Friday, December 20, 2019

கம்ப இராமாயணம் - தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்

கம்ப இராமாயணம் - தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்


இராவணன் இறந்து கிடக்கிறான்.  அவனை அருகில் சென்று பார்க்கிறான் இராமன். அவன் முதுகில் புண் இருக்கிறது. "அட சீ இவன் போரில் புறமுதுகு கண்டவனா " என்று இராமன் இகழ்ந்து நோக்குகிறான்.

அப்போது அங்கு வந்த வீடணன் சொல்வான். "இராவணன் முதுகில் உள்ள தழும்புகள், அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அந்த யானைகள் இராவணன் மார்பில் தங்கள் தந்தத்தால் குத்தி அது முதுகின் வழியாக வந்த புண்ணே அன்றி இராவணன் ஒரு போதும் புறமுதுகு கண்டவன் அல்ல" என்று விளக்குகிறான்.

அவன் மேலும் சொல்லுவான்,

"இராமா, ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீரியனும், வாலியும் முன்பு இராவணனை ரொம்ப முயற்சி செய்து வென்றார்கள். இராவணன் தோற்றதற்கு காரணம் அவன் வீரம் இன்மை அன்று. இராவணன் பெற்ற சாபங்கள் அவனை தோல்வி அடைய வைத்தன. இப்போதும், தாயினும் தொழத் தக்க சீதை மேல் வைத்த காதல் என்ற நோயும், உன் சினமும் அவனை வீழ்த்தியதே அன்றி அவன் கோழைத் தனத்தால் அவன் விழவில்லை " என்று.

பாடல்



'ஆயிரம் தோளினாலும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனிவும் அல்லால், வெல்வரோ  நுவலற்பாலார்?


பொருள்


'ஆயிரம் தோளினாலும் = ஆயிரம் தோள்களைக் கொண்ட கார்த்த வீரியனும்

 வாலியும் = வாலியும்

அரிதின் = அரிதாக

ஐய! = இராமா

மேயின வென்றி = பெற்ற வெற்றிகள்

 விண்ணோர்  = தேவர்கள்

சாபத்தின் விளைந்த = சாபத்தால் விளைந்தவை

மெய்ம்மை; = உண்மை என்ன என்றால்

தாயினும் தொழத் தக்காள்மேல் = தாயை விட தொழுது வணங்கத் தக்க சீதை மேல்

தங்கிய காதல் = தங்கிய காதல்

தன்மை = தன்மை

நோயும் = நோயும்

நின் முனிவும் அல்லால் = உன் கோபமும் அல்லாது

வெல்வரோ = வெல்ல முடியுமா (இராவணனை)

 நுவலற்பாலார்? = யார் சொல்ல முடியும்

எவ்வளவு வீரம் இருந்தாலும், அறம் நீங்கி வாழ்ந்தால் , அந்த அறமே அழிக்கும்  என்பது நீதி.

நம் இலக்கியங்கள் அறம் அறம் என்று ஓலமிடுகின்றன.

இலக்கியங்களை படிப்பதன் நோக்கம் அவை கூறும் அறங்களை கடை பிடித்து வாழ.

இலக்கியங்கள் நம்மை நல் வழிப் படுத்த வேண்டும்.

இல்லை என்றால் அவை இலக்கியங்கள் அல்ல.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_20.html

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7


நூற்கள் மூன்று வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவது "முதல் நூல்".

முதல் நூல் என்றால் என்ன?

அதற்கு விடை காண்பதற்கு முன்னால், எதற்காக பொதுவாக நூல் எழுதுகிறார்கள் என்று யோசிப்போம்.

தன் அறிவை காட்டிக் கொள்ள, பணம் சம்பாதிக்க, புகழ் அடைய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆசிரியன் நூலை எழுதுகிறான் என்றால் அவன் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவன் படித்த புத்தகங்கள், அவனைப் பாதித்த நிகழ்வுகள் இவற்றால் உந்தப்பட்டு ஒரு நூலை எழுதுகிறான்.

இவை எதனாலும் பாதிக்கப் படாமல், தான் செய்த வினைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அதன் பின் தோன்றிய தெள்ளிய அறிவில் இருந்து எழுதுவது முதல் நூல் எனப்படும்.


