Wednesday, January 17, 2018

கருவூர்த் தேவர் திருவிசைப்பா - கேடிலா மெய்ந்நூல் கெழுமியும்

கருவூர்த் தேவர் திருவிசைப்பா - கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் 


பலர் நிறைய நல்ல புத்தகங்களை வாசிப்பார்கள். வாசிப்பது புரியவும் செய்யும். அதில் உள்ளவை நல்லது என்று அவர்கள் மனம் சொல்லும். இருந்தாலும், நல்லவற்றை வாழ்க்கையில் கடை படிக்க மாட்டார்கள். "நல்லதுதான்...இருந்தாலும் இது எல்லாம் நமக்கு ஒத்து வராது ...நடை முறைக்கு சரி வராது ... இதெல்லலம் சாமியார்களுக்குத் தான் சரி " என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு, அடுத்த புத்தகத்தை வாசிக்கப் போய் விடுவார்கள்.

என்னவென்று சொல்வது அவர்களின் அறிவீனத்தை.

கருவூர் தேவர் சொல்கிறார், தக்கை எவ்வளவு காலம் நீரில் மிதந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட அதன் உள்ளே போகாது. தண்ணீரிலேயே கிடக்கும். சுற்றிலும் தண்ணீர். இருந்தும் ஒரு சொட்டு கூட உள்ளே போகாது. அது போல சிலர். நிறைய படிப்பார்கள். நிறைய கேட்பார்கள். படித்தவர்களோடு பழுகுவார்கள். இருந்தாலும், ஒண்ணும் உள்ளே போகாது.

நான் அப்படி இருக்கிறேன். இருந்தும் நீ எப்படியோ என் நெஞ்சில் புகுந்து விட்டாய் , என்று இறைவனை குறித்து வியக்கிறார் கருவூர் தேவர்.

பாடல்

கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க்
    கிடையனா ருடையஎன் னெஞ்சிற்
பாடிலா மணியே மணியுமிழ்ந் தொளிரும்
    பரமனே பன்னகா பரணா
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
    மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினா யெனினும் உள்புகுந் தடியேன்
    நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே 
.
பொருள்

கேடிலா = கேடு இல்லாத

மெய்ந்நூல் = உண்மையான நூல்கள்

கெழுமியுஞ் = பழகியும்

செழுநீர்க் = செழுமையான அல்லது நிறைந்த நீருக்கு

இடையான உடைய =  இடையில் இருக்கும் தக்கை போல

என் னெஞ்சிற் = என் மனதில்

பாடிலா = குற்றமற்ற

மணியே = மணியே

மணியுமிழ்ந் தொளிரும் = மணி உமிழ்ந்து ஒளிரும்

பரமனே = பரமனே

பன்னகா = பாம்பை

பரணா = அணிந்த பரணா

மேடெலாஞ் = மேடு எல்லாம்

செந்நெற் = செம்மையான நெல்

பசுங்கதிர் விளைந்து = பசுமையான கதிரை விளைத்து

மிகத்திகழ் = சிறந்து விளங்கும்

முகத்தலை = முகத்தலை என்ற

மூதூர் = பழமையான ஊரில்

நீடினா யெனினும் = இருந்தாய் என்றாலும்

உள்புகுந் தடியேன் = உள் புகுந்து அடியேன்

நெஞ்செலாம் = நெஞ்சமெல்லாம்

நிறைந்துநின் றாயே = நிறைந்து நின்றாயே


மெய்ந்நூல் கெழுமியுஞ் : நண்பர்களோடு பழகுவோம். காதலன்/காதலியோடு பழகுவோம். நிதம் சென்று பார்ப்போம் . அவர்களோடு இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. எவ்வளவு நேரம் செலவழித்தாலும், இன்னும் கொஞ்ச நேரம் என்று மனம் ஏங்கும். அவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டால் கூட, அவர்கள் நினைவு கூடவே இருக்கும். அவர்களை நினைக்கும் போது மனம் மகிழ்ச்சி கொள்ளும். 

அது போல நல்ல நூல்களோடு பழக வேண்டுமாம். அடிக்கடி அவற்றைப் படிக்க வேண்டும். நினைத்து மகிழ வேண்டும்.  கனவிலும் அந்த நூல்கள் வர  வேண்டும்.  

நூலை வாசித்தால் போதாது. அவற்றோடு பழக வேண்டும். 

மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து: நீர் பள்ளம் நோக்கி பாயும். அங்கே நெல் விளையும். ஆனால் இந்த ஊரில் மேட்டில் நெல் விளைகிறதாம். என்ன அர்த்தம் ?

அவ்வளவு நீர் வளம். பள்ளம் நிரம்பி, மேட்டுக்கும் நீர் வருகிறது. அங்கே நெல் விளைகிறது. 

அது ஒரு அர்த்தம். 

இறைவன் கருணை அவனை அன்போடு விரும்பும் பக்தர்களுக்கு கிடைக்கும். நான் அங்கு இல்லை. எனக்கு எப்படி கிடைத்தது ? மேட்டில் இருக்கும் நெல்லுக்கு நீர் கிடைத்தது போல, இறைவன் கருணை அவ்வளவு நிறைந்தது என்று சொல்லாமல் சொல்கிறார். 

நீரில் கிடந்தாலும், நீரை உள்ளே விடாத தக்கை போல் இல்லாமல், நல்ல விஷயங்களை உள்ளே அனுமதியுங்கள். அவை உங்களை மேன் மேலும் சிறந்தவர்களாக ஆக்கும்.

