Friday, January 22, 2016

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து

பிரபந்தம் - பண்டைக் குலத்தை தவிர்த்து 


அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே

இறந்த காலம் , கழிந்த காலங்கள் மனிதனின் தோள் மேல் பெரிய பாரமாக எப்போதும் அழுத்திக் கொண்டே இருக்கிறது.

செய்த தவறுகள், செய்யாமல் விட்ட நல்லவைகள், சொன்ன பொய்கள், தெரிந்த செய்த துரோகங்கள், சுயநலத்துக்காக செய்த செயல்கள், அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் மனிதனை துரத்திக் கொண்டே இருக்கின்றன.

இது ஒரு புறம்.

இன்னொரு புறம், பிறந்த வீடு, ஜாதி, நாடு, மதம், பெற்றார், உற்றார் , குலம் , கோத்திரம் என்று ஆயிரம் விஷயங்கள் மனிதனை அழுத்திக் கொண்டிருக்கின்றன. என்னால் அதைச் செய்ய முடியவில்லை காரணம்  என் குடும்பச்  சூழ்நிலை. முன்னேறியவர்கள் பட்டியலில் இருந்ததால் எனக்கு எனக்கு இடம் கிடைக்கவில்லை, தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் என் எண்ணமும் செயலும் இப்படி இருக்கிறது என்று பிறந்து வளர்ந்த சூழ்நிலை நம்மை பாதிக்கிறது.

இது இன்னொரு புறம்.

மூன்றாவது என்னவென்றால், பிறந்தது முதலே நம் பெற்றோரும், சமுதாயமும்,  பள்ளிக் கூடமும் சில விஷயங்களை நம் தலையில் ஏற்றி விடுகின்றன. இறைவன் என்றால் யார், இதில் உயர்ந்த இறைவன் யார், தாழ்ந்த இறைவன் யார், சமயப் பெரியார்கள், நல்லது, கெட்டது , அறம் , மறம் , பாவம் , புண்ணியம் என்று வண்டி வண்டியாக மண்டையில் திணித்து விடுகிறார்கள். சிறு வயதில் மூளைச் சலவை செய்யப் பட்டதால் நாம் அவற்றை உண்மை என்றே நம்புகிறோம். அவற்றைத் தாண்டி நம்மால் வர முடிவதில்லை.  அதைத் தவிர மற்றவை எல்லாம் பொய் என்றே நினைக்கத் தலைப் படுகிறோம்.

உண்மையை அறிய வேண்டும் என்றால், பழையன எல்லாவற்றையும் கட்டி தூக்கி எறிந்து விட வேண்டும்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்று பாரதி சொன்ன மாதிரி, பழையன எல்லாவற்றையும் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, குழந்தையின் மனதோடு  உண்மையைத் தேட வேண்டும். 

"பண்டைக் குலத்தைத் தவிர்ந்து"

நீங்கள் யாராக இருந்தாலும் கவலை இல்லை. உங்கள் பழையனவற்றை விட்டு விட்டு வாருங்கள். இறைவன் முன் எல்லோரும் சமம். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன், படித்தவன், முட்டாள் என்ற பேதமும் கிடையாது.


மனிதனுக்கு பணமும் செல்வமும் வந்தால் புத்தி மாறிப் போய் விடுகிறது. எவ்வளவோ கஷ்டப் பட்டு தவம் செய்கிறான். நிறைய வரங்களைப் பெறுகிறான். அவற்றின் மூலம் செல்வமும் பதவியும் கிடைக்கிறது. சந்தோஷமாக இருக்க   வேண்டியது தானே ? பணமும் செல்வாக்கும் வந்த உடன், மற்றவர்களை இம்சிக்கத் தொடங்குகிறான். பேராசை மேலும் மேலும் வேண்டும் என்கிறது. இறைவனை யார் என்று கேட்க்கும் அகங்காரம் வருகிறது. இறைவனை நிந்திக்கிறான். அவன் அடியார்களை நிந்திக்கத் தலைப் படுகிறான். அழிகிறான்.

"அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த"


அகில உலகங்களுக்கும் அதிபதியான அசுரரை, இராக்கதரை, கொலை தொழில் செய்வோரை எடுத்து களைந்த.

அதிகாரமும், செல்வமும் அகங்காரத்தை கொடுக்கும். அகங்காரம் அறிவை மயக்கும். எனவே, பணமும், அதிகாரமும் வரும்போது கவனமாக இருக்க வேண்டும்.

எடுத்துக் களைந்தவன் யார் ?

இருடி கேசன். 

அது என்ன இருடிகேசன் ?

