Saturday, October 13, 2018

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்றொன்றினை காணாதே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்றொன்றினை காணாதே 


வீட்டில் சின்ன குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும். சீருடை உடுத்து, பையை தூக்கிக் கொண்டு போவார்கள். அப்படி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வரும் பெற்றோர்களுக்கு வரும் வழியில் உள்ள பிள்ளைகளை பார்ப்பார்கள். எல்லா பிள்ளைகளும் , தங்கள் பிள்ளைகளைப் போலவே இருக்கும்.


காதலிப்பவர்களுக்கு தெரியும்...காதலிப்பவர் ஆணாக இருந்தால் ..எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவர்களின் காதலி போலவே தோன்றும். யாராவது பெண் எதிரில் வந்தால், தங்கள் காதலியே வருவது போல இருக்கும்.


இவை மானுட அனுபவங்கள்.


இறை அனுபவங்கள் உள்ளவர்களுக்கு உலகில் எதைப் பார்த்தாலும் இறைவனை பார்ப்பது போலவே இருக்கும். எல்லாம் இறை மயமாகத் தெரியும்.


காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா


என்பார்  பாரதியார். காக்கைச் சிறகினிலே, பார்க்கும் மரங்களில், கேட்கும் ஒலியில் எல்லாம், தீயின் சூட்டில் எல்லாம் கண்ணனை கண்டார் பாரதியார்.


"எங்கெங்கும் காணினினும் சக்தியடா தம்பி அவள் ஏழு கடல் அவள் வண்ணமடா" என்பார் பாரதிதாசன்.


மனமெல்லாம் எது நிறைந்திருக்கிறதோ, அதுவே எங்கும் தெரியும்.


பாணாழ்வார் பாடுகிறார்...அவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே என்று.


பாடல்



கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!


பொருள்


கொண்டல் = நீர் கொண்ட மேகம்

வண்ணனைக் = அது போல கரிய வண்ணம் கொண்டவனை

கோவலனாய் = கோகுலத்தில் பிறந்து

வெண்ணெய் = வெண்ணெய்

உண்டவாயன் = உண்ட வாயை உடையவனை

என் உள்ளம் கவர்ந்தானை = என் உள்ளம் கவர்ந்தவனை

அண்டர்கோன் = தேவர்களுக்கு தலைவனை

அணி அரங்கன் = திருவரங்கத்தின்

என் அமுதினை = என் அமுதம் போன்றவனை

கண்ட கண்கள் = கண்ட கண்கள்

மற்றொன்றினைக் காணாதே! = வேறு எதையும் காணாதே

இதில் கடைசி வரிக்கு, "அவனை மட்டுமே பார்க்கும். வேறு யாரையும், எதையும் பார்க்க மாட்டேன் " என்று ஆழ்வார் கூறியதாகத்தான் பல பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்.

எனக்கு சற்று வேறு விதமாக தோன்றுகிறது.

ஒரு முறை இறை அனுபவம் பெற்றவர்களுக்கு உலகில் உள்ள அனைத்துமே இறைவனின்  வெளிப்பாடாகவே தோன்றும். எதைப் பார்த்தாலும் அவனாகவே தோன்றுவதால், "அவனை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே" என்று கூறியதாகத்தான் தோன்றுகிறது.

பிள்ளைகளிடம் பெற்றோரின் சாயல் இருக்கும்.

பூனை குட்டி பூனை மாதிரி இருக்கும்.

புளியங்கன்று புளிய மரம் போல இருக்கும்.

இதில் இருந்து ஒன்று தோன்றுகிறதோ, மூலத்தின் சாயல் அதில் இருந்து தோன்றியதில் இருக்கத்தானே  செய்யும்.

இந்த உலகம் எல்லாம் இறைவன் படைத்தது என்றால், இறைவனின் சாயல் அனைத்திலும்  இருக்கும் அல்லவா ?

மலத்தில் இறைவன் இருக்கிறான். அதையும் கும்பிடு என்கிறார் பாரதியார்.  இந்த உலகம்  அனைத்தும் இறைவன் என்றால், மலமும் இறைவன் படைப்புத்தான் , அதிலும் அவன் இருக்கிறான் என்ற மிக உயர்ந்த இறை அனுபவம் அவருக்கு.

கீழான பன்றியில், குப்பை கூளத்தில் இறைவனை கண்டவர் அவர்.

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.


கழுதை, பன்றி, தேள், கூளம் , மலத்தினையும் வணங்க வேண்டும் என்கிறார்.


சரி இப்படித்தான் பாணாழவார் நினைத்துப் பாடி இருப்பாரா? தெரியாது.


கொண்டல் வண்ணனை என்கிறார்.


கரிய மேகம் என்று பொருள் சொல்லி விடலாம்.


சற்று யோசித்தால் தெரியும்...மேகம் நல்லவன், கெட்டவன் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், முட்டாள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக பெய்கிறது.


அது போல இறைவனுக்கு எந்த பேதமும் இல்லை. எல்லோரும் சமம் அவன் முன்னால் என்பதற்காக "கொண்டல் வண்ணன்" என்று கூறியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


பாணாழ்வார் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். அந்த பத்து பாடல்களை ஆராய்ச்சி செய்து  முனைவர் (doctr ) பட்டம் பெற்று இருக்கிறார்கள். அவ்வளவு அர்த்தம் இருக்கிறது. அவ்வளவு ஆழம்.


படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_13.html


Wednesday, October 10, 2018

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும்

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும் 


பாடல்

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.


பொறி என்றால் கருவி. குறிப்பாக எதையும் பிடிக்கும் கருவிக்கு பொறி என்று பெயர். எலிப் பொறி என்றால் எலியை பிடிக்கும் கருவி. பொறி  வைத்து பிடிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.


நமக்கு ஐந்து பொறிகள் இருக்கின்றன. கண், காது, மூக்கு, தோல், வாய் என்ற ஐந்து பொறிகள். இவை ஏன் பொறிகள் என்று அழைக்கப் படுகின்றன? வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை, உணர்வுகளை பிடிப்பதால். மூக்கு வாசத்தைப் பிடிக்கிறது. கண், காட்சிகளை பிடித்து மூளைக்கு செய்தி அனுப்புகிறது. இப்படி ஒவ்வொரு பொறியும் , ஒவ்வொன்றை பிடிக்கின்றன.


இந்த பொறிகள் பிடித்து அனுப்பும் செய்திகளை அறியும் செயலுக்கு புலன்கள் என்று சொல்லுகிறோம்.


கண் என்ற பொறி செய்யும் செயல் காண்பது.


காது என்ற பொறி செய்யும் செயல் கேட்பது.


இப்படி பொறிகளும் புலன்களும் ஒன்று சேர்ந்து நமக்கு இந்த உலகையும் ஏன் நம்மையும் நமக்கு அறிய உதவுகின்றன.


வயதாகும் போது, எந்த புலன் எந்தப் பொறியில் இருக்கிறது என்று தெரியாது.


கண்ணால் பார்த்து அறிய வேண்டியதை கையால் தொட்டு தொட்டு அறிய முயல்வோம். காதால் கேட்டு அறிய வேண்டியதை எழுதிக் காட்ட வேண்டி இருக்கும்.


புலன்கள் செயல் இழக்கத் தொடங்கும்.


உடம்புக்கு வேண்டிய சக்தியை உணவை உண்டு ஜீரணம் செய்ய முடியாமல், உடம்புக்குள் நேராக ஊசி குத்தி அனுப்ப வேண்டி இருக்கும். இப்படி புலன்கள் எல்லாம் தட்டுத் தடுமாறி தவிப்போம்.


அது மட்டும் அல்ல,


பொறிகளும் புலன்களும் தள்ளாடும் போது அறிவு அழியும். சொன்னது மறக்கும். அறிவை புதுப்பிக்க முடியாது. புது செய்திகள்  மண்டையில் ஏறாது. அறிவு கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும்.


வாயில் எச்சில் வழியும். அதை தடுத்த நிறுத்த முடியாது.


பரிதாபமாக இருக்கும்.


எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். எல்லோருக்கும் பாரமாக .இருப்போம். என்ன செய்வது தெரியாமல் தெரியாமல் திகைப்போம்.


யார் நம்மை புரிந்து கொள்ளுவார்கள் ? யார் நமக்கு உதவி செய்வார்கள் என்று தவிப்போம்.


அப்போது....


"அச்சப் படாதே நான் இருக்கிறேன்" என்று சொல்லும் அந்த இறைவன் இருக்கும் கோவில் உள்ள இடம் திருவையாறு.


அந்த திருவையாற்றில், கோவில் பிரகாரத்தில், மத்தளம் முழங்குகிறது. சங்கம் ஒலிக்கிறது. அந்த இசைக்கு ஏற்ப இளம் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள்.


கோவிலிக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல் இது என்ன கூத்து, பாட்டு, மோளம் என்று ?


எந்த கலையாக இருந்தாலும் அதை இறைவனுக்கு படைப்பது என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இசை, நடனம் என்று எந்த கலையாக இருந்தாலும் இறைவனை முன்னிறுத்தி அவனுக்காக செய்வது என்பது ஒரு வழக்கம்.


அப்படி பெண்கள் ஆடிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த கோவிலில் நந்தவனம் இருக்கிறது. அங்கே பல மரங்கள் இருக்கின்றன. அந்த மரங்களில் குரங்குகள் வசிக்கின்றன.


இந்த மேள சத்தத்தை கேட்டு, சில குரங்குகள் ஏதோ இடி இடிக்கிறது, மழை வருமோ என்று  மரத்தின் மேல் ஏறி மேகங்களை நோட்டம் விட்டனவாம்.


இப்போது பாடலை மீண்டும் பார்ப்போம்


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.



