Tuesday, January 19, 2016

தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன்




தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


எல்லோருக்கும் தெரிந்த தேவாரம் தான்.

ஞான சம்பந்தருக்கு  உமை பால் தந்தாள். குளத்தில் இருந்து குளித்து வெளியில் வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு யார் பால் தந்தது என்று கேட்டார். குழந்தை வானத்தைக் காட்டி

"தோட்டினை காதில் உள்ள அவன், எருதின் மேல் ஏறி , தூய்மையான வெண்ணிலவின் கீற்றை தலையில் சூடி, காட்டில் உள்ள உள்ள சாம்பலை உடலில் பூசி, என் உள்ளத்தை கவர்ந்த அவன் தந்தான்.  அவனை மலரால் நான் முன்பு அர்ச்சனை செய்தேன். எனக்கு அருள் புரிந்தான். சிறந்த பிரமாபுரம் என்ற ஊரில் இருக்கும் பெம்மான் இவன் "

.என்று பாடினார்.

பாடலும் பொருளும் எல்லோருக்கும் தெரிந்தது  தான்.

தெரியாத உட்பொருள் என்ன என்று பார்ப்போம்.

பாட்டை கொஞ்சம் உற்று பார்த்தால் ஏதோ சம்பந்த சம்பந்தமில்லாத வாரத்தை கோர்வைகள் போலத் தோன்றும்.

தோடுடைய செவியன்
விடை ஏரியவன்
மதி சூடியவன்
சாம்பலை பூசினவன்
உள்ளத்தை கவர்ந்தவன்
அருள் செய்தவன்
பிரம புரத்தில் இருப்பவன்

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் ஒரே வார்த்தை அடுக்காக இருக்கிறதே  என்று நினைப்போம்.

இறைவன் ஐந்து தொழில்களை செய்கிறான் என்கிறது சைவ சித்தாந்தம். அவையாவன

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

 அது அப்படி இருக்கட்டும் ஒரு பக்கம்.

இந்த உலகம் எல்லாம் ஊழிக் காலத்தில் அழிந்து போகும். எது அழிந்தாலும் அறம் அழியாது. தர்மம் என்றும் நிலைத்து நிற்கும். உலகமே அழிந்தாலும் தர்மம் அழியாது.

உலகமே ஊழித் தீயால் அழிந்த போது தர்மத்தை எருதாகச் செய்து தனக்கு வாகனமாக்கிக் கொண்டார் சிவன். எருதின் இன்னொரு பெயர் விடை.

உலகில் உள்ள அத்தனை சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தர்மம் தான் விடை.

அப்படி உலகம் அழிந்த போது தர்மத்தை விடையாக (எருதாக) செய்ததால், அது படைப்புத் தொழில். "விடை ஏறி"

சந்திரன், தன் மாமனாரின் சாபத்தால் நாள் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். தன்னை காக்கும் படி வேண்டிய சந்திரனை , காப்பாற்றி தன் தலையில் சூடிக் கொண்டார். ஆதலால் அது காத்தல் தொழில். "தூவெண் மதி சூடி"

உலகம் ஊழித் தீயால் அழியும். மிஞ்சுவது சாம்பல் மட்டுமே. அந்த சாம்பலை மேலே பூசிக் கொண்டிருப்பவன் என்பதால் அது அழித்தல் தொழில். "காடுடைய சுடலை பொடி பூசி "

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறான். இருந்தும் உயிர்களால் அவனை அறிய முடிவதில்லை. மாயை மறைக்கிறது. மனதுக்குள் மறைந்து நிற்பதால் அது மறைத்தல் தொழில். "என் உள்ளம் கவர் கள்வன்". கள்வன் மறைந்து தானே இருப்பான்.

வேண்டும் அடியவர்களுக்கு அவன் அருள் செய்வதால் அது அருள்தல் தொழில்.  "ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த"

இப்படி ஐந்து தொழில்களையும் இறைவன் செய்கின்றான் என்று குறிப்பாக உணர்த்தும் பாடல்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாட்டின் ஆழம்  விளங்கும்.

தேவாரத்தின் ஒரு பாடலுக்கு இவ்வளவு பொருள்.

எவ்வளவு படிக்க இருக்கிறது.


