Wednesday, September 21, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன்

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன் 



ஒரு சாபத்தால் அரக்கனாக பிறந்த விராதன், இராமனிடம் போராடி, அவன் பாதம் பட்டதால் , சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன், சில சொல்லுகிறான்.

பிரமனுக்கும், மற்றும் உள்ள தேவர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் நீயே முதல் தந்தை.  நீ தந்தை என்றால் , தாய் யார் ? தருமத்தின் வடிவாக நின்றவனே.


பாடல்

ஓயாத மலர் அயனே முதல் ஆக
     உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று
     ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால்
     ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே?-தருமத்தின்
     தனி மூர்த்தி!


பொருள்


ஓயாத = இடைவெளி இல்லாமல், தொடர்ந்து

மலர் அயனே = தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன்

முதல் ஆக = தொடங்கி

உளர் ஆகி = உள்ளவர்கள் ஆகி

மாயாத வானவர்க்கும் = இறப்பு என்பது இல்லாத வானவர்களுக்கு

மற்று ஒழிந்த = அவர்களைத் தவிர

மன்னுயிர்க்கும் = நிலைத்த உயிர்களுக்கும்

நீ ஆதி முதல் தாதை, = நீயே முதலில் தோன்றிய தந்தை

நெறி முறையால் = சரியான வழியில்

ஈன்று எடுத்த = பெற்றெடுத்த

தாய் ஆவார் யாவரே?- = தாயாக இருப்பவர் யார் ?

தருமத்தின் = அறத்தின்


தனி மூர்த்தி! = தனிச் சிறப்பானவனே

எனக்கு ஒரு அப்பா இருக்கிறார். அவருக்கு ஒரு அப்பா இருக்கிறார், அதாவது என் தாத்தா. இப்படி போய் கொண்டே இருந்தால், முதன் முதலில் ஒருவர் வேண்டும் அல்லவா . அந்த முதல் தந்தை நீதான் என்று இராமனை வணங்குகிறான் விராதன்.

பிரமனுக்கும், தேவர்களுக்கும், மற்றும் உள்ள உயிர்களுக்கும் நீயே தந்தை என்று சொல்லிவிட்டு, "சரி, தந்தை நீயானால், தாய் யார் " என்று கேள்வியும் கேட்கிறான்.

கேள்வியிலேயே பதிலை ஓட்ட வைக்கிறார் கம்பர் ?

தாய் யாராக இருக்க முடியும் என்று கேட்கிறான். கேட்டு விட்டு, "தர்மத்தின் தனி மூர்த்தி" என்று முடிக்கிறான்.


அது மட்டும் அல்ல, உடலுக்கு தந்தை யார் என்று தெரியும். உயிருக்கு யார் தந்தை ?  "நீயே தர்மத்தின் தனி மூர்த்தி" என்று சொல்கிறான்  விராதன்.

சரி, தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்றால், தாய் வேண்டுமே ? தாய் இல்லாமல் தந்தை எப்படி என்ற கேள்வி எழும் அல்லவா ?

ஆதி மூலத்துக்கு தந்தை என்ன, தாய் என்ன ? எல்லாம் ஒன்று தான்.

அவன்  தந்தையானவன். தாயும் ஆனவன்.

நீயே தாயும் தந்தையும் என்று சொல்லி முடிக்கிறான் விராதன்.



அம்மையும் நீ, அப்பனும் நீ என்பார் மணிவாசகர். அம்மையே அப்பா.


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


அப்பன் நீ, அம்மை நீ என்பார் நாவுக்கரசர்.


அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.


மூன்று வயது  ஞான சம்பந்தர், குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய  தந்தை திருக்குளத்தில் நீராட , நீரில் மூழ்கினார். தந்தையை க் காணாத குழந்தை அழுதது. குளத்தை பார்த்தல்லவா அழ வேண்டும்.  அது கோபுரத்தைப் பார்த்து அழுதது. எப்படி ?

அம்மே, அப்பா என்று அழுதது.

