Thursday, August 18, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.2


தன்னை யாராலும் வெல்ல முடியாது, நீ பயப்படாதே என்று மனைவிக்கு தேறுதல் சொல்லிவிட்டு வாலி போருக்கு புறப்படுகிறான்.

சுக்ரீவனோடு சண்டை போடுகிறான்.

சுக்ரீவனை தலைக்கு மேல் தூக்கி நிற்கும் போது இராமன் , இராமன் வலியின் மேல் அம்பு எய்துகிறான்.

மிக மிக வலிமை மிக்கவன் வாலி.

இருந்தும் அவன் மார்பில், கனிந்த வாழைப் பழத்தில் ஊசி ஏறுவது போல இராமனின் அம்பு நுழைகிறது.

பாடல்

காரும் வார் சுவைக் கதலியின்
    கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது
    நின்றது என் செப்ப?
நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை அப் பகழி.

பொருள்

காரும் வார் சுவைக் கதலியின் = கனிந்த சுவையான வாழைப் பழத்தில்

கனியினைக் = பழத்தினை

கழியச் சேரும் = விரைந்து செல்லும்

ஊசியிற் சென்றது = ஊசி போல சென்றது

நின்றது = நின்றது

என் செப்ப? = என்ன சொல்ல

நீரும் = நீரும்

நீர்தரு நெருப்பும் = நீரைத் தரும் நெருப்பும்

வன் காற்றும் = ஆற்றல் மிகுந்த காற்றும்

கீழ் நிமிர்ந்த பாரும் = இவற்றிற்கு கீழே உள்ள நிலமும்

சார் வலி படைத்தவன் = மிகுந்த வலிமை கொண்டவனான

உரத்தை அப் பகழி = வலிமையை அந்த அம்பு



ஒரு பரு வெடிப்பில் (Big Bang ) இருந்து இந்த உலகம் வந்தது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒரு நெருப்புக் கோளம் வெடித்து சிதறியதில் இருந்து உலகம் அனைத்தும் வந்தது என்று அறிவியல் கூறுகிறது.

கம்பன் கூறுகிறான், ஆதியில் நெருப்பு இருந்தது என்றும், அதில் இருந்து நீர்  வந்தது என்றும், அதில் இருந்து காற்றும் நிலமும் வந்தது என்றும்.

வன் காற்று என்று ஏன் கூறுகிறான் ?

வேன் நெருப்பு என்றோ, வன் நீர் என்றோ கூறி இருக்கலாம் அல்லவா ?

காற்றுக்குத்தான் வலிமை அதிகம்.

இராமாயணத்திலும் சரி, பாரதத்திலும் சரி,  மிக்க உடல் வலிமை மிக்கவர்கள்  வாயு புத்திரர்களே.

இராமாயணத்தில் அனுமன்

பாரதத்தில் பீமன்.

என்ன காரணம் ?

மூச்சை அடக்கினால் வலிமை வரும்.

நாடியில் இருக்கிறது அத்தனை வலிமையையும்.


சரி, வாலியின் பலத்தை எடுத்தது யார் ? இராமனா ?

கம்பன் கூறுகிறான் , வாலியின் பலத்தை எடுத்தது இராமன் அல்ல, அவன்  எய்த அம்பு என்று.

இது என்ன புதுக் கதை ? அம்பு தானாகவா தாக்கியது ?


இராமன் தானே எய்தான் ?

எய்தது இராமன் தான். அதில் சந்தேகம் இல்லை.

"    உரத்தை அப் பகழி."

வாலியின் வலிமையை அந்த "அம்பு"  கொண்டு சென்றது என்கிறான்.

அதற்கு என்ன காரணம் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/22.html


Wednesday, August 17, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1


வாலி வதம் , இராமாயணத்தில் ஜீரணிக்க முடியாத ஒரு பகுதி. எத்தனை ஆயிரம் சமாதானம் சொன்னாலும், இராமன் மறைந்து இருந்து அம்பு எய்ததை , அவனுடைய பக்தர்களே கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இடம் அது.

