Friday, September 25, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2

இராமாயணம் - இராமன் அறம் பிரழ்ந்தவனா ? - பாகம் 2


கல்வி கற்கும் முறை.

நாம் எவ்வாறு கல்வி கற்கிறோம் ?

முதலில் நமக்கு சிலவற்றை சொல்லித் தருகிறார்கள். பின் சிறிது நாள் கழித்து, முதலில் சொன்னவை அவ்வளவு சரியில்லை, என்று திருத்திச் சொல்கிறார்கள்.

முதலில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று சொல்லித் தருகிறார்கள். பின்னாளில், சூரியன் உதிப்பது இல்லை. அது ஒரே இடத்தில் தான் இருக்கிறது.  பூமிதான் சுற்றி வருகிறது என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் உயர் வகுப்புகளுக்குப் போனால், சூரியன் நிலையாக இல்லை, அதுவும் பால்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

ஏன், முதலிலேயே இதை சொல்லித் தரக்கூடாதா ?

பொருள்கள் மூன்று நிலையில் இருக்கின்றன. திட, திரவ, வாயு நிலையில் இருக்கின்றன என்கிறார்கள். பின், அதெல்லாம் சரி இல்லை....பொருள்கள் எல்லாம் அணுவால் ஆனது என்கிறார்கள். பின், அணு கூட இல்லை, அவை எலேக்டரோன் , ப்ரோடான், நியுட்ரான் என்ற துகள்களால் ஆனது என்கிறார்கள்.

ஏன் , மூன்றாம் வகுப்பிலேயே இதை சொல்லித் தரக் கூடாதா என்றால் சொல்லித் தரக் கூடாது. சொல்லித் தந்தால் புரியாது.

படிப்படியாகத் தான் சொல்லித் தர முடியும். படிக்க படிக்க , முன்னால் படித்தது மாறும்.

இராமன், முதலில் வசிஷ்டரிடம் பாடம் பயின்றான். அது ஒரு உயர் நிலை பள்ளி மாதிரி.

அடுத்து விச்வாமித்ரரிடம் பாடம் பயிலப் போகிறான். அது கல்லூரி படிப்பு மாதிரி.

வசிட்டர் சொல்லித் தந்த அறங்களை இன்னும் கூர்மை படுத்தி, அவற்றின் நெளிவு சுளிவுகளை விஸ்வாமித்ரர் சொல்லித் தருகிறார்.

பொய் சொல்லக் கூடாது என்பது ஒரு அறம் .

புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் , பொய்யும் சொல்லலாம் என்பது இன்னொரு அறம்.

முரண்பட்ட அறங்களை எதிர் கொள்ள நேரும்போது என்ன செய்ய வேண்டும்.

எப்படியும் ஒரு அறத்தை விட்டு விலகித்தான் போக வேண்டி இருக்கும்.

அப்படி என்றால், எந்த அறத்தை விடுவது, எதை கைகொள்வது ?

இந்த சிக்கலுக்கு இராமன் வழி காட்டுகிறான்.

இந்த மாதிரி சிக்கல் வரும்போது, பற்றற்ற ஞானிகளின், உலக நன்மையில் நாட்டம் கொண்ட சான்றோர் சொல்வதை கேட்டு நடப்பது என்பது இராமன் காட்டிய வழி.

நாம் படித்த பாடங்கள் நமக்கு சரியான ஒரு முடிவை எடுக்க உதவி செய்யாவிட்டால், கற்றறிந்த சான்றோரிடம் கேட்பதுதானே முறை.

இராமன் அதைத்தான் செய்தான்.

முதலில் தாடகை வதத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமனுக்கு தெரிகிறது  தாடகை ஒரு பெண், அவளைக் கொல்லக் கூடாது என்று. அப்படித்தான் வசிட்டர் சொல்லித் தந்திருக்கிறார்.

ஆனால் இப்போது தாடகையை கொல்லவில்லை என்றால் அவள் இராமனையும், இலக்குவனையும், விச்வாமித்ரரையும் கொன்று விடுவாள்.

என்ன செய்வது ?




இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி

 இராமனுசர் நூற்றந்தாதி - இயல்பான பக்தி 



பக்தி செய்யும் போது மனதில் உள்ள ஆணவம், அகத்தை அழிய வேண்டும். சில பேர் பக்தி செய்வதிலேயே கூட கர்வம் கொள்வது உண்டு ...

