Tuesday, September 27, 2016

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் - திருச்செந்தூர் செல்வா தாலோ 


பகழிக் கூத்தர் பாடியது. உள்ளத்தை உருக்கும் பாடல்கள். இசையோடு கேட்டால் இன்னும் இனிமையாக இருக்கும்.

பிள்ளைகளை , குழந்தைகளை கொண்டாடியது நம் தமிழ் சமுதாயம். பெரிய ஆள்களையும் பிள்ளைகளாக ஆக்கி , பாராட்டி, சீராட்டி, பாலூட்டி பார்த்து மகிழ்ந்தது நம் தமிழ் இலக்கியம்.

மீனாட்சி அம்மன் பிள்ளைத்  தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், என்று பலப் பல பிள்ளைத் தமிழ் பாடல்கள் உண்டு.

கண்ணனை பிள்ளையாகவும் தன்னை யசோதையாகவும் நினைத்து பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ் பாடி இருக்கிறார். அத்தனையும் தேன் சொட்டும் பாசுரங்கள்.

பகழிக் கூத்தர் திருச்செந்தூர்  முருகன் மேல் பாடிய பிள்ளைத் தமிழில் இருந்து ஒரு பாடல்.

பாடல்

பாம்பால் உததி தனைக்கடைந்து
        படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
    பரிய வரையைக் குடைகவித்துப்
        பசுக்கள் வெருவிப் பதறாமற் 

காம்பால் இசையின் தொனியழைத்துக்
கதறுந் தமரக் காளிந்திக்
கரையில் நிரைப்பின் னேநடந்த
கண்ணன் மருகா முகையுடைக்கும் 

பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
புனிற்றுக்கவரி முலைநெரித்துப்
பொழியும் அமுதந் தனைக்கண்டு
புனலைப் பிரித்துப் பேட்டெகினந் 

தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
செல்வா தாலோ தாலேலோ
தெய்வக் களிற்றை மணம் புணர்ந்த
சிறுவா தாலோ தாலேலோ. 

 பொருள்

பாம்பால் = வாசுகி என்ற பாம்பால்

உததி = கடல் (பாற்கடல்)

தனைக்கடைந்து = தனை கடைந்து

படருங் = விரியும்

கொடுங்கார் = கொடுமையான கார் கால

 சொரிமழைக்குப் = பொழியும் மழைக்கு

பரிய வரையைக்  = பெரிய மலையை

குடைகவித்துப் = குடையாகப் பிடித்து

பசுக்கள் = பசுக் கூட்டங்கள்

வெருவிப் = பயந்து

பதறாமற் = பதறி ஓடாமல்

காம்பால் = மூங்கில் காம்பால்

இசையின் தொனியழைத்துக் = நல்ல தொனியோடு இசைத்து

கதறுந் தமரக் காளிந்திக் = கதறுகின்ற காளிங்கம் என்ற பாம்பின் மேல் ஆடிய

கரையில் = யமுனைக் கரையில்

நிரைப்பின் னே = பசுக்கள் பின்னே

நடந்த = நடந்த

கண்ணன் = கண்ணனின்

மருகா = மருமகனே

முகையுடைக்கும் = மொட்டு மலரும் (முகை = மொட்டு)  

 பூம் பாசடை = பூக்கள் நிறைந்த , பசுமையான இலைகள் கொண்ட குளத்தில்

பங்கயத்தடத்திற் =   தாமரை பூத்த குளத்தில்

புனிற்றுக்கவரி = இளைய எருமை

முலைநெரித்துப் = தன்னுடைய முலையில் இருந்து

பொழியும் = பொழியும்

அமுதந் தனைக் = பாலினை

கண்டு =கண்டு

புனலைப் பிரித்துப் = நீரைப் பிரித்து

பேட்டெகினந் = பெண் அன்னம்

தீம்பால் = சுவையான பாலை

பருகுந் = பருகும், குடிக்கும்

திருச்செந்தூர்ச் = திருச்செந்தூரில் உள்ள

செல்வா = செல்வா

தாலோ தாலேலோ = தாலோ தாலேலோ

தெய்வக் களிற்றை = தெய்வ யானையை

மணம் புணர்ந்த = மணந்து கொண்ட

சிறுவா = சிறுவனே

தாலோ தாலேலோ.  = தாலோ தாலேலோ


மழையில் இருந்து மாடுகளை காப்பாற்றினான், அவை வழி தப்பித் போகாமல் இருக்க  அவற்றின் பின்னே போனான். பசித்திருக்கும் அன்னப் பறவைகளுக்கு  , எருமையின் மூலம் பாலூட்டச் செய்தான்....விலங்குகளுக்கே அவ்வளவு உதவி செய்து அவற்றை காப்பான் என்றால்  உங்களை என்ன விட்டு விடவா போகிறான். 

