வெற்றி பெற்று வீதி வழியே

போகாப் பொழுது = செல்லும்  போது

(போகா என்பதை செய்யா என்ற வாய்பாடகாகக் கொண்டால் செல்லும் போது என்று பொருள் தரும். கொய்யாப் பழம் என்று சொல்கிறோம். ஆனால் கொய்து தானே இருக்கிறது. அது போல. கொய்யாப் பழம் என்றால் கொய்த பழம். போகாப் பொழுது என்றால் போன பொழுது.)

இதை இன்னொரு விதமாக யோசித்துப் பார்ப்போம்.

அவன் இருக்கும் போது இந்த உடைகளையும், வளையல்களையும்  அவன் எடுத்துக் கொள்வான் , மற்ற நேரத்தில் அது என்னுடையது தான் என்பது ஒரு பொருள்.

இன்னொரு பொருள், அவன் என்னை விட்டு நீங்கினால், நான் மெலிந்து இந்த வளையலும், உடையும் நழுவி விழுந்து விடும். அவை என்னோடு இருக்காது. அவன் என்னோடு  இருந்தால், அந்த மகிழ்ச்சியில் நான் பூரித்து, இந்த வளையலும், உடையும் என்னோடு ஒட்டி இருக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

உங்களுக்கு எப்படி சௌகரியமோ , அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.



Monday, September 14, 2015

இராமாயணம் - அறம் அற்ற செயல்கள்

இராமாயணம் - அறம் அற்ற செயல்கள் 


அற வழியில் செல்லுங்கள், ஒழுக்கமாக இருங்கள் என்று சொல்லுவது எளிது. எது அறம் , எது ஒழுக்கம் என்று சொல்லுவது தான் கடினம்.

அறம் என்று ஒன்று உண்டு அது அமரர்கும் அறிய ஒண்ணாதது என்றார் கச்சியப்ப சிவாசாரியார்.

தேவர்களாலும் அறிய முடியாதது என்றால் மனிதர்கள் எப்படி அறிந்து அதன்படி நடப்பது ?

தர்மத்தை நிலை நிறுத்த யுகம் தோறும் யுகம் தோறும் அவதரிப்பேன் என்றான் கண்ணன்.

ஏன் ? ஒரு முறை வந்து நிலை நிறுத்தினால் போதாதா? ஒவ்வொரு யுகத்திலும் ஏன் வர வேண்டும் ?

போதாது.

எல்லா யுகங்களிலும் மனிதர்கள் தர்மம் தவறித்தான் போகிறார்கள். இறைவனே வந்து அதை நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது.


தர்மத்தை யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் ?

நல்லவன், மனத் தூய்மை உள்ளவன் சொன்னால் கேட்பார்கள்.

அதைத் தெரிந்து, கம்பன் பரதன் மூலம் அறத்தை சொல்கிறான்.

இராமன் கானகம் செல்வது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இன்னின்ன பாவங்கள் செய்தோர் செல்லும் நரகத்திற்கு நான் செல்லக் கடவேன் பரதன் பட்டியல் தருகிறான். மொத்தம் 46 பாவங்களைச் சொல்கிறான்.


பாடல்

‘அறம் கெட முயன்றவன்,
    அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன்,
    பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர்
    கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந்
    துயரம் சூழ்ந்துேளான். ‘

பொருள்

அறம் கெட முயன்றவன், = அறம் கெட முயன்றான்

அருள் இல் நெஞ்சினன், = அருள் இல்லாத மனத்தை உடையவன்

பிறன் கடை நின்றவன் = பொருள் வேண்டி மற்றவர்களிடம் சென்றவன்

பிறரைச் சீறினோன், = மற்றவர்கள் மேல் கோபப் பட்டவன்

மறம் கொடு மன் உயிர்  கொன்று வாழ்ந்தவன், = கொலைத் தொழில் ஈடுபட்டு,
உயிர்களை கொன்றவன்

துறந்த மாதவர்க்கு = துறவிகளுக்கு

அருந் துயரம் சூழ்ந்துேளான். ‘= துன்பம் தந்தவன்


அறத்தை கெடுக்க வேண்டாம். கெடுக்க நினைத்தாலே போதும் அதுவே பெரிய பாவம்.

மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் வள்ளுவர். 

மனதால் கூட அறத்தை சிதைக்க நினைக்கக் கூடாது. 

ஒருவன் தர்மம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை , அதை செய்ய விடாமல்  தடுப்பது கூட அல்ல , தடுக்க நினைப்பது கூட அறம் வழுவிய செயல்தான். 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவஊம் உண்பதுஊம் இன்றிக் கெடும்  

என்பார் வள்ளுவர். கொடுப்பதைப் பற்றி பொறாமை பட்டால் கூட போதும், அதுவே பெரிய பாவம். 

ஒருவன் கோவிலுக்குப் போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை போக விடாமல் தடுப்பது, தடுக்க நினைப்பது ஒரு பாவச் செயல். 

அருள் இல்லாமல் இருப்பது ஒரு பாவம். 


அருள் என்றால் என்ன ? நாம் எப்படி அருள் செய்ய முடியும். நாம் படித்த வரை கடவுள் தான் பக்தர்களுக்கு அருள் தர முடியும் ?

வள்ளுவர் சொல்கிறார். 

வலியார் முன் தன்னை நினைக்க-தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

நம்மை விட பலம் குறைந்தவர்களிடம் நாம் அதிகாரம் செய்யும் போது , நம்மை விட  பலம் நிறைந்தவர்கள் முன் நாம் எப்படி இருந்தோம் என்று நினைத்துப் பார்த்து  செயல்படுவது அருள். 

வேலைக் காரர்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம், நம்மை விட பணத்தில் , அறிவில், அதிகாரத்தில், புகழில் மெலிந்தவர்களிடம் மென்மையாக, பண்புடன் நடந்து கொள்வது அருள். 

உயிர் போனாலும் மற்றவர்களிடம் சென்று எனக்கு அஞ்சு பத்து கொடு என்று கேட்க்கக் கூடாது.  

ஏற்பது இகழ்ச்சி என்றாள் அவ்வை பாட்டி. 


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


பிச்சை எடுத்துதான்  வாழ வேண்டும் என்று விதி இருந்தால், அந்த விதியை எழுதிய  இறைவனும் கெட்டுப் போகட்டும் என்று இறைவன் மேல் சீறுகிறார் வள்ளுவர்.  பிறரிடம் இரந்து வாழ்வது அவ்வளவு கொடுமையானது என்பது அவர் எண்ணம். 

மற்றவர்களிடம் கோபப் பட்டவன் - கோபம் கொள்வது அறம் பிறழ்ந்த செயல் என்பது பரதன் கூற்று. கோபமும் காமமும் தவத்தை அழிக்கும் இரண்டு அரக்கர்கள் என்று சொல்லுவார் கம்பர். 

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். 

நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள் நாம். 

எப்படி வாழ வேண்டும் என்று காலம் கடந்து வந்து கம்பன் நம்மை கை பிடித்து அழைத்துச்  செல்கிறான்.