"திருமலை பெருமாளுக்கு இத்தனை இலட்சம் நன்கொடை தந்தேன் "

"தினப்படி இரண்டு நேரம் பூஜை பண்ணுகிறேன், சுலோகம் எல்லாம் எனக்கு அத்துப்படி "

என்று பக்தி செய்வதில் ஒரு அகந்தை வந்து விடுகிறது. நான் அவனை விட அதிகம் பக்தி செய்கிறேன், நான் அவனை விட அதிகம் கோவில்களுக்குச் செய்கிறேன் என்று.

இந்த பக்தியால் ஏதாவது பலன் உண்டா ?

பக்தி என்பது இயல்பாக , மூச்சு விடுவது போல, கண் இமைப்பதுபோல இயல்பாக இருக்க வேண்டும்..

அந்த பக்தி எப்படி இயல்பாக வரும் ?

பக்தி இல்லாதவர்களை விட்டு நீங்கி இருக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் இருந்தால் பக்தி என்பது ஒரு இயல்பான ஒன்றாக ஆகி விடும்.

பாடல்

கள்ளார் பொழில்தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.


பொருள்



கள் ஆர் மொழில் தென் அரங்கன்

கள்ளார் = தேன் நிறைந்த

பொழில் = பூங்காவனங்கள் சூழ்ந்த

தென் னரங்கன் = திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின்

கமலப் பதங்கள் = தாமரை போன்ற பாதங்களை

நெஞ்சிற் = மனதில்

கொள்ளா = வைக்காத

மனிசரை = மனிதர்களை

நீங்கிக் = விட்டு நீங்கி

குறையல் பிரானடி = திருமங்கை மன்னனுடைய திருவடிகள்

கீழ் = அடியில்

விள்ளாத அன்பன் = என்றும் நீங்காத அன்பன்

இராமா னுசன் = இராமானுசன்

மிக்க சீலமல்லால் = உயர்ந்த குண நலன்களைத் தவிர

உள்ளாதென் னெஞ்சு = உள்ளாது என் நெஞ்சு = நினைக்காது என் நெஞ்சு

ஒன்றறியேன் = இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது

எனக்குற்ற பேரியல்வே.= எனக்கு அமைந்த இயல்பு அது

இயல்பான பக்தி. இயல்பான ஒரு மரியாதை.

Thursday, September 24, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ? - பாகம் 1



தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றது சரியா ?

வாலியை மறைந்து நின்று கொன்றது சரியா ?


அன்று தொட்டு இன்று வரை இந்த சர்ச்சை நடந்து கொண்டேதான் இருக்கிறது.  எத்தனை முறை முடிவுகளை எட்டினாலும், ஒரு திருப்தி இல்லை.

இராமன் ஏன் அப்படிச் செய்தான் ? இராமன் அப்படி செய்யலாமா ? இது ஒரு தவறு இல்லையா ? இராமன் செய்தான் என்பதால் அது சரியாகி விடுமா ? இராமன் வழியில் செல்ல நினைப்பவர்களுக்கு இது ஒரு தடை இல்லையா ?

தாடகை, அவள் எவ்வளவுதான் பெரிய அரக்கியாக இருந்தாலும், அவள் பெண் தானே. ஒரு பெண்ணைக் கொல்வது அறமாகுமா ?

வாலி, எல்லா விதத்திலும் சுக்ரீவனை விட உயர்ந்தவன். பின் எதற்காக அவனைப் பகைத்து சுக்ரீவன் கூட நட்பு பாராட்டினான். சரி, அது வேண்டுமானால் எப்படியோ போகட்டும், மறைந்து நின்று தாக்கலாமா ?

இவை இரண்டும் அறத்தின்பாற்பட்டு நில்லாத செயலாகவே தோன்றுகிறது.


தாடகையை கொன்றது, வாலியை மறைந்து நின்று கொன்றதற்கு முன்னால் இராமன் செய்த இன்னொரு தவறும் கூட இருக்கிறது.

அப்பா சொன்னார் என்பதற்காக கடமையை விட்டு விடுவதா ? நாட்டு மக்களை காக்கும் கடமை இராமனுக்கு இல்லையா ? தந்தை சொன்னார் என்பதற்காக கடமையில் இருந்து நழுவலாமா ?


அவை அப்படியே இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம்.

இப்போது, இன்னொரு கேள்வியை எடுப்போம்.

ஒன்றுக்கு ஒன்று முரணான அறங்கள் இருந்தால் எதை கையில் எடுப்பது. ஒன்றைச் செய்தால் மன்றொன்று அடிபட்டுப் போகும்.