நம்புங்கள். 

நம்புகிறீர்களா இல்லையோ, இன்னொரு தரம் பாட்டைப் படித்துப் பாருங்கள். கொஞ்சும் தமிழ்.


Monday, September 26, 2016

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே 


தவறான தீர்ப்பினால் கோவலன் மாண்டு போனான். கண்ணகி வீறு கொண்டு எழுகிறாள்.

வாழும் நாள் எல்லாம் கணவனை பிரிந்து இருந்தவள். கோவலன் மாதவி பின்னால் போய் விட்டான். மனம் திருந்தி வாழலாம் என்று வந்தவனுடன் மதுரை வந்தாள். வந்த இடத்தில் , விதியின் விளையாட்டால் கோவலன் கொல்லப் படுகிறான்.

கண்ணகிக்கு தாங்க முடியவில்லை. இது வரை அமைதியாக இருந்த பெண், ஏரி மலையாக வெடிக்கிறாள்.

வாழ்க்கையின் மேல் உள்ள மொத்த கோபமும் பொங்கி எழுகிறது.

பாண்டியன் அரண்மனைக்கு வருகிறாள்.

வாசலில் நிற்கும் காவலனைப் பார்த்து சொல்கிறாள்...

அறிவில்லாத அரசனின் மாளிகைக்கு காவல் நிற்கும் காவலனே, கையில் ஒரு சிலம்புடன், கணவனை இழந்தவள் வாசலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் போய் சொல் என்கிறாள்.

பாடல்

வாயி லோயே வாயி லோயே 
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே 
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் 
கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று 
அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள்


வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

வாயி லோயே = வாசலில் நிற்பவனே (காவல் காப்பவனே)

அறிவறை போகிய = ஞானம் இல்லாத

பொறியறு = புலன்கள் அறிவோடு தொடர்பு அற்ற

நெஞ்சத்து = மனதைக் கொண்ட

இறைமுறை = அரச முறை

பிழைத்தோன்= பிழைத்த அரசனின்

வாயி லோயே = வாயில் காப்பாளனே

இணையரிச் = இணை + அரி = இணையான அரிய

சிலம்பொன் றேந்திய கையள் = சிலம்பு ஒன்று ஏந்திய கையள்

கணவனை யிழந்தாள் = கணவனை இழந்தவள்

கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என = அறிவிப்பாயே, அறிவிப்பாயே என்றாள்


உணர்ச்சியின் உச்சத்தில் இளங்கோவடிகள் வடிக்கும் கவிதையின் ஆழத்தை  நாம் சிந்திக்க வேண்டும்.

வாயிலோயே, வாயிலோயே,
அறிவிப்பாயே, அறிவிப்பாயே

என்று ஏன் இரண்டு முறை கூறுகிறாள் ?

இந்த மன்னனுக்கு எதுவும் ஒரு முறை சொன்னால் புரியாது. அவசர புத்திக்காரன். ஒண்ணுக்கு இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று  நினைத்து இரண்டு முறை கூறுகிறாள்.

நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த நிறுவனத்தின்  மேலதிகாரி எப்படி இருப்பானோ அப்படி தான் , அந்த அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களும் இருப்பார்கள் என்று உலகம்  எடை போடும்.

அரசன் மோசமானவன் , அப்படிபட்ட அரசன் கீழ் வேலை பார்க்கும் வாயில் காப்பாளனே என்று அவனையும் ஏசுகிறாள் கண்ணகி.


அரசன் மேல் மூன்று குற்றங்களை சுமத்துகிறாள் கண்ணகி.


அறிவறை போகிய = மனத்  தெளிவின்மை

பொறியறு நெஞ்சத்து = பொறி என்றால் புலன்கள். கண் காது மூக்கு
போன்ற புலன்கள் , புத்தியோடு சேர்ந்து வேலை
செய்யவில்லை.காதால் கேட்டதை அப்படியே உண்மை என்று நம்பிவிட்டான்  பாண்டியன். சிந்திக்கவில்லை . அறிவுக்கு வேலை தரவில்லை.