Monday, January 18, 2016

இராமாயணம் - இராமனின் பிரிவு

இராமாயணம் - இராமனின் பிரிவு 


சீதையை பிரிந்த இராமனின் நிலையைப் பார்த்தோம். இராமன் சீதையின் அழகை, அவளின் அருகாமையை இழந்ததை நினைத்து வாடுகிறான். குறிப்பாக காமம் அவனை வாட்டுகிறது. மன்மத கணைகளுக்கு வருந்துகிறான்.

அதே சமயம், இலங்கையில் சீதை என்ன நினைக்கிறாள் ?

"யார் இராமனுக்கு உணவு தருவார்கள் ? அவருக்கு தானே போட்டு சாப்பிடத் தெரியாதே. யார் அவருக்கு உணவு பரிமாறுவார்கள் ? வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் எப்படி அவர் சமாளிப்பார் ?  என் துன்பத்திற்கு ஒரு மருந்தும் இல்லையே" என்று வருந்துகிறாள்.

இராமனோடு தான் இன்புற்று இருக்க முடியவில்லையே என்று அவள் வருந்தவில்லை. அவன் எப்படி சாபிட்டானோ, வீட்டுக்கு யாராவது வந்தால் எப்படி அவர்களை உபசரிப்பானோ என்று வருந்துகிறாள்.

பாடல்

'அருந்தும் மெல் அடகு ஆர் இட
    அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
    என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
    நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
    எழவும் ஆண்டு எழாதாள்.

பொருள் 

‘அருந்தும் = உண்ணும்

மெல் அடகு =  இலை கறி உணவு

ஆர் இட = யார் பரிமாற

அருந்தும்? ‘ = சாப்பிடுவான் ?

என்று அழுங்கும்; = என்று வருந்துவாள்

‘விருந்து கண்டபோது என் உறுமோ?  = விருந்து வந்தால் என்ன செய்வானோ

என்று விம்மும்; = என்று நினைத்து விம்முவாள்

‘மருந்தும் உண்டுகொல் = மருந்து கூட இருக்கிறதா

யான்கொண்ட நோய்க்கு? = என் துன்பத்திற்கு

‘என்று மயங்கும்; = என்று மயங்குவாள்

இருந்த = அவள் அமர்ந்து இருந்த

மா நிலம்  =நிலம்

செல் அரித்து எழவும் = கரையான் புற்று எழுப்பி அரித்த போதும்

ஆண்டு எழாதாள். = இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்து இருந்தாள்

இதில் நாம் பார்க்க வேண்டியது இரண்டு விஷயங்கள்.

ஒன்று சீதையின் துயரம். அது தெளிவாகத் தெரிகிறது. கணவன் எப்படி சாப்பிடுவன், எப்படி விருந்தை உபசரிப்பான் என்று வருந்தியது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாவது, பாடலின் உள்ளே கம்பன் காட்டும் இல்லறம். இல்லத்தின் அறம்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ? 

ஏன் திருமணம் செய்து கொண்டாய் என்று திருமணம் செய்து கொண்ட யாரையாவது கேட்டால்   என்ன சொல்லுவார்கள் 

"கணவன் அல்லது மனைவியோடு சேர்ந்து இன்பம் அனுபவிக்க, வாரிசுகளை பெற்றுக் கொள்ள " என்று சொல்லுவார்கள். 

அதற்கா திருமணம். இன்பம் அனுபவிப்பதும், சந்ததிகளை பெற்றுக் கொள்வதும்  விலங்குகள் கூட செய்கின்றன. 

இல்லத்தின் அறம் பற்றி திருவள்ளுவன் சொன்னதை கம்பன் இங்கே சொல்கிறான்.

அது என்ன அறம் ?

மேலும் சிந்திப்போம். 


Sunday, January 17, 2016

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின்

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின்


பாடல்

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே


பொருள்

வாழ்வதற்காக என்று இருப்பவர்களே, வந்து மண்ணும், மணமும் பெற்றுக் கொள்ளுங்கள். கூழுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஏழேழு பிறவியாக ஒரு பழி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அரக்கர்கள் வாழும் இலங்கை மேல் படை எடுத்துச் சென்று அதை பாழாக்கியவனுக்கு பல்லாண்டு கூறுவோம்.

இது அடுத்த பாசுரம்.