பாடல்

அவற்றுள் ,வினையி னீங்கி விளங்கிய வறிவின்முனைவன் கண்டது முதனூ லாகும்


பொருள்


அவற்றுள் , = அந்த மூன்று வகையான நூல்களுள்

வினையி னீங்கி = தான் செய்த வினைகளில் இருந்து நீங்கி, விடுபட்டு

விளங்கிய வறிவின் = விளங்கிய அறிவின்

முனைவன் = முயற்சி உடையவன்

கண்டது முதனூ லாகும் = கண்டது முதல் நூலாகும்

நாம்    விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாம் செய்த வினைகள் நம்மை பற்றி தொடரும்.

அந்த வினைப் பயன்களில் இருந்து விடுபடுவது என்பது எளிய காரியம் அல்ல.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " என்பார் மணிவாசகப் பெருந்தகை.

வினை ஓய்ந்த பின் பிறக்கும் நூல், முதல் நூல்.

இதற்கு இலக்கணம் செய்த பெரியவர்கள்  சொல்லுகிறார்கள், முதல் நூல் என்பது  இறைவன் , உயிர்களுக்கு அளித்த நூல் என்று.

இறைவனுக்கு ஒப்பானவர்கள் எழுதிய நூல் என்று கொள்ளலாம்.

எனவே தான்,  திருக்குறள் செய்த வள்ளுவரை "தெய்வப் புலவர்" என்கிறார்.

பெரிய புராணம் செய்த சேக்கிழார் பெருமானை "தெய்வச் சேக்கிழார்" என்கிறோம்.

அந்தக் கால நூல்களை பார்த்தால் , அதில் "தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச் செய்த " என்று போட்டிருக்கும்.

அவர்களின் அருள் அந்த நூல் மூலம் வெளிப்பட்டது.

நீங்களும் நானும் எழுதினால் என்ன போடலாம் ?

"...பொருளிச் செய்த " என்று வேண்டுமானால் போடலாம்.

மற்றவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று யார் நூல் எழுதுகிறார்கள்?

திருக்குறள், கீதை, பெரிய புராணம், தேவாரம், பிரபந்தம் போன்றவை முதல் நூல்கள்.

அவை வெளிப்பட்ட நூல்கள்.  எந்த ஒரு காரணம் பற்றியும் வந்தவை அல்ல.

நாம் செய்த புண்ணியம், நம் தாய் மொழியில் பல முதல் நூல்கள் உள்ளன.

இது வரை படிக்க நேரம் இல்லாவிட்டாலும், இனியாவது நேரம் ஒதுக்கிப் படிக்க முயல்வோம்.

interestingtamilpoems.blogspot.com/2019/12/6_20.html


Thursday, December 19, 2019

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

விவேக சிந்தாமணி -  மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்


நாம் எப்படிப்பட்ட ஆள் ? நம் அறிவின் வீச்சு என்ன? ஆழம் என்ன? நம் திறமை என்ன ? நம் ஆளுமை (personality ) என்ன ?

இதெல்லாம் நாம் எப்படி அறிந்து கொள்கிறோம். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.

சொல்பவர் யார் என்று பார்க வேண்டும். நம்மை விட அறிவில் தாழ்ந்தவன் நம்மை அதி புத்திசாலி என்றுதான் சொல்லுவான். அவன் சொன்னதால், அது சரி என்று ஆகி விடுமா?

ஒரு காட்டில் ஒரு கழுதை இருந்தது. அது இரவு நேரங்களில் பெரிய குரலில் கனைக்கும். அதே காட்டில் ஒரு பேய் வசித்து வந்தது. அதற்கும் பொழுது போக வேண்டாமா? அப்பப்ப இந்த கழுதை கத்துவதை கேட்க வரும். அப்படி வந்த ஒரு நாளில், அந்த பேய் சொன்னது "கழுதையே , உன் குரல் தான் எவ்வளவு இனிமையாக இருக்கிறது...நீ நன்றாகக் பாடுகிறாய் " என்றது. அதைக் கேட்ட கழுதைக்கு ஒரு மகிழ்ச்சி. நம்மை விட சிறந்த பாடகர் இந்த வையகத்தில் கிடையாது என்று எண்ணி மகிழ்ந்தது.