இறைமுறை பிழைத்தோன் = அரசனை இறைவனுக்கு இணையாக வைத்துப் பார்த்தவர்கள்  நம்  முன்னோர்கள். ஏன் என்றால், இறைவனுக்கு  மூன்று தொழில். படைத்தல், காத்தல், அழித்தல் என்று.

நாம் இறைவனிடம் என்ன வேண்டுவோம் ?

இறைவா என்னை படைத்து விடு என்றா ? இல்லை. அது தான் ஏற்கனவே படைத்து  விட்டானே.

இறைவா என்னை அழித்துவிடு என்றா - யாரும் அப்படி கேட்க மாட்டார்கள்.

என்னை காப்பாற்று என்றுதான் வேண்டுவார்கள்.

காப்பதுதான் இறைவனின் தொழில்களில் நாம் விரும்பி வேண்டுவது.

அரசனுக்கும் தன் குடிகளை காக்கும் கடமை இருப்பதால், அரசனை  இறைவனுக்கு ஒப்பிட்டு கூறினார்கள்.

இறை மாட்சி என்று ஒரு அதிகாரமே  வைத்தார் வள்ளுவர்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.


இருப்பதோ மன்னர் ஆட்சி. மன்னனின் அதிகாரம் வானளாவியது. அவன் ஒன்று  செய்தால் அவனை யாரும் ஏன் என்று தட்டிக் கேட்க முடியாது.

கண்ணகியோ ஒரு அபலைப் பெண். உலகம் அறியாதவள். கணவனை இழந்தவள். புரியாத, தெரியாத ஊர்.

நேரே அரண்மனைக்கு சென்று மன்னனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனையும் தருகிறாள்.

ஆட்சி எப்படி நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

முடியுமா இன்று ? தவறு செய்யும் ஒரு அரசியல்வாதியை குடிமக்கள் தட்டிக் கேட்க முடியுமா ?

அருகில் வர விடுவார்களா ?

அரசன், நீதிக்கு கட்டுப் பட்டான். குடிகளின் குறை கேட்டான். தான்  குடி மக்களுக்கு கட்டுப் பட்டவன் என்று நினைத்தான்.

ஒரு கடைக் கோடி பெண் கூட , மாளிகையைத் தட்டி நீதி கேட்க முடிந்தது.

அப்படி இருந்தது ஒரு  காலம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு பக்கம், இது சொல்லும் வாழ்க்கை நெறி முறை.

தவறை யார் செய்தாலும் தட்டி கேட்க வேண்டும். அந்த போராடும் மனோ நிலை வேண்டும்.  அரசன் என்ன செய்வானோ, ஒரு வேளை என்னையும்  வெட்டி விடுவானோ என்று கண்ணகி பயப் படவில்லை. துணிந்து போராடினாள் . இன்று , ஞாயம் தன் பக்கம் இருந்தால் கூட  போராட தயாராக இல்லை யாரும். பயந்து பயந்து வாழப் பழகி விட்டோம்.

ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவன் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள மற்றவர்களை மாட்டி விட நினைப்பார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்  நிதானமாக இருக்க வேண்டும். ஒரு வினாடி நிதானம் தவறினான் பாண்டியன். ஊரே எரிந்து சாம்பல் ஆனது.

யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும்.

பாடம் படிக்க வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_74.html



தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


எந்த பிறவிக்கும் ஒரு அர்த்தம் , நோக்கம் வேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த நோக்கத்தை நோக்கி நகர வேண்டும்.

நாவுக்கரசருக்கு இறைவன் திருவடி அடைவதுதான் நோக்கம்.  அவனை நினைக்க வேண்டும், அவனைப் பற்றி பேச வேண்டும். அப்படி பேசாத நாள் எல்லாம் , பிறவாத நாள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
                   சூழ் வலஞ்சுழியும் கருதினானை, 
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
         ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; 
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
                  எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- 
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
                          எல்லாம் பிறவா நாளே.