ஆக வாழ்த்துக்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_17.html






Tuesday, January 16, 2018

திருக்குறள் - பின் நோக்காச் சொல்

திருக்குறள் - பின் நோக்காச் சொல் 


புறங்கூறாமை.

ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது தவறாகப் பேசுவது. அது கூடாது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்இன்று பின்நோக்காச் சொல் 

பொருள்

கண்நின்று = கண் முன்னால் நின்று

கண்ணறச் = கண் அற . கருணை இல்லாமல் சுடு சொல்

சொல்லினும் = சொன்னாலும்

சொல்லற்க  = சொல்லாமல் இருக்க

முன்இன்று = முன்னின்று

பின்நோக்காச் = பின்னால் நோக்க முடியாத

சொல் = சொல்லை

முன் பாதி புரிகிறது.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்

அது சரி. அது என்ன

முன்இன்று பின்நோக்காச் சொல் ?

முன்னால் சென்ற பின் , அவன் பின்னால் சொல்லக் கூடாது என்று பொருள் சொல்லலாம். ஆனால், "நோக்கா" என்ற சொல் இடிக்கிறது.

நாம் மற்றவர்களைப் பற்றி பிறரிடம் பேசும் போது , ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் இப்போது சொல்வதை , அந்த குறிப்பிட்ட நபரின் முன்னால் சொல்லுவோமா என்று. சொல்ல முடியாது என்றால், அந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது.

அவரின் முன் நின்று , பின்னால் ஒரு நாளில் சொல்லுவோமா ? இது ஒரு பொருள்.

நாம் ஒருவரை பற்றி மற்றவரிடம் ஏதோ சொல்லி விடுகிறோம். அந்த விஷயம் எப்படியோ கசிந்து கசிந்து அந்த குறிப்பிட்ட நபரின் காதுகளுக்கு சென்று அடைந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

நாம் தான் அதை சொன்னோம் என்பது அவருக்கு தெரிந்து விட்டது. அவருக்கு தெரிந்து விட்டது என்று நமக்கும் தெரிந்து விட்டது.

அதற்குப் பின்னால், அவரை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடியுமா ?

அவர் முன் நின்று , பின்னாளில் முகம் பார்த்து பேச முடியுமா ?

முன்னின்று பின்நோக்கா சொல். பின்னடையக் கூடாது.

 எனவே,ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் போது , பேசும் விஷயத்தை அந்த குறிப்பிட்ட நபரின் முகத்துக்கு நேரே கூற முடியுமா ? என்று சிந்திக்க வேண்டும்.

ஒருவேளை நாம் இரகசியமாக சொல்வது அவர் காதுக்குப் போய் சேர்ந்து விட்டால், நாம் அவர் முகத்தில் விழிக்க முடியுமா என்றும் சிந்திக்க வேண்டும்.

இந்த இரண்டு கேள்விக்கும் முடியும் என்று பதில் சொல்ல முடிந்தால் அதைப் பற்றி பேசலாம். இல்லை என்றால் பேசக் கூடாது.

பேசப்படும் விஷயம் உண்மையா பொய்யா எனப்பதல்ல கேள்வி.

அவர் முன்னால் அதை சொல்ல முடியுமா என்பதுதான் கேள்வி.

பொதுவாக , ஒருவரின் குறையை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. அவர்களின் சிறப்பை  மற்றவர்களிடம் சொல்லலாம்.

சிலரை நம்பி நாம் எதையாவது சொல்லுவோம். அவர்கள் , யாரிடம் அதை சொல்லக் கூடாதோ அவர்களிடம் போய் சொல்லி நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்கள். பல உறவுகள் இதனால் முறிந்தது உண்டு. நாள் வாய்ப்புகள் கை நழுவிப்  போனது உண்டு.

மற்றவர்களைப் பற்றி நல்லதையே பேச வேண்டும்.

நல்லது அல்லாததை அவர்கள் முன் , அவர்களிடம் கூற வேண்டும். அதை கூட வள்ளுவர் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்

கண்ணற என்றால் கண்ணோட்டம் இல்லாமல் என்று அர்த்தம். கண்ணோட்டம் என்றால் கருணை, இரக்கம் , அன்பு என்று பொருள். அன்பில்லாத சொற்களை சொல்லக் கூடாது.

அப்படியே சொல்ல வேண்டி வந்தால் ....என்று சொல்ல வந்தார் ...

"சொல்லினும்" என்று ஒரு ' ம் ' சேர்க்கிறார்.

சொன்னால் கூட என்ற அர்த்தத்தில்.

கருணை இல்லாத சொற்களை சொன்னால் கூட, முன்னின்று பின் நோக்காச் சொல்லை சொல்லக் கூடாது.

எதைச் சொல்லலாம் என்றால், கண்ணோட்டம் உள்ள சொற்களை கூறலாம்.

மற்றவர்கள் மேல் கருணை கொண்டு, அன்பு கொண்ட நல்ல வார்த்தைகளை மட்டுமே கூற வேண்டும்.

இனிமேல் வேறு யாரையாவது பற்றி பேச வேண்டும் என்றால், இந்தக் குறளை சிந்தித்துப் பாருங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_62.html


Sunday, January 14, 2018

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா

தேவாரம் - செய்வகையறியேன் சிவலோகா



முன் பின் தெரியாத ஒரு ஊருக்குப் போய் , அங்குள்ள ஒரு ஆட்டோவில் ஏறி வழி கேட்டால், போகிற வழியில் ஆளுக்கு ஒரு வழி சொல்வார்கள். முன்னும் பின்னும், வடக்கும் தெற்கும் அலைவோம். ஆட்டோ கூலி வேறு ஏறிக் கொண்டே போகும். நமக்கோ வழி தெரியாது. கேட்பவர்களும் சரியாகாத் தெரியாமல் நம்மை அலைக் கழிப்பார்கள்.