கழுதைக்கு பேய் கொடுத்த பட்டம் போல, நமக்கும் பலர் பட்டம் தரலாம், புகழ்ந்து சொல்லலாம்...அதை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு  பெருமை  கொள்ளக் கூடாது.  உண்மையிலேயே நம்மைவிட உயர்ந்தவர்கள் நம்மை பாராட்டும் படி வாழ வேண்டும்.

பாடல்



கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

பொருள்


கழுதை = கழுதை

கா எனக் கண்டு = "கா" என்று கத்திய பாடியதைக் கண்டு

நின்றாடிய அலகை = நின்று ஆடிய பேய்

தொழுது = அந்தக் கழுதியை வணங்கி

மீண்டும் = மீண்டும்

அக்கழுதையைத் துதித்திட = அந்தக் கழுதையை போற்றிட

அதுதான் = அந்தக் கழுதையும்

பழுதிலா = குற்றமில்லாத

 நமக்கு = நமக்கு

ஆர் நிகர் மெனப் = யார் நிகர் ஆவார்கள் என்று

 பகர்தல் = சொல்லுவது

முழுது மூடரை  = முழு மூடரை

மூடர் கொண்டாடிய முறைபோல் = இன்னொரு மடையன் பெருமையாக சொன்னது போல

"என் மகனைப் போல உண்டா ?"

"என் மகள் பெரிய திறமைசாலி "

"என் கணவர் சகலகலா வல்லவர் "

"என் மனைவி பேரழகி "

இவற்றை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு திரியக் கூடாது. அவை எல்லாம் அன்பினால் சொல்லப்படுபவை, பலன் கருதி சொல்லப் படுபவை.

பெரியோரின் பாராட்டுதான் முக்கியம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_19.html


Wednesday, December 18, 2019

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6



ஒரு உணவு விடுதிக்குப் போகிறோம். அது சைவ விடுதியா, அசைவ விடுதியா, வடநாட்டு உணவகமா/தென் நாட்டு உணவகமா/ சைனீஸ் உணவகமா என்று தெரிந்தால், அங்கே என்ன கிடைக்கும் என்று நமக்குத் தெரியும் அல்லவா? ஒன்றும் தெரியாமல் உள்ளே போய்விட்டு, "ஐயோ, இது அந்த மாதிரி உணவகமா? " என்று திரும்பி வருவதை தவிர்க்கலாம்.

அது போல,

பலவிதமான நூல்கள் உள்ளன. பாடப் புத்தகம், நாவல், தின, வார, மாத இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழி, அறிவியல், புவியியல், கணிதம், விளையாட்டு, மதம் என்று அனைத்து துறைகளிலும் நூல்கள் இருக்கின்றன.

இந்த நூல்களை எப்படி வகைப் படுத்துவது ? ஒரு நூல் எந்த வகை நூல் என்று அறிந்து கொண்டால், அதன் தன்மை நமக்கு புரிபடும்.

நூலின் வகை தெரிந்தால், அதில் என்ன இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள அத்தனை நூல்களையும் மூன்று விதமாக பிரிக்கலாம் அல்லது மூன்று பிரிவுக்குள் அடக்கி விடலாம் என்கிறது நன்னூல்.

அவையாவன, "மூல நூல், வழி நூல், சார்பு நூல்" என்பதாகும்


பாடல்

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் . (சூத்திரம் 5)


பொருள்


முதல் = முதல் நூல்

வழி = வழி நூல்

சார் = சார்பு நூல்

பென  = என்று

நூன்மூன் றாகும்  = நூல்கள் மூன்று வகைப்படும்

சரி. அது என்ன முதல், வழி, சார்பு ?

மேலும் பார்க்க இருக்கிறோம்.