ஏன் அது நடந்தது ? இராமன் குழம்பிப் போனானா ? மனைவியைப் பிரிந்ததால் அவன் முடிவு எடுப்பதில் தடுமாறினானா ? அப்படி என்றால் அவனை நம்பி ஒரு பெரிய அரசை எப்படி ஒப்படைப்பது ?

வால்மீகிக்கும், கம்பனுக்கும் இது தெரியாதா ? ஏன் வேலை மெனக்கெட்டு அதை பாட வேண்டும். விட்டு விட்டுப் போகவேண்டியது தானே ? இராமன் போன்ற உயர்ந்த பாத்திரத்தை ஏன் அதன் மதிப்பில் இருந்து நழுவி விழச் செய்தார்கள்.

ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா ?

அது என்ன காரணம் ?

சிந்திப்போம்.

மனிதனின் அறிவை அழிப்பது அவனுடைய ஆணவம். தான் என்ற ஆணவம் வரும்போது மனிதன் வீழ்ச்சியின் முதல் படியில் காலை வைக்கிறான்.

ஆணவம் அறிவுக்குப் போடும் திரை. அது உண்மையை மறைக்கும்.

ஆணவ மலம் ஆதி மலம் என்று சொல்லுவார்கள்.

வாலி, சுக்ரீவனோடு போர் செய்யப் புறப்படுகிறான்.

வாலிலியின் மனைவி தாரை தடுக்கிறாள். இத்தனை நாள் இல்லாத வீரம் சுக்ரீவனுக்கு எப்படி வந்தது ? என்று பலவும் சொல்லி வாலியை தடுத்து நிறுத்த முயல்கிறாள்.

வாலி ஆணவத்தின் உச்சியில் இருந்து பேசுகிறான் .

"இந்த மூன்று உலகமும் என் எதிரில் வந்தாலும், அவை என் முன்னால் நிற்காமல் தோற்று ஓடும் " என்று கூறுகிறான்.

பாடல்

மூன்று என முற்றிய
    முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன
    எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று அவை
    தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை
    தையல் கேட்டியால். ‘


பொருள்

‘மூன்று என முற்றிய = மேல் , நடு , கீழ் என்று கூறப் படும் அந்த

முடிவு இல் பேர் உலகு = எல்லை அற்ற இந்த பெரிய உலகம் யாவும்

ஏன்று உடன் உற்றன = ஒன்று திரண்டு

எனக்கு நேர் எனத் தோன்றினும், = எனக்கு முன்னே தோன்றினாலும்

 தோற்று அவை  தொலையும் என்றலின் = அவை யாவும் தோற்று ஓடும்

சான்று உள; =அதற்கு சான்று உள்ளது

அன்னவை = அவற்றை

தையல் கேட்டியால். ‘ = பெண்ணே நீ கேட்டுக் கொள்

தன்னை மிஞ்ச இந்த மூன்று உலகிலும் யாரும் இல்லை என்கிறான்.

தனித் தனியாக கூட இல்லை, இந்த மூன்று உலகங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறான்.

அது ஆணவத்தின் உச்சம்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆணவம் கெட்டிப் பட்டிருக்கிறதோ , அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை நம் கண்களுக்குத் தெரியாது.



Tuesday, August 16, 2016

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?

பிரபந்தம் - இதெல்லாம் ஒரு பெருமையா Boss ?




முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மழையோ 

என்ற சினிமா பாடல் வரிகளை கேட்ட உடன் சொக்கிப் போகிறோம். அட டா என்ன ஒரு கற்பனை என்று.

அந்தக் காலத்திலேயே ,  இந்த கற்பனையெல்லாம் தூக்கி அடிக்கும்படி ஆண்டாள் எழுதி இருக்கிறாள்.

மேகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. அது வானம் என்ற பெண்ணுக்கு போட்ட மேலாக்கு மாதிரி இருக்கிறது. காற்றில் அது அங்கும் இங்கும் அலைவது , வான மகளின் மேலாடை அசைவது போல இருக்கிறது.

அந்த மேகங்களிடம் ஆண்டாள் கேட்கிறாள்...."என் ஆள், மதுசூதனன் அங்க இருக்கானா " என்று.

மேகங்கள் பதில் சொல்ல மாட்டேன் என்கின்றன.