வாழாட் பட்டு = வாழ்வதற்காக ஆட்பட்டு

நின் றீருள்ளீ ரேல் = நின்று உள்ளீரேல்

வந்து = இங்கு வந்து

மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் பெற்றுக் கொள்ளுங்கள்

கூழாட் பட்டு = கூழுக்கு ஆட்பட்டு

நின் றீர்களை = நிற்பவர்களை

எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் = எங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்

ஏழாட் காலும் = ஏழு பிறப்பிலும்

பழிப்பிலோம் நாங்கள் = பழி இல்லாமல் வாழ்பவர்கள் நாங்கள்

இராக்கதர் வாழ் இலங்கை = அரக்கர்கள் வாழும் இலங்கை

பாழா ளாகப் = பாழ் படும்படி

படைபொரு தானுக்குப் =      படை  எடுத்தவனுக்கு

பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோம்

சரி, இந்த பாட்டில் அப்படி என்ன விசேஷம் ?

பெரியாழ்வாரின் பாடல்கள், அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள்.

வாருங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

தாய் நமக்கு தந்தையை காட்டித் தருகிறாள். அவள் சொல்லித்தான் தந்தை யார் என்று நமக்குத் தெரிகிறது.

தந்தை, நம்மை ஆசாரியனிடம் கொண்டு சேர்க்கிறார். தந்தை சொல்லித்தான் ஆசாரியனை நமக்குத் தெரியும்.

அந்த ஆசாரியன் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பான். அவன் சொல்லித்தான் இறைவன் யார் என்று நமக்குத் தெரியும்.

பெரியாழ்வார் இறைவனை கண்டு கொண்டார். அவனுக்கும், திருமகளுக்கும், சங்கு சக்ரத்துக்கும் பல்லாண்டு பாடினார்.

அடுத்து என்ன செய்வது ?

தான் மட்டும் அறிந்தால் போதாது, இறைவனைத் தேடி அலையும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது, அந்த பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று அவரது தாயுள்ளம் விரும்புகிறது.


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பக்தர்களை நான்காகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது, உலகில் உள்ள பொருள் செல்வத்தைப் பெறுவதற்காக பக்தி பண்ணுபவர்கள். அவர்கள் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது, ஆத்மாவை அறிய விரும்புபவர்கள். ஆத்ம அனுபவத்தை தேடுபவர்கள். அதற்காக இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள்.

மூன்றாவது, மோட்சம், வைகுண்டம் வேண்டி இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள். அவர்களுக்கு பணம் வேண்டாம், செல்வம் வேண்டாம், ஆத்ம அனுபவம் வேண்டாம்...முக்தி ஒன்றையே விரும்பி இறைவனிடம் பக்தி செலுத்துவார்கள்.

நான்காவது, இறைவனையே வேண்டும் என்று, அவனை அடைய வேண்டும் என்று பக்தி செலுத்துபவர்கள்.

(மேலும் சிந்திப்போம்)

இராமாயணம் - சீதையின் பிரிவு

இராமாயணம் - சீதையின் பிரிவு


கணவன் மனைவி பிரிவு எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தான். வேலை நிமித்தமாக கணவன் வெளியூர் போக வேண்டியது வரலாம், பிரசவத்துக்காக மனைவி அம்மா வீட்டுக்கு போக வேண்டி வரலாம், இப்படி ஏதோ ஒரு காரணத்தால் கணவன் மனைவி பிரிவு நிகழத்தான் செய்கிறது.

கணவனும் மனைவியும் ஏதோ காரணத்தால் பிரிந்தாலும், அவர்களுக்குள் உள்ள அன்பு பிரிந்து விடுவது இல்லை.

அவர்கள் பிரிந்து இருக்கும் போது , கணவன் , மனைவியைப் பற்றி என்ன நினைப்பான் ? மனைவி கணவனைப் பற்றி என்ன நினைப்பாள் ?

கணவனுக்கு, பொதுவாக, மனைவியின் அருக்காமை இழப்பு தான் பெரிதாகப் படுகிறது. அவளிடம் பெற்ற இன்பம் தான் பெரிய இழப்பாக படுகிறது. அவளின் உடல், அவளின் காதல், அவளின் பரிவு, இனிய குரல், அவள் ஸ்பரிசம் , அவள் வாசம், ...அவற்றின் இழப்புதான் கணவனுக்கு முன்னே வந்து நிற்கிறது.

மனைவிக்கு என்ன தோன்றுகிறது ? அவர் எப்படி சாப்பிட்டாரோ ? நேரத்துக்கு தூங்கினாரோ இல்லையோ?  மருந்தெல்லாம் வேளா வேளைக்கு சாப்பிட்டாரோ இல்லையோ என்று அவன் உடல் நிலை பற்றி கவலையாக இருக்கும்.