மெய்ம்மேற்கண் டுளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
 தம்மேலைச் சார்புணர்ந்தோ? சாரும்பிள் ளைமைதானோ?
 செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்
"தம்மே! யப்பா! வென்றென்றழுதருளி யழைத்தருள.


சேக்கிழார் உருகுகிறார்.

அம்மே அப்பா என்று எண்ணி அழைத்து அருளி அழைத்து அருள என்று  சேக்கிழார் நெகிழ்கிறார். மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் ததும்பும் பாடல்.

காணாமல் போனது அப்பா. பிள்ளை அழுவதோ, அம்மே, அப்பா என்று. அம்மாவைத் தேடி பின் அப்பாவைத் தேடுகிறது.

இரண்டும் வேறா என்ன ?

காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன், 
கண்டேன் அவர் திருப்பாதம் 
கண்டரையாதன கண்டேன் என்றார் நாவுக்கரசர். 

ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக  அனுப்புடன் இருப்பதைப் பார்த்த  அவருக்கு , அது இறை வடிவமாகவே தெரிகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதுதான் மூலம். அது தான்  ஐக்கியம்.

சொல்லிக் கொண்டே போகலாம்.

காலம் கருதி சுருக்கி உரைத்தேன்.

சிந்தித்துணர்க.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_21.html


Monday, September 19, 2016

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு

அபிராமி அந்தாதி - உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு


பாடல்

சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

பொதுவாக எல்லா பாடல்களுக்கும் முதலில் கொஞ்சம் முகவுரை எழுதிவிட்டு பின் பாடலும், பொருளும் எழுதுவது என் வழக்கம்.

அபிராமி அந்தாதி மட்டும் விதி விலக்கு . இவ்வளவு அழகான , உணர்ச்சிமயமான பாடலை முதலில் நீங்கள் படித்து விடுங்கள். பொருள் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் பரவாயில்லை.

அபிராமி அந்தாதிக்கு பொருள் எழுதுவது என்பது அதை அவமதிப்பதாகவே கருதுகிறேன். அது அதுதான். அதற்கு என்ன விளக்கம் சொல்ல முடியும் ?

இருந்தும், ஒரு சேதி சொல்ல ஆசை.

முதலில் பொருள் ,பின்னர் சேதி

சிறக்கும் = சிறந்து கொண்டே இருக்கும்

கமலத் = தாமரை மலரில் இருக்கும்

திருவே = திருமகளே

நின் சேவடி =   உன்னுடைய செம்மையான திருவடிகளை

சென்னி = தலையில்

வைக்கத் = வைக்க

துறக்கம் தரும்= துறக்கம் தரும்

நின் துணைவரும் = உன் கணவரும்

நீயும் = நீயும்

துரியம் அற்ற = துரியம் அற்ற

உறக்கம் தர வந்து = உறக்கத்தை தர வந்து

உடம்போடு = உடலோடு

உயிர் உறவு அற்று = உயிர் தன் தொடர்பை அறுத்துக் கொண்டு

அறிவு = அறிவானது

மறக்கும் பொழுது  = மறக்கும் போது

என் முன்னே வரல் வேண்டும் = என் முன்னே வரவேண்டும்

வருந்தியுமே = உனக்கு அது கடினமாக இருந்தால் கூட

அது என்ன துறக்கம், துரியம் ?

மனிதர்களை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்.

உடல் சார்ந்தார்கள். உணவு, புலன் இன்பம், உறக்கம், இதுதான் இவர்களுக்குத்  தெரியும். இதுதான் இவர்களுக்குப் பிரதானம். தன்    சுகம்.  அது உடல் சார்ந்த சுகம்.  உடலை வைத்துத்தான் எல்லாம் அவர்களுக்கு. விலங்குகளுக்கு சற்று மேலே. அவ்வளவுதான்.