அதனால், ஆண்டாளுக்கு இன்னும் துக்கம் அதிகம் ஆகிறது. இங்கும் இல்லை. அங்கும் இல்லை என்றால் எங்கு தான் போனான் இந்த மாயக் கண்ணன் என்று.

அவள் கண்ணில் இருந்து நீர் வழிகிறது.

அது வழிந்து கன்னத்தில் இருந்து நேரே சொட்டு சொட்டாக அவள் மார்பில் விழுகிறது. அவளுடைய மார்பும் கண்ணீரால் நனைகிறது.


பாடல்

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

பொருள்

விண்ணீல = விண் + நீல = நீல நிறமான வானத்தில்

மேலாப்பு = தாவணி, அல்லது சேலை

விரித்தாற்போல் = அணிந்திருப்பதைப் போல

மேகங்காள் = மேகங்களே


தெண்ணீர்பாய் = தெளிந்த நீர் பாயும்

வேங்கடத்தென் = திரு வேங்கடத்தில் உள்ள என்

திருமாலும் =திருமாலும்

போந்தானே = அங்கு வந்தானா ?

கண்ணீர்கள் = இரண்டு கண்ணில் இருந்தும் வழியும் கண்ணீர்

முலைக்குவட்டில் = முலையின் நுனியில்

துளிசோரச் = துளி துளியாக வடிய

சோர்வேனை = சோர்ந்து இருக்கும் என்னை

பெண்ணீர்மை யீடழிக்கும் =பெண்ணின் குணங்களான நாணம் போன்றவற்றை அழிக்கும்

இதுதமக்கோர் பெருமையே? = இது அவனுக்கு ஒரு பெருமையா

என்னதான் ஆனாலும் பெண் வாய் விட்டு தன் காமத்தை வெளியே சொல்ல மாட்டாள். தன் ஆசையை வெளிப் படுத்த மாட்டாள். ஆனால், வேறு வழி இல்லாமல், தாங்க முடியாமல் கண்ணீர் வந்து விடுகிறது. துக்கம் ஒரு புறம். இப்படி , தன்னை கட்டுப் படுத்த முடியாமல் எல்லோரிடமும் தன் காதல் இப்படி ஒரு வெட்கம் இல்லாமல்  வெளிப் பட்டுவிட்டதே என்ற சங்கடம் ஒரு புறம்.

படிக்கும் எந்த பெண்ணுக்கும் ஆண்டாளின் அவஸ்தை புரியும்.

காதலித்திருந்தால் , ஆணுக்கும் புரியும் அந்த அவஸ்தை.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/boss.html

Monday, August 15, 2016

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?

இராமாயணம் - வாலி வதம் - காரணம் யார் ?


வாலி வதை என்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. இராமன் என்ற அவதார புருஷன் இப்படி ஒரு தவறு செய்யலாமா என்று அவனின் பக்தர்களே ஜீரணிக்க முடியாமல் திணறும் ஒரு இடம் வாலி வதம் .

இராமன் தவறு செய்தான் என்று வைத்துக் கொண்டாள் , ஏன் அந்தத் தவற்றை செய்தான் ? அதற்கு காரணம் என்ன ? காரணம் இருந்தாலும், செய்தது சரிதானா  என்ற கேள்விகள் காலம் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இராமன் , ஆராயாமல் எடுத்த முடிவுக்குக் காரணம் அனுமன்.

மனைவியைப் பிரிந்து, சோகத்தில் இருக்கும் இராமனை தூண்டி விட்டு , அவனை உணர்ச்சி வசப்படச் செய்து தன் காரியத்தை முடித்துக் கொண்டது அனுமனின் சாமர்த்தியம்.

"சுக்ரீவனனின் மனைவியையும் எடுத்துக் கொண்டான்" என்று சொல்கிறான் அனுமன். அப்படி என்றால் என்ன ? சுக்ரீவனனின் அரசையும் எடுத்துக் கொண்டான் என்று பொருள் பட பேசுகிறான்.

வாலி மூத்தவன். அரசு அவனுக்குத் தான் சொந்தம். அப்படி இருக்க , சுக்ரீவனின் அரசை அவன் எடுத்துக் கொண்டான் என்று சொல்வது எப்படி சரியாகும்.