பொருள்

கற்றானை = எல்லாம் அறிந்தவனை

கங்கை வார்சடையான் தன்னை = கங்கையை தலையில் கொண்டவனை

காவிரி சூழ் = காவிரி ஆறு சூழும்

வலஞ்சுழியும் = திருவலம் சுழி என்ற திருத்தலத்தில்

கருதினானை = இருப்பவனை

அற்றார்க்கும் = செல்வம் அற்ற ஏழைகளுக்கும்

அலந்தார்க்கும் = கலங்கியவர்களுக்கும்

அருள் செய்வானை = அருள் செய்வானை

ஆரூரும் புகுவானை = திருவாவூரிலும் இருப்பவனை

அறிந்தோம் அன்றே = அன்றே அறிந்து கொண்டோம்

மற்று ஆரும்  = வேறு யாரும்

தன் ஒப்பார் இல்லாதானை = தனக்கு ஒப்பு இல்லாதவனை

வானவர்கள் = தேவர்கள்

எப்பொழுதும் = எப்போதும்

வணங்கி ஏத்தப் = வணங்கு துதிக்க

பெற்றானை = பெற்றவனை

பெரும்பற்றப்புலியூரானை = புலியூரில் இருப்பவனை

பேசாத நாள் எல்லாம் = பேசாத நாள் எல்லாம்

பிறவா நாளே = பிறக்காத நாளே

வறுமை ஒரு துன்பம். 

கொடியது கேட்கின் நெடு வடிவேலோய் 
கொடிது கொடிது வறுமை கொடிது என்பாள் அவ்வை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார் வள்ளுவர். 

பொருள் இருந்தாலும், வாழ்வில் சில சமயம் கலக்கம் வரும். 

உறவுகள் பிரிவதால் , பொருள் பிரிவதால், நோய் வருவதால், முதுமை வருவதால், எதிர் காலம் பற்றிய பயத்தால்  ....இப்படி பலப் பல காரணங்களினால் கலக்கம் வரும். 

அப்படி கலங்கியவர்களுக்கும் அருள் தருபவன் அவன். 

அதெல்லாம் சரி, அருள் தருவான் என்பது என்ன நிச்சயம் ? அப்படி யாருக்காவது அருள் செய்திருக்கிறானா என்று கேட்டால் , அப்பரடிகள்  கூறுகிறார் 

ஆமாம், செய்திருக்கிறான் , அதை "அறிந்தோம் அன்றே " என்று கூறுகிறார். நான் அறிந்தேன் என்று சாட்சி சொல்கிறார். 

அறிந்தோம் என்ற பன்மையால், தான் ஒருவர் மட்டும் அல்ல, தன்னைப் போல பலர் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். 

அவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

உடல் பிறந்து விடும். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. 

அறிவு பெற்று, தான் என்பது அறிந்து, உண்மையை அறியும் நாள் மீண்டும்  ஒரு பிறப்பு நிகழ்கிறது.  அதுவரை , அறிவில்லா இந்த உடல் சும்மா  அலைந்து கொண்டிருக்கும். ஒரு விலங்கினைப் போல. 

என்று இவற்றை அறிகிறோமோ, அன்று தான் உண்மையான பிறந்த நாள். 

அதுவரை பிறவா நாளே 



Sunday, September 25, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?



மூப்பு கொஞ்சம் சங்கடமான விஷயம்தான். புலன்கள் தடுமாறும். நினைவு தவறும். கண் ,  போன்ற புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்  இழக்கும். பேசுவது கேட்காது. கேட்டாலும் மனதில் நிற்காது. சுற்றி உள்ள இளையவர்கள் , கேலி செய்வார்கள். நாம் வளர்த்த பிள்ளைகள் நம்மை ஏளனம் செய்வது தாங்க முடியாத ஒன்று தான்.

என்ன செய்வது ? காய்ந்த மட்டையைப் பார்த்து இள மட்டை பரிகசிப்பது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.

அப்படி ஒரு மூப்பு வருமுன்னம், நல்லதைத் தேடு மனமே என்று மனதிடம் சொன்னால் அது எங்கே கேட்கிறது.

புலன் இன்பங்களின் பின்னால் ஓடுகிறது. உணவு, இசை, உறவுகள், நட்புகள், சினிமா,  நாடகம், ஊர் சுற்றல் என்று ஆசைகளின் பின்னால் அங்காடி நாய் போல் அலைகிறது இந்த மனம்.

சொன்னாலும் கேட்க மாட்டேன்  என்கிறது. ஒரு வேளை அந்த மனதுக்கும் நமக்கும் ஏதோ பழைய பகை இருக்குமோ ? அதனால் தான் நாம் நல்லது சொன்னால் கேட்காமல் நம்மை தீய வழிகளில் இட்டுச் செல்கிறதோ என்று சந்தேகப் படுகிறார் நாவுக்கரசர்.

பாடல்

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்

பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ

முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியால் உறவணங்கி முற்றம் பற்றி

அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.


