Friday, May 8, 2020

திருவாசகம் - வா என்ற வான் கருணை

திருவாசகம் - வா என்ற வான் கருணை 


மணிவாசகர் உயர் குடியில் பிறந்தவர். நன்கு படித்தவர்.பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்.  தமிழில் புலமை பெற்றவர். ஊன் உருக,உயிர்  உருக பாடல்கள் பாடி இருக்கிறார்.

மாறாக,

கண்ணப்பன் வேடுவர் குலத்தில் பிறந்தவர். படிப்பறிவே இல்லாதவர்.  வேட்டை ஆடுவதும், உயிர் கொலை புரிவதும் தான் அவர் தொழில்.

மணிவாசகர் சொல்கிறார், "அந்த கண்ணப்பன் மாதிரி என்னால் அன்பு செய்ய முடியாமல் இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டாயே, உன் கருணையை என்ன என்று சொல்வேன்" என்று உருகுகிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பதோர்
    அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
    என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
    வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
    சென்றூதாய் கோத்தும்பீ 


பொருள்


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பதோர் = போல் ஒப்பு நோக்கக் கூடிய

அன்பின்மை  = அன்பு இன்மை. என்னிடம் அன்பு இல்லாமை

கண்டபின் = (இறைவா நீ) கண்டு கொண்ட பின்னும்

என்னப்பன் = என்னுடைய தந்தையான

என்னொப்பில் = என்னுடைய ஒப்பில்லாத ஒருவன்

என்னையும் = என்னையும்

ஆட் கொண்டருளி = ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்  = பணித்த வண்ணம்.

தென்னை = என்னை

வாவென்ற  = வா என்ற

வான் கருணைச் = வான் போல பரந்த கருணை

சுண்ணப்பொன் நீற்றற்கே = சுண்ணம் + பொன் + நீற்றற்கே. சுண்ணாம்பு போல வெண்மையான திரு நீற்றை அணிந்த பொன் போன்ற மேனி உடைய அவருக்கே

சென்றூதாய் கோத்தும்பீ  = சென்று ஊதுவாய் அரச தும்பியே


கடவுள் எங்கோ இருக்கிறார். எப்படியோ இருக்கிறார். நமக்கு ஒன்றும் தெரியாது.

அவருக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று நாமே நினைத்துக் கொண்டு ஏதேதோ செய்கிறோம்.

அவருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்,  சுண்டல் பிடிக்கும்,  துளசி பிடிக்கும்,  வடை பிடிக்கும்,  பொங்கல் பிடிக்கும், தேங்காய், பழம் எல்லாம் பிடிக்கும் என்று  நாமே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு செய்கிறோம்.

நாம் வைக்கும் பொங்கலை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?

நாம், நமக்கு பிடித்ததை, அவருக்கும் பிடிக்கும் என்று நினைத்து படைக்கிறோம்.

கண்ணப்பன் அவருக்குப் பிடித்த மாமிசம், கறி போன்றவற்றை  இறைவனுக்கும் பிடிக்கும் என்று  படைத்தார்.

தவறு என்ன?  யாருக்குத் தெரியும் ஆண்டவனுக்கு என்ன பிடிக்கும் என்று? ஒருவேளை  கடவுள் non -வெஜிடேரியனாக இருந்தால்?

நாம் முகம் சுளிக்கிறோம்.

என்னது, சாமிக்கு போய் மாமிசம் படைப்பார்களா என்று?

கண்ணப்பனுக்கு முன்னால் , அந்தக் கோவிலில் தினம் பூஜை செய்யும் சிவ கோசரியார்   என்ற குருக்கள் ஆகம முறைப்படி பூஜை செய்து வந்தார்.

நீரால் அபிஷேகம் செய்வது, தூப தீபம் காட்டுவது, பொங்கல், பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்வது என்று.

சிவன், அவருக்கு முக்தி கொடுக்கவில்லை. கண்ணப்பனுக்கு கொடுத்தார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

கண்ணப்பன் செய்த பூஜையை கடவுள் ஏற்றுக் கொண்டார். காரணம், அவனிடம் இருந்த அன்பு.

அது போல, நான் செய்யும் பூஜையிலும் ஆயிரம் தவறு இருக்கலாம். அவற்றை மன்னித்து ஏற்று க்கொள்ள வேண்டும் என்றால், கண்ணப்பன் அளவு நானும்  அன்பு செய்ய வேண்டும். என் மனதில் அவ்வளவு அன்பு இல்லையே.  இருந்தும் என்னையும் ஒரு பக்தனாக ஏற்றுக் கொண்டு "வா" என்று அழைத்த   உன் கருணையை என்ன சொல்லுவேன் என்று உருகுகிறார்  மணிவாசகர்.

குலம் , பிறப்பு, படிப்பு, தொழில், அதிகாரம், செல்வாக்கு...எதுவும் இறைவனுக்கு பொருட்டு அல்ல.  அன்பு ஒன்றையே அவன் காண்கிறான்.

அன்பே சிவம்.

மத்தது எப்படி இருந்தாலும் பரவாயில்லை...அன்பு மட்டும் இருந்தால் போதும்.

அன்புதானே எல்லாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_8.html

2 comments:

  1. இறைவன் அன்பின் ஒன்றினால் தான் கட்டுப் படுவான் என்பதை அருமையாக விளக்கி உள்ளீர்கள்।

    ReplyDelete