இது இன்று நேற்று நிகழும் கதை இல்லை. தொன்று தொட்டு வருவது.

சீதையை பிரிந்து இருக்கிறான் இராமன்.

இராமன் என்ன நினைக்கிறான், சீதை என்ன நினைக்கிறாள் என்று  பார்ப்போம்.

முதலில் இராமன்,


பிரிவுத் துயர் இராமனை  வாட்டுகிறது.

தேரின் மேலே உள்ள  பகுதி போன்ற இடுப்பை கொண்ட சீதையின் முகத்தைக் காணாமல் வாடினான். யார் முகத்தைப் பார்த்து அவன் ஆறுதல் அடைவான் ? நல்ல உணர்வுகள் எல்லாம் அழிந்து போய் விட்டது. மன்மதனுக்கு பல மலர்கனைகளை அள்ளித் தரும் கார்காலத்தை கண்டான். ;ஆனால், கொடுமையான பிரிவு துயருக்கு ஒரு கரை கண்டான் இல்லை.

பாடல்


தேரைக் கொண்ட பேர்
      அல்குலாள் திருமுகம் காணான்,
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
      நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல்
      ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
      ஒரு கரை காணான்.

பொருள்

தேரைக் கொண்ட = தேர் தட்டு போன்ற

பேர் = சிறந்த

அல்குலாள் = இடுப்பை உடைய (அல்குல் என்பதற்கு சரியான அர்த்தம் என்ன என்று தமிழ் அகராதியில் காண்க)

திருமுகம் காணான் = (சீதையின்) அழகிய முகத்தை காணாதவன்

ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்? = வேறு யாரைப் பார்த்து உயிருக்கு நேர்ந்த துன்பத்தை ஆற்றுவான்

நல் உணர்வு அழிந்தான் = உணர்ச்சி அற்றுப் போனான்

மாரற்கு = மன்மதனுக்கு

எண் இல் = எண்ணிக்கை இல்லாத

பல் = பல

ஆயிரம் = ஆயிரம்

மலர்க் கணை  = மலர்கணைகளை

வகுத்த = எடுத்துக் கொடுத்த

காரைக் கண்டனன்; = கார் காலத்தை (மழைக் காலத்தை) கண்டான் (இராமன்)

வெந் துயர்க்கு = கொடுமையான துயரத்திற்கு

ஒரு கரை காணான் = ஒரு கரை காண மாட்டான்

கார் காலத்தில் மலர்கள் மலவர்து இயல்பு. அது கம்பனுக்கு எப்படி தோன்றுகிறது தெரியுமா ...

மன்மதனிடம் அந்த கார் காலம் சொல்கிறதாம் "இந்தா இந்த பூவெல்லாம் எடுத்து  அந்த இராமன் மேல மலர் அம்புகளாக தொடு " என்று ஒவ்வொரு பூவாக  எடுத்துக் கொடுப்பது போல அந்த மலர்கள் ஒவ்வொன்றாக மலர்ந்ததாம்.

அப்படிப்பட்ட கார்காலத்தைப் பார்த்தான், துன்பத்தின் கரையை  பார்க்கவில்லை.

சீதையை பிரிந்த இராமனுக்கு அவள் அழகுதான் கண்ணுக்கு முன் நிற்கிறது.

இராமனுக்கே அப்படி என்றால்....



Wednesday, January 6, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியோ மோடும் நின்னோடும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடியோ மோடும் நின்னோடும்


அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே



எனக்கு அப்புறம் என் பிள்ளையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை எல்லா தாய்மார்களுக்கும் உண்டு.

அவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு எனக்குத்தான் தெரியும். நான் இல்லாட்டி என் பிள்ளை என்ன செய்வான் என்று தவிக்காத தாய் இல்லை.

மகன் வெளியூருக்கு படிக்கப் போய் இருக்கலாம், வேலை நிமித்தமாய் வெளி நாட்டுக்கோ, வெளியூருக்கோ போய் இருக்கலாம்....

...அங்க என் மகன் என்ன துன்பப் படுகிறானோ, வேளாவேளைக்கு சாப்பிட்டானோ, குளித்தானோ, தூங்கினானோ என்று மறுகிக் கொண்டிருப்பாள் தாய்.