பொருள்


எழுது = கண்ணில் மை எழுதும்

கொடியிடையார்= கொடி போன்ற இடையைக் கொண்ட

ஏழை மென்றோள் = மெலிந்து இருக்கும் மெல்லிய தோள்கள் கொண்ட

இளையார்கள்= இளம் பெண்கள்

நம்மை யிகழா முன்னம் = நம்மை இகழ்வதன் முன்னம்

பழுது படநினையேல் = கெட்ட வழியில் செல்ல நினைக்காதே

 பாவி நெஞ்சே = பாவி நெஞ்சே

பண்டுதான் = முன்பு, பழைய காலத்தில்

என்னோடு =என்னோடு

பகைதா னுண்டோ = உனக்கு பகை ஏதேனும் உண்டோ ?

முழுதுலகில் = முழுமையான உலகில். அனைத்து உலகிலும்

வானவர்கள் = தேவர்கள்

முற்றுங் கூடி =  அனைவரும் கூடி

முடியால் =தலையால்

உறவணங்கி = முற்றும் தரையில் பட வணங்கி

முற்றம் பற்றி = முழுவதும் பற்றி

அழுது = அழுது

திருவடிக்கே பூசை செய்ய = திருவடிகளுக்கே பூசை செய்ய

இருக்கின்றான் = இருக்கின்றான்

ஊர்போலும் ஆரூர் தானே = ஊர்தான் திருவாரூர்

வயதாகும். மதி மயங்கும். அதற்கு முன் எது சரியோ அதை செய்து விட வேண்டும்.

உற்றார் அழுமுன்னே. ஊரார் சுடுமுன்னே , குற்றாலத்தானையே கூறு என்பார் பட்டினத்தார்.

நேற்று வரை எப்படியோ. இன்றில் இருந்து ஆரம்பிப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_25.html


Saturday, September 24, 2016

இராமாயணம் - விராதன் வதை படலம் - உறங்குதியால் உறங்காதாய்!

இராமாயணம் - விராதன் வதை படலம் -  உறங்குதியால் உறங்காதாய்!


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் அரக்கனாய் பிறந்து, இராமனோடு சண்டையிட்டு, இராமன் திருவடி பட்டு, சாபவிமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன் , இராமனைப் பற்றி சிலச் சொல்லுகிறான்.


இன்பம் வேண்டும் என்றுதான் வாழ்வில் ஒவ்வொன்றையும் செய்கிறோம். இருந்தும் துன்பம் வருகிறது. நல்லது வேண்டும் என்று தான் நினைக்கிறோம், இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

இன்பம் மட்டுமே இருக்கக் கூடாதா ? நல்லது மட்டுமே நடக்கக் கூடாதா ?

ஏன் இந்த கஷ்டங்கள் வருகின்றன ?

இதற்கு காரணம் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பாகங்கள்  மாதிரி. ஒரு பாகம் மட்டும் வேண்டும் என்றால் எப்படி முடியும் ?

நாய்த குட்டியின் தலையை தூக்கினால் வாலும் கூடவே சேர்ந்தே வரும்.

இன்பம் உருவம் என்றால் , துன்பம் நிழல்.

நன்மை உருவம் என்றால் , தீமை நிழல்.

இரண்டையும் பிரிக்க முடியுமா ?

இதை அறிந்தவர்கள் இந்த நல்லது/கெட்டது , நன்மை/தீமை, உயர்வு/தாழ்வு என்ற இரட்டைகளை தாண்டி நடுவில் நிற்பார்கள்.

ஒரு சம நோக்கு இருக்கும் அவர்களுக்கு.

பாடல்

பொரு அரிய சமயங்கள்
    புகல்கின்ற புத்தேளிர்,
இரு வினையும் உடையார்போல்
    அருந்தவம் நின்று இயற்றுவார்;
திரு உறையும் மணிமார்ப!
    நினக்கு என்னை செயற்பால?
ஒரு வினையும் இல்லார்போல்
    உறங்குதியால் உறங்காதாய்!


பொருள்

பொரு அரிய = பொருவு என்றால் ஒப்பு. பொருவு அரிய என்றால் ஒப்பு, உவமை கூற முடியாத

சமயங்கள் = பல சமயங்கள்

புகல்கின்ற = சொல்கின்ற

புத்தேளிர் = தேவர்கள்

இரு வினையும் = இரண்டு வினைகள். நல்லது/கெட்டது  போன்ற வினைகள்

உடையார்போல் = உடையவர்களைப் போல

அருந்தவம் = பெரிய தவத்தை

நின்று இயற்றுவார்  செய்வார்கள்

திரு = திருமகள்

உறையும்  = வாழும்

மணிமார்ப! = கௌஸ்துபம் என்ற மணியை அணிந்த மார்பை உடையவனே

நினக்கு = உனக்கு

என்னை = என்ன

செயற்பால? = செய்ய வேண்டும் ?