உதாரணமாக,

ஒருவன் மது போதையில், ஒரு பெண்ணை துரத்தி வருகிறான். அவன் கையில் அவள் அகப்பட்டால் அவள் கற்பு பறிபோவது திண்ணம். அவளை கொலை கூட செய்து விடுவான். அந்தப் பெண் ஓடிவந்து உங்கள் கண் எதிரிலேயே ஒரு இடத்தில் மறைந்து கொள்கிறாள்.  போதையில் வந்த அந்த ஆள் , அந்தப் பெண் எங்கே என்று கேட்கிறான்.

நீங்கள் என்ன செய்வீர்கள் ?

பொய் சொல்வது அறத்தின் பாற்பட்ட செயல் அல்ல.

உண்மை சொன்னால், அந்த பெண்ணின் மானமும் உயிரும் போகும்.

என்ன செய்வீர்கள் ?

வள்ளுவர் சொன்னார் , பொய்மையும் வாய்மை இடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று.

ஒரு வேளை நீங்கள் உண்மை சொல்லி, அந்த மனிதன் அந்தப் பெண்ணை கெடுத்து கொலையும்  செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நீதி அவனை  தூக்கில் போடும்.

அப்போதும் அந்த மனிதன் என்ன சொல்லுவான் "நான்தான் குடி வெறியில் இருந்தேன் என்று தெரியும் தானே உனக்கு...எதற்காக அந்தப் பெண்ணை காட்டிக் கொடுத்தாய் ...இப்போது பார் ...நீ சொன்ன உண்மையால் இரண்டு உயிர்கள் போகப் போகின்றன ..." என்று.

பொய் சொல்வது அறம் அல்லதான். இருந்தும் எல்லோரும் அந்த இடத்தில் பொய் தான் சொல்லி இருப்பார்கள்.

சரி, இது ஒரு வாதம்.

இன்னொன்றைப் பார்ப்போம்.

அறம் என்பது முடிந்த முடிவா ? இது தான் அறம் என்று யாராவது இறுதியாகக் கூற முடியுமா ?

கொல்வது பாவம் தான். ஆனால் ஊரில் பல பேரை கொன்றவனை நீதி தூக்கில் போடுகிறது. அது பாவம் இல்லையா ? நாடுகளுக்கு இடையே சண்டை வரும் போது  ஒரு நாட்டின் இராணுவம் இன்னொரு நாட்டின் இராணுவத்தில் உள்ளவர்களை கொல்கிறது . அது பாவம் இல்லையா ?

போதைப் பொருள்களை உட்கொள்ளுவது பாவம் தான். அறம் இல்லை தான். ஆனால், தாங்க முடியாத வலியில் ஒருவன் துடிக்கும் போது அவனுக்கு சிறிது போதைப் பொருளை மருந்து போல கொடுத்து அவன் வலியை தணிப்பது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை.

அறம் என்பது முழுவதுமாக வரையறுக்கப் பட்டது அல்ல. அது காலம், இடம், பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும்.

மீண்டும் இராமனிடம் வருவோம்....







Tuesday, September 22, 2015

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க 


"இத்தனை நாள் வாழ்ந்து நீங்க என்ன கிளிச்சீங்க ? கொஞ்சம் கூட வெக்கம் இல்லை உங்களுக்கு. இப்படியே போனால் கொஞ்ச நாளில் இறந்து போவீர்கள். நீகள் இறந்த பின்,  இந்த உடல் இருக்கிறதே, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கும் ஒரு பொருளாகப் போய் விடும்"

என்று வெறுத்து கோபித்து சொல்கிறார் திருநாவுகரசர்.

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பொருள்

நடலை = துன்பமான

வாழ்வு = இந்த வாழ்வை

கொண்டு = வைத்துக் கொண்டு

என் செய்தீர் = என்ன செய்தீர்கள்

நாணிலீர் = நாணம் இல்லாதவர்களே

சுடலை = சுடு காடு

சேர்வது = போய்ச் சேர்வது

சொற் பிரமாணமே = சத்ய வாக்கே

கடலின் = திருபாற்கடலில்

நஞ்சமு துண்டவர் = நஞ்சை அமுதமாக உண்டவர்

கைவிட்டால் = கை விட்டு விட்டால்

உடலி னார்  = இந்த உடல்

கிடந்து = கிடந்து

ஊர் = ஊர்

முனி = கோபிக்கும்

பண்டமே. = பொருளே

என்னய்யா, இன்னுமா எடுக்கல, சீக்கிரம் எடுங்கள் என்று ஊர் கூடி கோபித்து  அனுப்பும்  இந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருகிறீர்கள் என்று  கேட்கிறார் நாவுக்கரசர் .

பதில் ?



இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை

இராமாயணம் - பரதன் - அரசு ஆண்டிலை 


ஒரு நாள் நம் உடையை சரியாக இஸ்திரி (iron ) போடாமல் போட்டுக்கொண்டு வெளியே செல்ல முடியுமா ? கசங்கின ஆடையை உடுத்திச் செல்வோமா ?

உடம்பை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகள், அல்லது தொள தொள என்று தொங்கும் ஆடைகளை நம்மால் உடுக்க முடியுமா ? எவ்வளவு சங்கடப் படுவோம் ?

சகர்வர்த்தியின் பிள்ளைகள் , இராமனும், சீதையும், இலக்குவனும் மர உறி உடுத்துச் சென்றார்கள்.

அது உடலோடு சரியாகப் பொருந்தாது. மெத்தென்று மென்மையாக இருக்காது. அங்கங்கே குத்தும். உரசும். எரிச்சல் தரும்.

அப்பா சொன்னார் , என்ற ஒரே காரணத்துக்காக இராமன் மர உரி உடுத்து கானகம் போனான்.

கணவன் போகிறான் என்ற ஒரே காரணத்துக்காக சீதை மாற உரி உடுத்து, அவன் பின் கானகம் போனாள் .

அண்ணன் சொன்னான் என்ற ஒரே காரணத்துக்காக இலக்குவன் சென்றான்.

இவர்கள் சென்றதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அப்பாவின் மேல் உள்ள மரியாதை, கணவன் மேல் உள்ள காதல், அண்ணன் மேல் உள்ள பாசம் என்று.

அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வர  பரதனும் மர உரி உடுத்து கானகம் போனான்.

அறத்தை நிலை நாட்ட மட்டுமே அவன் சென்றான்.

மந்திரிகளை விட்டு அழைத்து வரச் சொல்லி இருக்கலாம்.

அல்லது அவனே கூட சாதாரண ஆடை அணிந்து சென்றிருக்கலாம். அதை விடுத்து அவனும் மர உரி உடுத்துச் சென்றான்.


பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தை அடைகிறான். பரதனைப் பார்த்து அவர் கேட்கிறார்

"நீ முடி சூடி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. முடியெல்லாம் சரியாக சீவாமல் சடை பிடித்துப் போய் இருக்கிறது. இப்படி மர உரி உடுத்து இங்கு எதைத் தேடி வந்தாய் " என்று.

பாடல்


‘எடுத்த மா முடி சூடி நின்பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய! நீ
முடித்த வார் சடைக் கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான்.

பொருள் 

‘எடுத்த மா முடி = உன் தாய் எடுத்துக் கொடுத்த பெரிய மணி முடியை

சூடி = தலையில் அணிந்து

நின்பால் = உன்னிடம்

இயைந்து = அனுசரித்து வந்த

அடுத்த பேர் அரசு ஆண்டிலை = அந்த பெரிய அரசை நீ ஆளவில்லை

ஐய! நீ = ஐயனாகிய நீ

முடித்த = தலையை வாராமல் முடித்து

வார் சடைக் கற்றையை  = சடை கற்றையை

மூசு =  மொய்க்கும்

தூசு = தூசு என்றால் ஆடை

உடுத்து  = உடுத்து

நண்ணுதற்கு உற்று உளது யாது? ‘என்றான். = இந்த கானகத்திற்கு வந்ததன் காரணம் என்ன ?

மூசு தூசு என்றால் உடலை சுற்றி இருக்கும் ஆடை. பொருந்தாத ஆடை. மர உரி.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ஏதோ பேருக்கு போய் அண்ணனைப் பார்த்து விட்டு வந்தவன் அல்ல பரதன்.

வருத்ததோடு, சிரத்தையோடு போனவன்.

தவறுக்கு வருந்தி பிராயாசிதம் தேடி போனவன்.



Saturday, September 19, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே 


பெரிய பெரிய மகான்கள் தோன்றிய பூமி  இது.எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்களிடம் இருந்து அந்த நல்ல விஷயங்களைப் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு அதை சொல்ல மனம் வரவில்லை. அப்படி சொல்லாமல் போனால் அந்த பெரிய உண்மைகள் நாளடைவில் மறைந்து போகும். அது மட்டும்  அல்ல,அதை கண்டு சொன்ன அந்த மகான்களின் பேரும் பெருமையும் மறைந்து போகும்.

தான் கற்ற திவ்ய மந்திரங்களை எல்லோரும் உய்ய ஊருக்கே சொன்னவர் இராமானுஜர்.

அதனால், அதை பெற்றவர்கள்  வாழ்ந்தார்கள்.

அந்த உண்மைகள் நிலைத்தன.