பொருள் 


புலனைந்தும் = ஐந்து புலன்களும்

பொறிகலங்கி = தத்தம் பொறிகளில் கலங்கி

நெறிமயங்கி = வழி தெரியாமல் மயங்கி

அறிவழிந்திட்டு = அறிவு அழிந்து

ஐம்மேலுந்தி = ஐ என்றால் வாந்தி. வாந்தி மேல் நோக்கி வந்து

அலமந்த போதாக = பரி தவிக்கும் போது

அஞ்சேலென்று = அஞ்சேல் என்று

அருள்செய்வான் = அருள் செய்வான்

அமருங்கோயில் = இருக்கும் கோவில்

வலம்வந்த = சுற்றி வரும்

மடவார்கள் = இளம் பெண்கள்

நடமாட = நடனம் ஆட

முழவதிர = முழவு அதிர

மழையென்றஞ்சிச் = மழை வருமோ என்று அஞ்சி

சிலமந்தி  = சில குரங்குகள்

அலமந்து = பயந்து

மரமேறி  = மரத்தின் மேல் ஏறி

முகில்பார்க்குந் = மேகத்தை பார்க்கும்

திருவையாறே.= திருவையாரே



சரி குரங்குகள் மரம் ஏறி முகில் பார்த்த வரை சரி. அது என்ன சில மந்தி என்று ஒரு வார்த்தையை திரு ஞான சம்மந்தர் போடுகிறார். எல்லா குரங்குகளும் தானே பார்த்திருக்க வேண்டும் ?


காரணம், அந்த ஊரிலேயே உள்ள குரங்குகளுக்குத் தெரியும் இது மத்தள ஓசை என்று. புதிதாக வந்த குரங்குகள் இன்னும் சரியாக பழகாததால், அவற்றிற்கு தெரியாது. எனவே சில மந்தி என்று கூறினார் என்று விளக்கம் சொல்லுவார்கள்.


அது போகட்டும்.


யோசித்துப் பாருங்கள். வயதாகும். புலன்களும் தள்ளாடும். அறிவு மயங்கும். யாருக்கும் நம்மை பிடிக்காமல் போகும் காலம் ஒன்று வரும்.


அப்போதும் நம்மை வெறுக்காமல் நம்மை ஏற்றுக் கொள்ளுவான் இறைவன் மட்டுமே.


தாய் கூட ஒரு காலம் வரை தான் பால் ஊட்டுவாள், சோறு ஊட்டுவாள்.


அப்புறம் "என்ன தடி மாடு மாதிரி வளந்திருக்க தன்ன தான போட்டு சாப்பிடு" என்று கூறி விடுவாள்.


அவன் தாயினும் சாலப் பரிந்து நமக்கு கடைசி காலம் வரை கூடவே இருப்பவன்.

எனவே தான் மாணிக்க வாசகப் பெருந்தகை கூறினார்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று.

தாய் கூட ஒரு கால கட்டத்தில் விட்டு விடுவாள். இறைவன் நம்மை விடவே மாட்டான்.

"உன் பற்று அன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே " என்று கண்ணீர் விட்டார் பட்டினத்தார்.

மேலே உள்ளது ஞான சம்பந்தரின் உயிர் உருக்கும் பாடல்.

ஒரு பாடலுக்கு, எனக்குத் தெரிந்தவரை இவ்வளவு. மொத்தமும் படித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் படித்து அனுபவிக்க

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....



https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_10.html

Sunday, October 7, 2018

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்


அது ஒரு அடர்த்த காடு. அதில் தனியாக நீங்கள் போய் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஐந்து பெரிய கரிய மதம் கொண்ட யானைகள் உங்களை வளைத்து விடுகிறது. என்ன செய்வீர்கள்?

எதிர்த்து போராட முடியுமா? ஒரு யானையோடு போரிடுவதே முடியாத காரியம். ஒருவேளை ஒரு யானையை எப்படியாவது சமாளித்து விடலாம் அல்லது அதனிடம் இருந்து தப்பி ஓடி விடலாம் என்றால் இங்கே ஐந்து யானைகள். ஐந்தும் மதம் கொண்ட பெரிய யானைகள்.

சிக்கினால் சட்னி தான்.

நீங்கள் ஒண்ணும் காட்டுக்குப் போகப் போவது இல்லை. யானையும் வரப்போவது இல்லை. ஒரு வேளை அப்படி ஒன்று நடந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.

ஏன் என்றால்....

நீங்கள் அப்படி ஒரு சிக்கலில் நாளும் இருக்கிறீர்கள். யானை பக்கத்திலேயே இருக்கிறது. உங்களுக்குத் தெரியவில்லை. அவை உங்களை தூக்கிப் போட்டு பந்தாடிக் கொண்டிருக்கிறது. அது தெரியாமல் இருக்கிறீர்கள்.

மாணிக்கவாசகர் சொல்லுகிறார்.

"என்னுடைய ஐந்து புலன்களும் பெரிய கரிய யானைகள் போல என்ன மிரட்டுகின்றன...அவற்றிற்கு அஞ்சி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்ப  எந்த யானை வந்து என்னை தூக்கிப் போட்டு மிதிக்குமோ தெரியாது...என்னை காப்பாற்று " என்று கதறுகிறார்.

ஆபத்து தெரிந்ததால் அலறுகிறார். நம்மக்குத் தெரியவில்லை....

பாடல்

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்கும் கறைக்கண்டனே.