அது போல,

பெருமாளே, நீயோ எப்போதும் இருப்பவன். நானோ சாதாரண மானிடன். என் ஆயுள் அற்பம். எனக்கப்புறம் உன்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று தவித்த பெரியாழ்வார் தனக்கும் சேர்த்து பல்லாண்டு பாடிக் கொள்கிறார்.

"அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு"

அடியவர்களாகிய நாங்களும், ஆண்டவனாகிய நீயும் பல்லாயிரம் ஆண்டுகள் பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கிறார்.

தனக்கு ஆயுள் வேண்டும் என்று இல்லை. தான் இருந்தால் பெருமாளை ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே என்றே ஆதங்கத்தில் வேண்டுகிறார்.

நான் மட்டும் அல்ல, என்னைப் போன்ற அனைத்து அடியார்களும் உன்னோடு எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் .

அப்புறம் , ஆழ்வார் சிந்தித்தார். என்ன தான் இருந்தாலும் தான் ஒரு ஆண். மேலும் ஒரு மானிடன். தான் எத்தனை சேவை செய்தாலும் அது ஒரு மனைவி கணவனுக்குச் செய்யும் சேவை போல வருமா என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தார்.

பெருமாளின் வலது மார்பில் பெரிய நாச்சியாரின் உருவம் தெரிந்தது.

"ஹா...இவள் தான் சரி"

என்று நினைத்து அவளுக்கும் ஒரு பல்லாண்டு பாடினார்....

"வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு"


பெருமாளுக்குத் துணையாக திருமகள் இருக்கிறாள். அவர்களுக்கு ஒரு துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள அடியவர்களான நாங்கள் இருக்கிறோம்.

இதையும் மீறி பெருமாளுக்கு ஏதாவது அல்லது யாராவது துன்பம் தருவார்களே ஆனால்,  அவர்களிடம் இருந்து பெருமாளை காக்க சங்கத்தாழ்வானும் சக்கரத்தாழ்வானும் இருக்கிறார்கள். அவர்களும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று  வாழ்த்துகிறார்.

படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பெருமாள்,  பெருமாளோடு சேர்ந்து உறையும் திருமகள், அவரின் அடியவர்கள், அவனுக்குத் துணை செய்யும் சங்கும் சக்கரமும் என பெருமாளோடு தொடர்புள்ள எல்லோரையும் பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறார். 









நான்மணிக்கடிகை - பெரிய அறன் ஒக்கும்

நான்மணிக்கடிகை -  பெரிய அறன் ஒக்கும் 



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம் பற்றி முந்தைய ப்ளாகில் பார்த்தோம்.

அடுத்து, "பெரிய அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்" என்றால் என்ன என்று பார்ப்போம்.

அற நெறியில் வாழ வேண்டும், அறத்தை பின் பற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லப் படுகிறது.

அற நெறி என்றால் என்ன ? அது எந்தப் புத்தகத்தில் இருக்கிறது ?

நம் பெரியவர்கள் அறத்தை இரண்டாகப் பிரித்தார்கள்

- இல் அறம் = இல்லறம்
- துறவு + அறம் = துறவறம்

துறவறம் தூய்மையானது. பற்று அற்றது. ஆசைகளை துறந்தது. ஆனால் அது எல்லோராலும் முடியாது .

எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போவது என்றால் நடக்கிற காரியமா ?

இல்லறத்தில் இருந்து அதை ஒழுங்காக நடத்திக் கொண்டு சென்றால் அதுவே தூய்மையான துறவறத்துக்கு ஒப்பானது.

பெரிய அறம் = துறவறம். அது பெரியது. ஏன் என்றால் அதை செய்வது கடினம்.

பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகுதல் ...

ஆற்றின் ஒழுகுதல் என்றால் சிறப்பான முறையில் இல்லறத்தை நடத்திக் கொண்டு செல்வது.

அது எப்படி ஆற்றின் ஒழுகுதல் என்றால் வழியே செல்லுவது என்றுதானே அர்த்தம் ? ஆறு என்றால் வழி என்று தானே பொருள் என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் சொல்கிறார்...

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.

இதற்கு பொருள் சொன்ன பரிமேலழகர் ....

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின்;

புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் = அவன் அதற்குப் புறமாகிய நெறியிற் போய்ப்பெறும் பயன் யாது?

இல்லறத்தில் இருந்து, அதை அற வழியில் செலுத்துபவனுக்கு , துறவறத்தில் என்ன கிடைக்கப் போகிறது ? ஒன்றும் இல்லை.