(என் குறிப்பு - தமிழ் இலக்கணம் மிக சுவையானது. ஒரு இலக்கியம் படிப்பது போல  படிக்கலாம். இருந்தும், பலருக்கு இது சலிப்பைத் தரலாம். உங்கள் எண்ணம்  என்ன என்று comment பகுதியில் பகிர்ந்து கொண்டால் மேலும் எழுதுவது பற்றி முடிவு எடுக்க  எளிதாக இருக்கும். நன்றி)

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/6.html





Tuesday, December 17, 2019

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?


இது ஒரு ஆச்சரியமான விடயம் தான். இவ்வளவு சுயநலம், பொறாமை, போட்டி, கோபம், வன்மம், பழி வாங்கும் உணர்ச்சிகள், சாதி, மத, மொழி, நிற வேறுபாடுகள் எல்லாம் நிறைந்த இந்த உலகம் ஏன் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறது ?  எது இந்த உலகை கட்டிக் காக்கிறது?

இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு  பதில் தருகிறார் வள்ளுவப் பேராசான்.

உலகில் தீயவை எவ்வளவு மலிந்தாலும், சில பண்புடையவர்கள் இருப்பதால், அவர்களை நோக்கி இந்த உலகம் இருப்பதால், அது இன்னும் அழியாமல் இருக்கிறது என்கிறார்.

பாடல்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன்


பொருள்


பண்புடையார்ப்  = நல்ல பண்பு உள்ளவர்கள்

பட்டுண்டு = அமைந்து உள்ளது

உலகம் = இந்த உலகம்

அதுஇன்றேல் = அது இல்லாவிட்டால்

மண்புக்கு = மண்ணுக்குள் புகுந்து

மாய்வது = மாய்ந்து போவது

மன் = நிலைத்து நிற்கும் உயிர்கள்

ஒரு சமுதாயத்தில் எவ்வளவு அயோக்கியர்கள் இருந்தாலும், இந்த உலகம்  அந்த அயோக்கியர்களை விடுத்து நல்லவர்களையே   நோக்கி இருப்பதால் அது இன்னும்  அழியாமல் இருக்கிறது.


ஒரு அரசியல்வாதியோ, ஒரு தொழில் அதிபரோ எவ்வளவோ அக்கிரமங்கள் செய்து பணம், புகழ், அதிகாரம் சேர்த்தாலும், மக்கள் அவர்களை தங்கள் முன்னோடிகளாகக் கொள்வது இல்லை.

பணம், செல்வாக்கு, அதிகாரம் இல்லாவிட்டாலும், நல்லவர்களையே போற்றுகிறது. அவர்களையே தங்கள் வழி காட்டுதலாகக் கொள்கிறது.

உதாரணம்,

இராவணன் எவ்வளவோ பெரிய வலிமை உள்ளவன் தான். பக்தன், வீரன், செல்வந்தன், எல்லாம் தான். இராமன் படாத பாடு பட்டான். காடு மேடு எல்லாம்  மனைவியை பறி கொடுத்து அலைந்தான்.

யாராவது, "நான் இராவணனைப் போல வாழ ஆசைப்படுகிறேன்" என்று சொல்வார்களா?  இராமனை உலகம் போற்றுகிறது. அதனால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.

இரண்டாவது, வள்ளுவர் பண்புடையார் பற்றித் தான் கூறுகிறார். அறிவுடையார் பட்டுண்டு உலகம் என்று கூறவில்லை. அறிவை எளிதாக பெற்று விடலாம். பண்பு என்பது கடினமான விடயம்.

மனித மனம் தீயவை நோக்கி எளிதில் செல்லக் கூடியது. அதை மாற்றி நல் வழியில் செலுத்துவது என்பது கடினமான காரியம். எனவே தான் பண்புடையாரை உயர்த்திச் சொல்கிறார் வள்ளுவர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லவர்கள், பெரியவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள் மிகக் குறைந்த பேரே இருக்கிறார்கள், இருந்தார்கள்.  அவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கலாம். அதை பெரிது படுத்தி, அவர்களின் மேன்மையை குறைத்து விட்டால், பின் வருங்கால சந்ததிக்கு யாரை உதாரணமாக கை காட்ட முடியும்?

ரமண மகரிஷிக்கு புற்று நோய் வந்தது ....

பாரதியார் சின்ன வயதில் போதை மருந்து உண்டார் ....