வழி தெரிந்த ஆள் என்று ஒருவரை எப்படி அடையாளம் காண்பது ? அதுவும் சிக்கல்தான்.

இறைவனை அடைய வேண்டும். வீடு பேறு பெற வேண்டும். உண்மை எது என்ன என்று கண்டறிய வேண்டும் என்று நினைக்கிறோம். யாரிடம் கேட்பது ? எதையெதையோ படிக்கிறோம். யார் யார் சொல்வதெல்லாமோ கேட்கிறோம். எங்கு போகிறோம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நம் வாழ்க்கையை நடத்த நமக்கு உதவி செய்வது நமது புலன்கள். அவை நமக்கு உதவி செய்கின்றனவா ? கண் ஒரு பக்கம் இழுக்கிறது. காது ஒரு பக்கம் இழுக்கிறது. நாக்கு ஒரு பக்கம் இழுக்கிறது. அங்கும் இங்கும் அழைக்கிறோம்.

வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது.

புலன்களை விட்டு விடலாமா என்றால், அதுவும்  முடியாது. அவற்றை நம்பலாமா என்றால்  அதுவும் முடியாது.
'
பின் என்னதான் செய்வது ?

இந்தத் திகைப்பு நமக்கு மட்டும் அல்ல, சுந்தரருக்கும் இருந்திருக்கிறது.

" இறைவா,இந்த புலன்களை என்னை பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கின்றன. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கிறேன். நான் உய்யும் வழியை நீ தான் காட்ட வேண்டும் "என்று அலறுகிறார்.

பாடல்


ஐவகை அரையர்அவர் ஆகி
ஆட்சி கொண்டொரு கால்அவர் நீங்கார்

அவ்வகைஅவர் வேண்டுவ தானால்
அவரவர்வழி யொழுகிநான் வந்து

செய்வகையறியேன் சிவலோகா
தீவ ணா சிவ னே எரியாடீ

எவ்வகைஎனக் குய்வகை யருளாய்
இடைம ருதுறை யெந்தைபி ரானே.

பொருள்

ஐவகை = ஐந்து வகையான

அரையர்அவர் ஆகி = அரசு செய்யும் அதிகாரிகளாக ஆகி

ஆட்சி கொண்டு = என்னை ஆண்டு கொண்டிருக்கும் அவர்கள்

ஒருகால் = ஒரு காலத்திலும்

அ வர் நீங்கார் = அவர்கள் என்னை விட்டுப் போக மாட்டார்கள்

அவ்வகை =   அந்த வகையில்

அவர்வே = அவர்கள் (புலன்கள்)

வேண்டுவ தானால் = வேண்டுவதனால்

அவரவர்வழி யொழுகிநான் வந்து = அந்தந்த புலன்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நான் சென்று

செய்வகையறியேன் = செய்வது என்ன என்று அறிய மாட்டேன்

சிவலோகா = சிவலோகத்தில் உள்ளவனே

தீவணா = தீ போன்ற வண்ணம் கொண்டவனே

சிவனே = சிவனே

எரியாடீ = கையில் அனலைக் கொண்டு ஆடுபவனே

எவ்வகை = எந்த வகையில்

எனக்கு = எனக்கு

உய்வகை= உய்யும் வகை

அருளாய் = அருள் செய்வாய்

இடைமருதுறை = திருவிடை மருதூர் என்ற தலத்தில் உள்ள

ஏந்தை = என் தந்தையே

பிரானே = என்னை விட்டு என்றும் பிரியாதவனே

சுந்தரர் பாடு அப்படி என்றால், நம் பாடு எம்மாத்திரம்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_48.html

கம்பன் சொல்லாத இராமாயணம் - தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி

கம்பன் சொல்லாத இராமாயணம் - தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி 


கம்பன் தன் காவியப் போக்கில் சில விஷயங்களை சொல்லாமல் விட்டு விடுகிறான்.

அதற்கு காரணம் பல இருக்கலாம்.

பெரிய காப்பியம் செய்யும் போது , சில சில விஷயங்கள் விட்டுப் போவது இயல்பு. எல்லாவற்றையும் நுணுக்கமாக சொல்லுவது என்றால் காப்பியத்தின் சுவை குன்றும். இது ஒரு ஒரு காரணம்.

இரண்டாவது, சில விஷயங்களை இல்லை மறை காயாகத்தான் சொல்ல முடியும். இராமாயணம் போன்ற காவியத்தை பல தரப்பட்ட மக்கள் படிப்பார்கள். எனவே, எல்லாவற்றையும் சொல்ல முடியாது.

மூன்றாவது, அவை நாகரிகம் கருதியும் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கலாம்.

நமக்குத் தெரியாது. இருந்தும், விட்டதற்கான காரணம் தெரிந்தால், அதிலும் ஒரு பாடம் இருக்கும்.

இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் முடிந்து விட்டது. எல்லோரிடமும் ஆசி வாங்க வருகிறார்கள். மூன்று தாய்மார்களும் இருக்கிறார்கள்.

கோசலை, கைகேயி, மற்றும் சுமித்திரை.

யாரிடம் முதலில் ஆசி வாங்க வேண்டும் ? பெற்ற தாய் கோசலை , அவளிடம் முதலில் ஆசி வாங்க வேண்டும்.

அல்லது, மூத்த பட்டத்து இராணி என்று பார்த்தாலும், கோசலை தான் முதலில் வந்தவள்.

ஆனால், இராமன், கோசாலையிடம் முதலில் ஆசி வாங்கவில்லை.