அதை அடுத்த உயர்ந்த நிலை,  அறிவு சார்ந்த நிலை. சிந்தனை, யோசனை, என்பது இவர்களின்   பிரதானம். அவர்கள் தங்களை அறிவால் செலுத்தப் படுபவர்களாக  காண்பார்கள்.  They identify themselves with intelligence.  எதையும் அறிவு பூர்வமாக   அணுகுவார்கள்.  இசை, இலக்கியம், ஓவியம், கணிதம், அறிவியல், தர்க்கம்,  நடனம், என்று இவர்களின்  உலகம்    விரியும்.

அதை அடுத்த உயர்ந்த நிலை, மனம் சார்ந்தவர்கள். உணர்ச்சியை மையமாக  கொண்டவர்கள். அன்பு, காதல், பக்தி, பாசம், உறவு என்பது  இவர்கள் உலகம்.

யாரும் ஒரு நிலையில் மட்டும் இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு நிலையில்  அதிகமான நேரம் இருப்பார்கள். ஒரு அறிவியல் அறிஞர் கூட  காதலிக்கலாம். ஆனால் அந்த உணர்வு சார்ந்த நேரங்கள் மிக   மிக கொஞ்சமாக இருக்கும்.

இந்த நான்கு நிலைகளையும் கடந்த நிலை துரிய நிலை. துரிய என்றால்  நான்காவது.

அது என்ன நான்காவது ? அது எதை சார்ந்து நிற்கும் ? தெரியாது. அதனால் தான்   அதை "நாலாவது நிலை " என்றார்கள்.

இந்த மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

உடல், அறிவு, மனம் என்ற மூன்றையும் கடந்து நிற்கும் நிலை.

அந்த நிலையில்  கூட தெரியாது.  கடவுள் தெரிய வேண்டும் என்றால்  அறிவு   வேலை செய்ய வேண்டும்.

இது கடவுள் என்று  அறியும் அறிவு வேண்டும்.

துறக்க நிலை இந்த மூன்றையும் கடந்த நிலை.

நான் அந்த நிலை அடையும் போது , அபிராமி நீயே வந்துரு. உன்னை நினைக்க வேண்டும், கூப்பிட வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது.   எனவே,இப்பவே சொல்லி  வைக்கிறேன். அந்த சமயத்தில் நீயும் உன் கணவரும் வந்து விடுங்கள்.

நீங்கள் வந்தாலும் நான் அடையாளம் கண்டு கொள்ள மாட்டேன்.உனக்கு அது  ஒரு சிக்கல் தான்.  வருத்தம் தான். இருந்தாலும்   வந்துரு.

என்று பதறுகிறார் பட்டர்.


(தொடர்ந்தாலும் தொடரும் )

Sunday, September 18, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்

திருவாசகம் - அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்


மனிதன் நாளும் அலைகிறான். அங்கும் , இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். ஏன் ? எதற்கு ? எதை அடைய இந்த ஓட்டம் ?

எதை எதையோ அடைய அலைகிறான். தேடியதை அடைந்த பிறகு, அமைதியாக இருக்கிறானா என்றால் இல்லை. ஒன்றை அடைந்த பிறகு அடுத்ததை தேடி ஓடுகிறான்.

இந்த ஓட்டத்தில், எது வாழ்க்கைக்கு முக்கியம் என்று அறியாமல் போய் விடுகிறான்.

உடல் நிலை, குடும்பம், உறவுகள், இரசனை, நட்பு, கல்வி, ஓய்வு என்று ஆயிரம் நல்ல விஷயங்களை இழந்து விடுகிறான். ஏதோ ஒன்றை அடைகிறான். அதை அடைய ஆயிரம் நல்லவைகளை இழக்கிறான்.

தேடியதை அடைந்தபின் , எதை எல்லாம் இழந்தோம் என்று கணக்குப் போடுகிறான். இழந்தது அதிகம். பெற்றது கொஞ்சம் என்று அறியும் போது தன் மேல் தானே வருத்தம் கொள்கிறான்.

இது தானே வாழ்க்கை. இப்படித்தானே போகிறது.

மணிவாசகர் சொல்கிறார்.