இராமன் மறைந்து இருந்து வாலியைக் கொன்றான் ...

என்று பெரியவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர்களின் மேன்மையை குறைத்தோம் என்றால்,  பின் அடுத்த சந்ததிக்கு யாரை  உதாரணம் காட்டப் போகிறோம்?

அவர்களை போல பண்பு உள்ளவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.   அவர்களையும் விட்டு விட்டால், பின் வேறு வழி இல்லை.


வாலியைக் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்று பட்டி மன்றம்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்று விவாதம்.

ஒருவரை உயர்த்துகிறேன் என்று மற்றவரை தாழ்த்தி சொல்லுவது. பெரியவர்களின் வாழ்க்கையை  குறைத்து மதிப்பிடுவது....இவை எல்லாம் அறிவுக்கு வேண்டுமானால்  நன்றாக இருக்கும். வாழ்க்கைக்கு நல்லது அல்ல.


எனவே, நல்ல நூல்களை, நல்லவர்களை குறை சொல்வதை விடுத்து அவற்றில் இருந்து  நாம் நல்லவற்றை கண்டு அதை கடை பிடிக்க முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_17.html

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பாயிரம் என்றால் என்ன என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அந்த பாயிரம் இரண்டு வகைப்படும்.


"பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே ."

அதாவது, பாயிரம் என்பது பொதுப் பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்று இரண்டு வகைப்படும்.


ஒரு நூலை எழுதும் ஆசிரியன், இந்த இரண்டையும் எழுத வேண்டும். அந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள், பாயிரத்தை மட்டும் படித்தால் போதும், அந்த நூல் தங்களுக்கு ஏற்றதா அல்லது இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும்.

பொதுப் பாயிரம் என்றால் என்ன?

பவணந்தியார்  சொல்கிறார்.

பாடல்

நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும்
எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம் .


பொருள்

நூலே = அந்த புத்தகத்தின் வரலாறு, தன்மை, நோக்கம்

நுவல்வோன் = நூல் எழுதிய ஆசிரியனின் தகுதி, திறமை, அனுபவம் போன்றவை.

நுவலுந் திறனே = ஆசிரியனின் சொல்லும் திறமை.

கொள்வோன் = அந்த நூல் யாருக்கு என்று எழுதப் பட்டது

கோடற் கூற்று = மாணவன் அந்த நூலை எப்படி படிக்க வேண்டும்

ஐந்தும் = இந்த ஐந்தும்

எல்லா நூற்கு மிவை = எல்லா நூலுக்கும் இவை

பொதுப் பாயிரம் . = பொதுவானது

இந்த ஐந்தும் எல்லா நூலுக்கும் இருக்க வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், இவை இருந்தால் இரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு சுலபமாக இருக்கும்.

உதாரணமாக

"இந்த நூல் பொருளாதாரம் பற்றிய ஒரு அறிமுக நூல். இதை எழுதிய ஆசிரியர் பொருளாதாரத்தில் முனைவர் (doctorate) பட்டம் பெற்றவர். பல பல்கலை கழகங்களில் விரிவுரையாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணி புரிந்து வருபவர். இதற்கும் பொருளாதாரம் பற்றி 10 நூல்கள் எழுதி உள்ளார். இந்த நூல் 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது....."

இது பாயிரத்தின் ஒரு வகை. இப்படி இருந்தால் ஒரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு எளிதாக இருக்கும்?

நமக்குத் தேவை அல்லாத, அல்லது பொருந்தாத புத்தகத்தை வாங்குவதனால், வீணான பண விரயம் மட்டும் அல்ல, அதை படிப்பதின் மூலம்  நம் நேரமும் விரயம் ஆகும். அதை படிக்கும் நேரத்தில் இன்னொரு நல்ல நூலை படித்து இருக்கலாம். அதுவம் போச்சும்.