ரிஷி+ கேசன். ரிஷி என்பது தமிழில் இருடி என்று வந்தது. ரிஷிகளுக்கு எல்லாம் தலைவன். ரிஷிகள், முனிவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள். அவர்களின் தலைவன்.

எனக்கு, உங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை இட்டு அழைத்தால் திரும்பிப் பார்ப்போம். இறைவனுக்கு என்ன பெயர் ? அவனுக்கு ஒரு பெயரும் இல்லை. அவனுக்கு ஒரு பெயரும் இல்லாவிட்டாலும், அவனை எப்படித் தான் அழைப்பது ? ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த பெயரில்  அழைக்கிறார்கள்.

"வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி:

வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி.

ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்

திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ! என்பார் மணிவாசகர்.

இப்போது முழு பாசுரத்தையும் பார்ப்போம்.


பாடல்

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே


சீர் பிரித்த பின் 

அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை 
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த  இருடீ கேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ 

பொருள்

அண்டக் குலத்துக்கு = அண்டங்களுக்கு எல்லாம்

அதி பதியாகி =அதிபதியாகி

அசுரர் = அசுரர்களை

இராக்கதரை  = இராகதர்களை

இண்டைக் குலத்தை = கொலைத் தொழிலில் ஈடு படுபவர்களை

எடுத்துக் களைந்த = களைந்து எடுத்த

இருடீ கேசன் தனக்கு = ரிஷிகளின் தலைவனுக்கு

தொண்டக் குலத்திலுள்ளீர் = தொண்டர்கள் குலத்தில் உள்ளவர்களே

வந்து = வந்து

அடி தொழுது = அடி தொழுது

ஆயிர நாமம்சொல்லி = ஆயிரம் நாமம் சொல்லி

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து = உங்கள் பழைய குலத்தினை மறந்து

பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என் மினோ = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று கூறுங்கள்







Thursday, January 21, 2016

பிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ

பிரபந்தம் - வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ


ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே



இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ?

பார்த்து விட்டு வந்த யாராவது நம்மிடம் சொல்லி இருக்கிறார்களா ? நாம் நேரடியாக கேட்டு இருக்கிறோமா?

இல்லை.

இருந்தாலும், பெருமாள் இப்படி இருப்பார், இவ்வளவு உயரம், இன்ன நிறம், இத்தனை கை, இந்த மாதிரி பொருள் எல்லாம் கையில் வைத்து இருப்பார், இந்த மாதிரி உடை உடுத்து இருப்பார் என்று நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.

இது சரியா ?

இறைவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், அவனை தேட வேண்டும். தேட வேண்டும் என்றால், அவனைப் பற்றி தெரியாது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவனை பற்றி எல்லாம் தெரியும் என்றால் பின் எதற்கு தேடுவது ?

நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, பிறர் சொன்ன செய்திகளை எல்லாம் உதறி விட்டு, சொந்தமாக தேடத் தொடங்குங்கள். இறை என்பது ஒரு அனுபவம். ஒவ்வொருவரும் தனித் தனியே அனுபவிக்க வேண்டிய ஒன்று. என் அனுபவம் உங்களுக்குப் புரியாது. உங்கள் அனுபவம் எனக்குத் தெரியாது.

இறைவன் ஒரு வரையறைக்குள் உட்பட்டவன் அல்ல. நம் சிற்றறிவால் அவனை அறிந்து கொள்ள முடியாது.

"சித்தமும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர்.

நம் சித்தத்துக்குள் அகப்படாது.

அப்படி என்றால் இறைவனை நாம் அறிந்து கொள்ளவே முடியாதா ? தெரிந்து கொள்ளவே முடியாதா என்றால் முடியும்.

அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அவன், நமக்காக இரங்கி இறங்கி வருவான். அவதாரம் என்றால் இறங்கி வருதல் என்று பொருள். அவன் இறங்கி வரும் போது நாம் அவனை அறிய முடியும்.

பெரியாழ்வார் அழைக்கிறார்


"வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ"

வரம்பு ஒழிந்து வந்து ஒல்லை கூடுமினோ.

வரம்பு என்றால் எல்லைக் கோடு . இது தான் என்று இறைவனை ஒரு கட்டத்துக்குள் அடைக்காதீர்கள். அவன் எல்லை அற்றவன். நீங்கள் அந்த எல்லைகளை கடந்து சீக்கிரமாக வாருங்கள்.

அது என்ன ஒல்லை ? ஒல்லை என்றால் சீக்கிரம் என்று அர்த்தம்.