ஒரு பெரிய சட்டியில் கெட்டி தயிர் இருக்கிறது. உறுதியாக இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களுக்குத் தெரியும், தயிர் உறைய வேண்டும் என்றால் அதை அசைக்கக் கூடாது. ஆடாமல், அசையாமல் இருந்தால் நீராக இருக்கும் பால், உறை ஊற்றிய பின் கெட்டியான தயிராக மாறும். அது உறைந்து கொண்டு இருக்கும் போது , அதில் ஒரு சின்ன மத்தை போட்டு கடைந்தால் என்ன ஆகும் ? தயிர் உடையும். நீர்த்துப் போகும். கொஞ்சம் கடைவது. பின் நிறுத்தி விடுவது. பின் சிறிது நேரம் கழித்து , மீண்டும் கொஞ்சம் கடைவது என்று என்று இருந்தால் என்ன ஆகும் ? தயிரும் உறையாது. வெண்ணையும் வராது. தயிர் தளர்ந்து போகும் அல்லவா.

பாடல்

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.


பொருள்


மாழை = மா என்றால் மா மரம். மாவடுவைப் போன்ற

மைப் = கண் மை

பாவிய = பூசிய

கண்ணியர் = கண்களைக் கொண்ட

வன் = வன்மையான

மத்து இட = மத்தை இட்டு

உடைந்து = உடைந்து


தாழியைப் = தயிர் வைத்த பாத்திரத்தை

பாவு = பரவும்

தயிர் போல் = தயிர் போல

தளர்ந்தேன் = தளர்ந்து விட்டேன்

தட = பெரிய (தடக் கை )

மலர்த் தாள் = மலர் போன்ற திருவடிகளை கொண்டவனே

வாழி! = வாழ்க

எப்போது வந்து = நான் எப்போது வந்து

எந் நாள் = எந்த நாள்

வணங்குவன் = வணங்குவேன்

வல் வினையேன்? = கொடிய வினைகளைச் செய்தவன்

ஆழி அப்பா! = ஆழி என்றால் கடல். கடல் போல பரந்து விரிந்தவனே

 உடையாய்! = அனைத்தும் உடையவனே

அடியேன் உன் அடைக்கலமே = அடியேன் உன் அடைக்கலம்


பெண்ணாசை ஒன்று தானா இந்த உலகில் ? மணிவாசகர் போன்ற பெரியவர்கள்  நம் குற்றங்களை தங்கள் மேல் ஏற்றிச் சொல்வார்கள்.

பெண்ணாசை என்பது ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கும். பெண்களுக்கு ஆசையே  கிடையாதா ?

இருக்கும்.

எல்லோரின் ஆசைகளையும் ஒரு பாட்டில் பட்டியல் இட முடியாது.

பொதுவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆசை என்ற ஒன்று வரும்போது  அது உறைந்த, உறைகின்ற தயிரை அலைக்கழித்து தளர்ச்சி அடைய செய்யும்.

கொஞ்ச நேரம் எடுத்து யோசியுங்கள்.

எந்த ஆசை உங்களை இந்த நேரத்தில் அலைக்கழிக்கிறது என்று ....

ஆசை நல்லதா , கெட்டதா என்பதல்ல கேள்வி.

ஆசை வரும்போது அது உங்களை அலைக்கழிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது வேண்டுமா , வேண்டாமா என்பது உங்கள்  முடிவு.

ஒவ்வொரு ஆசைக்கும் ஒரு விலை இருக்கிறது.

நீங்கள் தரும் விலை சரியானது தானா என்று அறிந்து கொள்ளுங்கள்.

நல்லதே நடக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_18.html



Saturday, September 17, 2016

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே 




அது ஒரு கடற்கரையை அடுத்த சின்ன கிராமம். எப்போதும் அலை ஓசை கேட்டுக்கொண்டிருக்கும். புன்னை மரங்கள் நீர் பரப்பின் ஓரத்தில் இருக்கும். அங்கே கொஞ்சம் பறவைகள், அந்த மரத்தின் நிழலில் படுத்து உறங்குகின்றன.