பொருள்

அடற்கரி போல் = அடல் + கரி = மிக வலிமையான யானையைப் போல

ஐம் புலன்களுக் கஞ்சி = ஐந்து புலன்களுக்கு அஞ்சி

அழிந்த என்னை = நாளும் அழியும் என்னை

விடற்கரி யாய் = விட்டு விட முடியாதவனே

விட்டிடுதி கண் டாய் = என்னை விட்டு விடாதே

விழுத் தொண்டர்க்கல்லால் = விழுமிய தொண்டர்களுக்கு அல்லாமல்

தொடற்கரி யாய் = மற்றவர்கள் உன்னை நெருங்க முடியாது

சுடர் மாமணியே = சுடர் விடும் மணி போன்றவனே

சுடு தீச்சுழலக் = சுடுகின்ற தீ சுழல

கடற்கரி தாய் = கடல் + அரிதாய் = கடலில் அபூர்வமாக

எழு நஞ்சமு தாக்கும் = எழுந்த நஞ்சை அமுதாக்கியவனே

கறைக்கண்டனே = கண்டத்தில் (கழுத்தில்) கறை உள்ளவனே


இறைவன் விடுவதற்கு அறியதானவன். ஒரு முறை அவனை பிடித்து விட்டால், பின் அவனை விட முடியாது.

அப்படி அவனை கண்டு கொண்டவர்கள் வேறு எதுவும் வேண்டாம், உன்னை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் என்று சொல்லுகிறார்கள்.

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

உன்னுடைய பச்சை மேனியும், பவளம் போல் சிவந்த வாயும், தாமரை போல் சிவந்த கண்ணும்...இவற்றை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன். அந்த சுவர்க்கம் எல்லாம் வேண்டாம் என்கிறார் ஆழ்வார்.


குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.


என்பார் நாவுக்கரசர்.

குனித்த (வளைந்த) புருவம், கொவ்வை செவ்வாய், அதில் குமிழியிடும் சிறப்பும், குளிர்ந்த சடையும், சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறும், இனிமையாக எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால், மீண்டும் மீண்டும் இங்கு மனிதராக பிறக்கும் வரமே வேண்டும் என்கிறார்.

மணி வாசகர் சொல்கிறார்,  இறைவா உன்னை விட முடியாது என்று.

நாளும் ஐந்து புலன்களுக்கு அஞ்சி வாழ்கிறேன். என்னை இந்த பயத்தில் இருந்து காப்பாற்று என்கிறார்.

அவரால் காப்பாற்ற முடியுமா ?

முடியும் என்றும் சொல்கிறார்.

தேவர்களும் அசுரர்களும் பாற் கடலை கடைந்த போது கொதிக்கும் கொடுமையான நஞ்சு வந்தது. அந்த நஞ்சையே அமுதமாக எண்ணி உண்டு அதனால் கழுத்தில் கரிய கறை கொண்டவனே, அவ்வளவு பெரிய ஆபத்தையே நீ எளிதாக சமாளித்து விட்டாய். என்ன காப்பதா பெரிய பிரமாதம் உனக்கு என்று ஆண்டவனுக்கு ஐஸ் வைக்கிறார்.

இறைவனை எப்படி அடைவது என்றும் இடையில் சொல்லுகிறார். புத்தகங்களை படித்து , ஆராய்ந்து, தர்க்கம் பண்ணி புத்தியால் அவனை அடைய முடியாது. மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவன்.

சித்தமும் செல்லா சேயோன் காண்க

என்பார் மணிவாசகர். சித்தத்தால் அவனை அறிய முடியாது.


"விழுத் தொண்டர்க்கல்லால் தொடற்கரி யாய்" தொண்டு செய்வதன் மூலம், பக்தியின் மூலமே அவனை அடைய முடியும் என்கிறார்.

இறைவனைத் தவிர வேறு யாரும் நம்மை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்றும் சொல்லாமல் சொல்கிறார்.

நீத்தல் விண்ணப்பம் நூறு பாடலைகளை கொண்டது. மூல நூலை படித்துப் பாருங்கள். வேறு எதையும் படிக்கத் தோன்றாது.

http://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_7.html

Friday, October 5, 2018

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓர் அடியானும் உளன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓர் அடியானும் உளன் 


தினமும் நூற்றுக் கணக்கான பேர் கோவிலுக்குப் போகிறார்கள். வருகிறார்கள்.

கோவிலில் என்ன செய்கிறார்கள் ?

ஆண்டவா, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று வேண்டுவார்கள்.

அல்லது

என்னை இந்த சோதனையில் இருந்து காப்பாத்து, எனக்கு ஏன் இந்த சோதனை என்று அவனிடம் முறை இடுவார்கள்.

அல்லது

இன்னும் சில பேர் சொல்லக் கூடும்,  "நான் அப்படி எல்லாம் இல்லை...நான் கோவிலுக்குப் போனால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு வருவேன்...எவ்வளவோ எனக்கு கிடைத்து இருக்கிறது. அனைத்துக்கும் நன்றி சொல்வேன்" என்று பெருமிதமாகச் சொல்வார்கள்.

எல்லாம் சுயநலம் தானே ?

நம்மாழ்வார் கேட்கிறார், யாராவது ஒருத்தர் , உலகில் எவ்வளவோ பேர் துன்பப்  படுகிறார்கள். அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை பண்ணியது உண்டா என்று ?