இராமாயணத்தில், இராமன் மிதிலை நோக்கி வருகிறான். அப்போது மிதிலை நகரின் கோட்டையின் மேல் இருந்த கொடிகள் எல்லாம், "மிதிலை நகரமாகிய நான் செய்த மா தவத்தினால், தாமரை மலரில் இருக்கும் திருமகள் இங்கு வந்து இருக்கிறாள். அவளை கரம் பிடிக்க நீ சீக்கிரம் வா " என்று அழைப்பது போல அந்த கொடிகள் அசைந்தன என்பார் கம்பர்.

மை அறு மலரின் நீங்கி.
   யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று.
   செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
   கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை. ‘ஒல்லை வா’ என்று
   அழைப்பது போன்றது அம்மா!


பெரியாழ்வாரும் சீக்கிரம் வாருங்கள் என்று அழைக்கிறார்.

ஏன் ? என்ன அவசரம் ?

மனிதனின் வாழ்நாள் மிகச் சிறியது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், கடவுளை பற்றி சிந்திக்க எல்லாம் எங்க நேரம் இருக்கு ? இருக்கிற வேலைய பாக்கவே நேரம் இல்லை என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள். சீக்கிரமாக   எங்கள் குழுவில் வந்து சேருங்கள் என்று அழைக்கிறார்.
பிள்ளையை பள்ளியில் சேர்க்க வேண்டும், பின் அதுக்கு கல்லூரியில் இடம் பார்க்க வேண்டும், பின் வேலை, பின் கல்யாணம், ஒரு பேரப் பிள்ளையை பார்க்க வேண்டும், அதற்குள் பெற்றோர்களுக்கு வயதாகி விடும், அவர்களை பார்க்க வேண்டும்...இப்படி தள்ளிக் கொண்டே போனால் நமக்கும் வயதாகி விடும்.

எனவே தள்ளிப் போடாமல் சீக்கிரம் வாருங்கள் என்று அழைப்பு  விடுகிறார்.

"ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்"

எல்லோருக்கும் ஒரு குறிப்பேடு இருக்கிறது. பிறக்கின்ற  தினம்,இறக்கின்ற தினம் என்று குறித்து வைத்திருக்கிறது  அதில்.அது நிலத்தில் விழு முன் வாருங்கள்.

ஒன்றாகச் சேர்ந்தாலும், நமக்கு என்ன என்ன இலாபம் என்று பார்க்காமல் எல்லோருக்கும் நன்மை கிட்ட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

"கூடும் மனம் உடையீர்கள் "  என்கிறார்.

அவனுக்கு முக்தி கிடைத்து விடுமோ, அவனுக்கு பெருமாள் அருள் செய்து விடுவாரோ, நானும் தான் தினமும் பெருமாளை சேவிக்கிறேன், எனக்கு ஒண்ணும் இல்லை, அவனுக்கு மட்டும் பெருமாள் எல்லா சௌபாக்கியத்தையும் அள்ளி அள்ளி தருகிறார் என்று பொறாமை படக் கூடாது. எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது உள்ளம் குளிர வேண்டும்.

"கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்." என்று ஆண்டாள் கூறியபடி. மனத்தில் சூடு இருக்கக் கூடாது. குளிர்ந்து இருக்க வேண்டும்.


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்த பின் என்ன செய்ய வேண்டும் ?

நாடும் நகரமும் நன்கு அறிய "நமோ நாராயாணா" என்று கூறி அவனை பல்லாண்டு வாழ வாழ்த்துவோம் என்கிறார்.

 பாடல்;

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே


பொருள்

ஏடு = இந்த உடல்

நிலத்தில் = நிலத்தில்

இடுவதன் முன்னம் = விழுவதற்கு முன்னால்

வந்து = இங்கே வந்து

எங்கள் குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து

கூடு மனமுடை யீர்கள் = கூட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களே

வரம்பொழி வந்து = உங்கள் வாழ்க்கையில் எது எது எல்லைகள் என்று நீங்கள் வகுத்து வைத்து இருந்தீர்களோ அவற்றை எல்லாம் தாண்டி

ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வந்து கூடுங்கள்

நாடும் நகரமும் = நாடும் நகரமும்

நன்கறி ய = நன்றாக அறியும் படி

நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயாணா என்று

பாடு = பாடும்

மனமுடைப் பத்தருள் ளீர் = பாடும் பக்தர்களுக்கு நடுவே

வந்து = வந்து

பல்லாண்டு கூறுமினே = பல்லாண்டு கூறுங்கள்


Tuesday, January 19, 2016

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின் - பாகம் 2


பாடல்

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே


பொருள்

வாழ்வதற்காக என்று இருப்பவர்களே, வந்து மண்ணும், மணமும் பெற்றுக் கொள்ளுங்கள். கூழுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஏழேழு பிறவியாக ஒரு பழி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அரக்கர்கள் வாழும் இலங்கை மேல் படை எடுத்துச் சென்று அதை பாழாக்கியவனுக்கு பல்லாண்டு கூறுவோம்.