அந்த ஊரில் ஒரு பெண். மிக மிக இளம் பெண். அந்த வயதுக்கு உரிய நாணம், குறுகுறுப்பு எல்லாம் உள்ள பெண். அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள். பேசி மகிழ்ந்த அவளுடைய காதலன் பிரிந்து சென்று விட்டான். அவளுக்கு தவிப்பு. தூக்கம் வரவில்லை.

இந்த அனுபவம் அவளுக்குப் புதியது. ஏன் இப்படி ஆனோம் என்று அவளுக்குப் புரியவில்லை. தவிக்கிறாள்.

யாரிடம் சொல்லுவாள் ?

தன் தோழியிடம் கேட்கிறாள்

"ஏண்டி, இது தான் காதல் என்பதா ? தூக்கம் வரலடி" என்று வெகுளியாக கேட்கிறாள்.

பாடல்

அது கொல் தோழி காமநோயே!
வதிகுறு உறங்கும் இன்நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே” 

பொருள்

அது கொல் = அதுவா ?

தோழி = தோழியே

காமநோயே! = காம நோயே !

வதிகுறு உறங்கும் = (தன்னிடம்) வந்து உறங்கும் குறுகு (பறவை)

இன்நிழல் = இனிய நிழலைத் தரும்

புன்னை = புன்னை மரம்

உடை = உடைக்கின்ற

திரைத்  திவலை = திரண்டு வரும் நீர் துளிகள்

அரும்பும் = மொட்டும் போல் அரும்பும்

தீநீர் = இனிய நீர்

மெல்லம் புலம்பன் = புலம்பு என்றால் கடற்கரை. புலம்பன் என்றால் கடற்கரையை உடையவன். மெல்லம் புலம்பன் என்றால் மென்மையான கடாரகரையை உடையவன் (தலைவன்)

பிரிந்தெனப் = பிரிந்த பின்

பல்இதழ் = பல இதழ்களை கொண்ட தாமரை மலரைப்

உண்கண் = போன்ற என் கண்கள்

பாடு ஒல்லாவே = உறங்காமல் இருக்கின்றன


" பாரு இந்த சின்ன குருவி எப்படி நிம்மதியா தூங்குது...எனக்குத் தான்  தூக்கம் வரல"  என்று புலம்புகிறாள்.

தனக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை.

இது தான் காதல் நோயா என்று தோழியிடம் கேட்கிறாள்.

கடல் நீர் உப்பு தான். ஆனாலும், அது அவளுக்கு இனிய நீராக இருக்கிறது.

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா  என்று பாரதி சொன்னது போல, உப்புத் தண்ணியும் தித்திக்கிறது அவளுக்கு .

சங்க கால காதல்.

அந்த ஈரமான உப்பு காற்றும், கண் மூடி தூங்கும் அந்த குருவியும்,  தூங்காத அந்த பெண்ணும், அவள் தோழியும் இன்னமும் அந்த பாடலுக்குள்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_24.html



இராமாயணம் - விராதன் வதைப் படலம் - என் கொண்டு என் செய்வாரோ ?

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - என் கொண்டு என் செய்வாரோ ?




விராதன்  என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாக  பிறந்து,பின் இராமனால் சாப விமோசனம்  பெறுகிறான். அவன் விண்ணுலகம் போகுமுன் சில சொல்லிப் போகிறான்.

அவன் வாயிலாக கம்பன் இராமனே பரம்பொருள் என்று திகட்ட திகட்ட  சொல்லுகிறான்.

பாடல்

பனி நின்ற பெரும் பிறவிக் கடல்
     கடக்கும் புணை பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும்
     "நன்று" என்னத்
தனி நின்ற தத்துவத்தின் தகை
     மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என் கொண்டு,
     என் செய்வாரோ?