நம் கவலைதான் நமக்கு பெரிதாக தெரிகிறது. நம்மை விட ஆயிரம் மடங்கு கவலை உள்ளவர்கள் எவ்வளவோ பேர் இருப்பார்கள், சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், உயிருக்கு போராடிக் கொண்டு, நெருங்கிய உறவுகள் மருத்துவமனையில் நோயோடு துன்பப் பட்டுக் கொண்டு, நாளை என்ன ஆகப் போகிறதோ என்ற பயத்தோடு எவ்வளவு பேர் எவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்கள்.  அவர்களுக்காக நாம் ஒரு கணம் பரிந்து இறைவனிடம்  வேண்டுகிறோமா ? நாம் மற்றவர்களுக்கு இரங்கா விட்டால், இறைவன் நம் மேல் எப்படி இரக்கம் கொள்ளுவான் ?

ஆழ்வார், திருவண்பரிசாரம் என்ற ஊரில் இருக்கிறார். அந்த ஊரில் நிறைய பேர் கோவிலுக்கு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். ஒருத்தராவது பெருமாளிடம் போய் "பெருமாளே, உம்மை காண வேண்டும், உம்மோடு இருக்க வேண்டும்   என்று துடித்துக் கொண்டு ஒருவன் வெளியே இருக்கிறான். அவனுக்கு அருள் செய்யும் " என்று எனக்காக வேண்டுவார் யாரும் இல்லையே. அவர்கள் பாட்டுக்கு வருகிறார்கள், போகிறார்கள். அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகிறார்கள் என்று வருந்துகிறார்.

பாடல்

வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  

பொருள்


வருவார் = (கோவிலுக்கு) வருகிறார்கள்

செல்வார் = செல்கிறார்கள்

வண்பரிசாரத்து = வண்பரிசாரம் என்ற திருத்தலத்தில்

இருந்த = எழுந்து அருளி இருக்கும்

என் = என்னுடைய

திருவாழ்மார்வற்கு = திருமகள் இதயத்தில் வசிக்கும் திருமாலுக்கு

என்திறம் = என்னுடைய  நிலைமையை

சொல்லார் = சொல்ல மாட்டார்கள். சொல்லாமல் பின் அவர்கள்

செய்வதுஎன் = வேறு என்னதான் செகிறார்கள்

உருவார் சக்கரம் = அழகிய உருவான சக்கரம்

சங்கு = சங்கு

சுமந்து = கைகளில் ஏந்தி

இங்கு உம்மோடு = இங்கு உம்மோடு

ஒருபாடுஉழல்வான் = இருக்க அலை பாயும், தவிக்கும்

ஓர்அடியானும் = ஒரு அடியவன் ஒருவன்

உளன் என்றே = இருக்கிறான் என்று

எனக்காக அந்தப் பெருமாளிடம் சொல்லுங்கள் என்று சொல்லுகிறார்.

சங்கதி அது அல்ல.

அவருக்கு இறைவனிடம் போக நாம் யார் இடையில். அவர் சொல்ல வருவது என்ன என்றால்,

முதலாவது, உலகில் எவ்வளவோ பேர் மிக துன்பப் படுகிறார்கள். அவர் களுக்காக பெருமாளிடம்  வேண்டிக் கொள்ளுங்கள்

இரண்டாவது, மற்றவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள்

மூன்றாவது, எப்போதும் சுயநலமாக எனக்கு எனக்கு என்று இருக்காதீர்கள்.

நான்காவது, மற்றவர்கள் துன்பத்தைப் பார்க்கும் போது , நம் துன்பம் பெரிது அல்ல என்று தெரியும். அப்படி தெரியும் போது , அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றும். அது மட்டும் அல்ல, நமக்கு இவ்வளவு கிடைத்தே, இதெல்லாம் கிடைக்காமல் எவ்வளவு பேர் துன்பப் படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வரட்டும் என்று நெஞ்சார நினைக்கத் தோன்றும்.

ஐந்தாவது, எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவனை சென்று அடையும் போது , நாம் மட்டும் போனால் போதாது. மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு போக நினைக்க  வேண்டும். இராமானுஜர் அப்படித்தான் நினைத்தார். எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

"சேர வாரும் ஜெகத்தீரே" என்று உலகில் உள்ள அனைவரையும் அழைத்தார் தாயுமானவர்.

 "தலைவர் அன்னவருக்கே சரண் நாங்களே" என்றது எல்லோரையும் அவன் திருவடிகளில்  சரணம் அடைய வைத்தார் கம்ப நாட்டாழவார்.

அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது தனியாகப் போகாதீர்கள். யாரையாவது கூட அழைத்துக் கொண்டு போங்கள்.

உங்களுக்காக மட்டும் பிரார்த்தனை பண்ணாதீர்கள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணுங்கள்.

அது ஆழ்வார் காட்டிய நெறி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post.html

Tuesday, September 25, 2018

திருக்குறள் - சிரிப்பும் மகிழ்ச்சியும்

திருக்குறள் - சிரிப்பும் மகிழ்ச்சியும் 


ஒரு நாளில் எத்தனை நிமிடம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் மகம் மலர்ந்து சிரிக்கிறீர்கள்? சிரிக்காவிட்டாலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள்?