இது அடுத்த பாசுரம்.

வாழாட் பட்டு = வாழ்வதற்காக ஆட்பட்டு

நின் றீருள்ளீ ரேல் = நின்று உள்ளீரேல்

வந்து = இங்கு வந்து

மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் பெற்றுக் கொள்ளுங்கள்

கூழாட் பட்டு = கூழுக்கு ஆட்பட்டு

நின் றீர்களை = நிற்பவர்களை

எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் = எங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்

ஏழாட் காலும் = ஏழு பிறப்பிலும்

பழிப்பிலோம் நாங்கள் = பழி இல்லாமல் வாழ்பவர்கள் நாங்கள்

இராக்கதர் வாழ் இலங்கை = அரக்கர்கள் வாழும் இலங்கை

பாழா ளாகப் = பாழ் படும்படி

படைபொரு தானுக்குப் =      படை  எடுத்தவனுக்கு

பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோம்

சரி, இந்த பாட்டில் அப்படி என்ன விசேஷம் ?

பெரியாழ்வாரின் பாடல்கள், அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள்.

வாருங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

தாய் நமக்கு தந்தையை காட்டித் தருகிறாள். அவள் சொல்லித்தான் தந்தை யார் என்று நமக்குத் தெரிகிறது.

தந்தை, நம்மை ஆசாரியனிடம் கொண்டு சேர்க்கிறார். தந்தை சொல்லித்தான் ஆசாரியனை நமக்குத் தெரியும்.

அந்த ஆசாரியன் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பான். அவன் சொல்லித்தான் இறைவன் யார் என்று நமக்குத் தெரியும்.

பெரியாழ்வார் இறைவனை கண்டு கொண்டார். அவனுக்கும், திருமகளுக்கும், சங்கு சக்ரத்துக்கும் பல்லாண்டு பாடினார்.

அடுத்து என்ன செய்வது ?

தான் மட்டும் அறிந்தால் போதாது, இறைவனைத் தேடி அலையும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது, அந்த பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று அவரது தாயுள்ளம் விரும்புகிறது.


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பக்தர்களை நான்காகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது, உலகில் உள்ள பொருள் செல்வத்தைப் பெறுவதற்காக பக்தி பண்ணுபவர்கள். அவர்கள் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது, ஆத்மாவை அறிய விரும்புபவர்கள். ஆத்ம அனுபவத்தை தேடுபவர்கள். அதற்காக இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள்.

மூன்றாவது, மோட்சம், வைகுண்டம் வேண்டி இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள். அவர்களுக்கு பணம் வேண்டாம், செல்வம் வேண்டாம், ஆத்ம அனுபவம் வேண்டாம்...முக்தி ஒன்றையே விரும்பி இறைவனிடம் பக்தி செலுத்துவார்கள்.

நான்காவது, இறைவனையே வேண்டும் என்று, அவனை அடைய வேண்டும் என்று பக்தி செலுத்துபவர்கள்.

(மேலும் சிந்திப்போம்)

அடியவர்களை ஆண்டவனிடம் சேர்பிப்பது ஆசாரியனின் கடமை. 

ஒவ்வொருவராக அழைக்கிறார் பெரியாழ்வார்.

முதலில், யார் வர வேண்டாம் என்று நிர்ணயம் பண்ணிக் கொள்கிறார். 

பணத்துக்காக  இறைவனை வேண்டுபவர்களை முதலிலேயே தள்ளி வைத்து விடுகிறார். உலக இன்பத்துக்காக அலைபவர்கள் ஒரு போதும் இறைவனை அடைய முடியாது  என்பதை குறிப்பால் உணர்த்த ...

"கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்"

கூழுக்காக அலைபவர்களை (கூழுக்கு ஆட் பட்டு ) எங்கள் குழுவில் புக விடமாட்டோம்   என்கிறார்.  இறைவனின் அடியவர்களின் கூட்டத்தில் சேர வேண்டும் என்றால்  முதல் தகுதி செல்வத்தின் மேல் உள்ள ஆசையை விட வேண்டும். 

அடுத்து மீதி உள்ள மூன்று  விதமான பக்தர்களில் யாரை அழைப்பது ?

எப்போதும் சிறந்தவர்களை முதலில் அழைக்க வேண்டும் என்ற மரபுப் படி , இறைவனையே  அடைய வேண்டும் என்று விரும்பும் பக்தர்களை முதலில் அழைக்கிறார். 

"வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்"

வாழ்வதற்காக ஆட்பட்டு நின்று உள்ளீரேல் (இருப்பீர்கள் ஆனால்) வந்து மண்ணும் மணமும் கொண்மின் என்கிறார். 

மண்ணும் மணமும் கொள்ளுங்கள் என்றால் - திருமண்ணும், துளசியும் கொள்ளுங்கள் என்று பொருள் சொல்கிறார்கள். 

இறைவனை அடைய விரும்பும் பக்தர்களுக்கு இன்னொரு தகுதி சொல்கிறார். 


ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்

நாம் இந்த பிறவி மட்டும் பழி செயலில் ஈடு படாமல் இருந்தால் போதாது ....ஏழேழ் பிறவியும் பழி இல்லாமல் இருக்க வேண்டும். இப்போது யாராவது அவன்  அடியவர்களாக இருக்கிறார்கள் என்றால் அது இந்தப் பிறவியில் மட்டும்   நல்லவர்களாக இருந்ததால் வந்த நிலை அல்ல. முன்பு பல பிறவிகளில்  பழி இல்லாமல் வாழ்ந்ததால் இப்போது அவன் பக்தனாக ஆகும் வாய்ப்பு கிடைத்து  இருக்கிறது. 

அப்படி செல்வத்தில் நாட்டம் இல்லாமல்,  ஏழேழ் பிறவியில் பழி இல்லாமல்  வாழ்ந்து, அவனையே அடையும் உள்ளம் கொண்டவர்களே வாருங்கள், அவனுக்கு  பல்லாண்டு கூறுவோம் என்கிறார். 


தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன்




தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


எல்லோருக்கும் தெரிந்த தேவாரம் தான்.

ஞான சம்பந்தருக்கு  உமை பால் தந்தாள். குளத்தில் இருந்து குளித்து வெளியில் வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு யார் பால் தந்தது என்று கேட்டார். குழந்தை வானத்தைக் காட்டி

"தோட்டினை காதில் உள்ள அவன், எருதின் மேல் ஏறி , தூய்மையான வெண்ணிலவின் கீற்றை தலையில் சூடி, காட்டில் உள்ள உள்ள சாம்பலை உடலில் பூசி, என் உள்ளத்தை கவர்ந்த அவன் தந்தான்.  அவனை மலரால் நான் முன்பு அர்ச்சனை செய்தேன். எனக்கு அருள் புரிந்தான். சிறந்த பிரமாபுரம் என்ற ஊரில் இருக்கும் பெம்மான் இவன் "

.என்று பாடினார்.

பாடலும் பொருளும் எல்லோருக்கும் தெரிந்தது  தான்.

தெரியாத உட்பொருள் என்ன என்று பார்ப்போம்.

பாட்டை கொஞ்சம் உற்று பார்த்தால் ஏதோ சம்பந்த சம்பந்தமில்லாத வாரத்தை கோர்வைகள் போலத் தோன்றும்.

தோடுடைய செவியன்
விடை ஏரியவன்
மதி சூடியவன்
சாம்பலை பூசினவன்
உள்ளத்தை கவர்ந்தவன்
அருள் செய்தவன்
பிரம புரத்தில் இருப்பவன்

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் ஒரே வார்த்தை அடுக்காக இருக்கிறதே  என்று நினைப்போம்.

இறைவன் ஐந்து தொழில்களை செய்கிறான் என்கிறது சைவ சித்தாந்தம். அவையாவன

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

 அது அப்படி இருக்கட்டும் ஒரு பக்கம்.

இந்த உலகம் எல்லாம் ஊழிக் காலத்தில் அழிந்து போகும். எது அழிந்தாலும் அறம் அழியாது. தர்மம் என்றும் நிலைத்து நிற்கும். உலகமே அழிந்தாலும் தர்மம் அழியாது.

உலகமே ஊழித் தீயால் அழிந்த போது தர்மத்தை எருதாகச் செய்து தனக்கு வாகனமாக்கிக் கொண்டார் சிவன். எருதின் இன்னொரு பெயர் விடை.

உலகில் உள்ள அத்தனை சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தர்மம் தான் விடை.