அது என்ன அற வழியில் இல்லறம் ? ஒரு குடும்பத்தை எப்படி நல்ல வழியில் செலுத்துவது ?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல் வாழ்கை பண்பும் பயனும் அது

என்பார் வள்ளுவர்.

பழிக்கு அஞ்சி, பகுத்து உண்டல் இல் வாழ்வின் அறம் .

இல்லறத்தில் அன்பு இருக்க வேண்டும்.

இல்லறத்தில் அறம் இருக்க வேண்டும்.

இல்லறத்தில் வாழ்பவன் யார் யாரை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று பெரிய பட்டியல் தருகிறார் வள்ளுவர்.  அதை பின் ஒரு நாள் பார்ப்போம்.

இப்போதைக்கு பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்....




Tuesday, January 5, 2016

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு - பாகம் 2

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருபல்லாண்டு - பாகம் 2 




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

மனிதன், இறைவனிடம் பொதுவாகவே ஏதாவது கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான்.

படிப்பைக் கொடு, செல்வத்தைக் கொடு, உடல் ஆரோக்யத்தைக் கொடு, மன நிம்மதியைக் கொடு, என் பிள்ளைக்கு வேலை, நல்ல இடத்தில் திருமணம், சிக்கல்களில் இருந்து விடுதலை, என்று ஏதாவது ஒன்றைக் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

பற்றுகளை விட்டு விட்டேன் என்று சொல்லும் துறவிகளும், ஞானிகளும் கூட முக்தி கொடு, பரமபதம் கொடு என்று கேட்கிறார்கள்.

அதுவும் இல்லாவிட்டால் , இங்கேயே, உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கும்  வரம் தா என்று வேண்டுகிறார்கள்.

காலம் காலமாக மனிதன் ஆண்டவனிடம்  எதையோ கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். அவனின் தேவைகள் தீர்ந்தபாடில்லை.


இறைவா உன் கருணை  வேண்டும்,உன் அன்பு வேண்டும், உன் தயை வேண்டும் என்று உருகிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

இறைவன் பெரிய ஆள் தான். அவனால் எல்லாம் முடியும். மிக மிக சக்தி வாய்ந்தவன் தான்.

எதைக் கேட்டாலும் தருவான்...

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒரு தாய்  இருக்கிறாள். அவளுடைய பையன் படித்து பட்டம் பெற்று பெரிய ஆளாகி விட்டான். அவனுக்கு கீழே ஒரு பெரிய நிறுவனமே இயங்குகிறது. அவன் ஆணையை நிறைவேற்ற ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள்.

இருந்தாலும், அவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது , அந்தத் தாய்  " பாத்து போப்பா, ஜாக்கிரதையா போப்பா " என்று சொல்லி அனுப்பவாள் .

ஏன் ?

மகனுக்கு அறிவில்லையா ? அவனுக்கு எப்படி போக வேண்டும்  என்று  தெரியாதா ?

 தெரியும்.அது அந்தத்  தாய்க்கும்    தெரியும்.  இருந்தும்,அவள் மனதில் ஊற்றெடுக்கும் காதலால், அந்த பிள்ளையின்  மேல் உள்ள வாஞ்சையால் அவள் அப்படி சொல்கிறாள். அவனுக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக் கூடாதே என்ற கவலையில் சொல்கிறாள்.

 பக்தி இலக்கியத்தில் முதன் முதலாக , இறைவனிடம் ஒன்றும் கேட்காமல், ஒரு நன்றி கூட சொல்லாமல், "இறைவா நீ நல்லா இரு ...பல்லாண்டு காலம் நீ சௌக்கியமாக வாழ வேண்டும்  " என்று பெரியாழ்வார்  வாழ்த்துகிறார்.

இறைவனுக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ? வந்தாலும் அவனுக்குத் தன்னை காத்துக் கொள்ளத் தெரியாதா ?

தெரியும். அது ஆழ்வாருக்கும் தெரியும்.

இருந்தும்  பெருமாள் மேல் அவ்வளவு காதல்.

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்.

ஒரு தாய், தன் பிள்ளையை வாழ்த்துவதைப் போல வாழ்த்துகிறார்.


இவர் வாழ்த்துவதைப் பார்த்து பெருமாளுக்கு ஒரே  சிரிப்பு.