அது மட்டும் அல்ல.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று ஒரு இடத்தில் கூட கம்பன் பதிவு செய்யவில்லை.

இறைவனின் மேல் விழுந்து அழும் மண்டோதரி சொல்கிறாள் "சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் என நாடி தடவியதோ ஒருவன் வாளி " என்று.

வாலியின் மேல் விழுந்து புலம்பும் தாரை அப்படி ஒரு வரிகூட சொல்ல வில்லை.

வாலியின் மேல் வீண் பழியை சுமத்தியது அனுமன். இராமனை தூண்டி அவனிடம் வாலியை கொல்லுவேன் என்று சத்யம் வாங்கியது அனுமனின் பேச்சுத் திறம்.

பாடல்

உருமை என்று இவர்க்கு உரிய தாரமாம் 
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன்.

பொருள்

உருமை = சுக்ரீவனின் மனைவியின் பெயர் ருமை . அது உருமை என்று வந்தது.

என்று = என்று

இவர்க்கு = சுக்ரீவனுக்கு

உரிய தாரமாம் = உரிமை உள்ள தாரமாம்

அருமருந்தையும் = அறிய மருந்தையும். இங்கு அவன் கூறும் அந்த 'ம்' காவியத்தின் போக்கை மாற்றுகிறது.

அவன் = வாலி

விரும்பினான் = விரும்பினான்

இருமையும் = தாரத்தையும், அரசையும்

துறந்து = துறந்து

இவன்= சுக்ரீவன்

இருந்தனன் = இருந்தான்

கருமம் இங்கு இது = இங்கு நடந்தது இதுதான்

எம் கடவுள் = எமக்கு கடவுள் போன்றவனே

என்றனன் = என்று அனுமன் கூறினான்

அனுமன் , சொற்களை மிக மிக தேர்ந்தெடுத்துப் போடுகிறான்.

வாலி , சுக்ரீவனின் மனைவியை கவர்ந்து கொண்டான் என்று சொல்ல வில்லை. "விரும்பினான்" என்று கூறுகிறான்.

பின், சுக்ரீவன் "இருமையும் இழந்தான்" என்று கூறுகிறான்.

மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த இராமன், எல்லாவற்றையும்  தானே முடிச்சுப் போட்டுக் கொண்டு "சுக்ரீவனுக்கு உரிய  தாரத்தையும், அரசையும் வாலி கவர்ந்து கொண்டான் " என்ற முடிவுக்கு வருகிறான்.

பாடம் நடத்துகிறான் கம்பன்.

1. உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. அறிவு பூர்வமாக, சிந்தித்து, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்தால்  கால காலத்துக்கும் துன்பம் தான்.

2. மனைவி என்பவள் மருந்தைப் போன்றவள் என்கிறான் கம்பன். இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் இது போல கூறுகிறான். துன்பத்தை போக்குவது  மருந்து. வலியை குறைப்பது, நீக்குவது மருந்து. கணவனுக்கு வரும் துன்பத்தை போக்குபவளாக மனைவி இருக்க வேண்டும்.  துன்பத்தை கொண்டு வந்து தருபவளாக அல்ல.

3. எப்படி பேசுவது என்று தெரிந்தால், எவ்வளவு பெரிய காரியத்தையும்  நடத்தி விடலாம். யாருடைய உதவியையும் பெற்றுக்  கொள்ள முடியும். பேசிப் பழக வேண்டும். வார்த்தைகளை கையாள்வதில்  திறமை வேண்டும். வெற்றிக்கு அது முதல் படி.

இராமன் செய்தது சரியா தவறா என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

அதில் இருந்து நமக்கு என்ன பாடம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

அறிவோம். உயர்வோம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_15.html


Saturday, August 13, 2016

பிரபந்தம் - மறக்க நினைத்தாலும் முடியாது

பிரபந்தம் - மறக்க நினைத்தாலும் முடியாது 


குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை , அவர்கள் பெரியவர்கள் ஆவதற்கு முன்பே சொல்லித் தந்து விட வேண்டும்.