ஏன் நாள் முழுவதும் சந்தோஷமாக இல்லை ? எப்போதும் சிரித்த முகத்துடன் ஏன் இருக்க முடியவில்லை? நாம் மனதுக்குள் மகிழ்வதை யார் தடுக்க முடியும்? இருந்தும் நாம் எப்போதாவது சந்தோஷமாக இருக்கிறோம். பெரும்பாலும் சிரித்த முகத்துடன் இருப்பது இல்லை.

உங்களை விடுங்கள், உங்களை சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களில் எத்தனை பேர் சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்? எத்தனை பேர் மகிழ்ச்சியை மனதில் தேக்கி இன்பமாக இருக்கிறார்கள். ஏறக்குறைய எல்லோருமே உங்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

எப்போதாவது மகிழ்வது, எப்போதாவது சிரிப்பது என்று.

இந்த மகிழ்ச்சியையும், சிரிப்பையும் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ளும் பகைவன் யார் தெரியுமா ?

வேறு யாரும் அல்ல, நம் கோபம் தான்.

வள்ளுவர் சொல்கிறார்

பாடல்

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற

பொருள்

நகையும் = முகத்தில் தோன்றும் புன்னகையும்

உவகையும் = மனதில் தோன்றும் சந்தோஷத்தையும்

கொல்லும் = கொல்லும்

சினத்தின் = சினத்தை விட

பகையும் = பகை

உளவோ பிற = வேறு ஏதாவது இருக்கிறதா ? (இல்லை என்பது பொருள்)

கோபம்தான் நம் புன்னகையையும், சந்தோஷத்தையும் கொல்கிறது.

அப்படியா, நான் அப்படி ஒன்றும் யார் மேலும் கோபப்  படுவதே இல்லையே. என் மனைவி/கணவனை கேட்டுப் பாருங்கள். சத்தம் போட்டு ஒரு வார்த்தை பேசுவது கிடையாது. இருந்தும் நான் சந்தோஷமாக இல்லையே. என்று சிலர் சொல்லலாம்.

கோபம் என்றால் தாம் தூம் என்று குதிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

சாலையில் போகிறோம், குண்டும் குழியுமாக இருக்கிறது. அரசாங்கத்தின் மேல் கோபம் வருகிறது.

சாலை ஒழுங்கை கடை பிடிக்காமல் குறுக்கும் நெடுக்கும் போகும் ஆட்டோக்காரர்களை  கண்டால் கடுப்பு வருகிறது.

சரியாக படிக்காத பிள்ளை, புரிந்து கொள்ளாத கணவன் / மனைவி, ஆட்டிப் படைக்கும்  மாமியார், ஊழல் நிறைந்த சமுதாயம், நமக்கு வர வேண்டிய வாய்ப்புகளை  தட்டிப் பறிக்கும் உடன் வேலை செய்பவர்கள், துரோகம், நிராகரிப்பு என்று பலப் பல காரணங்களுக்காக நாம் கோப படுகிறோம்.

பிள்ளைகள் சொன்னால் கேக்காது.

மாமியாரிடம் சொல்லவும் முடியாது.

கணவனுக்கு சொன்னால் பிடிக்காது.

மனைவியிடம் சொன்னால் அதில் ஒரு குற்றம் கண்டு பிடிப்பாள்.

அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினால், பிடி வாரண்டு வரும்.

கோபத்தை மனதுக்குள்ளேயே போட்டு குமைகிறோம்.

சிந்தியுங்கள்.

கோபம் என்றால் சத்தம் போடுவது, சண்டை போடுவது மட்டும் அல்ல. கையாலாகாவிட்டாலும்  கோபம் வரும்.

அந்த கோபம் தான், நம் மகிழ்ச்சியை, புன்னகையை நம்மிடம் இருந்து பறித்துப் போட்டு விடுகிறது.

கோபத்தை விடுங்கள். மனம் அமைதியாகும். அமைதியான மனதில் இன்பம் , ஆனந்தம், புன்னகை எல்லாம் பிறக்கும்.

பிறக்கட்டும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_25.html



Friday, September 21, 2018

அறப்பளீசுரம் - எது அழகு

அறப்பளீசுரம் - எது அழகு 


ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு,  தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா?  பொருள் இல்லாமல் ஏழையாக இருப்பதில் என்ன பெருமை இருக்க முடியும்? கை கால் போய் முடமாக இருப்பது ஒரு அழகா ? ஒரு செயலை செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்தால் அது அழகா ?


அழகுதான். அதிலும் ஒரு அழகு இருக்கு என்கிறது அறப்பளீசுரம்.


யார் செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது அழகு.


வகுப்பில், ஆசிரியர் நம்மைத் திட்டுகிறார்..."மண்டு மண்டு ...எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தேன்...இன்னும் உன் மர மண்டையில் ஏற வில்லையா...சரி இப்படி படி " என்று திட்டி சொல்லித் தருகிறார். வீட்டில் பெற்றோர் கண்டிக்கிறார்கள். இவர்களிடம் திட்டு வாங்குவது அவமானமா? இல்லை. பெரியவர்கள் பாராட்டினாலும், திட்டினாலும் அது ஒரு அழகுதான்.