மற்றொன்று, இன்று ஒரு நூலை பார்த்து அதை நகல் எடுத்த மாதிரி எழுதும் போக்கு இருக்கிறது.  இன்னொருவரின் கற்பனையை, உழைப்பை தன்னது மாதிரி  எடுத்து எழுதி விடுகிறார்கள். நூல் ஆசிரியனின் தன்மை தெரிந்தால் அதை ஓரளவுக்கு நாம்  தடுக்க முடியும். Plagiarism என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

மற்றது, தவறானவற்றை எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று காட்டிக் கொள்ள மாட்டார்கள். மஞ்சள் பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று  வெளிப்படையாக சொல்வது கிடையாது. மலிவான செய்திகளை, மலிவான நோக்கத்தோடு எழுதுபவர்கள் தங்களை ஏன் வெளிக் காட்டிக் கொள்ளப் போகிறார்கள்?

பொதுப் பாயிரம் என்பது ஒரு நூலின் முழுத் தன்மையையும் நமக்கு ஒரு சில பக்கங்களில்  தந்து விடும்.

ஒரு நூலுக்கு இலக்கணம் வகுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல் அந்த மொழியில் வந்திருக்க வேண்டும்?    அதில்  நல்ல நூல் எது, அல்லாதது எது   இனம் கண்டு, ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் என்றால்  இந்த மொழியின் தொன்மை, ஆழம்,வீச்சு  பற்றி   நாம் எவ்வளவு பெருமை படலாம்.

நம் பெருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/5.html


Sunday, December 15, 2019

விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில்

விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில் 


ஒரு ஊரில் ஒரு தூக்கணாம் குருவி இருந்தது. அது ஒரு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் பெரு மழை வந்தது. குருவிக்கு ஒரு பயமும் இல்லை. தான் கட்டிய கூட்டில் அது சுகமாக இருந்தது. கூட்டில் இருந்து அது வெளியே எட்டிப் பார்த்த போது, அந்த மரத்தில் ஒரு குரங்கு இருந்தது தெரிய வந்தது. அந்தக் குரங்கு மழையில் நனைந்து  , குளிரில் நடுங்கியபடி இருந்தது.

அதன் மேல் இரக்கப்பட்டு, அந்த தூக்கணாம் குருவி "ஏ குரங்கே..நீ ஏன் இப்படி மழையில் துன்பப் படுகிறாய். என்னை போல் ஒரு கூடு கட்டிக் கொண்டு சுகமாக வாழலாம் தானே...நான் உனக்கு கூடு கட்டச் சொல்லித் தருகிறேன் " என்றது.

அதைக் கேட்ட குரங்குக்கு கடுமையான கோபம் வந்தது.

"போடா ஊசி மூஞ்சி மூடா...நீயா எனக்கு புத்தி சொல்வது " என்று வெகுண்டு, அந்த தூக்கணாங் குருவி கூட்டை பிய்த்து எரிந்து விட்டது.

கீழானவர்களுக்கு உயர்ந்த கருத்தைச் சொன்னால், இதுதான் நிகழும் என்கிறது விவேக சிந்தாமணி.

பாடல்

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே! 


பொருள்

வானரம் = குரங்கு

மழைதனில் நனையத் = மழையில் நனைய

தூக்கணம் = தூக்கணாம் குருவி

தானொரு  = தான் ஒரு

நெறிசொலத் = வழி சொல்ல

தாண்டி பிய்த்திடும் = குதித்து வந்து பிய்த்து போடும்

ஞானமும் = ஞானமும்

கல்வியும் = கல்வியும்

நவின்ற நூல்களும் = நல்ல நூல்களும்

ஈனருக்கு உரைத்திடில் = கீழானவர்களுக்கு சொன்னால்

இடர்அது ஆகுமே!  = அது துன்பத்தில் போய் முடியும்


உயர்ந்த நூல்களின் அர்த்தம் புரியாமல், அதன் நோக்கம் புரியாமல், அதைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்கள்,  அதை கிண்டல் செய்பவர்கள், அதைப் பற்றி குதர்க்கமாக   கேள்வி கேட்டு கேலி செய்பவர்கள் எல்லாமே அந்த ஈனர் கூட்டத்தில்  சேர்வார்கள்.

புரியவில்லை என்றால் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கிண்டல் செய்வதும், குதர்க்கம் பேசுவதும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் வழியின்றி வேறில்லை.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_15.html