கைகேயிடம் முதல் ஆசி பெறுகிறான்.

பாடல்


கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்.
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா.
ஆய தன் அன்னை அடித் துணை சூடி.
தூய சுமித்திரை தாள் தொழலோடும்.

பொருள்


கேகயன் = கேகய நாட்டின் அரசனின்

மா மகள் = சிறந்த மகள்

கேழ்  கிளர் பாதம். = ஒளி பொருந்திய திருவடி

தாயினும் = தாயை விட

அன்பொடு = அன்பு கொண்ட

தாழ்ந்து வணங்கா = (அவளின் அடிகளை) தாழ்ந்து வணங்கி

ஆய = பின்பு

தன் அன்னை அடித் துணை சூடி = தன் அன்னையான கோசலையின் பாதங்களை வணங்கி

தூய சுமித்திரை = தூய்மையான சுமித்தரையின்

தாள் தொழலோடும் = அடிகளை தொழுதான்


முதலில் கைகேயி காலில் விழுந்தான், பின் கோசலை பின் சுமித்திரை. அவ்வளவுதான் கம்பன் சொன்னது.

கம்பன் சொல்லாமல் விட்டது என்ன ?

வீட்டில் ஏதோ ஒரு சிக்கல்.  மனைவிகளுக்குள் ஏதோ ஒரு பனிப் போர் நடக்கிறது. ஆயிரம் தான் கைகேயி இராமன் மேல் அன்பு கொண்டிருந்தாலும்,  திருமணம் நடந்து முடிந்த கையோடு பெற்ற தாயிடம்  முதலில்  ஆசி வாங்குவதுதான் யாரும் எதிர் பார்த்த ஒன்று.

கைகேயிடம் முதலில் ஆசி பெற்றது, சீதைக்கு இராமன் சொல்லாமல் சொல்லும் பாடம். யாருக்கு வீட்டில் அதிகாரம் அதிகம் இருக்கிறது என்று சீதைக்கு  உணர்த்துகிறான்.


திருமணம் ஆன கையோடு , சீதைக்கு இதை எல்லாம் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது . இராமன் சொல்ல முடியாது என்பது மட்டும் அல்ல, கம்பனும் சொல்ல முடியாது.

எனவே, சொல்லாமல் சொல்கிறான்.

சீதை புரிந்து கொள்கிறாள்.  அவளுக்குப் புரிந்திருக்கும். பின்னால், பரதன் நாட்டை  ஆள வேண்டும், இராமன் கானகம் போக வேண்டும் என்று அறிந்த போது , "சரி வா போகலாம் " என்று சீதை கிளம்பி விட்டாள்.  காரணம், அவள் அதை  எதிர்பார்த்திருக்க வேண்டும். இராமன் முன்பே கோடி காட்டியிருக்கிறான்.

அது முதலாவது செய்தி.

இரண்டாவது, குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை , சிக்கல்களை புதிதாக வந்த மனைவியிடம்  சொல்லிக் கொண்டிருக்க கூடாது.

சொன்னால் என்ன ஆகும் ?

"எங்க அப்பா கொஞ்சம் சரி இல்லை. எப்ப பாரு , கைகேயி வீட்டிலேயே கிடப்பார் " என்று சொன்னால், தயரதன் மேல் சீதைக்கு மதிப்பு குறையும். அது குடும்பத்துக்கு நல்லதல்ல.

"என் அம்மா கொஞ்சம் ஒரு மாதிரி. நீ பாத்து நடந்துக்க " என்று மனைவியிடம் சொன்னால்  , மாமியார் மருமகள் சண்டைக்கு அங்கே விதித்திடப் படுகிறது என்று அர்த்தம்.

எப்படி கணவன் இவற்றை எல்லாம் இல்லை மறை காயாக சொல்ல வேண்டுமோ, மனைவியும் அவற்றை அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு  , குடும்பத்தை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும்.

எல்லாவற்றையும் தோண்டி துருவி கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

குடும்பம் என்றால் அப்படித்தான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.

தன் குடும்பத்தைப் பற்றி கணவன் மனைவியிடம் தரம் தாழ்த்தி பேசக் கூடாது.

கணவன் செய்கையில் இருந்து மனைவி புரிந்து கொண்டு குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இதுவும் , கம்பன் சொல்லாத இராமாயணம்.

சரிதானே ?

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_14.html

Saturday, January 13, 2018

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க 


பாடல்

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லும் இடத்து 

பொருள்

வலியார்முன் = தன்னை விட வலியார் முன்

தன்னை நினைக்க = தன்னை நினைத்துக் கொள்க

தான் = ஒருவன்

தன்னின் = தன்னை விட

மெலியார்மேல் = மெலியவர்களின் முன்

செல்லும் இடத்து = செல்லும் போது

எளிமையான குறள் .

தன்னை விட வலியவர்கள் முன் தான் எப்படி அஞ்சி ஒடுங்கி இருப்போம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும், எப்போது என்றால், தன்னை விட மெலியவர்கள் மேல் ஒருவன் செல்லும் போது .

சரி. அதனால் என்ன ? இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது ?

சில உதாரணங்கள் பார்ப்போம்.

புலால் உணவு உண்ணலாமா ? இந்த விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. உண்ணலாம் என்று ஒரு பக்கமும், தவறு என்று இன்னொரு பக்கமும் வாதம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு முடிவும் வந்தபாடில்லை.

அது ஒரு புறம்  இருக்கட்டும்.

ஒரு கடை வீதி வழியாக செல்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாமிச கடைகள் இருக்கின்றன.