கட்டிய மனைவி அன்போடு ஆசையோடு வந்து அணைத்தால் அது அசிங்கமா? சுகம்தானே ?


தன்னிடம் இருந்த செல்வங்களை மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கி ஒருவன் ஏழையாக போனால் அது பெருமை இல்லையா?


நாட்டை காக்க போராடி ஒருவன் கையையோ காலையோ இழந்து விட்டால், அவனை முடவன் என்றா ஊர் கேலி செய்யும்? அவனை பெருமையோடு பார்க்கும் அல்லவா?


பெரிய யானை மேல் ஏறும் போது தவறி விழுந்தால் யாரும் சிரிக்க மாட்டார்கள். அதுவே ஒரு நாயின் மேல் ஏற முயன்று தவறி விழுந்தால், ஊரே கை கொட்டி சிரிக்கும் அல்லவா ?


செயலிலோ, செயலின் வெளிப்பாட்டிலோ அசிங்கம் இல்லை. யார் , எதற்காக செய்கிறார்கள் என்பதில் இருக்கிறது உயர்வும் தாழ்வும்.


தோல்வி ஒரு பெரிய விஷயம் இல்லை. இதில் தோல்வி அடைந்தோம் என்பதில் இருக்கிறது அது உயர்வா தாழ்வா என்பது.


பாடல்



வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
     மேன்மையோர் செய்யில் அழகாம்!
  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
     விழைமங்கை செய்யில் அழகாம்!

தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
     சாரிலோ பேர ழகதாம்!
  சரீரத்தில் ஓர்ஊனம் மானம்எது ஆகிலும்
     சமர்செய்து வரில்அ ழகதாம்?

நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
     நாளும்அது ஓர ழகதாம்!
  நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
     நகைசெய்தழ கன்றென் பர்காண்!

அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

பொருள்

வெகுமானம் ஆகிலும்  = பாராட்டு ஆனாலும்

அவமானம் ஆகிலும் = அவமானம் ஆனாலும்

மேன்மையோர் செய்யில் அழகாம்! = மேன்மை உடைய பெரியவர்கள் செய்தால் , அல்லது தந்தால் அது அழகு


விரகமே ஆகிலும்  = காம வயப்பட்டாலும்

சரசமே ஆகிலும் = சரசம் செய்ய வந்தாலும்

விழைமங்கை செய்யில் அழகாம்! = நமக்கு உரிய பெண் (மனைவி) செய்தால் அது அழகு.

தகுதாழ்வு = தகுதியான தாழ்வு (என்ன ஒரு வார்த்தை)

வாழ்வு = வாழக்கை

வெகு தருமங்க ளைச்செய்து = பெரிய தருமங்களைச் செய்து

சாரிலோ  = வந்தாலோ

பேர ழகதாம்! = அந்த ஏழ்மையும் ஒரு பெரிய அழகு

சரீரத்தில் ஓர்ஊனம் = உடம்பில் ஒரு ஊனம்

மானம் = அவமானம்

எது ஆகிலும் = எது என்றாலும்

சமர் செய்து வரில் அழகதாம்? = நாட்டை காக்க எதிரியோடு போராடி பெற்றால் அதுவும் ஒரு அழகுதான்

நகம் மேவு = மலை போன்ற

மதகரியில் = மதம் கொண்ட யானையின் மேல்

ஏறினும் தவறினும் = ஏறினாலும், தவறி ஏறும் போது தவறி விழுந்தாலும்

நாளும்அது ஓர ழகதாம்! = அதுவும் ஒரு அழகுதான்

நாய்மீதில் = நாயின் மேல்

ஏறினும் = ஏறினாலும்

வீழினும் = வீழ்ந்தாலும்

கண்டபேர்  = காண்போர்

நகைசெய்தழ கன்றென் பர்காண்! = கை கொட்டிச் சிரிப்பார்கள்

அகம்ஆயும் = தன்னை ஆராய்ச்சி செய்யும்

 நற்றவர்க் கருள் புரியும் = நல்லவர்களுக்கு அருள் புரியும்

ஐயனே! = ஐயனே

ஆதியே!  = மூலப் பொருளே

அருமை மதவேள் = அருமையான மதவேள் (அரசன்)

அனுதினமும் = தினமும்

மனதில்நினை = மனதில் வழிபடும்

தருசதுர கிரிவளர் = தருகின்ற சதுர கிரி என்ற மலையில் உறையும்

அறப்பளீ சுரதே வனே! = அறப்பளீசுர தேவனே

சின்ன காரியத்தை எடுத்து, அதில் வெற்றி பெற்றாலும் ஊரார் நகைப்பார்கள். பெரிய காரியத்தில் தோல்வி அடைந்தாலும் ஊர் பாராட்டும்.


விளைவுகள் மட்டுமே உயர்வு தாழ்வை நிர்ணயம் செய்வது இல்லை. யார் செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உயர்வும் தாழ்வும் அமைகிறது.