ஒரு வினையும் = ஒரு வேலையும்

இல்லார்போல் = இல்லாதவர் போல

உறங்குதியால் = உறங்குகிறாயா ?

உறங்காதாய் = உறங்காதவனே

இராமன் ஏதோ வினை செய்வது போல இருக்கிறது. ஒன்றும் செய்யாதவன் போலவும்  இருக்கிறான். உறங்குகிறானா, விழித்து இருக்கிறானா  என்று தெரியவில்லை.

வினை செய்வதற்கு முன் அந்த வினையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அப்படி தேர்ந்தெடுக்க , அந்த வினை நல்லதா, கெட்டதா என்று தேர்வு செய்ய வேண்டும்.  நல்லது கெட்டது நின்ற பிரிவினை மறைந்து விட்டால்  எந்த வினையை செய்வது ?

அதற்காக ஒன்றும் செய்யாமலும் இருக்க முடியுமா ?

இந்த இருமைகளை தாண்டினால் அது புரியும்.

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே,
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே,
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,
நரர்களுக்கும் சுரரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,
என் அரசே, யான் புகலும் இசையும் அணிந்து அருளே!

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல என்பார் வள்ளுவர்.

வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை.

இன்பத்தையும்,  துன்பத்தையும் சமமாக காணும் அந்த நிலை சுகமானதுதான்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_42.html

Thursday, September 22, 2016

திருக்குறள் - யாமும் உளேம் கொல்

திருக்குறள் - யாமும் உளேம் கொல் 


காதலை, பிரிவை, அன்பை, ஏக்கத்தை, ஆண் பெண் உறவின் சிக்கலை ஒண்ணே முக்கால் அடியில் சொல்ல முடியுமா ?

வியக்க வைக்கும் காமத்துப் பால். ஒற்றை வார்த்தையில் ஒரு மனதின் அத்தனை உணர்ச்சிகளையும் ஏற்ற முடியுமா ? சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.

பாடல்

யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்


பொருள்

யாமும் = நாங்களும்

உளேம்கொல் = இருக்கிறோமா ?

அவர்நெஞ்சத்து = அவருடைய நெஞ்சத்தில்

எம்நெஞ்சத்து = எங்கள் நெஞ்சில்

ஓஒ உளரே அவர் = அவர் இருப்பது போல

அவ்வளவுதான் பாடல்.

கொட்டிக் கிடைக்கும் உணர்ச்சிகளை எப்படி சொல்லுவது.

அவர் நெஞ்சத்து என்பதால் இது ஒரு பெண்ணின் மன நிலையை குறிக்கும் பாடல் என்று   தெரிகிறது.

இரண்டாவது, என் மனதில் அவர் இருப்பது போல அவர் மனதில் நான் இருப்பேனா என்று கேட்பது போல உள்ள பாடல். ஒவ்வொரு     வார்த்தையிலும் கொட்டிக் கிடக்கும் அர்த்தம்.

மூன்றாவது, "யாமும்" என்பதில் அவன் மனத்தில் யார் யாரோ இருக்கிறார்கள். நானு'ம்' இருக்கிறேனா என்று கேட்கிறாள். யாம் உளேம் கொல் என்று சொல்லி இருக்கலாம். யாமும் என்ற சொல்லில் அவன் மனதில் வேறு யாரோ இருக்கிறார்களோ என்ற பெண்ணின் இயல்பாலான  சந்தேகம் தொக்கி நிற்கிறது.


பாரதி சொல்லுவான் "யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் "என்று. கண்டது அவன் மட்டும் தான். ஆனால், தன்னை சொல்லும் போது "யாம்" என்று கூறுகிறான். ஆங்கிலத்தில் "royal we " என்று சொல்வார்கள். அவள் ஒரு பெரிய இடத்துப் பெண் அல்லது ஏதோ ஒரு சிறப்பு அவளிடம் இருக்க வேண்டும்.


யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்பார் நாவுக்கரசர்.

நான்காவது, "உளேம் கொல்" இருக்கிறோமா என்பது கேள்விக் குறி. இருக்க வேண்டும். ஆனால் இருக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. ஒரு வேளை மறந்திருப்பானோ என்ற பயம் இருக்கிறது.