கொஞ்சம் வளரட்டும் , பின்னால் சொல்லித் தரலாம் என்று இருந்தால் , நடக்காது.

ஏன் ?

தர்க்க மூளை வளர்ந்து விட்டால், எதை சொன்னாலும் ஏன் அப்படி என்று கேள்வி கேட்பார்கள். எதற்கும் ஒரு எதிர்மறை எண்ணம் அவர்களிடம் இருக்கும். அதை குறை என்று சொல்ல முடியாது. அது வளர்ச்சியின் ஒரு படி. எதையும் எதிர்ப்பது, எதையும் கேள்வி கேட்பது அறிவு வளர்ச்சியின் அறிகுறி.

சிக்கல் என்ன என்றால், நல்லதைச் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

புகை பிடிப்பது கெடுதல் என்று சொன்னால், "குடித்தவர்கள் எல்லாம் என்ன கெட்டா போய் விட்டார்கள்" என்ற கேள்வி வரும். சிகரெட் பெட்டியின் மேல் "புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு" என்று எழுதி வைத்தாலும் , அதை வாங்கி குடிக்கிறார்கள்.

ஏன் ? தெரியாமலா ?

இல்லை தெரியும்.

மனம் ஏதேதோ சமாதானம் சொல்லி அவர்களை குடிக்க தூண்டுகிறது.

புகை பிடிப்பது கெடுதல் என்ற எண்ணம் சிறு வயதில் ஆழமாக விழுந்து விட்டால்  , பின்னாளில் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட வராது.

ஆண்டாளுக்கு, சிறு வயதிலேயே பெருமாள் மேல் பற்று. காதல்.

கொஞ்சம் வயதான பின், அறிவு நினைக்கிறது. அரக்கனாவது , பூமியை பாயாக சுற்றிக் கொண்டு கடலுக்குள் போவதாவது...இதெல்லாம் சும்மா கதை...என்று அறிவு சொல்கிறது.   அந்த  கதை எல்லாம் மனதில் இருந்து தூக்கி எறிந்து விடலாம் என்று நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

ஏன் ஆண்டாள் அதை தன் மனதில் இருந்து வெளியேற்ற முயன்றாள் ?

யாருக்குத் தெரியும். அருகில் உள்ளவர்கள் ஏதேதோ சொல்லி இருக்கலாம். அது சரி இல்லை, இது இப்படி இருக்காது என்றெல்லலாம் சொல்லி அவள் மனதை மாற்ற முயன்றிருக்கலாம்.

இருந்தும் அவளால் முடியவில்லை.

ஆழ் மனதில் படிந்து விட்டது.

பாடல்

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே


சீர் பிரித்த பின்

பாசி தூர்ந்து கிடந்த பார் மகட்க்கு பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் நீர் வார மானம் இல்லா பன்றியாம்
தேசு உடைய தேவர் திருவரங்க செல்வனார்
பேசி இருபனகள் பேர்கவும் பேராவே

பொருள்

பாசி  = பாசி படர்ந்து

தூர்ந்து = கேட்பாரற்று தூர்ந்து

கிடந்த - கிடந்த

பார் மகட்க்கு = நில மகளுக்கு

பண்டு = முன்பு

ஒரு நாள் = ஒரு நாள்

மாசு = அழுக்கு

உடம்பில் = உடலில்

நீர் வார = நீர் வழிய

மானம் இல்லா பன்றியாம் = மானம் இல்லாத பன்றியாக

தேசு = தேஜஸ். ஒரு கம்பீரம், ஒரு அமைதி, அந்த கூரிய பற்கள்...நீர் சொட்ட சொட்ட நிற்கும் அந்த தோரணை...அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்குகிறது.

உடைய = உடைய

தேவர் = தேவனான

திருவரங்க செல்வனார் = திருவரங்கத்தில் உள்ள செல்வமான பெருமாள்

பேசி இருபனகள் = அவரைப் பற்றி பேசிய பேச்சுக்களை

பேர்கவும் பேராவே  = மனதை விட்டு விலக்க முயன்றாலும் முடியவில்லை

வெள்ளம் வருவதற்கு முன் அணை கட்டி விட வேண்டும். வெள்ளம் வந்த பின்  பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால் வெள்ளம் , அணையையும் சேர்த்து அடித்துக் கொண்டு போய் விடும்.