அப்படி உலகம் அழிந்த போது தர்மத்தை விடையாக (எருதாக) செய்ததால், அது படைப்புத் தொழில். "விடை ஏறி"

சந்திரன், தன் மாமனாரின் சாபத்தால் நாள் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். தன்னை காக்கும் படி வேண்டிய சந்திரனை , காப்பாற்றி தன் தலையில் சூடிக் கொண்டார். ஆதலால் அது காத்தல் தொழில். "தூவெண் மதி சூடி"

உலகம் ஊழித் தீயால் அழியும். மிஞ்சுவது சாம்பல் மட்டுமே. அந்த சாம்பலை மேலே பூசிக் கொண்டிருப்பவன் என்பதால் அது அழித்தல் தொழில். "காடுடைய சுடலை பொடி பூசி "

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறான். இருந்தும் உயிர்களால் அவனை அறிய முடிவதில்லை. மாயை மறைக்கிறது. மனதுக்குள் மறைந்து நிற்பதால் அது மறைத்தல் தொழில். "என் உள்ளம் கவர் கள்வன்". கள்வன் மறைந்து தானே இருப்பான்.

வேண்டும் அடியவர்களுக்கு அவன் அருள் செய்வதால் அது அருள்தல் தொழில்.  "ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த"

இப்படி ஐந்து தொழில்களையும் இறைவன் செய்கின்றான் என்று குறிப்பாக உணர்த்தும் பாடல்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாட்டின் ஆழம்  விளங்கும்.

தேவாரத்தின் ஒரு பாடலுக்கு இவ்வளவு பொருள்.

எவ்வளவு படிக்க இருக்கிறது.


Monday, January 18, 2016

இராமாயணம் - இராமனின் பிரிவு

இராமாயணம் - இராமனின் பிரிவு 


சீதையை பிரிந்த இராமனின் நிலையைப் பார்த்தோம். இராமன் சீதையின் அழகை, அவளின் அருகாமையை இழந்ததை நினைத்து வாடுகிறான். குறிப்பாக காமம் அவனை வாட்டுகிறது. மன்மத கணைகளுக்கு வருந்துகிறான்.

அதே சமயம், இலங்கையில் சீதை என்ன நினைக்கிறாள் ?

"யார் இராமனுக்கு உணவு தருவார்கள் ? அவருக்கு தானே போட்டு சாப்பிடத் தெரியாதே. யார் அவருக்கு உணவு பரிமாறுவார்கள் ? வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் எப்படி அவர் சமாளிப்பார் ?  என் துன்பத்திற்கு ஒரு மருந்தும் இல்லையே" என்று வருந்துகிறாள்.

இராமனோடு தான் இன்புற்று இருக்க முடியவில்லையே என்று அவள் வருந்தவில்லை. அவன் எப்படி சாபிட்டானோ, வீட்டுக்கு யாராவது வந்தால் எப்படி அவர்களை உபசரிப்பானோ என்று வருந்துகிறாள்.

பாடல்

'அருந்தும் மெல் அடகு ஆர் இட
    அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
    என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
    நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
    எழவும் ஆண்டு எழாதாள்.

பொருள் 

‘அருந்தும் = உண்ணும்

மெல் அடகு =  இலை கறி உணவு

ஆர் இட = யார் பரிமாற

அருந்தும்? ‘ = சாப்பிடுவான் ?

என்று அழுங்கும்; = என்று வருந்துவாள்

‘விருந்து கண்டபோது என் உறுமோ?  = விருந்து வந்தால் என்ன செய்வானோ

என்று விம்மும்; = என்று நினைத்து விம்முவாள்

‘மருந்தும் உண்டுகொல் = மருந்து கூட இருக்கிறதா

யான்கொண்ட நோய்க்கு? = என் துன்பத்திற்கு

‘என்று மயங்கும்; = என்று மயங்குவாள்

இருந்த = அவள் அமர்ந்து இருந்த

மா நிலம்  =நிலம்

செல் அரித்து எழவும் = கரையான் புற்று எழுப்பி அரித்த போதும்

ஆண்டு எழாதாள். = இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்து இருந்தாள்

இதில் நாம் பார்க்க வேண்டியது இரண்டு விஷயங்கள்.

ஒன்று சீதையின் துயரம். அது தெளிவாகத் தெரிகிறது. கணவன் எப்படி சாப்பிடுவன், எப்படி விருந்தை உபசரிப்பான் என்று வருந்தியது தெளிவாகத் தெரிகிறது.

இரண்டாவது, பாடலின் உள்ளே கம்பன் காட்டும் இல்லறம். இல்லத்தின் அறம்.

ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ? 

ஏன் திருமணம் செய்து கொண்டாய் என்று திருமணம் செய்து கொண்ட யாரையாவது கேட்டால்   என்ன சொல்லுவார்கள் 

"கணவன் அல்லது மனைவியோடு சேர்ந்து இன்பம் அனுபவிக்க, வாரிசுகளை பெற்றுக் கொள்ள " என்று சொல்லுவார்கள். 

அதற்கா திருமணம். இன்பம் அனுபவிப்பதும், சந்ததிகளை பெற்றுக் கொள்வதும்  விலங்குகள் கூட செய்கின்றன. 