அங்கே, சிறு பிள்ளைகளின் தலையை வெட்டி விற்பதற்கு வைத்திருக்கிறார்கள். இன்னும் சில கடைகளில் ஆண் மற்றும் பெண்ணின் உடலை , தலை இல்லாத உடலை தோலை உரித்து விட்டு, கம்பியில் தொங்க விட்டிருக்கிறார்கள். கீழே , கிலோ இன்ன விலை என்று எழுதி இருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். அந்த ஒரு நிலை எப்படி இருக்கும் ?

அப்படி நடக்காது. மனிதர்களை கொல்வதை சட்டம் அனுமதிக்காது.

ஒரு வேளை வேற்று கிரகத்தில் இருந்து சில ஜீவராசிகள் வந்து, அவை நம்மை விட பலமடங்கு புத்திசாலியாகவும், பல சாலியாகவும் இருந்து , இந்த பூமியை அவர்கள் அடிமை படுத்தி ஆளுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு மனித கறி பிடித்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மனிதர்களை பிடித்து  , தோல் உரித்து , வெட்டி சமைத்து உண்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவர்களுக்குள் விவாதம் நடக்கலாம். மனித கறி தின்பது நல்லதா கெட்டதா என்று.

மனித கறியில் சில சத்துக்கள் இருக்கத்தானே வேண்டும். அவர்களுக்கு அது தேவையாக இருக்கிறது.

அவர்கள் மனிதரைகளை கொன்று தின்பது சரிதானா ?

அவர்கள் ஒரு நாள் நம்மை பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எந்த நேரமும் நம்மை வெட்டி சமைக்கலாம் என்ற நிலையில் நாம் இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்.

எப்படி இருக்கும் ?

அப்படி ஒரு நிலை இல்லை. நம்மை விட வலியவர்கள் இல்லை என்பதால் நாம் நம்மை விட  வலிமை குறைந்த விலங்குகளை பாடாய் படுத்துகிறோம்.

அப்படி ஒரு வேற்று கிரக வாசிதான் இல்லையே . நாம் ஏன் பயப்பட வேண்டும் என்ற கேள்வி வரலாம் ?

அதனால் தான் வள்ளுவர் சொல்லுகிறார்


"வலியார்முன் தன்னை நினைக்க" என்று.

நினைத்துப் பாருங்கள். அது நடக்க வேண்டும் என்று இல்லை. மனதில் நினைத்துப் பாருங்கள். கற்பனை செய்து பாருங்கள்.

இப்போது மீண்டும் , புலால் உண்ணலாமா என்று வாதம் பண்ணுவதன் முன்னம், ஒரு நிமிடம் நீங்கள் ஒரு கம்பியில் கட்டி தொங்க விட்டிருப்பதாக "நினைத்து" பாருங்கள். பின் விவாதம் பண்ணுங்கள்.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

காரில் சென்று கொண்டிருக்கிறோம். நிறுத்தத்தில் ஒரு பிச்சைக் காரன் பிச்சை கேட்கிறான். "வந்துருவானுக ...பிச்சை எடுக்கிறதுக்கு..." என்று எரிச்சலும், கோபமும் வருகிறது அல்லவா. அவன் நம்மை விட மெலிந்தவன். நாம் பிச்சை எடுக்க போக மாட்டோம். ஆனால், நமக்கும் ஒரு தேவை வரும். யார் வீட்டு வாசலிலாவது போய் நிற்க வேண்டி வரும். அவர்கள் நம்மை பார்த்து கோபமும் எரிச்சலும் பட்டு ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டால் நம் மனம் என்ன பாடு படும். எவ்வளவு வருந்துவோம்.

அதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அலுவலகத்தில் கீழே உள்ளவன் ஒரு தவறு செய்தால், சொன்ன வேலையை நேரத்தில் முடிக்கவில்லை என்றால் அவன் மீது கோபம் வருகிறது. வாய்க்கு வந்தபடி திட்டுகிறோம். அவனை இழிவு படுத்துகிறோம். அவமானப் படுத்துகிறோம். யோசிக்க வேண்டும். நம் மேலதிகாரி , நம்மை அப்படி செய்தால் நமக்கு எப்படி இருக்க வேண்டும்.

சில வீடுகளில், வேலைக்காரியை மனிதர்களாகவே மதிப்பதில்லை. நாம் அவ்வாறு நடத்தப்பட்டால் எப்படி நமக்கு எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.

இது மனிதர்களுக்கு மட்டும் சொல்லப் பட்டது அல்ல.

சில வல்லரசுகள் , ஏனைய குட்டி நாடுகளை நசுக்குகின்றன. தன்னை விட பெரிய வல்லரசு வந்து தன்னை அப்படி நசுக்கினால் எப்படி இருக்கும் என்று "நினைத்துப்" பார்க வேண்டும்.

இப்படி நம்மை விட வலியவர்கள் மேல் நாம் எப்படி அஞ்சி ஒடுங்கி நிற்போம் என்று நினைத்துப் பார்த்தாலே, நம்மை விட மெலியவர்கள் மேல் அன்பும் அருளும் பிறக்கும்.

மெலியவர்கள் பிள்ளைகளாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், கீழே வேலை செய்யும் ஊழியராக இருக்கலாம், வாயில்லா பிராணிகளாக இருக்கலாம், நம்மிடம் கடன் வாங்கி விட்டு திருப்பித் தர முடியாத சிக்கலில் இருக்கும் ஒருவனாக இருக்கலாம் ... சின்ன நாடாக இருக்கலாம்...எதுவாக அல்லது யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

அவர்கள் மேல் அன்பும் அருளும் கொண்டு நடப்போம்.