அறத்தை, நல்லதை , பிஞ்சு மனங்களில் படித்து விட வேண்டும்.

தடுப்பூசி போடுவது போல. முதலில் அதைப் போட்டு விட்டால், பின் எத்தனை நுண் கிருமிகள் தாக்கினாலும் ஒரு நோயும் வராது.

குழந்தைகளுக்கு நல்லது இளமையிலேயே சொல்லி வையுங்கள்.

வருங்காலத்திற்கான தடுப்பூசி அது.

பிள்ளைகளுக்கு சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை, பேரக் குழந்தைகளுக்கு  சொல்லித் தாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_13.html




வில்லி பாரதம் - சாதி கடந்த இடம்

வில்லி பாரதம் - சாதி கடந்த இடம் 


நல்ல விஷயங்களை சொல்லவே அத்தனை இலக்கியங்களும் படைக்கப் பட்டன. நல்ல விஷயங்களை , நல்ல கதா பாத்திரங்கள் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எதிர் மறை குணம் கொண்ட பாத்திரங்கள் மூலமும் நல்லதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். 

கம்ப இராமாயணத்தில் கூனி அறம் சொல்லுவாள், கும்பகர்ணன் சொல்லுவான். 

பாரதத்தில் சில இடங்களில் துரியோயாதான் நல்ல விஷயங்களைப் பேசுவான். 

அர்ஜுனனோடு வில் வித்தைக்கு கர்ணன் களத்தில் இறங்குகிறான். 

இது அரசர்களுக்கு உண்டான போட்டி. நீ யார், உன் குலம் என்ன என்று அங்கிருந்த பெரியவர்கள் வினவுகிறார்கள். 

துரியோதனன் சொல்கிறான்...."கற்றவர்களுக்கு, அழகான பெண்களுக்கும், தானம் செய்பவர்களுக்கும், வீரர்களுக்கும், அரசர்களுக்கும், ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் சாதி என்பது கிடையாது" என்று. 

பாடல் 

கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை
உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக்
கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம்
நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால்.


பொருள் 


கற்றவர்க்கு = கல்வி கற்றவர்களுக்கு 

நலனிறைந்த = நலம் நிறைந்த (அழகு, அறிவு, பண்பு) நிறைந்த 

கன்னியர்க்கும் = கன்னிப் பெண்களுக்கும் 

வண்மை கை உற்றவர்க்கும் = கொடை வழங்கும் கைகளை கொண்டவர்களுக்கும் 

வீரரென்றுயர்ந்தவர்க்கும் = வீரரென்று உயர்ந்தவர்க்கும் 

வாழ்வுடைக் கொற்றவர்க்கும் = உயர்ந்த வாழ்வை உடைய அரசர்களுக்கும் 


உ ண்மையான = உண்மையான 

கோதின்ஞானசரிதராம் = குற்றமற்ற ஞானம் அடைந்து அதன் படி வாழ்பவர்களுக்கும் 

நற்றவர்க்குமொன்று சாதி = நல்ல தவம் செய்தவர்களுக்கும் சாதி ஒன்று தான் 

நன்மைதீமையில்லையால் = அதில் உயர்வு தாழ்வு இல்லை 


வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால், வேறு ஜாதிக் கார இராணுவ வீரர் காப்பாற்றினால், மாட்டோம் என்போமா ?

பசியில், வறுமையில் தவிக்கும் ஒருவன், வேறு ஜாதிக் காரன் தரும் உதவியை வேண்டாம் என்பானா ?

மாற்று ஜாதிக் காரன் என்பதால், ஒரு அரசன் சொல்வதை கேட்காமல் இருக்க முடியுமா ?

அழகான பெண், மாற்று மதத்தவள் என்பதால் அவளின் அழகு குறைந்து விடுமா ?

உண்மையான துறவிகள் எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் வாயை அடைப்பதற்காக கூட அவன் சொல்லி இருக்கலாம். இருந்தாலும், அவன் மூலம் ஒரு உண்மையை எடுத்துச் சொல்கிறார் வில்லிபுத்தூரார். 