பொருள்

பனி நின்ற = பனி போல குளிர்ந்த

பெரும் = பெரிய

பிறவிக் கடல் = பிறவி என்ற கடலை

கடக்கும் = கரை ஏற

புணை பற்றி = தெப்பத்தைப் பற்றி

நனி நின்ற சமயத்தோர் = பெரிய சமயங்களைச் சேர்ந்தோர்

எல்லாரும் = எல்லாரும்

"நன்று" என்னத் = நல்லது என்று

தனி நின்ற தத்துவத்தின் = தனிப்பட்டு நின்ற தத்துவத்தின்

தகை மூர்த்தி நீ ஆகின் = உயர்ந்த மூர்த்தி நீ என்றால்

இனி = இனிமேல்

நின்ற = நிற்கும், இருக்கும்

முதல் தேவர் = முதல் என்று சொல்லப் படும் மற்ற தேவர்கள்

என் கொண்டு, = எதைக் கொண்டு

என் செய்வாரோ? = எதைச் செய்வார்களோ ?

பிறவி என்ற பெருங்கடலை கடக்க தெப்பமாக, மற்ற  சமயத்தவரும், உன்னை பற்றிக் கொண்டார்கள். உயர்ந்த தனி  மூர்த்தி நீ. இது இப்படி என்றால், மற்ற தெய்வங்கள் என்ன செய்யும். ஒன்றும் ஒன்றும் செய்யாது.

பாடலின் சாரம் அது.

கொஞ்சம் ஆழமாக  சிந்திப்போம்.

பிறவி என்பது பெரிய கடல்தான். நீந்திக் கடந்து விடமுடியுமா ? கை கால்  சோர்ந்து விடும் அல்லவா ? அப்போது பற்றிக் கொள்ள ஒரு தெப்பம்  வேண்டும் அல்லவா ? அந்த தெப்பமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப் பற்றிக்  கொள்கிறார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டாலும் , நல்ல துணையாவது நமச்சிவாய என்ற  நாமமே என்றார் அப்பர்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

என்பது அவர் வாக்கு.

அந்தப் பிறவிக் கடல் கொஞ்சம் வெது வெதுப்பாக இருந்தால் நீந்த சுகமாக இருக்கும்.  ஆனால் அது அப்படி இல்லை. பனி போல சிலீர் என்று  குளிக்கிறது. அந்தத் தண்ணீரில் எப்படி இறங்குவது. இறங்குவது என்ன  இறங்குவது. தூக்கிப் போட்டு விட்டார்கள். நடுங்குகிறது. குளிர்கிறது. குளிர் எலும்பு வரை எட்டிப் பாய்கிறது.

வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது.

அந்தக் குளிர் கடலில் , நீந்திக் கரை ஏற , அனைத்து சமயத்தினரும் இராமனைப் பற்றிக் கொண்டார்கள் என்றால் மற்ற தேவர்கள் என்ன செய்வார்கள்  என்று கேட்கிறார் கம்பர்.

எங்கெங்கோ போய் துன்பப் படாதீர்கள். இராமனைப் பற்றிக் கொள்ளுங்கள். பிறவி என்ற பெருங்கடலை நீந்திக் கரையேற சிறந்த தெப்பம்  அவன் தான்.


Friday, September 16, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 2

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 2


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

இந்தப் பாடலின் முன்னுரையை ஏற்கனவே பார்த்து விட்டதால் நேரடியாக பொருளுக்குப் போவோம்

முதல் பாகம் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

செழும் கமல  திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த 
பழுத்த மனத்து அடியார்களுடன் போயினர் யான்  பாவியேன்
புழுக் கண் உடை புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானம் இல்லா 

அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன்  அடைக்கலமே.


பொருள்


செழும் = செழுமையான, சிவப்பான 

கமல  திரள் அன = தாமரை மலர்களின் தொகுப்பு 

நின் = உன்னுடைய 

சேவடி = சிவந்த திருவடிகள்  

சேர்ந்து = சென்று சேர்ந்து 

அமைந்த = அமைதி அடைந்த 

பழுத்த மனத்து = பழுத்த மனத்து 

அடியார்களுடன் = அடியவர்களுடன் 

போயினர் = போனவர்கள் 

யான் = நான் 

பாவியேன் = பாவியேன் 


புழுக் கண் உடை = புழுக்கள் உடமையாகக் கொண்ட இந்த  

புன்குரம்பைப் = கீழான இந்த உடலை 

பொல்லாக் = தீயன  

கல்வி = கல்வி 

ஞானம் இல்லா = ஞானம் இல்லா  

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்குகள் கொண்ட மனத்தை உடையவன் 

உடையாய் = உடையவனே 

உன்  அடைக்கலமே = உன் அடைக்கலமே 

எனக்கு ஒன்றும் தெரியாது. உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன்.  இனி என்னை சரி ஆக்குவது உன் பாடு என்கிறார். 