இல்லத்தின் அறம் பற்றி திருவள்ளுவன் சொன்னதை கம்பன் இங்கே சொல்கிறான்.

அது என்ன அறம் ?

மேலும் சிந்திப்போம். 


Sunday, January 17, 2016

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின்

பிரபந்தம் - மண்ணும் மணமும்கொண்மின்


பாடல்

வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே


பொருள்

வாழ்வதற்காக என்று இருப்பவர்களே, வந்து மண்ணும், மணமும் பெற்றுக் கொள்ளுங்கள். கூழுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களை எங்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். ஏழேழு பிறவியாக ஒரு பழி இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அரக்கர்கள் வாழும் இலங்கை மேல் படை எடுத்துச் சென்று அதை பாழாக்கியவனுக்கு பல்லாண்டு கூறுவோம்.

இது அடுத்த பாசுரம்.

வாழாட் பட்டு = வாழ்வதற்காக ஆட்பட்டு

நின் றீருள்ளீ ரேல் = நின்று உள்ளீரேல்

வந்து = இங்கு வந்து

மண்ணும் மணமும்கொண்மின் = மண்ணும் மணமும் பெற்றுக் கொள்ளுங்கள்

கூழாட் பட்டு = கூழுக்கு ஆட்பட்டு

நின் றீர்களை = நிற்பவர்களை

எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் = எங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்

ஏழாட் காலும் = ஏழு பிறப்பிலும்

பழிப்பிலோம் நாங்கள் = பழி இல்லாமல் வாழ்பவர்கள் நாங்கள்

இராக்கதர் வாழ் இலங்கை = அரக்கர்கள் வாழும் இலங்கை

பாழா ளாகப் = பாழ் படும்படி

படைபொரு தானுக்குப் =      படை  எடுத்தவனுக்கு

பல்லாண்டு கூறுதமே = பல்லாண்டு கூறுவோம்

சரி, இந்த பாட்டில் அப்படி என்ன விசேஷம் ?

பெரியாழ்வாரின் பாடல்கள், அள்ள அள்ள குறையாத பொக்கிஷங்கள்.

வாருங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

தாய் நமக்கு தந்தையை காட்டித் தருகிறாள். அவள் சொல்லித்தான் தந்தை யார் என்று நமக்குத் தெரிகிறது.

தந்தை, நம்மை ஆசாரியனிடம் கொண்டு சேர்க்கிறார். தந்தை சொல்லித்தான் ஆசாரியனை நமக்குத் தெரியும்.

அந்த ஆசாரியன் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பான். அவன் சொல்லித்தான் இறைவன் யார் என்று நமக்குத் தெரியும்.

பெரியாழ்வார் இறைவனை கண்டு கொண்டார். அவனுக்கும், திருமகளுக்கும், சங்கு சக்ரத்துக்கும் பல்லாண்டு பாடினார்.

அடுத்து என்ன செய்வது ?

தான் மட்டும் அறிந்தால் போதாது, இறைவனைத் தேடி அலையும் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது, அந்த பேரின்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று அவரது தாயுள்ளம் விரும்புகிறது.


வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் பக்தர்களை நான்காகப் பிரிக்கிறார்கள்.

முதலாவது, உலகில் உள்ள பொருள் செல்வத்தைப் பெறுவதற்காக பக்தி பண்ணுபவர்கள். அவர்கள் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இரண்டாவது, ஆத்மாவை அறிய விரும்புபவர்கள். ஆத்ம அனுபவத்தை தேடுபவர்கள். அதற்காக இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள்.

மூன்றாவது, மோட்சம், வைகுண்டம் வேண்டி இறைவன் மேல் பக்தி செலுத்துபவர்கள். அவர்களுக்கு பணம் வேண்டாம், செல்வம் வேண்டாம், ஆத்ம அனுபவம் வேண்டாம்...முக்தி ஒன்றையே விரும்பி இறைவனிடம் பக்தி செலுத்துவார்கள்.

நான்காவது, இறைவனையே வேண்டும் என்று, அவனை அடைய வேண்டும் என்று பக்தி செலுத்துபவர்கள்.

(மேலும் சிந்திப்போம்)

இராமாயணம் - சீதையின் பிரிவு

இராமாயணம் - சீதையின் பிரிவு


கணவன் மனைவி பிரிவு எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தான். வேலை நிமித்தமாக கணவன் வெளியூர் போக வேண்டியது வரலாம், பிரசவத்துக்காக மனைவி அம்மா வீட்டுக்கு போக வேண்டி வரலாம், இப்படி ஏதோ ஒரு காரணத்தால் கணவன் மனைவி பிரிவு நிகழத்தான் செய்கிறது.