அந்த மந்திரங்களை கண்டு சொன்ன பெரியவர்களின் பெயரும் நிலைத்தது.

அப்பேற்பட்ட மகான் இராமானுஜர். அவரின் பாதார விந்தங்களைச் சேர அவருடைய நாமங்களைச் சொல்லுவோம்.

பாடல்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.


பொருள்

(மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.  இந்த பாசுரத்தில் பல இடத்தில் மன்னு என்ற வார்த்தை  வருகிறது. மன்னு புகழ் கோசலை மணி வயிறு வாய்த்தவன் )


பூமன்னு = பூவில் நிலைத்து வாசம் செய்யும்

மாது = திருமகள்

பொருந்திய  மார்பன் = பொருத்தமாக வந்து சேர்ந்த மார்பை உடையவன்

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நிலைத்து நிற்கும் பாடல்களை தந்த

மாறன்  = நம்மாழ்வார்

அடிபணிந் துய்ந் தவன் = திருவடிகளை பணிந்து உயர்ந்தவன்

பல்கலையோர் = பல கலைகளை கற்ற பெரியோர்

தாம்மன்ன = அவர்கள் நிலைத்து நிற்க

வந்த = வந்த

இராம னுசன் = இராமானுசன்

சர ணாரவிந்தம் = திருவடித் தாமரைகளை

நாம்மன்னி = நாம் என்றும் நிலையாக அடைந்து

வாழநெஞ்சே!  = வாழ்வதற்கு நெஞ்சே

சொல்லுவோம்  = சொல்லுவோம்

அவன் நாமங்களே = அவனுடைய நாமாங்களையே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்ன மாதிரி ,

இராமானுஜர் திருவடிகளை அடைய அவருடைய நாமங்களே துணை



திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே

திருக்கடைகாப்பு - வையகம் துயர் தீர்கவே 


சில மதங்களைப் பார்த்தால், அவை, எங்கள் கடவுளை வணங்குபவர்களுக்குத்தான் சொர்க்கம், எங்கள் புனித நூலை பின் பற்றுபவர்களுக்குத்தான் சொர்க்கம், வீடு பேறு என்று கூறும். நற்கதி  அடைய வேண்டும் என்றால் முதலில் அவர்கள் மதத்துக்கு மாற வேண்டும்.

இந்து மதப் பெரியவர்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை.

ஞான சம்பந்தர் கூறுகிறார்.....

வையகம் துயர் தீர்கவே என்று. இந்த உலகம் பூராவிலும் உள்ள துயரங்கள் தீரட்டும் என்று.

இந்து மதத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, சைவ சமயத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல....உலகில் உள்ள அனைத்து துயரமும் தீரட்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.


பொருள்

வாழ்க அந்தணர் = அந்தணர்கள் வாழ்க

வானவ ரானினம் = தேவர்கள் , பசுக்கள்  வாழ்க

வீழ்க தண்புனல் = குளிர்ந்த மழை விழட்டும்

வேந்தனு மோங்குக = அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்து பெருமை அடையட்டும்

ஆழ்க தீயதெல் லாம் = தீயது என்று சொல்லப் பட்டது எல்லாம், மூழ்கிப் போகட்டும்

அரன் நாமமே சூழ்க = சிவனின் நாமமே எங்கும் நிறையட்டும்

வையக முந்துயர் தீர்கவே. = வையகமும் துயர் தீரட்டும்

அந்தணர்கள் வாழ்க என்றார். ஏன் அந்தணர் மட்டும் வாழ வேண்டும். மற்றவர்கள் வாழ வேண்டாமா ?

அந்தணர் என்போர் அறவோர் என்பார் திருவள்ளுவர். அறவழியில் நிற்பவர்கள் யார் என்றாலும் அவர்கள் அந்தணர்கள் தான். அறவழியில் நிற்பவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

மக்கள் அற வழியில் நிற்க வேண்டும்.
நல்ல மழை பொழிய வேண்டும்.
பசுக்கள் வாழ வேண்டும் என்றால் நிறைய புல் வேண்டும். ஊரெல்லாம் பச்சை பசேலென்று இருக்க வேண்டும்.
அரசன் நல்ல ஆட்சியை தர வேண்டும்.
தீமை எல்லாம் குழி தோண்டி  புதைக்கப் பட வேண்டும்
வையகம் துயர் தீர வேண்டும். வையகத்தில் யாரும் துன்பப் படக் கூடாது.

எவ்வளவு பெரிய  மனம்.எவ்வளவு உயர்ந்த எண்ணம்.

அப்படிப்பட்ட பெரியவர்கள் வாழ்ந்த நாடு இது.