வீடு பேறு , முக்தி இவற்றை அடைய மூன்று வழிகளை சொல்கிறார்கள். 

கர்ம யோகம் 

ஞான யோகம் 

பக்தி யோகம் 

மணிவாசகர் பாண்டிய நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். ஒரு அரசனின் கீழ் அமைச்சராக இருப்பது எளிதான காரியம் இல்லை. அவ்வளவு கடினமான வேலையைச் செய்த மணி வாசகருக்கு கர்ம யோகம் கடினமாக இருக்கிறது. 

சிலர் உன் அடியார்களுடன் சேர்ந்து , மனதை பக்குவப் படுத்தி உன் திருவடிகளை அடைந்தார்கள். என்னால் முடியவில்லை என்கிறார். 

சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து

முதலில் சென்று சேர வேண்டும். பின் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் (அமைய). பின் மனம் பக்குவப் படவேண்டும்.இவ்வளவு வேலை இருக்கிறது. 

என்னால் முடியவில்லை என்கிறார் மணிவாசகர். நான் இந்த புழுக்களுக்கு இடமான உடலோடு இருக்கிறேன் என்கிறார். 

மணிவாசகர் பெரிய அறிவாளி. 

 திருவாசகம், திருக்கோவையார் எழுதியவர்.  

இருந்தும், ஞான யோகத்தில் அவரால் செல்ல முடியவில்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றார். படித்தது எல்லாம் போதும் என்ற  நிலைக்கு வந்தார். 

கல்வி எனும் பல் கடல் பிழைத்தும் என்றார். கல்வி என்பது பெரிய கடல். அதில் இருந்து தப்பித்தால் தான் இறைவனை அடைய முடியும்  என்கிறார். 

ல்வி ஞானம் இல்லா 

கல்வி  அறிவும்,அதில் இருந்து பிறக்கும் ஞானமும் தனக்கு இல்லை என்கிறார். 

மணிவாசகருக்கே அப்படி என்றால், நம் நிலை என்ன. நம் அறிவும் , ஞானமும் எவ்வளவு இருக்கும் ?


சரி, கர்ம யோகமும் சரிப் பட்டு வரவில்லை. ஞான யோகமும் சரிப் பட்டு வரவில்லை. 

பக்தி யோகம் தான் தனக்கு உகந்தது என்று அறிந்தார். 

பக்தி செய்யக் கூட தெரியாது. 

நான் உன் அடைக்கலம் என்று அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டார். 

ஒரு வேளை பக்தி மார்க்கம் எளிமையாக இருக்குமோ ?

உங்கள் மார்க்கம் எது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/2_16.html

Thursday, September 15, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 1

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 1


நம்பிக்கை.

நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம். நம்மால் எதையாவது முழுவதுமாக நம்ப முடிகிறதா ?

வைகுண்டம் வேண்டும், கைலாயம் வேண்டும் , இறைவன் திருவடி நிழல் வேண்டும் என்று நம்பிக்கையோடு தொழுபவர்கள் கூட, இறைவனே நேரில் வந்து "பக்தா உன் பக்திக்கு மெச்சினோம்...வா பரலோகம் போகலாம் " என்று கூறினால் , எத்தனை பேர் உடனே கிளம்புவார்கள் ?