கணவனும் மனைவியும் ஏதோ காரணத்தால் பிரிந்தாலும், அவர்களுக்குள் உள்ள அன்பு பிரிந்து விடுவது இல்லை.

அவர்கள் பிரிந்து இருக்கும் போது , கணவன் , மனைவியைப் பற்றி என்ன நினைப்பான் ? மனைவி கணவனைப் பற்றி என்ன நினைப்பாள் ?

கணவனுக்கு, பொதுவாக, மனைவியின் அருக்காமை இழப்பு தான் பெரிதாகப் படுகிறது. அவளிடம் பெற்ற இன்பம் தான் பெரிய இழப்பாக படுகிறது. அவளின் உடல், அவளின் காதல், அவளின் பரிவு, இனிய குரல், அவள் ஸ்பரிசம் , அவள் வாசம், ...அவற்றின் இழப்புதான் கணவனுக்கு முன்னே வந்து நிற்கிறது.

மனைவிக்கு என்ன தோன்றுகிறது ? அவர் எப்படி சாப்பிட்டாரோ ? நேரத்துக்கு தூங்கினாரோ இல்லையோ?  மருந்தெல்லாம் வேளா வேளைக்கு சாப்பிட்டாரோ இல்லையோ என்று அவன் உடல் நிலை பற்றி கவலையாக இருக்கும்.

இது இன்று நேற்று நிகழும் கதை இல்லை. தொன்று தொட்டு வருவது.

சீதையை பிரிந்து இருக்கிறான் இராமன்.

இராமன் என்ன நினைக்கிறான், சீதை என்ன நினைக்கிறாள் என்று  பார்ப்போம்.

முதலில் இராமன்,


பிரிவுத் துயர் இராமனை  வாட்டுகிறது.

தேரின் மேலே உள்ள  பகுதி போன்ற இடுப்பை கொண்ட சீதையின் முகத்தைக் காணாமல் வாடினான். யார் முகத்தைப் பார்த்து அவன் ஆறுதல் அடைவான் ? நல்ல உணர்வுகள் எல்லாம் அழிந்து போய் விட்டது. மன்மதனுக்கு பல மலர்கனைகளை அள்ளித் தரும் கார்காலத்தை கண்டான். ;ஆனால், கொடுமையான பிரிவு துயருக்கு ஒரு கரை கண்டான் இல்லை.

பாடல்


தேரைக் கொண்ட பேர்
      அல்குலாள் திருமுகம் காணான்,
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
      நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல்
      ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
      ஒரு கரை காணான்.

பொருள்

தேரைக் கொண்ட = தேர் தட்டு போன்ற

பேர் = சிறந்த

அல்குலாள் = இடுப்பை உடைய (அல்குல் என்பதற்கு சரியான அர்த்தம் என்ன என்று தமிழ் அகராதியில் காண்க)

திருமுகம் காணான் = (சீதையின்) அழகிய முகத்தை காணாதவன்

ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்? = வேறு யாரைப் பார்த்து உயிருக்கு நேர்ந்த துன்பத்தை ஆற்றுவான்

நல் உணர்வு அழிந்தான் = உணர்ச்சி அற்றுப் போனான்

மாரற்கு = மன்மதனுக்கு

எண் இல் = எண்ணிக்கை இல்லாத

பல் = பல

ஆயிரம் = ஆயிரம்

மலர்க் கணை  = மலர்கணைகளை

வகுத்த = எடுத்துக் கொடுத்த

காரைக் கண்டனன்; = கார் காலத்தை (மழைக் காலத்தை) கண்டான் (இராமன்)

வெந் துயர்க்கு = கொடுமையான துயரத்திற்கு

ஒரு கரை காணான் = ஒரு கரை காண மாட்டான்

கார் காலத்தில் மலர்கள் மலவர்து இயல்பு. அது கம்பனுக்கு எப்படி தோன்றுகிறது தெரியுமா ...

மன்மதனிடம் அந்த கார் காலம் சொல்கிறதாம் "இந்தா இந்த பூவெல்லாம் எடுத்து  அந்த இராமன் மேல மலர் அம்புகளாக தொடு " என்று ஒவ்வொரு பூவாக  எடுத்துக் கொடுப்பது போல அந்த மலர்கள் ஒவ்வொன்றாக மலர்ந்ததாம்.

அப்படிப்பட்ட கார்காலத்தைப் பார்த்தான், துன்பத்தின் கரையை  பார்க்கவில்லை.

சீதையை பிரிந்த இராமனுக்கு அவள் அழகுதான் கண்ணுக்கு முன் நிற்கிறது.

இராமனுக்கே அப்படி என்றால்....