குட்டி குறள் தானே. எளிமையான அர்த்தம் தானே...:)

http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_13.html

Friday, January 12, 2018

கம்பன் சொல்லாத இராமாயணம் - புலவியினும் வணங்காத

கம்பன் சொல்லாத இராமாயணம் - புலவியினும் வணங்காத


ஒரு படைப்பு என்பது படைப்பாளியோடு முடிந்து போவது அல்ல. அதை இரசிக்கும் இரசிகனும் அந்த படைப்பில் ஈடு படுகிறான். அவன் அனுபவமும், அவனின் ஈடுபாடும் சேர்ந்துதான் ஒரு படைப்பை முழுமை செய்கிறது.

ஒரு கதையோ, காவியமோ, பாடலோ, படைப்பாளியோடு நின்றுவிட்டால், அதில் சுவாரசியம் இல்லை. அப்படி இருந்தால் அது ஒரு அறிவியல் கோட்பாடு, கணித சமன்பாடு போல ஆகி விடும். வாசிப்பவனின் மூளைக்கு வேலை இல்லை.  பித்தாகிரஸ் கோட்பாடு, நியூட்டனின் விதிகள் என்றால் அது தான். அதில் ஒன்றை கூட்டவோ குறைக்கவோ முடியாது.

இலக்கியம் என்பது அப்படி அல்ல.

படைப்பவனின் அறிவின் எல்லைக்கு தக்கவாறு அது விரிய வேண்டும். படிப்பவன் புது புது அர்த்தங்களை அதில் காண வேண்டும்.

படைப்பாளி ஒரு நோக்கில் தன் படைப்பை நகர்த்திக் கொண்டு சொல்லுவான். படைப்பின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. வாசகனின் அறிவுக்கும், அனுபவத்துக்கும் கொஞ்சம் இடம் தர வேண்டும். கவிஞன் சொல்லாமல் விட்டதை இரசிகன் இட்டு பூர்த்தி செய்யும் போது தானும் ஒரு படைப்பாளி என்ற இன்பத்தை இரசிகன் பெறுகிறான். எல்லாவற்றையும் ஒரு கவிஞனே செய்து விட்டால் , இரசிகனுக்கு வேலை இல்லை.

கம்ப இராமாயணத்தில் , காப்பிய போக்கில் , கம்பன் செல்லும் போது பல செய்திகளை  சொல்லாமல் விட்டு விடுகிறான். நாம் சிந்தித்து அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம்.

அது ஒரு சுவாரசியம்.

கணவன் மனைவிக்கு நடுவில் ஆயிரம் சண்டை சச்சரவு வரலாம். நீ சரியா , நான் சரியா என்ற கேள்வி நித்தம் எழுந்து கொண்டுதான் இருக்கும். யாரவது ஒருவர் விட்டு கொடுத்துதான் போக வேண்டும். இரண்டு பேரும் நான் சொல்வதுதான் சரி என்று முரண்டிக் கொண்டிருந்தால் , இல்லறம் சிறக்காது. முறிந்து போகும்.

சரி. யார் விட்டு கொடுப்பது ? எப்போது விட்டு கொடுப்பது ? எப்படி விட்டு கொடுப்பது ?

கம்பன் விடை சொல்கிறான். நேரடியாக சொல்லவில்லை. மறைமுகமாக சொல்கிறான். நாம் தான் அதை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

கணவன்தான் விட்டு கொடுக்க வேண்டும் என்கிறான் கம்பன். மனைவிக்காக விட்டு கொடுக்காதவன் , அரக்கன் போன்றவன் என்பது கம்பனின் முடிவு. எவ்வளவு படித்து இருந்தாலும், எவ்வளவு பலசாலியாக இருந்தாலும், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், படுக்கை அறையில் மனைவியிடம் தான் பெரிய ஆள் என்று நினைக்காமல், அவளின் அன்புக்கு அடிபணிய வேண்டும். அவளின் ஆளுமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான்.

அங்கேயும் முறுக்கிக் கொண்டு இருப்பவன் , அரக்க குணம் கொண்டவன் என்கிறான்.

ஆண் நெகிழ வேண்டும். அன்பில் கரைய வேண்டும். அது அவனை பண்படுத்தி , அன்புள்ளவனாக, நல்லவனாக மாற்றும்.



இராவணன் பெரிய பலசாலி. படித்தவன். வேதம் அறிந்தவன். இசையில் சிறந்த ஞானம் உள்ளவன். வீரன். எல்லாம் தான். இருந்தும் அவன் மனம் ஏன் இன்னொருவன் மனைவி மேல் போனது ? அந்த செயல் தான் அவனது வீழ்ச்சிக்கு காரணமானது. இவ்வளவு தெரிந்த அவன் ஏன் அப்படிதவறு செய்தான் ?

மனைவியிடம் ஒரு போதும் பணிந்து போவதில்லை. அந்த முரட்டு குணம், அவனை முறித்துப் போட்டது.


பாடல்

புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும்

நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்?

மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள், சேயரிக் கண் வென்றி மாதர்

வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ.