அறிவோம். 

சாதி போன்ற பிரிவுகளை கடந்து மேலே செல்வோம். 

அறிவோம். உயர்வோம். 

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post.html

Wednesday, August 3, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்

இராமாயணம் - சுந்தர காண்டம் - சிறிது இது என்று இகழல்


நமக்கு ஏன் ஏமாற்றங்கள் வருகின்றன ?

எவ்வளவோ முயற்சி செய்தேன், கடைசியில் கை நழுவித் போய் விட்டது என்று வருந்தியர்கள் எத்தனை பேர்.

காரணம் என்ன ?

எவ்வளவு முயற்சி வேண்டும் எந்தப்பதில் தப்பு கணக்கு போட்டு, கடைசியில் ஏமாந்து போனவர்கள் ஏராளம்.

எந்த ஒரு வேலையை செய்வதானாலும் , அந்த வேலையை செய்து முடிக்க எவ்வளவு முயற்சி தேவை என்று தெளிவாக ஆராய்ந்து பின் செயலில் இறங்க விடும். இல்லை என்றால் ஏமாற்றமும் விரக்தியும் தான் மிஞ்சும்.

அவன் செய்தான், இவன் செய்தான் என்று நாமும் இறங்கி விடக் கூடாது.

நமது திறமை என்ன, நமது வலிமை என்ன, நம்மால் என்ன ஆகும் என்று அறிந்து பின் செயலின் இறங்க வேண்டும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுக் கொண்டு அவதிப் படக் கூடாது.

நிறைய பேர் தெரியாமல் தொழில் தொடங்கி நட்டப் பட்டிருக்கிறார்கள். தெரியாமல் ஏதாவது ஒரு துறையில் இறங்கி, கல்லூரியில் படிக்க முடியாமல் திணறியவர்கள் ஏராளம்.

அனுமன் கடலை தாண்ட தாவிக் குதிக்கிறான்.

ஒரு காலத்தில் அகத்திய மா முனிவர் இந்த கடல் அனைத்தையும் தன்  வயிற்றுக்குள் அடக்கி பின் உமிழ்ந்தவர். அனுமனை பார்த்து தேவர்கள்  கூறினார்கள், "அகத்தியர் உண்டு உமிழ்ந்த கடல் தானே, சின்னாதாக இருக்கும் என்று எண்ணாதே" என்று அறிவுரை பகர்ந்தார். நல்லது என்று அனுமனும் கேட்டுக் கொண்டான்.


பாடல்

‘குறு முனி குடித்த வேலை
    குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது, விசயம் வைகும்
    விலங்கல் தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழல் பாலை
    அல்லை; நீ சேறி! ‘என்னா
உறுவலித் துணைவர் சொன்னார்;
    ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.


பொருள் 

‘குறு முனி =  உயரம் குறைந்த முனிவரான அகத்தியர்

குடித்த வேலை = குடித்த கடல்

குப்புறும் கொள்கைத்து ஆதல் = பாய்ந்து கடக்க வேண்டி இருத்தல்

வெறுவிது = சிறியது, மதிக்கதாகதது

விசயம் வைகும் = வெற்றி கொண்ட

விலங்கல் = மலை போன்ற

தோள் = தோள்களில்

அலங்கல் = மாலை அனிதா

வீர! = வீரனே

சிறிது இது என்று = சின்னது இது என்று

இகழல் பாலையல்லை  = அற்பமாக நினைக்காதே

நீ சேறி! = நீ விரைந்து செல்க

 ‘என்னா = என்று

உறுவலித்  = வலிமை உடைய

துணைவர் சொன்னார் = நண்பர்கள் சொன்னார்கள்

ஒருப்பட்டான் = ஏற்றுக் கொண்டான்

பொருப்பை = மலையை

ஒப்பான்  = போன்ற உடல் உடைய அனுமன்


எந்த வேலையையும் அற்பமாக நினைக்காமல், அதற்கு வேண்டிய முயற்சி யை அளித்து அந்த செயலில் வெற்றி பெற வேண்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_3.html