எனக்கு என்ன ஆபத்து வந்து விடும் என்று நீர் என்னை வாழ்த்துகிரீர். என்னுடைய தோள்களைப் பாரும். பெரிய பெரிய மல்லர்களை வீழ்த்திய தோள்கள் என்று தன் தோள்களைக் காட்டுகிறான் அவன்.

 அதைப் பார்த்ததும் , ஆழ்வாருக்கு இன்னும் பயம் வந்து விட்டது....

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


என்ன பயம் ?

=============== பாகம் 2 ===============================================

பிள்ளை வந்து அம்மாவிடம், "அம்மா இன்னிக்கு பள்ளிக் கூடத்ல எனக்கும் என்  நண்பர்களுக்கும் சண்டை வந்திருச்சு...எல்லாரையும் அடிச்சு தள்ளிட்டேன் ...அவங்க எல்லாம் கீழே விழுந்து நல்லா அடிபட்டுகிட்டாங்க "...என்று  மகன் தன் வீர தீர பிரதாபங்களை சொன்னால் அம்மா என்ன நினைப்பாள் ...

"ஐயோ, இந்த பிள்ளை இப்படி எல்லார் கிட்டேயும் சண்டை போடுறானே...இன்னிக்கு  இவன் ஜெய்ச்சிட்டான் ...நாளைக்கு அவனுக எல்லாம்  ஒண்ணா சேர்ந்து இவனோட சண்டை போட்டா இவன் என்ன ஆவானோ " என்று பதறுவாள்.

"அப்படி எல்லாம் சண்டை போடக் கூடாதுடா " என்று சொல்லுவாள்.

அவனோ "...அம்மா நீ ஒரு சரியான பயந்தாங்கோளி ...என் கிட்ட யார் சண்டைக்கு  வர முடியும் " என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே விளையாடப் போகிறான்.

அம்மாவுக்கு கவலை....

அவனுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாதே என்று.

கையைக் காலை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணுமே என்று கவலைப் படுவாள்.

அதே போல பெரியாழ்வார்...கவலைப் பட்டு பெருமாளை வாழ்த்துகிறார் ...

பெருமாள் சொல்கிறார்

"என் தோள் வலிமையைப் பார், மல்லர்களை சாய்த்து வெற்றி பெற்றவன் ...என் கிட்ட   யார் மோத முடியும் " என்று ஆழ்வாருக்கு ஆறுதல் சொல்கிறான்.

ஆழ்வாருக்கு அதுவே பெரிய கவலையாகப்  போய் விட்டது.

தான் தான் பெரிய சண்டியர் என்று மல்லுக்கு சண்டைக்குப் போய்  எங்காவது அடி கிடி   பட்டுவிடப் போகிறது என்று கவலைப் பட்டு...

உன் வலிமையான தோள்களுக்கும் பல்லாண்டு

உன்னைத் தாங்கி நிற்கும் உன் திருவடிகளுக்கும் பல்லாண்டு

என்று பெருமாளுக்கு ஒரு துன்பமும் வந்து விடக் கூடாது, அவர் பல்லாண்டு வாழ வேண்டும்   என்று வாழ்த்துகிறார்.

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு


அது என்ன திருவடிகளுக்கு காப்பு ? பெருமாளின் கண் முக்கியம் இல்லையா ? காது முக்கியம் இல்லையா ? மார்பு முக்கியம் இல்லையா ? எல்லாவற்றையும் விட்டு விட்டு எடுத்த எடுப்பில் சிவந்த அடிகளுக்கு ஏன் காப்புச் சொல்கிறார் ?


பொதுவாகவே, நமது தமிழ் இலக்கிய மரபில் இறைவனை வாழ்த்துவது என்றால் அடியில் தொடங்கி முடியில் முடிக்க வேண்டும்.

இறைவியை போற்றுவது என்றால் முடியில் தொடங்கி அடியில் முடிக்க வேண்டும்.

பாதாதி கேசம்
கேசாதி பாதம்

என்று சொல்லுவார்கள்.

உதாரணமாக, அபிராமி அந்தாதி பாட தொடங்கிய பட்டர்...

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று தலையில் இருந்து தொடங்குகிறார்.

இறைவனைப் பாட வந்த மாணிக்க வாசகர்

நமச்சிவாய வாழ்க நாதன்  தாள் வாழ்க 

என்று திருவடியில் இருந்து தொடங்கினார்.

இங்கும் நம்மாழ்வார் பெருமாளின் திருவடிகளை முதலாக வைத்து தொடங்குகிறார்.