பொருள்

புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை உடுத்திய சிவனும்

பொன்னாடை புனைந்தானும் = பட்டு ஆடை அணிந்த திருமாலும்

பூவினானும்  = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

நலியும் வலத்தார் அல்லர் = இவனை நலிவு படுத்த முடியாது

தேவரின் இங்கு யாவர் = அவர்களாலேயே முடியாது என்றால் வேறு எந்த தேவர்களால்

இனி நாட்டல் ஆவார்? = இதை நடத்த முடியும்

மெலியும் இடை = நாளும் மெலிந்து கொண்டே இருக்கும் இடை

தடிக்கும் முலை = நாளும் பெரிதாகிக் கொண்டே இருக்கும் தனங்கள்

வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள் ,

சேயரிக் கண் = சிவந்த கண்கள்

வென்றி மாதர் = பெண்கள்

வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட கூடலிலும்

வணங்காத = தலை வணங்காத

மகுட நிரை  = மகுடங்கள் நிறைத்த

வயங்க  = ஒளி வீசும்

மன்னோ.= மன்னவன்

மனைவியிடம் தனிமையில் இருக்கும் போதும் தலை வணங்கா தன்மையன். அந்த ஆணவம், அந்த இறுமாப்பு, அந்த வளைந்து கொடுக்காத தன்மை அவனை வீழ்த்தியது.


வள்ளியிடம் தனித்து இருக்கிறான் முருகன். அவள் மேல் காதல் பிறக்கிறது. பாவம், எனக்காக இவள் எவ்வளவு துன்பப் படுகிறாள் என்று கருணை பிறக்கிறது. அவளுடைய பாதங்களை மெல்ல வருடினானாம் முருகன்.

பாகு கனி மொழி, மாது குற மகள் , பாதம் வருடிய மணவாளா 

என்பார் அருணகிரிநாதர்.

முருகன் பெரிய ஆளாக இருக்கலாம். மனைவியோடு இருக்கும் போது , அவளை  தூக்கிப் பிடிக்க வேண்டும்.

அது தாம்பத்ய இரகசியம்.

இது , கம்பன் சொல்லாமல் சொன்ன பாடம்.

இப்படி நிறைய இருக்கிறது.

மேலும் பார்ப்போமா ?

Friday, December 29, 2017

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 2

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி - திருவாதனூர் - பாகம் 2



பாடல்


இடரானவாக்கையிருக்கமுயலார்
மடவார்மயக்கின்மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூராதரியார் நானெனதென்னா ரமல
னாதனூரெந்தையடியார்.



சீர் பிரித்த பின்

இடரான யாக்கை இருக்க முயலார் 
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு 
நாதன் ஊர் ஆதரியார் நான் எனது எண்ணார் அமலன் 
ஆதனூர் எந்தை அடியார் 

பொருள்

இடரான = துன்பம் நிறைந்த

யாக்கை = உடம்பு

இருக்க முயலார் = அதில் இருக்க முயற்சி செய்ய மாட்டார்கள்

மடவார் = மடமை கொண்ட பெண்கள்

மயக்கின் = மயக்கினால்

மயங்கார் = மயங்க மாட்டார்கள்

கடவுளர்க்கு = தேவர்களுக்கு

நாதன் = தலைவன், இந்திரன்

ஊர் = தேவலோகம்

ஆதரியார் = ஆதரிக்க மாட்டார்கள். தேவலோகமே கிடைத்தாலும் அதை விரும்ப மாட்டார்கள்.

நான் எனது எண்ணார் = நான் எனது எண்ண மாட்டார்கள்

அமலன் = மலம் என்றால் குற்றம். அ + மலன் = குற்றம் இல்லாதவன்

ஆதனூர் = ஆதனூரில் இருக்கும்

எந்தை  = என் தந்தை என்பதன் மரூஉ

அடியார் = அடியவர்கள்.

இது முதல் பாகத்தின் தொடர்ச்சி. 

இந்த ஊருக்கு ஆதனூர் என்று ஏன் பெயர் வந்தது ?

ஆ + தன்  + ஊர் = ஆ என்றால் பசு. பசுவின் ஊர் என்பதால், ஆதனூர்.


காமதேனு என்ற பசு, இந்தத் தலத்தில் இருந்து தவமிருந்து பெருமாளிடம் சரண் அடைந்ததால் இந்தத் தலம் திரு ஆதனூர் என்று அழைக்கப் படுகிறது. 


இங்குள்ள கோவிலில் கர்ப்ப கிரகத்தில் இரண்டு தூண்கள் உள்ளன.

இதே போல் இரண்டு தூண்கள் உள்ள ஒரே ஒரு இன்னொரு தலம் திருவரங்கம். இந்தத் தூண்களை மனத் தூண் என்கிறார்கள். இந்த தூண்களை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டால், நரகம் போக மாட்டோம் என்பது ஐதீகம்.

வைகுண்டத்திலும் இப்படி இரண்டு தூண்கள் இருக்கின்றதாம்.

பாடல் 

வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ

வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!

சீர் பிரித்த பின்

வாய் ஓர் ஈர் ஐநூறு  துதங்கள் ஆர்த்த  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந் தீ

வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன் மேலும் மிக எங்கும்  பரந்த தன் கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன  மாலைக் கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்

மாயோனை மணத் தூணே பற்றி நின்று ஏன்  வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே!

என்பது குலசேகர ஆழ்வார் வாக்கு 

மன தூண் , ஒரு சிறப்பு. 



 “என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
 முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐ யனை”

 பெரிய திருமடல் 126 - 129 (2674)

என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இன்னொரு சிறப்பு. 

இவை எல்லாம் விட எனக்குப் பிடித்த சிறப்பு என்றால் , கீழே வருவதுதான் .....