இது ஒரு வேளை கடவுள் இல்லையோ ? பரலோகம் கூட்டிப் போகிறேன் என்று வேறு எங்காவது கூட்டிக் கொண்டு போய் விட்டால் ? போட்டது போட்ட படி இருக்கிறது. பிள்ளையின் படிப்பு, அவர்களின் திருமணம், அவர்களின் பிள்ளைகள், சொத்து விவகாரம் என்று ஆயிரம் விஷயங்கள் கிடக்கிறது. அத்தனையும் விட்டு விட்டு எப்படி போவது என்று தயங்குவார்கள்.

கடவுள் தானே கூப்பிடுகிறார். அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எத்தனை பேருக்கு இருக்கும் ?

நான் எல்லா விட்டால் இந்த குடும்பம் என்ன ஆகும் என்று நினைப்பவர்களே அதிகம் இருப்பார்கள்.

சரி , அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் தான் அனைத்தையும் செய்கிறான் என்றால், நமக்கு வரும் துன்பங்களும் அவன் செய்வது தானே. அதற்காக ஏன் வருந்த வேண்டும். நமக்கு என்ன வேண்டும் , எவ்வளவு வேண்டும், எப்போது  வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா ?

புலம்புவது ஏன் ?

நம்பிக்கை இன்மை.

நமது சமயமும், இலக்கியமும் சரணாகதி, அடைக்கலம் என்பதைப் பற்றி உயர்வாகப் பேசுகின்றன.

நம்மை, நம் வாழ்க்கையை இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்பது பெரிய விஷயம்.

வைணவம் சரணாகதி பற்றி பேசுகிறது.

சைவம் அடைக்கலம் என்று கூறுகிறது.

எல்லாம் ஒன்று தான். ஒருவரிடம் நம்மை முழுவதுமாக கொடுத்து விடுவது.

இதில் மூன்று நிலை இருக்கிறது.

கையடைப் படுத்துவது. இடைக்கலம் . அடைக்கலம்.

கையடை என்றால் ஒருவரை இன்னொருவரிடம் "இனி இவன்/இவள் உன் பொறுப்பு " என்று ஒப்படைப்பது.

பெற்றோர் , ஆசிரியரிடம் பிள்ளையை விட்டு "இனி இவன் உங்கள் பொறுப்பு...அவனை / அவளை படித்து நல்ல குடிமகனாக ஆக்குவது உங்கள்  பொறுப்பு " என்று விடுவது கையடை.

இதில், கையடையாக போபவரின் சம்மதம் இருக்காது. குழந்தையின் சம்மதம் கேட்டு ஆசிரியரிடம் விடுவது கிடையாது.

இராமாயணத்தில் , தீ வளர்த்து, சீதையை இராமனிடம் "இவன் இனி உன் கையடை " என்று சனகன் கொடுத்தான்.

'நெய் அடை தீ எதிர் நிறுவி, ''நிற்கு இவள்
கையடை'' என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனோடு,
மெய் அடையாது; இனி, விளிதல் நன்றுஅரோ.


அடுத்தது, இடைக்கலம். இது ஒருவர் தன்னைத் தானே மற்றோரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்புக்  கொடுப்பது.

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்
நாவிற்கொண்டேன்

இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக்
காட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித்
தூநீறணிந்துன்

அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம்
பலத்தரனே.

இடைக்கலம் அல்லேன் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள் .


அடைக்கலம் என்பது, தன்னை முழுமையாக ஒருவரிடம் ஒப்புக் கொடுப்பது.

விபீஷணன் அடைக்கலமாக வந்தான். சரணாகதி என்பது.

‘இடைந்தவர்க்கு “அபயம் யாம் “ என்று
    இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி ஆலம்
    உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
    உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்,
    அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?

அப்படி வந்த விபீடணனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த அறம் என்ன ஆண்மை என்ன என்று கேட்கிறான் இராமன்.

திருவாசகத்தில், மாணிக்க வாசகர் அடைக்கலப் பத்து என்று பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.

தன்னை எப்படி ஆண்டவனிடம் அடைக்கலமாகத் தருகிறார் என்பது பற்றி.

முதல் பாடல்


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

பொருள்

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html