ஐந்தாவது, யானும் என்று ஒருமையில் சொல்லி இருக்கலாம். யாமும் என்று பன்மையில் சொல்லும் போது ஒரு அன்யோன்யம் விட்டுப் போகிறது.  "எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று மனைவி கேட்பதற்கும்  "எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க" என்று கேட்பதற்கும் வேறுபாடு உண்டு.


ஆறாவது, எம் நெஞ்சில் அவரே இருப்பது போல.  மீண்டும் பன்மை. எம் நெஞ்சில் என்கிறாள். என் நெஞ்சில் என்று சொல்லி இருந்தால் தளை ஒண்ணும் தட்டி இருக்காது.

ஏழாவது, எம் நெஞ்சில் அவர் இருப்பது போல என்று கூறும் போது , "என் நெஞ்சில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அதே மாதிரி  அவன்  நெஞ்சிலும் நான் மட்டும் தான் இருக்க வேண்டும், வேறு யாரும்  இருக்கக் கூடாது" என்று அவள் எதிர்பார்ப்பது தெரிகிறது.


எட்டாவது, "உளரே அவர்" உளர் அவர் என்று சொல்லி இருக்கலாம். உளரே என்ற ஏகாரத்தில் ஒரு அழுத்தம்.ஒரு உறுதி. இராமன் வந்தான் என்று சொல்வதற்கும். இராமனே வந்தான் உள்ளதற்கும் உள்ள வேறுபாடு. இராமன் வந்தான் என்றால் ஏதோ ஒரு ஆள் வந்தான் என்று தெரியும். இராமனே வந்தான் என்றால் ஏதோ வராத , வருவான்னு எதிர்பார்க்காத ஆள் வந்த வியப்பு, சந்தோஷம்.  அவர் வந்து பத்திரிகை கொடுத்தார் என்பதற்கும், "அவரே" வந்து பத்திரிகை கொடுத்தார் என்று சொல்லுவது போல.

ஒன்பதாவது, ,ஓஒ உளரே அவர். அது என்ன ஓ ஓ ? அந்த ஓ விற்குப் பின்னால் ஆயிரம் அர்த்தம். வேலை முடியலை'யோ' அதனால் என்னை நினைக்க நேரம் இல்லை'யோ' ? ஒரு வேளை உடம்பு கிடம்பு சரியில்லை'யோ' ? நான் ஏதாவது தப்பாக சொல்லி அல்லது செய்திருப்பே'னோ'. அதனால் கோபித்துக் கொண்டிருப்பா"னோ ". ஒரு வேளை இனிமேல் என்னை நினைக்கவே மாட்டா"னோ" என்று  ஆயிரம்  "ஓ" அந்த இரண்டு ஓஓ வில். இன்னும் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு  நீங்கள் நீட்டிக் கொள்ளுங்கள். அது ஓஓஓ.....குறளைப் படித்துப் பாருங்கள். அந்த நீண்ட ஓ ஓ புரியும்.


இப்போது இந்த அர்த்தத்தை எல்லாம் விட்டு விடுங்கள். அந்த குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

தனிமையில் , பிரிவில் வாடும் ஒரு பெண்ணின் சோகம் ஊதுவத்தி புகையாக  பரவுவதை உணர்வீர்கள்.

வார்த்தைகளை சுருக்க சுருக்க கவிதை பட்டை தீட்டிய வைரம் போல ஜொலிக்கும்.

அப்படி என்றால் மௌனம் எவ்வளவு உயர்ந்தது ?


http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_22.html




Wednesday, September 21, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன்

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - தாயுமானவன் 



ஒரு சாபத்தால் அரக்கனாக பிறந்த விராதன், இராமனிடம் போராடி, அவன் பாதம் பட்டதால் , சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் செல்லும் முன், சில சொல்லுகிறான்.

பிரமனுக்கும், மற்றும் உள்ள தேவர்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் நீயே முதல் தந்தை.  நீ தந்தை என்றால் , தாய் யார் ? தருமத்தின் வடிவாக நின்றவனே.


பாடல்

ஓயாத மலர் அயனே முதல் ஆக
     உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று
     ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை, நெறி முறையால்
     ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே?-தருமத்தின்
     தனி மூர்த்தி!