திருமங்கை ஆழ்வார் , திருவரங்கனுக்கு மதில் கட்டும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது பொருள் பற்றாக் குறை ஏற்பட்டது. அவர், பெருமாளிடம் வேண்டினார். அப்போது பெருமாள் கனவில், "கொள்ளிட கரைக்கு வா , பணம் தருகிறேன் " என்றார். திருமங்கையும் அங்கே சென்றார். அங்கே ஒரு ஆள் கையில் ஒரு வியாபாரி கையில் ஒரு காலி மரக்காலும் (பெரிய படி) எழுத்தாணியும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். "நீ யார்" என்று மங்கை வினவ, "உமக்கு பொருள் தரும்படி அழகிய மணவாளன் என்னை அனுப்பினார் " என்று கூறி காலி மரக்காலை திருமங்கையிடம் கொடுத்தார். 

"இது என்ன காலி மரக்காயாக இருக்கிறதே ..இதனால் என்ன பிரயோஜனம் " என்று கேட்டார். 

அதற்கு அந்த வியாபாரி , "இதில் பெருமாளே சரண் என்று மூன்று முறை சொல்லி இதில் கை விட்டால் நீர் நினைத்த பொருள் வரும். ஆனால், யார் முறையாக வேலை செய்தார்களோ அவர்களுக்குத் தான் பொருள் வரும். வேலை செய்யாமல் சோம்பித் தெரிந்தவர்களுக்கு வெறும் மணல் தான் வரும்  " என்று சொல்லி அதை கொடுத்தார். 

பெற்றுக் கொண்ட திருமங்கை எல்லோருக்கும் அதில் இருந்து கூலி கொடுத்தார். 

சிலருக்கு பொருளும், சிலருக்கு மண்ணும் வருவதைக் கண்ட மக்கள், இந்த வியாபாரி ஏதோ மந்திரவாதி என்று நினைத்து அவரை அடிக்க அவரை துரத்தினார்கள்.

பெருமாள் வேகமா சென்றார். மக்களும் துரத்தினார்கள். திருமங்கை ஒரு குதிரையின் மேல் ஏறி துரத்தினார். ஓடி வந்த பெருமாள் திரு ஆதனூர் கோவிலில் மறைந்து விட்டதாக ஒரு செய்தி உண்டு. 

இது அல்ல நான் சொல்ல வந்த சிறப்பு. 

அவ்வாறு ஓடி வரும் போது , 

ஆதனூருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் இருந்து ஓலை எழுதியதால் அந்த ஊருக்கு ஓலைப்பாடி என்று பெயர் வந்தது, 

பெருமாள் கம்பீரமாக விஜயம் செய்த ஊருக்கு விஜயமங்கை என்றும், 

அவர் ஓடும் போது மற்றவர்கள் எவ்வளவு தூரத்தில் வருகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தாராம், அந்த ஊர் "திரும்பூர்" என்றும், 

எங்கேடா ஆள் யாரையும் காணோம் என்று மயங்கி நின்ற ஊர் , மாஞ்சு போய் நின்ற ஊர் "மாஞ்சேரி " என்றும், 

மரக்காலில் கை வைத்த ஊருக்கு "வைகாவூர்" என்றும் , 

புகுந்த ஊருக்கு "பூங்குடி" என்றும், 

கடைசியில் சென்று அமர்ந்த ஊருக்கு "ஆதனூர் என்றும் 

பெயர் வந்தது என்பது வரலாற்று குறிப்பு. 

இந்த ஊர்கள் இன்றும் இதே பெயரில் வழங்கப் படுகிறது. 

இத்தனை ஊர்கள். ஒரு நிகழ்வோடு சம்பந்தப் பட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ? இந்த சிறப்பு எனக்கு மிகவும் பிடித்தது.

யோசித்துப் பாருங்கள்.

பெருமாள் விரைவாக முன்னே செல்கிறார். அவர் பின்னே திருமங்கை குதிரையில் செல்கிறார். அவருக்குப் பின்னே மக்கள் அவரை தொடர்கிறார்கள்.

இறைவன் முடிவு செய்து விட்டான் திருமங்கைக்கு அருள் செய்வது என்று. அவன் எந்த வடிவில் வருவான் என்று யாருக்கும் தெரியாது. திருமங்கைக்கு வியாபாரி போல  வந்தான்.

என்ன தத்துவம் , இறைவன் எந்த வடிவிலும் வருவான். எல்லா வடிவையும் இறையாக நினைத்து  போற்ற வேண்டும்.

வந்த இறைவன், கொஞ்சம் சோதனை செய்கிறான். ஓடுகிறான், எங்கே பக்தனுக்கு  ஆர்வம் இருக்கிறதா என்று காண. திருமங்கையும் விடாமல் துரத்துகிறார்.

அவர் பின்னால் மற்றவர்கள் செல்கிறார்கள். என்று அவர் இறைவனை அடைகிறாரோ, மற்றவர்களும் இறைவனை காண அவர் வழி செய்வார் என்று ஆச்சார்யா ஸம்ப்ரத்யாத்தை விளக்குகிறது.

சரி, இந்த ஊர் எங்கே இருக்கிறது ?

சுவாமி மலைக்கு பக்கத்தில், திரு புள்ள பூதக்குடிக்கு பக்கத்தில், நடந்தால் போய் விடும் தூரம் தான்.

கும்பகோணம் போய் விட்டால், புள்ள பூத கூடியும், திரு ஆதனூரும் தரிசனம் பண்ணலாம்.


மூலவர் கையில் மரக்காலோடு அளந்து கொடுக்கும் திருக்கோலம். பெயர் ஆண்டாளுக்கு ஐயன். இன்னொரு கையில் எழுத்தாணி.

சென்று வாருங்கள். பக்திக்காக இல்லாவிட்டாலும்,  ஒரு சரித்திர சம்பவம் நிகழ்ந்த இடம் என்றாவது  நினைத்துப்  போகலாம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/2_29.html