இந்தப் பட்டியல் ஒரு சில உதாரணம் மட்டுமே. அது சொல்ல வரும் கருத்தை மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும்.



http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_21.html









Thursday, September 20, 2018

கம்ப இராமாயணம் - விளையாட்டு உடையார்

கம்ப இராமாயணம் - விளையாட்டு உடையார் 


சில பாடல்களை ஒவ்வொரு தரம் படிக்கும் போதும் புது புது அர்த்தம் தோன்றிக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பாடல் கம்ப இராமாயணத்தின் முதல் பாடல். கடவுள் வணக்கம்.

பாடல்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

பொருள்

உலகம் யாவையும் = அனைத்து உலகங்களையும்

தாம் = தான்

உளவாக்கலும் = உள்ளத்தால் ஆக்கி

நிலைபெறுத்தலும் = அவற்றை காத்து

நீக்கலும் = பின் அவற்றை நீக்கி (அழித்து)

நீங்கலா = இடை விடாத

அலகு இலா  = அளவற்ற

விளையாட்டு உடையார் = விளையாட்டை கொண்டவர்

அவர் தலைவர்; = அவர்தான் தலைவர்

அன்னவர்க்கே = அவருக்கே

சரண் நாங்களே. = நாங்கள் சரண் அடைந்தோம்


கோபம் எப்படி வருகிறது ? நமக்கு தேவையான ஒன்றை யாராவது அல்லது ஏதாவது  தடை செய்தால், நமக்கு அதன் மேல் அல்லது அவர் மேல் கோபம் வருகிறது.

அப்பாவிடம் பைக் வேண்டும் என்று கேட்டு அவர் வாங்கித் தர மறுத்தால், அவர் மேல் கோபம் வருகிறது.

நகை வேண்டும், புடவை வேண்டும், ஒரு நல்ல வீடு என்று கேட்டு கணவன் வாங்கித் தர மறுத்தால் கணவன் மேல் கோபம் வருகிறது.

பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று நாம் ஆசைப் படும்போது மேலதிகாரி தரவில்லை என்றால் , அவர் மேல் கோபம் வருகிறது.

எனவே, அனைத்து கோபத்துக்கும் காரணம் ஆசை. ஆசை மறுக்கப் படும்போது கோபம் வருகிறது.

அப்படி என்றால் கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

ஆசைப் படக் கூடாது. சரி தானே?

ஆம். சரிதான்..ஆனால் ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? ஆசைப் பட வேண்டும், அதற்காக முயற்சி செய்ய வேண்டும், உழைக்க வேண்டும்....அது தானே வாழ்க்கை. ஆசை அற்ற வாழ்க்கை உப்பு சப்பு அற்ற ஒரு வறண்ட வாழ்க்கையாக அல்லவா இருக்கும் ?

ஆசைப் பட வேண்டும். ஆனால், அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சி. வேறொன்றை தேடுவோம் என்று ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆசைப் பட்டது கிடைக்கவில்லை என்றால் மனம் ஒடிந்து, விரக்தி அடைந்து , சோர்ந்து இருந்து விடக் கூடாது. அது பலவிதமான மன நோய்க்கு வழி வகுக்கும்.

கம்பர் சொல்கிறார் "அலகிலா விளையாட்டு உடையான்".

ஆண்டவனுக்கு எல்லாம் விளையாட்டுதான். ஆக்குதல், காத்தல், அழித்தல் எல்லாம் ஒரு விளையாட்டுதான்.

ஆசைப் படுகிறீர்கள். கிடைக்கவில்லை, சந்தோஷம்.

கிடைத்தது. சநதோஷம்.

கிடைத்தது காணாமல் போய் விட்டது. சந்தோஷம்

விளையாட்டு என்றால் என்ன ? உண்மை போல இருக்கும். பந்து போடுவதும், அடிப்பதும், ஓடுவதும் எல்லாம் ஏதோ பெரிய முக்கியமான வேலை போல இருக்கும். ஒன்றும் கிடையாது. வெற்றி தோல்வி இரண்டையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்டத்தில் தோற்ற யாரும், உலகே இருண்டு விட்டது, முடிந்து விட்டது என்று இருப்பது இல்லை.  இன்னும் கொஞ்சம் பயிற்சி  எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் விளையாடுவார்கள்.

அது போல, வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோல்வி வந்தால், தூசியை தட்டி விடுவது மாதிரி தட்டி விட்டு விட்டு நாளை மீண்டும்  களத்துக்கு வந்து விட வேண்டும்.

எல்லாமே விளையாட்டுதான் இங்கே.


உறவுகள், வேலை, நட்பு, சுற்றம், வெற்றி, தோல்வி, சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, எல்லாமே விளையாட்டுதான்.

சந்தோஷமாக விளையாடுங்கள். இன்று தோல்வியா? பரவாயில்லை.  நாளை இன்னும் சிறப்பாக விளையாடலாம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து செய்யும் வேலைகளை விளையாட்டாக செய்ய முடியும் என்றால், நாம் செய்யும் வேலைகள் என்ன அதைவிட பெரியதா?

Seriousness is a sickness. 

கடு சிடு என்று முகத்தை வைத்து கொண்டு எப்போதும் சீரியசாக இருக்காதீர்கள். தளர விடுங்கள். மனமும், உடலும் தளர்ந்து இருக்கட்டும்.