பொருள்


ஓயாத = இடைவெளி இல்லாமல், தொடர்ந்து

மலர் அயனே = தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன்

முதல் ஆக = தொடங்கி

உளர் ஆகி = உள்ளவர்கள் ஆகி

மாயாத வானவர்க்கும் = இறப்பு என்பது இல்லாத வானவர்களுக்கு

மற்று ஒழிந்த = அவர்களைத் தவிர

மன்னுயிர்க்கும் = நிலைத்த உயிர்களுக்கும்

நீ ஆதி முதல் தாதை, = நீயே முதலில் தோன்றிய தந்தை

நெறி முறையால் = சரியான வழியில்

ஈன்று எடுத்த = பெற்றெடுத்த

தாய் ஆவார் யாவரே?- = தாயாக இருப்பவர் யார் ?

தருமத்தின் = அறத்தின்


தனி மூர்த்தி! = தனிச் சிறப்பானவனே

எனக்கு ஒரு அப்பா இருக்கிறார். அவருக்கு ஒரு அப்பா இருக்கிறார், அதாவது என் தாத்தா. இப்படி போய் கொண்டே இருந்தால், முதன் முதலில் ஒருவர் வேண்டும் அல்லவா . அந்த முதல் தந்தை நீதான் என்று இராமனை வணங்குகிறான் விராதன்.

பிரமனுக்கும், தேவர்களுக்கும், மற்றும் உள்ள உயிர்களுக்கும் நீயே தந்தை என்று சொல்லிவிட்டு, "சரி, தந்தை நீயானால், தாய் யார் " என்று கேள்வியும் கேட்கிறான்.

கேள்வியிலேயே பதிலை ஓட்ட வைக்கிறார் கம்பர் ?

தாய் யாராக இருக்க முடியும் என்று கேட்கிறான். கேட்டு விட்டு, "தர்மத்தின் தனி மூர்த்தி" என்று முடிக்கிறான்.


அது மட்டும் அல்ல, உடலுக்கு தந்தை யார் என்று தெரியும். உயிருக்கு யார் தந்தை ?  "நீயே தர்மத்தின் தனி மூர்த்தி" என்று சொல்கிறான்  விராதன்.

சரி, தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்றால், தாய் வேண்டுமே ? தாய் இல்லாமல் தந்தை எப்படி என்ற கேள்வி எழும் அல்லவா ?

ஆதி மூலத்துக்கு தந்தை என்ன, தாய் என்ன ? எல்லாம் ஒன்று தான்.

அவன்  தந்தையானவன். தாயும் ஆனவன்.

நீயே தாயும் தந்தையும் என்று சொல்லி முடிக்கிறான் விராதன்.



அம்மையும் நீ, அப்பனும் நீ என்பார் மணிவாசகர். அம்மையே அப்பா.


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


அப்பன் நீ, அம்மை நீ என்பார் நாவுக்கரசர்.


அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.


மூன்று வயது  ஞான சம்பந்தர், குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். அவருடைய  தந்தை திருக்குளத்தில் நீராட , நீரில் மூழ்கினார். தந்தையை க் காணாத குழந்தை அழுதது. குளத்தை பார்த்தல்லவா அழ வேண்டும்.  அது கோபுரத்தைப் பார்த்து அழுதது. எப்படி ?

அம்மே, அப்பா என்று அழுதது.

மெய்ம்மேற்கண் டுளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
 தம்மேலைச் சார்புணர்ந்தோ? சாரும்பிள் ளைமைதானோ?
 செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்
"தம்மே! யப்பா! வென்றென்றழுதருளி யழைத்தருள.


சேக்கிழார் உருகுகிறார்.

அம்மே அப்பா என்று எண்ணி அழைத்து அருளி அழைத்து அருள என்று  சேக்கிழார் நெகிழ்கிறார். மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துப் பாருங்கள். கண்ணில் நீர் ததும்பும் பாடல்.

காணாமல் போனது அப்பா. பிள்ளை அழுவதோ, அம்மே, அப்பா என்று. அம்மாவைத் தேடி பின் அப்பாவைத் தேடுகிறது.

இரண்டும் வேறா என்ன ?

காதல் மடப் பிடியோடு களிறு வருவன கண்டேன், 
கண்டேன் அவர் திருப்பாதம் 
கண்டரையாதன கண்டேன் என்றார் நாவுக்கரசர். 

ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக  அனுப்புடன் இருப்பதைப் பார்த்த  அவருக்கு , அது இறை வடிவமாகவே தெரிகிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. அதுதான் மூலம். அது தான்  ஐக்கியம்.

சொல்லிக் கொண்டே போகலாம்.

காலம் கருதி சுருக்கி உரைத்தேன்.

சிந்தித்துணர்க.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_21.html